Wednesday, February 01, 2012

இளையராஜா

தமிழ் சுணங்கிப் படுக்கும்பொழுதெல்லாம், மீட்டெடுக்க ஒவ்வொரு தலைமுறையிலும் ஏதேனும் ஒன்று தமிழைத் தட்டி எழுப்பி ஃபீனிக்ஸாக மாற்றும். இந்தத் தலைமுறையில் யுனிகோடும், சென்ற தலைமுறையில் செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளும் அதைச் செய்ய, கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என மண்ணின் இசையுடன், தமிழை மட்டுமல்ல,ஒட்டு மொத்த தென்னகத்தின் அடையாளங்களையே மீட்டவர் இளையராஜா.

அது ஒரு சிறிய வார இறுதி விருந்துக் கொண்டாட்டம், அமெரிக்க, ஸ்விடீஷ் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. ஒருப் பாடல் ஒலிக்கிறது, திடீரென ஒருவர் ஆனந்தத்தில் கத்துகிறார், இது ஐஸ்லாந்து இசை, என் ஊர் இசை ... அப்பொழுதுதான் இத்தனை நாள் வரை ஸ்விடீஷ் ஆள் என நினைத்துக் கொண்டிருந்தவர் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. மொழிக்கு அடுத்தபடியாக இசையே தான் இன்னார் எனக் பெருமையுடன் காட்டிக்கொள்ள ஏதுவாக இருக்கிறது என்பதை வேறு ஒருவர் மூலம் நான் உணர்ந்த தருணம் அது.

மேட்டிமைக் கனவான்களின் இசையையும் ரசிக்க முடியாமல், எங்கே தன் நிலம் சார்ந்த இசையை ரசித்தோமானால் தாழ்ச்சியாகிவிடுமோ என்று அல்லாடிக்கொண்டிருந்த சாமானிய தமிழ் இசை விரும்பிகளை, இதோப்பார் எனக்கான இசை, என் மக்களில் மத்தியில் இருந்து ஒருவனால் இசைக்கப்படுகிறது என இசையின் எந்த இலக்கணங்களும் தெரியாத என்னைப்போன்ற சராசரிகளைப் பெருமை கொள்ள செய்தவர். நல்ல ஆசிரியருக்கான அளவுகோல் , எத்தனைப் பெரிய சூத்திரமாக இருந்தாலும் அதை எத்தனை எளிமையாக சொல்லுகிறார் என்பதில்தான் இருக்கின்றது. இளையராஜா, இசைக்கு அரசனோ, சக்கரவர்த்தியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். என்னைப்போன்றவர்களுக்கு இசை ஆசிரியன். மன்றம் வந்தத் தென்றலுக்கு பாடல் ஒலிக்கும்பொழுதெல்லாம் உடன் பாடும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். இசைக்கும் எனக்குமான தூரத்தைக் குறைத்தவர் இளையராஜா என்ற ஆசிரியர் தான்.

நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது அவர் சொன்னது “இளையரஜா இல்லை எனில் 80 களில் ஒரு இளையத் தலைமுறையே பைத்தியமாகி இருக்கும் அல்லது தீவிரவாதியாகி இருக்கும்”. 80 களின் தலைமுறையென்ன, இன்றும் கூட, பலரின் சோகங்களுக்கு ஆறுதல் சொல்லப்படுவது இளையராஜாவின் இசையினால் தான். கொண்டாட்ட மனோபாவத்தில் இருக்கும்பொழுது நவீன புதுமையான இசை வடிவங்கள் வேண்டுமானால் ரசிக்கப்படலாம். ஆனால் ஆறுதலாக உடைந்திருக்கும் மனதை வருடிக் கொடுக்க பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்கள் நாடுவது இளையராஜாவின் இசையைத்தான். மகிழ்ச்சியை யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம், வருத்தங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களுடன் மட்டுமே பகிரப்படும், இளையராஜாவின் இசை அத்தகையது. இரவு பத்து மணிக்கு மேல் இளையராஜாவுடன் தூங்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அம்மா பிடிக்குமா அல்லது அப்பா பிடிக்குமா என இது அல்லது அது என அரசியலைக் குழந்தைப் பருவத்தில் இருந்தேத் தொடங்கிவிடும் நாம், இளையராஜாவையும் விட்டு வைக்கவில்லை. இளையராஜாவைப் பிடித்தால் ஏ.ஆர்.ரகுமானையோ அல்லது வேறு யாரையுமேப் பிடிக்கக் கூடாது என்பதில்லை. மேலே சொன்னபடி ஏ.ஆர்.ரகுமானையும் ரசிக்க தேவையான அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்தவர் பேராசிரியர் கிராமத்து ராசா. ஒரு வேளை இசை கடவுள் என்றால், இளையராஜா கடவுளின் அவதாரம் அல்லது கடவுளின் தூதர். ஒன்றிற்கு மேற்பட்ட அவதாரங்களையோ கடவுளின் தூதர்களையோ மனிதன் வேண்டாம் என்று சொல்லுவதில்லை. இவர் ராமன் என்றால் அவர் கிருஷ்ணன், இவர் நபி என்றால் அவர் யேசு...

