Saturday, January 11, 2014

இவருக்குப் பதில் இவர் - சிறுகதை


"இந்த வீடு நல்ல ராசியான வீடாம், நினைச்சது எல்லாம் நடக்குமாம், ஹவுஸ் ஓனர் சொன்னதைக் கேட்டியா?"   நான் சொன்னதை கவனிக்காமல்

'சூப்பர், இந்த  கேரக்டருக்கான ஆளை மாத்திட்டாங்க ... '  என அம்மு குதித்தற்கான காரணம் அவளுக்குப் பிடித்த தொலைக்காட்சித் தொடர் ஒன்றில், தொடர்கள் அடிக்கடி செய்யக் கூடிய 'இவருக்குப் பதில் இவர்' என ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவருக்குப் பதிலாக பிரபலமான நடிகர் ஒருவரை மற்றியதுதான்.

'சீரியல்ல ஆளை மாத்துற மாதிரி, இவருக்குப் பதில் இவர் என வாழ்க்கையிலும் ஆளை மாற்றும் வாய்ப்பு இருந்தால் எப்படி இருக்கும்?"

அம்மு மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.  அந்தப் பார்வை ஏதோ சண்டைக்கான அடித்தளம் போல இருந்தது.

"அப்படி மாத்தலாம்னு இருந்தால், யார கார்த்தி, நீ மாத்துவ'

சரியான அளவில் கால்களுக்கும் மட்டைக்கும் இடையில் எறியப்பட்ட பாதங்களைப் பதம்பார்க்கும் பந்து. இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது எனத் தெரியவில்லை.

"சும்மா, ஒரு கியுரியாசிட்டி, டிஸ்கஷனுக்காக கேட்டேன் அம்மு, நெவர் மைன்ட்"

"நானும் கியுரியாசிட்டிலதான் கேக்குறேன், எனக்கான உருவத்தைத் தானே மாத்திடுவ.... " இது மூக்கை உரசிச் சொல்லும் பவுன்சர்.

பந்துவீச்சாளர்கள் கடுங்கோபத்தில் பந்து வீசும் பொழுது, ஒன்றும் செய்யாமல் எப்படியாவது ஒப்பேத்திவிடனும். அப்படி இல்லை எனில், ஒன்று பெவிலியன் அல்லது ஹாஸ்பிடல்.  நான் பதில் சொல்லவில்லை.

"உனக்கு இன்னும் அவளை மறக்க முடியல கார்த்தி, ரிப்ளேஸ்மென்ட் சான்ஸ் கிடைச்சா, நான் தான் பர்ஸ்ட் பலியா இருப்பேன், அப்படித்தானே"

"அம்மு, லிசன் ... முகமும் குரலும் மாறினாலும், இந்த சீரியல்ல கேரக்டர் , மத்த கதாபாத்திரங்களோட நட்பு உறவு எல்லாம் அதேதானே , என் அம்முன்னா வெறும் முகமும் குரலும் மட்டுமில்ல, அவளோட கேரக்டர் , அன்பு பாசம் நேசம் எல்லாம், இதை எல்லாம் ரிப்ளேஸ் செய்ய முடியாது"
என்று ஒருவழியாக பந்தைத் தடுத்தாடினேன்.

சிலவினாடிகள் மௌனத்திற்குப்பின்னர், "சரி, அம்மு உனக்கு அப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா யாரை மாத்துவ"  கவர் டிரைவ் என நானே நினைத்துக் கொண்டு கேள்வியைக் கேட்டேன்.

என் கேள்வியைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாதவள் போல , மடிக்கணினியை திறந்து , யுடியூபில் மீண்டும் அந்தத் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்க ஆரம்பித்தாள்.

 பெண்கள் தங்களுக்குப் பதில் தெரியாத, பதில் சொல்ல விரும்பாத கேள்விகளை எப்படி தவிர்ப்பது எனத்தெரியும்.  ஆண்கள்தான் வேலை மெனக்கெட்டு பொய்யாக இருந்தாலும் ஏதாவது ஒரு பதிலை சொல்லுவார்கள்.

என் எண்ணம் எல்லாம், அந்த 'இவருக்குப் பதில் இவர்' என்பதிலேயே இருந்தது.

 அம்மு சொல்லுவதைப்போல , அம்முவை மாற்றி இருப்பேனோ... மாற்றி இருந்தால் யாரை வைத்து அவளை மாற்றி இருப்பேன். என் முதல் காதலி... இருக்கலாம். முதல் காதலின் பிரெஷ்னெஸ் மழைச்சாரல்.   அம்மு கியுட் தான், ஆனால் என்னுடைய ஆரம்ப இருபதுகள் மனநிலைக்குப் போனால், முதல் காதலி செம கியுட். முதல் காதலியின் முகம் மற்றும் குரல்  ஆகியவற்றுடன் அம்முவோட அன்பு பாசம் நேர்மை அர்ப்பணிப்பு அட்டகாசமாக இருக்கும் தானே !!!

இன்றைக்கான அத்தனைத் தொலைக்காட்சித் தொடர்களையும் அம்மு பார்த்து முடித்துவிட்டாள் என்பதை அவள் என் தோளைத் தொட்டு , முகத்தைத் தோள்பட்டையில் வைத்துக் கொள்கையில் புரிந்து கொள்ள முடியும்.

"புது வீடு, புது வாசம் புதுசா ஏதாவது டிரை பண்ணுவோமா " என அவளை அணைத்துக் கொண்டேன்.  விடியல் விரைவாகவே வந்தது.

