Showing posts with label காதல்-காமம். Show all posts
Showing posts with label காதல்-காமம். Show all posts

Friday, March 01, 2013

அவள் உடைத்தது வெறும் கண்ணாடிப்பாத்திரங்கள் மட்டுமே- சிறுகதை



கண்ணாடி பாத்திரம் ஏதோ ஒன்று உடையும் சத்தம் கேட்டது. கேத்தரீனா மற்றும் ஒரு கண்ணாடி குவளையை உடைத்திருக்கிறாள் போலும். கேத்தரீனா என்னைக் காதலிக்கிறாள். அவளை இத்தாலியின் மிலான் நகரில் ஓர் ஆய்வகக் கருத்தரங்கில் சந்தித்தேன்.  ஒரு வருடப் பழக்கம், அவளை விட நான் அறிவாளி, அவள் என்னை விட உலகத்தையும் மனிதர்களையும் அதிகமாக நேசிப்பவள், அதனாலேயே ஒரு வேளை ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கலாம். அவளின் ஒரு வார விடுமுறையில் ரோம் நகரத்திற்கு வந்திருக்கிறாள். சொல்லப்போனால் என்னை மட்டும் பார்ப்பதற்காகத்தான் இந்த ரோம் பயணமே.... ரோம் நகரத்தைச் சுற்றிப்பார்ப்பது என்பது இரண்டாம் பட்சம், அல்லது முக்கியமே அல்ல..

“மன்னித்துவிடு கார்த்தி, இன்னொரு பாத்திரத்தை உடைத்துவிட்டேன்” அவள் கண்களில் நான் திட்டிவிடுவேனோ என்ற பயம் தெரிந்தது.

என்னிடம் பாசம் காட்டும் பெண்களை எனக்குப் பிடிப்பதைப்போல, என்னிடம் பயப்படும் பெண்களையும் பிடிக்கும்.

“பரவாயில்லை, கேத்தி, உடைந்த கண்ணாடி உன் கைகளைக் கீறிவிடவில்லைத்தானே” அவளின் பயம் எனது நேசமான வார்த்தைகளால் மறைந்தது.

இரண்டு கண்ணாடிக்குவளைகள், மூன்று பீங்கான் தட்டுகள், ஒரு ஸ்விட்ச் போர்டு, குளிர்சாதனப் பெட்டியில் காய்கறி வைக்கும் பிளாஸ்டிக் தடுப்பு, சன்னலை மூடும் நீண்ட ஷட்டர் கதவு என அவள் உடைத்த விசயங்கள் நீண்டு கொண்டே இருந்தன.

அவள் உடைத்த பொருட்களின் ஒட்டு மொத்த மதிப்பு, விடியற்காலையில், அவள் அன்பாக போட்டுத்தரும் டீக்கு கால் தூசியாகாது.  அவள் போடும் டீ படு சுமாரான ஒன்றுதான், ஆனாலும் அவள் அதைக் கொண்டு வந்துத்தரும் அன்பில், இனிப்பு சரியாகக் கலக்கவில்லை என்றாலும், டீத்தூள் சரியாகப் போடவில்லை என்றாலும் எதுவுமே குறையாகத் தெரியாது. சுடுதண்ணியில் டீ பாக்கெட்டைப் போட்டு, டீக் குடித்து பழகியவளுக்கு, டீத்தூளைக் கொதிக்க வை, பாலைக் கலந்து, இஞ்சி ஏலம் தட்டிப்போடு என்பது எல்லாம் லத்தீன் கற்றுக்கொள்வதுப் போல... இருந்தாலும் மகிழ்ச்சியாக செய்கின்றாள்.

இப்பொழுது கூட, இணையக் குறிப்புகளைப் படித்து , பிரியாணி செய்ய முயற்சி செய்துக் கொண்டிருக்கிறாள். அதீத அன்பு காட்டுபவர்கள் அவர்களை அறியாமல் அடிமையாகிவிடுவார்கள்.  அந்த அதீத அன்பில்தான், மூன்று வெங்காயங்களை கண்கள் கலங்க வெட்டிக்கொண்டிருக்கிறாள்.

”கார்த்தி, பிரியாணி சாப்பிடுகிறோம், அப்புறம் ஒரே கொஞ்சல்ஸ் மட்டும்” கொஞ்சல்ஸ் என்ற அவளுக்குத் தெரிந்த பிடித்த ஒரே தமிழ்வார்த்தையை மட்டும் கலந்து ஆங்கிலத்தில் சொன்னாள்.