தமிழ் அல்லாத சூழல், இந்தியா என்றாலே பாலிவுட் என்று மட்டுமே அறிந்திருக்கும் சராசரியான ஐரோப்பியச் சூழல், எனது கைபேசி ஒலிக்கிறது. குறைந்தது 5 பேராவது, திரும்பிப்பார்க்கிறார்கள், மூன்று பேராவது இது என்ன இசை, யார் இசைத்தது, எனக் கேட்கின்றார்கள்... ஒருவராவது இதனின் எம்பி3 வடிவத்தை எனக்கு அனுப்புகின்றாய எனக் கேட்பதுண்டு.... ஸ்வீடன், போலாந்து, பின்லாந்து தற்பொழுது இத்தாலி எனத் தொடருகின்றது... அது, பல்லவி அனுப்ல்லவி என்ற கன்னடப் படத்தில் இளையராஜாவால் போடப்பட்ட சின்ன இசைத்துணுக்கு...

சிலமாதங்களுக்கு முன்னர் ஓர் இந்திப் பேசும் மாணவன்,”வடக்குத் தெற்கு இடைவெளியால் நாங்கள் இழந்தது இளையராஜாவின் இசையை” சீனிகம் , பா படப்பாடல்களைக் கேட்டப்பின்னர் சொன்னான்.

“அடேய் நண்பா, இந்தப் பாடல்களை எல்லாம் நாங்கள் 25 வருடங்களுக்கு முன்னரேக் கேட்டுவிட்டோம்” என்றபடி எனது மடிக்கணினியில் வைத்திருந்த அத்தனை இளையராஜாவின் குழந்தைகளையும் கொடுத்தேன்.

சில வகை இசை, வோட்கா என்றால், இளையராஜாவின் இசை வைன், வைனைப்போல எத்தனைக் காலம் கடக்கிறதோ, அத்தனை மகத்துவமும் இனிமையும் ராஜாவின் இசைக்கு. நீருற்றுகள் கோடையில் வறண்டதுப்போலக் காணப்படலாம், அதற்காக அவை கானல் நீராகிவிடாது. இன்று ஆடு தாண்டும் அளவில் ஓடினாலும், இளையராஜாவின் இசையாறு , இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது, இன்னமும் ஓடும். எனது உற்சாகத்தை மீட்டு எடுக்க ஒவ்வொரு படித்துறையிலும் தினமும் கொஞ்சம் நீரை எடுத்துப் பருகுகின்றேன்.

கடவுள் என்று ஒன்று இருந்தால் நான் கேட்கும் ஒரே வரம், அனுதினமும் குறையா உற்சாகம். அந்த உற்சாகத்தை தவமின்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது இளையராஜாவின் இசை. இந்த நூற்றாண்டில் சிலரைக் கடவுளாக்க எனக்கு அதிகாரம் கிடைத்தால், காந்தி, பெரியார், பிரபாகரனுடன் இளையராஜாவின் இசையையும் வைப்பேன். நிச்சயம் தமிழும் தமிழ்ச் சமுதாயமும் இளையராஜாவின் இசைக்குக் கடமைப்பட்டிருக்கின்றது. எனது ஒவ்வொரு வெற்றியிலும் இளையராஜாவின் இசையின் பங்கும் இருக்கின்றது என்ற வகையில் இந்தப் பதிவு இளையராஜாவின் இசைப் பயணத்திற்கு சமர்ப்பிக்கபடுகிறது.

Tuesday, January 31, 2012

ஒன்றிற்குப் பின் இரண்டு, பின்னர் மற்றொன்று - சிறுகதை

எல்லோருடைய இரண்டாவது காதலும், முதல் காதலைப் பற்றியப் பகிர்தலில் தான் ஆரம்பிக்கின்றது. என்னுடைய இந்த இத்தாலியக் காதல் எத்தனையாவது என்பது முக்கியமல்ல. எத்தனையாவது முறை என்றாலும், தங்களது முதல் காதலைப் பற்றியே சுவாரசியமாக ஆண்கள் பகிர்ந்து கொள்வார்கள். தனது முன்னாள் காதலியை எதிர்மறைப் பிம்பமாக மாற்றாமல் அவளுக்கு ஒரு தேவதை உருவைக் கொடுத்து, தற்பொழுதைய தோழியிடம் பகிர்வதில்தான், நட்பு காதலாக முன்னெடுப்பதை முடிவு செய்கிறது. பிடித்தமான பெண் நட்புகளிடம் முந்தையக் காதல் பகிரப்படும்பொழுது, கிடைக்கும் அனுதாபம் காதல் உருமாற்றத்திற்கு வலு சேர்க்கும்.

“நீ எத்தனை வருடங்கள் உன் அம்முவைக் காதலித்தாய்?”

