Wednesday, December 30, 2009

உபரி ஓட்டங்கள் (Extras 30-December-2009)

சுவீடன் வந்தபின் முதன் முறையாக திரையரங்கு ஒன்றில் அவதார் திரைப்படம் பார்த்தாகிவிட்டது. 150 இருக்கைகள் கொண்ட சிறிய அரங்கத்தில் சுவிடீஷ் சப் டைட்டில்களுடன் ஆங்கிலப் படமாகவே திரையிட்டு இருந்தனர். சில வசனங்களை கீழே இருக்கும் சப்டைட்டில்களைப்படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு எனது மொழிப்புலமை வளர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. நாவி நேத்ரேயி கதாநாயகன் ஜேக்கை கிஸ்ஸடிக்கும் காட்சியில் விசில் அடிக்க எத்தனித்த அப்பாவி கணேசனைக் கட்டுப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

படத்தின் பிரம்மாண்டம், நடிப்பு எல்லாவற்றையும் காட்டிலும் படத்தில் சிறப்பாக இருந்த அரசியலை எத்தனைப் பேர் புரிந்து கொண்டார்கள் எனத் தெரியவில்லை.

ஜேக் நாவிக்களிடம் உரையாற்றுகின்ற இந்த வசனம், They've sent us a message... that they can take whatever they want. Well we will send them a message. That this... this is our land!!!

அன்று தங்கத்திற்காக, இன்று பெட்ரோலுக்காக மக்களை நசுக்கி அழித்து, நான்கு திசைகளிலும் வளங்களைச் சுரண்டும் மேற்கத்திய உலகத்தை எதிர்கொள்ள நிஜமாகவே ஒரு/சில ஹீரோ(க்கள்) இப்படி வரமாட்டார்களா என எண்ண வைத்தது.

நாவிக்களை அழிக்க வரும் அதிவேக விமானங்களைப் பார்த்தவுடன் Made in Sweden என்று கமெண்ட் அடிக்க வேண்டும் போல இருந்தது.


ஆனால் இன்னும் ஒரு வருடம் படிப்பு இருக்கின்றதே !!!

---

நேற்றிரவு அலுவலகம் முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்பொழுது, நான்கு வீடுகள் தள்ளி குடியிருக்கும் சோமாலியாவைச் சேர்ந்த இளைஞனைச் சந்தித்தேன்.அவனை இதற்குமுன்னர் சிலமுறை தெருமுனைகளில் சந்தித்துப் பேசி இருக்கின்றேன். சோமாலிய
தேசத்தவர்கள இந்திய முகக்களையுடன் , இயல்பான ஆப்பிரிக்க கருப்பு நிறத்தைக் காட்டிலும் சற்று மாநிறமாக இருப்பார்கள். பேருந்தில் வீல்சேர் இறங்குவதற்கான பலகை எடுத்துப்போடுவதில் உதவி செய்த அவனிடம் வீடு வரும் வரை பேசிக்கொண்டே வந்தேன்.

"மேன் , ஐ காட் அரெஸ்டட்"

"அய்யோ!! என்னடா ஆச்சுப்பா!!" எனக்கேட்டபொழுது, முந்தைய இரவு ஒரு கைகலப்பிற்காக கைது செய்ப்பட்டதாக கூறினான். ரோன்னிபி நகரத்தில் பொதுவாக சோமலியர்கள் எந்த வம்புதும்புக்கும் போக மாட்டார்கள். அரபு நாடுகளிடம் இருந்து புலம்பெயர்ந்தவர்களைக்
காட்டிலும் இவர்கள் அமைதியாகவே இருப்பார்கள். நிறம் ஒரு காரணமாக இருக்கலாம்.

என்ன ஆயிற்று விளக்கமாக கேட்டபொழுது, இரவு விடுதி ஒன்றில், இந்த இளைஞன் சில சோமாலிய தேசத்து நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபொழுது, அடுத்த மேசையில் இருந்த ஒரு சுவிடீஷ் மத்திய வயது ஆள்,

"டே கருப்பனுங்களா !! இங்கே எதுக்குடா வந்தீங்க, ஓடுங்கடா உங்க நாட்டிற்கு" என ஆத்திரமூட்டும் வகையில் பேசியபின்னரும் பொறுமைக் காத்த இவர்கள் , குடும்பத்தைப் பற்றி இழுத்தவுடன் கோபத்தை அடக்கமாட்டாமல் , இந்த சோமாலிய இளைஞன் சுவிடீஷ் ஆளை
ஒரு குத்து விட, போலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வந்த போலிஸார் சுவிடீஷ் ஆளை கண்டித்து விட்டுவிட்டு, இவனைத் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்து ஒரு நாள் ரிமாண்டில் வைத்து விட்டார்களாம்.

"ஐ டோண்ட் நோ, ஹவ் டூ ஐ ஃபேஸ் மை பேரண்ட்ஸ்" எனக் கண்கலங்கியபடி போனவனுக்கு "மே காட் பிளஸ் யூ" என ஆறுதலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எக்காரணம் கொண்டும் கைநீட்டவேண்டாம் அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தேன்.

" They slapped two fellas on the wrist and they killed the other fella" என்று சமீபத்திய ஆஸ்திரேலிய - மேற்கிந்திய தீவுகள் ஆட்டத்தில் சுலைமான் பென் தண்டிக்கப்பட்டபொழுது, ஜோயல் கார்னர் சொன்ன வாசகம் நினைவுக்கு வந்தது.

------

ஸ்டீரியோ டைப் காதல் தோல்விக் கதைகளையும் , அரைச்ச மாவையே அரைச்ச பேய்கதைகளையும் எழுதிக் கொண்டிருந்த நான், அஸ்ஸலமு அலைக்கும் எனற இஸ்லாமிய முகமன் வாக்கியத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டக் கதைப் பரவலாக
வாசிக்கப்பட்டபொழுதும், மக்கள் மேலோட்டமாகப் படித்து அதன் உள்ளார்ந்த அரசியல்களைக் கவனிக்காமல் போய்விட்டார்களோ எனத் தோன்றியது. எழுதி முடித்தபின்னர் மறுவாசிப்புக் கூட செய்யாமல் பதிப்புக்கும் பழக்கமுள்ள நான், சில இஸ்லாமிய நண்பர்களிடம் கருத்துக்
கேட்ட பின்னர்தான் பதிப்பித்தேன்.

உண்மைத்தமிழன் கதையின் நீளம் ரொமப அதிகம் எனச் சொல்லி இருப்பது, ஜெஃப்ரி பாய்காட் , ராகுல் திராவிட் பேட்டிங் ரொம்ப ஸ்லோ என்று சொல்வது போல இருந்தது.

//எவனைப் பார்த்தாலும் தொலைக்காட்சியில் காட்டும் குண்டு வைப்பவனைப் போலவே இருந்தது. // இந்த வாக்கியத்தில் மறைந்து இருக்கும் அரசியலைக் கவனிக்காமல், சில நண்பர்கள் வறுத்தெடுத்துவிட்டார்கள். தொலைக்காட்சியில் இப்படிக்காட்டி காட்டியே தாடி
வைச்சவனெல்லாம் குண்டு வைப்பவன் என ஊடகங்கள் ஆக்கிவிட்டார்கள் என்பதையே சராசரி மனிதனான கதையின் நாயகன் கார்த்தி மூலம் சொல்ல நினைத்தேன். சிறுகதை இலக்கணத்தில் கதை வரவில்லை, கட்டுரையாக வந்து இருக்காலாம் எனசிலர் குறிப்பிட்டு இருந்தனர்.

கட்டுரை எனும்பொழுது தரவுகளுடன் உண்மைகளை மட்டுமே வைக்க வேண்டும். புனைவுகளில் இந்தக் கட்டுப்பாடு இல்லை. ஒரு மையக் கருத்து, அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், முடிவில் கதையின் ஆரம்பத்திற்கு நேர் எதிரான முடிவு, கதைக்கான காரணங்களைகதையிலேயே சொல்லி விடுவது என்ற எனது சிறுகதை இலக்கணத்திற்கு இது சரியாகப் பொருந்துவதால் இதுவும் சிறுகதையே !!

----


சென்ற உபரி ஓட்டங்கள் பதிவு கேள்விக்கான விடை ஆடம்பரோர். இவர்தான் முதன் முதலாக நியுசிலாந்து அணிகாக ஆடிய மவோரி இனத்தைச் சேர்ந்தவர். பரோடாவில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் ஆட்டம் ஒன்றில் பவுண்டரிகளோ சிக்ஸரோ அடிக்காமல்

அதிக ரன்களைக் குவித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவர் அடித்த ரன்கள் 96.


நியுசிலாந்து அணியில் ஆடிய மற்ற மாவோரி இன ஆட்டக்காரர்களில் ரோஸ் டெய்லர், டேரல் டஃபி குறிப்பிடத்தக்கவர்களாவர். ஒரு முறை மார்டின் க்ரோவ் , வர்ணனையின் போது மவோரி ஆட்டக்காரர்களுக்கு உயர்தர கிரிக்கெட் விளையாடும்பொழுது தேவையான பொறுமை
இல்லை எனக்கூறப்போக அது பிரச்சினையாக, பின்னர் மார்ட்டின் க்ரோவ் மன்னிப்புக் கேட்டார்.

----


சுதந்திரப்போராட்ட வீரர், இரண்டு மாநிலங்களுக்கு முதல்வராக இருந்தவர், படிப்பில் பல்கலைகழகத்திலேயே முதன் மாணவராகத் தேறியவர், பிரதமர் பதவியை மயிரிழையில் தவறவிட்டவர், காங்கிரஸை இரண்டாக உடைத்தவர் இவ்வளவு பெருமை வாய்ந்த என்.டி.திவாரி

உடல்நலக் காரணங்களுக்காக சமீபத்தில் ஆந்திர மாநில ஆளுனர் பதவியில் இருந்து விலகினார். நிஜக்காரணமான அஜால் குஜாலை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை , தனது இணையதளத்தில் இப்படி செய்தியாக வெளியிட்டது வெடிச்சிரிப்பை வரவழைத்தது.




After sex sting, AP governor Tiwari ejects prematurely

செய்தி இங்கே

---

இந்த உபரி ஓட்டங்கள் பதிவுக்கான கேள்வி, கீழ்காணும் படத்தில் இருக்கும் அம்மணி யார்? க்ளூ கொடுத்தால் எளிதாக கண்டுபிடித்துவிடுவேன் என வால்பையன் சொல்லுவார்.





Tuesday, December 22, 2009

உபரி ஓட்டங்கள் (Extras 22-December-2009)

கிரிக்கெட் ஆட்டத்தில் உபரி ஓட்டங்கள்(Extras) என்று ஓட்டங்கள் கணக்கெடுக்கப்ப்படும் ஒரு வகை உண்டு. பெரும்பாலும் இந்த உபரி ஓட்டங்கள் பெருமளவில் வெற்றி தோல்வியில் பங்கு பெறுவதில்லை என்றாலும், சிற்சிலச் சமயங்களில் ஆட்டத்தின் முடிவை மாற்றி
அமைக்ககூடிய வகையில் எண்ணிக்கை அமைந்து விடும்.99 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா ஜிம்பாப்வே அணிக்கெதிராக பாரி வள்ளல் போல 51 உபரி ஓட்டங்களை வாரி வழங்கியது.அதில் 31 ஓட்டங்கள் நோபால்No ball), மற்றும் வொயிட்(Wide) முறைகளில் கொடுக்கப்பட்ட ஓட்டங்கள். கடைசியில் இந்தியா மூன்று ஓட்டங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

அந்த தோல்வியினால் அடுத்து வரும் ஆட்டங்கள் அனைத்தையும் வென்றால் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு தகுதிப் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்ட தோட மட்டும் அல்லாமல்
இந்தச் சுற்றில் பெற்றிருக்க வேண்டிய போனஸ் பாயிண்டுகளையும் இந்தியா இழந்தது.அடுத்தச் சுற்றில்(super six) தர்ம அடி வாங்கி உலகக் கோப்பையை போட்டிகளில் இருந்து இந்தியா வெளியேறியது.



ஒரு வேளை ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா குறைவான உபரி ஓட்டங்களைக் கொடுத்து வென்றிருக்குமானால் உலகக் கோப்பை அரையிறுதி வரையாவது இந்தியா முன்னேறி இருக்க வாய்ப்பு இருந்தது.அந்த ஆட்டத்தின் விபரத்தைப் பார்க்க இங்கேச் சொடுக்கவும்


திடீரென ஏன் உபரி ஓட்டங்கள் பற்றியக் கதை என்கிறீர்களா, பிரபலபதிவர்கள் எழுதும் கொத்துபரோட்டா, என்'ண்ணங்கள், சாண்ட்விச் அண்ட் நான்வெஜ், நங்கநல்லூர் பஞ்சாமிர்தம், குவியல், இட்லி-வடை-பொங்கல் ஆகியனவற்றை தொடர்ந்து வாசித்து வந்த
பாதிப்பினால் நானும் உபரி ஓட்டங்கள் தலைப்பில் சிலப் பல சுவாரசியமான தகவல்களை, அனுபவங்களை, பார்த்து ரசித்து சிந்தித்த விசயங்களை , புலம்பல்களைப் பதிவு செய்யலாம் எனத் தோன்றியது. மேற்சொன்ன பதிவுகளைப் போல சுவாரசியமானதாக இருக்குமா எனத்
தெரியவில்லை. இருந்த போதிலும் முயற்சித்தல் தவறில்லையே!!!

உபரி ஓட்டங்கள் ஆட்டத்தின் வெற்றித் தோல்விகளுக்கு பங்கு வகிப்பதைப் போல என்னுடைய இந்த உபரி ஓட்டங்களும் உங்களின் அன்றாட வாழ்வின் சுவாரசியத்தை அதிகப் படுத்தலாம் அல்லது yet another post என்ற வகையில் படித்தும் படிக்காமலும் ஒதுக்கிவிடலாம். வாரத்திற்கு ஒரு முறையாவது எழுதிவிட வேண்டும் என்ற உறுதியில் இதோ எனது முதல் உபரி ஓட்டங்கள் தொகுப்பு,

உபரி ஓட்டங்கள் என்று பெயர் வைத்தபின் கிரிக்கெட்டை வைத்து துவக்குவதுதான் சாலப்பொருத்தமாக இருக்கும். நேற்றைய ஒரு நாள் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தான் டெண்டுல்கரின் சத வாய்ப்பைக் கெடுத்து விட்டார் என ரசிகர்கள் நொந்து கொள்வதாக எழுதி
இருக்கின்றனர். தினேஷ் கார்த்திக் விரைவாக ஒட்டங்கள் பெற்றது தவறு, டெண்டுல்கருக்கு மட்டையடிக்க வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என கூறுவதில் நியாயம் இருந்தாலும், தொடர்ந்து கார்த்திக்கை ஆட்டமிழக்கச் செய்யும் வகையில் நடுவரிடம் முறையிட்டுக்கொண்டிருக்கையில் பந்தை அதிரடியாக சிகஸருக்கு விரட்டாமல் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்து இருந்தால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா ரசிகர்களுக்கு முன்னொரு காலத்தில் பழக்கப்பட்ட தோல்விக் காட்சிகள் மறுஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கும்.ஒரு முனையில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா பந்து வீசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



எதிர்பாராத சமயங்களில் எதிர்பார்க்காத விசயங்களை அள்ளிதருவதில் கிரிக்கெட் ஆட்டங்களைப்போல வேறு எதுவும் இல்லை. கிரிக்கெட்மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் அவளை நான் எப்பாடுப் பட்டாவது திருமணம் செய்து இருப்பேன். ஜெனி,ரம்யா, அம்முவைப்போல கிரிக்கெட்டும் என்னை விட்டுப் போய் இருக்க மாட்டாள். கிரிக்கெட் தந்த சுவாரசியங்கள் போல வேறு எந்த விளையாட்டும் எனக்குத்தராததாலும் கிரிக்கெட் இந்திய துணைக்கண்டத்தில் பிறந்த சாராசரி மனிதனின் மனோநிலைக்கு ஏற்ப இருப்பதாலும் கிரிக்கெட்டை பெண்ணாக உருவகிக்க முடிகிறது என நினைக்கின்றேன்.