அவளை நான் திருமணம் செய்து கொள்வேனா, காதலிப்பேனா என்றெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. நான் அவளுக்கு ஒரு குழந்தையைத் தரவேண்டும். அவளுக்கு இந்தியக் குழந்தை, குறிப்பாக தமிழ்க்குழந்தை வேண்டுமாம். பெரியப் பிடிப்பற்ற அவளின் வாழ்க்கையில் பெருமிதமான பிடிப்பாக ஒரு தமிழ்க் குழந்தை, அதுவும் என் குழந்தை இருக்கும் என்பது அவளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்திய ஆண்களைக் காதலிக்கும் மேற்கத்தியப் பெண்கள் மாயையான பொய்மை அதிகம் நிறைந்த இந்தியக் கலாச்சரத்தில் மதிமயங்கிவிடுகிறார்கள். அந்த மதிமயக்கத்தை கிறுக்குத்தனம் என்றும் சொல்லலாம். ஆனால் இந்திய அல்லது தெற்காசியப் பெண்களைக் காதலிக்கும் மேற்கத்திய ஆண்கள் பெரும்பாலோனோருக்கு குனி என்றால் குனியும் நிமிர் என்றால் நிமிரும் பெண்கள் வேண்டும் என்ற ஆதிக்கத்தனம். நான் ஒரு முறை கேத்தரீனாவை அரைக் கிறுக்கு என்று கூட சொல்லி இருக்கின்றேன்.

“அன்பு செய்வது அரைக்கிறுக்குத்தனம் என்றால் நான் முழுக் கிறுக்காக விரும்புகின்றேன்” என்பது அவளின் பதிலாக இருந்தது.

பிரியாணிக்கான வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கையிலேயே , “

“குட்டிப்பாப்பாக்கு என்ன பெயர் வைக்கலாம் கார்த்தி” எனக் கேட்டுக்கொண்டிருக்கும்பொழுதே இன்னொரு கண்ணாடி டம்ளரை உடைத்தாள்.

பாலச்சந்திரன் அல்லது இசைப்பிரியா என்று சொல்லத்தான் நினைத்து இருந்தேன், ஆனால் அந்த நொடி துடுக்குத்தனத்தில்,

“பாத்திரங்களை கீழேப்போட்டு உடைத்துவிடுவதுபோல பாப்பாவையும் கீழே போட்டு உடைத்து விடாமல் இருந்தால் பெயர் வைப்பதுப் பற்றி யோசிப்போம்” என்றேன்.  நகைச்சுவை ஆளுமைகள் எல்லா நேரத்திலேயும் ரசிக்கப்படுவதில்லை விரும்பப்படுவதில்லை.

 கண்களில் தாரைத் தாரையாக கண்ணீர் வழிந்தது. நிச்சயம் வெங்காயம் காரணமில்லை. அப்படியே போட்டது போட்டபடி என்னருகில் வந்து அமர்ந்து கொண்டு, என்னைக் கட்டிக்கொண்டு அழுதுத் தீர்த்தாள். பெண்கள் அழுது விட்டார்கள் என்றால் , அந்தப் பிரச்சினைக்காக மற்றும் ஒரு முறை அழ மாட்டார்கள். அழுது முடித்தவுடன் சில முத்தங்களுடன் சின்னப்புன்னகையைக் கொடுத்துவிட்டு , பிரியாணி செய்து முடித்தாள்.  தலைப்பாக்கட்டு பிரியாணி தோற்றுவிடும்,,, அவ்வளவு ருசியாக இருந்தது.

நான்கு நாட்கள் கழித்துப்போவதாக இருந்த பயணத்தேதியை இரண்டு நாட்கள் முன்னதாகவே மாற்றினாள். அடுத்த இரண்டு நாட்களுக்கு எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை. ரயில் நிலையத்தில் , வண்டியில் ஏறிய பின்னர், இறங்கி  ஆழ்ந்த முத்தம் கொடுத்து பின்னர் ரயில் ஏறினாள். மிலான் சேர்ந்ததும் எஸ் எம் எஸ் அனுப்ப சொன்னேன். தலையாட்டினாள். 10 மணி நேரம் ஆகியும் அனுப்பவில்லை. பேஸ்புக்கிலும் தகவல் அனுப்பவில்லை. அவளின் பேஸ்புக் முகப்புப்பக்கம் போய்ப்பார்த்தேன்.

”நான் உடைத்தது வெறும் கண்ணாடிப்பாத்திரங்கள் மட்டுமே” எனப் பொருள் தரும் வாக்கியத்தை சோகச்சின்னத்துடன் இத்தாலிய மொழியில் எழுதி வைத்திருந்தாள்.

அவள் அலைபேசிக்கு அழைத்தேன்,,,, நீண்ட அழைப்பு எடுக்கவில்லை.. இரண்டாம் முறை எடுக்கவில்லை... முன்றாம் முறையும் அழைக்கின்றேன்... கண்டிப்பாக அழைப்பை எடுப்பாள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
----------

Wednesday, November 07, 2012

கரோலினா - சிறுகதை


விரலைக் கண்டபின்னரும் மீட்டப்பட அனுமதிக்காமல், வீணை என் தலையை வருடிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. நான் காய்ந்த மாடு இல்லை என்பதாலும், கரையை நெருங்கும் நேரத்தில் பொறுமைக் காத்தால், தாழி வெண்ணெய் முழுமையாகக் கிடைக்கும் என்பதாலும் கரோலினாவின் பேச்சை உண்மையிலேயே ரசித்துக் கொண்டிருந்தேன்.