“மூன்றரை வருடங்கள்?, ஆனால் இப்பொழுதும் அவளைப் பற்றி அடிக்கடி யோசிப்பேன்” நிஜத்தில் ஒன்றரை வருடம் தான்., பிரிவின் தொடர் தாக்கங்களின் வலிகளையும் கணக்கில்
கொண்டதால் மேலும் இரண்டு ஆண்டுகள்,

“உன்னைப் போன்ற நல்லவனைப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வந்தது?” அடடா, இதே வசனத்தை இடையில் ஸ்வீடனில் இருந்தபொழுது சிலத் தெலுங்குப் பெண்களிடமும்
கேட்டிருக்கின்றேனே !!! அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் என்ற வகையில் சுந்தரத் தெலுங்குத் தோழிகளும் வலி தராமல் சென்றுவிட்டனர்.

“நான் அப்படி ஒன்றும் நல்லவன் இல்லை, குடிப்பேன், பெண்களை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பார்ப்பேன்,, வாய்ப்பு இருந்தால் வலை விரிப்பேன்”

“எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை, ஏனைய இந்தியர்களைக் காட்டிலும் நீ கண்ணியமாகவே நடந்து கொள்கின்றாய்,”

தன்னிடம் இல்லாத எதிர் விழுமியங்களை, இருப்பதாகக் காட்டிக்கொண்டு, தாழ்த்திக் கொள்ளும் நட்பரசியல் இவளிடமும் வேலை செய்தது. எதிர் இருக்கையில் இருந்து மாறி,
என்னருகே வந்து உட்கார்ந்தாள்.

“பொதுவாக தென்னிந்தியாவில் இருந்து வருபவர்கள், குறிப்பாக தமிழ் பேசுபவர்கள் பெண்களை மதிப்பவர்கள், அனுமதி கிடைக்கும் வரை அமைதியாகவே இருப்பார்கள்”

”அம்முவைப் பற்றி மேலும் கொஞ்சம் சொல்லு, உன்னை விலக்கி வைத்தவளைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும்” எனக் கதை கேட்க ஆரம்பித்தாள்.

இதைத் தானடா எதிர்பார்த்தாய் என, அலுவலகத்தில் அம்முவைச் சந்தித்தது, அவள் என்னைப் பொறுக்கி என்றது, தொடர் மன்னிப்பு, மாயாஜால் திரைப்படங்கள், பெற்றோர்களிடம் மாட்டிக்கொண்டது, சூழ்நிலைக் கைதியாதல், அவளின் திருமணம் என முழுநீள் விக்ரமன் திரைப்படம் போல சிலப்பல லாலாலா க்களுடன் கதையை முடித்தேன். பின்னணியில் இளையரஜாவின் இசை சூழலுக்கு மேலும் இனிமைச் சேர்த்தது.

“ஒன்று தெரியுமா, அவளின் மேல் என் சுண்டு விரல் கூடப் பட்டது கிடையாது?”

”என்ன?” வியப்பாக கண்களை அகட்டிக் கேட்டாள்.

”இரண்டு காரணங்கள், உடல் சாரா காதல் தான் உயர்ந்தது என்று அன்றிருந்த ஒரு தவறான அபிப்ராயம், இரண்டாவது வாய்ப்புக் கிடைக்காமை”

“இங்கே எல்லாம் காதல், காமத்தில் ஆரம்பித்து, கலவியில் கண்டிப்பாக பரிசோதனை செய்யப்படும், காமமும் கலவியும் காதலில் மிகமிக முக்கியமானது” என்றபடி தோளில் சாய்ந்தாள்.

“ஆமாம் கார்த்தி, இன்னும் நீ பிரம்மசரியத்தைத் தான் கடைப்பிடிக்கிறாயா ...”

“இல்லை இல்லை, ஸ்வீடனில் இருந்த பொழுது இடையில் சில பரிட்சார்த்த முயற்சிகள் நடந்திருக்கின்றன”

மனம் விட்டு சிரித்தபடி என்னை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

”கொக்கு ஒன்னு கொக்கிப்போடுது ஹோய்.... ” என கங்கை அமரன் பாட, காதல் முழுமையடைவது காமத்திலும் கலவியிலுந்தான் என்பதை உணர்ந்தபடி அன்றிரவு நீடித்த இரவாக மாறிப்போனது.

அடுத்த இரண்டு வருடங்கள் இணைந்து வாழ்வது, பின்னர் தோதுப்பட்டால் திருமணம் செய்து கொள்ளாலாம் எனவும் முடிவு செய்தோம்.