சுவாரசியம் என்றதும், தோழர் ஒருவரிடம் ஏற்பட்ட ஒரு சமீபத்திய உரையாடல் நினைவுக்கு வருகிறது. வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்ற அவரின் கேள்விக்கு சுவாரசியமாக இருக்கின்றது என்றேன். அவருக்கு எனது அம்முவுடன் ஆன பிரிவு தெரியும். அவருக்கு ஒரே
வியப்பு, 100 நாட்கள் கூட ஆகவில்லை, எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் என்று கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. சிரிப்பானை போட்ட்டுவிட்டு அடுத்த பேச்சுக்குத் தாவினேன். நான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கின்றது என்று தானே சொன்னேன், மகிழ்ச்சி
என்று சொல்ல வில்லையே!! . சோகங்கள் வருத்தங்கள், ஏமாற்றங்கள் கூட சுவாரசியமான அனுபவங்களைத் தரும் அல்லவா!! அம்முவிற்கு நான் Phd பட்டம் பெறவேண்டும் என்று ஒரு விருப்பம். அடிக்கடி எனக்கு நினைவுப் படுத்தி என்னை உற்சாகப் படுத்துவாள். அவளின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக என்னுடைய மாஸ்டர்ஸ் படிப்பிற்குப் பின் ஆராய்ச்சிப்படிப்பு படிக்க தயாராக வேண்டும் என ஐரோப்பிய பல்கலைக் கழகங்களைத் தேடிக்கொண்டிருக்கையில் பின்லேந்து தேசத்தில் படிக்க இருக்கும் வாய்ப்புகளைப் பற்றிய அதிகாரப்பூர்வமான இணையதளம் கண்ணில் சிக்கியது.மேற்படிப்பு படிக்க விரும்புவர்கள் இந்த தளத்தில் http://www.universityadmissions.fiஉபயோகமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


புதிய தலைமுறையின் ஸ்வீட் ஸ்வீடன் மேற்படிப்புப் பற்றியக் கட்டுரைக்குப்பின்னர் மின்னஞ்சல்கள் வந்தவண்ணம் உள்ளது. வரும் மின்னஞ்சல்களில் வருத்தமான விசயம் என்னவெனில், கன்சல்டன்சிகளை அணுகலாமா என்றக் கேள்வியுடன் மின்னஞ்சல்கள் வருவதுதான்.கட்டுரையின் முக்கிய நோக்கமே பரவலாகத் தகவல்கள் போய்ச்சேர வேண்டும், ஆலோசனை மையங்களிடம் தேவை யில்லாமல் பணம் கட்டி ஏமாறவேண்டாம் என்பவை தான். அந்தக் கட்டுரையில் மாணவர்களே படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான ஆங்கிலத்தில்அனுமதி முறைகள் கொடுக்கப்பட்டிருக்கும் இணையச்சுட்டி http://studera.nu தரப்பட்டுள்ளது. நுனிப்புல் மேய்வது போல தகவல்கள் தரும் கட்டுரைகளை வாசிக்கும் பழக்கம் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களிடம் இருக்ககூடாது.
நினைவூட்டல் ஜனவரி 15 ஆம் தேதி வரை இணையதளத்தில் மேற்படிப்பிற்காக பதிவு செய்யலாம். சிலரின் மின்னஞ்சல்களுக்குப் பதில்தர இயலவில்லை. நேரத்திட்டமிடலில் இன்னும் நான் தேர்ச்சி பெறாததால் வழமையான பதிலான, நேரம் இல்லை,மன்னிக்கவும் என்ற பதிலை சொல்லிவிடுகின்றேன்.


பதிவுலக நண்பரான செந்தழல் ரவி கொடுத்த தகவலினால், டெலினூர்(Telenor) என்ற சுவிடனின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனத்தில் ஒரு வருடத்திற்கான சம்பளமற்ற பயிற்சி கிடைத்திருக்கின்றது. பயிற்சி என்ற போதிலும் நானும் அங்கு வேலைப் பார்க்கும்
ஒருவராகத்தான் கருதப்படுவேன். வாரத்திற்கு 30 மணி நேரம் அலுவலகத்திற்கு வர வேண்டும். கணிமை ரவி கொடுத்த பகிர்ந்து கொண்ட தகவலினால் சுவீடன் மேற்படிப்பு சாத்தியம் ஆயிற்று. மற்றும் ஒரு ரவி மற்றும் ஒரு பதிவுலக நட்பு மற்றும் ஒரு பயன்.நன்றி பதிவுலகம். வேலைவாய்ப்புகள் ஒன்றுமே இல்லாதநிலையில் மிகப்பெரும் நிறுவனத்தில் கிடைத்த வாய்ப்புக் கிடைக்க காரணமான செந்தழல் ரவிக்கு ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உபரியில் ஒரு உதிரித்தகவல், இந்த டெலினூர் தான் நமது ஊரில் யுனினூர் என்று வந்திருப்பது.





ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கும் தொடர் பனிப்பொழிவினால் சுவீடன் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ரயில்கள் தாமதமாக வந்தாலும், மாற்று ஏற்பாடாக பேருந்துகளை ஏற்படுத்திக் கொடுத்துவிடுகிறார்கள். பனிப்பொழி ஸ்காண்டிநேவியா மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாகஇருப்பதனாலும் குளிர்காலத்திற்காக தயார் நிலையில் அரசாங்க இயந்திரம் இருப்பதனாலும் அன்றாட வாழ்விற்கு பெரியதாக பிரச்சினை இல்லை. நான் இருக்கும் ரோன்னிபி நகரத்திலும் பணிபுரியும் கார்ல்ஸ்க்ரோனா நகரத்திலும் சென்ற வருடத்தைக் காட்டிலும் பனிபோழிவு அதிகம் தானாம்.


கடைசியாக இந்த வார உபரி ஓட்டக் கேள்வி நியுசிலாந்து தேசத்தில் மவோரிக்கள் எனப்படும் பூர்வக்குடி மக்கள் இன்றும் சிறுபான்மையினராக இருக்கின்றனர். இந்த மவோரி சமூகத்தில் இருந்து நியுசிலாந்து கிரிக்கெட் அணிக்காக ஆடிய முதல் வீரர் யார்? இவர் தன் வசம்

வைத்திருக்கும் மற்றும் ஒரு சுவாரசியமான கிரிக்கெட் சம்பந்தப்பட்ட சாதனை என்ன? விடைகள் அடுத்த உபரி ஓட்டங்கள் பதிவில்.

Saturday, November 21, 2009

பழைய நினைப்பு - (19-11-2006) - பதிவர் சந்திப்பு

இன்று எதேச்சையாக ஃபேஸ்புக் தளத்தில் நண்பர் ஒருவர் Tag செய்து வைத்திருந்த புகைப்படத்தைக் கண்ட பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. சரியாக மூன்று வருடங்களுக்கு முன்ன நடந்த பதிவர் சந்திப்பில் எடுத்த புகைப்படம் அது.பதிவர் சந்திப்புகள், பட்டறைகள் சுமாரான என் எழுத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி ஓரளவுக்குத் திறம்பட செய்தன என்பதை மறுக்க முடியாது.
கடைசி ஒருவருடமாக எந்த பதிவர் சந்திப்பிலும் கலந்து கொள்ளமுடியவில்லை. சுவீடனில் யாரவது நடத்துங்கப்பா!!!





சிவப்பு சட்டையில் இருப்பவர்களை எல்லாம் சரியாக அடையாளம் கொண்டு கொள்ள முடியும். படத்தில் இருப்பவர்கள் அனைவரையும் சரியாக சொல்பவர்களுக்கு ”மூத்தப் பதிவர்” என்ற பட்டம் வழங்கப்படும்.

இந்த சந்திப்பைப் பற்றிய பதிவைப் படிக்க இங்கேச் சொடுக்கவும்

பேயில்லாமல் நானில்லை - சர்வேசன் ‘நச்' போட்டிக்கு அனுப்ப மறந்தக் கதை

என் பேரு கார்த்தி, கார்த்தி ராமச்சந்திரன். கஜினிப் பட சஞ்சய் ராமசாமி மாதிரி சொல்றேன்னு நினைச்சுடாதீங்க, சுவீடனுக்கு வந்தப் பிறகு அப்பா பெயரையும் சேர்த்து சொல்றது வழக்கமாப் போச்சு. நான் ஒரு அமெச்சூர் எழுத்தாளன், அப்போ அப்போ கதை எழுதி என் நேரத்தையும் , வாசிக்கிறவங்க பொறுமையையும் கொல்றது எனக்கு ஒரு ஹாபி. சில சமயங்களில் முன்னாள், இன்னாள் காதலிகளையும் பிடிக்காத, பிடித்தவர்களையும் கதையில் கதாபாத்திரங்களா ஆக்கி தாளிச்சுவிட்டுடுறதும் உண்டு. சரி விசயத்துக்கு வரேன், அம்மு, தன்னைப் பற்றி கதையில் எதுவும் எழுதக்கூடாதுன்னு சொல்லிட்டதுனால இப்பொவெல்லாம் வெறும் பேய்க்கதைகள் தான் எழுதிட்டு இருக்கேன்.

முதல் கதையில் இருந்த திகில் இப்பொவெல்லாம் கிடைக்கிறது இல்லை அப்படின்னு எனக்கு இருக்கிற வாசகர்கள்???!!! தொடர்ந்து சொல்லிட்டு இருக்காங்க.

சிலபேர் மருதமலைப் பட வடிவேலு சிரிப்பு போலிஸ் மாதிரி, என் கதையில் வர்ற பேய்கள் எல்லாம் சிரிப்புப் பேய்யா தெரியுதுன்னு கிண்டல் பண்றாங்க, இது எல்லாம் பரவாயில்லீங்க, நம்ம அப்பாவி கணேசன் , அதுதான் என் ரூம் மேட், விக்ரமன் படம் மாதிரி லாலாலா பாடுற செண்டிமெண்ட் எபெக்ட் ல என் பேய்கதைகள் இருக்குன்னு சொல்லிட்டாரு. I felt very bad, you know,, அதுதான் கண்டிப்பா ஒரு டெரிபிக் பேய்க்கதை எழுதிடனும் ஒரு மாசமா யோசிச்சுட்டு இருந்தப்ப தான் ஒரு சம்பவம் நடந்துச்சு.

பேய்க்கதை எழுதுறதுல பெரிய வெரைட்டி கிடைக்காது. ஒரு சம்பவம், அந்த சம்பவத்துல இருக்கிற யாரவது ஒருத்தர் உயிரோடு இருப்பவர் கிடையாதுன்னு முடிக்கனும், அந்த அதிர்ச்சியை வாசிக்கிறவங்களுக்கு கொடுக்கிற விதத்துல தான் இருக்கு கதையோட சக்ஸஸ்.

”இருக்கு ஆனால் இல்லை” - ”இல்லை ஆனால் இருக்கு” அப்படிங்கிற மாதிரி திகிலுக்கு கதைக்கரு யோசிக்க சிலப்பல இங்கிலீஷ் பேய்ப்படங்கள் டவுன்லோட் செஞ்சு வச்சிருந்தேன். அப்பாவி கணேசன் நீச்சல் பிராக்டிஸுக்கு போனப்பின்ன பார்ப்பதுண்டு. கணேசன் ஏதாவது சுவிடீஷ் பிகர்ங்களை கரெக்ட் பண்ணலாம்னு ஒவ்வொரு வீக் எண்டும் நீச்சல் குளத்துக்குப்போறார். ஆனால் அவருக்கு செட் ஆனது என்னமோ அவரு இடுப்பு உயரமே இருக்கிற பிலிப்பைன்ஸ் பிகரு. இப்படிதாங்க, டிராக்கை விட்டு வேறு எதாவது சொல்லிட்டு இருப்பேன். அப்பாவி கணேசன் போயிட்டாருன்னு பேய்ப்படம் பார்க்க உட்கார்ந்தா எல்லா பேய்ப்படத்துலேயும் திகில் சீன்களை விட கில்மா சீன் தான் ஜாஸ்தி இருக்கு. இந்தப் படம் எல்லாம் பார்த்தா கில்மாக் கதை தான் எழுத வரும்.

சரி நம்ம ஊரு ராம்கோபால் வர்மாவை இன்ஸ்பிரேஷனுக்கு எடுத்துக்கலாம்னா, எனக்கு என்ன கதை எல்லாம் தோணுதோ அது எல்லாத்தையும் அவரு முன்னமே படமா எடுத்துட்டாரு. திங்கிங் ல நான் ராம்கோபால் வர்மாவுக்கு முன்னோடி..

jokes apart, சீரியஸான விசயம் சொல்லனும், போன வாரம் சனிக்கிழமை , எங்க அபார்ட்மெண்ட் பின்ன இருக்கிற பாதி உறைஞ்சி போய் இருந்த ஏரியை வேடிக்கைப் பார்க்கிறப்ப ஒரு ஐடியா தோனுச்சு, அந்த ஏரில மனித முகம் மாதிரி ஒரு வடிவம் தெரிஞ்சுச்சு.அந்த முகச்சாயல்ல திடீர்னு ஒரு மனுஷனை சந்திச்சா எப்படி இருக்கும். கேட்கிறப்பவே திகிலா இருக்குல்ல,

சரி, அந்தக் கருவுக்கு ஏற்ற சில சம்பவங்களை யோசிச்சு கதையாக மறுநாள் ஞாயிற்றுக்கிழமை எழுதாலாம்னு உட்கார்ந்தால் , லெட்டர் வந்து விழுற சவுண்ட் கேட்டுச்சு. சண்டேஸ் ல போஸ்ட் மேன் வர்ற மாட்டானுங்களே!! அட்வர்டைஸ்மெண்டா இருக்கும்னு போய் எடுத்தால் என் பெயருக்கு ஒரு லெட்டர், முழுக்க முழுக்க சுவிடீஷ் ல எழுதி இருந்துச்சு, இரண்டு ஏ4 சைஸ் பேப்பர் அளவுக்கு இருந்த லெட்டரை கூகிள் டிரான்ஸ்லேட்டர் டைப் பண்ணி இங்கிலிஷ் ல டிரான்ஸ்லேட் பண்ணி படிக்கிறப்ப அப்படியே உடம்பு வெடவெட என நடுங்க ஆரம்பிச்சுடிச்சு, நான் யோசிச்சு வச்சிருந்த அதேக் கதை டீடெயில்டா, என்ன மாதிரி டிவிஸ்ட் எல்லாம் இருக்கனும்னு நினைச்சேனோ அப்படியே அந்த லெட்டர் ல வரிக்கு வரி இருந்துச்சு. நான் இந்தக் கதையை கணேசன் கிட்ட கூட டிஸ்கஸ் பண்ணல, எனக்கு மட்டுமே தெரிஞ்சக் கதை. ஏங்க எனக்கு மட்டும் இப்படி நடக்குது.

இரண்டு நாள் தூக்கமே இல்லை, ஒன்னும் மட்டும் புரியுதுங்க, என்னைச் சுத்தி வேற ஏதோ ஒன்னு இருக்கு. இருங்க, லெட்டர் போடுற சவுண்ட் கேட்குது, போய் பார்த்துட்டு வந்து சொல்றேன்.

வழக்கம் போல சுவிடீஷ் ல தான் லெட்டர், ஏ4 சைஸ் பேப்பர்ல நாப்பது பக்கம் இருக்கும்போல, முதல்வரி மட்டும் வாசிக்கிறேன்.

Jag heter Karthi, Karthi Ramachandran, tänker du av filmen Gajini's Sanjai Ramasamy!!, Nej, Efter kom jag till Sverige , jag talar mitt namn med min pappas namn.

அதோட தமிழாக்கம் கீழே!!

“என் பேரு கார்த்தி, கார்த்தி ராமச்சந்திரன். கஜினிப் பட சஞ்சய் ராமசாமி மாதிரி சொல்றேன்னு நினைச்சுடாதீங்க, சுவீடனுக்கு வந்தப் பிறகு அப்பா பெயரையும் சேர்த்து சொல்றது வழக்கமாப் போச்சு.”

Sunday, November 15, 2009

அப்பாவி கணேசனும் அமானுஷ்யமும் - சிறுகதை

கணேசன் என்னதான் வாட்டசாட்டமாய் சக்திமான் முகேஷ் கண்ணா மாதிரி இருந்தாலும் இந்த சுவீடன் குளிரை மட்டும் அவரால் தாங்க முடியவில்லை. விடியற்காலை மூன்று மணிக்கு என் போர்வையை யாரோ உருவுவது போல இருக்க, எழுந்து பார்த்தால் நம்ம கணேசன், சத்தமே இல்லாமல் போர்வையை இழுத்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே தூக்கத்தில் வந்த பேய்க்கனவினால் நடுங்கிப்போய் இருந்த நான்,

“யோவ், என்னய்ய பண்றீங்க!!! “

“கார்த்தி, ரொம்ப குளுருது , அதுதான் உங்க போர்வை எடுத்துக்கலாம்னு”

“அப்போ என்னை விறைச்சுபோய் சாக சொல்றீங்களா?” எரிந்து விழாத குறையாகக் கடிந்து கொண்டேன்.

“சாரி நண்பா” எனச் சொல்லிவிட்டு, தனது பெட்டியில் இருந்து இன்னொரு மேற்சட்டையும் , கால் சட்டையும் எடுத்துப் போட்டுக்கொண்டு தூங்கிவிட்டார்.

கணேசனை நான் எரிந்து விழாத நாளே கிடையாது. இத்தனைக்கும் இந்த மாத அறையின் வாடகையான 3000 க்ரோனரை அவர்தான் கட்டி இருக்கிறார். அவரின் ஆங்கிலத்தில் இருந்து, அவர் சுவிடீஷ் பெண்களை உற்றுப்பார்க்கும் விதங்கள் வரை அவரின் எல்லா செயல்களுமே கிண்டலடிக்கப்படும். நான் எடுத்துக் கொடுக்கும் கிண்டல்களை மற்ற நண்பர்கள் செவ்வனே செய்து முடிப்பார்கள். எனக்கும் பெரிய நிம்மதி, எனது பேய் பயங்களைப் பற்றிக் கிண்டலடிக்கும் நண்பர்கள் , என்னை விட அப்பாவி பலிகடா சிக்கிக் கொண்டதால் என்னை விட்டுவிட்டார்கள்.

”பத்து டிகிரிக்கே குளுருதுன்னு சொன்னா, நீங்க எப்படி மைன்ஸ் லே எல்லாம் தாக்குப்பிடிக்கப்போறீங்க கணேசன்” நக்கலாக சொன்னபோது,போனவருடம் இதே நேரம் எப்படி எல்லாம் குளிரை சமாளிக்கப்போராடினேன் என்று எனக்கே உறுத்தியது. பழைய அறை நண்பர்கள் எல்லாம் வெவ்வேறு ஊர் சென்றவுடன் நான் செய்த முதல் காரியம் எனது கட்டிலை ஹீட்டரை ஒட்டி போட்டுக்கொண்டதுதான்.

”கார்த்தி, நாம இடத்தை மாத்திக்குவோமா, ஹீட்டர் பக்கத்துல படுத்தால் குளிரை சமாளிச்சுடுவேன், பிளீஸ்”

கணேசன் கேட்ட விதமும், அவர் தினமும் குளிரில் படும் அவஸ்தையும் பாவமாகத்தான் இருந்தது. என்னை வருத்திக் கொண்டு மற்றவர்களுக்கு உதவ வேண்டியதில்லை என்பதால் அவரிடம் வழக்கம் போல மறுப்பைத் தெரிவித்தேன்.

