நாக்ருதனா திரன்னனா நா
இளையராஜா, தனது கர்நாடக சங்கீத குருவான டி.வி.கோபாலகிருஷ்ணனை டிக் டிக் டிக் திரைப்படத்தில் கதையின் மூன்று நாயகிகளையும் ஒரே காட்சியில் நீச்சலுடைகளில் மிதக்கவிட்ட இது ஒரு நிலாக்காலம் பாடலின் இடையில் வரும் மாதவியின் நாட்டியத்திற்கு நாக்ருதனா திரன்னன வரிகளைப் பாடச் சொல்லி இருக்கும்பொழுது , அது பிற்காலத்தில் ஜொள்ளுக்கான இசையாக மாறி விடும் என நினைத்தே பார்த்து இருக்க மாட்டார். டி.வி.கோபாலகிருஷ்ணனின் குரலை பிற்பாடு அந்தி மழை பொழிகிறது இடையினில் பயன்படுத்தி இருப்பார்
அமெரிக்க ஜனாதிபதியின் நெஞ்சினில் பாய்ந்த குண்டை எடுக்க கண்டுபிடிக்கப்பட்ட மெட்டல் டிடெக்டர் பிற்பாடு பாதுகாப்பு கருவிகளில் முக்கியமான ஒன்றாக மாறியதைப்போல நாக்ருதனா மெட்டும் எதிர்பாராத விதத்தில் பிரபல்யம் அடைந்தது.
80 களின் மத்தியில் பக்யராஜின் (டிக்டிக்டிக் படத்திற்கு திரைக்கதை பாக்யராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது) இயக்கத்தில் வெளிவந்த சின்னவீடு திரைப்படத்தில் , நாயகன் வேறு பெண்களைப் பார்த்து சலனப்படும் பொழுதெல்லாம், இளையராஜா இந்த மெட்டை பின்னணி இசையாகப் பயன்படுத்தி இருந்ததோடு மட்டுமல்லாமல் மச்சமுள்ள ஆளுட பாடலின் இடையிலும் சேர்த்து இருப்பார்.
கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப்பிறகு சமீபத்தில் வெளிவந்த கோவா திரைப்படத்தில் கதையின் நாயகர்களில் ஒருவரான வைபவ் பெண்களைப் பார்த்து சலனப்படும் பொழுதெல்லாம் வரும் இசைக்கோர்வையாக மீள்பதிவு செய்யப்பட்டு இன்றைய இளைய சமுதாயத்தினரின் கைபேசி அழைப்பு மணியாக ஆகிவிட்டது.
கடைசியாக ஆன்மீகக் கதவுகளைத் திறந்து கடலைக் காற்றாய் இந்த 30 வினாடிகள் ஓடும் நாக்ருதனா திரன்னனா நா வரிகள் நான்காவது முறை நக்கீரனின் பார்வையால் ஜென்ம சாபலயம் அடைந்தது.