அந்த வருட, புதுவருடக் கொண்டாட்டத்திற்காக, அருகில் இருக்கும் மிகப்பிரபலமான உணவரங்கத்திற்கு சென்றபொழுது, எனது இத்தாலியக் காதலி திடிரென வருத்தமானாள்.
தொடர் வற்புறுத்தல்களுக்குப்பின்னர் தூரத்தில் இருக்கும் மேசையைக் காட்டினாள். அங்கே மொட்டைத்தலையுடன் ஒரு இத்தாலிய இளைஞன், அழகான இத்தாலியப் பெண்ணுடன் அமர்ந்திருந்தான். அவன் எனதுக் காதலியின் முன்னாள் காதலன் எனப் பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்,

“கடந்த காலங்களைத் திரைப்படங்கள் போலப் பார்க்க பழகிக் கொள்ளவேண்டும், நாம் வேண்டுமானால் வேறு இடத்திற்குப் போகலாமா”

“வேண்டாம் கார்த்தி, நான் அன்று அவனைப் பற்றி நினைத்தது எல்லாம் உண்மை, அவன் உண்மையிலேயே பொம்பளைப் பொறுக்கிதான், அப்பொழுது எல்லாம் என்னை எவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கின்றான் தெரியுமா, எதற்கு எடுத்தாலும் சந்தேகம், படுப்பதற்கு மட்டும் தேவையான ஒரு பொருளாக என்னைப் பயன்படுத்திக் கொண்டான்” என அவளின் முன்னாள் காதலனை, சிலப்பல கெட்ட வார்த்தைகளையும் சேர்த்துத் திட்டிக்கொண்டிருந்தாள். சிலத் திட்டுகளில் உண்மையிருந்த போதிலும், பெரும்பான்மையான திட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவையாகவேத் தோன்றின. அவளைச் சமாதனப்படுத்தி இரவு உணவை முடித்தோம்.

முன்னாள் காதலன் இவள் இருப்பதைக் கவனித்துவிட்டு, தன்னுடையப் பெண்ணுடன் எங்களின் மேசைக்கு வந்து எங்கள் இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னான். அவன் கண்களில் என்னுடைய காதலி இன்னமும் தேவதையாகவே இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது., ஆண்கள் தங்களுடைய அனைத்துக் காதலிகளையும் எல்லாக் காலக் காட்டத்திலும் நேசித்துக் கொண்டிருக்கிறார்கள்., முன்னாள் காதலி என்ற சொற்பதம் என்பதே ஆண்களுக்கு கிடையாது, ஆனால் பெண்களுக்கு தங்களது முன்னாள் காதலன் எப்பொழுதும் வில்லன் தான், என்பதை எனது பேஸ்புக் நிலைத்தகவலாக தமிழில் வைக்கவேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.

Sunday, January 29, 2012

ஹலால் - சிறுகதை

பங்கேற்பாளனாய் இருப்பதைவிட பார்வையளானாய் இருப்பதே மேல், என்பதை நுட்பமான உணர்வுகள் சம்பந்தப்பட்ட விவாதங்களில் நான் கடைப்பிடிக்கும் அணுகுமுறை.

°மீனையும் தானே கொன்று சாப்பிடுகிறீர்கள், அது மட்டும் எப்படி எந்த சடங்கும் இன்றி ஹலால் ஆகின்றது” தன்னுடையை சீண்டலை, அறிவார்ந்த கேள்விமாதிரி வாசுதேவ் ஷாகித்திடம் கேட்டான்.

ஷாகித் பதில் சொல்லவில்லை. வாசுதேவ் என்னைப் பார்த்து ”பார்த்தியா, மடக்கிட்டேன்” என்ற வகையில் கண் சிமிட்டினான். வர வர வாசுதேவின் மேல் எரிச்சல் கூடிக்கொண்டே வந்தது. ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, குறைந்த பட்சம் கிரிக்கெட் பற்றி பேசுவதற்காகவது, அவனுடன் இருக்க வேண்டி இருக்கின்றது.

பாகிஸ்தானிலிருந்து ஷாகித் வந்தபின்னர், தமிழ்நாட்டு வழக்கமான, இயல்பான இஸ்லாமிய இணக்க வளர்ப்பு சூழலினால் அவனுடன் நட்பாக முடிந்தது. ஆனால் வடநாட்டு வாசுதேவிற்கு சீண்டலையும் கேலியையும் மட்டுமே கொடுக்கத் தெரிந்தது.

வழமையான புன்னகையைக் கொடுத்துவிட்டு, எங்களது ஆராய்ச்சிக்கூடத்தின் முதல் தளத்திற்கு ஷாகித்தின் மதிய தொழுகைக்கு சென்றுவிட்டான்.

ஷாகித் இந்த மீன் ஹாலால் பற்றிய விளக்கத்தை ஏற்கனவே எனக்கு தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கின்றான். ”செதில் வைத்த எல்லா மீன்களும் ஹலால், சாப்பிடலாம். வெப்பரத்தப் பிராணிகளுக்கும் குளிரரத்தப் பிராணிகளுக்கும் ஏக வித்தியாசமுண்டு. மீன்களின் ரத்த ஓட்டம், அதன் ரத்தவகையும் நிலவாழ் , பறவைகளைக் காட்டிலும் வேறானது. ஆகையினால், தேர்ந்த முறையில் மீன்களை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை” என அவன் சொன்ன அந்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருந்தது.


“புலாலில் ஹலால் என்பது சுத்த வியாபரத்தந்திரம், அவங்க ஆட்கள் கடைகளில் மட்டுமே வியாபரம் நடக்க வேண்டும் என்று போடப்பட்ட சூட்சுமம்” வாசுதேவனின், சீண்டல் பொருளாதாரக் கோணம் எடுத்தது.