நாங்க இருக்கும் குடியிருப்புப் பகுதி நகரத்தை விட்டு 3 நான்கு கிலோமீட்டர்கள் தள்ளி , அகதிகளுக்காக கட்டிவைத்தது. குடியிருப்பைச் சுற்றி மரங்களும், பார்த்தாலே கிலியூட்டும் ஏரியும் , ஏரிக்கரை ஒன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சில படகுகளும் ராம்கோபால் வர்மா படம்பிடிக்க ஏற்ற சூழலாக இருக்கும். அமானுஷ்ய சுற்றுப்புறமாக இருந்தாலும் பேய் போன்ற விசயங்களை கனவைத் தவிர நிஜத்தில் நான் உணர்ந்ததில்லை.

வழக்கம் போல கணேசனை இரவு 12 மணி வரை கிண்டலடித்துவிட்டு படுத்த பின்னர் ஹீட்டரை உடைத்துக் கொண்டு கை வருவது போல ஒரு கனவு. பொதுவாக என் பேய்க்கனவுகள் நான் காட்டிலோ இல்லை பொது இடங்களிலோ பேயை சந்திப்பது போல அமையும். நான் இருக்கும் இடங்கள் என் கனவுகளில் வந்தது இல்லை. எழுந்துப் பார்த்தேன் , மணி ஒன்றரை தான் ஆகி இருந்தது. கனவு கலைந்த பின்னரும் திகில் மனதில் இருந்து கரையவில்லை. ஹீட்டரைத் தடவிப்பார்த்தேன். ஏதும் உடைந்து இருக்கவில்லை. பழைய வலிகள் பேய் பயத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என எனது பழையக் காதலி அம்முவை நினைத்துக் கொண்டு தூங்க முயற்சித்தேன்.

அடுத்தடுத்த சிலநாட்களில் அதே கனவு திரும்ப வர, மனது கொஞ்சம் கலவரமானது.ஒவ்வொரு நாளும் கையின் நீளம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. உறுத்தும் நினைவுகளை உள்ளத்தில் வைக்கக்கூடாது என இடத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்தேன். கட்டிலை மாற்றிப் போடும்போது ஒரு சந்தேகம் வந்தது. கணேசன் ஏதாவது சூனியம் வைத்திருப்பாரோ என, பட்டுக்கோட்டை காரனுங்க சூனியத்தில் கெட்டிகாரங்கன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க.

கல்லூரியில் திரும்பி வந்த கணேசனுக்கு ஒரே வியப்பு.

“கணேசன், நீங்க ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தீங்கல்ல, இனிமேல் அந்த இடத்துல தூங்குங்க, ஹீட்டரை கட்டிப்பிடிச்சுட்டு”

“ரொம்ப தாங்க்ஸ் நண்பா!! ”

இரவு இனிதே கனவுகள் இல்லாமல் கழிந்தது. ஞாயிறு ஆனாலும், வழமைப்போல கணேசன் டீ போட்டு என் மேசை நாற்காலியின் அருகில் வைத்து இருந்தார். அவரின் முகத்தைப் பார்த்தேன், வழக்கமான அப்பாவி சிரிப்பு இல்லை.

“கார்த்தி, என்னங்க இந்த இடத்துல படுத்த பின்ன வெறும் பேய்க்கனவா வருது, ஹீட்டர்லேந்து கை வர்ற மாதிரி கனவுங்க, கை நீண்டு கழுத்து வரை வர்ற மாதிரி இருந்துச்சு”

”அட விடுங்க, நமீதா கில்மா கனவு மாதிரி சில சமயங்களில் இப்படி பேய்க்கனவும் வரும்”

”ஆமாங்க, இருக்கும், நேத்து ஒரு இங்லீஷ் பேய் படத்தை தமிழ் டப்பிங் ல பார்த்துட்டு இருந்தேன்”

“ஆமாம் , அந்த நினைப்பு உங்களை இன்ப்ளூயன்ஸ் பண்ணி இருக்கும், சரி நான் கார்ல்ஸ்க்ரோனா ஷிப்ட் ஆகப்போறேன்” அவருக்கு ஏன் எதற்கு என்றெல்லாம் விளக்கம் கொடுக்கவில்லை. அன்றைக்குப்பிறகு ஒரு இரவு கூட அந்த அறையில் தூங்கவில்லை. புதுவீட்டில் ஹீட்டர் பக்கத்து இடத்தை கணேசனுக்கே கொடுத்தேன்.

ஒரு மாதம் கழித்து வந்த பத்திரிக்கைச் செய்தி அதிர்ச்சியைக் கொடுத்தது, எங்களது பழைய வீட்டிற்கு குடிவந்த குடும்பத்தின் கணவன் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டார், மனைவியை காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

Saturday, November 14, 2009

நன்றி மனுஷ்யபுத்திரன் மற்றும் சாரு , சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்

சாருநிவேதிதாவின் இணையப்பக்கத்தை சிலநாட்களாகப் படிக்கவில்லையே என இன்று திறந்தால் ஆச்சரியம் அதில் யோகன்பாரிஸ் அவர்களின் கடிதம், அதன் பின் தொடர்ச்சி மனுஷ்யபுத்திரனின் சக்கர நாற்காலி கவிதையில் வந்து நின்றது. கவிதையும் சாருவின் அந்தக் கவிதை தொடர்பான விளக்கமும் அருமை. சாரு சொன்னது போல அது சுயவிரக்க கவிதை கிடையாது. கலக அரசியல் கவிதை.

மனுஷ்யபுத்திரனின் கவிதை இங்கே

ஒரு சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்

ஒரு நாற்காலியின் பயன்பாட்டைவிட பலமடங்கு அதிகமானவை.

நாற்காலியை இழந்துவிடுவோம்
என்கிற பயத்திற்கு இதில்
அவசியமே இல்லை

எந்த நியாயமான, நியாயமற்ற
காரணத்திற்காகவும்
நாற்காலியை யாருக்கும்
விட்டுக்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை

எல்லோரும் நின்றுகொண்டிருக்கும் வரிசையில்
நாம் நிற்க வேண்டியதில்லை

நமது பின்புறத்தைக் காட்டி
யாரையும் அவமானப்படுத்த நேர்வதில்லை

புனிதர்களோ கடவுள்களோ
சட்டென மண்டியிடும்படி
நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை

நாட்டின் முதல் குடிமகன்கள்
சபையில் நுழையும்போது
நம் இருக்கைகளிலிருந்து பதட்டமடையவேண்டியதில்லை

கீழ்நிலை ஊழியர்களை
ஒருபோதும் அமரச்சொல்லாத
எஜமானர்களின் தந்திரங்கள்
நம்மிடம் பலிப்பதில்லை

இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளில்
பங்கேற்கவேண்டியதில்லை
தேசியகீதம் பாடும்போது
எழுந்து நிற்கவேண்டியதில்லை

யாருக்கும் வழிகாட்டிச் செல்லவோ
யாரையும் பின்தொடரச் செய்யவோ
யாரோடும் இணைந்து நடக்கவோ
வேண்டியதில்லை

எந்த இடத்திலும்
முண்டிக்கொண்டு செல்லவேண்டியதில்லை

முக்கியமாக
சக்கரநாற்காலிகள்
பூமியின் எந்த மையத்தோடும்
பிணைக்கப்படுவதே இல்லை





இது தொடர்பான சாருவின் கட்டுரை இங்கே

Friday, November 13, 2009

Paraskevidekatriaphobia, 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை

அட, இன்றைக்கு 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆச்சே !! Paraskevidekatriaphobia பற்றி போன வருடம் எழுதினது இங்கே
http://vinaiooki.blogspot.com/2008/06/paraskevidekatriaphobia-13.html

Thursday, October 22, 2009

இந்த வார புதிய தலைமுறை வாங்கி விட்டீர்களா !!!

சுவீடனில் வழங்கப்படும் கல்விப் பற்றியும் , மேற்படிப்பு படிக்கும் வழிமுறைகளையும் உள்ளடக்கி, நான் எழுதியக் கட்டுரை ஒன்று இந்த வார “புதிய தலைமுறை” இதழில் வெளியாகி உள்ளது. படித்து, மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். என்னுடைய எழுத்து வெகுசன ஊடகம் ஒன்றில் வருவது இதுவே முதன்முறை. முதல் எழுத்தே , மற்றவர்களுக்குப் பயன் தரும் வகையில் வருவது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

Thursday, October 01, 2009

செவ்வாய்கிழமையும் தமிழில் பேசிய சுவிடீஷ் ஆட்களும் - சிறுகதை

செவ்வாய் கிழமை ஆனாலே எனக்குப் பயம் வந்துவிடும். எவ்வளவு திருத்தமாக காரியங்களை கண்ணும் கருத்துமாகச் செய்ய முயற்சித்தாலும் ஏடாகூடமாகக் கொண்டு போய்விடும். வாரம் முழுவதும் நன்றாகப் பேசும் கீர்த்தனா, செவ்வாய் கிழமையன்றுதான் உப்பு சப்பில்லாத விசயங்களுக்கெல்லாம் தனது எரிச்சலைக் காட்டுவாள். அன்றைய செவ்வாய் கிழமையும் வழக்கம்போல அவள் திட்டித் தீர்க்க ஆரம்பித்தாள்.

“அம்மு, இவ்வளவு தூரம் வந்து பனியிலும் குளிரிலும் படிக்கிறது உனக்காகத்தானே, உன்கிட்ட போன்ல பேசுற இந்த கொஞ்ச நேரந்தான் ஆறுதலா இருக்கு, நீயும் இப்படி கடிஞ்சுப் பேசிட்டா நான் எங்கடா குட்டிமா போவேன்”

அலுவலகத்தில் என்ன பிரச்சினை ஏது பிரச்சினை என அவளிடம் பொறுமையாகக் கேட்டு சமாதானப் படுத்தி அவளைத் தூங்க வைத்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்தேன். சுவீடனில் கோடை முடியப்போகிறது என்றாலும் இன்னும் வெளிச்சம் இருந்தது. கைபேசியில் தான் நேரம் பார்க்க வேண்டும். கீர்த்தனா வாங்கிக் கொடுத்த பழைய கைக்கடிகாரம் சரியாக வேலை செய்யவில்லை. புதிதாய் வாங்கி அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாள். மணியைப் பார்த்தேன். ஏழரை காட்டியது. இருட்ட இன்னும் ஒரு மணி நேரம் இருக்கின்றது. வீட்டிற்குப்போனாலும் தனியாகத்தான் இருக்க வேண்டும். சரி, எங்க ஊரில் இருக்கும் ப்ரூன்ஸ்பார்க் காட்டிற்குப்போய் வரலாம் என்று மாற்று ஒற்றை வழிப்பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.

போகின்ற வழியில் கீர்த்தனாவிற்கு இனிமேல் சுவிடீஷ் கற்றுக்கொடுக்க வேண்டும், கண்ணே மணியே எனக் கொஞ்சிப்பேசுவது வழக்கமாகிப்போனதில் அசுவாரசியம் தட்டுப்படுவதாக உணர்ந்தேன்.இல்லாவிடின் கல்யாணம் பற்றி பேச ஆரம்பித்தால் சண்டையில் வந்து முடியும். அவளும் கூட, போன வாரம் “கார்த்தி, எனக்கு சுவிடீஷ் கத்துக் கொடு” எனக் கேட்டாள்.

அடிப்படை சுவிடீஷ் வாக்கியங்களை மனதில் அசைபோட்டுக்கொண்டே இடது பக்கம் இருந்த சிறுகுளத்தைத் தாண்டி வலது பக்கமாக கடந்து போகும்பொழுது தமிழில் யாரோ பேசுவது கேட்டது. இந்த ரோன்னிபே நகரத்தில் இருப்பது இரண்டே இரண்டு தமிழர்கள், ஒன்று நான், இன்னொன்று கணேசன். கணேசன் ஐரோப்பியச் சுற்றுப்பயணம் சென்றிருப்பதால் எஞ்சி இருப்பது நான் மட்டுமே!!

சுற்றுலா வந்தவர்களாக இருக்கும் நினைத்துக் கொண்டே குளத்தை ஒரு சுற்று சுற்றி வருகையில் மீண்டும் “கலக்கிட்டடா மச்சி” என்று காதில் வந்து விழுந்தது தமிழ் குரல். பக்கத்து வீட்டு கேத்ரீனா ப்ருன்ஸ்பார்க் காட்டுப்பக்கம் இரவில் போகும் பொழுது எச்சரிக்கையாக இரு என்று சொன்னது நினைவுக்கு வந்து பயத்தை மேலும் கூட்டியது.

ஆனது ஆகட்டும் என தமிழில் பேச்சுக் குரல்கள் கேட்கும் திசையை நோக்கி கவனமாக செல்ல, சிலஅடிகள் தூரத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தமிழில் பேசிக்கொண்டிருந்த ஆறேழு பேர்கள் யாருக்கும் தமிழருக்கான நிறமோ உயரமோ இல்லை. சுவிடீஷ் வெள்ளை நிறத்துடன் பொன்னிற கூந்தலுடன், பூனைக் கண் பார்வைகளோடு என்னை அனைவரும் ஒரு சேர திரும்ப்பிப்பார்த்தனர். அங்கே நாலைந்து பீர் போத்தல்கள், இந்திரா சவுந்தர்ராஜனின் துளசிமாடம் புத்தகத்துடன் தமிழ் நாட்டார் தெய்வங்கள் படம் போட்டிருந்த பெயரில்லாத புத்தகங்கள் கிடந்தன.

அதில் இருந்த ஒரு பெண் “செல்லம், வாடா, உனக்காகத் தான் நாங்கள் எல்லாம் காத்திருக்கின்றோம்” என்று அழகான தமிழ் உச்சரிப்புடன் சொல்ல, உதறல் எடுத்து ஓடத் தயாரானேன். நான் ஓடப்போவதைத் தடுத்து நிறுத்திய ஒருவன், அவனது ஒளிவீசும் பூனைக் கண்களால் சில வினாடிகள் என் கண்களை ஊடுறுவிப் பார்த்து விட்டு “சரிப் போய்த் தொலை” என அவனும் தமிழில் பேசி என்னை விரட்டினான்.

நடந்தது உண்மையா அல்லது பிரமையா எனப் புரியாமலே 5 நிமிடத்திலேயே வீட்டிற்கு வந்து சேர்ந்து, கதவைத் திறக்கும்பொழுது, பக்கத்துவிட்டு கேத்ரீனா என்னுடைய சுவிடீஷ் படிப்புப் பற்றி பேச ஆரம்பித்தாள். அவளிடம் என்னுடைய பயத்தைக் காட்டிக்கொள்ளாமல் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபின், “கார்த்தி, நீ சுவிடீஷ் ஆட்கள் மாதிரியே சரளமாகப் பேசுவது ஆச்சரியமாக இருக்கின்றது” என சுவிடீஷில் சொல்லிவிட்டு எனது தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டுப் போனாள்.

கணேசன் முன்பு தனக்காக வாங்கி வைத்திருந்த பெரிய போர்வையை எடுத்து நான் இழுத்துப்போர்த்திக் கொண்டபோதிலும் என் உடம்பு வெடவெட என நடுங்க ஆரம்பித்தது. ஒரு மணி நேரமாக திகில் நடுக்கத்துடன் இருந்தபோது கீர்த்தனா கைபேசியில் அழைத்தாள்.

“சாரிடா கார்த்தி, ஆபிஸ்ல டென்ஷன், நான் வேற யார்கிட்ட என் கோபத்தைக் காட்ட முடியும், உனக்கு ஒரு அழகான வாட்ச் வாங்கி இருக்கேன், நாளைக்கு கொரியர் பண்ணிடட்டுமா?”

“தக் ச மிக்கெத் அம்மு, யாக் எல்ஸ்கார் தெய்க்”

“டேய், சுவிடீஷ் போதும், சுவிடீஷ் எல்லாம் நாளைக்கு கத்துக் கொடுக்கலாம், இப்போ ரொமான்ஸ் டைம்”

அவள் சொல்லுவது புரிகிறது, ஆனால் என்னக் கொடுமை, தொண்டை வரை வரும் தமிழ், வாயில் வராமல் சுவிடீஷில் அல்லவா அவளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கேன்.


”கார்த்தி, பிளீஸ் விளையாட்டு போதும், அட்லீஸ்ட் இங்கிலீஷ்லயாவது பேசு, உன் இங்கிலீஷை கிண்டலடிக்க மாட்டேன்”

அய்யோ கீர்த்தனாவிற்கு என் நிலைமைப் புரியவில்லையே! எனக்கு தமிழும் வரவில்லை, ஆங்கிலமும் வரவில்லை. சுவிடீஷ் மட்டுமே பேச வருகின்றதே!!! அந்த சுவிடீஷ் காரன் என் கண்களை ஊடுருவிப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அரை மணி நேரமாக அந்தப் பக்கம் என்னைத் தமிழில் பேசக் கெஞ்சிக் கொண்டிருக்கும் கீர்த்தனாவிற்கு நான் அழுதபடியே சுவிடீஷில் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

Wednesday, September 30, 2009

ரிங் டோனும் வேறு சில பாடல்களும் - சிறுகதை

புதிதாய் வந்திருக்கும் எனது அறை நண்பர் கணேசன் ஒரு அப்பாவி, அறையில் சமைப்பதில் இருந்து பாத்திரம் கழுவி வைப்பது வரை எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறார். இருந்தாலும் அவர் வந்த இந்த இரண்டு தினங்களாக, அவரின் மேல் சொல்ல முடியாத கோபம்.

நேற்று அதிகாலை, பல்லவி அனுபல்லவி கன்னட படத்தில் வரும் இளையராஜாவின் பின்னணி இசைக்கோர்வைத் துண்டு அழைப்பு மணியாக அடித்ததும் பதறி அடித்து எழுந்தேன், ஒரு வேளை அம்மு தான் மனம் மாறி கூப்பிடுகிறாளோ என்று எனது கைபேசியைத் தேட

“சொல்லுட மச்சி, இங்கே எல்லாம் நல்லா இருக்கு, பசங்க கிட்ட செட் ஆயிட்டேன்னு” யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.

