Showing posts with label இத்தாலி. Show all posts
Showing posts with label இத்தாலி. Show all posts

Tuesday, June 09, 2015

இத்தாலியில் தகவல் பாதுகாப்பு மற்றும் அகவுரிமை துறையில் முதுகலை மேற்படிப்பு - (கட்டணக்கல்வி)



வினையூக்கியிடமிருந்து கல்வி சார்ந்த தகவல் வந்தால் அது இலவசக்கல்வியாக இருக்கும் என்று பதிவை படிக்க வருபவர்களுக்கு முன்பே சொல்லிவிடுகிறேன், இது இலவசக்கல்வி பற்றிய பதிவல்ல. இந்த தகவல் பதிவு கட்டணம் செலுத்தி இத்தாலியில் படிக்கும் மேற்படிப்புப் பற்றியது. 
நான் ஆராய்ச்சி மாணவனாக இருக்கும் ரோம் பல்கலைகழகத்தின் தகவல் அறிவியல் துறை , ஆங்கில பயிற்றுமொழியில் தகவல் பாதுகாப்பு பாடத்தில் ஓராண்டு மேற்படிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 
ரோம் நகரத்தில் மூன்று அரசு பல்கலை கழகங்கள் இருக்கின்றன. அவை 1, 2, 3 என்று அழைக்கப்படும். எனது பல்கலைகழகம் யுனிரோமா - 2. தோர் வெர்கட்டா என்ற ரோம் நகரத்து பகுதியில் இருப்பதால் இடப்பெயருடன் சேர்த்து அழைக்கப்படும். 
ஓராண்டு மாஸ்டர்ஸ் படிப்பு பின்வரும் கூறுகளைக் கொண்டிருக்கும் 
• Teaching – 400 hours
• Seminars / Workshops – 300 hours
• Internship – 400 hours
• Thesis – 400 hours
• Medium of Instruction – English (Mandatory Italian Language course also will be taught)
• Internship – June – August.
• Guidance - Further Research, PhD and Job opportunities
• Selection Process – Ranking and if it is needed interviews.
கல்விக்கட்டணம் - 7 லட்சம் இந்திய ரூபாய்கள்
உறைவிட , உணவு செலவுகள் - உங்கள் வாழ்க்கை முறையை பொறுத்து 4 யில் இருந்து ஐந்து லட்சங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். 

1. பணம் கட்டி படிக்கவேண்டுமென்றால் நான் ஐக்கிய ராச்சியம் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு போவேனே? 
ஐக்கிய ராச்சியத்தில் கல்விக்கட்டணம் இதைவிட அதிகம். படிப்பு முடிந்தவுடன் முன்னைப்போல விசா நீட்டிப்புப் பெற்று வேலை தேட அனுமதிப்பதில்லை. 

2. இத்தாலியில் ஆங்கிலப்புழக்கம் குறைவே, அன்றாட வாழ்வில் பிரச்சினை வருமே?
இதை நேரெண்ணத்துடன் பார்த்தால் புது மொழி , புதிய பண்பாட்டை கற்றுக்கொள்ளலாம். நான் இங்கு கடந்த 4 ஆண்டுகளாக வசிக்கிறேன். 

3. ஐக்கியராச்சியம் நீங்கலான ஐரோப்பாவில் பல நாடுகள் இலவசக் கல்வியைத் தருகின்றனவே, அங்கு போகாமல் நான் ஏன் இத்தாலிக்கு பணம் கட்டி படிக்க வரவேண்டும் ?
நான் மாஸ்டர்ஸ் படித்த சுவீடன் உள்ளிட்ட பல நாடுகள் ஐரோப்பியர் அல்லாதவர்களுக்கு இலவசக்கல்வியை நீக்கிவிட்டது. மேற்படிப்பு இலவசமாக இருக்கும் ஒரு சில நாடுகளிலும் கடும் போட்டி நிலவுகிறது. 

4. நீங்கள் சொல்லும் படிப்பில் சேர்வதால் என்ன லாபம்?
தகவல் பாதுகாப்பு அகவுரிமை துறை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் தற்காலத்தில் முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது. முழுநேர நிறுவன வேலைக்கோ , மேற்கொண்டு ஆராய்ச்சி படிப்பிற்கோ போக நல்லதொரு படிப்பு. 

5. நாங்கள் இப்படிப்பில் சேர்வதால் உங்களுக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் ?
வழக்கம்போல வெறும்புகழ் , கல்விக்கான வினையூக்கி , செல்வகுமார் என்ற பட்டமும் பல்கலை கழக பேராசிரியர்களின் பாராட்டும். நீங்கள் நன்றாக படித்து நல்ல நிலையில் தேர்ச்சி பெற்றால் எனது இத்தாலிய நிறுவனத்தில் வேலைக்கு எடுத்துக்கொளவேன். 

6. யார் யாருக்கானது ? இளங்கலையில் வெவ்வேறு காரணங்களினால் சுமாரான மதிப்பெண் எடுத்தாலும் மேற்படிப்புப்படித்து தனது கல்விநிலையை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்று விரும்பும் பொருளாதாரத்தில் உயர்நடுத்தரவர்க்கத்தில் இருக்கும் மாணவர்கள். வேலை பார்த்து போரடித்துவிட்டது , ஓராண்டு மேற்படிப்புப் படித்து வேலை வாய்ப்பு நிலையில் தனது நிலையை உயர்த்திக் கொள்ள விரும்புபவர்கள். 

7. நான் இலங்கையை சேர்ந்தவன். உங்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் பிரச்சினையிருக்கிறதே? நான் இந்த மேற்படிப்புப் பற்றி விபரங்கள் அறிய உங்களைத் தொடர்பு கொண்டால் எனக்கு பதிலளிப்பீர்களா ?
அட, என்னங்க இது. நீரடித்து நீர் விலகுமா. சின்ன பிள்ளைகள் சண்டைகளை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டிருந்தால் நான் எப்படி பெரிய மனுஷன் ஆவது. கல்வியை விரும்பும் ஈழத்து சொந்தங்களுக்கு ஒரு படி அதிகமாகவே உதவுவேன். 

8. கல்லூரி சார்பாக தொடர்பு கொள்ளலாமா ?நிச்சயமாக. கல்லூரிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கும் எங்களது பல்கலைகழகம் தயாராக இருக்கிறது. 