ஒருவேளை பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும் கூட, அதுவும் சரிதானே... நான் கூட 25 கிலோமீட்டர்கள் பயணம் செய்து, ரோம் நகரத்திற்கு வெளியே இருக்கும் ஈழத்தமிழர் கடையில் தான் போய் அரிசி, பருப்பு இன்ன பிற வகையறாக்கள் வாங்குவேன்.

என்னைப் பொறுத்தவரை, என் சாப்பாட்டுத் தட்டில் கை வைக்காதவரை எந்தக் கோட்பாடுகளைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. ஆடோ, மாடோ, பன்றியோ... ஏன் ஒணானாக இருந்தாலும் என் வாய்க்கு ருசியாகவும் வயிற்றுக்கு ஜீரணம் ஆகும் அனைத்து உணவு வகைகளும் ஹலாலே.... அவரவருக்கு சரி என்பதை அவரவர் பின்பற்றுகிறார்கள். நல்லதே ஆனாலும் திணிக்கப்படும்பொழுதுதான் பிரச்சினை.

ஷாகித்திடம் ஒரு நல்ல குணம் உண்டு, அன்புடன் வற்புறுத்தினால்,

“அன்பிற்காக சில விதிவிலக்குகளை பின்பற்றலாம்” நான் கொண்டு வந்திருக்கும் ஹலால் அல்லாத கோழிக்கறியை சிறிதளவேனும் ருசி பார்ப்பான்.

“எப்படித்தான் பிணத்தை எல்லாம் சாப்பிடுகிறீர்களோ” ஒரு நாள் நான் கோழிக்கறி வறுவல் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது வாசுதேவ் கேட்டபிறகு அவனுக்கு மட்டும் தெரியும் படி, சைவச் சாப்பாட்டுப் பிரியர்களைக் கேலி செய்யும் சித்திரங்களையும் தகவல்களையும் பேஸ்புக்கில் பகிர ஆரம்பித்தேன். தாவரங்களுக்கும் உயிருண்டு என்பதைக் கண்டுபிடித்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகப்போகின்றது என்பதை பல சைவப்பிரியர்கள் மறந்துவிடுகிறார்கள்.

நடுநிலை என்பதைவிட, சமனிலைப் படுத்தும் காரணியாக நான் இருந்ததால், ஷாகித்தை , பலசமயங்களில் வாசுதேவ்வின் உள்குத்துகளில் இருந்து காப்பாற்ற முடிந்தது.

சில மாதங்களுக்குப் பின்னர், ஷாகித்திற்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதால், அவன் வீட்டில் விருந்துக் கொடுக்க முடிவு செய்தான். வாசுதேவ் வரவில்லை என்று சொல்லிவிட்டான். இருந்த போதிலும் நான் ஷாகித்திற்கு அறிமுகப்படுத்தி இருந்த வேறு துறை மாணவர்கள் ரங்கநாதனும் ஸ்ரீராமும் வருவதாக சொன்னார்கள்.

விருந்து தினத்தன்று, அவனுக்கு உதவுவதற்காக காலையிலேயே சென்ற பொழுது, சமையலறையில் புதுப்பாத்திரங்களாக அடுக்கி வைத்திருந்தான். இரண்டு குழம்பு வைக்கும் சட்டிகள், அரிசி வைக்கப் புதுப்பாத்திரம், வாணலி, கரண்டிகள் என எல்லாம் முந்தைய நாள் வாங்கியவை.

“எதற்கு இந்தப் புதுப்பாத்திரங்கள், கல்யாணப்பையன் காசு சேர்க்க வேண்டாமா”

“இல்லை கார்த்தி, ஸ்ரீராமும் ரங்காவும் சைவர்கள், மாமிசம் சமைத்த எனது பாத்திரங்களில் சாப்பாடு செய்து கொடுத்தால், ஒரு வேளை அவர்களுக்கு அசூயையாக இருக்கக் கூடும், நான் கொடுக்கும் விருந்து அவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்”

ஷாகித்தின் மேல் இருக்கும் மதிப்பு உயர்ந்தது. அடுத்த முறை, ஹாலால் கோழி வாங்கி, ஷாகித்திற்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என மனதினுள் முடிவு செய்தேன்.

Friday, January 27, 2012

க்ரிஷ் - சிறுகதை

”கார்த்திபா ஒரு விசயம் கேட்கனும், கோச்சுக்க மாட்டதானே” என்ற அம்முவிடம்

“சொல்லு குட்டிமா~ என்றதும் எனது மடியில் அமர்ந்து என்னுடன் குழந்தைப் பாடல்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்த அஞ்சலிப்பாப்பா தலைத் திருப்பி என்னைப் பார்த்தாள்.

