Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, March 24, 2015

நீர் அடித்து நீர் விலகுமா !!

"சிங்களத்தமிழர்" என்றுதான் இந்தப்பதிவுக்கு தலைப்பு வைக்கலாமென்றிருந்தேன். ஆனால் விஷமுறிவு மருந்தை தொடர்ந்து கொடுத்துக்கொண்டேயிருந்தால் விடாதுகருப்பாகிவிடும். எனவே விவேகமாக நீர் அடித்து நீர் விலகுமா என்ற இந்தத்தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிற்கேற்ற தலைப்புதான் தலைப்புக்கேற்ற பதிவுதான். தொடர்ந்து வாசிக்கலாம்.

2015 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையில்  XXXXXXXX அணி, காலிறுதியில் படுதோல்வியடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து துவிட்டரில் ஒரு மடந்தை, தனது கோபத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மேல் காட்ட ,அது விதையாகி வெடித்து முளைத்து தழைத்து கிளைத்து வெளிப்பட்ட விழுதுகளில் ஒன்றுதான் என் கட்டுரை என்று ஒருசிலர் நினைப்பதைப்போல  நான் அக்கட்டுரையை எழுதவில்லை. இந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்று பார்த்தும் கேட்டும் பட்டும் அறிந்திருப்பதால் பெண்களுடன் எவ்விடத்திலும் விவாதங்களுக்குள் சென்றதேயில்லை. அதுவும் சமூக ஊடகங்களில் பெண்களுடன் விவாதத்தில் இறங்கி மல்லுக்கட்டினால் ஒரு கட்டத்தில் நாமே விவாதப்பொருளாகிவிடுவோம்.  ஆக எனது கட்டுரையை பெண்ணுக்காக எழுதப்பட்டது என்று சொல்வதைத் தவிர்த்து மண்ணுக்காக எழுதப்பட்டது என்று படிப்பதே சிறப்பு. 

படித்தால் படி, படிக்கலாட்டி போ, படிச்சுட்டு பிடிக்கலாட்டியும் போ என்று எழுதுவதால் நான் பிரபலங்களுக்கு மத்தியில் மட்டுமே பிரபலம். சீடகோடிகள் அனைவரையும் முடுக்கிவிட்டு என்பதிவுகளை முன்னுக்கு கொண்டு வந்தாலும் முன்னூறு வரவுகளைத் தாண்டாதப்பதிவுகள் எனது பதிவுகள். இந்நிலையில்  XXXXXXXX அணியைப்பற்றி நான் எழுதிய "கிரிக்கெட்டின் கண்ணீர்த்துளி " கட்டுரையை  ( http://vinaiooki.blogspot.it/2015/03/blog-post.html ) ஆயிரக்கணக்கான சாமனியர்களிடம் கொண்டுபோய்ச்சேர்த்தது  XXXXXXXX  அணியை நேசிக்கும் தமிழும் பேசும் அந்நாட்டு வாழ் இளைஞர்கள். 

தமிழும் பேசும் அவ்விளைஞர்களுக்கு கட்டுரையின் மேலும் கட்டுரையை எழுதியவன் மேலும் நியாயமற்ற கோபத்தைக்காட்ட ஒரு பின்னணி  உண்டு.  2010 ஆம் ஆண்டு வாக்கில், XXXXXXXX  அணியைச் சேர்ந்த ஓர் ஆட்டக்காரர் எதிரணிகளின் 800 ஆட்டக்காரர்களை வீழ்த்திய சமயத்தில், அந்த ஆட்டக்காரர்,  விளையாட்டுலகின்  மனித நேயமிக்க, மகத்தான ஆளுமைகளான முகமது அலி, ஆண்டிபிளவர், ஒலாங்கா போல இருந்திருக்கலாமே என்று நான் ஆதங்கப்பட்டு எழுதியக்கட்டுரைக்கு ( http://www.tamiloviam.com/site/?p=739)இவ்விளைஞர்கள் கடும் வார்த்தைகளினால்  "தமிழோவியம்" இணைய இதழில் இன்று போல அன்றும் தங்களது நியாயமற்ற கோபத்தைக் காட்டினர். அன்று அதன் நீட்சி துவிட்டரிலும் நீர்க்குமிழியாக வெளிப்பட்டது.  

இரண்டாண்டுகளுக்கு முன்னர்,  நான் மாற்றிவடிவமைத்த   XXXXXXXX  அணியின் ஆட்டக்காரர் ஒருவர்  கைகளில் ரத்தக்கறை கார்ட்டூன் ஈழத்தமிழர்கள், தமிழ்த்தேசியர்கள், ஈழமாயையில் இருந்தவர்கள் என்று பலரால் கொண்டாடப்பட்டது.   (விராத் கோஹ்லி விரட்டி விரட்டியடித்த வேகப்பந்துவீச்சாளர்தான் அந்த ஆட்டக்காரர். )  ஈபே இணையத்தளத்தில்  XXXXXXXX  அணியை ஒருநாள் ஏலத்தில் விட்டேன். அன்றைய இனவெறி தென்னாப்பிரிக்காவிற்கு கொடுக்கப்பட்ட தண்டனை XXXXXXXX  நாட்டிற்குக் கொடுக்கப்படவில்லை என்பதால், என் கோபத்தைத் தணித்துக்கொள்ள எழுத்தில் தண்டனை கொடுப்பதுண்டு.   நீறுபூத்த நெருப்பாக ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இன்னும் தொடரும். 

அடிப்படையில் பார்த்தால், என் கட்டுரைக்கு ஈழத்தமிழர்களும் தமிழ்த்தேசியர்களும் பெரும் ஆதரவைக் கொடுத்திருக்கவேண்டுமே. மாறாக, அவர்களும் போர்வையை தலையில் போத்திக்கொண்டு கமுக்கமாக ,  என் கட்டுரையையும் என்னையும் வசை பாடிய இழைகளில் இசைபாடினார்கள். கலிலியோ காலத்தில் வாழ்ந்த மக்கள் உலகம் தட்டையானது என்று நம்பினார்கள் அல்லவா, அவர்களைப்போல இவர்களும் அரசியலும் அதனைச் சார்ந்த செயற்பாடுகளும் தட்டையானது என்று நம்புபவர்கள். ஈழப்பாசமிருந்தால் கலைஞரை வெறுக்கவேண்டும், திமுக வேரறுக்க ப்படவேண்டும் என்று நம்பும் ஆட்கள்.  திமுக நேசமிருந்தால் தமிழ்ப்பாசம் செல்லாது என்று சொல்லும் நாட்டாமைகள் சிலரும் இவர்களில் உண்டு.  தமிழ்நாட்டில் திமுக இல்லாமல் போயிருந்தால் தமிழே இருந்திருக்குமா என்பதை அறியாதவர்கள். ஆதலால், திராவிட கருத்தியலாளரும் "மாப்ள சிங்கம்" திரைப்படத்தின் வசனகர்த்தாவுமான டான் அசோக் ஈராண்டுகளுக்கு முன் எடுத்து செய்த, கலைஞர் அஞ்சல் தலை வெளியிட்டிற்கு நான் வினையூக்கியாக இருந்து உதவி செய்தது ஈழத்துரோகப்பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது. 

எனக்கு ஒரு தீவிர ரசிகர் பேஸ்புக்கில் இருக்கிறார். கலைஞருக்காக வாடிகன் போப்பிடமிருந்து வாழ்த்துக்கடிதம் பெற்றுத்தந்தது, சேனல்4 தொலைக்காட்சி - ஸ்டாலின் இணைப்பை ஏற்படுத்தியது , திமுகவின் வெளிநாட்டு முகவராக இருப்பது போன்ற "ஈழத்துரோக" செயல்களை செய்தது-செய்வது வினையூக்கி என்று அவருக்குத் தோன்றுவதையெல்லாம் என்னைப்பற்றி பேசும் இடங்களில் சுவரொட்டி ஒட்டுவார். 

இப்படிஒட்டுவாரொட்டிகள் மணிப்பிரவாளத்தமிழில் எனக்கு தொடர்ந்து அர்ச்சனைகள் நடத்த , எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்று தெரிந்தே எடுத்த விஷமுறிவு கலைச்சொல்லாக்கம்தான் "சிங்களத்தமிழர்",  XXXXXXXX  அணியையும் XXXXXXXX  நாட்டின் ஆளுமையையும் ஏற்றுக்கொண்டு இந்தியத்தமிழர்களை, நாய்கள் இன்னபிற அச்சில் ஏற்றமுடியாத சொற்களில் திட்டுபவர்கள் என்ற பொருளில் இந்தக்கலைச்சொல் உருவாக்கப்பட்டது.  இந்தக் கலைச்சொல் உருவாக்கத்திற்குப்பின்னர்தான், நோர்வேயிலிருந்தும் டொரண்டோவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் " வினையூக்கி, நீங்கள் பெரிய மனுஷந்தானே , நீங்கள் நிறுத்தக்கூடாதா" என மெயில் விடு தூது ஆரம்பித்தன. எனக்குத்தான் அறிவுரைகள் பறந்து வந்தனவே ஒழிய, தமிழும் பேசும் XXXXXXXX  நாட்டு ஆட்களிடம் ஒன்றும் சொல்லப்படவில்லை. 

தமிழ்ச்சூழலில் புத்திசாலிகளும் உண்டு. துணிச்சல்காரர்களும் உண்டு. ஆனால் துணிச்சல் மிகுந்த புத்திசாலிகள் அரிது. காணும்பொழுது அவர்களைப் பொது நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். துணிச்சலான புத்திசாலிகள் விலகும் புள்ளிகளை மட்டும் பெரிதாக்கினால் நட்டம் துணிச்சலான புத்திசாலிகளுக்கல்ல. அவர்களுக்கு எல்லாப்பக்கமும் மவுசு உண்டு. எங்கு அரியணை காலியாக இருக்கிறதோ அங்கேப்போய் உட்கார்ந்துவிடுவார்கள். 


செல்வாக்குள்ள அல்லது செல்வாக்கை மேலும் வளர்த்துக்கொள்ளக்கூடிய என்னை கலைஞர் அபிமானி  என்பதற்காக எனக்குக் கட்டம் கட்டினால் எல்லோருக்கும் ஒரு பிரேக் பாயிண்ட் ரீச் ஆகும், ஏதாவது ஒருகட்டத்தில் சலிப்பாகித்தான் போகும். என்னைத்திட்டிய ஒருவரை  வெள்ளைவேன் கடத்திச்சென்றபொழுது பதறிய தமிழ்நாட்டு டிவிட்டர்களில் நானும் ஒருவன். அடுத்த முறை வெள்ளைவேன் வந்தாலென்ன மஞ்சள் வேன் வந்தாலென்ன என்றுதானே இருக்கத்தோன்றும்.  



 "விவாதத்தில் வெற்றிபெறுவது முக்கியமில்லை,  வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சாம, பேத , தான தண்ட முறைகளைப் பயன்படுத்தினால் விவாத நோக்கத்திற்கு துணைச்சேர்க்கும் ஆட்களின் ஆதரவை இழந்துவிடுவோம்., பொது நன்மைகளுக்காக சிறுவிசயங்களைக் கடந்து செல்லலாம்" . இந்தக்குட்டு நினைவுக்கு வந்ததும் யோசிக்க ஆரம்பித்தேன். 