9. நான் எஜுகேசனல் கன்சல்டன்சி நடத்துகிறேன் , நீங்கள் விரும்பினால் நாம் ஒப்பந்தம் செய்து கொண்டு இதை தனியே நடத்துவோமா ? உங்களுக்கு நல்ல கமிஷன் தருகிறேன்.
மன்னிக்கவும். இது எனது கொள்கைகளுக்கு ஒப்பானது அல்ல. பணம் நோக்கமாக இருந்திருந்தால் சுவீடனில் இருக்கும் பொழுதே செய்து பெரும் பணக்காரன் ஆகி இருப்பேன். இந்தியாவில் எடுத்து வந்திருக்கும் மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு ஏழை மாணவனாக இருந்தாலும் , இடைத்தரகராவதை விட வினையூக்கியாக இருப்பதையே விரும்புகின்றேன். 

10. எப்படி உங்களை தொடர்பு கொள்வது ?

selvakumar.ramachandran@uniroma2.it 


கல்வி சார்ந்த விசயமென்பதால் கட்சி பேதம் பார்க்காமல் பகிரலாம்.

Saturday, February 08, 2014

520 ஈரோ - சிறுகதை

"இந்த மாசம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் அனுப்ப முடியுமா" என்ற அப்பாவின் மென்மையான வேண்டுகோளும்
"எவ்வளவு நாள்தான்டா கார்த்தி படிச்சிக்கிட்டே இருப்ப, சீக்கிரம் வேலைக்குபோடா" என்ற அம்மாவின் புலம்பலும்  காதில் இருந்து அகன்றுவிட்டாலும் இன்னும்   மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.

நான் ஆராய்ச்சிப்படிப்பு மாணவன்.  ஆராய்ச்சிப்படிப்பிற்கு என் நிறுவனம் தரும் 1000 ஈரோ , வீட்டிற்கு அனுப்ப 500 எனக்கு ஐநூறு என சரியாகப் போய்விடுகின்றது.  நான் ஊர்ச்சுற்ற, வெளிநிறுவனத்திற்கு , மாதத்தில்  நான்கு ஐந்து நாட்கள் மென்பொருள் நிரலி அடித்து கொடுத்தால் இருநூறு முன்னூறு தேறும். பத்து நாட்கள் செய்ய வேண்டிய வேலையை, மாட்டினான்டா மங்குனிசாமி என, இரண்டே நாட்களில் செய்யச் சொல்வார்கள்.  எல்லா மாதங்களிலும் இந்த வேலை கிடைக்காது. வேலை இல்லாத மாதங்களில்  Running Royal Life Only On Photos என முன்பு எடுத்த சுற்றுப்பயண போட்டோக்களை பேஸ்புக்கில் போடுவதோ அல்லது இப்படி இந்த பிரஸ்காட்டி மலை மேல் உட்கார்ந்து தூரத்தில் ரோம் நகரைப் பார்ப்பதிலோ நேரம் போகும்.

 வெப்பமண்டல தமிழ் நாட்டுக்காரன் ஆன எனக்கு ஐரோப்பாவில்  மழைப்பிடிக்கும். குளிர்காலத்தில் மழை பெய்தால் தட்பவெப்பம் சுழியத்திற்கு மேல் இருக்கின்றது எனப்பொருள். மேலும் மேகமூட்டம் வெப்பத்தை வெளியிடாமல் காத்து வைத்திருக்க , குளிர் வாட்டாது. ஆதலால் மனம் மழைக்கு ஏங்கும். இரண்டு நாட்கள் மழை அடித்து ஓய்ந்து இன்றுதான் கதிரவனின் வெளிச்சம் வந்து இருப்பதால் இந்தக் குட்டி மலை நகரத்தின் தெருக்களில் நல்ல சன நெருக்கடி.  காப்பிக்கடைகள் இன்று களை கட்டின. மதியம் வந்ததில் இருந்து மூன்று காப்பிசினோ வகை காப்பிகள் குடித்தாகிற்று.  வெளிச்சம் மறைய வெப்பம்  குறைய  குளிர் என்னை வாட்டியது.  பசி இருந்தால் குளிர் அதிகமாக தெரியும்.  பசியுடன் வருத்தமும் சேர்ந்து கொண்டதால் மென்குளிர் நடுக்கக் குளிராக எனக்குத் தெரிந்தது.

மேலதிகமாக பணம் அனுப்பவில்லை என்றாலும் அப்பா சமாளித்துக்கொள்வார். ஆனால் அனுப்பினால் உதவியாக இருக்கும், யாரிடம் கேட்பது என்ற யோசனையை ஒரே இடத்தில் இருந்தபடி அசைபோடுவது அயற்சியாய் இருந்தது. இரண்டு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து  கீழேப்போய் ரயில் நிலையத்தில் அமர்ந்து ரயிலை வேடிக்கைப் பார்த்தபடி யோசிக்கலாம். ரயிலும் ரயில் நிலையங்களும் பல சமயங்களில் எனக்கு போதிமரம்.

சாலையின் ஓரமாக வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களை ஒன்று இரண்டு என எண்ணிக்கொண்டே, பத்தாவது கார் இருந்த பெஞ்சில் ஒரு தாத்தா உட்கார்ந்திருந்ததால் அவரைக் கடந்து  இருபதாவது கார் அருகே இருந்த மரப்பெஞ்சில் அமர்ந்தேன். ரயில் நிலையத்திற்கு இன்னும் சில கார்களை எண்ணவேண்டும்.