அரைத்தூக்கத்தில் கிடைத்த ஏமாற்றம் ஆத்திரமாக மாறும் முன் தலையணையில் முகம் புதைத்தேன். சுவிடீஷ் மொழி வகுப்பு செல்லுவதற்கான நேரம் கடந்தும் தூங்கிக் கொண்டிருந்த என்னை மீண்டும் எழுப்பியது ”எக்ஸ்கியூஸ் மீ கந்தசாமி” பாடல், இந்தத் தடவை பாடல் ஒலித்தது கணேசனின் மடிக்கணினியில் இருந்து ,

நானும் அம்முவும் கடைசியாக நல்லபடியாக பேசிக்கொண்டிருந்த பொழுது இந்தப் பாடலைத் தான் பாடிக்கொண்டிருந்தோம்.

“கணேசன், ஹெட் செட் போட்டு கேட்க முடியுமா, ப்ளீஸ்” திரும்ப தூங்கிப்போனேன். இப்பொழுதெல்லாம் அடிக்கடி தூங்கிப்போகின்றேன். உறக்கத்தில் மட்டுமே நான் பாதுகாப்பாய் இருப்பதாக உணர்கின்றேன். பழகும் காலத்தில் கனவில் வராதவள் இப்பொழுதெல்லாம் அடிக்கடி கனவில் வருகிறாள்.

சமீபத்தில் வந்த எந்தப் பாடலை மடிக்கணினியில் போட்டாலும் கணேசனை ஓரக்கண்ணால் பார்த்ததும் அவர் பாட்டை மாற்றிவிடுவார்.

“ஏங்க , இந்த பாட்டெல்லாம் உங்களுக்குப்பிடிக்காதா?” பாவமாய் கேட்டார்.

“நீங்க போடுற பாட்டெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும், அதனாலதான் வேண்டாம்” என சொல்லிவிட்டு வழக்கமாக மேயும் வலைப்பூக்களை வாசிக்க ஆரம்பித்தேன்.

என்னுடைய கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை, “எனது உயிரே எனது உயிரே” பீமா படப்பாடல் ஒரு வலைத்தளத்தில் ஒடிக்கொண்டிருந்தது.பீமா படம் வந்த பொழுது எனக்கு அறவே பிடிக்காத இந்தப் பாடல் அம்முவுடன் பழக ஆரம்பித்து அவள் பாடிக்காட்டிய பின் இந்தப்பாடல் சுவாசம் ஆகிப்போனது.

தூக்க மாத்திரைகளும் தீர்ந்துவிட்டன. கண்களை இறுக்கி மூடி , நூறில் இருந்து 99,98 என எண்ணிக்கொண்டே தூக்கத்தை வரவழைத்துக் கொண்டேன். எழுந்த பொழுது கணேசன் அருமையாக சாம்பார் வைத்திருந்தார்.

“ஏன் கார்த்தி, புதுபாட்டு போட்டால் டென்ஷன் ஆகுறீங்க?”


“மீனிங்லெஸ் பாட்டு எல்லாம்”

“அப்படி எல்லாம் சொல்ல முடியாதுங்க, வாரணம் ஆயிரம், சுப்ரமணியபுரம் பாட்டு வரிகள் கேட்டுப்பாருங்க”

நான் பதில் சொல்லவில்லை. இந்தப் படப்பாடல்களில் தான் என் அம்முவுடன் ஆன காதல் வளர்ந்தது, அவள் இப்போது என்னுடன் இல்லை, தயவு செய்து அவளை ஞாபகப்படுத்தும் விதத்தில் எதுவும் பேசவேண்டாம் என கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தது.

சாப்பிட்டு முடித்தவுடன் அம்மு போன பின் ஏற்படுத்திக் கொண்ட கடுகடு முகத்தோடு கணினியில் மின்னஞ்சல்களை வாசித்து கொண்டிருந்த பொழுது,

“கார்த்தி, இனிமேல் நான் போடுற பாட்டு எதுவும் உங்களுப்பிடிக்காமல் இருக்காது” எனச் சொல்லிவிட்டு

”நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா” என பொன்னுமனி படத்தில் இருந்து ஒரு பாட்டை ஓடவிட்டு என்னைப் பார்த்து சிரித்தார்.

”உலகே அழிஞ்சாலும் உன்னுருவம் அழியாது” வரிகள் வந்த பொழுது, பாண்டிச்சேரி பேருந்தில் முகத்திற்கு அருகில் வந்து முணுமுணுப்பாய் பாடியது எல்லாம் நேற்று நடந்ததாய் நினைவுக்கு வந்தது.

எத்தனைப் பாடல்கள் , எத்தனை வரிகள், எத்தனை உணர்வுகள். எல்லாம் புரிந்தும் என்னைவிட்டு விட்டு போன அவளைக் கத்த இயலாது. நான் கத்துவதற்கென பட்டுக்கோட்டையில் இருந்து இந்த அப்பாவி கணேசன் வந்து இருக்கின்றார்.

“கணேசன், அடுத்த வாரம் அசைன்மெண்ட் டெட்லைன் இருக்குல்ல, பலமைல் தள்ளி இங்கே படிக்க வந்துருக்கோம், பாட்டு கேட்க இல்ல"

அதற்கடுத்து என் அறையில் கணேசன் ஒரு மாதம் தான் தங்கி இருந்தார். அந்த நாட்களில் என் காதில் விழாதவாறுதான் பாட்டுக்கேட்பார்.

பின்னொரு நாள், அம்முவுடைய திருமணம் வெகு விமரிசையாக நடந்தது என்றாலும் ஒரே ஒரு குறை திருமண வரவேற்பு பாட்டுக்கச்சேரியில் பழைய கருப்பு வெள்ளை எம்.ஜி.ஆர் சிவாஜி படப்பாடல்களை மட்டுமே பாடிக்கொண்டிருந்தனர் என என்னுடைய பழைய அலுவலகத்தோழி சொல்லக்கேட்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.

Friday, September 25, 2009

அம்மு,கண்ட இடத்துல கிறுக்காதே!! - சிறுகதை

எங்களுடன் வந்திருந்த அலுவலகத் தோழிகள், தசாவதாரம் படத்தின் இடைவேளையில் எழுந்து வெளியேப்போனவுடன், எனது இடது கையை இறுக்கமாகப் பிடித்து இருந்தவள்,மெல்ல கையை விலக்கி, இருக்கையின் கைப்பிடியில், நகத்தினால் ஏதோ எழுத எத்தனித்துக் கொண்டிருந்தாள்.

“என்னடா அம்மு, பண்ற!!' எனக் கேட்டுக்கொண்டே கைப்பிடியைக் கவனித்தேன். ”அம்மு - கார்த்தி” என எழுதி வைத்திருந்தாள்.

ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் ஒன்றாக்கி அவளின் மணிக்கட்டில் சுளீர் என ஒரு அடிக்கொடுத்தேன்.

“என்ன பழக்கம் இது, கண்ட இடத்துலேயும் கிறுக்கிக்கிட்டு”

மணிக்கட்டைத் தடவிக்கொண்டே, ”தெரியல கார்த்தி,இந்த மாதிரி உன் பேரையும் என் பேரையும் சேர்த்து வச்சு எழுதிப்பார்க்கிறது நல்லா இருக்கு”

”எழுதி வைக்கிறதுன்னா, உண்மையானப் பேரை எழுதி வைக்கனும்... உண்மையான பேரை எழுதினா மாட்டிக்குவோம்னு பயமா!!” என்னையும் அறியாமல் எனது குத்தல் வார்த்தைகள் வந்து விழுந்தது.

"நிமிஷத்துக்கு பத்து தடவை அம்மு கூப்பிடுறதுனால, அம்முங்கிறது தான் மனசுல நிக்குது”

“சரி சரி, நம்ம பேரை உன் மனசில எழுதி வை போதும், அதுவரை இப்படி பணத்துல கிறுக்கிறது, சுவத்துல கிறுக்கிறது எல்லாம் வேணாம்”

கொஞ்சம் குரலை உயர்த்தி சொன்னால் போதும், அவளின் கண்களில் நீர்த்திவலைகளுடன் என்னையே உற்றுப்பார்ப்பாள்.

”நீ மட்டும் கதையில எனக்கு ஒரு பேரு வச்சி எழுதுறீல்ல, அதை நான் கேட்டேனா”

“சரிடா செல்லம், காம்ப்ரமைஸ் காம்ப்ரமைஸ், அம்முகுட்டி தானே!! பொம்மு குட்டில ”

“சரி எல்லாம் வர்றாங்க ,இந்த அம்மு பொம்மு எல்லாம் ஸ்டாப் பண்ணிட்டு மத்மஸல் நு வழக்கம்போல கூப்பிடுங்க “

காதலிப்பதை விட , மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக காதலிப்பதுதான் மிக மிக சிரமம். இரண்டாம் பாதியில் அமெரிக்க வில்லன் பிளெட்சர் கதாநாயகக் கமலை துரத்த, பழைய காதலி ஜெனியின் கிறுக்கல் நினைவுகளை துரத்த முடியாமல் துவண்டு கொண்டிருந்தேன். காதலில் பழையது புதியது என உண்டா என்ன?

5 வருடங்களுக்கு முன்னே, மாயாஜாலில் வர்ணஜாலம் படம் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது இப்படித்தான் ஜெனி - கார்த்தி என இருக்கையில் முதன் முதலாக கிறுக்க ஆரம்பித்தேன். ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல, சமயங்களில் எங்களுடையப் பெயரை நுணுக்கமாக ஐந்து ரூபாய் பத்து ரூபாய் தாள்களில் எழுதி அவளுக்குக் கொடுப்பதுண்டு. கிழக்கு கடற்கரை சாலை மரங்கள், வளசரவாக்கம் உணவு விடுதிகளில் மேசைகளில் பலவற்றிலும் எங்கள் இருவரின் பெயர்களும் இருக்கும்.

“ஃபிரண்டாத்தான் பழகினேன், அவர்தான் தப்பா எடுத்திக்கிட்டாரு” என்று ஜெனி அவளின் சகோதரன் முன் சொன்ன பின் ,மனதில் கல்வெட்டாய் இருந்த அவளின் பெயர் கரைந்துப் போனது. எல்லாம் பொய்யாகிப்போன பின் சிரத்தை எடுத்து எல்லா இடங்களில் பதிந்து வைத்திருந்த அவளின் பெயரை மட்டும் அழித்து வைத்தேன்.

பஞ்சாபி கமலஹாசன் ஆடிக்கொண்டிருக்க,

“சுவீடன் போனப்பின்ன என்னை மறந்துடுவியா?” கன்னத்தின் அருகே மெல்லிய குரல் கேட்டவுடன் ஜெனியை மனதில் இருந்து துரத்தி விட்டு

“ இல்லடா அம்மு, குறைஞ்சது இரண்டு மணி நேரமாவது பேசுவேண்டா!! ”

” எனக்குப் பத்தாது, நீ பேசிட்டே இருக்கனும், நீ ஜத்தெய்ம் ஜத் தெய்ம் நு சொலிட்டே இருக்கனும், நான் மெர்சி பக்கூப் பக்கூப் நு பதில் சொல்லனும்”

“சரிடா குட்டிமா, பேசிட்டே இருப்பேன்... சரி பிரஞ்ச் எல்லாம் கலக்குற”

“பாண்டிச்சேரி பொண்ணா இருந்துகிட்டு இது கூட இல்லேன்னா எப்படி” கண்களை சிமிட்டிக்கொண்டே, படம் முடியும் வரை தன் கைவிரல்களை என் விரல்களோடு இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

உதயம் திரையரங்கத்தில் பத்து விரல்களில் வலுவான நெருக்கம், பத்து மாதங்களில் பன் மடங்காகி போன வாரம் பட்டென முடிந்து போனது.

“அம்மா அப்பா முன்ன, உன்னைப்பிடிக்கும் னு சொல்ல முடியாதுடா!! “

ஜெனியின் மேல் வந்த கோபத்தில் லட்சத்தில் ஒரு பங்கு கூட வரவில்லை. பிரிந்துவிடலாம் என முடிவு செய்த பின்னர் இரண்டு முறை தொடர்புகொண்ட போதும் கைபேசியை எடுக்கவில்லை. வீட்டிற்கு அழைத்தால் கடுமையான குரலில் எடுத்து எறிந்து பேசும் அவளின் தந்தை. புதுச்சேரி அரசாங்க நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர், மகள் காதலிக்கும் அல்லது அவரை பொருத்தவரை , மகளை காதலிக்கும் எவனோ ஒருவனிடம் அப்படி நடப்பது தானே இயல்பு.

நிராகரிப்பை விட ஒதுக்கப்படுதல் அதிக வலியை தரும். சராசரி காதலனைப் போல கதறி அழுது கொடுத்த சலசலப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல் ,பெற்றவர்களின் பிள்ளையாய் போனவளை இனி மீட்டெடுக்க முடியாது. மீட்டெடுக்கவும் வேண்டாம் என, மன மாற்றத்திற்காக பாரிஸ் வந்தாலும் அவளின் எண்ணங்களே வந்து நிற்கின்றது. நகரத் தெருக்களில் காதில் விழும் மதமஸல், மொன்சியர், மெர்சி பக்கூப், ஜத் தெய்ம் வார்த்தைகள் எல்லாம் அவளின் குரலில் வந்து விழுகின்றன. ஈஃபிள் கோபுரத்தின் முன்னர் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்த காதலர்களைப் பார்த்த பின்னர், அவள் எனக்குக் கொடுத்த முத்தத்தை கண்களை மூடி மீள்நினைவு செய்தேன்.




நண்பர் ஜனா மூன்றாவது தளத்தில் இருந்து என்னை படம்பிடிக்க படிக்கட்டுகளில் ஏறிப்போன பின்னர், யாரும் கவனிக்கிறார்களா என ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ”பிரசன்னவதனி” என்று அவளின் பெயரை ஆங்கிலத்தில் அழுத்தமாக, ஈபிள் கோபுர பக்கவாட்டு கைப்பிடி மரக்கம்பத்தில் பதிந்தேன்.

Sunday, August 16, 2009

+46762509249 சுவீடனில் ஒரு தொலைபேசி அழைப்பு - சிறுகதை

வெள்ளிக்கிழமை இரவு ஆதலால் என்னுடைய அறை நண்பர்கள் கார்ல்ஸ்க்ரோனா நகர இரவுக் கொண்டாட்டங்களுக்குச் சென்றுவிட்டார்கள். தனிமைதான் மனிதனின் முதல் எதிரி. பழைய சோகம் , புதிய மகிழ்ச்சி என எதைப்பற்றியும் யோசிக்காமல் தூங்க முயற்சித்தாலும் வரவில்லை. கண்ணாடி சன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்தேன். எங்களது குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் பழைய யூகோஸ்லாவியா அகதிகள் சத்தம் போட்டுக்கொண்டு, வார இறுதி ஆட்டம் பாட்டங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். எப்படியும் குளிர் -5 இருக்கும்.

”விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம், குலம் விளங்க விளக்கு வைப்போம்” இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஆத்மாப் படப்பாடலுடன் கைபேசி அழைக்க ஆரம்பித்தது. வந்த எண்ணைப் பார்த்தேன், +46762509249,சுவீடன் எண்தான்.தெரியாத எண் வந்தால் பெரும்பாலும் எடுக்க யோசிப்பேன். ஒரு வேளை கிருஷ்ணமூர்த்தியோ வாசுதேவனோ வேறுயாரவது கைபேசியில் இருந்து கூப்பிடுகிறார்களோ என யோசித்தபடியே

”கார்த்தி ராமச்சந்திரன் ” என்றேன். சுவீடனுக்கு வந்த இந்த இரண்டு மாதங்களில் மக்களுடன் தொலைபேசியில் பேசும்பொழுது கவனித்த விசயம் சுவிடீஷ் மக்கள் ஹலோ சொல்லாமல் தங்கள் பெயரைச் சொல்வார்கள். மாறுபட்ட ஒரு விசயமாக இருந்ததனால் அப்படியே வரித்துக்கொண்டேன். மறுபுறம் அழைப்பவர்கள் கேட்கும் முன் சரியான நபருடன் தான் பேசுகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள ஒரு வாய்ப்பு.

மறுபக்கம் அழகான பெண்குரல், “யாக் ஹீதர் ஆன் நீல்சன் கேன் டு யெல்ப்பரா மெய்க்”

ஹீத்தர், யெல்ப்பரா என்ற இரு வார்த்தைகளை வைத்து தனது பெயரையும் உதவி தேவை என்றும் கூறுகிறாள் என என்னால் யூகிக்க முடிந்தது.

”யாக் தாலர் இண்டே சுவென்ஷ்கா, கேன் டு தாலா இங்கல்ஸ்கா” , எனக்கு சுவிடீஷ் தெரியாது, ஆங்கிலத்தில் பேசமுடியுமா என்ற அர்த்தத்தில் அமைந்த , இந்தியாவிலேயே மனப்பாடம் செய்து வைத்திருந்த அருமையான சுவிடீஷ் உச்சரிப்புடன் சொல்லிய பின் அந்தப் பெண் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாள்.

அவளுக்கு யாருடன் ஆவது பேசவேண்டும் எனத் தோன்றியதால் ஏதோ ஒரு எண்ணை அழைத்துக் கூப்பிட்டதாகக் கூறினாள். நான் என்னைப் பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டேன். எனக்கு மனதுக்குள் ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஆங்கிலத்தில் கடலைப் போடுகிறேன் எனும்பொழுது சுவாரசியம் மேலும் அதிகமானது. அவள் எனது ஊரில் இருந்து 30 நிமிட பயண நேரத்தில் 50 கிமீ தொலைவில் இருக்கும் கார்ல்ஷாம்ன் என்ற நகரத்தில் வசிப்பதாகக் கூறினாள்.மால்மோ பல்கலைகழகத்தில் சமூக விஞ்ஞானம் படிப்பதாகக் கூறினாள். தனது பழையக் காதலனைப் பற்றிக் கூறினாள்.அழுதாள். சிரித்தாள். பெண்களிடம் எனக்கு என்னப்பிடிக்குமெனக் கேட்டாள். பதில் கூறாமல் நான் சிரித்ததை ரசித்தாள்.

“கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிவிட்டோமே!! உனக்கு தொலைபேசிக் கட்டணம் அதிகமாகாதா? உனக்கு இணைய இணைப்பு இருந்தால் கணினி வழிப் பேசலாமே “ என ஆங்கிலத்தில் கேட்டேன்.

“டெலிடு காம்விக் இதில் 30 நிமிடங்கள் பேசினால் 0.69 க்ரோனர்தான், ஆகையால் பிரச்சினை இல்லை” என்றாள்.

அதிகாலை 5 மணிக்கு நான் தூங்கிவழிந்துப் பேசுவதைக் கண்ட அவள் ,

“நீ போய்த்தூங்கு, நான் நாளை உன்னை அழைக்கின்றேன்” எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

மனதின் குதுகலத்துடன் அன்றையப் பகல் முழுவதும் தூங்கிப்போனேன். மறுநாள் இரவும் கூப்பிட்டாள். பேசினோம்.. பேசினோம்... மறுநாள் இரவும் சங்கீத ஸ்வரங்களாக கரைந்தது. தமிழின் பெருமைகளைப் பற்றி சொன்னேன். சுவிடீஷ் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தாள்.அடிப்படை வாக்கியங்கள் அனைத்தையும் இலக்கணத்தோடு சொல்லிக் கொடுத்தாள். பகலில் வகுப்புகள் இருந்தாலும் ஓரிருமுறை அழைத்தபோது ஏதோ சுவிடீஷில் சொல்லி அழைப்பு போகவில்லை. ஒரு மாதத்திற்குப்பின் அவளைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தேன். கார்ல்ஷாம்ன் முகவரியைக் கொடுத்தாள். அருமையாக உடையணிந்து அவள் சொன்ன முகவரிக்குச் சென்றுபார்த்தேன்.கதவைத் திறந்த வயதான பெண்மணியிடம்

“ஆன் நீல்சனைப் பார்க்க விரும்புகின்றேன்” சுவிடீஷில் ,

அந்த வயதானப் பெண்மணி புருவத்தை உயர்த்தி ,பயங்கலந்த வியப்புடன் பார்த்தாள்.

"ஆன் நீல்சன், மால்மோ பல்கலை கழகத்தில் படிக்கும் பெண்” எனக்கு பயம் வந்துவிட்டது, தவறான முகவரியைக் கொடுத்துவிட்டாளோ என,

இந்த முறை அந்த பெண்மணி கண்கலங்கி, என்னை வீட்டிற்குள் அழைத்தாள்.

மேசையின் மேல் இருந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு என்னருகில் வந்து என்னிடம் பேச ஆரம்பித்தாள். புகைப்படத்தைப் பார்த்தேன். ஆன் நீல்சனாகத்தான் இருக்க வேண்டும். நான் கற்பனை செய்து இருந்ததை விட அழகாக இருந்தாள். பழைய டென்னிஸ் வீராங்கனை அன்னா கோர்னிகாவைப் போல இருந்தாள்.

”நீ அவளுடன் பல்கலைகழகத்தில் படித்தவனா” என்ற அந்தப் பெண்மணிக்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் ஆமாம் என தலையாட்டினேன்.

ஆன் நீல்சன் அந்தப் பெண்மணியின் கடைசி மகள் என்றும் அவள்மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்ததாகவும் சொன்னாள். மால்மோவிற்கு படிக்கப்போகின்றேன் எனப்போனவளை அதன் பின்னர் பார்க்கவில்லை எனச் சொன்னாள்.

“உங்களுக்குள் ஏதேனும் பிரச்சினையா “ என்றேன்.

“இல்லை, ஒரு விபத்தில் இறந்துவிட்டாள்” எனக்கு தூக்கிவாரிப்போட்டது. முகத்தில் வியர்த்திவலைகளுடன் ”எத்தனை நாட்களுக்கு முன்னர்?”

“நாட்கள் இல்லை, இரண்டு வருடமாகிவிட்டன”. எனக்கு தலை கிறுகிறுவென சுற்றுவது போல இருந்தது.

“சிலசமயங்களில் அவளுடன் தொலைபேசியில் பேசுவது போல ஒரு உணர்வு, பிரம்மையா உண்மையா எனத் தெரியவில்லை” என அந்தப் பெண்மணி சொன்ன அடுத்த நொடி, அந்த வீட்டில் இருந்து எடுத்த ஓட்டத்தை கார்ல்ஷாம்ன் ரயில் நிலையத்தில் தான் நிறுத்தினேன். கைபேசியைப் பிரித்து உள்ளிருந்த சிம் அட்டையைத் தூக்கி எறிந்தேன். ரயிலின் வேகத்தை விட இதயத்துடிப்பின் வேகம் அதிகமாக இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் குளித்து, சாமி கும்பிட்டு, எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என வேண்டிக்கொண்டு திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொண்டேன். இரண்டு நாட்களுக்குப் பின்னர் மனம் ஆசுவசப்பட்ட பின்னர் சுவீடனில் பிரபலமில்லாத நிறுவனத்திடம் கைபேசி இணைப்பு வேண்டி இணையத்தில் பதிவு செய்தேன். ஒரு வாரம் கழித்து சிம் அட்டையுடன் இணைப்புக்கான கடிதம் வந்தது. எனக்கு அளிக்கப்பட்டிருந்த எண்ணைப் பார்த்தேன் +46762509249

Saturday, August 15, 2009

அவருக்கும் உன் முகச்சாயல் தாண்டா - சிறுகதை

"கார்த்தி, முன்பே வா பாட்டு பார்த்திருக்கியா?!!”

“இல்லைடா அம்மு, அந்த பாட்டு ரொம்ப ஸ்லோ, முழுசா கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை “

“நீ இப்போ பார்க்கனும், யூடியூப் ல தேடிப் பாரு , சண்டே வீட்டில இருக்கிறப்ப எங்க லோக்கல் சேனல்ல அடிக்கடிப் போட்டான்”

சுவீடன் இணைய இணைப்பின் வேகம் அதிகமானதால் ஒரு சில வினாடிகளில் முழுக்க தரவிறக்கம் ஆனது.

“கார்த்தி, கொஞ்சம் ஃபார்வர்ட் பண்ணிட்டு, சூர்யா ப்ளூ கலர் டீஷர்ட் ல வர்ற இடத்தில் இருந்து பாரு!”

”பாட்டுக் கேட்குதா அம்மு” சொல்லிக் கொண்டே மடிக்கணிணியில் சத்தத்தை அதிகரித்தேன்.

நீரும் செம்புல சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம் என்ற வரிகள் வந்ததும் “ஸ்டாப் ஸ்டாப்” என கீர்த்தனா உற்சாகத்தில் கத்தியதும் பாட்டை அப்படியே நிறுத்தினேன்.

“இப்போ, அந்த லைனை மட்டும் திரும்ப ப்ளே பண்ணு”

திரும்ப அதே வரிகள் பாட ஒலிக்க ஆரம்பிக்க அந்த வரிகளுடன் கீர்த்தனாவும் முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

“இப்போ சூர்யா ஒரு பக்கமா திரும்பி ஸ்மைல் பண்றதைப் பாரேன்.. ஸோ கியூட்” எனச்சொல்லிவிட்டு ஒரு குழந்தை சிரிப்பு சிரித்தாள் .

எனக்குக் கோபம் வரவில்லை.நான் அவள் வாழ்க்கையில் வந்த பிறகுதான் அவளுக்கு சூர்யாவைப் பிடிக்க ஆரம்பித்து இருந்தது. சென்னையில் வேலைபார்க்கும் கீர்த்தனா வார இறுதிகளில் சொந்த ஊருக்குப் போய் விட்டு வந்தால், அவள் செய்யும் முதல் காரியம் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்ச்சிகளைப் பற்றிக்குறிப்பிட்டு அதை என்னை இணையத்தில் பார்க்கச் சொல்லக் கேட்பதுதான்.



“காப்பி வித் அனு பார்த்தியா, டைரக்டர் கௌதம் வந்து இருந்தாரு”

மென்பொருள் வர்த்தகம் பற்றி ஒருக் கட்டுரையை மதியத்திற்குள் அனுப்ப வேண்டிய அவசரத்தில்

“இனிமேல் நீ ஊருக்குப் போயிட்டு வரதுக்குள்ள நீயா நானா காப்பி வித் அனு, நடந்தது என்ன, சூப்பர் சிங்கர் , லொட்டு லொசுக்கு எல்லாம் பார்த்து வச்சிடுறேன் போதுமா” சொல்லிய உடனேயே கீர்த்தனாவின் முகம் வாடிப்போனதை குரலில் அறிந்து கொள்ள முடிந்தது.

“ நீ டீவில ப்ரொகிராம் எல்லாம் பார்க்கனும்கிறதுக்காக சொல்லல, கௌதமோட க்ளோஸ் ஷாப் ஷாட்ல கண்ணை மட்டும் மறைச்சிட்டு , இப்போதான் ஸ்மார்ட்டுன்னு எங்க அக்காக்கிட்ட சொல்லிட்டு இருந்தேன் தெரியுமா!!”


ஆண்கள் பக்கம் பக்கமாக அன்பைப்பொழியும் வசனங்கள் பேசுவது, பெண்களின் ஒருவரி வாக்கியத்திற்கு முன் அடிப்பட்டு போய்விடும். கட்டுரையாவது மண்ணாங்கட்டியாவது என எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு அவள் 48 மணி நேரம் வீட்டில் இருந்த கதையை 6 மணி நேரத்தில் கேட்டு முடித்தேன். அதன் பின்னர் எந்த பாடாவதியான நிகழ்ச்சியானாலும் சரி, பாடல் ஆனாலும் சரி அவள் சொன்ன அடுத்த நொடியே தேடிக்கண்டுபிடித்து பார்த்துவிடுவேன். யாராவது ஒரு ஆள் என் முகச்சாயலில் இருப்பார்கள், அதை என்னைப் பார்க்கச்சொல்லி அவள் ரசித்துக்கொள்வாள். ரசிப்புடன் இலவச இணைப்பாக அவளின் குழந்தை சிரிப்பும் கிடைக்கும்.

நிஜம் அருகில் இல்லாதபொழுது நிழல்களில் என்னைத் தேடி மகிழ்ச்சி அடைந்து கொள்ளும் கீர்த்தனா கடைசி வரை நிஜத்தை அவளின் பெற்றோர்களிடம் கொண்டுப் போய் சேர்க்கவேண்டும் நினைக்கவில்லை.

“கார்த்தி,உன்னப் பத்தி சொல்லி எங்க அம்மா கிட்ட இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் வரதைப் பார்க்கிற கஷ்டம் உன்னைப் பிரிஞ்சு வாழுற கஷ்டத்தைவிட ஜாஸ்தி”

நான் எப்பொழுதும் கீர்த்தனாவின் பேச்சிற்கு மறுபேச்சு பேசியதில்லை. என்னால் அவள் பெற்றோருடன் பேசி சம்மதிக்க வைக்க முடியும் என்ற போதிலும், இவள் ஒருத்தியையாவது நான் காயப்படுத்தாமல் அனுப்பி வைக்கலாமே என்று முயற்சி எடுக்கவில்லை.

இதோ நாளை கீர்த்தனாவிற்குத் திருமணம். தானே தொலைபேசியில் அழைத்து என் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்வதாக மின்னஞ்சலில் தெரிவித்து இருந்தாள். அவளின் தொலைபேசி அழைப்பிற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கின்றேன்.

வழக்கம்போல அவளின் தொலைபேசி அழைப்பை எடுக்க முழு மணியும் அடிக்க விட்டு , நானே திரும்ப அழைத்தேன்.

“சொல்லுடா அம்மு, விஷஸ், உன் நல்ல மனசுக்கு நீ ஜம்முன்னு இருப்பே”

“தாங்க்ஸ்டா!! நீயும் சீக்கிரம் செட்டில் ஆகனும்டா!!!”

அதன் பின் என்ன பேசுவது என்று தெரியவில்லை. சில வினாடிகள் மௌனத்திற்குப்பின்

“கார்த்தி, அவருக்கும் உன் முகச்சாயல்தாண்டா” , இந்த முறை கீர்த்தனா பழைய குழந்தைப் புன்னகையைத் தரவில்லை.

Saturday, August 08, 2009

சுவீடன் மேற்படிப்பும் சில கல்வி ஆலோசனை நிறுவனங்களும்( Consultancies)

அறியாமை என்பது தவறல்ல, அறிந்தும் தானே போய் வலிய மாட்டிக்கொள்வதுதான் தவறு. சுவீடனில் படிப்பு இலவசம் என்பது பலரும் அறிந்ததே!!! மனிதனின் அவலங்களைக் கூட வியாபரம் ஆக்கும் இந்த உலகத்தில், இலவசமாகக் கிடைக்கும் படிப்பை வைத்து எப்படி எல்லாம் பணம் செய்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்பொழுது வருத்தமாக இருக்கும். சில ஆலோசனை மையங்கள் ஐக்கிய ராச்சியத்திலும் (United Kingdom) ஆஸ்திரேலியாவிலும் இருக்கும் சில பல்கலைகழகங்களோடு நேரிடையாகத் தொடர்பு வைத்து மேற்படிப்பு படிக்க அனுமதி வாங்கித் தருகிறார்கள் என்பது உண்மை. அதற்காக அதே விசயத்தை அனைத்து நாடுகளிலும் செய்ய முடியும் என நம்ப வேண்டியது இல்லை.


ஸ்காட்லேண்ட் தேசத்தில் இருக்கும் அபர்டீன் பல்கலை கழகத்திற்கு மாணவர்கள் நேரிடையாகவும் விண்ணப்பிக்கலாம் , அவர்கள் அனுமதித்து இருக்கும் சில ஆலோசனை மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். சுவீடன் கிடைக்கும் முன்னர், அபர்டீன் பல்கலை கழகத்திற்கு நான் நேரிடையாக விண்ணப்பித்து அனுமதிக்கடிதம் பெற்றேன். முன்னர் சொன்ன படி ஆஸ்திரேலியா , ஐக்கிய ராச்சியத்தில் இருக்கும் பல்கலை கழகங்கள், கல்லூரிகளில் இவர்களுக்கு நேரிடையான தொடர்பு இருக்க்கின்றது.

ஆனால் சுவீடன் உயர்கல்வியை பொருத்த மட்டில் எந்த ஒரு ஆலோசனை மையத்திற்கும் சுவீடன் கல்வி நிறுவனங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. சுவீடனில் மேற்படிப்பு படிக்க இடம் வாங்கித் தருகிறோம் எனச் சொல்லுபவர்கள் செய்யும் வேலை எல்லாம் உங்கள் சான்றிதழ்களின் நகல்களை வாங்கி தபால் உறையில் இட்டு அனுப்புவது தான். உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதோ இடம் கிடைக்கப் பெறுவதோ எந்த வகையிலும் ஆலோசனை மையங்களால் (Consultancies) சிபாரிசோ/நிராகரிப்போ செய்ய இயலாது.

இங்கு ஆலோசனை மையங்களை நொந்து எந்த பிரயோசனமும் இல்லை. ஏமாறுபவன் இருக்கும் வரை தலையில் நன்றாக மிளகாய் அரைப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். சான்றிதழ்களின் நகல்களை “நோட்டரி பப்ளிக்” கையொப்பம் பெற்று தபாலில் அனுப்பக் கூட தெரியாத மாணவர்கள் கண்டிப்பாக மேற்படிப்பு படித்து ஒன்று சாதித்து விடப்போவதில்லை. ஒரு பள்ளிக்கூட இறுதி மாணவனுக்கு இது தெரியவில்லை என்றால் பரவாயில்லை. பொறியியற் படிப்பு முடித்த பின்னர் தெளிவாகக் கொடுத்து இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி எளிமையாக அதிக பட்சம் இரண்டாயிரம் ரூபாய் செலவில் (தபால் செலவு + நோட்டரி பப்ளிக்) விண்ணப்பிப்பதை விட்டு விட்டு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யும் மாணவர்களை நினைத்து வருந்தத்தான் முடிகிறது.

ஆலோசனை மையங்கள் , மேற்படிப்பு அனுமதியில் ஏதாவது பிரச்சினை என்றால் நாங்கள் தொலைபேசியில் சுவீடன் கல்வி நிறுவனத்துடன் பேசி பெற்றுத்தருவோம் என சொல்லுவார்கள். நாம் எந்தக் கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்கின்றோமோ அல்லது மொத்தமாக விண்ணப்பிக்கும் ஸ்டூடராவுக்கோ நாமே தொலைபேசி விடலாம். நாம் எத்தனை மோசமாக ஆங்கிலம் பேசினாலும் அவர்கள் பொறுமையாகக் கேட்டு பதில் தருவார்கள். ஒரு வேளை உங்களுக்கு பேசத் தயக்கம் என்றாலும் மின்னஞ்சல் மூலம் கேட்டாலும் தக்கதொரு பதில் கிடைக்கும்.

சுவீடன் அனுமதியைப் பொருத்த மட்டில் விதிமுறைப்படி உங்களுக்கு அனுமதி என்றால் அனுமதி, இல்லை எனில் யாராக இருந்தாலும் கிடையாது.