என்னை வசைபாடிய  400 சொச்சத்து XXXXXXX  நாட்டு தமிழும் பேசும் ஆட்களைக் குறிக்க மட்டும்  உருவாக்கிய சொல் என்றாலும்,  "சிங்களத்தமிழர்" என்ற பதம் ,  பலரை அதிர்ச்சியடைய வைத்திருக்கும். கவலையடையகூட செய்திருக்கலாம்.  அதனால் தார்மிகபொறுப்பேர்று வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்கலாமா என்று யோசித்தேன்.  ஆனால் அந்த சொல்லிற்காக பதட்டமடைபவர்கள், நான் வசைபாடப்படும்பொழுது அமைதியாகத்தானே இருந்தார்கள். நான் எதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதையும் யோசித்தேன். யோசித்துக்கொண்டேயிருந்தபின்னர் பின்வரும் எண்ணம் மேலோடியது. 

துயரமான கட்டத்தில்  எனக்கு அனைத்து வகையான ஆதரவளித்து  என் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்ட என் நலன் விரும்பி , ஈழத்தமிழர் யோகன் பாரிஸ் ஒருவேளை அந்தச்சொல்லைக் கண்டிருந்தால் , அவர் மனதில்  சுருக்கென முள் தைத்திருக்குமல்லவா.  அவர் ஒருவேளை வருந்தியிருந்தால், அவரிடம் மட்டும்  வருத்தம் தெரிவித்துக்கொள்கின்றேன்.   ஏனையவர்களுக்கு நீர் அடித்து நீர் விலகாது. சேரும்புள்ளிகளில் சேரவேண்டிய புள்ளிகளில் உங்களுடன் சேராமல் இருக்கமாட்டேன்.  என்னுடைய துணிச்சலுடன் கூடிய புத்திசாலித்தனத்தை உங்களுக்குத் தேவைப்படும்பொழுதெல்லாம் பெற்றுக்கொள்ளலாம். 

Sunday, February 09, 2014

ஓர் அனுபவமும் யுவன் சங்கர் ராஜாவும்

பிடிப்பு ஏதேனும் சிக்காதா , தத்தளித்துக் கொண்டிருக்கும் நடுக்கடலில் இருந்து தப்பிக்கமாட்டோமா , என ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு காலக்கட்டம் வரும். அப்படியான ஒரு காலக்கட்டம் எனக்கும் வந்தது. எதைத் தின்னால் பித்தம் தெளியும், சீக்கிரம் தெளியும் என்று மந்திரிச்சுவிட்டபடி இருந்த காலக்கட்டம். அந்த சமயத்தில்தான் என் கல்லூரி சீனியர் அரவிந்த்ராஜேஷ் தமிழ்மணி அவர்களை நீண்டகாலம் கழித்து சந்தித்தேன். பண்ணையாரும் பத்மினி படத்தில் வரும் சிறுவர்களைப்போல நானும் கார் பிரியன். அதுவும் முன் சீட்டில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தபடி போகவேண்டும் என ஆசைப்படுபவன். காரில் வந்தார், முன் சீட்டில் அமரவைத்தார், சோறு வாங்கிக் கொடுத்தார். வயிற்றுக்கு ஈயப்பட்டப்பின், பவுலோ கோயல்ஹோ எழுதிய The Alchemist என்ற புத்தகத்தை வாங்கித்தந்தார். ஒரே இரவில் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். பித்தம் தெளிந்தது. கரை சேர்ந்ததாக உணர்ந்தேன். அல்கெமிஸ்ட் புத்தகத்தைவிட சிறப்பான புத்தகங்களை எல்லாம் அதன் பின்னர் மற்ற நண்பர்கள் பரிந்துரைக்க படித்திருக்கின்றேன். ஆனால் எப்பொழுது எல்லாம் தத்தளிக்கும் தருணங்கள் வருகின்றனவோ அப்பொழுதெல்லாம் அல்கெமிஸ்ட் புத்தக்கத்தை மனம் தேடும். ஒருவேளை அல்கெமிஸ்ட் படித்தவர்களைக் கொண்டு ஒரு மதம் உருவாக்கப்பட்டு, பவுலோ கோயல்ஹோ தூதராக அறிவிக்கப்பட்டு இருந்தால் ரசவாத மதத்தில் வினையூக்கியாக சேர்ந்து இருப்பேன். இன்றும் நண்பர்கள், வாசகர்கள், தோழிகள் தடுமாற்றத்தில் இருக்கும் சமயங்களில் நான் பரிந்துரைக்கும் முதல் புத்தகம் அல்கெமிஸ்ட்.

மனம் பிடிப்பற்ற சூழலில் இருக்கையில் பிடிப்பாய் ஒரு கருவி கிடைக்கையில் கருவியின் தாசனாய் மாறிப்போவது சமயங்களில் தவிர்க்கமுடியாது. ஒருவேளை கருவி இல்லாவிடின் கிடைக்காவிடின் அழிந்துபோய் விடக்கூட வாய்ப்பு அதிகம். யுவன் சங்கர் ராஜாவிற்கும் அத்தகைய சூழல் ஏற்பட்டு இருக்கக்கூடும். திருக்குரான் புத்தகம் வாழ்க்கையில் அவருக்கு மிகுதியான பிடிப்பையும், இழந்த நம்பிக்கையை மீட்டு எடுத்துக் கொடுத்து இருக்கலாம். தன்னை இழக்க விரும்பாத யுவ-ராஜா தாசன் ஆகலாம். தவறில்லை.

யுவன் சங்கர் ராஜா வாக இருந்தாலும் சரி, அவர் யூனுஸ் அப்துல்லாவாக மாறினாலும் அவரின் இசை ஒன்றுதான். மீட்டப்படும் வீணைக்கு விரல்கள்தான் முக்கியம். விரல்களுக்கான உடல், என்ன ஆடை போட்டுஇருக்கின்றது பார்ப்பதில்லை. இசை என்னும் இயற்கை அவதாரத்தின் தூதுவன் யுவன் சங்கர் ராஜாவிற்கும் அவரின் புதுத்தத்துவ வாழ்க்கைக்கும் வாழ்த்துகள்.

Wednesday, January 22, 2014

எழுத்தாளர் ஆன பதிவர் செங்கோவி

'தாள்' எழுத்தாளர்களுக்கும் இலக்கியத்தை 'தாளில்' பதிப்பிப்பவர்களுக்கும் இடையில் அமெரிக்க கண்காட்சி மல்யுத்த(WWF) பாணியில் தக்காளிச்சாறு சண்டைகள் நடந்து வரும் வேளையில் சத்தமிலாமல்  www.freetamilebooks.com தொடர்ந்து 'யாவருக்கும்' எனகுழுவினர் முறைப்படி அனுமதி பெற்று மின்னூல்களை வெளியிட்டு வருகின்றனர்.  எழுதப்படுபவை எல்லாம் வாசிப்பவருக்கே சொந்தம் என்பதனால் , என்னுடைய எழுத்து முயற்சிகளை நாட்டுடைமை அல்ல அல்ல, உலகவுடைமையாக ஏற்கனவே ஒப்புக்கொடுத்துவிட்டேன்.  என்னுடைய சிறுகதைகள் தொகுப்பு இந்த முறையில் மின்னூலாக கிட்டத்தட்ட 1000 முறை தரவிறக்கப்பட்டுள்ளது.

''நான் சொன்னா கேட்பியா மாட்டியா'  என்றால் உடனே கேட்கும் ஆட்களில் மிகமுக்கியமானவர் செங்கோவி. இவரை எனக்கு கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக அறைத்தோழனாக, நண்பனாக , சக எழுத்தாளராக தெரியும்.  விட்ட இடத்தில் இருந்து தொடரக்கூடிய நட்பு இவருடையது.  யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என , இந்த முன்னெடுப்பைப் பற்றி செங்கோவியிடம் விளக்குகையில் , அவரின் 'மன்மதன் லீலைகள் ( என் கிழிந்த டைரியில் இருந்து)' நாவலை மின்னூலாக தர,  உடனே சம்மதம் தெரிவித்தார். இரண்டே நாட்களில் சீனிவாசன் உதவியுடன் மின்னூல் தயாரானது.

நாவலாசிரியருடன் நானும் ஒரு கதாபாத்திரமாக நாவலில் வருவதால் , நாவலை விமர்சிப்பதோ பாராட்டுவதோ முறையாக இருக்காது.  சலிப்பைத் தராத ஆட்டோபிக்சன். படித்துப் பாருங்கள். பாராட்டோ திட்டோ செங்கோவியிடம் தெரிவித்து விடுங்கள்.


மின்னூலைத் தரவிறக்க http://freetamilebooks.com/ebooks/manmathan-leelaigal/

Monday, January 06, 2014

என்னுடைய சிறந்த 150 சிறுகதைகள் - சிறுகதைத் தொகுப்பு - நூல் வெளியீடு - விளம்பரங்கள் தேவை


எழுதப்படுபவை எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்படுபவை என நான் நம்புவதால் , என்னுடைய எல்லா ஆக்கங்களும் வாசிப்பவர்களுக்கே சொந்தம் என்ற வகையில் தான் உரிமத்தை வலைப்பூவில் வைத்திருக்கின்றேன்.  இதில் என்னுடைய பேஸ்புக் பத்திகளும், டிவிட்டர் குறிப்புகளும் கூட அடங்கும்.

நான்கு பேர் தொடர்ந்து கைத்தட்டிக் கொண்டே இருந்தாலும், நம் எழுத்து நல்ல எழுத்துதானா என ஐயம் நீங்க குறைந்தது நான்கு ஆண்டுகளாவது எழுத்துப் பயிற்சி தேவை.  அப்படியான நம்பிக்கை ஏற்பட்ட ஒரு நாளில் சிலப்பதிப்பகங்களுக்கு மின்னஞ்சல் செய்தேன். அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்ததனால் பதில் ஏதும் வரவில்லை.

அப்பொழுது (2010 ஆம் ஆண்டு இறுதியில்) அமேசானின் சுயப்பதிப்பு திட்டம் பற்றிய விபரம் தெரிய வந்தது.  அமேசானில் Print on Demand என்ற வகையில் தமிழிலும் , சிலக்கதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு தொகுப்பையும் வெளியிட்டேன்.  ஆங்கில மொழிப்பெயர்ப்பு அமேசான் கிண்டில் வடிவிலும் வெளியிடப்பட்டது.