 அந்த தாத்தாவுடன் உட்கார்ந்து இருக்கலாம் . மூன்று காரணங்களினால் அவருடன் உட்காரவில்லை. அவர் பேச ஆரம்பித்தால் என்னால் சரளமாக இத்தாலியத்தில் பேச முடியாது. இரண்டாவது , எனக்கு புன்னகையைக் கொடுத்தாலும் அவரின் தோற்றம் படு ஏழ்மையாக இருந்தது. மூன்றாவது  மணி பத்து ஆகப்போகின்றது, சரியான மேலங்கி கூட இல்லாமல் குளிரில் உட்கார்ந்து இருக்கின்றார். ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகி நமக்கு ஏன் பிரச்சினை என்பதால் தான் இந்த  இருபதாவது கார் அருகே இருந்த பெஞ்ச் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பெஞ்சில் உட்கார்ந்தவுடன் தாத்தா நினைவுப்போய், பணத்தின் நினைவு வந்தது.  என்ன செய்யலாம் என்ற யோசனையின் அசை தொடர்ந்தது. கண்களுக்கு மட்டும் குளிர்வதில்லை.  மனதிற்கு எது தேவையோ அதைக் காட்டும்.   தூரத்தில் ஈரோ பணத்தாள் இருப்பதாக மூளைக்கு சொன்னது. கவலையில் கானல் நீர் தென்படலாம் என பார்வையைத் திருப்பிக் கொண்டேன். உந்தப்பட்ட இரண்டாம் பார்வையில் அது பணத்தாள் என உறுதியானது. பணம் கிடந்த இடத்திற்கு அருகில் இருபத்திரண்டாவது கார் நின்றிருக்கவேண்டும்.  நான் ஓடிய வேகத்தில் 100 மீட்டர் பந்தயங்களில் ஓடியிருந்தால் உசைன் போல்ட்டைத் தோற்கடித்து இருப்பேன். ஓடிய வேகத்திற்குப் பரிசாய் அது 500 ஈரோத்தாள்.   கடைசியாக நான் இப்படி சாலையில் பணம் எடுத்தது , வியன்னா சென்றிருந்த பொழுதுதான். அன்று  ஒரு பத்து ஈரோத்தாள் கிடைத்தது. ஆஸ்திரியாவில் பத்து ஈரோ அல்லது அதற்கு குறைவான மதிப்புள்ள பொருட்கள் கீழே கிடந்தால் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் பெஞ்சில் வந்து அமர்ந்து, பணக்கவலைத் தீர்ந்தது என கடவுளுக்கு நன்றி சொல்லும் தருணத்தில் புதுக்கவலைகள் முளைத்தன.
ஒருவேளை, என்னைப்போன்ற சிரமமான சூழலில் இருப்பவர்கள் பணத்தைத் தொலைத்துவிட்டு போய் இருந்தால் ;
கள்ளநோட்டாக இருந்தால் , இத்தாலியில் இது சர்வசாதாரணம், புழக்கத்திலே இல்லாத ஆயிரம் ஈரோத்தாள் கூட இத்தாலியில் கிடைக்கும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருவதைப்போல பணத்தை தரையில் போட்டுவிட்டு தூரத்தில் இருந்து படம்பிடித்து பகடி செய்யப்போகின்றார்களோ என்ற பயமும் வந்தது.

உன்னுடைய பணம் இல்லை.. வேண்டாம்...
உழைக்காத பணம் ஒட்டாது.
ஆனால் நான் திருடவில்லை. ஏமாற்றவில்லை. தானாகவே பணம் , இயற்கையாய் வந்து விழுந்து இருக்கின்றது.
 முதன் முதலாய் ரோம் வந்து இறங்கியபொழுது, எனது கைப்பை கிட்டத்தட்ட 600 ஈரோ பணத்துடன் காணாமல் போனதற்கான இழப்பீட்டு பணமாக எடுத்துக் கொள்ளலாமே ...
எத்தனை நாட்கள் சம்பளம் இல்லாமல் வேலைப்பார்த்து இருக்கின்றாய் அதற்கான சன்மானமாய் இருக்கட்டும்.
 மனம் இரண்டு பக்கத்திற்கும் பேசியது.  கடைசிப்பேருந்திற்கு இன்னும் நாற்பது நிமிடங்கள் இருந்தன. இங்கிருந்து பேருந்து நிலையம் நடக்க 10 நிமிடங்கள். இன்னும் முப்பது நிமிடங்கள் காத்து இருப்போம்.  யாராவது வந்து தேடினால் கொடுத்துவிடுவோம். இல்லாவிடில் இன்று நான் அதிர்ஷ்டமானவன்.

ஒவ்வொரு நிமிடமும்  மெல்ல நகர்ந்தது.  யாரும் வந்துவிடக்கூடாதே என்று ஒரு புறமும் , முப்பது நிமிடங்கள் எப்படி கரையும் என மறுபுறமும் என்னிடம் நான் அருமையாக நடித்துக் கொண்டிருந்தேன்.  அந்த பத்தாவது பெஞ்ச் தாத்தா மெல்ல ஒவ்வொரு காராக தொட்டபடி என்னை நோக்கி வந்தார்.

கண்டிப்பாக இந்த தாத்தாவின் பணமாக இருக்காது.   அருகில் வந்த தாத்தா,

"இந்த இருபது ஈரோத்தாள் நீ சென்றவழியில் கிடந்தது , இப்பொழுதான் பார்த்தேன் , உன் பணமா " என இத்தாலியத்தில் கேட்டார்.

ஐநூறுடன் மேலும் இருபதா... இதுவரை இரண்டு பக்கமும் வாசித்துக் கொண்டிருந்த மனம், விடாதே வாங்கிக் கொள் என்றது.  முப்பது நிமிட கெடு ஒருமுகம் ஆன ஆசை மனத்தினால் வெறும் 5 நிமிடங்களில் மறந்து போனது.

"ஆம் என்னுடையதுதான் நன்றி " என பொய்யுடன் வாங்கிப் பையில் வைத்துக் கொள்ளும்பொழுது கொஞ்ச தூரத்தில் ஒரு கார் மெல்ல  வருவதையும் கவனித்தேன். ஒருவேளை தொலைத்த பணத்தைத் தேட வரும் காரா !! .

தூரத்தில் ரயிலின் சத்தம் கேட்டது.

"சரி தாத்தா, ரயிலுக்கு நேரம் ஆகிவிட்டது, நல்லிரவு" என மற்றொருப் பொய்யை  சொல்லிவிட்டு நடக்கையில் ,  ஒருகணம் கூடத்திரும்பிப் பார்க்கவில்லை , ஒரு வேளை அந்தக் கார் பணத்தைத் தேடும் காராக இருந்து, தேடுபவர்களைப் பார்த்தால் ஆசைமனம் தோற்றுவிடுமோ என்ற பயம்... நிமிடங்களில் மாறியதற்கு மனம் வெட்கப்படவில்லை. சமாதானத்தை தேடிக்கொண்டிருந்தது.
  ரயில்  எனக்கு போதி மரம் தானே ... ஊர் சுற்றிப்போகப் போகும்  ரயில் பயணத்தில் இந்த 520 ஈரோக்களுக்கு ஏதாவது ஒரு சமாதானம் கண்டுபிடித்துகொள்ளலாம்.  மழைப்புழுக்கமா மனப்புழுக்கமா எனத் தெரியவில்லை...வெக்கையாக இருந்தது.  மென்குளிரை வென்ற வெக்கையுடன்   ரயில் நிலையம் நோக்கி நடந்தேன்.
--------------------


