Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, July 11, 2015

சுடுகாட்டு செல்ஃபி - திகில் சிறுகதை

"கார்த்தி, எங்கேயாவது கல்லறைக்கு ஒரு எட்டு போய்ட்டு வருவோமா"  

"எதுக்குடா கணேஷ்" 

"இப்போதைய டிரென்ட், சுடுகாட்டில இல்லாட்டி கல்லறையில போய் செல்ஃபி எடுத்து சோசியல் மீடியால போடுறதுதான்" 

என் அறைத்தோழன் கணேஷ், தீவிர சமூக ஊடக வெறியன். காட்டாற்று வெள்ளம்போல சமூக ஊடகத்தில் ஏதாவது ஒரு நிகழ்வு ஏற்பட்டால் இவன் காரண காரியமே ஆராயாமல் அதை செய்வான்.  கேள்வி கேட்டால் "இதான் நண்பா , இப்போதைய டிரென்டு" என்பது அவனது பதிலாக இருக்கும். சென்ற ஆண்டு, குளிரடிக்கிற நள்ளிரவில் குளிர்ந்த நீரை தன்மேல் ஊற்றிக்கொண்டதோடு மட்டுமல்லாமல், என் மேலேயும் ஊற்றி ஐஸ் பக்கெட் சாலெஞ் என்றான். ஒரு வாரம் காய்ச்சலடித்து கிடந்தது நான் மட்டுமே. 

"நான் வரலடா கணேஷ், எனக்கு இது தேவையில்லாத விஷப்பரிட்சையா தோணுது, எனக்கு அடுத்தவாரம் கான்பரன்ஸ் பேப்பருக்கு டெட்லைன் வேற இருக்கு, ஒரு சூப்பர் ரெபரன்ஸ் பேப்பர் புடிச்சிட்டா அதை வச்சி என் பேப்பரை முடிச்சுடுவேன், சோ டைமில்லை" 

"கான்பரன்ஸ் கீன்பரன்ஸெல்லாம் கதைவிடாத, பகுத்தறிவு பேசுற உனக்கு பேய் வந்து கடிச்சி சாப்புட்டுறும்னு பயம் கார்த்தி "

"நான் ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டுக்குப்போகனும்" என்ற நடிகர் வடிவேலுவின் மனக்குரல்தான் எனக்கும் கேட்டது. 

நான் என்னதான் பகுத்தறிவு பேசினாலும், கடவுளிடம் இல்லாத பயம் எனக்கு பேய்கள் மேல் உண்டு.  காரணம் மிகவும் எளிமையானது. இல்லை என்று நினைக்கும் கடவுள் வந்துவிட்டால் கூட நல்லம்சமாகத்தான் இருக்கப்போகின்றது. பேய் இல்லை என்று நினைத்து வம்பு பேசி, ஒருவேளை அது உண்மையாகவே வந்துவிட்டால் என்ன செய்வது.  அதனால் நான் வரவில்லை என்று மறுத்தேன். 

"போடா பயந்தாங்குளி, நீ வரலேன்னாலும் நான் போகப்போறேன்" 

இப்பொழுது எனக்கு அடுத்த பயம். ரோம் நகரத்தின் புறநகர்ப்பகுதியில் பெரிய ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் எங்களது வீடு.  கால்நடை தூரத்தில் எங்களது ஆய்வகமிருப்பதால் இவ்வளவு தள்ளி வீடு எடுத்திருக்கிறோம். இவனும் இரவில் கிளம்பிப்போய்விட்டால் எனக்கு தனியே இருக்க பயம். இவன் இஷ்டத்திற்கு கல்லறைக்குப்போய் அங்கு தூங்கிக்கொண்டிருக்கும் பேய்களை தட்டி எழுப்பிவிட்டு வீடுவரை கூட்டிவந்துவிட்டால் என்ன செய்வது என்ற அபத்தமான பயம் வேறு. 

"கணேஷா, நாம போய் போட்டோ எடுத்து, அந்த போட்டோவில் பேய் பிசாசு தெரிஞ்சுட்டா , வேண்டாம்டா பிளீஸ்" 

"கார்த்தி, வெறும் டுபாக்கூர் போட்டோஷாப்பையெல்லாம் நம்புறீயா , நீயெல்லாம் என்ன சயின்டுஸ்டு,   , பேயும் கிடையாது பிசாசும் கிடையாதுன்னு நாம நிருபிக்கிறோம். "

"பொதச்ச பின்னாடி எரிச்ச பின்னாடி திரும்பிப்பார்க்காம போற இந்தியா மாதிரி இங்கே கிடையாது , இவனுங்க கல்லறைக்கு உரிய மரியாதை செய்றவனுங்க , நாம போய் விளையாட்டா கல்லறை மேல நின்னு போட்டோ எடுத்து பேஸ்புக்ல போட்டால், அவமரியாதை செஞ்சுட்டோம்னு எவனாவது வீடு பூந்து அடிக்கப்போறான்டா.. மோர் ஓவர்,  கல்லறை மேல நின்னுக்கிட்டு, படுத்துக்கிட்டு போஸ் கொடுத்து போட்டோ எடுக்கிறது , செத்தவங்களை நிஜமாலுமே அவமானப்படுத்துறதுதான்" 

" நோ நோ உன்னோட பயத்தை எதுக்கு சென்டிமென்ட் போட்டு மறைக்கிற, இனிமே பகுத்தறிவுன்னு எதுவும் பேசாதே , ஷேம் ஷேம் பப்பி ஷேம்" 


"இது சென்டிமென்ட் கிடையாது,  வெறுமனே இல்லைன்னு நிராகரிப்பது மட்டும் பகுத்தறிவு இல்லை, லாஜிக்கலா யோசிக்கிறதும் பகுத்தறிவுதான்.எதுக்காக அனாவசிய ரிஸ்க் எடுக்கனும்,  நாம இருக்கிற ஏரியா ஒரு காலத்துல மாபியா மீட்டிங் பாயின்ட், செத்துப்போனவங்களை இங்கே இருக்கிற கல்லறையிலத்தான் புதைச்சிருப்பானுங்க , நாம போட்டோ எடுக்கிற சமாதிக்காரன்  மாபியாக்காரனுங்களுக்கு சொந்தக்காரனா இருந்தால் என்ன பண்றது,. கல்லறைத்தோட்டம் போதை மருந்து அடிக்ட், டிரக்ஸ் வாங்குறவன் விக்கிறவன் எல்லாம் ஒன்னு கூடுற இடம்னு வேற படிச்சிருக்கேன்.. பிரச்சினையாயிடும்னு தோனுது " 

"இந்த நொரநாட்டியமெல்லாம் வேனாம், வரியா இல்லியா" 

"வரேன் ஒரு கண்டிஷன் கணேஷ், கல்லறையில இருக்கிற ஆட்களோட பேர் வராதபடி போட்டோ எடுக்கனும் சரியா " 

"ஓகே டன்"

 இங்கே தனியாக இருப்பதைவிட கல்லறைத்தோட்டத்தில் துணையுடன் இருப்பது பரவாயில்லை என்பதால் கணேஷுடன் கிளம்பினேன். 

நள்ளிரவில், தேய்பிறை வெளிச்சத்தில் நடக்கும்பொழுது நேரம் ,மற்றவர்களைக் காட்டிலும் மெதுவாக செல்லும் என்று ஐன்ஸ்டீன் அவரோட சார்பியல் கோட்பாட்டில் சொல்லியிருப்பாரோ. குறைந்த தூரத்தை கடக்க  ஏதோ பலமணிநேரம் எடுத்துக்கொண்டதைப்போல ஓர் அசதி .ஒரு வழியாக ஒரு கல்லறைத்தோட்டம் தென்பட்டது.

உள்ளே நுழைந்தோம். முதல் கல்லறை கிறிஸ்டியானோ எர்பானி. கல்லறையின் மேல் நாங்களிருவரும் சாய்ந்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டோம். எடுத்து முடித்தவுடன் எடுத்த படத்தை ஒரு முறை சரிபார்த்துக்கொண்டேன். பேய் பிசாசு எதுவுமில்லை.  அடுத்தது பவுல் ராபின்சன் , பின்னர் யோனஸ் வில்லியம்சன் நான்கவது கல்லறையில் இருந்த  பெயரைப்பார்த்ததும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது.  ஆர்.எஸ்.சுவாமிநாதன் என்றிருந்தது. 

"கணேஷ், என்னமோ தப்பா படுது, இட்டாலியன் கத்தோலிக்க கல்லறையில எப்படிடா சுவாமிநாதன், வேண்டாம்டா போயிடுவோம்" 

"கார்த்தி, பயப்படாதே. செகன்ட் வேர்ட் வார் அப்போ, நிறைய பிரிட்டீஷ் இன்டியன் சோல்ஜர்ஸ் பாசிஸ்டுகளை எதிர்த்து சண்டை போட்டாங்க , அதுல செத்தவங்களை நிறைய இடத்தில் பொதச்சி மரியாதை செஞ்சாங்க , பவுல் ராபின்சன், யோனஸ் வில்லியம்சன் கூடத்தான் இத்தாலியன் நேம்ஸ் கிடையாது .. கூல் கூல் நண்பா" 

சுவாமிநாதன் கல்லறையில் ஏறி நின்று எடுக்கும்பொழுது என் காலணிகளை கழட்டிக்கொண்டேன். பயம் தானாகவே மரியாதை கொடுக்க வைத்தது. 

வந்த வழியே வீடுவந்து சேர்ந்தோம்.  நிபந்தனையின் படி கல்லறையில் பெயர் தெரிந்த படங்களை கணேஷ் முற்றிலுமாக அழித்துவிட்டு எஞ்சியப்படங்களை மட்டும் சமூக ஊடகங்களில் தரவேற்றினான். இத்தாலிய விடியற்காலை, இந்தியாவில் பரபரப்பான நேரமென்பதால் விருப்பங்களும் கருத்துகளும் பகிர்வுகளும் அள்ளின. கணேஷ் நிம்மதியாக தூங்கினான். 

என்னால் தூங்க இயலவில்லை. ஆங்கிலேய, அமெரிக்க , இந்தியப் பெயர்கள் எப்படி கல்லறையில்.. எனக்கு இரண்டாம் உலகப்போர் போர்வீரர் கல்லறைத்தோட்டத்தைப்பற்றி வரலாற்று சுவாரசியம் தொற்றிக்கொண்டது.  முற்றிலும் விடிந்ததும் , முந்தைய நள்ளிரவு நடந்த அதே பாதையில் கல்லறைத்தோட்டத்தை தேடிப்போனேன். 10 - 12 கிலோமீட்டர்கள் நடந்தும் என்னால் அந்த கல்லறைத் தோட்டத்தை கண்டே பிடிக்கமுடியவில்லை.  பாதை மாறி வந்துவிட்டோமா .. இல்லையே சரியான பாதைதான் என்று எனக்குள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, ஒரு கார் வந்து என்னருகில் நின்றது. 

"இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் கார்த்தி"  என்று ஆங்கிலத்தில் கேட்டார் என் பேராசிரியர். 

"ஒன்றுமில்லை, ஆராய்ச்சித்தாள் வேலை நகரவில்லை, ஒரு மாற்றத்திற்காக இங்கு நடந்து வந்தேன்" 

"சரி , வண்டியில் ஏறு"

வண்டியில் ஏறிய பின்னர்

"இங்கே அருகில் ஏதேனும் கல்லறைத்தோட்டமிருக்கிறதா ? குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் மறைந்த பிரிட்டீஷ் அமெரிக்க வீரர்களின் கல்லறைத்தோட்டம்"  


"35 ஆண்டுகளாக இங்கிருக்கிறேன். இந்த சாலையில் கல்லறை எதுவும் கிடையாதே. நிச்சயமாக போர்வீரர்களின் கல்லறை இங்கு கிடையவே கிடையாது... அது சரி, உனது கருத்தரங்க ஆராய்ச்சித்தாளுக்கான நல்லதொரு தரவை காலையில் கண்டுபிடித்துவிட்டேன் உனக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன் , படித்துப்பார்"

எனது நினைவுகள் அந்த இல்லாத கல்லறைத்தோட்டத்தின் மேலேயே இருந்தபோதும் அனிச்சையாக எனது திறன்பேசியில் கணக்கைத் திறந்து பேராசிரியரின் மின்னஞ்சலில் இணைப்பை வாசிக்க ஆரம்பித்தேன்.  அந்த ஆராய்ச்சித்தாளின் ஆசிரியர்களின் பெயர் வரிசைக் கிரமமாக கிறிஸ்டியானோ எர்பானி, பவுல் ராபின்சன், யோனஸ் வில்லியம்சன் , ஆர்.எஸ்.சுவாமிநாதன். 
***********************************************************************************************************************

Saturday, December 13, 2014

திரைவிமர்சகன் - சிறுகதை

மூக்கில் விழுந்த முப்பதாவது குத்தில் மூர்க்கம் அதிகமாக இருந்தது.  அந்த பஞ்ச் அந்த நடிகரிடமிருந்துதான்.

"என்னடா உன் மனசிலே நெனச்சிட்டிருக்கே , லேப்டாப் , கேமரா இருந்தா நீ என்ன பெரிய இவனா"  என்று ஒரு கெட்ட வார்த்தை சொல்லி அறைந்தார்.

"ஆசானே, இவனுங்க இப்படித்தான், படம் ரிலீசுக்கு முன்னாடி பேஸ்புக் டிவிட்டறு , யுடுப் ல எதாவது கட்டுரை கருமாந்திரம்னு எழுதி நம்ம கலெக்ஷனை காலி பன்றது , இவனுங்களை எல்லாம் வெளிய விடக்கூடாது ஆசானே "

தல, தளபதி, தலைவா எல்லாம் கேட்டிருக்கின்றேன்.  அந்த பிரபல நடிகர் என்னைத் திட்டிய கெட்ட வார்த்தை மறந்து 'ஆசானே' என்ற  புதுவிதமான வழிபாட்டு வார்த்தை காதில் ரீங்காரமிட்டது.

எனது பெயர் கார்த்தி. தமிழ், தெலுங்கு, ஒரியா, போஜ்பூரி என்று உலகத்தின் அனைத்து மொழிகளில் வந்திருக்கும் படங்களைப் பார்த்து படித்து விமர்சனம் செய்யும் ஒரு சினிமா ஆராய்ச்சியாளன். என்னை அடித்துக்கொண்டிருக்கும் நடிகர், வேண்டாம் வேண்டாம் பெயர் வேண்டாம் , உங்களுக்குப் பிடித்தவரை நினைத்துக் கொள்ளுங்கள்.  'ஆசானே'  என்ற இந்த நடிகரைப்பற்றி சென்ற வாரம் ஒரு கட்டுரை எழுதிவிட்டேன். இந்தவாரம் அவரின் படம் வரப்போகின்றது.  வரப்போகும் படம் அவரின் திரைவாழ்வை தீர்மானிக்கப்போகின்றது என்று மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் எனது கட்டுரை அந்தத் திரைப்படத்தின் வசூலை பாதிக்கும் என்று என்னை நீக்கச்சொல்லி தாக்குகின்றனர்.

கட்டையால் அடிப்பவனை திரும்பக் கட்டையால் அடிக்கக் கூடாது புத்தியால் அடிக்கவேண்டும். முடிவுக்கு வந்தேன்.

"மன்னிச்சுடுங்க சார், அந்த ஆர்டிக்கிள், ரிலேடட் போஸ்ட்ஸ் கமெண்ட்ஸ் எல்லாம் டெலிட் பண்ணிடுறேன், இனிமேல் இந்தத் தப்பு நடக்காது "

இயல்புநிலைக்கு வந்த நடிகர்  "தம்பி நீங்க எழுதக் கூடாதுன்னு சொல்லல, என்னைப்பத்தி எழுதாதீங்கன்னுதானே சொல்றேன், போயிட்டு வாங்க "

உடம்பெல்லாம் ஒரே வலி. சிவாஜி படத்துல சூப்பர் ஸ்டாரிடம் ஆபிஸ் ரூமில் அடிவாங்கிய ஆட்களுக்கும் என்னைப்போலத்தானே வலித்திருக்கும்.  வீட்டிற்கு வந்த முதல்வேலையாய் என்னுடைய யுடியுப், விமியோ, டிவிட்டர், பேஸ்புக், டம்ளர், கூகுள் பிளஸ் அனைத்து சமூக ஊடகக் கணக்குகளையும் அழித்தேன். அழிப்பதற்கு முன்பே ரஷியாவில் இருக்கும் ஒரு சர்வரில்அனைத்து கட்டுரைகள், வீடியோக்கள் எல்லவற்றையும் சேமித்துவிட்டேன்.

என் பெயரில் பேஸ்புக் / டிவிட்டர் என்று அனைத்திலும் புதுக்கணக்குகளைத் தொடங்கினேன்.

"ஆசான் நடிகரின் ஆசனவாயில் ரசிகர்கள் எனது பழைய கணக்குகளை எல்லாம்  புகார் செய்து நீக்கிவிட்டார்கள் #where​_is_the​_freedom_of_expression " என்று எழுதிவைத்துவிட்டு உறங்கிப்போனேன். மறுநாள் கருத்துரிமை பற்றி எரிந்தது.  ஆசான் நடிகரின் படம் பத்தே காட்சிகளில் பெட்டிக்குள் முடங்கியது.  விழுந்த அடிகளின் வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. மனதும் இலகுவானது. 