இதற்கு முன்னர் அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளர்கள் செய்து இருக்கின்றனரா எனத் தெரியவில்லை, ஆனால் எனது சமகால எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு முன்பாகவே நான் தமிழ்ச்சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை, அமேசான் கின்டில் வடிவில் வெளியிட்டேன் எனும் பொழுது பெருமையாகத்தான் இருக்கின்றது. ( ஜெர்மன் , ஸ்விடீஷ் , இத்தாலிய , போலிஷ் மொழிப்பெயர்ப்புகளையும் தயார் செய்து வைத்து இருக்கின்றேன். சரியான நேரத்தில் வெளியிடலாம் என காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது)

சிறுகதைத் தொகுப்பு - தமிழ் - புத்தகம் http://www.amazon.com/Baltic-Days-Stories-Collection-Edition/dp/1456538888

சிறுகதைத் தொகுப்பு - ஆங்கிலம் - கிண்டில் http://www.amazon.com/Omega-Stories-Catalyst-Selva-ebook/dp/B004IWQZJ6/

சிறுகதைத் தொகுப்பு - ஆங்கிலம் - புத்தகம் http://www.amazon.com/Omega-Stories-perspective-Catalyst-Selva/dp/145653274X/

புத்தகம் பெரிய அளவில் விற்பனை ஆகி, நான் ஒன்றும் பணக்காரன் ஆகிவிடவில்லை. ஆனாலும் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் புத்தகங்கள் இருந்தது ஒரு முகவரியாக இருந்தது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என வலைப்பதிவும் எழுதினேன்.  நீரின் இயல்பு ஊறுவது.. இறைத்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

உணர்ச்சி வசப்பட்டு மேல் இருக்கும் சுட்டிகளில் இருந்து புத்தகங்களை வாங்கிவிடாதீர்கள். அவை எல்லாம் என் தளத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன.

அதன் பின்னர் நண்பர்கள் ரவிசங்கர் ( https://www.facebook.com/ravidreams) மற்றும் சீனிவாசன் (https://www.facebook.com/tshrinivasan) இருவரும் அவர்களது இலவச மின் நூல் திட்டத்தில் ( freetamilebooks.com ) சேர , This work is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License. உரிமத்தில் கதைகளைத் தர முடியுமா எனக் கேட்டார்கள்.  வெட்டியாய் வெயிலில் காயும் நீரை , வாய்க்கால் வரப்பு வெட்டி எடுத்து செல்ல விரும்புவருக்கு இல்லை என்றா சொல்வேன். அனுமதிக்க, உடனே மின்னூல் ஆக கொண்டு வந்தார்கள். கிட்டத்தட்ட 600 முறைக்கு மேல் மின்னூல் சிறுகதைத் தொகுப்பு தரவிறக்கப்பட்டுள்ளது.

அதற்கான சுட்டி -  http://freetamilebooks.com/ebooks/vinaiooki-short-stories/ 


இப்படி புத்தகமாகவும் , மின்னூலாகவும் கிடைக்கும் அதே வேளையில் என் சிறுகதைகள் எனது வலைத்தளத்திலும் பண்புடன் குழுமத்திலும், இன்ன பிற இணையத்தளங்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன.  எனது சிறுகதைகளில் இருக்கும் இலக்கணப்பிழை, ஒற்றுப்பிழை, வார்த்தைப்பிழைகள் எல்லாவற்றையும் தளைத்தட்டி திருத்தி ,  சிறந்த 150 சிறுகதைகளை மின்னூலாகவும் அச்சுவடிவிலும்( சுயப்பதிப்பு - கேளுங்கள் அச்சடிக்கப்படும் வகையில்) வெளியிடலாம் என இருக்கின்றேன்.

இதில் இந்தத் தடவை எடுக்கப்போகும் சிறப்பு முயற்சி, சிறுகதைத் தொகுப்பின் இரண்டு வடிவிலும் , விளம்பரங்களை உள்ளடக்குவது.  பள்ளி/ கல்லூரி , நிறுவன ஆண்டு விழா மலர்கள் எல்லாவற்றிலும் இப்படியான விளம்பரங்களைப் பார்த்து இருப்பீர்கள்.

150 சிறுகதைகள் என்றால் 400 பக்கங்கள் குறைந்தது வரும். 10 பக்கங்களுக்கு ஒர் அரைப்பக்க விளம்பரம் , 40 விளம்பரங்கள் பெறலாம் என இருக்கின்றேன்.  நான் சுமார் எழுத்து குமாரு என்பதால் 40 விளம்பரங்களுக்கு அப்படியே ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து மக்கள் கொடுப்பார்கள் என்பது எல்லாம் பேராசை. அதற்காக 'விளம்பரங்களை' இலவசமாகவும் கொடுக்கலாம் என்றால், இதை நடைமுறைப்படுத்தப்போகும் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடலாம்.

ஆக அரைப்பக்கத்திற்கு ரூபாய் 500 என்றும் முழுப்பக்கத்திற்கு ரூபாய் 1000 என்றும், அட்டைப்பின் பக்கத்திற்கு ரூபாய் 5000 என்றும் வைக்கலாம் என இருக்கின்றேன்.

வெளியீட்டு வகைகள்

1. மின்னூல் - எதிர்பார்ப்பு - குறைந்தது 2000 தரவிறக்கங்கள் (விளம்பரங்கள் , நிலைத்து நிற்கும், அளவிலா மறு சுற்றுக்குப் போகும்)
2. கிண்டில் - குறைந்தது 100
3. அச்சுப்புத்தகம் - அமேசான் மற்றும் பொதி குறைந்தது 500 ( கை செலவில் நூலகங்களுக்கும் கொடுக்கலாம் என இருக்கின்றேன் , ஆக சிறுகதைகளுடன் விளம்பரங்கள் இன்னும் அதிகமான நபர்களைச் சென்றடையும்)

மேலும் உரிமத்தின் படி உள்ளடக்கத்தை சிதைக்காமல் மறுபிரசுரம் செய்து கொள்ளலாம் எனும்பொழுது , உள்ளடக்கத்தில் விளம்பரங்களும் அடங்கும்.

யார் யாரிடம் விளம்பரங்கள் கேட்கலாம்.

1. பதிப்பகங்கள்
2. புத்தக விற்பனை நிலையங்கள்
3. அரசியல் வாதிகள் - தேர்தல் நெருங்குவதால் அரசியல்வாதிகள் தங்களது கட்சி சார்பாக விளம்பரங்கள் கொடுக்கலாம்
4. கல்லூரிகள்
5. பெரிய நிறுவனங்கள்
6. புலம்பெயர்ந்து இருக்கும் இந்தியத் / ஈழத் தமிழர் நிறுவனங்கள்
7. சிறுதொழில் நிறுவனங்கள்

ஒரு வேளை யாருமே விளம்பரம் கொடுக்க முன்வரவில்லை என்றாலும், ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு 40 விளம்பரங்களை வெளியிடலாம் என இருக்கின்றேன்.  செய்து காட்டினால் பின்வருபவர்களுக்கு ஒரு பாதை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் ஒரு ருபாயிலும் சிறப்பு முயற்சியை செய்யலாம். அனேகமாக இந்த முயற்சி வெற்றியடையும். அப்படி அடையும் பட்சத்தில் மின்னூல் / சுயப்பதிப்பு வழியே வெளியிடுபவர்கள் தங்களது படைப்புகளை பதிப்பிக்கும் முன்னரே கொஞ்சம் காசு பார்க்கலாம்.  அனேகமாக எனது முதல் விளம்பர விண்ணப்பத்தை கிழக்குப் பதிப்பக பத்ரியிடம் இருந்து ஆரம்பிக்கலாம் என இருக்கின்றேன். 500 ரூபாயோ ஒரு ரூபாயோ விளம்பரம் கொடுப்பார் என நம்புகின்றேன். 

Thursday, December 26, 2013

சுமார் எழுத்து குமாரு - அனுபவம்


காதல் தோல்வியை மறக்க ஏதாவது ஒரு போதை தேவை ... 2005 ஆம் ஆண்டு மறுபாதியில், அம்மு வெர்ஷன் 1 என்னை ரன் அவுட் ( http://www.youtube.com/watch?v=MIaMmtAsZsg) ஆக்குகையில்,  அப்படியான ஒரு போதையை எழுத்தில் தேடிக்கொள்ளலாம் என எழுத ஆரம்பித்து.... எழுதிக்கொண்டே இருக்கின்றேன். சில கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் இருப்பார்கள். பெரிதாக மட்டையடித்தலிலோ பந்து வீச்சிலோ சாதித்து இருந்திருக்கமாட்டார்கள். ஆனாலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என ஆடி , பத்து ஆண்டுகள் கூடத் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து ஆடிக்கொண்டு இருப்பார்கள்.,,,, ஆக என் எழுத்து வாழ்க்கைப் பயணமும் எட்டு ஆண்டுகளை கடந்து சிலப்பல மாதங்கள் ஆகிவிட்டன.  ஆகாஷ் சோப்ரா ஓட்டங்கள் எடுப்பதைப்போல , ஹிட் ஏறிக்கொண்டிருந்த சூழலில், எங்கிருந்தோ வந்த ஆபத்பாந்தவன் அனாதரட்சகன் 'கலைஞர்' ஒரே நாளில் சும்மா ஹிட்ஸை டிஜிவி ரயில் வேகக்கணக்கில் எகிற வைத்தார். எல்லாப்புகழும் கலைஞருக்கே....

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என நினைத்தால் எழுத்தில் மட்டும் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை எல்லாமே ஈட்டல்தான்.  தமிழ்மணம் ஆகட்டும் ... சமூகஊடகங்கள் ஆகட்டும்... எழுத்தினால் எல்லாமே பெற்றவைதான். பெற்றவைகள் நூறு இருந்தாலும் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் கங்குலி இறங்கி வந்து கூரைக்கு மேல சிக்ஸர் அடித்தது ( http://www.youtube.com/watch?v=hle1TAoR9sc) கண்ணுக்குள்ளேயே நிற்பதைப்போல சில எழுத்தாக்கங்களின்  அனுபவங்கள் செம 'கெத்து' கொடுக்கும். 

சில ஆண்டுகள் முன்பு, சுவீடனில் , விசா நீட்டிப்பிற்காக , குடியுரிமை அலுவலகம் ஒன்றில் காத்துக் கொண்டு இருந்தேன்.  சில இருக்கைகள் தள்ளி, தமிழ்க்குரல்... தமிழ்மாணவர்கள் சிலர், நகைச்சுவைகளை அள்ளித் தெறித்துப் பேசிக்கொண்டு இருந்தனர்.  அந்தக் காலக்கட்டம் கொஞ்சம் சிரமமான காலம்.. அம்மு வெர்ஷன் 2 என்னை பவுன்சர் போட்டு ஹிட் விக்கெட் (http://www.youtube.com/watch?v=yZjGdWt82k0) ஆக்கிவிட்டு சென்று இருந்தார். தீஸிஸ் வேறு நீட்டிக்கொண்டே போனது.  கையில் காசும் தீர்ந்துவிட்டது. டிராவிற்கு ஆடலாமா... வென்றுவிடலாமா... வென்றுவிட நினைத்தால் தோற்றுவிடுவோமா கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்க சொதப்பல் ஆட்டம் போல நாட்கள் போய்க்கொண்டிருந்தன.  முகத்தை இறுக்கிக் கொண்டு அமர்ந்து இருந்தாலும் , என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து விட்டேன். அங்கிருந்த மாணவர்கள், தூரத்தில் அமர்ந்தபடியே 

"என்ன தமிழா, எந்த யுனிவர்சிட்டி , எந்த பேட்ச் " எனக் கேள்விகள் கேட்டனர்.  சிலப்பல பொது நண்பர்கள் பேரைச் சொல்லித் தெரியுமா எனக் கேட்டனர். தெரியும் என்றேன்.  பேஸ்புக் ஐடி கேட்டார்கள்.  செல்வகுமார் வினையூக்கி என சொன்னவுடன், அமர்ந்து இருந்தவர்கள் உடனே எழுந்து நின்றார்கள். 

