Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Tuesday, March 24, 2015

நீர் அடித்து நீர் விலகுமா !!

"சிங்களத்தமிழர்" என்றுதான் இந்தப்பதிவுக்கு தலைப்பு வைக்கலாமென்றிருந்தேன். ஆனால் விஷமுறிவு மருந்தை தொடர்ந்து கொடுத்துக்கொண்டேயிருந்தால் விடாதுகருப்பாகிவிடும். எனவே விவேகமாக நீர் அடித்து நீர் விலகுமா என்ற இந்தத்தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிற்கேற்ற தலைப்புதான் தலைப்புக்கேற்ற பதிவுதான். தொடர்ந்து வாசிக்கலாம்.

2015 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையில்  XXXXXXXX அணி, காலிறுதியில் படுதோல்வியடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து துவிட்டரில் ஒரு மடந்தை, தனது கோபத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மேல் காட்ட ,அது விதையாகி வெடித்து முளைத்து தழைத்து கிளைத்து வெளிப்பட்ட விழுதுகளில் ஒன்றுதான் என் கட்டுரை என்று ஒருசிலர் நினைப்பதைப்போல  நான் அக்கட்டுரையை எழுதவில்லை. இந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்று பார்த்தும் கேட்டும் பட்டும் அறிந்திருப்பதால் பெண்களுடன் எவ்விடத்திலும் விவாதங்களுக்குள் சென்றதேயில்லை. அதுவும் சமூக ஊடகங்களில் பெண்களுடன் விவாதத்தில் இறங்கி மல்லுக்கட்டினால் ஒரு கட்டத்தில் நாமே விவாதப்பொருளாகிவிடுவோம்.  ஆக எனது கட்டுரையை பெண்ணுக்காக எழுதப்பட்டது என்று சொல்வதைத் தவிர்த்து மண்ணுக்காக எழுதப்பட்டது என்று படிப்பதே சிறப்பு. 

படித்தால் படி, படிக்கலாட்டி போ, படிச்சுட்டு பிடிக்கலாட்டியும் போ என்று எழுதுவதால் நான் பிரபலங்களுக்கு மத்தியில் மட்டுமே பிரபலம். சீடகோடிகள் அனைவரையும் முடுக்கிவிட்டு என்பதிவுகளை முன்னுக்கு கொண்டு வந்தாலும் முன்னூறு வரவுகளைத் தாண்டாதப்பதிவுகள் எனது பதிவுகள். இந்நிலையில்  XXXXXXXX அணியைப்பற்றி நான் எழுதிய "கிரிக்கெட்டின் கண்ணீர்த்துளி " கட்டுரையை  ( http://vinaiooki.blogspot.it/2015/03/blog-post.html ) ஆயிரக்கணக்கான சாமனியர்களிடம் கொண்டுபோய்ச்சேர்த்தது  XXXXXXXX  அணியை நேசிக்கும் தமிழும் பேசும் அந்நாட்டு வாழ் இளைஞர்கள். 

தமிழும் பேசும் அவ்விளைஞர்களுக்கு கட்டுரையின் மேலும் கட்டுரையை எழுதியவன் மேலும் நியாயமற்ற கோபத்தைக்காட்ட ஒரு பின்னணி  உண்டு.  2010 ஆம் ஆண்டு வாக்கில், XXXXXXXX  அணியைச் சேர்ந்த ஓர் ஆட்டக்காரர் எதிரணிகளின் 800 ஆட்டக்காரர்களை வீழ்த்திய சமயத்தில், அந்த ஆட்டக்காரர்,  விளையாட்டுலகின்  மனித நேயமிக்க, மகத்தான ஆளுமைகளான முகமது அலி, ஆண்டிபிளவர், ஒலாங்கா போல இருந்திருக்கலாமே என்று நான் ஆதங்கப்பட்டு எழுதியக்கட்டுரைக்கு ( http://www.tamiloviam.com/site/?p=739)இவ்விளைஞர்கள் கடும் வார்த்தைகளினால்  "தமிழோவியம்" இணைய இதழில் இன்று போல அன்றும் தங்களது நியாயமற்ற கோபத்தைக் காட்டினர். அன்று அதன் நீட்சி துவிட்டரிலும் நீர்க்குமிழியாக வெளிப்பட்டது.  