செப்டம்பரில் எனது சகோதரனுக்கு நான் படிக்கும் கல்லூரியில் விண்ணப்பித்து இருந்தேன். பரிசீலிக்கும் மையத்தில் இருக்கும் அனைவரையும் எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். எனது சகோதரனது சான்றிதழ்களைச் சரிப்பார்க்க சென்னைப் பல்கலை கழகத்துக்கு அனுப்பப்பட்டு ஒரு நாள் தாமதமாக வந்து சேர்ந்தது. எத்தனையோக் கேட்டுப்பார்த்த பின்னரும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி இருக்க விசயம் , ஆலோசனை நிறுவனங்கள் நாங்கள் முயற்சி எடுத்து வாங்கித் தந்தோம் என்று சொன்னால் அது வடி கட்டியப் பொய்.

இந்தியாவிலோ சுவீடனிலோ அல்லது உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் சுவீடனில் தம்மால் மேற்படிப்பு அனுமதி பெற்றுத்தர முடியும், பிரச்சினைகள் இருந்தாலும் சிபாரிசு செய்து வாங்கித் தரமுடியும் என்று யாராவது சொன்னால் அப்படியே ஏற்றுக்கொண்டு பணத்தைக் கட்டாதீர்கள்.

சுவீடன் மேற்படிப்புக்கான விண்ணப்பிக்கும் முறைகள் எளிமையானது, தெளிவானது. சுமாரான ஆங்கிலப்புலமை உடையவர்கள் கூட எளிமையாக விண்ணப்பிக்கலாம். சில ஆர்குட், கூகுள் யாஹூ குழுமங்களில் நடக்கும் விவாதங்களில் மக்கள் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரைத் தர தயாராக இருக்கின்றனர் என்பதை பார்க்கும்பொழுதுதான் , மாணவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக இந்தப் பதிவை எழுதத் தோன்றியது. சாதாரண விசயத்தை செய்யத் தெரியாத மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வந்து பெரிதாக ஒன்றும் சாதிக்கப்போவதில்லை (கடுமையாக இருந்தால் மன்னிக்கவும், ஆதங்கத்தில் சொல்கின்றேன்). 50 ஆயிரம் ரூபாயை நீங்கள் யாராவது சுயதொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு திரும்பப்பெறும் முதலீடாகத் தரலாம், அதை விட்டு நுனிநாக்கு ஆங்கிலத்தில் கோடிகளில் புரளும் கல்வி ஆலோசனை மையங்களிடம் பணத்தை அழ வேண்டாம்.

சுவீடன் இளங்கலை/முதுகலைப் படிப்புக்காக விண்ணப்பிக்க studera.nu என்ற இணைய தளம் இயங்கு கிறது. இவர்கள்தாம் சேர்க்கையை நடத்துபவர்கள்.


இளங்கலை - First Cycle (Under Graduate)

முதுகலை - Second Cycle (Masters )

தொலை தூரப்படிப்புக்கும் இந்த தளத்தில் விபரங்கள் கொடுத்து இருக்கின்றார்கள்.

அடுத்த வருடம் செப்டம்பருக்கான சேர்க்கை டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கும். அதிக விபரங்களுடன் முன்னர் எழுதப்பட்ட பதிவு இங்கே http://vinaiooki.blogspot.com/2008/10/blog-post_10.html

வருங்கால மாணவர்களுக்கு வாழ்த்துகள்




Tuesday, August 04, 2009

சென்னை பதிவர் பட்டறை(ஆகஸ்ட் 5, 2007) , இரண்டு வருடங்கள் நிறைவு

இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்னை பல்கலை கழக வளாகத்தில் இதே ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பதிவர்கள் திண்ணைப்பேச்சு அரட்டையாளர்கள் அல்ல என்பதை நிருபிக்கும் வகையில் கருத்து மாறுபடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு பதிவர்கள் ஒன்றிணைந்து நடத்தி இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றது.


வலைப்பூக்களின் வீச்சு அதிகரித்து வரும் இந்த காலக்கட்டத்தில் மற்றும் ஒரு பதிவர் பட்டறை சென்னையில் நடத்தப்பட்டால் நன்றாக இருக்குமோ!!!


பட்டறை நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே காணலாம்.

பதிவர் பட்டறைகள் புதியவர்களை உள்ளிழுப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள் மத்தியிலும் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது நிதர்சனம். ஊர் கூடி தேர் இழுத்தல் அழகுதானே!!!

சென்னையில் மீண்டும் ஒரு பட்டறை முன்பை விட சிறப்பாகவும் அதிக நபர்களை உள்ளிழுக்கும் வகையிலும் நடத்தப்பட வேண்டும். சென்னையில் இருக்கும் பதிவர்கள் கவனிப்பார்களா!!!
---

சென்னைப் பதிவர் பட்டறை முடிந்த கையோடு புதுவை பதிவர்கள் இணைந்து நடத்திய புதுவை வலைப்பதிவர் பட்டறையும் மிகுந்த வெற்றி பெற்றது.


---

சிறு நகரங்கள் பெரு நகரங்களுக்கெல்லாம் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என விழுப்புரம் பயிலரங்கம் அமைந்திருந்தது.


---


விடைகள் : வினாடி - வினா (திரட்டி.காம் நட்சத்திர ஸ்பெஷல் )

1. வன்முறையின்றி ஒரு நல்ல த்ரில்லர் படத்தைக் கொடுக்க முடியும் என இயக்குனர் பாசிலின் கைவண்ணத்தில் வெளிவந்த பூவிழி வாசலிலே திரைப்படத்தில் பாடகர் மனோ “அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே” எனத் தொடங்கும் பாடலைப் பாடி இருப்பார். இந்தப் பாடல் தான் மனோவின் முதல் தமிழ் திரைப்பாடல். படத்திற்கு இசை இளையராஜா.



2. ஷார்ஜா கோப்பை இறுதி ஆட்டத்தில் ஜாவேத் மியாண்டட் கடைசிப் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து வெற்றியை பாகிஸ்தானுக்குத் தேடித்தருவார். அந்தக் கடைசி ஓவரை வீசியவர் தான் சேதன் சர்மா. ஸ்ரீகாந்த் இந்திய அணித்தலைவராக இருந்த போது, கான்பூரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் வெற்றிக்கான ரன்விகிதம் கிடுகிடுவென எகிற , “காட்டடி” அடிக்க சேதன் சர்மா களம் இறக்கப்பட்டார். கண்ணை மூடிக்கொண்டு சுத்தாமல் நேர்த்தியாக ஆடி சதம் அடித்ததோடு மட்டும் அல்லாமல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதிச் செய்தார். இவரைக் களமிறக்கும் முடிவை ஸ்ரீகாந்த் தான் எடுத்தார் சொல்லப்படும். 87 ரிலையன்ஸ் உலகக்கோப்பை போட்டி ஆட்டம் ஒன்றில் , நியுசிலாந்து அணிக்கெதிராக அனைத்தும் Bowled என்ற முறையில் ஹேட்ரிக் எடுத்தார். இந்த ஆட்டத்தின் மற்றும் ஒரு சிறப்பம்சம், ஆமை வேகத்தில் ஆடும் கவாஸ்கர் அதிரடியாக ஆடி சதம் அடித்ததுதான். கவாஸ்கரின் ஒரே ஒரு நாள் போட்டி சதமும் இதுதான்.


3 வது மட்டும் 8 வது கேள்விகளுக்கானப் பதில்கள்

ஆஸ்திரேலியா கண்டம் ஆகிப்போனதால் க்ரீன்லாந்து உலகின் மிகப்பெரும் தீவு என்கிற அந்தஸ்தை பெற்றது. நார்வே நாட்டில் பிறந்து குழந்தையாக இருக்கும்பொழுது பெற்றோர்களுடன் ஐஸ்லாந்திற்கு நாடு கடத்தப்பட்ட எரிக் த ரெட், வளர்ந்த பின் வேறு ஒரு கொலைக் குற்றத்திற்காக நாட்டை விட்டுத் துரத்தப்பட்டார். அப்படி துரத்தப்படும்பொழுது ஐஸ்லேந்தில் இருந்து
500 மைல்கள் மேற்கு நோக்கி செல்லும்பொழுது க்ரீன்லாந்தைக் கண்டுபிடித்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர். மாற்றுக் கூற்றுகளாக அதற்கு முன்னரே மக்கள் பாரிய நிலப்பரப்பை பார்த்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன. இப்பொழுது மனித உரிமைகள் / சமாதானம் பேசும் நாடாக தன்னைக் காட்டிக்கொண்டாலும் டென்மார்க் கும் ஒரு காலத்தில் “நாடு பிடிக்கும்” அரசாங்கத்தைத் தான் கொண்டிருந்தது. நார்வேக்காரர்கள் க்ரீன்லேந்தை விட்டுப்போனது 17 ஆம் நூற்றாண்டில் டென்மார்க் க்ரீன்லேந்தை தனதானதாக சொந்தம் கொண்டாடியது. உலகப்போருக்குப்பின் 1953 ஆம் ஆண்டு முதல் டென்மார்க் முடியாட்சியின் கீழ் க்ரீன்லாந்து ஒரு அங்கமாக வந்தது.

சுயாட்சி அதிகாரம் கொடுத்துவிட்டு பாதுகாப்பு,வெளியுறவுக்கொள்கைப் போன்றவன வற்றை தன் வசம் வைத்துக் கொண்டு பலம் வாய்ந்த நாடு சிறிய நாட்டை ஆட்சி செய்யும் முறைக்கு Suzerainty என்று பெயர். தற்பொழுது இந்தியாவின் மாநிலமாக இருக்கும் சிக்கிம் 1975 ஆம் ஆண்டு வரை இந்த வகையிலேயே இந்தியாவில் நிர்வாகிக்கப்பட்டு வந்தது. நேபாளத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்களினால் ஏற்பட்ட கலவரங்களினாலும் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை குறைந்ததாலும் இந்தியா தனது ராணுவ ந்டவடிக்கைகளினால் மீட்டெடுத்து சிக்கிமை இந்தியாவுடன் இணைக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பெருவாரியான வரவேற்குப்பின் இந்தியாவின் 22 வது மாநிலமாக சிக்கிம் மாறியது.

4. எல்லை காந்தி என இந்திய வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்படும் கான் அப்துல் கபார்கான் பாரத ரத்னா விருதைப் பெற்ற முதலாவது இந்தியக் குடிமகன் அல்லாதவர். அதற்கு முன் அன்னை தெரசா பெற்றிருந்தாலும் அவர் இந்தியக் குடிமகளாக மாறி இருந்தார். கபார்கானுக்குப்பின்னர் நெல்சன் மண்டேலா வெளிநாட்டுக்காரராக இவ்விருதைப் பெற்றிருக்கின்றார்.
கபார்கான் இறுதிச்சடங்கின் போது ஆப்கானில் நடைபெற்ற போர் இருதரப்பிலும் நிறுத்தி வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டதாம்.

5. போபஃர்ஸ் ( இந்தப் பெயருக்கு விளக்கமே தேவை இல்லை)

6. மேற்கிந்தியத் தீவுகள் என்ற பெயரில் பன்னாட்டு கிரிக்கெட் ஆட்டங்களில் ஆடிவரும் அணி கரிபீயன் தீவுகளில் இருக்கும் நாடுகளின் கூட்டணி ஆகும். கயனா மட்டும் தென்னமெரிக்கா கண்டத்தில் வடகிழக்கு முனையில் இருக்கின்றது. ஸ்பானிஷ்/போர்ச்சுகீசிய காலனியாதிக்கத்தில் மொத்த தென்னமெரிக்காவும் அடிமைப்பட கயானா பிரிட்டன் ஆதிக்கத்தில் வந்தது. மேற்கிந்தியத் தீவுகள் இரண்டு முறை உலகக் கோப்பைகளைக் கைப்பற்றிய போது அணித்தலைவராக இருந்த கிளைவ் லாயிட் கயானாவைச் சேர்ந்தவர்தான். ஜார்ஜ்டவுன் கயானா நாட்டின் தலைநகர்.

அயர்லாந்து குடியரசும் , ஐக்கிய ராஜ்ஜியம்(கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து) அரசியல் ரீதியாக இரு வேறு நாடுகளாக இருந்தாலும் , யூகே வில் இருக்கும் வடக்கு அயர்லாந்தும் அயர்லாந்து குடியரசும் இணைந்து அயர்லாந்து கிரிக்கெட் அணியாக பன்னாட்டு போட்டிகளில் பங்குபெறுகின்றது.

7. தென்னாப்பிரிக்கா

பிரிட்டோரியா (Executive)
ப்ளோம்பைண்டைன் (நீதித் துறை)
கேப்டவுன் (சட்டம் இயற்றல்/ பாராளுமன்றம்)

இருந்த போதிலும் ஜோகன்னஸ்பர்க் தான் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரம்.

9. அசுவத்தாமன்.

10. மார்க் புட்சர்

Monday, August 03, 2009

வினாடி- வினா (திரட்டி.காம் நட்சத்திர ஸ்பெஷல்)

1. தெலுங்கு கீதாஞ்சலியின் தமிழ்வடிவமான இதயத்தைத் திருடாதே யில் அனைத்துப்பாடல்களையும் தெலுங்கின் மூலவடிவத்திற்கு சற்றும் குறைவில்லாமல் உணர்வுப்பூர்வமாகப் பாடிய பாடகர் மனோ, பின்னாளில் முக்காலா முக்காபுலா, அழகிய லைலா என ஹைபிட்ச் பாடல்களில் ஒரு கலக்கு கலக்கியவர். இவர் தமிழில் பாடிய முதல் பாடல்/படம் எது? அந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார்?


2. இவர் ஒரு முன்னாள் இந்திய மித வேகப்பந்து வீச்சாளர். உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிகளில் ஹேட்ரிக் சாதனை செய்தவர். அதிரடியாக முன்வரிசை ஆட்டக்காரராக இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் போட்டி ஒன்றில் களம் இறங்கி ஆட்டமிழக்காமல் சதமடித்து அணிக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத்தந்தவர்.இவர் பெயரைக் கேட்டவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்ஆனந்த பரவசமடைந்து மலரும் நினைவுகளில் மூழ்குவார்கள்.யாரிந்த கிரிக்கெட் வீரர்?

3. இது உலகின் மிகப்பெரியத் தீவுகளில் ஒன்று. சுயாட்சி அதிகாரம் படைத்த தீவாக இருந்த போதிலும் அரசியலமைப்புச் சட்டம், வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியன ஸ்கேண்டிநேவிய நாடு ஒன்றின் வசம் உள்ளது(Suzerainty). கொலைக்குற்றவாளி என நார்வே நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டவரால் கிபி 10 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தீவின் பெயர் என்ன?

4. இவர் பாரத ரத்னா விருது பெற்றவர். மகாத்மா காந்திக்கு நெருக்கமாக இருந்த இவர் பாகிஸ்தான் - இந்தியப் பிரிவினையை எதிர்த்தவர். இருந்த போதிலும் பிரிவினைக்குப்பின்னர் பாகிஸ்தானி ஆன பின்னர் “இந்தியாவின் நண்பனாகவே “ அடையாளம் காணப்பட்டவர்.

வாழ்நாளில் பெரும்பான்மையான நாட்களை(கிட்டத்தட்ட 52 வருடங்கள்) சிறையிலோ நாடு கடத்தப்பட்டோ கழித்த இவர் இறந்த போது இந்திய அரசாங்கம் இவருக்காக 5 நாட்கள் துக்கம் அனுசரித்தது. இந்திய வரலாற்றுப் புத்தகங்களில் நல்லதொரு இடத்தைப் பிடித்திருக்கும் இந்த நபர் யார்?

5. ஆல்பிரட் நோபலுக்கும் இந்திய அரசியலுக்கும் நேரிடையான சம்பந்தம் கிடையாது. இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலையாக இருந்த உலகின் மிகவும் பழமையான நிறுவனங்களில் ஒன்றை ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலையாக மாற்றிய போது , இந்த நிறுவனத்தின் பெயர்தான் இந்திய அரசியலில் ஒரு கலக்கு கலக்கப் போகின்றது என அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்காது, மழைவிட்டாலும் தூவானம் விடாது என கால் நூற்றாண்டிற்குப்பின்னரும் இந்திய அரசியல் அரங்கில் வலம் வரும் இந்த சுவிடீஷ் நிறுவனத்தின் பெயர் என்ன?

6. பன்னாட்டு கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கு பெறும், தென்னமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்த நாடு எது? இந்த நாடு நேரிடையாகப் பங்கேற்காமல் கூட்டாக அணியை போட்டிகளுக்கு அனுப்பும் நாடுகளுள் ஒன்று. இந்த தென்னமெரிக்கா நாட்டின் பெயர் என்ன? இதே போல் ஒரு தனிக்குடியரசு நாடு, மற்றொரு நாட்டின் ஒரு பகுதியோடு இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கின்றது. அந்த அணியின் பெயர் என்ன?

7. உலகின் பெரும்பாலான நாடுகள் ஒரே தலைநகரத்தைக் கொண்டிருக்கையில் விதிவிலக்குகளாக , சில நாடுகள் நிர்வாக வசதிக்காக இரண்டு தலை நகரங்களைக் ஏற்படுத்தி வைத்திருக்கும். இதைத் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு நாடு மூன்று தலைநகரங்களைக் கொண்டிருக்கின்றது. நிர்வாகத்திற்கு ஒன்று, நீதித்துறைக்கு ஒன்று, சட்டம் இயற்றலுக்கு(பாராளுமன்றம்) ஒன்று என மூன்றுத் தலைநகரங்களை வைத்திருக்கும் நாடு எது?

8. கேள்வி எண் மூன்றில் இருக்கும் நாடு போல இந்தியாவின் மேற்பார்வையில் தனிச் சுதந்திர நாடாக இருந்த ஒன்று பின்பு இந்தியாவின் மாநிலமாக மாறியது. அந்த மாநிலத்தின் பெயர் என்ன?

9. மகாபாரதக் கதைகளில் கௌரவப் படையினரில் உயிருடன் எஞ்சிய மூவர்களில் இருவர் கிருபாச்சாரியா, கிரீடவர்மா. மூன்றாமவர் யார்?