Thursday, September 25, 2014

அரசியல் - ஒரு நிமிடக்கதை

"மச்சி, நீ கேளேன், இன்னக்கி அந்த க-கா-கீ கட்சி மாவட்டத்தலைவரை கிழிகிழின்னு கிழிச்சி எழுதின என் பேஸ்புக் போஸ்ட்டை , நம்ம அ-ஆ-இ கட்சி மாவட்டம் லைக் போட்டிருந்தாரு ? "
"பார்த்தேன் மச்சி, நேத்து க-கா-கீ பெரியத்தலைவரை பத்தி நீ எழுதினதுக்கும் நம்ம மாவட்டம் கமெண்ட் போட்டிருந்தாரு "
"நான் செம ஹேப்பி, நாளைக்கு கட்சி மீட்டிங் ல பார்க்கலாம்னு நம்ம மாவட்டம் சொல்லிருக்காரு "
மறுநாள், நம் கதையின் நாயகன் உற்சாகமாக கட்சி கூட்டத்தில் க-கா-கீ பெரியத்தலைவரை மானே தேனே பொன் மானே எல்லாம் போட்டு கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட நாயகனின் மாவட்டம் விழுந்து விழுந்து சிரித்தார். உற்சாகமான நம் கதையின் நாயகன் , அடுத்து க-கா-கீ கட்சி மாவட்டத்தலைவரை ஏக வசனத்தில் பேசப்போக, உடனே எழுந்த நம் நாயகனின் மாவட்டம், மைக்கை வாங்கி, அடுத்ததாக வேறொரு தொண்டர் பேசுவார் என அறிவித்தார். நம் நாயகன் சோகமானான். கூட்டம் முடிந்தவுடன் மாவட்டம் , நம் நாயகனிடம் வந்து
"தம்பி, இன்டர்நெட் வேற, நிஜம் வேற. க - கா - கீ மாவட்டத்தலைவர் என் மச்சான். என்னோட பிசினஸ் பார்ட்னர் வேற ,, நீ அந்த பெரியதலைவரை என்ன வேணுமினாலும் பேசிக்கோ, லோக்கல் மீட்டிங்ல லோக்கல் ஆட்களை திட்டக்கூடாது, அதுவும் சொந்தக்காரன்னா கூடவே கூடாது , என்ன புரிஞ்சுதா ? "
"புரிஞ்சுது சார் "
அரசியலை புரிந்து கொண்ட நம் கதையின் நாயகன், மறுநாள் கட்சியை எல்லாம் மறந்து 'நான் டியூன் ஆயிட்டேன்னு " சினிமாக்காரங்களை கலாய்த்து ஸ்டேடஸ் போட ஆரம்பித்தான்.

Sunday, August 24, 2014

தற்கொலை - சிறுகதை

சென்ற ஒளி ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஒளி ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றன. அதற்கு நான் தான் முக்கிய காரணம். வீம்புக்கு தற்கொலை செய்ய நினைப்பவர்களை பேயாகவும் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களை மனசாட்சியாகவும் பயமுறுத்தி வாழவைக்கும் தெய்வம் நான்.

தற்கொலைகளைத் தடுப்பது பெரும்பாலும் எளிது. தற்கொலை செய்துகொள்ள நினைப்பவரின் பிரிவை யாரால் தாங்கிக் கொள்ள முடியாதோ அவர்களின் நினைவைத் தூண்டிவிட்டால் போதும். ஆனால்இவனின் மனதை மாற்ற கடைசி ஒரு மணி நேரமாக முயற்சிக்கின்றேன்.இவனோ சாவதற்கு துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றான்.

"காதலின் தீபம் ஒன்று "  பாடல் தொலைக்காட்சியில்

"எளவெடுத்த இந்த பாட்டால என் லைஃபே போச்சு" தொலைக்காட்சிப்பெட்டியை உடைத்தான்.

"சாவதை விட வாழ்வது எளிது" இவன் முன்னர் தோன்றினேன்.

"நோ இட்ஸ் எ  ப்ரீடம்"

"மிகப்பெரிய பிரச்சினைகள் விடுதலை என்று நாம் எதை நினைக்கின்றோமோ அந்த விடுதலை கிடைத்த பின்னர்தான் வரும்"

"ஹூ ஆர் யூ , எப்படி என் வீட்டிற்குள் வந்தாய் "

"பேரண்டங்களின்  தற்கொலை தடுப்பு காவலன்"

"செம ஜோக் மச்சி, சாவப்போறதுக்கு முன்ன ஒரு காமெடி பீஸை பார்க்கனும்னு என் தலைவிதி..."  சில நொடிகள் அமைதிக்குப் பின்னர்

"திருடனா நீ ,  இந்தா நான் செத்த பிறகு இந்த வீட்டில இருக்கிற அத்தனையும் உனக்குத்தான் எடுத்துட்டுப் போய் நீயாவது நல்லா இரு"  இரண்டாவது தூக்க மாத்திரையை எடுத்து போட்டான்.

"விளையாட்டுக்கு சொல்லவில்லை. உண்மையாகவே நான் மனிதர்களின் தற்கொலை எண்ணங்களை மாற்றுபவன், இப்பேரண்டங்களின்   காவலர்களின் ஒருவன் "

"ஓகே ஒகே , ஏன் தற்கொலையை தடுக்கவேண்டும், நான் செத்துப் போவதால் இந்த யுனிவர்சுக்கு என்ன நஷ்டம்  " நக்கலாய் ஓரச்சிரிப்பு சிரித்தபடி மூன்றாவது மாத்திரையை எடுத்தான்.

"அதை சொல்ல முடியாது. ஆனால் நீ எந்த எந்த பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்ள நினைக்கின்றாயோ அவை ஒருபோதும் மாறாது , இன்னும் அதிகமாகத்தான் ஆகும் "

"ஒ , மை டியர் திருடன், அந்த பிராபளம்ஸை நான் பார்க்க வேண்டியதில்லையே "

"நீங்கள் பார்ப்பீர்கள்  அனுபவிப்பீர்கள் "

"என்ன, ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாய் அலைவேன்னு சொல்றியா"

"இல்லை இல்லை. உங்கள் பிரச்சினைகளை நீங்கள் அனுபவிக்காமல் தப்பிக்க முடியாது , அதுதான் இப்பேரண்டத்தின் விதி "  நான் சொல்லி முடிப்பதற்குள் ஆறேழு மாத்திரைகளை எடுத்துஇவன் சாப்பிட்டிருந்தான்.

தற்கொலை தடுப்பு முயற்சி தோல்வி அடைந்த கவலையை விட,  தற்கொலையில் இறந்துப் போகப் போகின்ற இவனுக்காக நான் ஒரு பிரதி பேரண்டத்தை உருவாக்கவேண்டுமே என்ற கவலை எனக்கு . தற்கொலையில் இறக்கும் ஒவ்வொருவருக்காகவும் ஒரு பேராண்டத்தை உருவாக்க அதிக ஆற்றல் தேவைப்படுவதால் , ஆற்றல் சேமிப்பிற்காகத்தான்   நான் தற்கொலைகளைத் தடுக்க முயற்சிக்கின்றேன் .  இவன் உயிருக்குப் போராடும் அந்த சொற்ப நேரத்திற்குள் பிரதிகளை உருவாக்கி , இதே நேர பரிமாணத்தில்  இவனை அங்கு வாழவைக்க வேண்டும்.

ஆம் தற்கொலையில் இறப்பவர்கள் ,  நீங்கள் நினைப்பதைப் போல இறந்து விடுவதில்லை. மிச்சம் இருக்கும் வாழ்க்கையை அதே மனிதர்கள் , அதே உணர்வுகள் , இன்னும் கடுமையான சூழலுடன் இணைப் பேரண்டத்தில் வாழ்ந்து முடிக்க வேண்டும்.  இங்கு இறந்த இவன் இணை பேரண்டத்தில் தூங்கி எழுவதைப் போல சாதரணமாக இன்று எழுவான், ஆனால் புதிய உலகில் இங்கிருப்பதை விட ஆயிரம் மடங்கு பிரச்சினைகள் இவனுக்காக காத்திருக்கின்றன. இங்கு ஓடிப்போன காதலி அங்கு இவனுக்கு கிடைப்பாள். ஆனால் மனைவியான பின்னர் ஓடிப்போவாள். மறுபடியும் தற்கொலை செய்துகொண்டால், இன்னும் அதிகப் பிரச்சினைகளுடன் அதே வாழ்க்கையை மற்றுமோர் உலகில் வாழ்ந்தாகவேண்டும்.

உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருக்கின்றனவா? இருந்தால் தொலைத்துவிடுங்கள்.  எனக்கும் வேலை மிச்சம், ஆற்றலும் மிச்சம். எல்லாவற்றையும் விட உங்களுக்கான பிரச்சினைகளை இங்கேயே அனுபவித்து  இயற்கையாக  விடுதலையானால் என்னைப் போல ஆகலாம். இப்பேரணடங்களின் காவலர்களில் ஒருவனாக .. இபேரண்டத்தின் ஆற்றலாக. ஆவீர்களா!!!  .


Thursday, July 17, 2014

பிரதிகள் - சிறுகதை

தொலைபுலன் தொடர்பு மூலம்  என்னை நெருங்கமுடிந்தவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம்.  எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் நட்பு தேவையில்லை என்பது என் கருத்து. அப்படி இருக்கையில் இந்த நட்பு அழைப்பை எப்பொழுது ஏற்றுக் கொண்டேன் எனத் தெரியவில்லை. தானாகவே இணைத்துக் கொள்ளும் இயந்திர முகப்புப் பக்கமாக இருக்கக் கூடும் அல்லது அரசாங்கம் என்னை வேவு பார்க்க அனுப்பப் பட்ட பக்கமாக இருக்கும் என்று நீக்கிவிடலாம் என்று நினைக்கையில்  தொலைபுலன் தொடர்பில்  பேச அழைப்பு வந்தது.

"சமீபத்தில் தாங்கள் எடுத்த  முடிவைப் பற்றி , நாளை எங்கள்  பத்திரிக்கைக்கு ஒரு சிறிய பேட்டி ஒன்றைக் கொடுக்க இயலுமா ? "

அன்று காகிதம், கணினி ; இப்பொழுது தொலைபுலன் தொடர்பு பத்திரிக்கைகள். நினைத்த மாத்திரத்தில் காற்றில் தொடுதிரை உருவாக்கி வாசித்துக் கொள்ளலாம்.

எழுத்தாளர்களிடம் சொற்களை வலியப் பிடுங்கி அரசாங்கப் பிரச்சினைகளுக்குள் சிக்கவைப்பதே இப்பத்திரிக்கைகளின் இயல்பு என்றாலும், கடைசி 10 ஆண்டுகளாக அறிவியல் புனைவுகள், பேய்க் கதைகள், துப்பறியும் கதைகள் என்று இருந்ததால் பேட்டிகளில் எனக்கு பெரிய சிக்கல் இதுவரை இருந்ததில்லை.  சர்ச்சைகளுக்குள் சிக்காத சமகால எழுத்தாளன் நான் ஒருவன்தான். சர்ச்சை இல்லை என்றாலும் என் மேல் இருந்த ஒரே விமர்சனம்  குருதியும் குரூரமும் கதைகளில் மிகுதியாக இருக்கின்றன என்பது . கதைகளைப் படித்த பின்னர் அதைப் பரிட்சித்துப் பார்க்கவேண்டும் என்று தோன்ற வைக்கின்றது என்று சிலர் நினைப்பதாக அரசாங்கம் எனக்கு தகவல் அனுப்பி இருந்தது  . இப்படி எனக்கு  பெரும் புகழைக் கொடுத்த குரூரக்கதைகளை இனி எழுதப் போவதில்லை என முடிவெடுத்து இருக்கின்றேன்.  அந்த முடிவைப் பற்றிதான் பேட்டிக்கு கேட்டிருக்கின்றனர்.

பேட்டிக்கு ஒப்புக்கொண்டுவிட்டு  மீண்டும்என் தொலைபுலன் தொடர்பு பக்கத்திற்கு வந்தேன். 'குரூரமான கதைகளை இனிமேல் எழுதப்போவதில்லை என்ற தங்களின் முடிவிற்கு மிக்க நன்றி ' என்று பல வாசகர்களிடம் இருந்துபாராட்டும் தொனியில் வாசகர் மன்றத்திற்கு தகவல்கள்  வந்து இருந்தன.

எதிர் மறையான பேய்க் கதைகள் எழுதுவதினால், எனக்கே ஒரு திகில் சூழ்ந்த உலகில் நான் மட்டும் தனியாக இருக்கின்றேன் என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. தனிமை அதிகமானால் குரூர கற்பனைகள் இயல்பாகிவிடும்.  அக்கற்பனைகளை அப்படியே எழுத்தாக்கிவிடுவதால் பணமும் செல்வாக்கும்  சிறப்புத் தொழில் நுட்ப வசதிகள்  கிடைத்தாலும் ஒரு வித விட்டேத்தியான விரக்தி மனப்பான்மை இருந்து கொண்டே இருந்தது. கழிவறைக்கு இரவில் செல்ல பயம். கத்தியை எடுத்து தக்காளியை வெட்டக் கூட பயம். நெருப்பைக் கண்டால் பயம். யாராவது தொட்டால்கூட கழுத்தை நெறிக்க வருகின்றார்களோ என்ற பயம். நான் வர்ணிக்கும் குரூரங்கள் எனக்கு நடந்துவிடுமோ என்ற பயம்.

ஒரு நாள் அறிவியல் புனைவு ஒன்றை எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு வாக்கியம் என்னை அறியாமல் மனதில் தோன்றியது.

 'நீ எழுதுவது எல்லாம் வேறு ஓர் இணை உலகில் யாருக்கோ  நடக்கின்றது, உனக்கு நடப்பது எல்லாம் வேறோர் உலகில் யாராலோ  எழுதப்படுகின்றது, எழுதப்படுபவை எல்லாம் யாருக்காவது நடக்கும்,  நடப்பவை எல்லாம்  நிச்சயமாக எழுதப்பட்டிருக்கும், அதுதான் இயற்கையின் நியதி'

கடவுளே, என் குரூர விவரணைகள் நிஜத்தில் நடந்தால்? . அந்த நொடியில்தான்  முடிவு செய்தேன். இனிமேல் நேர்மறைக் கதைகள் மட்டுமே எழுதவேண்டும் என.  உங்களிடம் சொன்ன இந்த உண்மையை  அப்படியே நாளை,  பேட்டியில் சொன்னால் சிரிப்பார்கள்.

' எழுத்தாளன் என்பவன் பலவகைகளில் எழுதி நிருபிக்கவேண்டும். நேர்மறை சமுதாயக் கதைகள் இப்பொழுது எல்லாம் அரிதாகி வருவதால் , நானே களத்தில் குதிக்க முடிவு செய்தேன் '  என்று பொய்யை சொல்லி அரசாங்கத்திடம் பாராட்டுகளைப் பெற்றேன்.

அடுத்து வந்த நாட்கள் முழுவதும் எனது யோசனை,

என் வாழ்க்கைக் கதையை யார் எழுதிக் கொண்டிருப்பர் . ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனித்தனி ஆள் எழுதுவாரா? இல்லை ஒரே ஆளா ? அப்படி எழுதுபவர்தான் கடவுளா ?  அப்படி என்றால் வேறோர் உலகத்தில் இருக்கும் சிலருக்கு நான் தான் விதியை நிர்ணயிக்கின்றேனா ? நான் படைத்த மனிதர்களை நிஜத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? அந்த இணை உலகத்திற்கு போக முடியுமா ? போக முடிந்தால் எப்படி போவது ? . பைத்தியக்காரத்தனமாக யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த யோசித்தலைக் கூட எவனோ ஒருவன் எழுதுகின்றானோ ?

parallel universe என்று தேடி 300 ஆண்டுகள் கோப்புகளில் இருந்து கண்டதையும் படித்தேன். இறந்த ஆத்மா எங்கு வேண்டுமானால் செல்லும் சக்தியைப் பெறும் என்று ஒருவன் எழுதியிருந்தான். இறந்த பின் அறிந்து என்ன பயன், இருக்கும்பொழுதே எனக்கான கடவுளை , கடவுள்களை அறிய வேண்டும்.

 'இப்பேரண்டம் முழுமையும் , இப்பேரண்டத்தில் இருக்கும்ஒவ்வொரு சிறிய துகளிலும்   அடங்கி இருக்கின்றது. '

அச்சிறியத் துகள் அளவுக்கு மாறினால் இணை உலகங்களை அடைய முடியுமோ?

'ஒரு மனிதனால் தன்னை கண்ணுக்குப் புலப்படாத துகள் அளவுக்கு சுருக்கிக் கொள்ள முடியுமா? " என்று தனிஅரட்டையில் நண்பனிடம் கேட்டேன்.  படித்துவிட்டான் என்று காட்டியது , ஆனால் பதில் சொல்லவில்லை. பைத்தியக்காரன் என்று நினைத்திருப்பான்.