"அண்ணே ,நீங்களா அது, உங்க பிலாக்கில சுவீடன் மேற்படிப்பு கட்டுரை படிச்சுத்தான் நாங்க சுவீடனுக்கே வந்தோம்" 

கிட்டத்தட்ட மாணிக் பாட்ஷா மொமென்ட் அது.  

மேற்சொன்ன அனுபவம் ஒருவகை என்றால் சமீபத்தில் ஒன்று நடந்தது. இத்தாலியில், ஆராய்ச்சிப்படிப்பிற்கு புதிதாக ஒரு மாணவர் வந்து சேர்ந்து இருந்தார்.  சென்ற மாதம் , முன்னாள் கோபாலன் டிராபி இலங்கை அணியின் பிரபல'எறிபந்து' வீச்சாளர் முரளிதரன் சிலப்பல முதுகுசொறிதல் கருத்துக்களை சொல்லி இருந்தது உங்களுக்கு எல்லாம் நினைவுக்கு இருக்கலாம்.  அதைப்பற்றிய பேச்சு வருகையில், புதிய மாணவரிடம் , முரளிதரனையும் முகமது அலியையும் ஒப்பிட்டு சிலக்கருத்துக்களை சொன்னேன்.  உடனே அந்த புதிய மாணவர்,

"சார், இது எல்லாம் மூனு வருஷத்துக்கு முன்னமே எழுதிட்டாங்க,,,, நீங்க அதைப்படிச்சிட்டு வந்து இங்க சொல்லுறீங்களாக்கும்" என்றார். 

"அந்தக் கட்டுரையை எழுதினதே நான் தான் சார்" என்றேன் பதிலுக்கு... 

தட் வாஸ் எ , அந்தக்குழந்தையே நீங்கதான் மொமென்ட். 

சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த  முரளிதரன் - முகமது அலி கட்டுரை வெளிவந்த பொழுது,  கொழும்பு வெள்ளவத்த டமில் பாய்ஸ் கூட்டம் போட்டு  அந்தக் கட்டுரை வெளியான தமிழோவியம் இணைய இதழில் பின்னூட்டங்களாக  என்னைத் திட்டித் தீர்த்தார்கள்.  சென்ற மாதம் அதேக்கட்டுரை வெட்டி ஒட்டி நீட்டி முழக்கி சிலப்பல தமிழ்த்தேசிய இணைய தளங்களிலும் காணக்கிடைத்தது.. 

சச்சின் அடித்த சிக்ஸர்கள் கூட மக்களுக்கு மறந்துப் போய் இருக்கலாம்.... ஆனால் வெங்கடேஷ் பிரசாத், நைரோபியில் அடித்த கவர் டிரைவ் சிக்ஸரை ( http://www.youtube.com/watch?v=hl4ajI2oUcE) யாராலும் மறக்க முடியாது... சொல்லிக்கொள்ள ஒன்றிரண்டு சிக்சர்கள் தான் இருந்தாலும்  இரண்டுமே  கெத்து சிக்சர் இந்த சுமார் எழுத்து குமாருக்கு....

Wednesday, December 04, 2013

பேஸ்புக், ஒரு மாணவன் , ஒரு பெண் மற்றும் ஒரு பொய்

முதலில் இதை சிறுகதையாகத் தான் எழுதலாம் என இருந்தேன். ஆனால் அனுபவங்களை அனுபவப்பதிவாக எழுதினால் அதன் தாக்கத்தின் வீச்சு அதிகம் என்பதால் உண்மையில் பொய்யைக் கலந்து புனைவாக்கும் எண்ணத்தை ஒதுக்கி விட்டு இதை அப்படியே உள்ளது உள்ளபடியே எழுதுகின்றேன். நாம் ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ சிலரின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் விளையாடிவிடுவோம். அந்த விளையாட்டுக்கள் சில சமயங்களில் நன்மையிலும் பல சமயங்களில் பகையிலும் முடியலாம். அடுத்தவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைத் தரக் கூடிய விதியின் விளையாட்டுகளின் ஆட்டக்காரனாக அடிக்கடி நான் இடம் பெறுவதுண்டு. கல்லூரிக் காலங்களில் அவ்வகையான ஆட்டங்களை சாதுர்யமாக தெரிந்தே விளையாடி இருக்கின்றேன். கால ஓட்டத்தில் அறிவும் பக்குவமும் அதிகமாக அதிகமாக மற்றவர்களின் உணர்வுகளைப் பணயம் வைத்து ஆடும் ஆட்டம் அறவே மறந்துப் போய் விட்டது. கடைசியாக பங்கேற்ற ஆட்டம், ஒரு பிரபல வலைப்பதிவரினால் தொடர்கதையாக எழுதப்பட்டு பரவலான வரவேற்பையும் பெற்றது. அத்தொடரில் நானும் ஒரு முக்கிய கதை மாந்தர். 

தமிழ் , தெலுங்கு, இந்தி என இந்திய அளவிலேயே இருந்த அடுத்தவரின் வாழ்க்கையை திசைத் திருப்பும் ஆட்டங்கள் இன்று பன்னாட்டு அந்தஸ்தையும் அடைந்தது 

ஒரு மாணவன் , பேஸ்புக் , ஒரு பெண் மற்றும் ஒரு பொய் ஆகியனவும் இவ்வாட்டத்தில் முக்கியமானவை. எனது துறையில் ஆராய்ச்சி மாணவனாக , பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவன், சென்ற ஆண்டு சேர்ந்தான். கடந்த ஜூன் மாதம் , பாகிஸ்தானிற்கு சென்றவன் , அங்கிருந்து துறைப் பேராசிரியருக்கு , தனது தந்தை உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாகவும் , அதனால் ஆறு மாதங்கள் படிப்பில் விலக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு மின்னஞ்சல் செய்து இருந்தான். 

மாணவர் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்ட எனது பேராசிரியரும் , அதற்கான சாத்தியக் கூறுகளை பரிசீலித்து அதற்கான முன்னெடுப்புகளை எடுத்து இருந்தார். பல்கலை கழக விதிமுறைகளின் படி , மாணவர்களுக்கு உடல் நோவு வந்தால் மட்டுமே ஆறு மாதங்களோ ஒரு வருடமோ விலக்கு அளிக்கப்படும், ஆனாலும் பேராசிரியர் மிகவும் நல்லவர் என்பதால், இண்டு இடுக்கு விதி முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு நல்லது செய்வார் அடிக்கடி என்னிடமும் எனது சக மாணவனான  மற்றொரு பாகிஸ்தானியனிடமும், விலக்கு கோரிய மாணவனைப் பற்றியும் அவனது தந்தையின் உடல் நலம் பற்றியும் விசாரிப்பார். 

இன்று மாலை, ஒரு சந்தர்ப்பத்தில் பாகிஸ்தானிய மாணவனைப் பற்றி பேச்சு வருகையில் , அந்த மாணவனது பேஸ்புக்கில் ஏதேனும் தகவல் இருக்கின்றதா என எங்களிடம் கேட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரம் இருந்ததால் இன்று தான் சிலப் பலப் புகைப்படங்கள் போட்டு சுயத்தம்பட்டம் அடித்துக் கொண்டு இருந்தேன். வாத்தியார்கள் எள் என்றால் எண்ணெய் ஆக மாறும் தமிழ் வழிப் படிப்புச் சூழலில் வளர்ந்ததால் உடனே , அவனது பேஸ்புக்கைப் பார்த்து , மாணவன் எதுவும் தகவல் பகிரவில்லை ஆனால், அவனது தோழி ஒருத்தி புகைப்படங்களில் அவனை இணைத்துள்ளதைக் காட்டுகின்றது என மட்டும் சொன்னேன். பேராசிரியர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உடனே என் இருக்கைக்கு வந்து படங்களைப் பார்த்தார். மாணவனும் அவனது ஐரோப்பியத் தோழியும் , ஜெர்மணியின் மியுனிக் நகரில் நடந்த ஒரு திருவிழாக் கொண்டாட்டத்தில் தங்களது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட படங்கள் கடந்த செப்டம்பர் மாதம் தரவு ஏற்றப்பட்டிருந்தன. பேராசிரியரின் முகம் மாறியது. 

பயபுள்ள, அப்பாவிற்கு உடல் நலம் சரியில்லை என கூறிவிட்டு , ஜெர்மனியில் ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றது என எனக்கு விளங்கியது. 

அந்த மாணவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே இத்தாலியும் எங்களது துறையையும் பிடிக்கவில்லை. ஆராய்ச்சிப் படிப்பிற்கான ஊக்கத் தொகையும் மிகவும் குறைவு என்ற மனக்குறையும் அவனுக்குண்டு. நான் சேர்ந்த ஆண்டில், நிதி நிலைமை காரணமாக ஊக்கத் தொகை எனக்கு கிடையாது. பல்கலை கழகத்தில் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் நான் வேலைப் பார்ப்பதால் தான் அப்படி இப்படி என ஓர் ஆயிரம் ஈரோக்கள் எனக்கு கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு தான் அரசனைப் போல வாழ்வதாக இங்கு கொஞ்சம் பந்தா காட்டுவதுண்டு. எனது பந்தாக்களைப் பற்றி எழுதினால் அது பத்து பக்கங்கள் போகும், அதைப் பின்னர் பார்க்கலாம். 

"சார் ஒருவேளை , இந்தப் பெண் சென்ற வருடம் எடுத்த புகைப்படங்களை இப்பொழுது தரவேற்றி இருக்கலாம் " பொய்மையும் வாய்மை இடத்து என சமாளிக்க முயலுகையில் ...... 

சமீபத்தில் , அதே தோழி , மாணவனது சுவற்றில் 'இன்றிரவு சாக்லெட் காப்பி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றாயா ' என எழுதி இருந்ததையும் பேராசிரியர் கவனித்து விட்டார். 

 நான் படு சுமாராக ஆண்டிராய்டு நிரலி எழுதும் பொழுது கூட கோபப் படமாட்டார். தந்தைக்கு உடல் நலம் சரி இல்லை என சொல்லிவிட்டு , அதன் பொருட்டு சொந்த நாட்டில் இருப்பதாக விலக்கு கேட்டு , இங்கு குடியும் கும்மாளமுமாக இருப்பதைப் பார்த்த பேராசிரியரின் முகத்தில் அவ்வளவு கோபம் வெடித்தது.

உடனடியாக அந்த மாணவனுக்கு மின்னஞ்சல் செய்து விட்டு , அவனுக்காக எடுத்திருந்த முயற்சிகளை கைவிடுமாறு துறைத் தலைவருக்கும் தெரிவித்து விட்டார். 
மார்ச்சில் அவன் திரும்ப வந்தால், முதலில் பாஸ்போர்ட் இம்மிக்ரேஷன் முத்திரையை பார்க்க வேண்டும் என கோபமாக சொல்லிக்கொண்டு இருந்தார். 