”உன்னை இல்லைடாக் குட்டி, நான் கூப்பிட்டது சீனியர் குட்டிமாவை.. ” மீண்டும் அஞ்சலிப்பாப்பாவிற்கு ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா... என்றது வெள்ளைப்பசு- உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.” பாட்டின் மேல் கவனம் சென்றது. எங்கள் வீட்டில் மொத்தம் மூன்று நபர்கள், ஆனால் கூப்பிடப் பயன் படுவது இரண்டே பெயர்கள். குட்டிமா இருவருக்கும் நான் கார்த்திபா. ஜூனியர் குட்டிமாவிற்கு ஜூலை வந்தால் 3 வயது. குழந்தைகளின் இரண்டு வயது முதல் நான்கு வயது வரைக்கான காலம் அற்புதமானது. நீங்கள் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதை விட, அவர்கள் உங்களுக்கு கற்றுக்கொடுப்பது ஏராளம்.

“அம்மா, அப்பா இரண்டு பேரும் கோவிலுக்குப் போக ஆசைப்படுறாங்க,”

“ஹரே கிருஷ்னா க்ருப்போட கோயில் ஃப்ரீத்ஹெம்ஸ்காத்தான் பக்கம் தானே, அங்கேப் போயிட்டு வரச்சொல்லு”

“அவங்க... குட்டிப்பாவையும் கூட்டிட்டுப் போக ஆசைப்படுறாங்க, இதுவரைக்கும் பாப்பாவை கோவிலுக்கோ சர்ச்சுகோ கூட்டிட்டுப் போகலேன்னு ரொம்ப வருத்தப்படுறாங்க ..”

வாசுதேவனும் ரங்கநாயகியும் நீண்டகால கோபத்தை மறந்து , ஒரு மாதம் எங்களுடன் தங்க ஸ்வீடன் வந்து இருக்கிறார்கள். மருமகனை மாப்பிள்ளை என வாய்நிறையக் கூப்பிடாமல் பெயர் சொல்லி அழைப்பவர்களை நானும் பேர் சொல்லித்தான் அழைப்பேன்.

“நாமதான் பாப்பாவுக்கு சாமி, பூதம் கண்டதை எல்லாம் கத்துக்கொடுக்ககூடாதுன்னு பேசி இருக்கோமே,,, பின்ன என்ன திடீர்னு” என்றதும் அம்முவின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. தனது கோரிக்கையை விட, தன் அம்மா அப்பாவின் விருப்பம் நிரகாரிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்கான ஆயுதம் அது. கிருஷ்ணன் தேவையில்லை, ஆனால் அம்மு முக்கியம் அல்லவா... குழந்தைக்கு சாமி கண்ணைக்குத்தும் ரீதியிலான விளக்கங்கள் எல்லாம் கொடுத்து பயமுறுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன், கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அஞ்சலிப்பாப்பா அச்சில் அம்முவைப்போல இருந்ததால், வாசுதேவன், ரங்கநாயகி இருவரும், மறுநாள் கோவிலில் குழந்தைக்கு நடைப்பழக்கியபடி மகளின் குழந்தைபிராயத்தை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒரே மகளை , அவர்களின் விருப்பமின்றி கவர்ந்தெடுத்ததின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அஞ்சலியின் வடிவில் கரைந்து கொண்டிருந்தது.

பூசை நடக்கும்பொழுது, அஞ்சலிப்பாப்பாவிற்கு அது எல்லாம் புதியதாகத் தோன்றியது,. கொஞ்சம் மிரண்டுபோய் என் பக்கத்தில் வந்துவிட்டாள்,. இருந்த போதிலும் அவளுக்கு அங்கிருந்த கிருஷ்ணர் படங்களின் மேலும் பொம்மைகளின் மேலும் ஒர் ஈர்ப்பு வந்துவிட்டது.

“கார்த்திபா, அது என்ன?” என மழலையாக கிருஷ்ணன் சிலையை கைக் காட்டிக் கேட்டாள்.

“நல்லா .. மாட்டினியா ... பதில் சொல்லு” எனத் தோளில் இடித்தாள் அம்மு.

“அது, கிருஷ்ணன், அர்ஜுனோட நண்பன்... காம்பிஸ்” , ஸ்வீடனிலேயே இருக்கப்போகின்றோம் என முடிவாகிவிட்டதால், தமிழும் ஸ்வீடிஷும் கலந்தே பேசி அஞ்சலிப்பாப்பவைப் பழக்கப் படுத்தி வருகின்றோம். நாங்கள் இருவரும் வேலைக்குப்போவதால் பகல் நேர முழுவதும் குழந்தைகள் காப்பகத்தில் இருப்பதனால், தமிழுக்கு இணையாக ஸ்வீடிஷையும் அஞ்சலிப்பாப்பா வேகமாக கற்றுவருகிறாள். இந்த மூன்று வாரங்களாக அம்முவின் பெற்றோர் இருப்பதால் குழந்தைகள் காப்பகத்திற்கு மட்டமடித்துவிட்டு தமிழையும் பாசத்தையும் கற்று வருகின்றாள்.

“அஜூன் ஆரு”

“வீட்டுக்குப்போனதும் யூடூப்ல குட்டிம்மாவுக்கு கட்டுறேன்” எனச்சொல்லி வீட்டுக்கு வந்ததும் யுடுயுபில் மகாபாரதத் தொலைக்காட்சித் தொடரின் தமிழ் மொழிமாற்று வடிவத்தைத் தேடி எடுத்து,

“இதுதான் அஜூன்” என்றேன் குழந்தையின் மொழியில்.