அந்த சமயத்தில் ஒரு குழந்தை  பொம்மை விமானத்தை உருட்டி விளையாடுவதைப் போல ஒரு புகைப்படம் எனக்கான திரையில்  மேல் எழும்பியது.  நான் இயந்திர முகப்புப் பக்கம் என்று நீக்க நினைத்திருந்த பக்கம் தான் அது.  ஒரு பொதுவான நண்பர்கள் கூட இல்லை. குழந்தை - பொம்மை விமானப் படத்தைத் தவிர இருந்த ஏனைய படங்கள் எல்லாம்  வரைகலை வடிவப்படங்களாக இருந்தன. எத்தனை முயற்சி செய்தும் நீக்க முடியவில்லை. யோசித்து யோசித்து களைத்து அப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் அனைத்து வகையான தியானம் சம்பந்தப்பட்டவைகளை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதி பெற்று  தொலை புலன் தொடர்பில்  ஏற்றி வாசித்து தியானங்களின் வழியாக இணை உலகத்திற்குப் போக முயற்சி செய்தால் பசி மயக்கம்தான் வந்தது.

இணை உலகத்திற்கு செல்ல  நான் எடுத்த ஒரு முயற்சியும் வெற்றி அடையாததால்  வெறுத்துப் போய் இருந்த சூழலில்  ,  அந்த இயந்திர முகப்பு என்று கருதிய பக்கத்தில் இருந்து ஒரு செய்தி வந்திருந்தது .

"என்னைப் பார், எல்லாம் புரியும்"

குழந்தை - பொம்மை விமானம் அதே முகப்புப் படம், பெரிதாக்கி பார்த்தேன், விமானத்தின் எண் MH370. இது சில நூறாண்டுகளுக்கு  முன்னர் காணாமல் போன விமானம் அல்லவா ?  கடைசி வரை அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லையே அதைப் பற்றி ஒரு வரிக்கதைக் கூட எழுதி இருக்கின்றேனே.. ஒவ்வொருப் புகைப்படமாகப் பார்த்தேன். நூற்றாண்டு பழமை வாய்ந்த படங்களில் வரும் வேற்றுக் கிரக காட்சிகளைப் போல இருந்ததன. கடைசியாக ஒரு வீடியோ. அதை ஓடவிட்டேன். அதில் என்னைப் போல் ஒருவன்... அச்சு அசலாக..  இல்லை அது நானேதான்.

"என்ன கார்த்தி , நலமா ... என்னைத் தானே தேடிக்கொண்டிருக்கின்றாய். உனக்கான அத்தியாயங்களை எழுதுபவன் நான்தான். அதேப் போல் எனக்கான அத்தியாயங்களை எழுதுபவன் நீ .
நீ என்னைத் தேட தொடங்கிய அன்றே உன்னிடம் நான் வந்துவிட்டேன்...  "

பதிவ செய்யப்பட்டது என்று பார்த்தால், அது நேரலை வீடியோ.

"நீங்கள், நீ எந்த உலகத்தில் இருந்து பேசுகின்றாய் , யார் அந்த குழந்தை? எப்படி நான் உன் உலகிற்கு வருவது ? "

"யாரும் யார் உலகத்திற்குள்ளும்  நுழைய முடியாது, வேண்டுமானால் தன்னைத் தேட விரும்பும் எவரும்  தன் பிரதியைப்  பார்க்கலாம், எப்படி நான் உன்னைத் தேடி இப்படி வந்தேனோ அதைப் போல ஒவ்வொருவருக்கு ஒரு தளம் கிடைக்கும் "

"நீ ஏன் என்னைப் போல் இருக்கின்றாய் , உனக்கு பின்னால் வரும் அந்த பெண் யார் ? "

"கார்த்தி, நான் உன்னுடைய மூத்த பிரதி அதாவது , இவ்வுலகத்தில் நீ நானாக முன் கூட்டியே வாழ்கின்றாய்.  இவளை அடுத்த ஆண்டு நீ அறிந்து கொள்வாய், கடைசியாக சொல்கின்றேன்,  நாம் தான் நம் வாழ்க்கை அத்தியாயங்களை எழுதுகின்றோம். வேறு யாரும் எழுதுவதில்லை, எதைப்பற்றியும் குழப்பிக் கொள்ளாமல் நன்றாக தூங்கு, நாளை எல்லாம் சரியாகும்."  வீடியோ நின்றது, அந்த முகப்பும் காற்றுவெளியில் இருந்து சுவடின்றி மறைந்தது.

தன்னையறிந்த இந்த அனுபவத்தையே  பேட்டி கொடுத்தபத்திரிக்கைக்கு என் முதல் நேர்மறைக் கதையாய் அனுப்பி வைத்தேன்.  அதைப் படித்த வாசகிகளில் ஒருத்தியான  அம்மு  தொலை மனத்தொடர்பில் பாராட்டினாள்  .  நட்பு ஆனது. நட்பு காதல் ஆனது. காதல் வந்தால் தனிமை கிடையாது. தனிமையின் வெறுமை மறைந்தால்  இனிமை,  நேர்மறை எண்ணங்கள். முன்பை விட அதிக புகழ் பெற்றேன். ஆண்டுகள் ஓடின. ஒரு   நாள்  எங்கள் அஞ்சலிப் பாப்பாவிற்கு சிறிய விமான பொம்மையை வாங்கிக் கொடுத்தாள் அம்மு. சில நூற்றாண்டுகளுக்கு  முன்னர் காணாமல் போன ஒரு  விமானத்தின் சிறிய வடிவம் அது. குழந்தை குட்டி விமானத்துடன் விளையாட அம்மு அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க ,

ஆவணப் பெட்டகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பல நூற்றாண்டுபழமை வாய்ந்த சமூகவலைத்தளம் ஒன்று என் தொலைபுலன் தொடர்புத் திரையில் காரணமில்லாமல் வந்தது. அந்தகாலத்து வடிவமைப்பு, புரியாத வரிவடிவ எழுத்துக்களுடன் இருந்தது. எனது மென்பொருளினால் எனக்குப் புரியும் வரிவடிவத்திற்கு மாற்றினேன். பேஸ்புக், கார்த்தி அட, என் பெயரில் எவனோ ஒருவன் அந்த காலத்தில் இருந்திருக்கின்றான். ஏதோ ஒரு தகவல் பதிந்து இருக்கின்றான்.

"என் வாழ்க்கைக் கதையை யார் எழுதிக் கொண்டிருப்பர் . ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனித்தனி ஆள் எழுதுவாரா? இல்லை ஒரே ஆளா ? அப்படி எழுதுபவர்தான் கடவுளா ?  அப்படி என்றால் வேறோர் உலகத்தில் இருக்கும் சிலருக்கு நான் தான் விதியை நிர்ணயிக்கின்றேனா ? நான் படைத்த மனிதர்களை நிஜத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? அந்த இணை உலகத்திற்கு போக முடியுமா ? போக முடிந்தால் எப்படி போவது ? . பைத்தியக்காரத்தனமாக யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த யோசித்தலைக் கூட எவனோ ஒருவன் எழுதுகின்றானோ ? "

------------- 





Monday, June 23, 2014

பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி - நீதிக்கதை (எழுதியவர் கிளிமூக்கு அரக்கன் )


பல ஆண்டுகளுக்கு முன்னால் பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி தமிழ்நாட்டில் பிறந்தார். அவர் பியுசி முடித்த கொஞ்ச காலத்திலேயே அவர் தந்தை காலமாகிவிட , குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய கட்டாயம். அவரின் தூரத்து உறவினர்கள் மத்தியப்பிரதேச போபாலில் இருப்பதை அறிந்து அங்கு செல்கின்றார். உறவினர்களும் அருகில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்திற்கு பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டியை நேர்முகத் தேர்விற்கு அனுப்புகின்றனர். குமாஸ்தா வேலைக்கான அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொன்னாலும் , இந்தி தெரியாது என்பதால் நிராகரிக்கப்படுகின்றார்.
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்று பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி ஊருக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றார். ஊர் வந்தவுடன் பால்ய நண்பர்கள் ராமசாமி, தட்சினாமூர்த்தி, ராமச்சந்திரன், லலிதா ஆகியோர் பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டியை உற்சாகப்படுத்தி, கோயம்புத்தூரில் இருக்கும் சிறு தொழிற்சாலைக்கு வேலைக்கு அனுப்புகின்றனர்.
அங்கு ஒரு வேளை சாப்பாட்டுடன் குமாஸ்தா வேலையில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக்கொண்டு பொறியியல் சம்பந்தமான வேலைகளையும் செய்ய விரும்புகின்றார். முதலாளி காமராஜரும் அனுமதிக்கின்றார். பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டியின் உழைப்பைப் பார்த்த காமராஜர் மனமுவந்து , தனது நண்பர் அழகப்பனிடம் பேசி , அழகப்பன் அவர் நண்பர் அண்ணாமலையிடம் பேசி அண்ணாமலை அவர் நண்பர் தியாகராஜனிடம் பேசி ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிடுகின்றனர்.
மீனுக்காகக் காத்திருந்த கொக்காய் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வென்று 20 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிலதிபர் ஆகின்றார். போபால் வடஇந்திய நிறுவனத்தையும் விலைக்கு வாங்குகின்றார். ஆங்கிலத்தில் உரையாற்றி , நீண்ட காலம் தடை செய்யப்பட்டிருந்த இடதுசாரி தொழிலாளர் யூனியன்கள் அனுமதிக்கப்படும் என்று தொழிலாளர்களை உற்சாகமூட்டுகின்றார். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும் பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி
இடம் , பத்திரிக்கையாளர்கள் வந்து,
"உங்களுக்கு இந்தித் தெரிந்து, இந்தியில் உரையாற்றி இருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே" என்ற கேள்வியைக் கேட்டனர்.
அதற்கு பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி சொன்னார்
" இந்தி தெரிந்து இருந்தால், அதோ அந்த கடைநிலை ஊழியர்களில் ஒருவனாக அமர்ந்து கொண்டு வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருப்பேன்"

---
Inspired from THE VERGER by W. Somerset Maugham http://www.sinden.org/verger.html

Tuesday, May 13, 2014

பக்கத்து வீட்டுப்பெண் - சிறுகதை

ஒட்டுக்கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சுவற்றில் காதை வைத்து, அடுத்தவர் வீட்டில் என்னப் பேசிக்கொள்கின்றார்கள் என்பதில் ஏனோ ஓர் ஆர்வமுண்டு. பக்கத்துவீட்டில் பேசிக்கொள்ளப்படும் மொழி எனக்குப் புரியவில்லை எனினும்,வாக்கியங்களின் ஏற்ற இறக்கங்களை வைத்து, சண்டையா, கொஞ்சிக் கொள்கின்றனரா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த புதுக்குடியிருப்புக்கு வந்தபின்னர், ஓட்டுக்கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.

காதில் ஒலிவாங்கியை மாட்டி, பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தாலும், உள்நுழைந்து என் கவனத்தைத் திசைத் திருப்பும் அளவிற்கு பக்கத்து வீட்டில் இருந்து எப்பொழுதும் சத்தம்தான். கணவன் மனைவியா , காதலன் காதலியா என்று தெரியவில்லை.

பக்கத்துவீட்டுப் பெண் அலறிக்கொண்டே இருப்பாள். ஆண் கத்திக் கொண்டே இருப்பான். சமயங்களில் சண்டை நள்ளிரவு வரை நீடிக்கும். ஒருநாள் கதவைத் தட்டி, அமைதிக் காக்கும்படி சொல்லிவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவர்களின் ஆக்ரோசச் சண்டையில் வெளிநாட்டுக்காரனான என்னை அடித்துவிட்டால் என்ன செய்வது என்று காதில் பஞ்சடைத்துக் கொண்டு தூங்கிவிடுவேன்.

ஒருநாள், பக்கத்துவீட்டு, ஆண் கதவைப் பூட்டிவிட்டுப் போவதைப் பார்த்தேன். உள்ளிருந்து பெண்ணின் குரல். எனது அடிப்படை இத்தாலிய அறிவை வைத்து, நான் புரிந்து கொண்டது,

"பூட்டிவிட்டு போகதே, நான் எங்கும் வெளியே போகமாட்டேன்".

கொடுமைக்கார காதலன்/ கணவனாக இருப்பான் போலிருக்கின்றதே. தொடர்ந்து ஒரு வாரம் கவனித்தேன், பெண்ணின் கதறலை மீறி, இவன் பூட்டிவிட்டு செல்வதைப் பார்த்ததும் என்னுள் இருந்த துப்பறியும் சாம்பு விழித்துக்கொண்டான்.

ஒருநாள் எனது வேலைகளை விட்டுவிட்டு, அவனைப் பின் தொடர்ந்தேன். அவனது அலுவலகம் சென்றான். மதியம் உணவு இடைவேளையில், அருகில் இருந்த பூங்காவிற்கு வருகின்றான், மடிக்கணினியைத் திறந்து ஏதோ  பார்க்கின்றான். நடைபழகுவதைப் போல அவன் பின் பக்கம் சென்று என்னப் பார்க்கின்றான் எனப்பார்த்தேன். அவனது வீட்டில் இருந்து நேரலை ஒளிப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சிசிடிவி கேமரா வைத்து, பெண்ணைக் கண்காணிக்கின்றானே. தேர்ந்த கொடுமைக்காரன் போல.

பக்கத்துவீட்டு வாக்குவாதங்களைப் புரிந்துகொள்வதற்காகவே இத்தாலிய மொழியை வேகமாகக் கற்றுக்கொண்டேன். வழக்கமாக ஓங்கி ஒலிக்கும் பெண்குரல் இன்று கெஞ்சிக் கொண்டிருந்தது.

"செத்துப்போய்டவா, ஒழுங்கா சொன்ன பேச்சைக் கேட்கலான்னா, உன் கண் முன்னாடியே கையை அறுத்துக்கிட்டு செத்துடுவேன், நான் வாழனும்னு நீ நினைச்சின்னா ஒழுங்க இரு, யாரையும் எதையும் செய்யவேண்டாம்" என்றான் ஆண்.

பெண் கெஞ்சி கெஞ்சி அழும் குரல் கேட்டு பின் நிசப்தமானது.

மறுநாள், முதன்முறையாக பக்கத்துவீட்டு ஆண், அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தான். அந்தப் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில்,  அவர்களை முந்திச்சென்று, அவளை ஓரக்கண்னால் பார்த்தபடி, அவனுக்கு வணக்கம் சொன்னேன்.

நான் ஓரக்கண்ணால் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, சுட்டெரிப்பதைப் போலப் பார்த்தாள். பார்வையில் பயந்துப்போய் , அவர்களுடன் லிஃப்டில் செல்லாமல், படியில் இறங்கிவிட்டேன். . அன்றிரவு சத்தம் குறையும் என்று பார்த்தால் மறுபடியும் அதிகரித்தது.  ஆண் தான் செத்துப்போகப்போவதாக மிரட்டிக்கொண்டிருந்தான். பெண்ணின் அழுகுரல். யாராவது இவனைக் காப்பாற்றுங்களேன் என்ற குரல்.

உடனடியாக போலிஸிற்கு அழைத்து வரவழைத்தேன். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து, உள் நுழைய மணிக்கட்டை அறுத்துக்கொண்டு இரத்தவெள்ளத்தில் கிடந்தான். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டான்.

அப்பெண்ணை அவ்வீட்டினில் தேடினேன். அவள் இல்லை. சன்னல் எல்லாம் அடைக்கப்பட்டுத்தான் இருந்தது. மெல்ல குடியிருப்பின் சொந்தக்காரரை நெருங்கி,

"இவ்வீட்டில் இந்தப் படத்தில் இருக்கும் பெண்ணும் இருக்கின்றாள் சார், அவளின் குரலைக் கேட்டிருக்கின்றேன், அடிக்கடி சண்டைப்போட்டுக்கொள்வார்கள், இவன் மிரட்டுவான் , அவள் அழுவாள், அவளை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டுப் போய்விடுவான்,"

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,

"அவள் அவனின் காதலி, சிலரால் கொடூரமாக கொல்லப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன, அவள் இறந்தபின்பு இவன் கிறுக்குப்பிடித்தவன் மாதிரி அவளின் குரலிலும் தன் குரலிலும் மாறிமாறிப்பேசிக்கொள்வான், அதைத்தான் நீ கேட்டிருப்பாய்"

அப்படியானால், அவர்கள் இருவரையும் ஒருசேர அன்று பார்த்தேனே!!, பார்த்ததை அவரிடம் சொல்லவில்லை. மருத்துவமனைக்கு விரைந்தேன். கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர் சொன்னார். அவனின் நெருங்கிய நண்பன் என்று சொல்லி மன்றாடி அனுமதிப் பெற்றுவிட்டு அந்த சிகிச்சை அறைக்குள் நுழைந்தேன். அந்தப்'பேய்'ப்பெண்ணும் அங்கிருந்தாள். இந்தமுறை உக்கிரமான பார்வையில்லை.

மெல்ல கண் திறந்த பக்கத்துவீட்டுக்காரன், உடைந்த ஆங்கிலத்தில்,

"இதோ இவள் என் காதலி, இறந்துவிட்டாள், . இவளுக்கு அவளைக் கொன்றவர்களைப் பழிவாங்க வேண்டும்,  பழிக்குப் பழிக்கூடாது என்பது என் நோக்கம். அந்த வாக்குவாதங்களைத்தான் நீ கேட்டிருப்பாயே, என்னை மீறி அவள் வெளியேப்போகக் கூடாது என்பதன் உணர்வுப்பூர்வமான தடைதான் அவளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்வது"

பேய்கள் மனிதர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதைப் பற்றி படித்திருக்கின்றேன். ஆனால், ஒரு பெண் இறந்து பழிவாங்கத் துடிக்கும் பேய் ஆன பின்னரும் காதலின் அன்பின்  கட்டுக்குள் இவன் வைத்திருக்கின்றானே....