இரண்டாண்டுகளுக்கு முன்னர்,  நான் மாற்றிவடிவமைத்த   XXXXXXXX  அணியின் ஆட்டக்காரர் ஒருவர்  கைகளில் ரத்தக்கறை கார்ட்டூன் ஈழத்தமிழர்கள், தமிழ்த்தேசியர்கள், ஈழமாயையில் இருந்தவர்கள் என்று பலரால் கொண்டாடப்பட்டது.   (விராத் கோஹ்லி விரட்டி விரட்டியடித்த வேகப்பந்துவீச்சாளர்தான் அந்த ஆட்டக்காரர். )  ஈபே இணையத்தளத்தில்  XXXXXXXX  அணியை ஒருநாள் ஏலத்தில் விட்டேன். அன்றைய இனவெறி தென்னாப்பிரிக்காவிற்கு கொடுக்கப்பட்ட தண்டனை XXXXXXXX  நாட்டிற்குக் கொடுக்கப்படவில்லை என்பதால், என் கோபத்தைத் தணித்துக்கொள்ள எழுத்தில் தண்டனை கொடுப்பதுண்டு.   நீறுபூத்த நெருப்பாக ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இன்னும் தொடரும். 

அடிப்படையில் பார்த்தால், என் கட்டுரைக்கு ஈழத்தமிழர்களும் தமிழ்த்தேசியர்களும் பெரும் ஆதரவைக் கொடுத்திருக்கவேண்டுமே. மாறாக, அவர்களும் போர்வையை தலையில் போத்திக்கொண்டு கமுக்கமாக ,  என் கட்டுரையையும் என்னையும் வசை பாடிய இழைகளில் இசைபாடினார்கள். கலிலியோ காலத்தில் வாழ்ந்த மக்கள் உலகம் தட்டையானது என்று நம்பினார்கள் அல்லவா, அவர்களைப்போல இவர்களும் அரசியலும் அதனைச் சார்ந்த செயற்பாடுகளும் தட்டையானது என்று நம்புபவர்கள். ஈழப்பாசமிருந்தால் கலைஞரை வெறுக்கவேண்டும், திமுக வேரறுக்க ப்படவேண்டும் என்று நம்பும் ஆட்கள்.  திமுக நேசமிருந்தால் தமிழ்ப்பாசம் செல்லாது என்று சொல்லும் நாட்டாமைகள் சிலரும் இவர்களில் உண்டு.  தமிழ்நாட்டில் திமுக இல்லாமல் போயிருந்தால் தமிழே இருந்திருக்குமா என்பதை அறியாதவர்கள். ஆதலால், திராவிட கருத்தியலாளரும் "மாப்ள சிங்கம்" திரைப்படத்தின் வசனகர்த்தாவுமான டான் அசோக் ஈராண்டுகளுக்கு முன் எடுத்து செய்த, கலைஞர் அஞ்சல் தலை வெளியிட்டிற்கு நான் வினையூக்கியாக இருந்து உதவி செய்தது ஈழத்துரோகப்பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது. 

எனக்கு ஒரு தீவிர ரசிகர் பேஸ்புக்கில் இருக்கிறார். கலைஞருக்காக வாடிகன் போப்பிடமிருந்து வாழ்த்துக்கடிதம் பெற்றுத்தந்தது, சேனல்4 தொலைக்காட்சி - ஸ்டாலின் இணைப்பை ஏற்படுத்தியது , திமுகவின் வெளிநாட்டு முகவராக இருப்பது போன்ற "ஈழத்துரோக" செயல்களை செய்தது-செய்வது வினையூக்கி என்று அவருக்குத் தோன்றுவதையெல்லாம் என்னைப்பற்றி பேசும் இடங்களில் சுவரொட்டி ஒட்டுவார். 