“அஜுனும் க்ரிஷும் காம்பிஸ்” அவளுக்கு எளிமையாக்க கிருஷ்ணனை க்ரிஷ் ஆக்கி, “அஜூனுக்கு எப்போ பிரச்சினை வந்தாலும் க்ரிஷ் உதவி பண்ணுவார்”

“பிச்சினா” அடடா, குழந்தைகளுக்கு ஏதுப் பிரச்சினை, பிரச்சினை என்பதை எப்படி புரியவைப்பது. குழம்ப,

“இந்தே பிச்சினா ... யெல்பர், க்ரிஷ் யெல்ப்பர் அஜுன் ஆல்தீத், பெர்சொன் வெம் யெல்பர் எர் க்ரிஷ் “ க்ரிஷ் எப்பொழுதும் அஜுனுக்கு உதவுவார், யார் உதவி செய்கிறார்களோ அவரின் பெயர் க்ரிஷ் என்ற பொருள்படும் விதத்தில் அம்மு ஸ்விடீஷில் தொடர்ந்தாள்.

வாசுதேவனும் ரங்கநாயகியும் ஊருக்குப்போன பின்னர், குழந்தையை அழைக்க நானும் அம்முவும் காப்பகத்திற்கு சென்றபொழுது, கருப்பு, வெள்ளை குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த எங்களின் தேவதையுடன் வேறு ஒரு குட்டி அரபுக்குழந்தையும் ஓடிவந்தது.

“குட்டிமா, இது யாரு... “ என அரபுக்குழந்தையையும் அரவணைத்தபடி அஞ்சலிப்பாப்பாவிடம் கேட்டேன்.

“க்ரிஷ்” என்றாள் குழந்தை.

----------

Thursday, January 26, 2012

கிரிக்கெட் வினாடி வினா - ஆறுக்கு ஆறு

நெருக்கப்பட்ட பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையில் சாமானிய ரசிகனால் உள்ளூர் போட்டிகளைத் தொடர்ந்து கவனிக்க முடிவதில்லை. ஐபிஎல் போட்டிகள் உள்ளூர் போட்டிகள் என்ற போதிலும், அதில் இருக்கும் பன்னாட்டு வீரர்களினால் இருபதுக்கு இருபதை சர்வதேசத் தரப் போட்டியாகவே நோக்கப்படுகிறது. கட்டமைப்பான உள்ளூர் போட்டிகளினாலும் தொடர்ந்த ஆஸ்திரேலிய ரசிகர்களின் ஆதரவாலும், ஆஸ்திரேலியா 30 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நீட்டிப்பான வெற்றிகளைத் தொடர்ந்து பெற முடிகிறது. இந்தியாவிலும் உள்ளூர் முதல் தரப்போட்டிகளுக்கு ஆதரவு அதிகமானால் மேலும் இந்தியக் கிரிக்கெட்டின் தரம் உயரும். இந்த வினாடி வினாவில், நம் கிரிக்கெட் ரசிகர்களால் எந்த அளவிற்கு முதல் தரப்போட்டிகள் நோக்கப்படுகிறது என்பதை “டெஸ்ட்” செய்யும் விதமாக இந்த ஆறு கேள்விகளும் அமையப்போகின்றது. முடிந்தவரை எளிமையாகவே கேள்விகளை அமைத்து இருக்கின்றேன். வினாக்கள் முதல் தரப்போட்டிகளில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. ஒரு வேளை கேள்விகளில் தகவல் பிழை இருந்தாலும் சுட்டிக்காட்டவும்.

1. கீழ்கண்ட படத்தில் பிரபல ஆட்டக்காரர் கவாஸ்கர் இடதுகையால் மட்டையடிப்பது போல இருக்கின்றது, இது கண்ணாடி வழியாக இடவல மாற்றப் புகைப்படம் அல்ல, நிஜமாகவே ஒரு ஆட்டத்தில் கவாஸ்கர் இடதுகை ஆட்டக்காரராகவும் ஆடினார். அந்த இந்திய முதல் தர ஆட்டம் என்ன? எந்த சூழலில் அவர் ஆடினார் என்பதையும் தெரிந்தால் சொல்லுங்களேன்.



2. முதல் தரப்போட்டிகளில் பிரையன் லாரா அடித்த ஆட்டமிழக்காத 501 ஓட்டங்களே இன்று வரை அதிகபட்சமாக இருக்கின்றது. கேள்வி, பிரையன் லாராவிற்கு முன்னர் அந்த சாதனையை வைத்திருந்தவர் யார்?

3. இந்திய முதல்தரப்போட்டிகளில், முந்தைய ரஞ்சிக்கோப்பையை வென்ற அணியுடன், இதர இந்திய வீரர்களின் அணி (Rest of India)ஆடும் போட்டிக்கான கோப்பையின் பெயர் என்ன?