"நான் என்ன செய்யவேண்டும், சொல் " என்றேன்.

"இதோ, இந்த மருத்துவக் கவசங்களை நீக்கி என்னைக் கொன்றுவிடு, இவளுடன் நான் வேறுலகத்திலாவது இணைந்து வாழ்கின்றேன்"

அந்தப்பேய்ப்பெண், உக்கிரமான பார்வையில் ,

"இவன் வாழவேண்டும், இவனுக்கு ஏதாவது நேர்ந்தால் உன்னைக் கொன்றுவிடுவேன்"

 "சீக்கிரம் என்னைக் கொன்றுவிடு" என்ற அவன் என்னைக் கெஞ்ச

"அவனை ஒன்றும் செய்யாதே" என்று பேய் அலற, மருத்துவர் கதவைத்திறக்க,

அவனைக் கொன்று விடுதலை செய்யவா, கொல்லாமல் வாழவிடவா
நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் நீங்களே சொல்லுங்கள்.

Tuesday, May 06, 2014

கைப்பட ஒரு கடிதம் - சிறுகதை

"ஏன்டா கார்த்தி, லெட்டரே போட மாட்டேங்கிற"

"எதுவா இருந்தாலும் இமெயில் அனுப்புப்பா, பக்கத்திலதானே பிரவுசிங் சென்டர் நான் இப்போ பிசி"

என்று அப்பாவின் அலைப்பேசி அழைப்பை வெடுக்கென துண்டித்த பின்னர்தான் அந்த பாட்டியைக் கவனித்தேன். கையில் தடிமனான அஞ்சல் உறையுடன் என் வீட்டின் வாசல் அருகே நின்று கொண்டிருந்தார்.  இந்த மலையோர ஆஸ்திரியக் கிராமத்தில், என் வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள வீட்டில் வசிக்கின்றார்.   பாட்டியின் பெயர் எல்ஃபி, வயது எண்பதுக்குமேல் இருக்கும்.

பல்கலைகழகத்தின் அருகில் குடியிருக்க வீடுகளின் மாத வாடகை அதிகமாக இருந்ததனால், 50 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் இந்த கிராமத்தில் குடியிருக்கின்றேன். 1000 பேருக்கும் குறைவாக வசிக்கும் இக்கிராமத்தில் , அனேகமாக நான் ஒருவன்தான் வெளிநாட்டுக்காரன். ஆரம்பத்தில் மாநிறத்தில் ஒருவன் சுத்திக் கொண்டிருப்பதை குறுகுறுவெனப் பார்த்தாலும் கடைசி ஆறுமாதங்களில் சிலர் நல்ல நட்பாகிவிட்டனர்.

அதில் இந்த பாட்டியும் ஒருவர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு ஜெர்மன் தெரியாது.  குத்து மதிப்பாக ஏதாவது புரிந்து கொண்டு அவருடன் ஒரு சில நிமிடங்கள் மாலையில் கல்லூரி முடித்துவிட்டு வரும்பொழுது பேசிவிட்டு வருவேன். இணையம், கம்ப்யூட்டர் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை அவருடையது. ஸ்கைப்பில் ஒரு நாள் அம்முவுடன் பேசிக்கொண்டே வந்தபொழுது, அம்முவை, என் வாழ்க்கையின் ஆண்டாள் என்று  பாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றேன். அவருக்கு ஸ்கைப் தொழில்நுட்பத்தைக் கண்டு வியப்போ வியப்பு. சாதாரண விசயம் அவருக்கு வியப்பைத் தருகின்றதே என்று எனக்கும் வியப்பு.

சென்ற வாரம் முழுவதும் , பாட்டியின் மகனும் குடும்பத்தாரும் பல ஆண்டுகளுக்குப்பின்னர் அமெரிக்காவில் இருந்து வந்திருந்ததால் பாட்டியின் வீடு திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. மகன், மருமகள், பத்து பதினோரு வயதில் இரண்டு பேரப்பிள்ளைகள் , அமைதியாய் இருந்த தெரு கலகலவென இருந்தது. ஒரு நாள் என்னைக்கூட மகனின் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அமெரிக்கா திரும்பிய சில நாட்களில் நியுயார்க்கில் இருந்து பாஸ்டனுக்கு மாற்றலாகப்போவதாகவும் , புதிய அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் நிறைய பேர் தமிழர்கள் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். ஐரோப்பாவைப் போல அல்லாமல் அமெரிக்காவும் அமெரிக்க ஆங்கிலமும் எப்பொழுதும் எனக்கு அந்நியமாகவே தெரியும்.  நட்பின் முதற்படியாக மின்னஞ்சல்கள் பரிமாறிக்கொண்டோம்.

வீட்டிற்குள் பாட்டியை அழைத்தபடி, "மாலை, வணக்கம், என்ன செய்ய வேண்டும் எல்ஃபி?"  உடைந்த ஜெர்மனில் கேட்டேன்.

கையில் இருந்த தடிமனான அஞ்சலைக் கொடுத்தார்.

"நீ, லின்ட்ஸ் போகும்பொழுது, அமெரிக்காவிற்குத் தேவையான தபால்தலை ஒட்டி, தபால்பெட்டியில் போட்டுவிடுகின்றாயா?"

"ஓ நிச்சயமாக"  அஞ்சலை முன்னும் பின்னும் பார்த்தேன். வெறும் மின்னஞ்சல் முகவரி மட்டுமே இருந்தது.

"எல்ஃபி, வெறும் மின்னஞ்சல் மட்டும் இருக்கின்றது, முழுமுகவரி எங்கே"

"இதைத்தான் தனது முகவரி என்று எனது பேரன் கொடுத்தான்"  என்று சிலப்பத்து ஈரோத்தாள்களை தபால் செலவிற்காக நீட்டினார்.

"அனுப்பிவிட்டு வந்து வாங்கிக்கொள்கின்றேன்" என தபால் கவரைப் பெற்றுக்கொண்டேன்.

மறுநாள் கல்லூரியில் இருந்து பாட்டியின் தாள் கடிதத்தின் 10 பக்கங்களை மின்னச்சு எடுத்து, பாட்டியின் பேரனுக்கு மின்னஞ்சல் செய்துவிட்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் பாட்டிக்குக் கொண்டு சேர்க்க பதில் பேரனிடம் இருந்து வந்து சேர்ந்தது. தாளில் பதிப்பித்து எடுத்துப் போகலாம் எனநினைத்தேன். வேண்டாம் என்று முடிவை மாற்றிக்கொண்டு ,

எல்ஃபி பாட்டியின் வீட்டு முகவரிக்கு தபாலில்  கைப்பட எழுதியனுப்பவும் என்று பாட்டியின் பேரனுக்குப்பதில் அனுப்பிய கையோடு, ஒர் ஏ4 தாளை எடுத்து மேசையின் மேல் வைத்து, அன்புள்ள அப்பா நலம் நலமறிய ஆவல் என்று கைப்பட ஒரு கடிதத்தை எழுத ஆரம்பித்தேன்.

                                                                      -------------

Monday, March 31, 2014

காணாமல் போகின்ற விமானங்கள் - சிறுகதை

சில நாட்கள் முன்பு வரை இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகள் தரும் நிறுவனத்தில்  கடைநிலை பொறியாளன் நான். ஆயிரம் பேர் வேலைப்பார்க்கும் நிறுவனத்தில் நேற்று நான் தான் நாயகன். எனது மேசை முழுவதும் பூங்கொத்துகள். நிறுவனத்தின் தலைமை அதிகாரியுடன் மதிய உணவு. ஊடகவெளிச்சம் என நாள் அமர்க்களப்பட்டது.

காணாமல் போன விமானத்தின் இருப்பிடத்தை, 19 ஆம் நூற்றாண்டு இயற்பியல் விதிக்கணக்கீடுகளின் படி கண்டுபிடித்தவர் என என் பெயருடன் ஒருப்பக்கக் கட்டுரை எல்லா நாளிதழ்களிலும் வந்திருந்தன. டாப்ளர் விளைவைப்பற்றி நீட்டி முழக்கி எழுதியிருந்தனர். நானிருக்கும் சமூகஊடகத்தளத்தில், என்னை அவர்கள் வட்டாரத்தில் சேர்த்துக்கொள்ள ஏகப்பட்ட கோரிக்கைகள். ஆண்களை ஒதுக்கிவிட்டு பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்தேன்.

டாப்ளர் விளைவு கணக்குகளின் வழியே , விமானத்தின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்ததற்காக மட்டும், தலைமையதிகாரியிடம் இருந்து பாராட்டல்ல.

தலைமை ஆட்களின் மிகப்பெரிய பலம், சாமனியனுடன் சரிக்குசமமாக அமர்ந்து பேசுவது. ஒருநாள் எனது கணினியில் பலூன் சுடும் விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கையில் எதிரே வந்தமர்ந்தார்.  திடிரென , யாரிடமாவது வந்தமர்ந்து கதை பேசுவது தலைமை அதிகாரியின் வழக்கம். ஊழியர்களிடம் ஆலோசனைக் கேட்பார். சாத்தியமிருந்தால் தொழில்நுட்பரீதியாக நடைமுறைக்குக் கொண்டுவருவார். அப்படியான ஓர் ஆலோசனைதான் விமானங்களில் இணைய வசதி செய்துக்கொடுத்தல்.

"நிறைய விமான சேவைகள் நமது செயற்கைக்கோள் வழி இணையப் பயன்பாட்டு சேவையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன, நமக்கு நல்ல வருவாயும் கூட, அடுத்த நிலைக்குக் கொண்டுவர உன்னிடம் ஏதேனும் குறிப்பு உள்ளதா?"

"விமானத்தை, நேரலையாக செயற்கைக்கோளின் மூலம் கண்காணிக்க, நாம் ஒரு சேவையை வழங்கலாம்"  ஒரு கையால் கணினியில் பலூன்களை சுட்டுக்கொண்டே இருந்தேன்.

"நம்மிடம் தயாராக இருக்கின்றது, ஆனால் பொருட்செலவுக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்"

"சரி, அப்போ நான்கைந்து விமானங்களை சுட்டு வீழ்த்தி காணடித்துவிடலாம்"  எல்லா பலூன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.

அதிர்ச்சியில் தலைமை அதிகாரி இருக்கையை விட்டு எழுந்தார். என்னை அவரது கண்ணாடி அறைக்கு அழைத்துச் சென்ற பின்னர்.

" கடைசியாக என்ன சொன்னாய்"

" நான்கைந்து விமானங்களை காணாமல் போகச்செய்துவிட்டு , தேடிக்கொடுப்போம் , நமது செயற்கைக்கோள் நேரலை விமான கண்காணிப்பு சேவையைப் பற்றி பேச வைப்போம். துயரங்களின் வலியின் மூலம் தேவையை உணர்த்துவோம், வியாபாரத்தைப் பெருக்குவோம்"

"அருமை, ஆனால் எப்படி செய்வது. நமது அரசாங்கம் ஒப்புக்கொள்ளதே?, விசயம் தெரிந்தால் ஒட்டு மொத்த நிறுவனமும் நொடியில் காணாமல் போய்விடும்"

"விமானத்தை திருப்ப ஓருவர், அதை இறக்க ஓரிடம் இவ்வளவுதான் தேவை"

"சரி, விமானிகளில் ஒருவரை சரி செய்துவிடலாம். விமானத்தை எப்படி காணடிப்பது"

"சுனாமிக்குப் பிறகு இந்தியப்பெருங்கடலின் தெற்கில் ஏகப்பட்ட தீவுகள் புதிதாய் உருவாகி இருக்கின்றன. உங்களுக்கேத் தெரியும் அவற்றை எல்லாம் நமது செயற்கைக்கோள் படங்களில் மறைத்துவிடுகின்றோம்  சிலவற்றில் இலங்கையில் போரில் தோற்ற தமிழ்ப்போராளிகள் கூட இருக்கின்றனர் எனச்சொல்லுகின்றனர். ஏதேனும் ஒரு தீவில் அரைகுறையாய் விமான ஓடுதளம் அமைக்க வைப்போம். அதில் ஏதேனும் ஒன்றில் கொண்டுபோய் சொருகவைத்துவிடலாம். பழியை அவர்கள் மேல் போட்டுவிடலாம்"

"உலகம் நம்புமா"

"நம்ப வைக்க செலவு ஆகும் அவ்வளவுதான்"

உலகத்தை நம்பவைக்க கொஞ்சம் செலவு செய்யப்பட்டது. சரிகட்டப்பட்ட விமானி , விமானத்தை இந்தியப்பெருங்கடல் நாங்கள் சொல்லியிருந்த அட்சரேகை தீர்க்கரேகை தீவின் பாதி கட்டமைக்கப்பட்ட ஓடுதளம் ஒன்றில் சொருகினார். தப்பித்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  டாப்ளர் விளைவு கணக்கில் கண்டுபிடித்தோம் என சப்பைக்கட்டு கட்டினோம்.

மூன்றாவது நாளே அரசாங்கம் எங்களது சதியைக் கண்டுபிடித்துவிட்டது, அமெரிக்காவே ஒரு நிறுவனம்தானே,,,, லாபங்களை சொல்லுகையில் சமாதானம் ஆனது.  எங்களது விமானங்களை செயற்கைக்கோள் வழியாக நேரலையில் கண்காணிப்பு செய்யும் சேவைப்பற்றி ஊடகங்களில் அரசாங்கமே பேசவைத்தது.  விமான நிறுவனங்கள் எங்களது சேவையைப் பெருமளவில் பெற்றுக்கொள்ளும் என உறுதியாகிவிட்ட மகிழ்ச்சியில்தான் நான் நேற்று நான் நாயகன் ஆக்கப்பட்டேன்.

அதன் கொண்டாட்டத் தொடர்ச்சியாக என்னை மகிழ்விக்கும் விதமாக இன்று இதோ நான் சுவீடனுக்கு அலுவலக செலவில் அனுப்பப்படுகின்றேன். தங்கநிறக்கூந்தல் அழகிகள்... ஸ்டாக்ஹோல்ம் தீவுக்கூட்டங்கள் , ஸ்கேன்டிநேவியா என்ற கனவில் மிதந்து கொண்டிருந்தேன்.

ஒவ்வோர் அமெரிக்கனுக்கும் ஸ்கேன்டிநேவியா போகவேண்டும் என்பது கனவு. ஒவ்வொரு ஸ்கேன்டிநேவியனுக்கும் அமெரிக்க வரவேண்டும் என்பது கனவு. விமானம் பறந்தது. அமெரிக்கனாக இன்னும் ஏழெட்டு மணி நேரங்களில் எனது ஸ்கேன்டிநேவிய கொண்டாட்டக் கனவு நிறைவேறிவிடும் என நினைக்கையில், மூச்சு முட்டியது, செங்குத்தாக பூமிக்குள் சொருகுவதைப்போன்ற உணர்வு. நாளை செய்திகளில் மற்றுமோர் விமானம் அட்லாண்டிக் கடலில் காணாமல் போனது என நீங்கள் படிக்கலாம். 

Monday, March 24, 2014

ஒரு குட்டிக்கதை - கொஞ்சூண்டு திகில் இருக்கலாம்

'டாக்டர், என் பேர் கீர்த்தனா, ஐடி ல வொர்க் பண்றேன்'
'சொல்லுங்க கீர்த்தனா , என்ன பிராப்ளம்'
'இப்பொவெல்லாம் நடுராத்திரில காதுக்குள்ள டைப்படிக்கிற சத்தம் கேட்டு தூக்கம் கலையுது டாக்டர்'
'காலையிலேந்து , கம்ப்யூட்டர், லேப்டாப் என டைப்பிங் என்விரான்மென்ட்ல இருப்பதுனால அந்த பிரமையிருக்கலாம்'
'பர்ஸ்ட் நானும் அப்படித்தான் நினைச்சேன் டாக்டர், பட் இது நிறைய கம்ப்யூட்டர்ஸ் ல அடிக்கிற டைப்பிங் சவுன்ட் கிடையாது, ஒரு கம்ப்யூட்டர்ல பொறுமையா பத்து கீஸ்ட்ரோக்ஸ் அடிச்சா இருக்குமே அப்படி கேட்குது, அப்புறமா நின்னுடுது'
'பகல்ல இதுமாதிரி கேட்டிருக்கா'
'வீக்டேஸ்ல தெரியல டாக்டர், வீக் என்ட்ஸ்ல , காதுக்குள்ள டைப்படிக்கிறமாதிரி கேட்டிருக்கு, இதோ இப்பக்கூட கேட்குது டாக்டர்'
பல மைல்கள் தொலைவில், அமெரிக்காவின் ஒரு மூலையில் , விடிந்ததும் விடியாததுமாய் கார்த்தி, தனது மின்னஞ்சலுக்கான பாஸ்வேர்டை அடிக்க ஆரம்பித்தான்.  Keerthanaa

Friday, February 14, 2014

அம்முவின் அப்பா - காதலர் தின சிறப்பு சிறுகதை

சென்ற ஆண்டு இதைப் பற்றி நான் யோசித்ததுக் கூட இல்லை. போன வருடம் வரை, என் மகள்அம்மு இங்கு வீட்டில் இருந்து கல்லூரி போய் படித்துக் கொண்டிருந்தாள். படிப்பு முடிந்து போன செப்டம்பரில் இருந்து வேலை நிமித்தமாக  சென்னைவாசியாகிவிட்டாள். சமீபத்தில் வேறு அடிக்கடி கார்த்தி என்ற பையனைப் பற்றி  அடிக்கடி பேசுகின்றாள்.  பழக்கம் பத்து நாட்கள், நட்பு நாற்பது நாட்கள் என ஐம்பதே நாட்களில் காதல் பூத்துவிடலாம். இன்னும் சில தினங்களில் காதலர் தினம் வேறு வருகின்றது.