இப்படிஒட்டுவாரொட்டிகள் மணிப்பிரவாளத்தமிழில் எனக்கு தொடர்ந்து அர்ச்சனைகள் நடத்த , எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்று தெரிந்தே எடுத்த விஷமுறிவு கலைச்சொல்லாக்கம்தான் "சிங்களத்தமிழர்",  XXXXXXXX  அணியையும் XXXXXXXX  நாட்டின் ஆளுமையையும் ஏற்றுக்கொண்டு இந்தியத்தமிழர்களை, நாய்கள் இன்னபிற அச்சில் ஏற்றமுடியாத சொற்களில் திட்டுபவர்கள் என்ற பொருளில் இந்தக்கலைச்சொல் உருவாக்கப்பட்டது.  இந்தக் கலைச்சொல் உருவாக்கத்திற்குப்பின்னர்தான், நோர்வேயிலிருந்தும் டொரண்டோவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் " வினையூக்கி, நீங்கள் பெரிய மனுஷந்தானே , நீங்கள் நிறுத்தக்கூடாதா" என மெயில் விடு தூது ஆரம்பித்தன. எனக்குத்தான் அறிவுரைகள் பறந்து வந்தனவே ஒழிய, தமிழும் பேசும் XXXXXXXX  நாட்டு ஆட்களிடம் ஒன்றும் சொல்லப்படவில்லை. 

தமிழ்ச்சூழலில் புத்திசாலிகளும் உண்டு. துணிச்சல்காரர்களும் உண்டு. ஆனால் துணிச்சல் மிகுந்த புத்திசாலிகள் அரிது. காணும்பொழுது அவர்களைப் பொது நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். துணிச்சலான புத்திசாலிகள் விலகும் புள்ளிகளை மட்டும் பெரிதாக்கினால் நட்டம் துணிச்சலான புத்திசாலிகளுக்கல்ல. அவர்களுக்கு எல்லாப்பக்கமும் மவுசு உண்டு. எங்கு அரியணை காலியாக இருக்கிறதோ அங்கேப்போய் உட்கார்ந்துவிடுவார்கள். 


செல்வாக்குள்ள அல்லது செல்வாக்கை மேலும் வளர்த்துக்கொள்ளக்கூடிய என்னை கலைஞர் அபிமானி  என்பதற்காக எனக்குக் கட்டம் கட்டினால் எல்லோருக்கும் ஒரு பிரேக் பாயிண்ட் ரீச் ஆகும், ஏதாவது ஒருகட்டத்தில் சலிப்பாகித்தான் போகும். என்னைத்திட்டிய ஒருவரை  வெள்ளைவேன் கடத்திச்சென்றபொழுது பதறிய தமிழ்நாட்டு டிவிட்டர்களில் நானும் ஒருவன். அடுத்த முறை வெள்ளைவேன் வந்தாலென்ன மஞ்சள் வேன் வந்தாலென்ன என்றுதானே இருக்கத்தோன்றும்.  



 "விவாதத்தில் வெற்றிபெறுவது முக்கியமில்லை,  வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சாம, பேத , தான தண்ட முறைகளைப் பயன்படுத்தினால் விவாத நோக்கத்திற்கு துணைச்சேர்க்கும் ஆட்களின் ஆதரவை இழந்துவிடுவோம்., பொது நன்மைகளுக்காக சிறுவிசயங்களைக் கடந்து செல்லலாம்" . இந்தக்குட்டு நினைவுக்கு வந்ததும் யோசிக்க ஆரம்பித்தேன். 

என்னை வசைபாடிய  400 சொச்சத்து XXXXXXX  நாட்டு தமிழும் பேசும் ஆட்களைக் குறிக்க மட்டும்  உருவாக்கிய சொல் என்றாலும்,  "சிங்களத்தமிழர்" என்ற பதம் ,  பலரை அதிர்ச்சியடைய வைத்திருக்கும். கவலையடையகூட செய்திருக்கலாம்.  அதனால் தார்மிகபொறுப்பேர்று வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்கலாமா என்று யோசித்தேன்.  ஆனால் அந்த சொல்லிற்காக பதட்டமடைபவர்கள், நான் வசைபாடப்படும்பொழுது அமைதியாகத்தானே இருந்தார்கள். நான் எதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதையும் யோசித்தேன். யோசித்துக்கொண்டேயிருந்தபின்னர் பின்வரும் எண்ணம் மேலோடியது. 