Monday, January 23, 2012

நான்காவது பரிமாணம் - சிறுகதை

என்னமோ தெரியவில்லை, இத்தாலி வந்ததில் இருந்து அம்முவின் நினைவுகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களில் அவளின் பெயரை கூகுளில் பத்துத் தடவைகளாவது தேடி இருப்பேன். அவளின் பெயரும் படிப்பும் தனித்துவமானவை... எத்தனைத் தேடியும் என்னுடைய ஆராய்ச்சிக்கட்டுரையில் நன்றித் தெரிவித்தப் பக்கத்தைத் தவிர வேறு எங்குமே அவளின் பெயர் இல்லை.-... மூன்று வருடங்களில் லிங்டின் தளத்திலாவது இருக்க மாட்டாளா என்ற ஒரே நப்பாசைதான் ... ஒரு வேளை நேரத்தை நிறுத்தக் கூடிய ஆற்றல் எனக்கு இருந்தால், செப்டம்பர் 3, 2009 ஆம் ஆண்டோடு நிறுத்தி இருப்பேன். அன்றுதான் நான் அவளுடன் பேசிய கடைசி தினம். எத்தனைக் கெஞ்சியும் அவளின் பெற்றோர் பேச்சை மீறமாட்டேன் என்று விலகிப்போய்விட்டாள். பெண்கள் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டால், மிச்சமீதின்றி அத்தனையும் துடைத்து எடுத்தது போல, இருந்த சுவடே இல்லாமல் மறைந்துவிடுவார்கள். அவளை நினைவூட்டும் நபர்களை நானும் தள்ளிவைத்தேன் ... தள்ளிவைத்தலில் பலப் பாடல்களும், ஏன் உணவுப்பழக்கங்கள் கூட உள்ளடங்கிப் போயின.

இதோ அவளின் நினைவுகளை சுப்ரமணியபுரத்தில் வரும் இளையராஜாப் பாட்டுடன் ஆளரவமற்ற , ரோம் நகரத்துப் புறநகர்ப் பகுதிகளில் பொட்டல் திடலில் மறுவாசிப்பு செய்து
கொண்டிருக்கின்றேன். எப்படியாவது அம்முவைக் கண்டுபிடித்துவிட வேண்டும், கடைசியாக அவளைப் பற்றிக் கேள்விப்ட்டது, இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கின்றாள் என.
விபரத்தை சொன்ன முன்னாள் அலுவலகத் தோழியை ஒட்டு மொத்தமாக நட்பு வட்டாரத்தில் இருந்து நீக்கி இருந்தேன். முதலில் அந்தத் தோழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற
எண்ணத்தோடு, இயற்கையின் உந்துதலை கழிக்க, நமது ஊர்ப்புறங்களில் இருக்கும் பாழடைந்த கட்டிடத்தைப்போலக் காணப்பட்ட கூரையில் சுவர்களின் பின்னால் ஒதுங்கினேன்.

”பலப்பேர் வந்து போகின்ற தபால் நிலையத்திற்கு முன்னால் சிறுநீர் கழிக்கின்றாயே உனக்கு அறிவில்லையா “ என ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்டது. இத்தாலியில் அதுவும் இந்த
இடத்திலா... எனது பேராசிரியர் வந்த முதல் நாளே சொன்னார், தனியாக எங்கும் தெரியாத இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று.. நான் கேட்டால்தானே....

“இல்லை இல்லை... நிறுத்திவிட்டேன். தாங்கள் யார்” குரலிலும் உடலிலும் தானாகவே நடுக்கம் வந்து சேர்ந்தது. அழுக்கு உடைகளுடன், நீண்ட தாடி, தலைமுடியுடன் ஒருவர்
மற்றொரு சுவற்றின் பின்பக்கத்தில் இருந்து வெளிவந்தார். ராணுவத்தின் உடையைப்போல ஒன்றை அணிந்திருந்தார், தோராயமாக 80 வயது இருக்கும்.

“அட ... இந்தியனா ... ~ என கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்து வியப்பு மேலிட, மேலும் கீழும் பார்த்தார். எனக்கு இரண்டு ஆறுதல்கள், கையில் இருப்பதைப் பிடுங்கிக் கொள்ளும் வழிப்பறித் திருடன் இல்லை. பேய்களும் பிசாசுகளும் இந்தியனா என ஆச்சரியமாக கேட்டதாக எங்கும் படித்ததில்லை.

“ஆமாம், தமிழ்நாட்டில் இருந்து வருகின்றேன்”

“எனக்கும் ஒரு தமிழ் நண்பன் இருந்தான், அதோ அந்தக் கால்வாயைக் கடக்கும்பொழுது, அச்சு நாட்டுப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்” என அந்தக்காலத்து ஆங்கிலத்தில்.

”ஓ நீங்கள் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவரா”

“ஆமாம் .... கனடாவில் இருந்து வந்த படையணிகளைச் சேர்ந்தவன், இத்தாலியை நாஜிக்களிடம் இருந்து மீட்டதில் உங்கள் இந்திய வீரர்களுக்கும் பங்கு உண்டு”

“படித்திருக்கின்றேன், கிட்டத்தட்ட 30 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள் இத்தாலியப் போர் முனைகளில் உயிரிழந்திருக்கின்றனர்” அந்த
முதியவருடனான உரையாடல் எனக்கும் தேவையாக இருந்தது. அம்முவின் சோக நினைவுகளில் இருந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.

என்னைப்பற்றி விசாரித்தார். கணினிப் பற்றி எல்லாம் அவர் அறிந்திருக்கவில்லை. இந்த நேரத்தில் இங்கே எதற்கு என அவர் என்னிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடம் திரும்பக்
கேட்டேன்.

“தபால் நிலையத்திற்கு தபால்களைப்போட வந்தேன்”, கையில் சில உறையிடப்பட்ட கடிதங்களையும் வைத்திருந்தார். நான் சிறுநீர் அடித்த இடத்திற்கு பத்தடித் தள்ளி சன்னல்
அமைப்பாக இருந்திருக்க வேண்டிய இடத்திற்கு அப்பால் கடிதங்களைப்போட எத்தனித்தவரிடம்,

“ஐயா, தபால் பெட்டியில் தான் போடவேண்டும், இங்கு போட்டால் தபால்கள் போகாது, என்னிடம் கொடுங்கள் நகரத்திற்கு செல்லும்பொழுது நான், பெட்டியில் போட்டுவிடுகின்றேன்”

“அது சரிதான், போக வேண்டிய இடத்திற்குப்போகும், போக வேண்டிய காலக்கட்டத்திற்குப் போகுமே,,,, இந்த ராணுவ தபால் நிலையமே சேரவேண்டியவர்களுக்குச் சேர்ப்பிக்கும்” என
தபால்களை சன்னலில் எறிந்துவிட்டு எதுவும் பேசாமல் எதிர்ப்பக்கம் நடந்துபோனார். ஒரு வேளை மனக்கிறுக்குப்பிடித்தவராக இருக்கக்கூடும் என நானும் மாணவர் விடுதியை நோக்கி
நடக்கலானேன். அடுத்த இரண்டு நாட்கள் படிப்பிலும், அம்முவிற்கும் எனக்கும் பொதுவாக இருந்த நண்பர்களைத் தேடுவதிலேயே காலம் கழிந்தது. ஒரு சிலரைக் கண்டுபிடித்து,
அவர்களிடம் தான் அவளைச் சந்திக்க விரும்புவதாகவும் என்னுடைய இத்தாலிய முகவரியை அவளுக்குத் தெரிவித்துவிடவும் கேட்டுக்கொண்டேன்.