காதலுக்கும் பயமில்லை, காதலர் தினத்தன்று ஊர்ச்சுற்றுவாளோ என்ற கெட்ட எண்ணமும் இல்லை. நானே காதல் திருமணம் செய்து கொண்டவன் தான்.  என்னுடைய ஒரே பயம், காதலர் தினத்தன்று ஊர்ச்சுற்றிக்கொண்டிருக்கும் ரவுடிகள் தான். முன்பெல்லாம் ரவுடிகள் என்றால் கைலிகள் கட்டி இருப்பார்க்கள், மீசை வைத்திருப்பார்கள், மரு இருக்கும். கண்களில் சிவப்பு நிறம் கொப்பளிக்கும். இப்பொழுது ரவுடிகள், காவித்துண்டு அணிந்து இருக்கின்றார்கள் அல்லது குல்லா வைத்திருக்கின்றார்கள். முன்பெல்லாம் ரவுடிகள் சென்னைத்தமிழ் அல்லது சேரித்தமிழ் பேசுவார்கள். இப்பொழுதெல்லாம் ரவுடிகள் சமஸ்கிருதம், அரபி எல்லாம் பேசுகின்றார்கள், சமயங்களில் ஆங்கிலமும்....

பிப்ரவரி 14, வெள்ளியன்று வருகின்றது, நானும் அம்முவின் அம்மாவும், அப்படியே வார இறுதிக்கு சென்னை வருவதைப்போல போய், பாதுகாப்பாக அவளுடன் இருந்துவிடலாமா...

ச்சே... கருமாந்திரம் பிடித்தவர்களுக்காக, ஏன் என் மனம் இப்படி எல்லாம் யோசிக்கின்றது.   என் பிள்ளைக்கு அத்தனை சுதந்திர எண்ணங்களையும் விதைத்து வளர்த்து இருக்கின்றேன். அவளுக்குத் தெரியாததா... ஒருவேளை கார்த்தியைக் காதலித்தால் அம்முவின் முதல் நண்பனான என்னிடம் சொல்லாமலா இருப்பாள் , ஒருவேளை பிறகு சொல்லிக் கொள்ளலாம் என இருந்தாலும்  வாலன்டைன்ஸ் தினத்தன்று கொண்டாடிவிட்டுத்தான் போகட்டுமே...

விடியற்காலையில் கெட்ட கனவு,  நாங்கள் வெறும் நண்பர்கள் என்று சொல்ல சொல்ல, கார்த்தியையும் அம்முவையும் இரண்டு வகையான ரவுடிகளும் அடிக்கின்றனர். கனவு கலைந்து  எழுந்து செய்தித்தாளைப் படித்தால், கடற்கரை வரும் காதலர்களை விரட்டுவோம் என கூட்டாக ரவுடிகள் பேட்டிக்கொடுத்து இருந்தனர்.

பிப்ரவரி 14 ஆம் தேதியன்று அம்முவிற்கு உடம்புக்கு சரியில்லாமல் போய் அவள் விடுதியிலே இருந்துவிடவேண்டும் என அபத்தமாய் மனம் யோசித்தது.  அம்முவோட அம்மாவிற்கு உடம்புக்கு சரியில்லை, உடனே கிளம்பி வா, என சொல்லி வரவழைக்கலாம் , ஆனால் என் மகளிடம் இதுவரை பொய் சொன்னது இல்லையே ....

கவலைகள், குழப்பங்கள், சஞ்சலங்கள், சங்கடங்கள் அனைத்தின் எரிச்சலையும் அம்முவின் அம்மாவிடமே காட்டினேன். காரணங்களைக் கேட்கவில்லை. வழக்கம்போல சகித்துக் கொண்டிருப்பாளாய் இருக்கும்.  காதலின் மற்றொருவடிவம் சகிப்புத்தன்மை.

பிப்ரவரி 14 , காலையில் வெகுசீக்கிரம் அலுவலகம்  வந்துவிட்டேன். அம்முவின் கைப்பேசிக்கு அழைக்கலாமா... ச்சே வேண்டாம் ..அநாகரிகம்... எந்தக்காலத்திலும் அம்முவிற்கும் எனக்குமான அந்த நட்பை , அப்பா என்ற அதிகாரத்தால் பிடுங்கி எறியக்கூடாது என நினைத்துக் கொண்டிருக்கையில். அம்முவிடம் இருந்தே அழைப்பு....

"மிஸ்டர், சுப்ரமணி, கொஞ்சம் வீட்டிற்கு வரமுடியுமா?" அம்மு உற்சாகமாய் இருந்தால் என்பெயரைச் சொல்லித்தான் அழைப்பாள்.  என் நிறுவனம் என் உரிமை என யாருடனும் சொல்லிக்கொள்ளாமல், வீட்டிற்கு விரைந்தேன்.

"மிஸ்டர் சுப்ரமணி, வேலன்டைன்ஸ் டே அன்னக்கி , நான் காதலிப்பதை, என் அப்பா அம்மாகிட்ட தான் சொல்லனும்னுதான் திடீர்னு கிளம்பி வந்தேன்"

"சொல்லுடாமா ..."

" கார்த்தின்னு சொன்னேன்ல, அந்த பையன் தான், பிடிச்சிருந்துச்சு,  பேசிக்கிட்டோம், அவங்கவீட்டுல அவன் இன்னைக்கி தகவல் சொல்லிடுவான், நான் இங்க வந்து சொல்லிட்டு இருக்கேன்"

அனுமதி என்றில்லாமல், தகவல் என்ற பொருளில் அவள் சொல்லுவது எனக்குப்பிடித்து இருந்தது. ஒரு பெண் குழந்தைக்கான பரிபூரண சுதந்திரத்தை என் மகள் முழுமையாக்கிக் கொண்டு இருக்கிறாள்.

இடையில் கார்த்தியின் பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. பேசினோம். நல்ல நாளில் எல்லாம் நல்லபடியாக அமைந்தது.

இரவு மொட்டை மாடியில், விளையாட்டாய் அம்முவிடம்

"அம்முக்குட்டி, வாலன்டைன்ஸ்டே அன்னக்கி பொதுவா லவ்வர்ஸ் ஊர்தானே சுத்துவாங்க,,,, நீங்க இரண்டு பேரும் எப்படி இப்படி டிசைட் பண்ணீங்க"

".. பிப்ரவரி 14 அன்னைக்கு ரவுடிங்க தொல்லை தாங்க முடியாது, அதனால நாங்க இரண்டு நாளைக்கு முன்னமே வேலன்டைன்ஸ் டே கொண்டாடிட்டோம்."





Saturday, February 08, 2014

520 ஈரோ - சிறுகதை

"இந்த மாசம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் அனுப்ப முடியுமா" என்ற அப்பாவின் மென்மையான வேண்டுகோளும்
"எவ்வளவு நாள்தான்டா கார்த்தி படிச்சிக்கிட்டே இருப்ப, சீக்கிரம் வேலைக்குபோடா" என்ற அம்மாவின் புலம்பலும்  காதில் இருந்து அகன்றுவிட்டாலும் இன்னும்   மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.

நான் ஆராய்ச்சிப்படிப்பு மாணவன்.  ஆராய்ச்சிப்படிப்பிற்கு என் நிறுவனம் தரும் 1000 ஈரோ , வீட்டிற்கு அனுப்ப 500 எனக்கு ஐநூறு என சரியாகப் போய்விடுகின்றது.  நான் ஊர்ச்சுற்ற, வெளிநிறுவனத்திற்கு , மாதத்தில்  நான்கு ஐந்து நாட்கள் மென்பொருள் நிரலி அடித்து கொடுத்தால் இருநூறு முன்னூறு தேறும். பத்து நாட்கள் செய்ய வேண்டிய வேலையை, மாட்டினான்டா மங்குனிசாமி என, இரண்டே நாட்களில் செய்யச் சொல்வார்கள்.  எல்லா மாதங்களிலும் இந்த வேலை கிடைக்காது. வேலை இல்லாத மாதங்களில்  Running Royal Life Only On Photos என முன்பு எடுத்த சுற்றுப்பயண போட்டோக்களை பேஸ்புக்கில் போடுவதோ அல்லது இப்படி இந்த பிரஸ்காட்டி மலை மேல் உட்கார்ந்து தூரத்தில் ரோம் நகரைப் பார்ப்பதிலோ நேரம் போகும்.

 வெப்பமண்டல தமிழ் நாட்டுக்காரன் ஆன எனக்கு ஐரோப்பாவில்  மழைப்பிடிக்கும். குளிர்காலத்தில் மழை பெய்தால் தட்பவெப்பம் சுழியத்திற்கு மேல் இருக்கின்றது எனப்பொருள். மேலும் மேகமூட்டம் வெப்பத்தை வெளியிடாமல் காத்து வைத்திருக்க , குளிர் வாட்டாது. ஆதலால் மனம் மழைக்கு ஏங்கும். இரண்டு நாட்கள் மழை அடித்து ஓய்ந்து இன்றுதான் கதிரவனின் வெளிச்சம் வந்து இருப்பதால் இந்தக் குட்டி மலை நகரத்தின் தெருக்களில் நல்ல சன நெருக்கடி.  காப்பிக்கடைகள் இன்று களை கட்டின. மதியம் வந்ததில் இருந்து மூன்று காப்பிசினோ வகை காப்பிகள் குடித்தாகிற்று.  வெளிச்சம் மறைய வெப்பம்  குறைய  குளிர் என்னை வாட்டியது.  பசி இருந்தால் குளிர் அதிகமாக தெரியும்.  பசியுடன் வருத்தமும் சேர்ந்து கொண்டதால் மென்குளிர் நடுக்கக் குளிராக எனக்குத் தெரிந்தது.

மேலதிகமாக பணம் அனுப்பவில்லை என்றாலும் அப்பா சமாளித்துக்கொள்வார். ஆனால் அனுப்பினால் உதவியாக இருக்கும், யாரிடம் கேட்பது என்ற யோசனையை ஒரே இடத்தில் இருந்தபடி அசைபோடுவது அயற்சியாய் இருந்தது. இரண்டு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து  கீழேப்போய் ரயில் நிலையத்தில் அமர்ந்து ரயிலை வேடிக்கைப் பார்த்தபடி யோசிக்கலாம். ரயிலும் ரயில் நிலையங்களும் பல சமயங்களில் எனக்கு போதிமரம்.

சாலையின் ஓரமாக வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களை ஒன்று இரண்டு என எண்ணிக்கொண்டே, பத்தாவது கார் இருந்த பெஞ்சில் ஒரு தாத்தா உட்கார்ந்திருந்ததால் அவரைக் கடந்து  இருபதாவது கார் அருகே இருந்த மரப்பெஞ்சில் அமர்ந்தேன். ரயில் நிலையத்திற்கு இன்னும் சில கார்களை எண்ணவேண்டும்.

 அந்த தாத்தாவுடன் உட்கார்ந்து இருக்கலாம் . மூன்று காரணங்களினால் அவருடன் உட்காரவில்லை. அவர் பேச ஆரம்பித்தால் என்னால் சரளமாக இத்தாலியத்தில் பேச முடியாது. இரண்டாவது , எனக்கு புன்னகையைக் கொடுத்தாலும் அவரின் தோற்றம் படு ஏழ்மையாக இருந்தது. மூன்றாவது  மணி பத்து ஆகப்போகின்றது, சரியான மேலங்கி கூட இல்லாமல் குளிரில் உட்கார்ந்து இருக்கின்றார். ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகி நமக்கு ஏன் பிரச்சினை என்பதால் தான் இந்த  இருபதாவது கார் அருகே இருந்த பெஞ்ச் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பெஞ்சில் உட்கார்ந்தவுடன் தாத்தா நினைவுப்போய், பணத்தின் நினைவு வந்தது.  என்ன செய்யலாம் என்ற யோசனையின் அசை தொடர்ந்தது. கண்களுக்கு மட்டும் குளிர்வதில்லை.  மனதிற்கு எது தேவையோ அதைக் காட்டும்.   தூரத்தில் ஈரோ பணத்தாள் இருப்பதாக மூளைக்கு சொன்னது. கவலையில் கானல் நீர் தென்படலாம் என பார்வையைத் திருப்பிக் கொண்டேன். உந்தப்பட்ட இரண்டாம் பார்வையில் அது பணத்தாள் என உறுதியானது. பணம் கிடந்த இடத்திற்கு அருகில் இருபத்திரண்டாவது கார் நின்றிருக்கவேண்டும்.  நான் ஓடிய வேகத்தில் 100 மீட்டர் பந்தயங்களில் ஓடியிருந்தால் உசைன் போல்ட்டைத் தோற்கடித்து இருப்பேன். ஓடிய வேகத்திற்குப் பரிசாய் அது 500 ஈரோத்தாள்.   கடைசியாக நான் இப்படி சாலையில் பணம் எடுத்தது , வியன்னா சென்றிருந்த பொழுதுதான். அன்று  ஒரு பத்து ஈரோத்தாள் கிடைத்தது. ஆஸ்திரியாவில் பத்து ஈரோ அல்லது அதற்கு குறைவான மதிப்புள்ள பொருட்கள் கீழே கிடந்தால் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் பெஞ்சில் வந்து அமர்ந்து, பணக்கவலைத் தீர்ந்தது என கடவுளுக்கு நன்றி சொல்லும் தருணத்தில் புதுக்கவலைகள் முளைத்தன.
ஒருவேளை, என்னைப்போன்ற சிரமமான சூழலில் இருப்பவர்கள் பணத்தைத் தொலைத்துவிட்டு போய் இருந்தால் ;
கள்ளநோட்டாக இருந்தால் , இத்தாலியில் இது சர்வசாதாரணம், புழக்கத்திலே இல்லாத ஆயிரம் ஈரோத்தாள் கூட இத்தாலியில் கிடைக்கும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருவதைப்போல பணத்தை தரையில் போட்டுவிட்டு தூரத்தில் இருந்து படம்பிடித்து பகடி செய்யப்போகின்றார்களோ என்ற பயமும் வந்தது.

உன்னுடைய பணம் இல்லை.. வேண்டாம்...
உழைக்காத பணம் ஒட்டாது.
ஆனால் நான் திருடவில்லை. ஏமாற்றவில்லை. தானாகவே பணம் , இயற்கையாய் வந்து விழுந்து இருக்கின்றது.
 முதன் முதலாய் ரோம் வந்து இறங்கியபொழுது, எனது கைப்பை கிட்டத்தட்ட 600 ஈரோ பணத்துடன் காணாமல் போனதற்கான இழப்பீட்டு பணமாக எடுத்துக் கொள்ளலாமே ...
எத்தனை நாட்கள் சம்பளம் இல்லாமல் வேலைப்பார்த்து இருக்கின்றாய் அதற்கான சன்மானமாய் இருக்கட்டும்.
 மனம் இரண்டு பக்கத்திற்கும் பேசியது.  கடைசிப்பேருந்திற்கு இன்னும் நாற்பது நிமிடங்கள் இருந்தன. இங்கிருந்து பேருந்து நிலையம் நடக்க 10 நிமிடங்கள். இன்னும் முப்பது நிமிடங்கள் காத்து இருப்போம்.  யாராவது வந்து தேடினால் கொடுத்துவிடுவோம். இல்லாவிடில் இன்று நான் அதிர்ஷ்டமானவன்.

ஒவ்வொரு நிமிடமும்  மெல்ல நகர்ந்தது.  யாரும் வந்துவிடக்கூடாதே என்று ஒரு புறமும் , முப்பது நிமிடங்கள் எப்படி கரையும் என மறுபுறமும் என்னிடம் நான் அருமையாக நடித்துக் கொண்டிருந்தேன்.  அந்த பத்தாவது பெஞ்ச் தாத்தா மெல்ல ஒவ்வொரு காராக தொட்டபடி என்னை நோக்கி வந்தார்.

கண்டிப்பாக இந்த தாத்தாவின் பணமாக இருக்காது.   அருகில் வந்த தாத்தா,

"இந்த இருபது ஈரோத்தாள் நீ சென்றவழியில் கிடந்தது , இப்பொழுதான் பார்த்தேன் , உன் பணமா " என இத்தாலியத்தில் கேட்டார்.

ஐநூறுடன் மேலும் இருபதா... இதுவரை இரண்டு பக்கமும் வாசித்துக் கொண்டிருந்த மனம், விடாதே வாங்கிக் கொள் என்றது.  முப்பது நிமிட கெடு ஒருமுகம் ஆன ஆசை மனத்தினால் வெறும் 5 நிமிடங்களில் மறந்து போனது.

"ஆம் என்னுடையதுதான் நன்றி " என பொய்யுடன் வாங்கிப் பையில் வைத்துக் கொள்ளும்பொழுது கொஞ்ச தூரத்தில் ஒரு கார் மெல்ல  வருவதையும் கவனித்தேன். ஒருவேளை தொலைத்த பணத்தைத் தேட வரும் காரா !! .

தூரத்தில் ரயிலின் சத்தம் கேட்டது.