துயரமான கட்டத்தில்  எனக்கு அனைத்து வகையான ஆதரவளித்து  என் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்ட என் நலன் விரும்பி , ஈழத்தமிழர் யோகன் பாரிஸ் ஒருவேளை அந்தச்சொல்லைக் கண்டிருந்தால் , அவர் மனதில்  சுருக்கென முள் தைத்திருக்குமல்லவா.  அவர் ஒருவேளை வருந்தியிருந்தால், அவரிடம் மட்டும்  வருத்தம் தெரிவித்துக்கொள்கின்றேன்.   ஏனையவர்களுக்கு நீர் அடித்து நீர் விலகாது. சேரும்புள்ளிகளில் சேரவேண்டிய புள்ளிகளில் உங்களுடன் சேராமல் இருக்கமாட்டேன்.  என்னுடைய துணிச்சலுடன் கூடிய புத்திசாலித்தனத்தை உங்களுக்குத் தேவைப்படும்பொழுதெல்லாம் பெற்றுக்கொள்ளலாம். 

Sunday, February 02, 2014

எருதின் புண் - சிறுகதை


ஞாயிறு அன்று 12 மணிவரை தூங்குபவன், ஆனால் எட்டு மணிக்கே எழுந்து சிவஞானத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆழ்வார்திருநகர் பக்கம் நீங்கள் வந்து இருந்தால் அச்சு அசப்பில் ஒரே மாதிரி இரண்டுவீடுகளைப்
பார்த்து இருக்கலாம். அந்த இரண்டுவீடுகளின் சொந்தக்காரர்தான் சிவஞானம்.  நான் அந்த வீடுகளில் ஒன்றில் குடித்தனம் இருப்பவன்.  அனேகமாக வீடு வாடகையை ஏற்றத்தான் வருகின்றார் என யூகித்து இருந்தேன். சென்ற ஆண்டு ஆயிரம் ரூபாய் ஏற்றினார்.

"முரசொலி படிச்செல்லாம் அறிவை வளர்த்துக்க முடியுமா என்ன?" என்ற வழமையான குசும்புடன் வெளி இரும்புக்கதவை உள்ளே தள்ளியபடி வந்தார் சிவஞானம்.  அவரின் கையில் இருந்த தினமலரை வாரமலருக்காக பெற்றுக்கொண்டேன்.

சிவஞானம் என்ற பெயரை , அவரின் பெற்றோர்கள் சிலம்புச்செல்வர் ம.பொ.சி நினைவாக வைத்தனர் என கேட்காமலேயே அடிக்கடி சொல்லுவார். ம.பொ.சி அவரின் நெருங்கிய சொந்தக்காரர் எனப் பெருமைசொல்லிக்கொள்வதற்காக அவர் போடும் முதல் வரி என்பது நீண்ட நாட்கள் கழித்துத்தான் புரிந்தது.  திமுக என்றால் அவருக்கு ஆகாது, கலைஞர் என்றால் அவருக்கு அப்படி ஒரு வெறுப்பு.

"என்ன உங்கத் தலீவர் டெசோ கிசோன்னு எதுவும் வேலை ஆரம்பிக்கலியா ? எலக்‌ஷன் டைம் வேற நெருங்கிடுச்சு"

மனைவியிடம் கூட கிண்டலுக்கு பதில் நக்கல் அடித்து விடலாம்.  ஆனால் வீட்டு உரிமைக்காரர்களிடம் ஸ்ட்ரிக்ட் நோ நோ.

ஆக, கலைஞர், பாராட்டு விழாக்களில் ஒரு ஓரசிரிப்பு சிரிப்பாரே, அதைப்போல சிரித்துக் கொண்டேன்.

"தமிழ்த்தலைவன்னு சொல்லிட்டு , சிங்களத்தமிழர்களுக்கு இப்படி துரோகம் செஞ்சிருக்கக் கூடாதுப்பா..."

ஆத்திரம் வந்தது. கலைஞரை கேலி செய்ததற்காக அல்ல. சிங்களத்தமிழர்கள் என்றதற்காக... அம்மு நான் ஆத்திரப்படும்பொழுது எல்லாம் சரியாக கண்டுபிடித்துவிடுவாள். ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தி நான் சிரிக்கும்பொழுது அது மிஸ்டர் பீன் சிரிப்பைப்போல இருக்குமாம்.  என் மிஸ்டர் பீன் சிரிப்பை ஆமோதித்தலாக நினைத்துக் கொண்டு கலைஞரை தொடர்ந்து வசைப் பாடிக்கொண்டிருந்தார். எனக்கு மனம் எவ்வளவு வாடகை ஏற்றப்போகிறார் என்பதில்  இருந்தது.