வேறொரு இளையராஜாப்பாடலுடன் மீண்டும் முந்தையப் பகுதிக்கு நடைபயிலப் போனபொழுது அந்த முதியவரும் அவரின் கடிதங்களும் நினைவுக்கு வந்தது. கடிதங்களை எடுத்து சரியான தபால் பெட்டியில் போட்டுவிடலாம் என அந்தக் கட்டிடத்தில் கடிதங்களைத் தேடினேன். கலைந்து கிடந்த சில உறைகளை சேகரித்துக் கொண்டிருந்த பொழுதுதான்
கவனித்தேன். அனைத்திலும் 43 ஆம் ஆண்டு , இங்கிலாந்து ராணியின் படம் போட்ட தபால் தலை ஒட்டப்பட்டிருந்தது. இத்தாலிய முகவரிக்கு கடிதம் எழுதப்பட்டு கனடாவில்
இருந்து அனுப்பப்பட்டிருந்தது.



அந்த முதியவர் வயதின் மூப்பினால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உறுதியாக நம்பினேன். இரண்டாம் உலகப்போர் காலக்கட்ட கடிதங்கள்,
அரியப்பொக்கிஷங்கள், ஏலத்திற்கு விட்டால் எப்படியும் கோடி ரூபாய் பெறுமானம் பெறும். அடுத்த மூன்று வருட படிப்பைப் பிரச்சினை இன்றி முடித்துவிடலாம் என மனம்
கணக்குப்போட்டது. ஒரு கடிதத்தை படிக்கப் பிரிக்க , முதுகில் மென்மையான அடி விழுந்தது. திகிலுடன் திரும்பிப்பார்க்க, முதியவர் கோபமாக என்னிடம் இருந்து கடிதங்களைப்
பிடுங்கிக்கொண்டார்.

“அடுத்தவர்களுக்கு வந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிப்பது அநாகரிகம்” என்றபடி, கையில் கொண்டு வந்திருந்த வேறு கடிதங்களை சன்னலில் எறிந்துவிட்டு அவரின் பாதையில்
திரும்பிப்போனார்.

“பைத்தியக்கார கிழவன்~ என்று மனதில் நினைத்தபடி, புதிதாக அவர் எறிந்த கடிதங்களைப் பொறுக்குகையில் ஒரு அதிர்ச்சிக் காத்திருந்தது. எதிலும் தபால் தலைகள் ஒட்டப்படவே
இல்லை. புத்தம் புதிதாக கனடிய முகவரிக்கு எழுதப்பட்ட கடிதங்கள். மறுநாள் விடியற்காலையிலேயே அந்த கட்டிடத்திற்கு வந்து, நேற்று எறியப்பட்ட கடிதங்கள் கிடக்கின்றனவா எனத் தேடினேன். தபால் தலையில்லாமல் எறியப்பட்ட ஒன்றுகூட
இல்லாமல் , புதிய கடிதங்கள் கிடந்தன தபால் தலைகளுடன், ஆனால் 44 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு. கண்கள் சொருக கீழே சரியப் போனவனை அந்த முதியவர் மீண்டும்
கைதாங்கலாகப் பிடித்துக் கொண்டார். மனதும் உடலும் தெளிவடைந்தபின்னர்,

“அவரிடம் நேரிடையாகவே கேட்டேன், நீங்கள் கடந்த காலத்திற்கா கடிதங்கள் எழுதுகின்றீர்கள்”

“எதிர்காலத்தில் போய் சேரக்கூடிய கடிதங்களை நம்மால் அனுப்ப முடியும் பொழுது, ஏன் கடந்த காலத்திற்கு அனுப்ப முடியாது, இந்த ராணுவ தபால் நிலையம் அந்த சேவையை
எனக்கு கடந்த 70 வருடங்களாக செய்துவருகின்றது ... வேண்டுமானால் நீ கூட முயற்சி செய்து பாரேன்” என்று சித்தர் வாக்கு போல சொல்லிவிட்டு தனது கடிதங்களுடன் அந்த
இடத்தை விட்டு நகர்ந்தார்.

அந்த இடம் அமானுஷ்யமாக திகிலூட்டினாலும், அம்முவிற்கு 2009 துவக்கத்தில் கடிதத்தை எழுதி இந்த கட்டிடத்தில் போட்டால் என்ன எனத் தோன்றியது. அன்று இரவே, அம்முவின்
பிரிவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சிலத் தென்றல் வருடும் சம்பவங்களை நினைவில் கொண்டு, அந்தக் காலக் கட்டத்தில் எழுதுவதைப் போலவே ஒரு கடிதம் எழுதி,
அவளின் அந்நாளைய அலுவலக முகவரியுடன் ,மறுநாள் அந்த கட்டிடத்தில் போட்டுவிட்டு வந்தேன், பத்து நாட்கள் நடையாய் நடந்து எனக்கு அம்முவிடம் இருந்து ஏதேனும் பதில் வந்து இருக்கின்றதா என எதிர்ப்பார்ப்பதிலேயே கழிந்தது. அந்த முதியவரும் தென்படவில்லை, அவருக்கான கடிதங்களும் அங்கே காணப்படவில்லை. இரண்டு வாரமாகியும் எந்தக் கடிதமும் எனக்கு வரவில்லை. ஒருவேளை எனக்கு வந்த கடிதத்தை இந்தக் கிழவர் எடுத்துக் கொண்டு போய் இருப்பாரோ என சந்தேகமும் ஏற்பட்டது. 15 ஆம் நாள் நம்பிக்கை கைவிடாமல், கடிதம் வந்திருக்கிறதா, எனப் பார்க்க போகையில் கிழவர் எதிரில் வந்தார்.