அதிகாலையில், ஒரு பெண்ணின் குரல் குளியல் அறையில் இருந்து அலறலாகக் கேட்டது. எங்கேயோ கேட்ட குரல்.

முகத்தைப் பொத்திக் கொண்டு "கார்த்தி, இங்கே பாரு என் முகம் வேற மாதிரி கண்ணாடியில் தெரியுது"

கண்ணாடியில் தெரியும் முகமும் அவளின் முகமும் ஒன்று. அவள் என் பழையக் காதலி. இவளுக்குப் பதில் அவளா...

திரும்பக் கண்ணாடியைப் பார்த்தேன். அய்யோ !!! இது நானில்லை. வேறு ஒருவன். அம்மு முகத்தில் இருந்து கைகளை விலக்கினாள்.

"ஜீவா,,,, நீயா ,,, நீ இங்க எப்படி... கார்த்தி "

 எனக்குப் பதில் அவனா.

என்னை விட ஜீவா , அழகா இருந்திருப்பான் போல.

அம்மு திகில் அடித்ததைப்போல இருந்தாள். வீட்டில் இருக்கும் அத்தனை கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினாள்.

அவள் அளவுக்கு எனக்கு திகிலும் இல்லை கோபமும் இல்லை.
வாழ்க்கையில் இனி என்ன வேண்டும், முன்னொரு காலத்தில் நான் உருகி உருகி காதலித்தப் பெண் வடிவில் , இன்று என்னை உருகி உருகி நேசிக்கும் பெண். அவளுக்கு அவள் ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்த ஆணின் உருவில் நான்.  எனக்கு இது வின் - வின் சூழலாகத் தெரிந்தது.

"அம்மு, ஒருவேளை நம்முடைய பிரமையாக இருக்கும். ஒரு போட்டோ எடுத்துப் பார்ப்போமா"

புகைப்படத்திலும் எனக்குப்பதில் அவன், இவளுக்குப்பதில் அவள்.  இதுக் கூட தோற்ற மயக்கமாக இருக்கலாம் என பேஸ்புக்கில் புகைப்படத்தைத் தரவேற்றினால்.


"யார் இவர்கள், உங்களது தோழர்களா " என நண்பன் ஒருவன் கேட்டு இருந்தான்.

 உண்மையிலேயே எங்களை அவர்கள் ரிப்ளேஸ் செய்துவிட்டார்கள் என்பது விளங்கியது. எனக்கு திகிலை மீறிய கிளுகிளுப்பு இருந்தது. புத்தம் புதிதாய் ஒரு புதிய பெண் என் படுக்கை அறையில், எனக்கானவளாய்.

வாழ்க்கை என்ற நுண்கணிதத்தில் ஆண்கள் தொகைநுண்கணிதம் போல. அவர்களால் வாழ்க்கையில் அனைத்தையும் அரவணைத்துச் செல்ல முடியும்.

அம்முவின் தோளைத் தொட்டேன், விலக்கினாள்.

"வேண்டாம் கார்த்தி, தொடாதே !!  "  அம்முவின் அழுகையை நிறுத்த முடியவில்லை.  அன்றைய நாள் முழுவதும் வீட்டை விட்டு வெளியேப்போகவில்லை.  யாரைப்பார்ப்பது என்ன செய்வது எதுவுமே தெரியவில்லை.  அம்முவை கார்த்தையையும் நாங்கள் கொன்றுவிட்டோம் என கைது கூட செய்யப்படலாம்.

கண்ணாடித்துகள்களை எல்லாம் கூட்டிப்பெருக்கினோம். நேற்றைய மீத சாப்பாட்டை சாப்பிட்டோம்.  அம்மு தொலைக் காட்சித் தொடர்களின் அன்றைய பகுதிகளைப் பார்க்க ஆரம்பித்தாள். தோளைத் தொட்டாள் சாய்ந்தாள். அணைத்து முத்தமிட முயற்சிக்கையில் தள்ளிவிட்டாள்.

"நீ கார்த்தி தான், ஆனால் என் கண்களுக்கு நீ அவன்... எனக்குப்பிடிக்கல கார்த்தி, உன் கூட எந்தவிதத்திலும் நெருக்கமாக இருக்க என்னால் முடியாது , செத்துடலாம் போல இருக்கு... நான் செஞ்ச ஒரே தப்பு, நேத்து நீ அந்த கேள்வியைக் கேட்டப்ப , நீ ஒருவேளை ஜீவா உருவத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என யோசிச்சதுதான்... ஆனால் சத்தியமா உன்னைத் தவிர உன்னிடத்தில் வேறு எந்த உருவத்தையோ குரலையோவைக்க முடியாது"

பெண்கள் வகைநுண்கணிதம் போல. பகுப்பாய்வின் அடிப்படையில் வாழ முடியும். ஒன்றை பழைய காலத்தில் பிடித்து இருந்தாலும், காலம் கடந்து பழையது மீண்டு வந்தாலும் பகுத்து அவர்களால் ஒதுக்க முடியும்.

இருவரும் விலகியேப் படுத்துக் கொண்டோம்.  இந்தப் பாழாய்ப்போன வீட்டிற்கு ஏன் குடிவந்தோம் என இருந்தது.  விடியல் நீண்டு கொண்டே இருந்தது. எப்பொழுது தூங்கினேன் எனத் தெரியவில்லை, காலையில் கார்த்தி என காது மடல்களுக்கு அருகே அம்முவின்  குரல். கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். இமைகளை  மெதுவாகத் திறந்தேன்.
                         ---------------------