"சரி, தம்பி, இந்த மாசத்தில இருந்து வாடகை 2000 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்துடுங்க" என்றார்.

தனிவீடு, கார் பார்க்கிங் இப்படி ஒரு வீடு சென்னையில் கிடைப்பது சிரமம் என்பதால், 2000 ரூபாய் ஏற்றம் அதிகம் என்றாலும் ஏற்றுக்கொண்டேன்.  காப்பி, மிக்சர் உபசரிப்புகள் முடிந்தவுடன் , வாரமலரில் சினிமா கிசுகிசு செய்திகளின்
சுவாரசியத்தினால், வாரமலர் இணைப்பை மட்டும் என்னுடன் வைத்துக்கொண்டு தினமலரை அவரிடம் திருப்பிக் கொடுத்தேன்.

வீட்டு வாசற்படி சென்றவர், திரும்ப வந்தார். "யோகநாதாராசா வீட்டிற்கும் போறேன். நீங்களும் கூட வர்றீங்களா" எனக் கூப்பிட்டார்.

யோகநாதராசா இன்னொரு வீட்டின் குடித்தனக்காரர். ஈழத்தமிழர். தன் மனைவியுடன் இங்கு வசிக்கின்றார். அவரின் மகன்கள் பிரான்சில் புகலிடம் விண்ணப்பம் கொடுத்து நீண்ட நாட்களாகக் காத்திருப்பதால் எப்பொழுதும்
மென்சோகத்துடன் தென்படுவார். கள்ள முகவர்கள் , எப்படி , அவரின் மகன்களை பிரான்சு என சொல்லி உருகுவேயில் இறக்கிவிட்டதையும் அங்கு கையில் சல்லிக்காசு இல்லாமல் கஷ்டப்பட்டதையும் சொல்லும்பொழுது, கடினமான உள்ளம் படைத்த காரியகார என்னையும் உலுக்கும்.

நான் கலைஞரின் ரசிகன் என்றாலும் யோகநாதாராசா "என்னய்யா , உங்க அய்யா எங்களை ஏமாத்திட்டாரே" சொல்லும்பொழுது மனதைப்பிசையும்.  நேரிடையாகப் பாதிக்கப்பட்டவர்களிடம் அறிவுப்பூர்வ அரசியல் பேசுவது அழகல்ல என்பதால் பதில் சொல்ல மாட்டேன். அவர் பேசுவர் நான் கேட்பேன். புலிவேசம் போடாத புலியாக இருந்தபோதிலும் சகோதரயுத்தம் தொடங்கி ராஜபக்சேவை வெற்றியடையச் செய்தது வரை புலிகளின் அரசியல் தடுமாற்றங்களைச் சொல்லுவார். பல சமயங்களில் கேட்டல் வழி வரலாறு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை விட உண்மையாக இருக்கும்.

பாரிசில் இருந்து எனக்கு ஏதாவது தேவையா எனக் கேட்பார். நான் வேண்டாம் என மறுத்துவிடுவேன். பாரிசில் அலுவலக விசயமாக ஆறு மாதங்கள் இருந்திருக்கின்றேன். தூங்க கூட நேரமில்லாமல் தட்டுக்கழுவி குருவியாய் ஈழத்தமிழர்கள் எப்படி காசு சேர்ப்பார்கள் என்பதை கண்ணால் பார்த்து இருக்கிறேன்.  குருவிகளிடம் பங்கு கேட்கும் கோட்டானாக ஆக நான் விரும்பியதில்லை.

"உங்களுக்கு இதில எந்த கஸ்ரமும் இருக்காது.மகன்மார் எல்லாரும் வெளிநாட்டில தானே இருக்கிறாங்க..இந்த மாசத்தில இருந்து வாடகைய அஞ்சாயிரத்தால கூட்டலாம்னு இருக்கேன். ஈரோல பாத்தா கொஞ்சம் தான் வரும்.அத சொல்லலாம் எண்டு தான் வந்தனான்"

இமிடேடட் ஈழத்தமிழில் சிவஞானம் யோகநாதராசாவிடம் பேசினார்.  சிவஞானம் யோகநாதராசாவிடம் நெருக்கம் காட்டுவதற்காக ஈழத்தமிழில் பேசுகின்றார் என்பது என் அவதானம்.