ஐரோப்பா வரும் இந்தியத் துணைக்கண்ட மாணவர்களில் சிலர், , ஒரு நாட்டில் படிப்பிற்கான அனுமதியை வாங்கிக் கொண்டு , அனுமதி பெற்ற படிப்பிற்கு போக்குக் காட்டிவிட்டு , மற்றொரு நாட்டிற்கு சென்று அங்கு படிப்பிற்கோ வேலைக்கோ பெண்களுக்கோ தூண்டில் போட்டுக் கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் இந்த பாகிஸ்தான் மாணவன் செயல்பட நினைத்து இருந்து இருக்கலாம். அதற்காக அப்பா உடல்நிலை என்ற திரைக்கதையை எழுதி இருக்கலாம்.ஆறு மாதங்கள் வேறு நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்து ஒரு வேளை கிடைக்காவிட்டால் , மீண்டும் இத்தாலிக்கே வந்துவிடலாம் என்பது மாணவனின் திட்டமாக இருந்து இருக்கும். திட்டமிட்டு எழுதப்பட்ட திரைக்கதையில் எழுதியவருக்கே ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக பேஸ்புக் அமைந்துவிட்டது. அவனது பெண் தோழி மட்டும் அந்தப் படங்களைப் பகிராமல் இருந்திருந்தாலோ  அல்லது Tag செய்வதை இந்த மாணவன் எடுத்துவிட்டு இருந்தாலோ ஆப்பசைத்த  குரங்காய் மாட்டாமல் இருந்து இருக்கலாம். அந்த மாணவன் நேர்மையாக இல்லை, பொய் சொன்னான் என்பதெல்லாம்  ஒரு புறம் இருந்தாலும், நாளை என் பேஸ்புக் வழியாகத் தான் அவனது தகவல்களைப் பேராசிரியர் பார்த்தார் என அவனுக்கு தெரிய வரும் பொழுது, நான் அவனுக்கு வில்லன் ஆவேன். ஒரு நாயகனுக்குத்தான் எத்தனை வில்லன்கள்.... 

சமூக டக உலகமானது , தகவல் பரிமாற்ற யுகம் மட்டுமல்ல, தகவல் கசிவு உலகமும் கூட... எத்தனை எச்சரிக்கையாக இருந்தாலும், மறைக்க வேண்டும் என நினைக்கும் விசயங்கள் சமூக ஊடகத் தொடர்பு சங்கிலியில் எங்கேயாவது ஓர் இணைப்பில் தெறித்து விழும். அதே போல , சொல்லப்பட்ட பொய், நீருக்குள் அமுக்கப்பட்ட காற்றடைத்தப் பந்து மேல் எழும்பி வருவதைப் போல என்றாவது ஒரு நாள் மேலே வரும்.

Sunday, October 27, 2013

பேஸ்புக் - பொழுதுபோக்கு குட்டிக் கதை


காட்சி - 1

அம்மு :- 'யாருடா கார்த்தி அந்தப் பொண்ணு, அடிக்கடி உன் போஸ்ட் களுக்கு லைக் கமெண்ட் எல்லாம் போடுறா ?" 

கார்த்தி :- 'எந்த பொண்ணுடா அம்மாடி, நிறைய பொண்ணுங்க என் பக்கம் வருவாங்களே ' 

அம்மு :- "அதுதான் அபிராமி-அபிராமி அப்படின்னு ஒருத்தி வந்து கமெண்ட் போடுவாளே , அவள் யாரு? "

கார்த்தி :- "அதுவா , அந்தப் பொண்ணு என்னோட ரசிகை , எழுத்துக்கு மட்டும், நீ கண்டுக்காதே "


காட்சி - 2

அம்மு :- "ஏன்டா கார்த்தி, என்னை பிலாக் பண்ணிட்ட ... "

கார்த்தி :- "சும்மா நொய் நொய் நு கேள்வி கேட்டுட்டு இருந்தீன்னா அப்படித்தான் "

அம்மு :- "அப்போ சரி, நீ உன் உன் கடலை கேர்ல்ஸ் கூட happy ya இரு, நான் பேஸ்புகில் இருந்தால் தானே கேள்வி எல்லாம் வருது, நானே டி - ஆக்டிவேட் செஞ்சுட்டு பேஸ் புக்கு விட்டுட்டு போய்டுறேன் "
காட்சி - 3

கார்த்தி :- "தங்கம்முலு , நான் பேஸ்புக்கில ஒரு ஆர்டிக்கிள் போட்டு இருக்கேன் பாரு ... செம கைத்தட்டு கிடைச்சிட்டு இருக்கு நான் உன்னை அன்-பிலாக் பண்றேன் .. நீ பாரேன் "

அம்மு:- ",போடா நாயே ... என்னை நீ பிலாக் பண்ண பிறகு டி ஆக்டிவேட் பண்ணிட்டேன்"

கார்த்தி :- " சரி, நான் என்னோட வேற ஒரு ஐடி தரேன்.. அதுல பாரு "

அம்மு :- "சரி சொல்லித் தொலை ..."

கார்த்தி :- " abhirami-abhirami@*****.com பாஸ்வேர்ட் உன்னோட பேரு தான் "

Wednesday, October 02, 2013

போலிஷ் பெண்ணும் நானும் மற்றும் காந்தியும் - புனைவு அல்லது அனுபவம்

பின் வரும் சம்பவத்தை உண்மையாக எடுத்துக் கொண்டாலும் சரி புனைவாக எடுத்துக் கொண்டாலும் சரி , சொல்ல வருவது காந்தியைப் பற்றிதான். 
----
சுவீடன் கார்ல்ஸ்குரொனாவில் ( Karlskrona) இருந்து போலாந்து கிடினியா (Gdynia) விற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து உண்டு. வார நாட்களில் மிக மிக மலிவான விலையில் பயணச்சீட்டுகள் கிடைப்பது உண்டு. இன்று போல அன்றும் ஏழை மாணவன் தான். ஆக, குறைவான விலை பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு வீட்டிலேயே கட்டிக் கொண்ட கட்டு சோறு . கொஞ்சம் போலிஷ் சிலாத்தி பணம் என தனியாக கப்பல் ஏறிவிட்டேன். அம்மு பிரிந்து போன சோகக் காலக்கட்டம் அது . காதல் சோகங்களை மறக்க இரண்டு வழிமுறைகள் உண்டு., ஒன்று மதுவில் மூழ்கலாம் அல்லது பயணங்கள்... காட்டுத்தனமாக பயணம் செய்யும் பொழுது, சந்திக்கும் புது மனிதர்கள், அனுபவங்கள் மெல்ல மெல்ல மீட்டு, மனிதனை பக்குவமாக்கும். நான் தேர்ந்து எடுத்தது பயணங்களை. நான் படு சுமாரான எழுத்தாளன் என்பதால், அனுபவங்களை கதைகளாக்கி நான்கு பேர் கைத் தட்டி படிக்கும் அளவிற்கு வாசகர் கூட்டமும் சேர்த்து வைத்து இருக்கின்றேன். ஆக பயணங்கள் பலவகைகளில் பயனுள்ளதாக இருந்தன. 

கப்பலில் வழமைப் போல சூதாட்ட அறையில் கூட்டம் இருந்தது. சூதாட்டம் பிடிக்காது என்பதாலோ அல்லது சூதாட்டம் ஆடும் அளவிற்கு பணம் இருக்காது என்பதாலோ எப்பொழுதுமே , அந்த அறைகள் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. அப்படியே கப்பலை ஒரு சுற்று சுற்றிவிட்டு , வெளித்தளத்தில் கடலை வேடிக்கைப் பார்க்க ஆரம்பிக்கையில் , தடுப்புக் கம்பிகளுக்கு அருகில் இருந்த நீள் நாற்காலியில் , மென் சோகத்துடன் ஒரு பெண் வந்து அமர்ந்தாள். எப்பொழுது என் பக்கம் திரும்புவாள், புன்னகையைத் தரலாம் என காத்து இருந்தேன். அவள் என் பக்கம் திரும்பிய அடுத்த நொடி, நான் கொடுத்த சிரிப்பிற்கு , மின்னலைப் போல பதில் புன்னகை வந்து விழுந்தது. என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். இந்தியா என்றதும் பெஞ்சின் அடுத்த முனையில் இருந்து நகர்ந்துநெருங்கி வந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள். 

அவளின்  பெயரைச் சொல்லப் போவதில்லை. சொன்னால் என்னுடைய பேஸ்புக்கை நீங்கள் தோண்டி அவளைக் கண்டுபிடித்து விடுவீர்கள். அவளின் தேசம் போலாந்து , அவளின் தாத்தா பாட்டி ஜெர்மானியர்கள். கிடினியாவும் அதன் இரட்டை நகரமான கிடான்ஸ்க் (Gdansk)  நகரமும் பல காலங்கள் ஜெர்மானிய ஆதிக்கத்தில் இருந்தன. போருக்குப் பின்னர் போலாந்து வசம் வந்து விட்டது. ஜெர்மானியர்கள் அப்படியே இங்கேயே இருந்து விட்டனர். 

குளிர் எடுக்க ஆரம்பித்த்து விட்டதால், கப்பலின் வரவேற்பு தளத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். சுவீடனில் தனது காதலனுடன் வாழ்ந்து வந்ததாகவும் , தற்பொழுது பிரிந்து விட்டதால் மீண்டும் தனது நாட்டிற்கே போகின்றதாக அவள் சொன்ன பொழுது அவளின் மென் சோகம் புரிந்தது. 

தமிழ், கிரிக்கெட், இலங்கை எனது படிப்பு, எனது வாழ் சூழல் என பேச்சு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நள்ளிரவின் பொழுது, தனக்கு அன்றுதான் பிறந்த நாள் எனக் கூறினாள். கைக்குலுக்கினேன். வரியற்ற கடையில் ஏதேனும் வாங்கித் தரலாம் என்றாலும் கையில் இருந்த பணம் மிக மிகக் குறைவு. யோசிக்கையில் சட்டென அம்மு நினைவுக்கு வந்தாள். ஆம் மெட்ராசில் இருந்து கிளம்புவதற்கு முதல் நாள், சிலப் பல பத்து ரூபாய்த் தாள்களை என் கையில் திணித்து "என் நினைவாக வைத்துக் கொள், படித்து முடித்து விட்டு திரும்புகையில், என்னைப் பார்க்க வருகையில் இந்தப் பணத்தை பயன்படுத்து" என சொன்னது நினைவுக்கு வந்தது. அதை என் பணப்பையில் ஒளித்து வைத்து இருந்தேன். சட்டென அதில் இருந்த ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து, கப்பல் தோழியின் பெயரை எழுதி, பிறந்த நாள் வாழ்த்துகள் என தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் கொடுத்தேன். 

"காண்டி " எனச் சொல்லியபடி என்னை அணைத்துக் கொண்டாள். 

"உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நீ வருவதற்கு முன்னர் ஒரு நொடி கடலில் குதித்து விடலாம் எனத் தான் நினைத்தேன். உன் சக்கர நாற்காலி, இந்திய முகம் ஆகியன, முடிவை ஒத்திப் போட வைத்தது ... இப்பொழுது காந்தியின் படம் போட்ட பணத்தாள் "

நாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தேன். 