10. கடைசியாகக் கிரிக்கெட் பற்றிய மற்றும் ஒரு கேள்வி. ஒரு நாள் போட்டிகளின் வீச்சு மிக அதிகமாக கோலேச்சிய 90 கள் மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் 71 டெஸ்ட் ஆட்டங்கள் ஆடி 4000 ஓட்டங்களுக்கும் மேல் எடுத்த ஒரு ஆட்டக்காரர் தன் வாழ்நாளில் பன்னாட்டு ஒரு நாள் போட்டி ஒன்று கூட ஆடவில்லை.

இது போல சுவாரசியமான சாதனைகளை எல்லாம் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் தான் வைத்திருப்பார்கள்? யாரிந்த இங்கிலாந்து ஆட்டக்காரர்?

Sunday, August 02, 2009

திரட்டி.காம் - நட்சத்திரம் - நன்றி - தமிழ்மணம் நட்சத்திரம் - பழைய நினைவுகள்

நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் சிறிய கல்லானது எப்படி சிறிய பிரகாசத்தைக் கொடுக்குமோ , அது போல ஜாம்பவான்கள் இருக்கும் பதிவுலகில் நானும் நட்சத்திரத்தைப் போல(ஆகஸ்ட் 3, 2009 தொடங்கும் வாரம்) பிரதிபலிக்க ஒரு வாய்ப்புக் கொடுத்த திரட்டி.காம் நிர்வாகத்திற்கு நன்றி. வலைப்பதிவர் பட்டறைகளின் மூலம் எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான விடயங்களில் சிறப்பானவைகளில் திரட்டி.காம் இணையத்தளமும் அதன் நிர்வாகக் குழுவினருடன் ஏற்பட்ட நட்பும் குறிப்பிடத்தகுந்தனவை.


இந்த நட்சத்திர வாய்ப்பில் கடந்த வருடம் தமிழ்மணம் இணையத் தளத்தில் நட்சத்திரமாக இருந்த போது எழுதிய சிலப் பதிவுகளை மறுவாசிப்பிற்காக தருவதன் மூலம் மேலும் சிலப் பல அபிப்ராயங்களை/விமர்சனங்களைத் திரட்டி வாசகர்கள்/பதிவர்கள் மூலம் பெறலாம் என்பது விருப்பம்.

நாடோடிகள் திரைப்படத்தில் மாற்றுத்திறனுடன் நடித்த “அபிநயா” வைப் பற்றிப் படித்தவுடன், ”சைகைமொழி, கைகளினால் ஒரு மொழி ” என எழுதிய பதிவை இந்தத் தருணத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. நான் முன்பு வேலைப் பார்த்த நிறுவனத்தில் உடன் அபிநயாவைப் போன்ற தோழர்கள்/தோழிகள் கைகளால் பேசிக்கொள்வைதைப் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும்.

மேற்சொன்னப் பதிவைப் படிக்க இங்கேச் சொடுக்கவும்

----

என்னுடைய நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதை முயற்சிகளில், நான் சிரத்தையோடு எழுதியதாக நினைக்கும் சிறுகதை அஜீஸ் அகமதுவும் Patriotism ம், காதல்/பேய் கதைகள் எழுதுவதை விட, சமூகத் தளங்களில் இருக்கும் விடயங்களை யாரையும் காயப்படுத்தாமல் எழுதுவது எவ்வளவு சிரமம் என்பதை இந்தக் கதையை எழுதும்போது தான் நான் உணர்ந்தேன். தமிழ்மணம் நட்சத்திரமாக இருந்து எழுதியதால் அதற்கு வரவேற்பும் விமர்சனங்களும் நன்றாக இருந்தது. திரட்டி நட்சத்திரமாக மற்றும் ஒரு மறுவாசிப்புக்கு தங்கள் முன் வைக்க விருப்பப் படுகின்றேன்.


-----
தமிழ் வலைப்பதிவு வரலாற்றில் அனைத்துப் பிரச்சினைகளும் பின்னூட்டங்களின் வழியாகத் தான் ஆரம்பிக்கின்றன. பின்னூட்டங்களைப் பற்றி குறிப்பாக அநாமதேயப் பின்னூட்டங்களைப் பற்றி எத்தகைய எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், சில எதிர்மறைப் பின்னூட்டங்கள் கூட எப்படி என்னைப் பக்குவப்படுத்தியது என்பதைப் பற்றி எழுதியப் பதிவு பண்படுத்திய (பின்) ஊட்டச்சத்துக்கள்


---------

வினாடி-வினா வகையிலான பொது அறிவு சம்பந்தப் பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க எப்பொழுதும் சுவாரசியமாக இருக்கும். தமிழ்மணம் நட்சத்திரமாக இருந்த பொழுது நடத்தப்பட்ட ஒரு Quiz பதிவையும் உங்கள் முன் வைக்கின்றேன்.

----

என்னிடம் இருக்கும் சிறிய அளவிலான எழுத்துத் திறமையை மிக சரியான முறையில் வெளிக்கொண்டுவந்த ஒரு வாரமாக (வரமாக) தமிழ்மணம் நட்சத்திர வாரம் அமைந்திருந்தது. தமிழ்மணம் நட்சத்திரமாக எழுதப்பட்ட அனைத்துப் பதிவுகளையும் வாசிக்க இங்கேச் சொடுக்கவும்.

Sunday, July 19, 2009

டிப்ளோமெடிக்காய் ஒரு முத்தம் - ஒரு நிமிடக்கதை

கீர்த்தனாவிடம் தொலைபேசியில் உரையாடும்பொழுதெல்லாம் நான் அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தை “டிப்ளோமெடிக்”. இந்த சங்கேத வார்த்தைக்கு அர்த்தம் என்னைச் சுற்றி நண்பர்கள் இருக்கின்றனர், அதனால் இயல்பாக உரையாட முடியாது என்பதுதான். வெளிநாட்டில் படிக்கும்போது சிக்கனமாக இருக்கவேண்டும் என்று 15 க்கு 15 அடி அறையில் நான்கு பேர் தங்கி இருப்பதனால் வரும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.இதற்காகவே அர்த்த ராத்திரியில் எழுந்து இந்தியாவில் தூங்கிக்கொண்டிருக்கும் கீர்த்தனாவை எழுப்பி, பேசுவது உண்டு, அவள் எரிந்து விழுந்தாலும் கூட.

சுவீடன் நேரம் இரவு இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.கீர்த்தனாவின் தொலைபேசி அழைப்பிற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். சனி,ஞாயிற்று கிழமைகளில் வீட்டில் இருந்துவிட்டு திங்கட் கிழமை அதிகாலைப் பேருந்தைப் பிடித்து சென்னைக்கு வரும் வழியில் என்னிடம் வார இறுதிகளில் நடந்தவைகளை சொல்வது அவள் வழக்கம்.

தூங்காமல் மானாட மயிலாட இணைய தளம் ஒன்றில் பார்த்துக்கொண்டிருந்த அறை நண்பன் கிருஷ்ணமூர்த்தி தயங்கியபடியே என்னிடம் வந்து,

“கார்த்தி, நீ கீர்த்தனாகிட்ட பேசுறப்ப அடிக்கடி டிப்ளோமேடிக் யூஸ் பண்றியே அதோட அர்த்தம் என்ன?”

“டேய் சிபிஎஸ்ஈ ஸ்கூல்ல படிச்சிட்டு வந்த உனக்கு அர்த்தம் தெரியுதா? என்ன நக்கலா!!”

“நான் லிட்டரல் மீனிங் கேட்கல, உங்க ரெண்டு பேருக்குள் அது ஏதாவது கோட் வேர்டா!! கோட் வேர்டுக்கு என்ன அர்த்தம்”

“நத்திங், ரூம்ல நிறைய பேரு இருக்காங்க, அம்மு,செல்லம்,புஜ்ஜிக்குட்டின்னு எல்லாம் பேச முடியாது, டிப்ளோமெடிக்காத்தான் பேசுவேன் அப்படிங்கிறது... சரி நீ எதுக்கு கேட்டே!! நீ கூட அன்னக்கி டிப்ளோமெடிக்குன்னு உன் ஆளு உமாகிட்ட சொல்லிட்டு இருந்தியேடா”

கொஞ்சம் வழிதல் முகத்தோடு ”எங்களுக்குள்ள டிப்ளோமெடிக் நா கிஸ் நு அர்த்தம்” என்றான்.

”ராஜராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்” என கைபேசி மணி அடித்தது எடுத்து, கிருஷ்ணமூர்த்தி அறையில் இருப்பதால் சன்னமான குரலில் கீர்த்தனாவுடன் பேச ஆரம்பித்தேன்.

“அம்மு, ரெண்டு நாள் ரொம்ப மிஸ் பண்ணேன்”

“அப்படியா!!! இந்தா சாட்டர்டே மர்னிங் பியானோ, இது லஞ்சுக்கு, இது டின்னர் பியானோ” என தொடர்ந்து தொலைபேசியில் முத்தங்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தாள்.

Saturday, July 18, 2009

நண்பர்களின் பதிவுகள் - ஓர் அறிமுகம்

நமக்கு கைப்படாத விசயங்கள் மற்றவர்களின் திறமையாக வெளிப்படும்போது ஏனோ சற்று பொறாமையாகத்தான் இருக்கும். பல மணி நேரம் அமர்ந்து , மூளையைக் கசக்கிப் பிழிந்தாலும் கவிதை மட்டும் கை வசம் ஆக மாட்டேன் என்கிறது. பொறாமையைத் தூரத்தள்ளிவிட்டு புதிதாக ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுத வந்திருக்கும் திரு.அன்பரசன் அவர்களின் கவிதைப் பதிவை அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

அவர் எழுதி இருந்த கவிதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது

என் பார்வையின்
காமத்தை உதறிவிட்டு
காதலை மாத்திரம் எடுத்து கொள்ளும்
அதிசய அன்னம் நீ..!!!

http://themajusculetornado.blogspot.com/2009/07/1.html

மேற்கு ஐரோப்பாவில் புதிதாக வீடு தேடும் நபர்கள் எப்படி ஏமாற்றப்படலாம் என்பதைப் பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதிய பதிவு ஐரோப்பாவிற்கு படிக்க/வேலை பார்க்க வரும் நண்பர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

http://themajusculetornado.blogspot.com/2009/07/my-recent-experience-with-scammer-not.html


-----

நண்பர் திரு.நிஹேவி அவர்கள் தனது கல்லூரி அனுபவங்களையும், சில திகில் கதைகளையும் எழுத ஆரம்பித்துள்ளார். அவரின் கடைசிப்பக்கம் என்ற சிறுகதையில், மெல்லிய ‘சஸ்பென்ஸ்' , மூட நம்பிக்கை, அமானுஷ்ய விசயங்களின் மேல் மனிதனுக்கு இருக்கும் விருப்பம், ஆன்மீகத்தை வியாபாரமாக்கும் போலிச்சாமியார் ஆகியோர்களை கோடிட்டு அழகாக எழுதி இருக்கின்றார்.

http://nihevi.blogspot.com/2009/07/blog-post.html

கார்ல்ஷாம் ஸ்டேசன் என்றக் கதையில் சுவீடனில் பகுதி நேர வேலைத் தேடுவதைப் பற்றி கூறியிருப்பது மெல்லிய புன்னகையை வரவழைக்கின்றது.

http://nihevi.blogspot.com/2009/07/blog-post_13.html

சுவீடனில் மேற்படிப்புப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளவும் இவரைத் தொடர்பு கொள்ளலாம். இவரின் மின்னஞ்சல் முகவரி grashok4u@gmail.com

Friday, July 17, 2009

அதோ அந்த வெள்ளைக் குதிரை - சிறுகதை

பலமுறைப் பார்த்து சலித்துப்போன இடங்களை நமக்குப் பிடித்தமான ஒருத்தியோடு வந்து சுற்றிக்காட்டும்பொழுது இருக்கும் சுவாரசியமே தனிதான்.

“அம்மு, இந்த பெஞ்ச்ல உட்கார்ந்துக்கிட்டுதான் உங்க அப்பாகிட்ட நம்ம லவ்வப் பத்தி எக்ஸ்ப்லெயின் பண்ணேன்” சொல்லிவிட்டு காதலித்துக் கரம்பிடித்த மனைவியோடு அந்த மரப்பலகையில் அமர்ந்தேன்.

“கார்த்தி, லைட்டெல்லாம் போட்டு, நல்லா மெயிண்டெயின் இந்த வழிய தான், டெய்லி காட்டுப்பாதைல வர்றேன், பயமாயிருக்குன்னு முன்ன சொன்னீங்களா?”


போன வாரம் வரை “டேய்..டெட்ட டேய்” என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த கீர்த்தனா ”ங்க” போட்டு மரியாதையாக கூப்பிடுவதும் நன்றாகத்தான் இருந்தது.

“அம்மு, விண்டர் நடுக்குற குளிர்ல வரப்பத்தான் பயம் தெரியும்...அந்த பேரலல் ரோடு போகுது பார்த்தியா.. அங்க தான் நீ ஒரு நாள் நாம பிரிஞ்சுடலாம்னு சொன்னப்ப உட்கார்ந்து அழுதேன்”

“அழுது அழுதே காரியத்தை சாதிச்சுக்கிட்டீங்க..பொறுக்கி..பொறுக்கி “

சுவீடனின் அழகான பூங்கா எனத்தேர்வு செய்யப்பட்ட இந்த ப்ரூன்ஸ்பார்க்கில், கீர்த்தனாவிற்கு ஒவ்வொரு இடமாக சுற்றுலா வழிகாட்டி போல சுற்றிக்காட்டிக்கொண்டிருந்தேன்.

”அங்கப் பாருங்க, சூப்பர் வெள்ளைக் குதிரை”

“அது நிஜக் குதிரை இல்லைமா!!! சிலை... அந்தக் குதிரைச் சிலையைப் ஒரு புருடாக் கதை.. சாரி புராணக்கதை இருக்கு”

“புராணம் எல்லாம் புருடா இல்லை” கீர்த்தனாவின் முகத்தில் கோபம் எட்டிப்பார்த்தது. அவளைப் பொருத்தவரை பழங்கால புராணக்கதைகள் எல்லாம் நடந்தவை,அது மதுரையைத் தாண்டி இருக்கின்ற சின்ன ஊரின் தலபுராணமாக இருந்தாலும் சரி, இந்த உறை பனி தேசத்தில் சொல்லபடுகின்ற செவிவழிக்கதையாக இருந்தாலும் சரி.

“ஓகே ஒகே... சிலைக்குப் பக்கத்திலே போய் அந்தக் கதையைச் சொல்றேன்” என அந்த ஏரிக்கு அருகில் இருக்கும் அந்த குதிரையிடம் அழைத்துப்போனேன்.

சிலையின் மேல் அவளை ஏற்றி புகைப்படங்களை எடுத்துக் கொண்டபின்,
“அம்மு, முன்ன ஒரு காலத்தில இந்த காட்டுல ஒரு வெள்ளைக்குதிரை இருந்துச்சாம்.. அந்தக் குதிரை இங்க விளையாட வர சின்னப்பசங்களை முதுகில ஏத்திக்கிட்டு ரவுண்ட் அடிச்சுக்காட்டுமாம்”

“ம்ம் அப்புறம்”

“ரவுண்ட் அடிச்சுட்டு இந்த ஏரில குழந்தைங்கள பிடிச்சு தள்ளி விட்டுருமாம்”

“அய்யோ, அப்புறம்”

”ம்ம் ,,, எத்தனை குழந்தைங்கள தண்ணீல தள்ளிவிடுதோ அதுக்கு ஏத்த மாதிரி குதிரை நீட்டமா வளருமாம்”

“இண்டரஸ்டிங்.. சொல்லுங்க”

“பின்ன ஒரு ராஜகுமாரன் வந்து அந்த குதிரையை கொன்னுட்டாராம், அந்த மிதலாஜிக்கல் ஸ்டோரி ஞாபகமா இந்தக் குதிரை சிலையை இங்கே தத்ரூபமா செஞ்சு வச்சிருக்காங்க”



டிசம்பரில் அலுவலகத் தோழன் கிறிஸ்டோபருடன் இங்கு வரும்பொழுது அவன் இந்தக் கதையை என்னிடம் சொல்லி இருந்தான். அப்போது விளையாட்டாக நான் அளந்து பார்த்தேன். என் கையளவில் 16 சாண் வந்தது.

அந்த ஞாபகம் இப்பொழுது வர மீண்டும் என் கையை வைத்து குதிரையின் கழுத்துப் பகுதியில் இருந்து வால் ஆரம்பிக்கும் இடம் வரை அளக்க ஆரம்பித்தேன். இப்பொழுது இரண்டு விரற்கிடை அதிகமாக இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. உண்மையில் இந்த கற்குதிரை வளர்ந்து இருக்கின்றதா!!!

“அம்மு, கிட்டத்தட்ட ரெண்டு இஞ்ச் லெங்த் ஜாஸ்தி ஆயிருக்கு”

”சும்மா சொல்லாதீங்க”

“எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு எக்ஸ்காக்ட்டா சிக்ஸ்டீன் இருந்துச்சு”

“கார்த்தி, கம் ஆன், அப்போ விண்டர், கல் எல்லாம் கொஞ்சம் சுருங்கி இருக்கும், இப்போ 25 டிகிரில வெயில் சுள்ளுன்னு அடிக்குது.. எக்ஸ்பாண்ட் ஆகி இருக்கும்.. ரயில்வே டிராக் ல கேப் விட்டு , தண்டவாளம் சேர்ப்பாங்கன்னு நாம படிச்சிருக்கோம்ல”

“அட, மொக்கை காமர்ஸ் படிச்ச உனக்கு இவ்ளோ சயிண்டிபிக் அறிவா” என அவளை மெச்சிக்கொண்டேன்.