4. ஐபில் இருபதுக்கு இருபது ஆட்டமாக நகரங்களுக்கு இடையிலான போட்டிகளாக நடத்தப்படுகிறது. ஆனால் இந்திய அளவில் வேறு ஒரு இருபதுக்கு இருபது போட்டித்தொடரும் முதல்தரப் போட்டிகளாக நடத்தப்படுகின்றது. அதாவது ரஞ்சிப் போட்டிகளில் ஆடும் அணிகள் இந்த இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்கும். இந்தப் போட்டித் தொடரின் பெயர் என்ன?

5. கீழ்க்காணும் படத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரர் யார்? தொடர்ந்து இந்திய முதல் தரப்போட்டிகளைக் கவனித்து வருபவர் என்றால் இவரை சுலபத்தில் கண்டுபிடித்துவிடலாம்.



6. கடைசிக் கேள்வி, லீ ஜெர்மோன், தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தை கேப்டனாக அறிமுகமாகி ஆடினார். கேண்டர்பர்ரி அணிக்காக இவர் ஆடிய முதல் தர ஆட்டமொன்று கிரிக்கெட் பதிவுகளில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. அந்த ஆட்டத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு என்ன, அதில் இவரின் பங்கு என்ன?

விடைகள்

1. 81/82 ரஞ்சிப்போட்டிகளின் அரை இறுதி ஆட்டத்தில், ரகுராம் பட் என்ற கர்னாடகா அணியின் சுழற்பந்து வீச்சாளரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பம்பாய் அணியினர் சுருண்டனர். ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் குவித்திருந்ததின் அடிப்படையில் கர்னாடகா இறுதிக்குத் தகுதிப்பெற்றிருந்தது. ஒட்டு மொத்தத் தோல்வியைத் தவிர்க்க, ரகுராம் பட் பந்து வீசும்பொழுது மட்டும் இடதுகை ஆட்டக்காரராக ஆடி, ஆட்டத்தை டிரா செய்தார். முதல் தரப்போட்டிகளில் நன்றாக விளையாடியும் சொற்ப பன்னாட்டு ஆட்டங்களே ஆடி ரகுராம் பட் ஓய்வுப் பெற்றார்.

ஆட்டவிபரம் இங்கே

2. ஹனீப் முகமது கராச்சி அணிக்காக அடித்த 499 ஓட்டங்கள். சுவாரசியமான விசயம் என்னவெனில் இவர் 500 வது ஓட்டத்தை எடுக்கும்பொழுது ரன் அவுட் என்ற முறையில் ஆட்டமிழந்தார். அதைப்பற்றியக் கட்டுரையை பின்வரும் சுட்டியில் படிக்கலாம்.
http://www.espncricinfo.com/magazine/content/story/385930.html

3. இரானி கோப்பை

4. எதிர்பார்த்த விடை சையத் முஷ்தாக் அலி கோப்பை என்ற போதிலும் Interstate 20 என்ற விடையும் சரியானதே

5. ராபின் பிஸ்ட் , ராஜஸ்தான் அணியின் ஆட்டக்காரர். இந்த சீசனில் அதிக ஓட்டங்களை ரஞ்சிப்போட்டிகளில் எடுத்தவர் என்ற பெருமை உடையவர்.

இவரின் பக்கம் http://www.espncricinfo.com/ci/content/player/262464.html

6. 59 ஓவர்களில் 291 வெற்றி இலக்கு என்று கடைசிநாளில் களமிறங்கிய கேண்டர்பர்ரி அணி, 108 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. இருந்த போதிலும் லீ ஜெர்மோனும் ரோஜர் போர்டும் ஓரளவிற்கு சமாளித்து டிராவை நோக்கி ஆட்டத்தை நகர்த்திக் கொண்டிருந்தனர். எதிராக ஆடிய வெலிங்க்டனின் அணியின் கேப்டனும் பயிற்சியாளரும் ஒரு திட்டத்தை வகுத்தனர். இரண்டு ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் எளிதாக பந்துகளை ஆட்டக்காரர்களுக்கு வீசுவதன் மூலம் , இரண்டு மூன்று பந்து ஆடி வாங்கினாலும், கிட்டத்தட்ட 95 ஓட்டங்களை கண்டிப்பாக எடுக்க முடியாது, மீதமிருக்கிற இரண்டு விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்பு இருக்கின்றது என பெர்ட் வான்ஸ் என்பவரை பந்து வீசச்செய்தனர். வேண்டுமென்றே நோபால்களை வீசச் செய்து மட்டையாளர்களை குஷிப்படுத்தினர். கொடுத்தக் காசுக்கு மேல் கூவ ஆரம்பித்த வான்ஸ் வாரி வழங்கி 77 ஓட்டங்களைக் கொடுத்தார். கடைசி ஓவரில் 18 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 17 ஓட்டங்களை எடுத்த லீ ஜெர்மோன் ஸ்கோரை சமன் செய்தார். அதனைப் பற்றிய விவரணையான கட்டுரை இங்கே

http://www.espncricinfo.com/magazine/content/story/451716.html