"இந்த நேர்மறை சம்பவங்கள் எல்லாம் எனக்கு ஏதோ ஒன்றை சொல்லுகின்றதோ ... ஹிட்லரின் காலத்தில் காந்தி என்றொரு ஒரு மகான் வாழ்ந்து இருக்கின்றார் என்பதை நினைக்கையிலேயே சிலிர்க்கின்றது... இந்தக் கப்பலில் வந்தமைக்கும் நன்றி ... இந்த காந்தி பணத்தாளிற்கும் நன்றி " எனச் சொல்லிவிட்டு அவளின் அறைக்கு சென்றுவிட்டாள். 

நான் எனது மலிவுவிலை நாற்காலிப் பயண அறைக்கு சென்றுவிட்டேன். அடுத்த இணைய இணைப்பு வந்தவுடன் பேஸ்புக்கில் அவளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவளின் பெயரை குறித்து வைத்துக் கொண்டேன். 

மறுநாள் அவளைப் பார்த்தேன். அப்பாடா கடலில் விழவில்லை. பேஸ்புக்கில் சேர்த்துக் கொண்டாள். சோகமாய் இருக்கும்பொழுது எல்லாம் பேசுவாள், நான் இல்லை என்றால் காந்தியைப் பற்றி ஏதாவது ஒன்றைப் படித்து விட்டு சோகத்தில் இருந்து மீண்டு கொண்டதாக சொல்லுவாள். அவள் ஸ்காட்லாண்டு சென்ற பொழுது , காந்தியின் மேல் மதிப்புக் கொண்ட ஒரு பிரிட்டிஷ் தோழனுடன் தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றாள். அவளின் பேஸ்புக் தளத்தில் , நான் அளித்த காந்தி பணத்தாளின் மின்னச்சு வடிவம் , தன்னை மீட்டு எடுத்த விஷயம் என்றத் தலைப்பில் இன்றும் இருந்து கொண்டு இருக்கின்றது.

Friday, September 20, 2013

அனுபவம் :- நானும் பிரிட்டிஷ் விசாவும்


2008 ஆம் ஆண்டு, என்றைக்கோ வாங்கி வைத்த பாஸ்போர்ட் பெட்டியில் உறங்கிக் கொண்டிருந்தது. மண்ணுக்குள் நாட்பட்டு இருக்கும் மூங்கில் திடிரென மேலெழும்பி வருவதைப் போல , ஓரு நாள் மேற்படிப்பு ஆசை எட்டிப் பார்த்தது. அன்றைக்கு முதல் தேர்வாக இருந்தது பிரிட்டன் ... காந்தியைப் போல பிரிட்டன் போய் படித்து விட்டு , தமிழகம் திரும்பி பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற கனவுடன், அபர்டின் பல்கலை கழகத்திற்கு விண்ணபித்து , இடமும் கிடைத்தது. 10 லட்சம் பணம் வங்கிக் கணக்கில் காட்ட வேண்டும் என்பதால், 7 லட்சங்கள் வங்கிக் கணக்கிலும் 3 லட்சங்கள் வங்கி கடன் வழங்கும் ஆவணமும் வைத்து விசா விண்ணப்பித்தால் , கடன் ஆவணம் பிரிட்டிஷ் அதிகாரிகளால் எற்றுக் கொள்ளப்படாது, அவசரப் படவேண்டாம் , அவகாசம் எடுத்துக் கொண்டு விண்ணப்பியுங்கள் அலுவலர் அறிவுறுத்தினார். அன்று நட்ட செடி அன்றே பூக்க வேண்டும் என்ற துடிப்பில், பரவாயில்லை, ஏற்றுக்கொள்வார்கள் என்ற வெட்டி வீம்பில் கொடுத்து விட்டு வந்தேன். அலுவலர் சொன்னதைப் போலவே அந்த ஆவணம் ஏற்றுக் கொள்ளப்படாமல் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 

மிகுந்த தேசப் பற்றாளன் ஆன நான், என் பாஸ்போர்ட்டில் முதல் விசாவாக பிரிட்டிஷ் விசா அடிக்கப்படவேண்டும் என்ற கனவு தகர்ந்து போனது. மாற்று திட்டமாக வைத்திருந்த சுவீடன் அனுமதிச்சீட்டும் , விசாவும் கிடைக்க வரலாறு மாறி போனது. 

அதன் பின்னர் யாராவது பிரிட்டன் போவதாக சொன்னாலோ , இங்கிலாந்துப் புகைப்படங்கள் பகிர்ந்து கொண்டாலோ கொஞ்சம் சன்னமாக வயிறு எரியும். இப்படி போய்க் கொண்டிருக்கையில், பழைய பாஸ்போர்ட் தேதி முடிய , புதிய இந்திய பாஸ்போர்ட் கடந்த வருடம் வாங்கியாகிவிட்டது. சென்கென் நாடுகளில் தற்காலிக தங்கும் உரிமை ஆவணம் அட்டைகளில் வந்து விட்டாதால் , பாஸ்போர்ட் புத்தம் புதியதாய் இருந்தது. 

அன்பின் உருவங்களாய் நிறைய பாசக்காரர்கள் பிரிட்டனில் இருப்பதால் , சரி புது பாஸ்போர்ட்டிலாவது , நம்மை அடிமைப் படுத்தியவர்களின் விசா வாங்கலாம் என இரண்டு வாரங்களுக்கு முன்னர் , விசா விண்ணபித்தேன். 

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்... 
மீண்டும் அலட்சியம் , விண்ணப்பத்தை விசா அலுவலகத்திலேயே அச்சு எடுத்துக் கொள்ளலாம் என சென்றால், அவர்கள் விண்ணப்பம் இணையத் தளத்தில் கொடுத்து இருந்த கடவுச் சொல்லைக் கேட்டனர். பழைய அம்முகள், ஆண்டாள் , கடலைமக்கள் என அத்தனை காம்பினேஷனில் பாஸ்வோர்ட் கொடுத்தாலும் உள் நுழைய முடியவில்லை. 

சென்னை அலுவலகம் போலவே , ரோமிலும் , அவசரப் படவேண்டாம், அவகாசம் எடுத்துக் கொண்டு மீண்டும் வாருங்கள் என்று அனுப்பினார்கள். பாஸ்வேர்டை மறந்து இருந்தாலும், அந்த விண்ணப்பத்தை மடிக் கணினியில் சேமித்து வைத்து இருந்தேன். அதை அச்சு எடுத்துக் கொண்டு மறு நாள் போய் வேறு பிரச்சினை இன்றி கொடுத்தாகிவிட்டது. 


இந்த முறை எவ்வளவு பணம் தேவையோ அதைக் காட்டிலும் வங்கிக் கணக்கில் சரியாக வைத்து இருந்தேன். வேலை / படிப்பு ஆவணங்கள் என அனைத்தும் கச்சிதமாக இருந்தாலும் , ஏற்கனவே நிரகாரிக்கப் பட்டு இருக்கின்றதே, மீண்டும் அதைக் காரணம் காட்டி நிரகாரித்து விடுவார்களோ என மனதிற்குள் ஒரு பயம்

வழக்கமாக ஐந்து நாட்களுக்குள் முடிவு சொல்லும் அவர்கள், எனக்கு மட்டும் 12 நாட்கள் எடுத்துக் கொண்டனர். ஒரு வழியாக நேற்று , விசா முடிவு எடுக்கப்பட்டு விட்டது. ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தகவல் வந்தது. பக் பக் திக் திக் என சென்று ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு , பாஸ்போர்ட்டை பிரித்துப் பார்த்தால் 6 மாதங்களுக்கு விசா வழங்கப்பட்டு இருந்தது. முதல் பாஸ்போர்ட்டில் நிறைவேறாத கனவு, இரண்டாவது பாஸ்போர்ட்டில் நிறைவேறியது. இரண்டாம் பாஸ்போர்ட்டில் அடிக்கப்பட்ட முதல் விசா பிரிட்டன் விசா. 

( இவ்வளவு பெரிய பத்தி எதற்கு என்றால், பிரிட்டனில் வசிக்கும் என் வாசகர்கள் ?? !! , ரசிகர்கள் ?? !! சோறு போடுவதாக சொன்னால் நாளையே பையைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவேன்.)

Tuesday, September 17, 2013

ஹிட்லரின் காதலிகளும் முகச்சாயலும் - சிறு பத்தி

என் நெருங்கிய நண்பன் ஒருவன் இருகின்றான் . அவனுக்கு நிறைய காதலிகள் இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒன்றுதான். ஒன்று போயின் பிறிதொன்று வந்து சேரும். சுவாரசியம் என்னவெனில் , அவனுடைய முன்னாள் காதலிகள் இந்நாள் காதலி என அத்தனை பேரும் முகச்சாயலில் ஒரே மாதிரியாக இருப்பார்கள். பழைய காதல் தோல்வி சுவடே இல்லாமல் வாழ்க்கை வழமைப் போல போய் கொண்டிருக்கும். இயக்குநர் சேரன் ஆட்டோகிராப் திரைப்படத்தில் இதைக் காட்டி இருப்பார். பள்ளிக் காதலில் இருந்து கல்லூரிக் காதலுக்கு தாவும் பொழுது மல்லிகா - கோபிகா முகச்சாடை ஒன்று போல் இருக்கும். இறுதியில் மணமுடிக்கும் கனிகா முக அமைப்பும் கடைசி காதலி சாடையில் இருக்கும். 


ஹிட்லர் என்ற படிப்பினையான சகாப்தம் "ஏவா பிரவுன்" ( Eva Braun) ஐ மட்டும் சந்திக்கவில்லை என்றால் ஆரம்பிக்கப் படாமலேயே முடிந்து இருக்கும். ஏவா பிரவுனிடம் அழகு இளமை அறிவு எல்லாம் இருந்தபோதிலும் அதையும் மீறிய ஈர்ப்பு ஒன்றை ஹிட்லர் கண்டார் அது , தற்கொலை செய்து கொண்ட ஹிட்லர் காதலித்த அவரின் அக்கா மகள் கெலி ரவுபலின் ( Geli Raubal) அச்சு அசலாக ஏவா பிரவுன் இருந்ததுதாம். 



ரவுபல் தற்கொலை செய்து கொண்டதும் , ஹிட்லரின் வக்கிரமும் கொடுமையும் தான் ரவுபலை தற்கொலை செய்து கொள்ள தூண்டின என பத்திரிக்கைகள் குற்றம் சாட்டின. நொந்துப் போன ஹிட்லர் தற்கொலை மனோபாவத்தில் இருக்க, அதில் இருந்து மீட்டு எடுக்க, ஹிட்லரின் நாசிக் கட்சியின் அதிகாரப் பூர்வ புகைப்படக்கலைஞர் ஹாஃப்மன் , தனது உதவியாளர்களில் ஒருவரான ஏவா பிரவுனை மீள் அறிமுகம் செய்து வைக்கின்றார். ஏவா ரகசியக் காதலி ஆகின்றார். ஹிட்லர் தனிப்பட்ட சோகத்தில் இருந்து மீண்டு வருகின்றார். ஏவா பிரவுனை சாவின் விளிம்பில் மணம் செய்து கொண்டாலும், கடைசி வரை கெலி ரவுபலைத் தான் ஹிட்லர் மிகவும் நேசித்து இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். 