"சரி தாத்தா, ரயிலுக்கு நேரம் ஆகிவிட்டது, நல்லிரவு" என மற்றொருப் பொய்யை  சொல்லிவிட்டு நடக்கையில் ,  ஒருகணம் கூடத்திரும்பிப் பார்க்கவில்லை , ஒரு வேளை அந்தக் கார் பணத்தைத் தேடும் காராக இருந்து, தேடுபவர்களைப் பார்த்தால் ஆசைமனம் தோற்றுவிடுமோ என்ற பயம்... நிமிடங்களில் மாறியதற்கு மனம் வெட்கப்படவில்லை. சமாதானத்தை தேடிக்கொண்டிருந்தது.
  ரயில்  எனக்கு போதி மரம் தானே ... ஊர் சுற்றிப்போகப் போகும்  ரயில் பயணத்தில் இந்த 520 ஈரோக்களுக்கு ஏதாவது ஒரு சமாதானம் கண்டுபிடித்துகொள்ளலாம்.  மழைப்புழுக்கமா மனப்புழுக்கமா எனத் தெரியவில்லை...வெக்கையாக இருந்தது.  மென்குளிரை வென்ற வெக்கையுடன்   ரயில் நிலையம் நோக்கி நடந்தேன்.
--------------------


Thursday, February 06, 2014

மேரி - சிறுகதை

சந்தர்லேந்தில் இருந்து 20 மைல்கள் தொலைவில் இருக்கும் இந்த பள்ளிக்கு, அம்மு, நிரந்தர தலைமை சமையல்காரராக வந்ததும் வராததுமாய்   தனது உதவியாளர்கள் லின், ஜாக்குலின் , ஜின், கரோலின் ஆகியோர்களிடம் கேட்ட கேள்வி " மேரி எப்படி இருக்கின்றாள் " என்பதுதான்.

ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்த  அவர்களை அம்மு அப்படி கேட்க ஒரு பெரிய கதை இருக்கின்றது. அந்தக் கதையை நான் உங்களுக்கு சொல்கின்றேன்.  ஆறு மாதங்களுக்கு முன்னர் , இதே பள்ளிக்கு தற்காலிக தலைமை சமையல் ஆளாக அம்மு வந்திருந்த பொழுது நடந்த கதை.   
---
அம்மு, இந்தியத் தமிழ்ப்பெண்,  வடக்கு இங்கிலாந்தில் , அதுவும் வயதில் 50 களைக் கடந்த  உதவி சமையல் ஆட்களுக்கு  வெள்ளையரல்லாத ஒருத்தி அதிகாரம் செலுத்தும் இடத்திற்கு வருவது அறவே பிடிக்கவில்லை.  ஆங்கிலேயர்களுக்கு அன்றும் இன்றும் மற்றவர்கள் ஏவலாட்களாக இருந்தால் பிடிக்கும்.  மேலாளர்களாக , மற்றவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது.   இருந்தாலும் , இரண்டு வாரங்கள் தானே என வெறுப்பைக் காட்டிக்கொள்ளாமல் அம்முவுடன் நட்பு பாராட்டினர். 

" இனிமேல் நாங்கள் நான்கு பேரும் உன் தோழிகள், இன்னொரு தோழியும்  கூட இருக்கின்றாள் "  

" யார் அந்த தோழி , வேலைக்கு விடுப்பா ?"  என்ற அம்முவின் கேள்விக்கு   நான்கு ஆங்கிலேய உதவியாளர்களும் சிரித்தனர். 

" மேரி ,  இந்தப்பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வேலை பார்த்தவள் , ஒரு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே மாரடைப்பினால் இறந்து போனாள்"  

"பயப்படாதே , புதிதாய் வந்து இருப்பவர்களை மட்டும் மிரட்டும், பழைய ஆட்களை ஒன்றும் செய்யாது " என லின் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க 

அம்முவின் கண்களில் கலவரம் தெரிந்தது . இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல்  

"இந்தியாவில் இருந்த பொழுது , உங்களின் ஆங்கிலேயப் பேய்களை விட பயங்கரமான பேய்களைப் பார்த்து இருக்கின்றேன் , சரி வேலையை ஆரம்பிப்போம் "   என பயத்தையும் வேலையாட்களையும் விரட்டினாள். 

ஒரு நாள் கழிப்பறை உட்பக்கமாக தாழிடப்பட்டு இருக்கிறது. மற்றொரு நாள் யாரோ ஓடுவதைப்போல இருக்கின்றது என லின் , ஜாக்குலின் அம்முவிடம் வந்து சொன்னார்கள். 
  
அடுத்த வாரம் ,

 "லின் ... மேசையில் இருந்த இனிப்புகளைக் காணவில்லை  இனிப்பின் காகிதங்கள், குப்பைத் தொட்டியில் கிடக்கின்றன , வெள்ளியன்று நான் தான் சமையல் அறையைப் பூட்டினேன் , இன்று திங்கள் , நான் தான் முதல் ஆளாய் திறந்தேன் .. வார இறுதியில் வேறு யாரவது இங்கு வருவார்களா  "  

"அனேகமாக , மேரி எடுத்து சாப்பிட்டு இருக்கலாம் "  

" நகைச்சுவைக்கான நேரம் இதுவல்ல, லின்,  பொருட்கள் ஏதேனும் காணமல் போய் இருக்கின்றதா எனப்பாருங்கள் " 

கெகெபிக்கெவென நான்கு உதவியாளர்களும் சிரித்ததைப் பார்த்த அம்மு அவர்களைப் பார்த்து முறைத்தபடி 

" தங்களை வைத்து கிண்டல் செய்யப்பட்டால், இந்தியப் பேய்களுக்கு கோவம் வரும், தொடர்ந்து வந்து துரத்தும்...  ஆங்கிலப் பேய்களுக்கு எப்படி எனத் தெரியவில்லை "  

வெட்டியாய் இருத்தல்தான் கிலியைத்தரும். சமையல் கால் பங்கு என்றால், அது சார்ந்த சுகாதாரம்,  சரிவிகித உணவு கண்காணிப்பு , பரிமாறுதல்  வேலைகள்  ஆகியன முக்கால் பங்கு. ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கான உணவு என்பதால் இந்தக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். இந்தக்கவனக்குவிப்பான வேலை மும்முரத்தில் பேயாவது பிசாசாவது என அடிக்கடி சொல்லிக்கொண்டு அம்மு பணிகளில் மூழ்கி போய்விட்டாள். தற்காலிகப் பொறுப்பின் கடைசி நாளன்று ஒரு புகார் ஒன்று வந்தது.  தலைமை ஆசிரியர் , அம்முவை அழைத்து , ஒரு குழந்தை , உணவு சூடாகப் பரிமாறப்படுவதில்லை என , தனது பெற்றோரை இன்று கூட்டி வருகின்றது என சொன்னார். 

உதவியாளர்கள் இந்த பிரச்சினையைப்பற்றி கவலையேப்படாமல்  அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அம்மு, தான் இந்தப்பள்ளிக்கு வந்த நாள் முதல் , உணவு விகிதங்கள் , வெப்ப அளவீடுகள் என அனைத்தையும் அலுவலக  குறிப்பு ஏடுகளில் ஆவணப்படுத்தி வைத்து இருந்தமையால் உதவியாளர்களின் அக்கறை இன்மையை பற்றிக் கவலைப்பட்டதாக தெரியவில்லை.  குழந்தைகளுக்கு உணவுப் பரிமாறப்படும் முன் , சூட்டை அளவு எடுத்துவிடலாம் என்றால் , வெப்ப மணியைக் காணவில்லை.  அதைத் தேடி எடுத்து சூட்டை சோதித்தால் கருவி வேலை செய்யவில்லை. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அம்மு படபடப்பானாள்.  புதிதாக வாங்கிய கருவி. பழுதாக வாய்ப்பில்லை என ஆராய்ந்ததில்  பேட்டரியைக் காணவில்லை.  பேட்டரி கழண்டு கீழே விழும் அளவிற்கு இலகுவான மூடி அல்ல.  

" இறுக்கமாக மூடி இருக்கின்ற வெப்ப மானியில் எப்படி பேட்டரி காணாமல் போகும்  "  

'ஒரு வேளை மேரி எடுத்து இருப்பாளோ "  என்று சொன்ன லின்னைப் பார்த்து ஒரு பேயைப்போல முறைத்தாள் அம்மு. 

அனைவரும் தேடினர். பாத்திரங்கள் வைக்கும் மரப்பலகைக்கு அடியில் சுவற்றை ஒட்டியபடி கிடந்த அந்த சிறிய  பேட்டரியை அம்மு எடுத்தாள், வெப்பமானியை சரி செய்தாள், சூட்டை குறித்துக் கொண்டாள். புகார் செய்த குழந்தையின் பெற்றோர் உணவை சரிப்பார்த்தனர். அவர்களுக்கு திருப்தி.  தலைமை ஆசிரியருக்கும் திருப்தி.  கடைசி நாள் அதுவுமாக பிரச்சினை ஏற்பட்டு நல்லவிதத்தில் சரியானது அம்முவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.  எல்லோரிடமும் இருந்து விடைபெற்றுக் கொள்கையில் , அவளின் உதவியாளர்கள் பேயறைந்ததைப் போல இருந்தனர். 

நான்கு உதவியாளர்களும் , கறி பெண்   என அம்முவை திட்டிக்கொண்டே கூடினர் . கறி என்பது  இந்தியர்களுக்கான பட்டப்பெயர்.  

" ஜாக்குலின்  தானே பேட்டரியைக் கழட்டினாள்" 

" ஆமாம் லின் , இதோ பார், என்னிடம் தான் இருக்கின்றது, அப்புறம் எப்படி அந்த கறி பெண்ணிற்கு பேட்டரி கிடைத்தது " 

'ஒரு வேளை மேரி "  என்றாள் லின் . 

---

இதுதான் ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்த கதை. இருங்கள் ... இருங்கள் , கதை முடியவில்லை.  உண்மையில் வெப்பமானியை வாங்கும் பொழுது ஒன்றிற்கு இரண்டாய் பேட்டரிகளை அம்மு வாங்கி வைத்து இருந்தாள்.  பேட்டரியைக் காணவில்லை என்றவுடன்,  இவர்கள் தான் எடுத்து இருப்பார்கள் என அவளுக்குப் புரிந்தது.  படபடப்பானதைப் போல காட்டிக்கொண்டு , பேட்டரியை அடியில் உருட்டி விட்டு பயம் காட்டியவர்களுக்கே பயம் காட்டிப் போனவள் தான் திரும்ப நிரந்தர தலைமையாக வந்து இருக்கின்றாள்.   சரி இந்தக் கதை எனக்கு எப்படித் தெரியும்  ....தெரியும்   தெரியும்   ....இதை எல்லாம் பார்த்தவள் நான்...நான் தான் மேரி. 

Sunday, February 02, 2014

எருதின் புண் - சிறுகதை


ஞாயிறு அன்று 12 மணிவரை தூங்குபவன், ஆனால் எட்டு மணிக்கே எழுந்து சிவஞானத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆழ்வார்திருநகர் பக்கம் நீங்கள் வந்து இருந்தால் அச்சு அசப்பில் ஒரே மாதிரி இரண்டுவீடுகளைப்
பார்த்து இருக்கலாம். அந்த இரண்டுவீடுகளின் சொந்தக்காரர்தான் சிவஞானம்.  நான் அந்த வீடுகளில் ஒன்றில் குடித்தனம் இருப்பவன்.  அனேகமாக வீடு வாடகையை ஏற்றத்தான் வருகின்றார் என யூகித்து இருந்தேன். சென்ற ஆண்டு ஆயிரம் ரூபாய் ஏற்றினார்.

"முரசொலி படிச்செல்லாம் அறிவை வளர்த்துக்க முடியுமா என்ன?" என்ற வழமையான குசும்புடன் வெளி இரும்புக்கதவை உள்ளே தள்ளியபடி வந்தார் சிவஞானம்.  அவரின் கையில் இருந்த தினமலரை வாரமலருக்காக பெற்றுக்கொண்டேன்.

சிவஞானம் என்ற பெயரை , அவரின் பெற்றோர்கள் சிலம்புச்செல்வர் ம.பொ.சி நினைவாக வைத்தனர் என கேட்காமலேயே அடிக்கடி சொல்லுவார். ம.பொ.சி அவரின் நெருங்கிய சொந்தக்காரர் எனப் பெருமைசொல்லிக்கொள்வதற்காக அவர் போடும் முதல் வரி என்பது நீண்ட நாட்கள் கழித்துத்தான் புரிந்தது.  திமுக என்றால் அவருக்கு ஆகாது, கலைஞர் என்றால் அவருக்கு அப்படி ஒரு வெறுப்பு.

"என்ன உங்கத் தலீவர் டெசோ கிசோன்னு எதுவும் வேலை ஆரம்பிக்கலியா ? எலக்‌ஷன் டைம் வேற நெருங்கிடுச்சு"

மனைவியிடம் கூட கிண்டலுக்கு பதில் நக்கல் அடித்து விடலாம்.  ஆனால் வீட்டு உரிமைக்காரர்களிடம் ஸ்ட்ரிக்ட் நோ நோ.

ஆக, கலைஞர், பாராட்டு விழாக்களில் ஒரு ஓரசிரிப்பு சிரிப்பாரே, அதைப்போல சிரித்துக் கொண்டேன்.

"தமிழ்த்தலைவன்னு சொல்லிட்டு , சிங்களத்தமிழர்களுக்கு இப்படி துரோகம் செஞ்சிருக்கக் கூடாதுப்பா..."

ஆத்திரம் வந்தது. கலைஞரை கேலி செய்ததற்காக அல்ல. சிங்களத்தமிழர்கள் என்றதற்காக... அம்மு நான் ஆத்திரப்படும்பொழுது எல்லாம் சரியாக கண்டுபிடித்துவிடுவாள். ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தி நான் சிரிக்கும்பொழுது அது மிஸ்டர் பீன் சிரிப்பைப்போல இருக்குமாம்.  என் மிஸ்டர் பீன் சிரிப்பை ஆமோதித்தலாக நினைத்துக் கொண்டு கலைஞரை தொடர்ந்து வசைப் பாடிக்கொண்டிருந்தார். எனக்கு மனம் எவ்வளவு வாடகை ஏற்றப்போகிறார் என்பதில்  இருந்தது.

"சரி, தம்பி, இந்த மாசத்தில இருந்து வாடகை 2000 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்துடுங்க" என்றார்.

தனிவீடு, கார் பார்க்கிங் இப்படி ஒரு வீடு சென்னையில் கிடைப்பது சிரமம் என்பதால், 2000 ரூபாய் ஏற்றம் அதிகம் என்றாலும் ஏற்றுக்கொண்டேன்.  காப்பி, மிக்சர் உபசரிப்புகள் முடிந்தவுடன் , வாரமலரில் சினிமா கிசுகிசு செய்திகளின்
சுவாரசியத்தினால், வாரமலர் இணைப்பை மட்டும் என்னுடன் வைத்துக்கொண்டு தினமலரை அவரிடம் திருப்பிக் கொடுத்தேன்.

வீட்டு வாசற்படி சென்றவர், திரும்ப வந்தார். "யோகநாதாராசா வீட்டிற்கும் போறேன். நீங்களும் கூட வர்றீங்களா" எனக் கூப்பிட்டார்.

யோகநாதராசா இன்னொரு வீட்டின் குடித்தனக்காரர். ஈழத்தமிழர். தன் மனைவியுடன் இங்கு வசிக்கின்றார். அவரின் மகன்கள் பிரான்சில் புகலிடம் விண்ணப்பம் கொடுத்து நீண்ட நாட்களாகக் காத்திருப்பதால் எப்பொழுதும்
மென்சோகத்துடன் தென்படுவார். கள்ள முகவர்கள் , எப்படி , அவரின் மகன்களை பிரான்சு என சொல்லி உருகுவேயில் இறக்கிவிட்டதையும் அங்கு கையில் சல்லிக்காசு இல்லாமல் கஷ்டப்பட்டதையும் சொல்லும்பொழுது, கடினமான உள்ளம் படைத்த காரியகார என்னையும் உலுக்கும்.

நான் கலைஞரின் ரசிகன் என்றாலும் யோகநாதாராசா "என்னய்யா , உங்க அய்யா எங்களை ஏமாத்திட்டாரே" சொல்லும்பொழுது மனதைப்பிசையும்.  நேரிடையாகப் பாதிக்கப்பட்டவர்களிடம் அறிவுப்பூர்வ அரசியல் பேசுவது அழகல்ல என்பதால் பதில் சொல்ல மாட்டேன். அவர் பேசுவர் நான் கேட்பேன். புலிவேசம் போடாத புலியாக இருந்தபோதிலும் சகோதரயுத்தம் தொடங்கி ராஜபக்சேவை வெற்றியடையச் செய்தது வரை புலிகளின் அரசியல் தடுமாற்றங்களைச் சொல்லுவார். பல சமயங்களில் கேட்டல் வழி வரலாறு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை விட உண்மையாக இருக்கும்.

பாரிசில் இருந்து எனக்கு ஏதாவது தேவையா எனக் கேட்பார். நான் வேண்டாம் என மறுத்துவிடுவேன். பாரிசில் அலுவலக விசயமாக ஆறு மாதங்கள் இருந்திருக்கின்றேன். தூங்க கூட நேரமில்லாமல் தட்டுக்கழுவி குருவியாய் ஈழத்தமிழர்கள் எப்படி காசு சேர்ப்பார்கள் என்பதை கண்ணால் பார்த்து இருக்கிறேன்.  குருவிகளிடம் பங்கு கேட்கும் கோட்டானாக ஆக நான் விரும்பியதில்லை.