“எனக்கு வந்த கடிதம் ஏதேனுமொன்றை நீங்கள் எடுத்துச் சென்றுவிட்டீர்களா” எனப்பாவமாய் கேட்டேன்.

மையமாய் சிரித்துவிட்டு, ”உனக்கான தபால்கள் வந்து சேருமிடம் உனது இல்லத்திற்கு அருகில் இருக்கும் தபால் நிலையம் தான். இங்கு அனுப்ப மட்டும்தான் முடியும். , நாளை அங்கு போய் கேள், ஒரு வேளை வந்து இருக்கலாம்”

மறுநாள், உடைந்த இத்தாலியத்தில் என் வீட்டு முகவரிக்கு ஏதேனும் தபால்கள் வந்து இருக்கின்றனவா எனக்கேட்டேன்.... உள்ளேப் போய் சில நிமிடங்கள் கழித்து வந்த தபாலதிகாரி,

ஒரே ஒரு தபால் மட்டும் வந்திருக்கின்றது எனக் கையில் கொடுத்தார். தபால் தலையின் அச்சிடப்பட்டத் தேதியைப் பார்த்தேன்... கருப்புமை விரவி வருடம் தெரியவில்லை....
அனுப்புனர் முகவரி இல்லை, உறையின் மேல் இருந்த கையெழுத்து அம்முவினதுதான்.

அன்புடன் கார்த்திக்கிற்கு,

அம்மு எழுதிக் கொண்டது... நலம் நலமறிய ஆவல்........

எனக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கலானேன்.

----------

Wednesday, January 18, 2012

கவிழ்ந்த கப்பலின் கேப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோ



டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து நூறாவது ஆண்டு நினைவுதினம் நெருங்கிக் கொண்டிருக்கையில், இத்தாலிய கடற்பகுதியில் பிரம்மாண்டமான கோஸ்டா கன்கார்டியோ ( Costa Concordia) தரைத் தட்டிக் கவிழ்ந்தது. நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களுடன் பிராயணப்பட்டுக்கொண்டிருந்த உல்லாசக்கப்பல், சிவிட்டாவெக்கியா(Civitavecchia) என்ற இடத்தில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களில் கியில்யோ (Giglio Islands)என்ற தீவுக்கருகில் தரைத் தட்டியது. இதுபோன்ற உல்லாசக்கப்பல்களில் சிலமுறை பயணம் செய்து இருப்பதால், தனிப்பட்ட அளவிலும் இந்த விபத்து பாதித்தது.



டைட்டானிக் கப்பலைப் போல பெரும் உயிர்சேதம் இல்லை என்ற போதிலும், மத்தியத் தரைக்கடலின் மிதக்கும் நகரம் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட இந்த கப்பல் சாய்ந்தபடி கிடக்கும் புகைப்படங்கள் பரவலாக அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. விபத்தைக் காட்டிலும் அதிகமாக இத்தாலியில் தற்பொழுது விவாதிக்கப்படுவது கப்பல் கேப்டனின் விபத்திற்கு முன்னரும் பின்னரும் அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள்தாம்.



இருபது வருடங்களுக்கு முன்னர், தஞ்சாவூர் வாணக்காரத் தெரு வழியாக பேருந்துகள் செல்லாது, வண்டிக்காரத் தெருவழியாகத்தான் புறநகரப்பேருந்துகள் செல்லும். ஆனாலும் மதியம் ஒரு மணி அளவில் சில சோழன் போக்குவரத்து கழகபேருந்துகள் மட்டும் ஒன்று, தனது வீட்டில் இருந்து கட்டுச்சோற்றை வாங்கவோ, அல்லது தனது உறவினர்கள் யாரையேனும் இறக்கிவிடவோ வாணக்காரத் தெரு வழியாக பயணப்படும். பேருந்துகளுக்கு சரி, கப்பல்களுக்கு ... கப்பலை ஓட்டும் குழுவினரில் ஒருவர் வசிக்கும் தீவை ஒட்டி கப்பலை செலுத்தி, உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் நிமித்தம் செய்ய முற்பட்டபொழுதுதான் இந்த விபத்து ஏற்பட்டது. அகண்ட கடற்பகுதி இருந்தாலும் பொதுவாகக் கப்பல்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வழித்தடத்தில்தான் பயணப்படவேண்டும். இருந்தபோதிலும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கப்பல் தலைவரின் முடிவில் பாதைகள் மாற்றப்படலாம். எதிர்வரும் அபாயத்தை அறியாமல் கரையை ஒட்டிப்போக, பெரும்பாறையில் மோதி சாய்ந்தது.

கப்பலின் கேப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோவிற்கும் துறைமுகக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கும் நடந்த உரையாடலில், கப்பல் கவிழ்ந்தவுடன் கப்பலையும் பயணிகளையும் அதோகதியாக விட்டுவிட்டு கேப்டன் ஓடி இருக்கிறார் என்பது தெளிவாகி இருக்கின்றது.



கேப்டனின் பதில்கள் வீட்டுப்பாடம் செய்யாத பள்ளி மாணவனின் சாக்குப்போக்குகள் இருக்கின்றன. உரையாடலின் உச்சமாக, துறைமுகப் பொறுப்பு அதிகாரி கோபம், நீ உயிர் பிழைத்து இருக்கலாம், இதற்கான விலையை நீ கொடுத்தாகவேண்டும்,, உன் வாழ்க்கை இனி அத்தனை சுலபமாக இருக்கப்போவதில்லை என வார்த்தைகளாக வெளிப்பட்ட போதிலும் கோழைத்தனத்தின் சிகரமாக பிரான்சிஸ்கோ கப்பலுக்கு மீண்டும் போகவே இல்லை. விடியற்காலையில் டாக்ஸி பிடித்து அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். அடிபட்ட நாயின் கண்களில் தெரியும் கலவரமும் பயமும் கேப்டனிடம் காணப்பட்டதாக இத்தாலியருக்கே உரிய உவமையுடன் அவரைக்கூட்டிச் சென்ற டாக்ஸி ஓட்டுனர் சொல்லுகின்றார்.



தனக்கு அளிக்கப்பட்ட கடல் மேப்பில் அந்த பாறை இருக்கவே இல்லை, தன்னுடைய உயிர்கவச ஆடையை வேறு ஒருவருக்கு அளித்து விட்டதால் மீண்டும் கப்பலுக்கு செல்லவில்லை, தனது மேற்பார்வையின் பேரில் உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டது என வாதிட்டாலும், கேப்டனின் வாதங்கள் எடுபடப்போவதில்லை என இத்தாலிய சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர். 2002 ஆம் ஆண்டு பாதுகாப்பு அதிகாரியாக பணியில் கோஸ்டா கப்பல் நிறுவனத்தில் சேர்ந்த பிரான்சிஸ்கோ , 2006 ஆம் ஆண்டு கப்பலின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார்.