தொட்ட குறை விட்ட குறை தொடர்ச்சிகள் பல சமயங்களில் நன்மையிலும் சில சமயங்களில் ஹிட்லரைப் போல படிப்பினையிலும் முடிவடைகின்றன. ஏவா பிரவுன் இல்லை என்றால், ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டு இருந்து இருக்கலாம். மிகப் பெரிய அழிவில் இருந்து ஐரோப்பா தப்பி இருந்தாலும், இரண்டாம் உலகப் போர் அழிவில் இருந்து கற்று கொண்ட பாடம் இல்லாமல் , இன்றைய நிலைமையைப் போல ஒற்றுமை இன்றி ஒருவருக் கொருவர் ஐரோப்பாவில் அடித்துக் கொண்டு இருந்திருக்க வேண்டிய நிலைமை வந்து இருக்கக் கூடும். ஒரு முகச் சாயல் வரலாற்றைப் புரட்டி போட்டு இருக்கின்றது.

Tuesday, September 10, 2013

நீச்சல் மிதவையும் பிள்ளையார் நம்பிக்கையும் - குட்டிக் கட்டுரை



மண்டப எழுத்தாளர்களிடம் இருந்து தொடர்ந்து கட்டுரைகள் பெற்றுவருவதால், சுயமான எழுத்து எழுதி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆக, ஈயம் பூசினாற் போலவும் இருக்க வேண்டும், பூசாத மாதிரியும் இருக்க வேண்டும் என்ற வகையிலான குட்டிக் கட்டுரை இது.

முன்பொரு காலத்தில் , சுவீடனில் இருந்த பொழுது சில வாரங்கள் நீச்சல் கற்றுக் கொண்டேன். அக்குளத்தில் என்னுடன் பயிற்சி பெற வந்தவர்களில் பெரும்பாலோனோர் முன்னரே நீச்சல் தெரிந்தவர்கள், ஆக அவர்கள் குளத்தில் குதித்தவுடன் பயமின்றி நீரோடு நீராய் மாறிப்போனார்கள். தொட்டதற்கெல்லாம் பயப்படும் நான், இடுப்பில் மிதவை ஒன்றைக் கட்டிக் கொண்டு நீச்சல் பழக ஆரம்பித்தேன். இடுப்பில் இருந்த மிதவை பயத்தைப் போக்கும் மிகப் பெரிய பிடிப்பாக இருந்தது. என்னுடைய பயிற்சியாளர் இரண்டாம் நாளன்று, மிதவை இல்லாமலேயே நீ நன்றாக நீந்துவாய் , அதை நீக்கி விடு என அறிவுறுத்தினார், நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நீச்சல் எடுத்துக்காட்டைப் போல , ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிதவையைப் போன்ற ஒரு பிடிப்புத் தேவைப்படுகின்றது. அந்த நம்பிக்கை நல்லதைத் தரும் முருகனாக இருக்கலாம். ஏசுவாக இருக்கலாம், புத்தனாக இருக்கலாம், ஏக இறைவன் அல்லாவாக இருக்கலாம், ஏன் அம்மா கொடுத்த அழுக்கான ஐந்து ரூபாய்த் தாளாக கூட இருக்கலாம். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என எல்லாவற்றையும் தின்று செரிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கு இந்த நம்பிக்கை இன்னும் அதிகமாகவே தேவைப்படுகின்றது அல்லது திணிக்கப்படுகின்றது.

நீரில் மிதவை/பிடிப்பு இல்லாமலும் நீந்த முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. பிரச்சினை எங்கு வருகிறது என்றால், மிதவை திணிக்கப்படும் பொழுதுதான்... மிதவை இல்லை என்றால் நீரில் மூழ்கி மூச்சடைத்து இறந்துப் போவாய் எனப் பயம் காட்டி வைத்து இருக்கின்றது குமுகம். மறுப்பக்கத்தில் மிதவை வேண்டியதில்லை எனப் பரப்புரை செய்யும்பொழுது , மிதவைகளை அறுத்து எறிவதைக் காட்டிலும் மிதவை இன்றி நீந்தி மக்களுக்கான பயத்தைப் போக்குவதன் மூலம் 'தன்' நம்பிக்கை ஒன்றே சிறந்தப் பிடிப்பு என தொடர்ந்து வரும் சந்ததியினரை உணர வைக்க முடியும் .

டா வின் சி கோட் என்றத் திரைப்படத்தில் ஒரு காட்சியில் அழகாக விவரிக்கப்பட்டு இருக்கும். ஏசு ஒரு மனிதர் , திருமணமானவர் என்று நம்பும் நாயகன் Robert Langdon , தனது சிறு வயது அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்வார்.

"Okay, maybe there is no proof. Maybe the Grail is lost forever. But, Sophie, the only thing that matters is what you believe. History shows us Jesus was an extraordinary man, a human inspiration. That's it. That's all the evidence has ever proved. But... when I was a boy... when I was down in that well Teabing told you about, I thought I was going to die, Sophie. What I did, I prayed. I prayed to Jesus to keep me alive so I could see my parents again, so I could go to school again, so I could play with my dog. Sometimes I wonder if I wasn't alone down there. Why does it have to be human or divine? Maybe human is divine. Why couldn't Jesus have been a father and still be capable of all those miracles? "
காட்சித் துணுக்கு - http://www.youtube.com/watch?v=B7zXxCAZjK4

நாயகனைப் போல , ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவருக்கும் முருகனோ ஏசுவோ அல்லாவோ தேவைப்பட்டு இருப்பார்கள். என் அம்மா அப்பா சிறு வயதில் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது எல்லாம் முருகனிடம் தான் சண்டை சீக்கிரம் சமரசம் ஆக வேண்டும் என வேண்டிக் கொள்வேன். ( இன்றும் 'முருகனின்' மேல் தமிழரசியல் சார்ந்த விசயங்களுக்காக நம்பிக்கை உண்டு )

ஒரு கட்டத்திற்கு மேல் தேவை இல்லை என ஆகும் நம்பிக்கைகள் தொடர்ந்து 'பின்பற்றப்படுவதன்' காரணம் , 'தெளியும்' முன்னர் தன்னுடைய தனது குடும்ப அடையாளங்களாக மாறிப் போய் விடுவதுதான். பிள்ளையார் வழிபாட்டைத் திட்டினால், கடவுளைத் திட்டுகிறார்கள் என்றக் கோபத்தைக் காட்டிலும் என் 'அம்மா , அப்பா' ' தாத்தா பாட்டி' தனக்கு சொல்லிக் கொடுத்த நம்பிக்கைகளை புனிதங்களை மறுதலிக்கின்றார் களே என்ற கோபமே மேலோங்கி இருக்கும் . இந்த உள்ளூர கோபம் , கணன்று தீர்க்கமான மாற்ற முடியாத 'புனிதமாக' மாறி விடும்.

உயிரைக் கொன்று உணவாய் உண்ண , ஆடு கோழிகளைப் போல மாடும் பன்றியும் ஒன்றே என புனிதத்தை உடைக்க எனக்கு சில ஆண்டுகள் ஆனது. தமிழ்ச் சமூகம் பாவத்தைக் கூட எளிதில் கடந்து விடும். போலியான புனிதங்களை கடக்க விரும்பவே விரும்பாது.

வர்த்தக முன்னேற்றங்களை அளவுகோலிட குறைந்தது மூன்று வருடங்கள் ஆவது தேவை. சமூக வாழ்வியலில் சமத்துவ மாற்றம் ஏற்பட மூன்று தலைமுறைகளாவது கொடுக்கப்படவேண்டும் . மருந்தை சாக்லெட் சாப்பிடுவர்களுக்கு சாக்லெட்டின் மூலமாகவும், கார பஜ்ஜி போண்டா சாப்பிடுபவர்களுக்கு அதன் மூலமாகவும் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும், மருந்து இருக்கின்றது என்பதை மறைத்தோ மறைக்காலோ .. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த சமூகமான தமிழ்ச் சமூகம் இன்றும் ஒரு குழந்தையைப் போலத் தான் இருக்கின்றது. மானே தேனே பொன் மானே எல்லாம் போட்டுத் தான் மாற்ற வேண்டும்.

ஆக மருத்துவர் புருனோ ( Mariano Anto Bruno Mascarenhas -https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10151856337539828) பகிர்ந்ததைப் போல, கலைஞரோ, சீமானோ, பிள்ளையாரோ, ஏசுவோ, நபிகளாரோ , அவரவர்களுக்கான நாட்களில் அமைதி காத்து விடலாம். ( பிள்ளையார் ஊர்வலங்கள் மசூதிகளின் மேல் பன்றிக் கறி எறியப்படாமல் நடக்க வேண்டும் என வைக்கப் படும் சமுதாய அக்கறை வேண்டு கோள்கள் சீண்டல்களில் வராது ).

எத்தனைக் கொடுங்கோலர்கள் தோன்றினாலும் , கடும்போக்காளர்கள் தோன்றினாலும் உலகம் அழிந்து விடாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருப்பதற்கான காரணம் நற்குணம் கொண்ட மிதவாதமானப் போக்கு உடையவர்களால் தான் என்பதை ஓர் உடையாடலின் பொழுது திரு ஞாநி ( Gnani Sankaran) சொன்னார். அது உண்மையே , நிதானமான மிதவாதப் போக்கு பக்குவமானது.

இறுதியாக மிதவையுடன் நீந்துகின்றார்களா... இல்லையா என்பதைக் காட்டிலும் எல்லோரும் குளத்தில் நீந்த அனுமதிக்கப் படுகின்றனரா என்பதையும் பார்க்க வேண்டும்.

சொந்தக் கதையில் ஆரம்பித்து சொந்தக் கதையிலேயே முடித்து விடுகின்றேன். நீச்சல் பயிற்சியின் கடைசி நாளன்று , கிட்டத்தட்ட அரை மணி நேரம் தனியாக நீந்தினேன். விஷயம் என்னவெனில் , எனது பயிற்சியாளர், எனக்குத் தெரியாமல் எனது மிதவையை அவிழ்த்து விட்டு இருக்கின்றார். மிதவை என்ற பிடிப்பு இன்றிதான் , அந்த அரை மணி நேரமும் நீந்தி இருக்கின்றேன் . கரை ஏறிய பின்னர்தான் அந்த விஷயத்தை என்னிடம் சொன்னார்

Friday, July 05, 2013

நீங்க என்ன ஆளுங்க - சிறுகதை

"உங்க பொண்ணுக்கு எப்போ கல்யாணம்"  என தகப்பனாரிடமும் , "எனி குட் நியுஸ் " என புதிதாக திருமணமானவர்களிடமும் கேட்கப்படும் கேள்விகளை விட அசூயையானது  , "நீங்க என்ன ஆளுங்க" என்ற கேள்வி. 
பொதுவாக இது நம்ம ஆளாக இருந்தால் நல்ல இருக்குமே , காரியம் சாதித்துக் கொள்ள எளிதாக இருக்குமே என நினைப்பவர்கள் தான் இப்படி கேட்பார்கள். அதாவது நம்மை விட திறமை சாலியாக , இருப்பவன் நம்ம சாதியாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கமாகவும் இருக்கலாம் .