யோகநாதராசா முகத்தில் சலனமின்றி சரி எனத் தலையாட்டினார்.   பார் கண்ணா பார், உனக்கு நான் மற்றவரைவிட குறைவாக வாடகைக்கு வீடு தந்து இருக்கின்றேன் என தனது பெருந்தன்மையை பறைசாற்றிக் கொள்வதற்காகத்தான் சிவஞானம் என்னை உடன் வரச்சொன்னார் என்பது புரிந்தது.

'பிறகு,மகன்மார ப்ரான்ஸில இருந்து நல்ல வைன் போத்தில் ஒண்ட அனுப்ப சொல்லிவிடுங்களேன்?'

யோகநாதராசா அதற்கும் சரி என்றார். சிவஞானம் விடைபெற்றுக்கொள்ள யோகநாதராசா என்னை இருந்துவிட்டு போக சொன்னார்.

'மகன்மாரோட விசாவ ரிஜெக்ட் பண்ணிட்டாங்க கார்த்தி,எப்ப கலைச்சுவிடுவாங்கன்னு பயந்துகொண்டு கள்ளமா இருக்கிறாங்க. இதுல .போன ஒரு வருசத்தில நாலு தரம் வாடகைய கூட்டிறாங்க , என்ன செய்றதுன்டு தெரியல்ல.'  யோகநாதராசாவின் கண்கள் கலங்கின. 

Tuesday, September 04, 2012

பெருந்தன்மை - சிறுகதை

அவள் பெயர் கீர்த்தனா மதிவதனி,  அவளை மதிவதனி எனக்கூப்பிட்டால் அவளுக்குப்பிடிக்காது, தலைவரின் மனைவி எங்கே , நான் எங்கே, கீர்த்தனா என்றே கூப்பிடுங்கள் என்று முதன்முறை அவளை நான் சந்திக்கும்பொழுது திருத்தமாகச் சொன்னாள். கீர்த்தனா ஈழத்தைச் சேர்ந்தவள், அவளுக்கு ஐந்து வயதாக இருக்கும்பொழுது, குடும்பத்துடன் சுவிட்சர்லாந்திற்கும், பின்னர் இத்தாலியின் மிலான் நகருக்கும் புலம் பெயர்ந்தவள்.  நான் படிக்கும் ரோம் ப்ல்கலை கழகத்தில்தான் மொழியியலில் ஆராய்ச்சிப்படிப்புப் படிக்கிறாள்.

அவளின் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்படக் காரணம், தமிழும் ஈழமும் காரணமல்ல. அவளின் சக்கர நாற்காலி சார்ந்த வாழ்வும், திராவிட களையான முகமும், எப்பொழுதும் மகிழ்ச்சியான முகமும் , ஒவ்வொரு புதன்கிழமை அவளின் துறைக்கு, இத்தாலிய மொழி கற்றுக்கொள்ள போகும்பொழுதெல்லாம் என் கவனத்தைத் திருப்பியது.

” நீங்கள் தமிழா !! “ என உடைந்த இத்தாலியத்தில்கேட்டதற்கு ,

”நான் மட்டுமல்ல, என் சக்கர நாற்காலியும் கூட தமிழ்தான்”

துறுதுறுவென கிரிக்கெட், தமிழ், அரசியல் என சகலத்தையும் மும்மொழிகளிலும் பேசினாள்.

அவளின் சக்கரநாற்காலியைத் தள்ளி, அவளுக்கு உதவவேண்டுமா என அனுதாபமாக யாராவதுக் கேட்டால் கூட, உடனே சரி எனச் சொல்லுவாள்.

“அனுதாபம் கூட அன்பின் மற்றோர் வடிவம்தான், அதை ஏன் நிராகரிப்பானேன்”,

கீர்த்தனாவைச் சுற்றி எப்பொழுதும் ஒரு பன்னாட்டு நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் இருந்து வந்திருப்பவர்கள், பாலஸ்தீனியத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவர்கள் தாம் இவளின் நெருங்கிய நண்பர்கள்.