எத்தனைப் பாதுகாப்பு அம்சங்களோடு இருந்தாலும் சரி, கப்பலின் கேப்டனாக முதன்முறை பொறுப்பேற்கும்பொழுது , டைட்டானிக் பற்றிய கேள்வித் தவிர்க்கப்படமுடியாதது.-

“பனிப்பாறைகள் மிதக்கும் கடல்பாதையின் வழியாக டைட்டானிக் கப்பலை பயணிக்கவைத்தது முதல் தவறு, மேலும் சமகால தொழில்நுட்ப வசதிகளில் டைட்டானிக் போன்று ஒரு விபத்து ஏற்படுவது சாத்தியமல்ல” என்பது தான் 6 வருடங்களுக்கு முன்னர் பிரான்சிஸ்கோவின் பதிலாக இருந்தது.

இவ்விபத்திற்குப்பின்னர், பிரான்சிஸ்கோவின் அத்தனை முந்தைய நடவடிக்கைகளும் அலசப்படுகின்றன. விபத்திற்கு முன்னர் ஒரு அழகிய இளம்பெண்ணுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டதை, இயல்பாக கப்பல்களில் நடக்கும் ஒன்றைக்கூட அலட்சியக்காரணிகளில் ஒன்றாக முன்வைக்கின்றார்கள்.

வரலாறு, அனைத்து பிரம்மாண்டங்களின் வீழ்ச்சிகளுக்கு அடிப்படை காரணம் அலட்சியமே எனத் திரும்ப திரும்ப பதிவு செய்தாலும், பாடங்கள் நினைவுக்கூறப்படுவதில்லை. மெத்தனத்துடன் அலட்சியமும் கைக்கோர்க்கும்பொழுது, விபத்துக்களுடன் கையாலாகத கோழைகளும் வரலாற்றில் அடிக்கடி நினைவுகூறப்படுவார்கள் , பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோவும் அத்தகையவர்களில் ஒருவர் ஆவார் என்பது துரதிர்ஷ்டவசமானதே !!! அடுத்தமுறை கப்பலில் பயணப்படும்பொழுது, கேப்டனின் வரவேற்புரையை உன்னிப்பாகக் கேட்கவேண்டும், குறைந்த பட்சம் அடுத்த ஒரு நாளாவது எனது உயிரும் உடைமைகளும் அவரின் பொறுப்பல்லவா...

Tuesday, November 22, 2011

கறி வாங்க உதவிய கடவுள் - சிறுகதை

மாணவர் விடுதியின் வரவேற்பறையில் இருந்த பொறுப்பாளர் மக்டலீனாவிடம் என் அறையின் சாவியைக் கொடுத்த பின்னர் , தலைக்கு மேலே படத்தில் இருந்தபடி சிரித்து
கொண்டிருந்த நல்ல மேய்ப்பாளன் இயேசுவைப் பார்த்து நானும் புன்னகைத்துவிட்டு அருகில் இருந்த மளிகைக்கடைக்கு நடக்கலானேன்.



இத்தாலி வந்து இரண்டு வாரங்கள் ஆகின்றன, இன்னும் குறைந்தது நான்கு வருடங்களாவது வாழ்ந்தாக வேண்டும், ஸ்வீடனில் ஆங்கிலத்தை வைத்து ஒப்பேற்றியதைப்போல இங்கு
நிச்சயம் முடியாது, மண்ணிற்கு கொடுக்கும் மரியாதை அந்த மண்ணின் மொழியை அறிந்து கொள்வது, இணையத்தில் மனனம் செய்து வைத்து இருந்த ஒன்று இரண்டு மூன்று எண்
வரிசையை ஜெபித்தபடியே அருகில் இருந்த கடைக்கு வந்தேன். அடடா, எழுதி வைத்திருந்த , தேவையான பொருட்களின் இத்தாலிய இணை வார்த்தைகள் அடங்கிய சீட்டை
வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

“கார்த்தி கண்ணா, நம்ம வீட்டுல மட்டன் குழம்பு, நீ இல்லை என்பதுதான் குறை” என அம்மா வருந்தியபொழுது, “மதியம் நானும் ஆட்டுக்கறி குழம்பு வச்சி சாப்பிடுறேன், கவலைப்படாம நீ சாப்பிடு ” என ஆறுதல் படுத்தியது நினைவுக்கு வந்தது.

ஆட்டுக்கறியை கடைசியாகத் தேடுவோம், முதலில் அரிசி, தக்காளி, இஞ்சி, பூண்டு, கறிப்பொடி என ஒவ்வொன்றாக அமைப்பை வைத்தோ, ஆங்கிலத்திற்கு நெருங்கியப் பெயர்களை வைத்தோ எடுத்துப்போட்டுக்கொண்டே , மாமிசம் இருக்கும் பகுதிக்கு வந்தேன்.

கண்ணாடித்தாள்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழிக்கறியை , அதன் சிறிய கால்களினால் எளிதாக அடையாளம் காண முடிந்தது, எது மாட்டுக்கறி, எது பன்றிக்கறி எது
ஆட்டுக்கறி என பிரித்தறிவதில் குழப்பம். ஏனைய கறிகளை சாப்பிடக்கூடாது , சாப்பிட்டால் பாவம் தீட்டு என்பதெல்லாம் கிடையாது. ஆட்டுக்கறி குழம்பு செய்யவேண்டும் என முடிவு
செய்த பின்னர் அதை மட்டுமே வாங்கிப்போக வேண்டும் தானே...

“உங்க நாட்டில் மாட்டுக்கறி சாப்பிட மாட்டீர்கள் தானே, மாடு உங்களுக்குத் தெய்வம் தானே” என முன்பு ஒரு முறை ஆண்டர்சன் நக்கலாக ஸ்டாக்ஹோல்ம் கல்லூரிக் கொண்டாட்டத்தின்பொழுது கேட்டான்.

மாமிசத்தில் கூட அரசியலைக் கலந்து வைத்திருக்கும் நமது சமுதாயக் கலாச்சாரக் கூறுகளை விளக்க விரும்பாமல், எல்லோருக்கும் சரி என ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் ஒன்றைக்
கொடுத்தேன்.