"உங்களுக்கு இதில எந்த கஸ்ரமும் இருக்காது.மகன்மார் எல்லாரும் வெளிநாட்டில தானே இருக்கிறாங்க..இந்த மாசத்தில இருந்து வாடகைய அஞ்சாயிரத்தால கூட்டலாம்னு இருக்கேன். ஈரோல பாத்தா கொஞ்சம் தான் வரும்.அத சொல்லலாம் எண்டு தான் வந்தனான்"

இமிடேடட் ஈழத்தமிழில் சிவஞானம் யோகநாதராசாவிடம் பேசினார்.  சிவஞானம் யோகநாதராசாவிடம் நெருக்கம் காட்டுவதற்காக ஈழத்தமிழில் பேசுகின்றார் என்பது என் அவதானம்.

யோகநாதராசா முகத்தில் சலனமின்றி சரி எனத் தலையாட்டினார்.   பார் கண்ணா பார், உனக்கு நான் மற்றவரைவிட குறைவாக வாடகைக்கு வீடு தந்து இருக்கின்றேன் என தனது பெருந்தன்மையை பறைசாற்றிக் கொள்வதற்காகத்தான் சிவஞானம் என்னை உடன் வரச்சொன்னார் என்பது புரிந்தது.

'பிறகு,மகன்மார ப்ரான்ஸில இருந்து நல்ல வைன் போத்தில் ஒண்ட அனுப்ப சொல்லிவிடுங்களேன்?'

யோகநாதராசா அதற்கும் சரி என்றார். சிவஞானம் விடைபெற்றுக்கொள்ள யோகநாதராசா என்னை இருந்துவிட்டு போக சொன்னார்.

'மகன்மாரோட விசாவ ரிஜெக்ட் பண்ணிட்டாங்க கார்த்தி,எப்ப கலைச்சுவிடுவாங்கன்னு பயந்துகொண்டு கள்ளமா இருக்கிறாங்க. இதுல .போன ஒரு வருசத்தில நாலு தரம் வாடகைய கூட்டிறாங்க , என்ன செய்றதுன்டு தெரியல்ல.'  யோகநாதராசாவின் கண்கள் கலங்கின. 

Sunday, January 26, 2014

ஒரு வாளி ஆக்சிஜன் - தமிழாக்கம் - மின்னூல் வெளியிடு

ஓலைச்சுவடிகளின் இடத்தைத் தாள்கள் இடம்பிடிக்க சில நூற்றாண்டுகள் ஆனது. குறிப்பிட்ட காலத்திற்குப்பின்னர் ஓலைச்சுவடிகளே ஒழிந்து போனது. ஆனால், தாள்களை கையடக்க கணினி கருவிகள் , நூற்றாண்டுகள் எல்லாம் எடுக்காமல் வெகுவிரைவில் இடம்பெயர்த்துவிடும். அடுத்தத் தலைமுறை வாசிப்பு மின்னூல்களில்தான் நடைபெற போகின்றது.

வரும் முன் அறிவோம் என்பதன் படி, எனது சிறுகதைத் தொகுப்பை அடுத்து, www.FreeTamilEbooks.com தளத்தின் வழியாக என்னுடைய முதல் மொழிப்பெயர்ப்பு முயற்சியையும் மின்னூலாக வெளியிடுகின்றேன்.
வழக்கம்போல இது பொதுவானது, உள்ளடக்கத்தை சிதைக்காமல் எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வணிகரீதியாக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். Creative Commons -Commercial -  Non Derivative

ஒரு வாளி ஆக்சிஜன் ஓர் அறிவியல் புனைவு. ஆங்கிலத்தில் அமெரிக்க அறிவியல் புனைவு எழுத்தாளர் Fritz Leiber, A Pail of Air என்றத் தலைப்பில் எழுதி இருந்தார்.  கருப்புக் கதிரவன், நமது பூமியைக் கடத்திப் போய்விட்டால், இருள் சூழ்ந்த உலகில் தப்பிப்பிழைத்த கடைசிக் குடும்பம் என்னவாகின்றது என்பதுதான் கதைக்கரு.

பெரியவர்களுக்கு மட்டுமல்லாது, சிறுவர்களுக்கும் ஏதாவது அறிவியல் புனைவு ஒன்றை வாசிக்கக் கொடுக்க நீங்கள் விரும்பினால் இதைத் தரவிறக்கிக் கொடுக்கலாம்.

மின்னூலைத் தரவிறக்க :- http://freetamilebooks.com/ebooks/one-bucket-oxygen/

Saturday, January 11, 2014

இவருக்குப் பதில் இவர் - சிறுகதை


"இந்த வீடு நல்ல ராசியான வீடாம், நினைச்சது எல்லாம் நடக்குமாம், ஹவுஸ் ஓனர் சொன்னதைக் கேட்டியா?"   நான் சொன்னதை கவனிக்காமல்

'சூப்பர், இந்த  கேரக்டருக்கான ஆளை மாத்திட்டாங்க ... '  என அம்மு குதித்தற்கான காரணம் அவளுக்குப் பிடித்த தொலைக்காட்சித் தொடர் ஒன்றில், தொடர்கள் அடிக்கடி செய்யக் கூடிய 'இவருக்குப் பதில் இவர்' என ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவருக்குப் பதிலாக பிரபலமான நடிகர் ஒருவரை மற்றியதுதான்.

'சீரியல்ல ஆளை மாத்துற மாதிரி, இவருக்குப் பதில் இவர் என வாழ்க்கையிலும் ஆளை மாற்றும் வாய்ப்பு இருந்தால் எப்படி இருக்கும்?"

அம்மு மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.  அந்தப் பார்வை ஏதோ சண்டைக்கான அடித்தளம் போல இருந்தது.

"அப்படி மாத்தலாம்னு இருந்தால், யார கார்த்தி, நீ மாத்துவ'

சரியான அளவில் கால்களுக்கும் மட்டைக்கும் இடையில் எறியப்பட்ட பாதங்களைப் பதம்பார்க்கும் பந்து. இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது எனத் தெரியவில்லை.

"சும்மா, ஒரு கியுரியாசிட்டி, டிஸ்கஷனுக்காக கேட்டேன் அம்மு, நெவர் மைன்ட்"

"நானும் கியுரியாசிட்டிலதான் கேக்குறேன், எனக்கான உருவத்தைத் தானே மாத்திடுவ.... " இது மூக்கை உரசிச் சொல்லும் பவுன்சர்.

பந்துவீச்சாளர்கள் கடுங்கோபத்தில் பந்து வீசும் பொழுது, ஒன்றும் செய்யாமல் எப்படியாவது ஒப்பேத்திவிடனும். அப்படி இல்லை எனில், ஒன்று பெவிலியன் அல்லது ஹாஸ்பிடல்.  நான் பதில் சொல்லவில்லை.

"உனக்கு இன்னும் அவளை மறக்க முடியல கார்த்தி, ரிப்ளேஸ்மென்ட் சான்ஸ் கிடைச்சா, நான் தான் பர்ஸ்ட் பலியா இருப்பேன், அப்படித்தானே"

"அம்மு, லிசன் ... முகமும் குரலும் மாறினாலும், இந்த சீரியல்ல கேரக்டர் , மத்த கதாபாத்திரங்களோட நட்பு உறவு எல்லாம் அதேதானே , என் அம்முன்னா வெறும் முகமும் குரலும் மட்டுமில்ல, அவளோட கேரக்டர் , அன்பு பாசம் நேசம் எல்லாம், இதை எல்லாம் ரிப்ளேஸ் செய்ய முடியாது"
என்று ஒருவழியாக பந்தைத் தடுத்தாடினேன்.

சிலவினாடிகள் மௌனத்திற்குப்பின்னர், "சரி, அம்மு உனக்கு அப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா யாரை மாத்துவ"  கவர் டிரைவ் என நானே நினைத்துக் கொண்டு கேள்வியைக் கேட்டேன்.

என் கேள்வியைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாதவள் போல , மடிக்கணினியை திறந்து , யுடியூபில் மீண்டும் அந்தத் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்க ஆரம்பித்தாள்.

 பெண்கள் தங்களுக்குப் பதில் தெரியாத, பதில் சொல்ல விரும்பாத கேள்விகளை எப்படி தவிர்ப்பது எனத்தெரியும்.  ஆண்கள்தான் வேலை மெனக்கெட்டு பொய்யாக இருந்தாலும் ஏதாவது ஒரு பதிலை சொல்லுவார்கள்.

என் எண்ணம் எல்லாம், அந்த 'இவருக்குப் பதில் இவர்' என்பதிலேயே இருந்தது.

 அம்மு சொல்லுவதைப்போல , அம்முவை மாற்றி இருப்பேனோ... மாற்றி இருந்தால் யாரை வைத்து அவளை மாற்றி இருப்பேன். என் முதல் காதலி... இருக்கலாம். முதல் காதலின் பிரெஷ்னெஸ் மழைச்சாரல்.   அம்மு கியுட் தான், ஆனால் என்னுடைய ஆரம்ப இருபதுகள் மனநிலைக்குப் போனால், முதல் காதலி செம கியுட். முதல் காதலியின் முகம் மற்றும் குரல்  ஆகியவற்றுடன் அம்முவோட அன்பு பாசம் நேர்மை அர்ப்பணிப்பு அட்டகாசமாக இருக்கும் தானே !!!

இன்றைக்கான அத்தனைத் தொலைக்காட்சித் தொடர்களையும் அம்மு பார்த்து முடித்துவிட்டாள் என்பதை அவள் என் தோளைத் தொட்டு , முகத்தைத் தோள்பட்டையில் வைத்துக் கொள்கையில் புரிந்து கொள்ள முடியும்.

"புது வீடு, புது வாசம் புதுசா ஏதாவது டிரை பண்ணுவோமா " என அவளை அணைத்துக் கொண்டேன்.  விடியல் விரைவாகவே வந்தது.

அதிகாலையில், ஒரு பெண்ணின் குரல் குளியல் அறையில் இருந்து அலறலாகக் கேட்டது. எங்கேயோ கேட்ட குரல்.

முகத்தைப் பொத்திக் கொண்டு "கார்த்தி, இங்கே பாரு என் முகம் வேற மாதிரி கண்ணாடியில் தெரியுது"

கண்ணாடியில் தெரியும் முகமும் அவளின் முகமும் ஒன்று. அவள் என் பழையக் காதலி. இவளுக்குப் பதில் அவளா...

திரும்பக் கண்ணாடியைப் பார்த்தேன். அய்யோ !!! இது நானில்லை. வேறு ஒருவன். அம்மு முகத்தில் இருந்து கைகளை விலக்கினாள்.

"ஜீவா,,,, நீயா ,,, நீ இங்க எப்படி... கார்த்தி "

 எனக்குப் பதில் அவனா.

என்னை விட ஜீவா , அழகா இருந்திருப்பான் போல.

அம்மு திகில் அடித்ததைப்போல இருந்தாள். வீட்டில் இருக்கும் அத்தனை கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினாள்.

அவள் அளவுக்கு எனக்கு திகிலும் இல்லை கோபமும் இல்லை.
வாழ்க்கையில் இனி என்ன வேண்டும், முன்னொரு காலத்தில் நான் உருகி உருகி காதலித்தப் பெண் வடிவில் , இன்று என்னை உருகி உருகி நேசிக்கும் பெண். அவளுக்கு அவள் ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்த ஆணின் உருவில் நான்.  எனக்கு இது வின் - வின் சூழலாகத் தெரிந்தது.

"அம்மு, ஒருவேளை நம்முடைய பிரமையாக இருக்கும். ஒரு போட்டோ எடுத்துப் பார்ப்போமா"

புகைப்படத்திலும் எனக்குப்பதில் அவன், இவளுக்குப்பதில் அவள்.  இதுக் கூட தோற்ற மயக்கமாக இருக்கலாம் என பேஸ்புக்கில் புகைப்படத்தைத் தரவேற்றினால்.


"யார் இவர்கள், உங்களது தோழர்களா " என நண்பன் ஒருவன் கேட்டு இருந்தான்.

 உண்மையிலேயே எங்களை அவர்கள் ரிப்ளேஸ் செய்துவிட்டார்கள் என்பது விளங்கியது. எனக்கு திகிலை மீறிய கிளுகிளுப்பு இருந்தது. புத்தம் புதிதாய் ஒரு புதிய பெண் என் படுக்கை அறையில், எனக்கானவளாய்.

வாழ்க்கை என்ற நுண்கணிதத்தில் ஆண்கள் தொகைநுண்கணிதம் போல. அவர்களால் வாழ்க்கையில் அனைத்தையும் அரவணைத்துச் செல்ல முடியும்.

அம்முவின் தோளைத் தொட்டேன், விலக்கினாள்.

"வேண்டாம் கார்த்தி, தொடாதே !!  "  அம்முவின் அழுகையை நிறுத்த முடியவில்லை.  அன்றைய நாள் முழுவதும் வீட்டை விட்டு வெளியேப்போகவில்லை.  யாரைப்பார்ப்பது என்ன செய்வது எதுவுமே தெரியவில்லை.  அம்முவை கார்த்தையையும் நாங்கள் கொன்றுவிட்டோம் என கைது கூட செய்யப்படலாம்.

கண்ணாடித்துகள்களை எல்லாம் கூட்டிப்பெருக்கினோம். நேற்றைய மீத சாப்பாட்டை சாப்பிட்டோம்.  அம்மு தொலைக் காட்சித் தொடர்களின் அன்றைய பகுதிகளைப் பார்க்க ஆரம்பித்தாள். தோளைத் தொட்டாள் சாய்ந்தாள். அணைத்து முத்தமிட முயற்சிக்கையில் தள்ளிவிட்டாள்.

"நீ கார்த்தி தான், ஆனால் என் கண்களுக்கு நீ அவன்... எனக்குப்பிடிக்கல கார்த்தி, உன் கூட எந்தவிதத்திலும் நெருக்கமாக இருக்க என்னால் முடியாது , செத்துடலாம் போல இருக்கு... நான் செஞ்ச ஒரே தப்பு, நேத்து நீ அந்த கேள்வியைக் கேட்டப்ப , நீ ஒருவேளை ஜீவா உருவத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என யோசிச்சதுதான்... ஆனால் சத்தியமா உன்னைத் தவிர உன்னிடத்தில் வேறு எந்த உருவத்தையோ குரலையோவைக்க முடியாது"

பெண்கள் வகைநுண்கணிதம் போல. பகுப்பாய்வின் அடிப்படையில் வாழ முடியும். ஒன்றை பழைய காலத்தில் பிடித்து இருந்தாலும், காலம் கடந்து பழையது மீண்டு வந்தாலும் பகுத்து அவர்களால் ஒதுக்க முடியும்.

இருவரும் விலகியேப் படுத்துக் கொண்டோம்.  இந்தப் பாழாய்ப்போன வீட்டிற்கு ஏன் குடிவந்தோம் என இருந்தது.  விடியல் நீண்டு கொண்டே இருந்தது. எப்பொழுது தூங்கினேன் எனத் தெரியவில்லை, காலையில் கார்த்தி என காது மடல்களுக்கு அருகே அம்முவின்  குரல். கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். இமைகளை  மெதுவாகத் திறந்தேன்.
                         ---------------------





Monday, January 06, 2014

என்னுடைய சிறந்த 150 சிறுகதைகள் - சிறுகதைத் தொகுப்பு - நூல் வெளியீடு - விளம்பரங்கள் தேவை


எழுதப்படுபவை எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்படுபவை என நான் நம்புவதால் , என்னுடைய எல்லா ஆக்கங்களும் வாசிப்பவர்களுக்கே சொந்தம் என்ற வகையில் தான் உரிமத்தை வலைப்பூவில் வைத்திருக்கின்றேன்.  இதில் என்னுடைய பேஸ்புக் பத்திகளும், டிவிட்டர் குறிப்புகளும் கூட அடங்கும்.

நான்கு பேர் தொடர்ந்து கைத்தட்டிக் கொண்டே இருந்தாலும், நம் எழுத்து நல்ல எழுத்துதானா என ஐயம் நீங்க குறைந்தது நான்கு ஆண்டுகளாவது எழுத்துப் பயிற்சி தேவை.  அப்படியான நம்பிக்கை ஏற்பட்ட ஒரு நாளில் சிலப்பதிப்பகங்களுக்கு மின்னஞ்சல் செய்தேன். அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்ததனால் பதில் ஏதும் வரவில்லை.

அப்பொழுது (2010 ஆம் ஆண்டு இறுதியில்) அமேசானின் சுயப்பதிப்பு திட்டம் பற்றிய விபரம் தெரிய வந்தது.  அமேசானில் Print on Demand என்ற வகையில் தமிழிலும் , சிலக்கதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு தொகுப்பையும் வெளியிட்டேன்.  ஆங்கில மொழிப்பெயர்ப்பு அமேசான் கிண்டில் வடிவிலும் வெளியிடப்பட்டது.