”பாலஸ்தீனியர்களும், ஆப்பிரிக்கர்களும், நானும் நிறம், கலாச்சாரம் வேறாகி இருந்தாலும், ஒடுக்கப்பட்டதில் நாங்கள் எல்லாம் ஒன்றுதான்”

“எப்படி உனக்கு மட்டும் இவ்வளவு நண்பர்கள்?”

“எல்லோரும் ஒவ்வொருவரை சார்ந்துதான் இருக்கின்றோம், ஒவ்வொருத்தருக்கும் ஒரு தேவை, சிலருக்கு படிப்பில் உதவி தேவை, சிலருக்கு அவர்களின் மனத்தாங்கல்களை யாராவது கேட்டாகவேண்டும், சிலருக்கு வெறும் கடலை போட வேண்டும், தொடர்ந்து வந்த வாரங்களில் கீர்த்தனாவுடன் நெருங்கிய நண்பன் ஆகிப்போனேன்.

“நானும் தமிழன் தான், உனக்கு மட்டும் ஏன் தமிழின் மேல் இவ்வளவு ஆர்வம்?”

”உங்கட தமிழ்நாட்டவர்களுக்கு தமிழ் வெறும் மொழி, எங்களுக்கு தமிழ் ஓர் அடையாளம், தமிழ் என்றாலே அரசியல், தமிழ் என்றால் போராட்டம், ஐந்து வயதில் அப்பாவின் முதுகில் தொத்தியபடி, மூன்று கிலோமீட்டர்கள் ராமேசுவரம் கடலில் நடந்த குடும்பங்களில் நாங்களும் ஒன்று,  நீ பேசும் மொழியால் நீ , நிராகரிக்கப்படும்பொழுது நான் சொல்லுவதன் அர்த்தம் புரியும்”

மறுநாள் கீர்த்தனாவுடன் அவளின் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு மளிகைக்கடைக்கு சென்ற பொழுது, வழியில் எங்களது நிறத்த்துடன், சில அடிகள் தள்ளி ஒரு குடும்பம் வந்து கொண்டிருந்தது. கீர்த்தனா என்ன நினைத்தாளோ, சக்கரநாற்காலியை என்னிடம் இருந்து விடுவித்து வேகமாக கடைக்குள் சென்றுவிட்டாள். எதிரே வந்த குடும்பம்

”நீங்கள் பங்களாதேஷியா” என இத்தாலிய மொழியில் கேட்டது.   ரோம் நகரத்தில் ஏகப்பட்ட வங்காளதேசத்தினர் இருக்கின்றனர். யாரவது என்னை வங்காளதேசத்தவனா எனக்கேட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும்.

“இல்லை” என்றேன் எரிச்சலுடன்

“ஸ்ரீலங்கா ?? “

”இல்லை, இந்தியா, தமிழ்நாடு”

“ஓ, நாங்கள் சிங்களவர்கள் , நானும் என் மனைவியும் இலங்கைத் தூதரகத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றோம்”

தூரத்தில் கீர்த்தனா என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். எனக்கு அறிமுகமான அந்தக் குடும்பம், “பிழைக்க வந்த வங்காளதேசத்தவர்களினால், எப்படி நம்மைப்போன்ற மேற்தட்டு இந்திய இலங்கை மக்களின் மேலான பார்வை எப்படி பாதிக்கப்படுகின்றது” என்று சொல்லிக்கொண்டிருந்தது.

“இத்தாலியர்களுக்கு, இலங்கை, இந்தியா, வங்காளதேசம் என்ற வித்தியாசம் தெரியாது” என மேலும் தொடர்ந்தது.

அவர்களைக் கூட்டிக்கொண்டு, கீர்த்தனாவிடம் அறிமுகம் செய்துவைத்தேன்.

தனது பெயர் மதிவதனி என அறிமுகம் செய்து கொண்ட, கீர்த்தனாவின் கண்கள் ஆத்திரத்திலும் கோபத்திலும் கலங்கியிருந்தன.