“விவசாயம், பொழுது போக்கு, வாகனப்போக்குவரத்து என அனைத்திலும் உங்களுக்கு உபயோகரமாக இருக்கும் குதிரையின் மாமிசத்தை ஐரோப்பாவில் சாப்பிடுவீர்களா?”

“நீ அருவெறுப்பாக பேசுகிறாய்” இது லிண்டா , ஆண்டர்சனின் காதலி.

”அதே அதே ... உங்களுக்கு குதிரைகள் அனைத்திலும் பயன்பட்டதைபோல, இந்தியத் துணைக்கண்டத்தில் மாடுகள் அன்றாட வாழ்வில் இன்றி அமையாததாக மாறிப்போனது,
பொதுவாக இந்திய துணைக்கண்ட மக்கள் நல்லதை நேரிடையாகச் சொன்னால் கேட்க மாட்டார்கள், தண்டனை உண்டு என்றால் கேட்பார்கள், கடவுள் கண்ணைக்குத்துவார், இது
சாமியின் வடிவம் என்று சொன்னால் தான் மாடுகளைப் பாதுகாக்க முடிந்தது, நவீன உலகத்தில் எது நமக்கு வசதியோ அதைப்பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற மேற்கத்திய சிந்தனை ஓட்டங்களுக்கு இந்திய மக்களும் பழகிவிட்டார்கள், ஆட்டுக்கறி கோழிக்கறி கிடைக்காத பட்சத்தில் எனக்கு மாட்டுக்கறி அல்லது பன்றிக்கறி சாப்பிடுவதில் பிரச்சினை இல்லை”

”அட்டகாசமானப் பதில் “ என்றபடி தலையை வருடிக்கொடுத்தாள் ஹன்னா, ஒரு விதத்தில் ஆண்டர்சனை வெறுப்பேற்றக்கூட இருக்கலாம், லிண்டாவின் வரவிற்குப்பின்னர்
ஹன்னாவின் பார்வை என் மேல் விழுந்து விட்டது. ம்ம்ம் அது எல்லாம் பழையக்கதை.

மாமிசக்கூட்டத்தில் மறைந்து இருக்கும் எனக்கான இன்றைய ஆடு எங்கே எனத் தேடுவதில் சில நிமிடங்கள் ஓடிப்போனது. கோழி, பன்றி, மாடு மூன்றும் சேர்ந்த படங்களையே எல்லா
கண்ணாடிக்கதவுகளிலும் ஒட்டி வைத்திருந்தார்கள். மொழியின் தேவை சாப்பாட்டிற்கு வரும் என ஒருபொழுதும் நினைத்தது கிடையாது.

“சாவ்” என ஒருக் குரல் கேட்க , அது மக்டலீனா.

அட, கடவுளே அனுப்பி வைத்திருப்பார் போல, மக்டலீனா ஆங்கிலம் நன்றாகப் பேசுவாள்.

“மக்டா, உனக்கு ஆட்டுக்கறி எது எனத் தெரியுமா” நான் ஆட்டுக்கறி என்பதை மட்டன் எனக்கேட்டதால் அவளுக்கு விளங்கவில்லை.

இது மாட்டுக்கறி , இது பன்றிக்கறி, இது கோழிக்கறி என ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டு வந்தாள். “நீ எந்தக் கறியைக் கேட்கிறாய், மீன் வேண்டும் என்றால் வலது புறம் இருக்கின்றது”

“இல்லை, இல்லை, எனக்கு மட்டன் வேண்டும், கோட் அல்லது லாம்ப்” ஒரு வேளை என்னுடைய ஆங்கில உச்சரிப்பு அவளுக்கு விளங்காமல் கூட இருந்திருக்கலாம்.

“மன்னிக்கவும் நீ சொல்லுவது எனக்கு விளங்கவில்லை”

பன்றியைப்போல உருவத்தில் சிறியதாக இருக்கும், தலையில் கொம்பு இருக்கும், நம்ம ஊர் ஆட்டின் நினைவாக கருப்பாக இருக்கும் என ஆங்கிலத்திலும் சைகை மொழியிலும் விளக்க முயன்றும் முடியவில்லை.

எந்திரன் ரஜினியைப்போல ம்மெமேஹே எனக்கத்திக் காட்டிவிடலாம் என்ற பொழுது இயேசு நினைவுக்கு வந்தார்.

“உனது கடவுள் இயேசு கூட கையில் வைத்திருப்பாரே ... ஆங்கிலத்தில் குட் ஷெப்பர்ட் என்றெல்லாம் சொல்லுவார்களே, அந்தக்கறி வேண்டும்”

“ஓ அன்யெல்லோ, அல்லது ரோம் நகரத்து வழக்கு மொழியில் அப்பியாச்சி, அது இந்தக்கடையில் கிடைக்காது , அடுத்தக் கடையில் புத்தம் புது கறிக்கிடைக்கும் அங்கு போகலாம் வா” என்றாள்.

அடுத்தக்கடையில் ஆட்டுக்கறி வாங்கிவிட்டு மக்டலீனாவுடன் வெளியே வரும்பொழுது,

“இன்றைக்கு உன் அறையில் ஆட்டுக்கறி குழம்ப்பா, இந்தியர்களும் இத்தாலியர்களைப்போல காரச்சாரமாக சமைப்பார்கள் எனக் கேள்விப்பட்டு இருக்கின்றேன்” என்றாள்.

“உனக்கு நேரம் இருந்தால் வாயேன், உனக்கும் சேர்த்து தமிழ் நாட்டுப்பாணியில் சமைத்துத் தருகின்றேன்”

“இன்றைக்கு வேண்டாம், அடுத்த வாரம் என் வீட்டிற்கு வா, கொஞ்சம் இத்தாலியம் , கொஞ்சம் ஆங்கிலம் நிறைய ஆட்டுக்கறி சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டே கோப்பை வைனுடன்
பேசுவோம்” என்றபடி மக்டலீனா என்னிடம் இருந்து விடைபெற்றாள்.

இனி மொழிக்கும் பிரச்சினையில்லை இனி, செத்தெ, செய், ஜின்குவே, க்வாத்துரோ , துவே, ஊனோ என அடுத்த ஏழு நாட்களை எண்ணியபடி ஆட்டுக்கறியில் அடுத்த அத்தியாயத்தை எழுத தயாராக வேண்டியதுதான். விடுதியின் வரவேற்பறைப்படத்திலிருந்த இயேசுவின் புன்னகை சில மில்லிமீட்டர் அகன்றிருந்ததுபோலத் தோன்றியது.