இதற்கு முன்னர் அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளர்கள் செய்து இருக்கின்றனரா எனத் தெரியவில்லை, ஆனால் எனது சமகால எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு முன்பாகவே நான் தமிழ்ச்சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை, அமேசான் கின்டில் வடிவில் வெளியிட்டேன் எனும் பொழுது பெருமையாகத்தான் இருக்கின்றது. ( ஜெர்மன் , ஸ்விடீஷ் , இத்தாலிய , போலிஷ் மொழிப்பெயர்ப்புகளையும் தயார் செய்து வைத்து இருக்கின்றேன். சரியான நேரத்தில் வெளியிடலாம் என காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது)

சிறுகதைத் தொகுப்பு - தமிழ் - புத்தகம் http://www.amazon.com/Baltic-Days-Stories-Collection-Edition/dp/1456538888

சிறுகதைத் தொகுப்பு - ஆங்கிலம் - கிண்டில் http://www.amazon.com/Omega-Stories-Catalyst-Selva-ebook/dp/B004IWQZJ6/

சிறுகதைத் தொகுப்பு - ஆங்கிலம் - புத்தகம் http://www.amazon.com/Omega-Stories-perspective-Catalyst-Selva/dp/145653274X/

புத்தகம் பெரிய அளவில் விற்பனை ஆகி, நான் ஒன்றும் பணக்காரன் ஆகிவிடவில்லை. ஆனாலும் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் புத்தகங்கள் இருந்தது ஒரு முகவரியாக இருந்தது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என வலைப்பதிவும் எழுதினேன்.  நீரின் இயல்பு ஊறுவது.. இறைத்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

உணர்ச்சி வசப்பட்டு மேல் இருக்கும் சுட்டிகளில் இருந்து புத்தகங்களை வாங்கிவிடாதீர்கள். அவை எல்லாம் என் தளத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன.

அதன் பின்னர் நண்பர்கள் ரவிசங்கர் ( https://www.facebook.com/ravidreams) மற்றும் சீனிவாசன் (https://www.facebook.com/tshrinivasan) இருவரும் அவர்களது இலவச மின் நூல் திட்டத்தில் ( freetamilebooks.com ) சேர , This work is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License. உரிமத்தில் கதைகளைத் தர முடியுமா எனக் கேட்டார்கள்.  வெட்டியாய் வெயிலில் காயும் நீரை , வாய்க்கால் வரப்பு வெட்டி எடுத்து செல்ல விரும்புவருக்கு இல்லை என்றா சொல்வேன். அனுமதிக்க, உடனே மின்னூல் ஆக கொண்டு வந்தார்கள். கிட்டத்தட்ட 600 முறைக்கு மேல் மின்னூல் சிறுகதைத் தொகுப்பு தரவிறக்கப்பட்டுள்ளது.

அதற்கான சுட்டி -  http://freetamilebooks.com/ebooks/vinaiooki-short-stories/ 


இப்படி புத்தகமாகவும் , மின்னூலாகவும் கிடைக்கும் அதே வேளையில் என் சிறுகதைகள் எனது வலைத்தளத்திலும் பண்புடன் குழுமத்திலும், இன்ன பிற இணையத்தளங்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன.  எனது சிறுகதைகளில் இருக்கும் இலக்கணப்பிழை, ஒற்றுப்பிழை, வார்த்தைப்பிழைகள் எல்லாவற்றையும் தளைத்தட்டி திருத்தி ,  சிறந்த 150 சிறுகதைகளை மின்னூலாகவும் அச்சுவடிவிலும்( சுயப்பதிப்பு - கேளுங்கள் அச்சடிக்கப்படும் வகையில்) வெளியிடலாம் என இருக்கின்றேன்.

இதில் இந்தத் தடவை எடுக்கப்போகும் சிறப்பு முயற்சி, சிறுகதைத் தொகுப்பின் இரண்டு வடிவிலும் , விளம்பரங்களை உள்ளடக்குவது.  பள்ளி/ கல்லூரி , நிறுவன ஆண்டு விழா மலர்கள் எல்லாவற்றிலும் இப்படியான விளம்பரங்களைப் பார்த்து இருப்பீர்கள்.

150 சிறுகதைகள் என்றால் 400 பக்கங்கள் குறைந்தது வரும். 10 பக்கங்களுக்கு ஒர் அரைப்பக்க விளம்பரம் , 40 விளம்பரங்கள் பெறலாம் என இருக்கின்றேன்.  நான் சுமார் எழுத்து குமாரு என்பதால் 40 விளம்பரங்களுக்கு அப்படியே ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து மக்கள் கொடுப்பார்கள் என்பது எல்லாம் பேராசை. அதற்காக 'விளம்பரங்களை' இலவசமாகவும் கொடுக்கலாம் என்றால், இதை நடைமுறைப்படுத்தப்போகும் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடலாம்.

ஆக அரைப்பக்கத்திற்கு ரூபாய் 500 என்றும் முழுப்பக்கத்திற்கு ரூபாய் 1000 என்றும், அட்டைப்பின் பக்கத்திற்கு ரூபாய் 5000 என்றும் வைக்கலாம் என இருக்கின்றேன்.

வெளியீட்டு வகைகள்

1. மின்னூல் - எதிர்பார்ப்பு - குறைந்தது 2000 தரவிறக்கங்கள் (விளம்பரங்கள் , நிலைத்து நிற்கும், அளவிலா மறு சுற்றுக்குப் போகும்)
2. கிண்டில் - குறைந்தது 100
3. அச்சுப்புத்தகம் - அமேசான் மற்றும் பொதி குறைந்தது 500 ( கை செலவில் நூலகங்களுக்கும் கொடுக்கலாம் என இருக்கின்றேன் , ஆக சிறுகதைகளுடன் விளம்பரங்கள் இன்னும் அதிகமான நபர்களைச் சென்றடையும்)

மேலும் உரிமத்தின் படி உள்ளடக்கத்தை சிதைக்காமல் மறுபிரசுரம் செய்து கொள்ளலாம் எனும்பொழுது , உள்ளடக்கத்தில் விளம்பரங்களும் அடங்கும்.

யார் யாரிடம் விளம்பரங்கள் கேட்கலாம்.

1. பதிப்பகங்கள்
2. புத்தக விற்பனை நிலையங்கள்
3. அரசியல் வாதிகள் - தேர்தல் நெருங்குவதால் அரசியல்வாதிகள் தங்களது கட்சி சார்பாக விளம்பரங்கள் கொடுக்கலாம்
4. கல்லூரிகள்
5. பெரிய நிறுவனங்கள்
6. புலம்பெயர்ந்து இருக்கும் இந்தியத் / ஈழத் தமிழர் நிறுவனங்கள்
7. சிறுதொழில் நிறுவனங்கள்

ஒரு வேளை யாருமே விளம்பரம் கொடுக்க முன்வரவில்லை என்றாலும், ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு 40 விளம்பரங்களை வெளியிடலாம் என இருக்கின்றேன்.  செய்து காட்டினால் பின்வருபவர்களுக்கு ஒரு பாதை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் ஒரு ருபாயிலும் சிறப்பு முயற்சியை செய்யலாம். அனேகமாக இந்த முயற்சி வெற்றியடையும். அப்படி அடையும் பட்சத்தில் மின்னூல் / சுயப்பதிப்பு வழியே வெளியிடுபவர்கள் தங்களது படைப்புகளை பதிப்பிக்கும் முன்னரே கொஞ்சம் காசு பார்க்கலாம்.  அனேகமாக எனது முதல் விளம்பர விண்ணப்பத்தை கிழக்குப் பதிப்பக பத்ரியிடம் இருந்து ஆரம்பிக்கலாம் என இருக்கின்றேன். 500 ரூபாயோ ஒரு ரூபாயோ விளம்பரம் கொடுப்பார் என நம்புகின்றேன். 

Thursday, December 19, 2013

தன்னைப் போல் ஒருத்தி - சிறுகதை

"காரோ ..." 

மூன்றாவது தடவையாக ஆஞ்சலிகா என்னைக் கூப்பிட்டாள்.  காரோ என்பது அன்பே என்பதற்கான இத்தாலியச்சொல். 

"சொல்லுடி ..."  அவளுக்குத் தமிழ் தெரியாது என்றாலும் இந்த வார்த்தைப்புரியும். 

" அந்த டோல்சே - கப்பானா (Dolce & Gabbana The One: "Street of Dreams) விளம்பரம் பார்த்தாயா? "  இத்தாலியத்தில் கேட்டாள். 

" ஆமாம் பார்த்தேன், ஸ்கேர்லத் யோகன்சன் நடித்தது ...  கறுப்பு வெள்ளையில் கவனத்தை ஈர்க்கின்றது "   ஆங்கிலத்தில் பதில் கொடுத்தேன். 

"அதில் வரும் ஸ்கேர்லத் யோகன்சனைப் போல அச்சு அசப்பில் நான் இருக்கின்றேன் அல்லவா " 

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. ஸ்கேர்லத் அத்தனை அழகு.  யுடியூபில் வரும் அத்தனை விளம்பரங்களையும் தவிர்க்க முடியாத அந்த ஐந்து வினாடிகள் மட்டும் காத்து இருந்து ,முழு விளம்பரத்தையும் பார்க்காமல் நேரிடையாக பாடலுக்கு தாவிவிடுவேன். ஆனால் இந்த டோல்சே கப்பானா வாசனைத் திரவிய விளம்பரம் மட்டும் விதிவிலக்கு.ஸ்கேர்லத் யோகன்சன் மட்டும் என் கண் முன் வந்து நின்றால் இந்த ஆஞ்சலிகா, இந்த இத்தாலிய வேலை , பணம், புகழ் அத்தனையையும் விட்டுவிட்டு ஸ்கேர்லத் காலடியில் கிடப்பேன். 

எனது நக்கல் சிரிப்பைக் கவனித்த ஆஞ்சலிகா , பழைய நாளிதழ்களில் சிலவற்றுடன் தனது படங்களையும்  எடுத்து வந்து அதில் இருந்த ஸ்கேர்லத் படங்களுடன் ஒப்பிட்டு பேசிக்கொண்டு இருந்தாள்.  ஆஞ்சலிகாவும் அவளது படங்களில் நன்றாகத்தான் இருந்தாள். ஆனால் ஸ்கேர்லத் யோகன்சனின் சினிமா ஸ்டில்களுக்கு முன்னால் ஆஞ்சலிகா தூசு. 

பெரும்பாலும் வெள்ளைக்காரப் பெண்கள் ஓர் அதிக ஈர்ப்புடன் இருப்பதற்கான காரணம் அவர்களின் உடலுக்கு ஏற்ற உடை தேர்வும் அவர்களின் நிறமும். ஆஞ்சலிகா உட்பட , பெரும்பாலான வெள்ளைக்காரப் பெண்களை மாநிறமாக மாற்றிவிட்டால் நம்மூரின் சுமாரானப் பெண்களைவிட சுமாராகத்தான் இருப்பார்கள்.  ஆனால் ஸ்கேர்லத் ஒரு விதிவிலக்கு. அவளை ஆப்பிரிக்க கறுமை நிறத்திற்கு மாற்றினாலும் அழகு. அனேகமாக கிளியோபட்ரா கறுப்பு ஸ்கேர்லத்தாக இருந்து இருக்கவேன்டும். 

ஐரோப்பா வந்ததும் வெள்ளைக்காரத் தோழி இருக்கின்றாள் என்பதை உலகத்திற்குக் காட்டிக்கொள்ள முதலில் சிக்கும் பெண்ணிடம் பெரும்பாலான இந்தியர்கள் அதீதநட்புடன் இருப்பார்கள். இங்கு நட்பு  படுக்கைக்கும் சில சமயங்களில் போய்விடுவதால் அது காதலாய் கசிந்துருகிவிடுகின்றது.  இந்திய் ஆண்களுக்கு வெள்ளைக்காரத் துணை இருப்பது, ஒருவிதத்தில் சமூக பாதுகாப்பு மேலும் விசா போன்ற விசயங்களுக்கும் துணைபுரியும்,  கடைசி வருடப்படிப்பின் பொழுது ஆஞ்சலிகாதான் மெக்டோனல்ட்ஸில் வேலை பார்த்து என்னைப் படிக்க வைத்தாள். ஆக வெள்ளைக்கார மோகம் காமத்தில் ஆரம்பித்து இப்பொழுது ஓர் அளவிற்கு வேறு வழி இல்லாத அன்பில் வந்து நிற்கின்றது. 

மறுநாளும் ஆஞ்சலிகா , ஸ்கேர்லத் புராணத்தை ஆரம்பித்தாள். 

"கடைசி பத்து ஆண்டுகளாகவே ஸ்கேர்லத் போல இருக்கின்றேன் என எனக்குத் தெரியும்... ஆனால் யாரிடமும் சொன்னதில்லை... உன்னைக்கூட , உனது விருப்பமான நடிகை ஸ்கேர்லத் யோகன்சன் என சொன்னபிறகுதான் மிகவும் பிடித்துப் போனது " 

நான் ஒன்றும் சொல்லவில்லை.  கல்லூரியில் படிக்கும்பொழுது நடிகர் மாதவன் அலைபாயுதே படத்தில் காட்சி தந்த  பக்காவாட்டு தோற்றம் எனக்கும் இருந்ததாக நானும் நினைத்துக் கொண்டதுண்டு.  பின்னர் நந்தா சூரியா போல அசப்பில் நான் இருப்பதாக நினைத்துக் கொண்டு சிலப்படங்கள் எடுத்து வைத்திருக்கின்றேன்.  அவர்களுக்கும் எனக்கும் ஸ்னானபிராப்தி கூட இல்லை என்பது மிகவும் தாமதமாகத்தான் புரிந்தது. 

ஒரு நாள், இரு நாள் ,, இரு மாதங்களாய் இந்த ஸ்கேர்லத் புராணம் தொடர்ந்தது. எனக்கு ஸ்கேர்லத்தின் மேல் வெறுப்பு வந்துவிடுமோ என்ற பயத்துடன்  ஒருவேளை என் ஆஞ்சலிகா பைத்தியமாகிவிட்டாளோ என்ற பயமும் சேர்ந்துவிட்டது. 

ஒருநாள் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று 

"ஆஞ்சி, நீ ஸ்கேர்லத் யோகன்சனைப் போல கொஞ்சம் கூட முக அமைப்பில் இல்லை " 

"இல்லை, அவளைப்போலத்தான் இருக்கின்றேன்.. வேண்டுமானால் என் அம்மா அப்பா என் தோழிகளைக் கேட்போம்" சாமியாடும் பெண்களைப் போலப் பேசினாள். 

அந்த வார இறுதியில் அனைவரும் வந்தார்கள். அவர்கள் எவ்வளவு எடுத்து சொல்லியும் ஆஞ்சலிகா தன் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.  இறுதியாக ஆஞ்சலிகாவை ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிப்போவது என முடிவு எடுக்கப்பட்டது.  இந்தியத் துணைக்கண்ட ஆண்களுடன் காதல் வயப்படும் ஐரோப்பிய பெண்கள் கொஞ்சம் மறை கழன்டவர்கள் என்ற எனது கருதுகோள்களில் ஒன்று நிஜமாகிவிடுமோ எனத் தோன்றியது. 

பலத்தரப்பட்ட  பரிசோதனை, தனி ஆலோசனைகளுக்குப்பின்னர்... 

"Apophenia வில் ஒரு வகை இது ... Pareidolia , மேகங்களில் , மலைகளில் மனித உருவங்களையோ தனக்குப்பிடித்த உருவங்களையோ பார்ப்பதைப்போல...  தான் தனக்குப்பிடித்த ஓர் ஆளுமையைப்போல முகச்சாயலுடன் இருக்கின்றோம் என்பதை ஆழமாக நம்புவது.. இந்த வகையான மயக்குறு சூழலில் உங்களது ஆஞ்சலிகா இருக்கின்றார்  "  என்ற மருத்துவர்  தொடர்ந்து 

"ஆஞ்சலிகாவை வேறு ஏதாவது ஊருக்கு சுற்றுலாவாக கூட்டிக்கொண்டு போங்கள் ... ஸ்கேர்லத் யோகன்சனைப் பற்றி பேசாதீர்கள்"  என அறிவுறுத்தினார்

அதற்குப்பின்னர் ஆஞ்சலிகா , ஸ்கேர்லத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.  உற்சாகமாகவே பாரீஸ் பயணத்திற்குத் தயாரானாள்.  ரோம் விமானநிலையத்தில் நடைமுறைகளை முடித்துவிட்டு விமானத்திற்காகக் காத்துக் கொண்டு இருக்கையில் , தூரத்தில் ஒரு பரபரப்பு. அது நடிகை ஸ்கேர்லத் யோகன்சன் என மக்கள் உற்சாகமாகினர். இந்த சூழலில் எனக்கு ஆஞ்சலிகாவே முக்கியம் எனத் தோன்றியதால் அங்கு போகவில்லை. ஆஞ்சலிகாவிற்கு அந்த பரபரப்பில் கவனம் போகவில்லை. அவள் இளையராஜா பாடல்களை கேட்டுக்கொண்டு இருந்தாள்.  ஸ்கேர்லத் பாரீஸ் தான் போகப்போகின்றார் போலும்... எங்கள் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். பிரயாணிகள் தங்களது கைபேசிகளில் அவரைப் படமெடுத்துக் கொண்டு இருந்தனர். ஸ்கேர்லத் எங்கள் இருக்கைகளுக்கு எதிரே வந்து நின்றார். 

வியப்புடன், ஆஞ்சலிகாவைக் கண்ணுக்குக் கண் பார்த்த ஸ்கேர்லத் ஆங்கிலத்தில் சொன்னது  

"என்ன ஆச்சரியம்... நீ அச்சு அசப்பில் என்னைப்போலவே இருக்கின்றாய்?" 
                               ------------------