"நீங்க என்ன ஆக்கள்  " என்பதை சுத்தி வளைக்காமல் சர்வ சாதரணமாக என்னுடைய ஈழத்து  நண்பர் , ஒஸ்லோ நகரில் ஒரு நாள் என்னிடம் கேட்டார்.  ஓர் ஈழத்து ஆள் கேட்டது வியப்பாகத் தான் இருந்தது.  "அவை என்ன ஆக்கள்" என்ற கேள்வி  ஈழத்து மக்களிடம் சாதாரணம் என்றாலும் நேரடிக் கேள்வி அதிர்ச்சியாகத் தான் இருந்தது.  ஒரு வேளை பொன்னர் சங்கர் புதினம் எனது மேசையில் இருந்ததனால் அப்படி கேட்கத் தோன்றி இருக்குமோ ... 

இந்த கேள்விக்கு பொய் சொல்லலாம் . உண்மையும் சொல்லலாம். மூன்றாவது விதமான பதிலும் உண்டு. "இந்த சாதி கருமாந்திரம் எல்லாம் நமக்கு எதுக்குங்க ?". இவ்வகையான பதில் சொல்லுபவர்கள் தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என என் கல்லூரி நண்பன் ராகவன் சொல்லி இருக்கின்றான். 

அவர்கள் தான் தங்களை வெளியெ சொல்ல கூச்சப் பட்டுக் கொண்டு அப்படி முற்போக்காய் சொல்லுவார்கள் எனவும் சொல்லுவான் ராகவன். ராகவனோட நட்பு, புலிவாலை பிடித்ததைப் போன்றது. விலாங்கு மீனாய் அவன் சொல்லுவதற்கெல்லாம் மைய்யமாய் தலையாட்டி வைப்பேன் 

"மச்சி, நீ மாட்டுக்கறி எல்லாம் சாப்பிடுறதுனால , அவிங்கன்னு தப்பா நினைச்சுட்டேண்டா ... சாரிடா " என தங்களுக்குள் புதுக் கூட்டணி அமைத்த தோழமைகளையும் பார்த்து இருக்கின்றேன்.  கூட்டணி அமைக்கும் முன்னர் கேட்கப்படும் மன்னிப்பு நெருடும் .

மெட்றாஸில் வேலை பார்த்த பொழுது சில நண்பர்கள் பெரியாரியம் பேசுவார்கள், அம்பேத்கார் எல்லாம் படிப்பார்கள். ஆனால்  கவனமாக , நுட்பமாக , முற்போக்கு சிந்தனையுடன் தலித்தியம்   பேசும் பொழுது  தாங்கள் தலித் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். 

ஸ்வீடனில் இந்த வகையான மனப் போக்கை ஸ்விடிஷ் நண்பர்களிடமும் பார்த்து இருக்கின்றேன்.   LGBT விசயங்களை ஆதரித்து பேசுவார்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் தான் LGBT கிடையாது என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்வார்கள். 

இதில் அறிந்தோ அறியாமலோ சம்பந்தப் பட்ட விஷயத்தை அவரவர் ஆழ் மனதில் குறைவாக எடை போட்டு வைத்திருப்பதால் தான் , தாங்கள் அவர்களில்லை என அவர்கள்  அடிக்கடி உறுதிப் படுத்திக் கொள்கின்றனர்  என நான் நினைப்பதுண்டு.  இந்த அவதானிப்பை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நான் சிந்தனைவாதி இல்லை என்பதால், தோன்றியதை தோன்றியபடியே விட்டு விடுவேன். 

சரி இவருக்கு பதில் சொல்லியாக வேண்டுமே, "நான் தமிழன் சாதி " என பெருமையாக சொல்லலாம். ஆனால் அப்படி ஒன்று இருந்து இருந்தால், இந்த கேள்வி வந்திருக்காதே. ஆகையால் நான் அவருக்கு தெளிவாக சொன்ன பதில், 

"நான், கண்டிப்பாக உங்க சாதி இல்லை சார் "  

Wednesday, July 03, 2013

அப்பாவி கணேசனும் விமான அனுபவமும் - சிறுகதை

சுவிடனின் கோத்தன்பர்க்  நகரத்தில் இருந்து  வரும் அம்முவிற்காக , ரோம் சாம்பினோ விமான நிலையத்தில் காத்து இருந்த பொழுது , அப்பாவி கணேசன் நினைவுக்கு வந்தார். கடைசியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், இந்த விமான நிலையத்திற்கு கணேசனுடன் வந்ததுடன் சரி அதன் பின்னர்  இன்றுதான் வருகின்றேன் .  மற்றபடி  என் போக்கு வரத்து எல்லாம்,  ரோமின் மற்றொரு விமான நிலையத்தை மையம் கொண்டு தான். 

சுவீடனில் படித்த பொழுது , அப்பாவி கணேசனுக்கு என்னுடன் பிரயாணம் செய்ய வேண்டும் என்றாலே பயம். ஒரு முறை கோபன்ஹெகன் ரயிலில் அவருடையை பயணச்சீட்டையும் எடுத்துக்கொண்டு வேண்டும் என்றே அவரைத் தெரியாததைப் போல வேறு  ஓரிடத்தில் போய் அமர்ந்து, பரிசோதகர் வரும் நேரத்தில் பரிதவிக்க விட்டு இருக்கின்றேன். 

மற்றொரு முறை, 

"கணேசன் , நம்ம காலேஜ் கார்டை காமிச்சா, ஒரு பாக்கெட் கடலை , வில்லிஸ் சூப்பர் மார்கெட்டில் கொடுப்பாங்க " 

 என சொல்ல போக , உண்மையிலேயே அட்டையைக் காட்டி கடலையைக் கேட்க , அந்த சூப்பர் மார்கெட்டில் அன்றைய மாலைப் பொழுது சூப்பராக போனது. 

தில்லு முல்லு ரீமேக் படத்தில் வருவதைப் போல, நான் ஒரு முறை விலை குறைந்த கூலிங் கிளாஸின் விலைக் குறிப்பை , விலை அதிகமான ஒன்றிற்கு மாற்றி வைத்து விட்டேன்.   

°கார்த்தி, சூப்பர் மாடல், வெறும் நூறு குரோனர் "  என சொல்லிக் கொண்டு எடுத்துப் போனார் நான் நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு வெளியே  வந்து விட்டேன்.  

கடைக்காரன் கில்லாடி ... பார்த்தவுடன் நிஜ விலையை கண்டுபிடித்து விட்டான்.
ஆயிரம் குரோனர், பணத்தைக் கட்டிவிட்டு வாங்கி வந்தார். அடுத்து வந்த கோடையில் அவரை விட , நான் தான் அந்தக் கண்ணாடியை அதிகம் அணிந்து இருப்பேன். 

என்னுடைய கெட்டப் பழக்கம் , அப்பாவிகளை , அம்மாஞ்சிகளை ,விளையாட்டுத் தனமாக கிண்டலடிப்பது. அது ,  சுமாரான பவுலர் நல்ல வாட்டமா பவுலிங் போட்டால் சிக்ஸர்களாய் அடிக்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியைப் போல இருக்கும் . பேட்ஸ்மேன் களுக்கு தொடர்ந்து அடித்தாடினால் தான் மதிப்பு ... ஆனால் பவுலர்களுக்கு ஒரு பந்து  போதும்.. அத்தனையையும் தரை மட்டமாக்க ... 

தொடர்ந்த ஓட்டலில் களைப்படைந்து வெறுப்படையும் அப்பாவிகள்  என்னை ஒரு கட்டத்தில் எதிரியாக பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். சந்தர்ப்பம் அமையும் பொழுது , மூக்கில் குத்தி விட்டு ஓடி விடுவார்கள். 

ஆனால் இந்த அப்பாவி கணேசன் அவர்களைப் போல அல்லாதவர். 
என் தொடர் கலாய்த்தலை தாங்கிக் கொண்டதால் தான், அன்று ரோம் நகரத்திற்கு நான் குடி பெயர்ந்த பொழுது, அவருக்கும் டிக்கெட் போட்டு அழைத்து வந்தேன். அதில் கூட ஒரு சுயநலம் உண்டு. இரண்டு பெட்டிகள் எடுத்து வர வேண்டும். மேலதிக சுமைகளுக்கு ஆகும் செலவிற்கு இவரைக் கூட்டிக் கொண்டு வந்தால், பெட்டி தூக்க ஒரு ஆள் இருக்கும் என்பதுதான். 

ஊர்ப்புறங்களில் பேருந்து கடைசி நிறுத்தத்தில் வந்து நின்றவுடன், அடுத்து ஐந்து நிமிடங்களில் திரும்ப எடுப்பார்கள். மக்கள் இறங்குவதற்கு முன்னரே கூட்டம் ஏறத் தொடங்கும். இது விமானம் என்பதால் அரை மணி நேரம். வந்த விமானமே திரும்ப பறக்கும். 

டவுன் பஸ்ஸில் இடம் பிடிப்பதைப் போல இடம் பிடித்தோம். 10 எ 10 பி , 10 சியில் யாரும் இல்லை.  மலிவு வகை விமான சேவை என்பதால், வண்டியை வளைத்து கிளம்பத் தொடங்கியதும் லாட்டரி சீட்டு முதற்கொண்டு சாராயம் , சிகரெட் வரை  அனைத்தையும் விற்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி விற்றுக் கொண்டு இருக்கையில் 

ஒரு விமானப் பணிப் பெண்ணைக் கூப்பிட்டு , கணேசனை சுட்டி,

"இவர், காண்டம் கிடைக்குமா என கேட்கிறார்"  என்றேன் 

இருவரும் என்னை முறைத்தனர். பின்னர் கணேசனை , சமாதானப் படுத்தும் முயற்சியாக பேச்சை ஆரம்பித்தேன். 

°கணேசன் , நான் பிளைட்டோட லைஃப் ஜாக்கெட்டை திருடப்  போறேன்" 

"வேண்டாம் கார்த்தி, தப்பு ...மாட்டினால் மானம் போயிடும் " 

கைசுமைகளுக்கான பைகளை  கால் மாட்டில் தான் வைத்து இருந்தோம். விமானம் தரையிறங்கும் சமயத்தில் , எல்லோருடைய கவனமும் அதில் இருந்த பொழுது இருக்கைக்கு கீழ் இருந்த  உயிர் காப்பு கவசங்களை கையை விட்டு எடுத்து ஒன்றை அவரின் பையிலும் மற்றொன்றை என் பையிலும் வைத்துக் கொண்டேன்.  கணேசனுக்கு வெளியில் வரும் வரை வியர்த்துக் கொட்டியது. அன்று எனக்கு ரோமில் உதவி செய்து விட்டு போனவர் தான், அதன் பின்னர் என்னுடன் பேசவே இல்லை. அந்த லைஃப்  ஜாக்கெட்டுகளை இன்றும் பாதுகாத்து வருகின்றேன். 

எதோ ஓர் அறிவிப்பில் விமான நிலையம் வருகைப் பகுதி சலசலப்பானதும், அப்பாவி கணேசன் நினைவுகளை விட்டு நிகழ் காலத்திற்கு வந்தேன். கோத்தன்பார்க் விமானத்தைப் பற்றிதான் சொல்லுகின்றனர். கோத்தன்பார்க்கில் இருந்து வரும்  விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக நகரத்திற்கு வெளியே கடலில் விழுந்து விட்டது  எனவும் மீட்புக் குழுக்கள் விரைந்து இருக்கின்றனர் எனவும் அந்த அறிவிப்பு சொன்னது. 
                                                                 ---