மறுநாள் காலை, தூங்கிக் கொண்டிருந்த கீர்த்தனாவிற்கும் சேர்த்து காப்பி போட்டு எடுத்துக்கொண்டு சுவீடனின் ஆங்கில செய்தி இணைய தளங்களில் ரோன்னிபே உள்ளூர் செய்திகளை மேய ஆரம்பித்தேன். எனக்குத் தலைச்சுற்ற ஆரம்பித்தது, முதல் செய்தியைப் படித்ததுமே!!!!

”போன வாரம் காணாமல் போன இரண்டு குழந்தைள்,பல இடங்களில் தேடுதலுக்குப் பின்னர் ப்ரூன்ஸ்பார்க் ஏரியில் இருந்து சடலங்களாக மீட்டெடுக்கப்பட்டனர்”

-------------

Wednesday, July 15, 2009

வினோத் காம்ப்ளி

வட இந்திய இந்தித் தொலைக்காட்சிகளில் ‘உண்மை நிகழ்ச்சிகளில்' அடிக்கடித் தலைக்காட்டிக்கொண்டிருக்கும் வினோத்காம்ப்ளிக்கு மற்றும் ஒரு சிக்கல். தான் சொல்லாதக் கருத்தை சொன்னதாக ஊடகங்கள் வெளியிட பல இடங்களில் மண்டகப்படிதான். அவர் அப்படி என்னதான் சொன்னார்? “சச்சின் எனக்கு இன்னும் கொஞ்சம் உதவி இருக்கலாம்” மேலும் கிரிக்கெட் வாரியம் என்னை சாதியாலும் நிறத்தாலும் ஒதுக்க ஆரம்பித்தது' எனக்கூறியதைக் கண்டு கொதிப்படைந்த வெள்ளை வட இந்திய ஊடகங்கள் வரிந்து கொண்டு ‘வில்லனாக' சித்தரிக்க 'நான் அப்படி எதுவும் சொல்லவில்லை' என புலம்பிக்கொண்டிருக்கின்றார். நல்லதொரு வீணை இப்படி தன்னாலும் பிறராலும் நலங்கெடப்போனதை வினோத் காம்ப்ளியின் ரசிகன் என்ற முறையில் மனம் வருத்தப்படுகிறது.

சென்ற வருடம் தமிழ்மணம் நட்சத்திரமாக இருந்த பொழுது வினோத் காம்ப்ளியைப் பற்றி இக்கட்டுரையை இங்கு நினைவுகூர்கின்றேன். கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Sunday, July 12, 2009

நான் , கீர்த்தனா மற்றும் சில மரங்கள் - சிறுகதை

இயற்கையான வடிவங்களில் மனித முகங்களைத் தேடும் பழக்கம் ஆறாவதுப் படிக்கும்பொழுது இறந்து போன தாத்தா உருவம் அவருக்கு படைக்கப்பட்டிருந்த வாழை இழையில் சற்று சாய்வான கோணத்தில் தெரிவதாக சொன்னதில் இருந்து ஆரம்பித்தது. மேகங்கள் ஒன்று கூடும் போது முகங்கள் பலவித பாவங்களை வெளிப்படுத்திக்கொண்டு ஒன்றை ஒன்று முட்டுவது போலத் தோன்றும். பிள்ளையார் மரத்தில் தெரிந்தார், யேசு கட்டிட்டத்தில் தெரிந்தார் என வரும் செய்திகளை எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் சுவாரசியத்துடன் வாசிப்பேன்.

அண்மையில் நான் ரசித்துக்கொண்டிருக்கும் உருவம் நான் கல்லூரிக்கு போகும் குறுக்கு வழியான ப்ரூன்ஸ்பார்க் காட்டில் இருக்கும் ஒரு மரம். இந்த மரத்தில் இருந்து ஒரு பெண்ணை உருவாக்குவதற்கு பெரிய வேலைகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. செதில்களை செதுக்கிவிட்டு கிளைகளைச் சற்றேச் சரிசெய்தால் பெண்ணாகிவிடும். சில நாட்களாக அந்த மரத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் கீர்த்தனாவின் நினைவுகள் அதிகம் வருகின்றன. முழுநிலவின் வெளிச்சத்தில் கீர்த்தனாவின் நினைவாக, அவளின் பெயரை எழுதிவிட்டு வடிந்த சிவப்பு நிற மரப்பிசினைத் துடைத்துவிட்டுப் போவதை, நடக்கும் பாதையின் ஓரமாக நின்று கொண்டிருந்த பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்து சினேகமாக சிரித்தேன். அவள் சிரிக்கவில்லை. இங்கு நள்ளிரவிலும் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதைப் பார்த்திருப்பதாலும் இதற்கு முன்பு இது போல சிரித்து அவர்கள் சிரிக்காமல் போக, நான் அசடுவழிவது வழக்கமான ஒன்று. சாதரண இவ்விரண்டு விசயங்களும் எனது பக்கத்துவீட்டு சுவிடீஷ் பையனின் அறிமுகம் கிடைக்கும் வரை பெரிய விசயமாகத் தெரியவில்லை.

கோத்திக் பிரிவைப் பின்பற்றும் என் பக்கத்து வீட்டுப் பையனின் தலையலங்காரம் அவன் நம்பிக்கைகள் எல்லாம் வித்தியாசமாகவும் சில சமயங்களில் அச்சமூட்டுபவையாகவும் இருக்கும். பேய், ரத்தக் காட்டேரி , பகலில் பெண்ணாகவும் இரவில் ஓநாயாகவும் மாறும் ஒநாய்ப்பெண் போன்ற விசயங்களை விவரிப்பது கிலியூட்டும். இருந்த போதிலும் எனதுக் குடியிருப்பில் என்னுடன் பேசும் ஒரே சுவிடீஷ் ஆள் என்பதால் இவைகளைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. நான் வழக்கமாக கடந்து செல்லும் ப்ரூன்ஸ்பார்க் காட்டைப்பற்றி அவன் சொன்ன ஒரு விசயம் என்னைத் தூக்கி வாரிப்போட செய்தது.

“கார்த்தி உனக்கு ஒரு விசயம் தெரியுமா!! மரத்தால் ஆன ஒரு பெண் ப்ரூன்ஸ்பார்க்கில் இருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு” என்றான் உடைந்த ஆங்கிலத்தில்.

என்னுடைய அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் “நீ பார்த்திருக்கியா ?” என்றேன் சுவிடீஷில்.

”பார்த்ததில்லை, ஆனால் ப்ரூன்ஸ்பார்க் கடக்கும்பொழுது எனக்கு சில மரங்களிடையேப் போகும்பொழுது அவைகள் ஏதோ சொல்ல வருகின்றன எனத் தோன்றும்”

இதைக் கேட்டதில் இருந்து அந்த வழியில் நான் செல்லுவதை நிறுத்திவிடலாமா என யோசித்தேன். மூன்று நிமிட திகிலுக்காக மூன்று கிலோமீட்டர் சுற்றிக்கொண்டுப் போக வேண்டுமா என தைரியத்துடன் மறுநாளும் அந்த வழியேச் செல்வதை தொடர்ந்தேன். பேயாவது பிசாசாவது, அப்படியே வந்தாலும் பெண் பேய் தானே!! பார்த்துக்கொள்ளலாம் என தொடர்ந்தேன். பின்னிரவு வேளைகளில் நிலவு வெளிச்சம் இருக்கும் நாட்களில் முன்பு பார்த்த பெண்ணைப் பார்ப்பேன். வழக்கம்போல சிரிப்பேன். அவள் சிரிக்க மாட்டாள். கடந்துப் போய் விடுவேன். சில வாரங்களுக்குப்பின் விடியற்காலை மூன்றரை மணி அளவில் கல்லூரி ஆய்வகத்தில் வேலையை முடித்துவிட்டு வீடுத் திரும்புகையில் அவளைப் பார்த்தேன். கோடைக் காலம் ஆகையால் மெல்ல சூரியன் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. கீர்த்தனாவின் காலை தொலைபேசி அழைப்பு இன்னும் வரவில்லையே, இந்தியாவில் மணி 7 ஆகி இருக்குமே என்ற நினைவுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். வழக்கமாக சிரிக்காதப் பெண் இன்று அழகாகப் புன்னகைத்தாள். அட, இந்த சிரிப்புடன் கொஞ்சம் மாநிறமாக இருந்தால் அப்படியே கீர்த்தனாவைப்போல இருப்பாளே!! என்னையும் அறியாமல் அவளை நெருங்கினேன். அலைபேசி அடிக்க ஆரம்பித்தது. எடுத்துப்பார்த்தேன் கீர்த்தனாவின் அறைத்தோழியிடம் இருந்து, அலைபேசியை எடுத்துப்பேசாமல்,

“வா ஹீத்தர் டு?” எனக் கேட்டவாறு என்னைப் பார்த்த சிரித்த பெண்ணிடம் மேலும் நெருங்கினேன்

“என் பெயர் கீர்த்தனா” என்று அழகான தமிழில் சொல்லிவிட்டு என்னை அணைத்துக்கொண்டாள்.சூரிய வெளிச்சம் மேலும் பிரகாசமாக, என் கைகளில் மரச்செதில்கள் தட்டுப்பட, எனது கை கால்களும் இறுக ஆரம்பித்தன.என் முதுகில் கார்த்தி என தனது கூரிய விரல்களால் கீர்த்தனா எழுத ஆரம்பித்தாள். சிவப்பு நிறத்தில் மரப்பிசின் வடிய ஆரம்பித்தது.

Thursday, July 09, 2009

நாடோடிகள் - திரைப்பார்வை


சுப்ரமணியபுரம் டெம்ப்ளேட்டிலேயே நட்பு-காதல்-தோல்வி-துரோகம் என நகைச்சுவை இழையோட,எல்லாத் தரப்பு மக்களும் ரசிக்கும்படி சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் நாடோடிகள். நல்ல இயக்குனராகவும் நல்ல தயாரிப்பாளராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட சசிக்குமாருக்கு தனக்கு கதைக்கேற்ற நடிப்பையும் தரமுடியும் என்பதைக் காட்டும் படம் நாடோடிகள். கதையை நகர்த்திச் செல்லும் மையக்கதாபாத்திரமாக சசிக்குமார் பாராட்டும்படியே நடித்து இருக்கின்றார்.

பலவருடங்களுக்கு முன் சந்தர்ப்பவாத நட்பு + காதல் ஆகியவற்றை வைத்து கார்த்திக், பானுப்ப்ரியா நடிக்க, பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த கோபுரவாசலிலே படத்தின் நேர் எதிர் துருவம் இப்படம்.

நண்பனின் நண்பன் தனக்கும் நண்பன் என்பதை வைத்து பின்னப்பட்ட இக்கதையில் சமூகத்தின் வெவ்வேறு பொருளாதார/சாதி தளங்களில் இருக்கும் நண்பர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யத்தையும் வாழ்வின் அடுத்தத் தளத்தை நோக்கி நடைபோட அவர்கள் எடுக்கும் முன் முயற்சிகளையும் அது ஒரு காதலால் எப்படி சின்னாபின்னமாகின்றது என்பதை அழகாக சொல்லியுள்ளார் இயக்குனர். காதலர்கள் தங்களைச் சேர்த்து வைத்த நண்பர்களின் தியாகத்தை எத்தனைத் தூரம் மதிக்கின்றனர் என்பதை சுவைபட சொல்லி இருக்கின்றனர். சசிக்குமாரின் கதாப்பாத்திரப்படைப்போன்று எல்லோர் வீட்டிலும் ஒரு உறவினர் கண்டிப்பாக இருப்பார். அலட்சியமாக இருப்பது போலத் தோன்றினாலும் உண்மையில் அக்கறையுடனும் பொறுப்பாகவும் நடந்து கொள்ளும் இயல்பான கதாபாத்திரம் சசிக்குமாருடையது. ஐந்து தந்தை கதாபாத்திரங்களை(மூன்று நண்பர்களின் தந்தைகள், முறைப்பெண்ணின் தந்தை, ஓடிவரும் காதலியின் தந்தை ) வெவ்வேறு பரிமாணங்களில் தந்தைக்குரிய குணாதிசயங்களுடன் காட்டி இருப்பது படத்தின் சிறப்பு.





உடற்பசிக்காகத்தான் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள வந்தார்கள் என நண்பர்கள் சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்ப்பதை ஒரு சராசரி மனிதன் தன் தியாகங்கள் கேலிக்கிடமாகக்போய் விட்டதே என்று உணரும்போது வந்து விழும் வார்த்தைகளாகப் புரிந்து கொள்ள முடிகிறது. நம் சமூகம் மற்றவர்களைக் கேவலப்படுத்த பாலியல் ரீதியான வசவுகளின் மூலம் இழிவுப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதை இயக்குனர் உணர்த்துகிறாரோ!!.. உடற்பசி என்றால் பணக்கார காதலர்கள் எங்கு வேண்டுமானாலும் காதலிக்கும் காலங்களிலேயே தீர்த்துக்கொண்டிருக்க முடியும். காதலர்களை சுடுமணலில் நிராதரவாக விட்டுவிட்டு வரும்பொழுது காதலன் காதலியை நோக்கி நடந்து வரும் காட்சியை சிலவினாடிகள் நீட்டித்ததன் மூலம் அவர்களின் காதல் உண்மைதான், ஆனால் தாங்கள் வாழ்ந்த பணக்காரச் சூழல் இன்றி வாழும்போது ஏற்படும் பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமின்மை அவர்களுக்குள் வெறுப்பை ஏற்படுத்தி பிரிய வைத்தது என இயக்குனர் காட்டியிருப்பதாக தோன்றுகின்றது.



மற்றவர்களது காதலுக்காகப் போராடும் சசிக்குமார், முறைப்பெண் தனக்காக வீட்டைவிட்டு வெளியேறி இருந்தால் போராடி இருப்பாரோ!! பெண்ணின் சம்மதம் இல்லாமல் (காதல்/விருப்பம் இருந்தாலும் கூட)அவர்களின் பெற்றோருக்கு எதிராக்கி கவர்ந்து வருதல் அவசியம் இல்லை என சொல்லப்படுவதாக இருக்கின்றது. முறைப்பெண்ணாக வரும் அனன்யா, விஜய் தொலைக்காட்சியில் சினிமா காரம் காப்பி யில் வரும் நடுத்தரவயது பெண் இளமையாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்கின்றார். அனன்யா தனது சொந்தக்குரலையேப் படத்தில் கொடுத்து இருக்கின்றார்.


மொட்டை மாடிக் காட்சியில் ”அவனுக்கும் ரொம்ப நாளா உன்மேல ஒருக் கண்ணு” என முறைப்பெண்ணை சீண்டுவதும் “முள்ளைப்பிடிச்சாலும் முழுசாப் பிடிக்கனும்” என்ற வசனமும் , சடுதி நேரத்தில் நண்பர்கள் காதலர்களைச் சேர்த்து வைக்க கிளம்பும் முன் சென்னை 28 விஜய் க்கு சசியின் தங்கை கன்னத்தில் முத்தமிடும் காட்சியும் அழகு.

முறைப்பெண்ணின் தந்தை தனது மருமகனுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டு வர, முறைப்பெண் இறுக்கமான முகத்துடன் அவர்களைப் பின் தொடர்வதைப் பார்க்கும் சசிக்குமார் அந்த இடத்தை விட்டு நகர்வது அருமை.

இணைக் கதாபாத்திரங்களாக வாழ்ந்து இருக்கும் 'கல்லூரி' பரணி , சென்னை28 விஜய் ஆகியோரின் நடிப்பு தமிழ் திரையுலகில் நல்ல நடிப்புக்கு பஞ்சமில்லை என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம். மன்சூர் அலிகான் போன்று தோற்றமளிக்கும் நடிகர் செய்யும் அலப்பரைகள் அட்டகாசமாக இருக்கின்றன. கஞ்சா கருப்புவின் புலம்பல்கள் சிரிப்பாக இருந்தாலும் உண்மையில் அவரைப்போன்ற அப்பாவிகள் பலிகடாக்களாக ஆக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனம்.


மாற்றுத்திறன் உடையவர்களை அப்படியே நடிக்க வைத்து அனுதாபத்தை மட்டுமே பெற்றுத்தரும் இயக்குனர்கள் மத்தியில் சசிக்குமாரின் தங்கையாக மாற்றுத்திறன்கள் இருக்கும் பெண்ணை(அபிநயா) பேசும் கேட்கும் கதாபாத்திரமாக வாழ வைத்த சமுத்திரக்கனிக்கு தனிப்பட்ட முறையில் நன்றி.

சுந்தர்.சி பாபு வின் இசையில் சம்போ சிவசம்போ பாடல் இணையத்தில் படம் பார்க்கும்பொழுதே மிரட்டுகின்றது. குத்துப்பாட்டு அவசியம் இல்லாதது போலத் தோன்றினாலும் வணிக ரீதியிலும் நல்ல திரைப்படத்தை வெற்றிப் பெறச்செய்ய இது போன்ற சமாதானங்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே.

இப்படத்தை பார்த்தவர்கள் “நண்பா, என் லவ்வை சேர்த்து வைங்கடா” என யாராவது வந்துக் கேட்கும்பொழுது இனி ஒருக் கணமாவது தங்களது வாழ்வாதரத்தைப் பற்றியும் சிந்தித்துவிட்டுத்தான் உதவப்போவார்கள் என்பது உறுதி.

படங்கள் நன்றி : cityhitsonline.com , mirchigossips.com


பின்குறிப்பு :
திரையரங்கத்தில் குடும்பத்துடன் போய் ரசித்துப்பார்க்க வேண்டிய படம் இது.
திரையரங்கிற்குப் போய் பார்க்கும் வாய்ப்பு, நான் இருக்கும் தேசத்தில் இல்லாததால் இணையத்தில் தான் பார்க்க முடிந்தது. திரைப்படக்குழுவினர் மன்னிக்கவும்.