“கார்த்தி, நான் எனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்கின்றேன்” எனச் சொல்லிவிட்டு, அவளுக்கு தேவையான மளிகைப்பொருட்களை வாங்க பகுதி வாரியாக செல்லத்தொடங்கினாள்.  ஐந்தாம் அடுக்கில் இருந்த ஒரு பொருளை அவள் எடுக்க முயற்சி செய்கையில், அருகில் இருந்த அந்த சிங்கள குடும்பத்தின் தலைவர் உதவி செய்ய வர,

கடுமையான முகத்துடன் மறுத்த கீர்த்தனா, தானே எம்பி அதனை எடுத்து கூடைக்குள் போட்டுக்கொண்டாள். அடுத்தப் பகுதியில் வேறு ஏதோ எடுக்க முயல, எட்டாமல் போக ஒட்டு மொத்த சிங்களக்குடும்பமும் அவளுக்கு உதவ முன்வர,

“நான் உங்களை உதவிக்கு கேட்டேனா, எதற்கு என்னை அனாவசியமாகத் தொந்தரவு செய்கிறீர்கள்” என ஒரு கத்து கத்தினாள்.

பின்பு அவளே, அங்கு வேலை செய்யும் ஒரு வங்காளதேசத்தவனை அழைத்து, தனக்கு தேவையானதை மேலடுக்கில் இருந்து எடுத்துக் கொண்டாள்.  எனக்கு முதன்முறையாக அவளின் மேல் கோபம் வந்தது.

”அவங்க சிங்களிஸ்னாலதானே , அவங்களை இன்சல்ட் பண்ணே”

“ஆமாம், ஆனால் அது இன்சல்ட் இல்லை, என்னோட 25 வருஷத்து வலி வேதனைக்கு ஒரு சின்ன வடிகால்,  தேவ தூதர்களாகவே இருந்தாலும் எங்களை வெறுத்தவர்களிடம் இருந்து நான் எதுவும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை”

அவளுடைய நியாயம் எனக்குப்புரியவில்லை, பிடிக்கவும் இல்லை. அதன்பிறகு ஒருவாரம் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை.

பின்னொருநாள், இந்தியத் தூதரகத்தில், ஒரு சான்றிதழுக்கு அரசாங்க முத்திரை பெறுவதற்காகப் போய் இருந்த பொழுது, இந்தியில் பேசிய அதிகாரியிடம், ஆங்கிலத்தில் பதில் சொல்ல,

“மதறாசி, ஹிந்தி நஹின் மாலும்... சாலா “ என அதிகாரி எரிந்து விழுந்துவிட்டு,

அகர்வால்களும், படேல்களும் ஒரு மணிநேரத்தில் வாங்கிய சான்றிதழ் முத்திரையை  பெற,

“பார்ட்டி டேஸ், யூ வெயிட், நௌ கோ” என நான் விரட்டப்பட்டேன்.

என்னமோத் தெரியவில்லை, கீர்த்தனாவிடம் பேச வேண்டும் போலத் தோன்றியது, அவளின் கைபேசி எண்ணிற்கு அழைத்தேன்.

------










Wednesday, February 24, 2010

ஈழத்து தோழமையின் கவிதைகள்

ஈழத்து தோழமைகளில் ஒருவரது கவிதைகளை அவரின் அனுமதியோடு இங்கு பதிப்பிக்கின்றேன்.

யுத்த தர்மம்

மூவேழு பேராய் வந்து உங்களை

மூக்கு மேல் விரல் வைக்க வைத்த

எம் சகாக்களிடம் வீரத்தைக்காட்டாது

அவர் சடலங்களிடம் காட்டிவிட்டீர்கள்

அவர் பூதவுடல்களை கேவலப்படுத்த

நினைத்த நீங்கள், உங்கள் சமய தர்மம்

பற்றி கொஞ்சம் சிந்தித்து இருக்கலாம்.

புத்த தர்மம் வேண்டாம்......

யுத்த தர்மம் கூட தெரியாதவர்களா நீங்கள்?






மழை

அன்றிரவு அடை மழை!

என் சின்னத்தம்பி மழையில் நனைந்தான்

பலமுறை உள்ளே அழைத்தேன்.

பிடிவாதமாய் முடியாது என்றான்.

அவனை அழைத்து சலித்த நான்

இறுதியாக கூறினேன்,

மழையில் நின்று நனையதேடா............

மழையோடு மழையை பொழியும் குண்டும்

நான் சொல்லி வாய் மூடவில்லை

அவனை அங்கு காணவில்லை

அவன் தலை மட்டும் எட்டிப்பார்த்தது

அம்மாவின் பின்னாலிருந்து.................