என்னைப் பொருத்தவரை இரண்டு வகையான பெண்கள். அழகிகள், பேரழகிகள் .., என்னை மதித்து பேசுபவர்கள் பேரழகிகள். ஒருநாள் ஏதோ ஒரு டேட்டிங் இணையதளத்தில் காற்று வாங்கிக் கொண்டிருந்தபொழுது கவிதையாக வந்த பேரழகிதான் கரோலினா. பத்து நாட்கள் மின்னரட்டையில் பேசினோம், ஒரிரவு அவளைச் சந்திக்க முடிவு செய்தேன். அதோ அந்த இரவைத் தான் இப்பொழுது கடத்திக்கொண்டிருக்கின்றேன் !!!

வார இறுதியில் மாதிரி விமானம் ஒன்றில் விமானம் ஓட்டப்பழக திட்டமிட்டிருந்ததை ஒத்திவைத்துவிட்டு 14 மணிநேரம்
ரயில் பயணத்திற்குப்பின்னர் இவளைச் சந்திக்க வந்திருப்பதன் மூலம் எனது தேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இசை, இந்தியா, பாலிவுட் , வண்ணங்கள் என்று பேசிக்கொண்டிருந்தவளை காமத்தை நோக்கி மாற்ற,

”உன்னுடைய மறக்க முடியாத முத்தம் எது?”

அமைதியாக இருந்தாள்.

“முத்தங்கள் கொடுத்து இருக்கிறாயா?”

பொய்யாக முறைத்தாள்.

”பதினான்கு வயதில், முதன் முதலாக என் சம வயது இத்தாலிய நண்பனுக்கு கொடுத்து இருக்கின்றேன்”

“இடம் , பொருள், ஏவல்”

“என் குடும்பத்தினருடன்  குரோசியா கடற்கரை நகரம் ஒன்றிற்கு சுற்றுலாப்போய் இருந்தோம், இரண்டு வாரங்கள், கடலோரத்தில் தனி வீடு, சில மீட்டர் தூரத்தில் இருந்த  வீட்டில் ஓர் இத்தாலியக் குடும்பம், அவர்களின் மூத்த மகன் ஸ்டெபனோ , நீ இருக்கும் ரோம் நகரத்தைச் சேர்ந்தவன் தான்...”

“ம்ம்ம்”

“எனக்கு இத்தாலியனும் தெரியாது, அவனுக்கு ஜெர்மனும் தெரியாது. எங்களுக்குப் பொதுவாகத் தெரிந்தது பத்து பதினைந்து
ஆங்கில வார்த்தைகள் தான், கள்ளங்கபடமற்ற முதல் காதலுக்கு மொழித் தேவையில்லை என்பதை அன்றுதான்
உணர்ந்து கொண்டேன்”

“ம்ம்ம்”

“அவன் அப்பா இத்தாலியைச் சேர்ந்தவர், அம்மா ஸ்விடீஷ்,,,,, இத்தாலிய பதின்ம மிடுக்கும், அவன் அம்மாவின் பூனைக் கண்களும் , விளையாட்டில் விட்டுக்கொடுத்தலும் அவன் மேல் காதல் வயப்பட வைத்துவிட்டது. கடைசி நாளன்று அவனை முத்தமிட்டதுதான் என் வாழ்நாளில் மறக்க முடியாதது, அதன் பின்னர் நூற்றுக்கணக்கான முத்தங்கள் என்னுடைய
ஆண் தோழர்களிடம் இருந்து பெற்று இருந்தாலும், அந்த முதல் முத்தத்திற்கு ஏதும் ஈடு இணையாகாது”

தமிழ்நாட்டில் இருந்த பொழுது, என்னுடைய முதல் முத்தம் அம்முவின் உதட்டைக் கடித்து வைத்ததில் வன்முறையாக முடிந்துப்போனது.


“அவனை அந்த விடுமுறைக்குப் பின்னர் தொடர்பு கொண்டாயா”

“இரண்டு வருடங்கள் கடிதங்கள் பரிமாறிக்கொண்டோம், பின்னர் எனது பெற்றோர் விவாகரத்துப் பெற்றவுடன் எல்லாமே மாறிப்போய்விட்டது, அம்மாவும் நானும் வியன்னா வந்துவிட்டொம், தொடர்பு போய்விட்டது”

“ஆர்குட், பேஸ்புக் என எத்தனையோ இருக்கின்றதே, அவனின் முழுப்பெயர் நினைவு இருக்கிறதா,”

“அவனுடையப் பெயர் வித்தியாசமனது , இத்தாலிய ஸ்விடீஷ் கலப்புப் பெயர், ஸ்டெபனோ ஆண்டர்சன், அவன் அப்பா ஒரு விமானி, அவனுக்கும் விமானியாக வேண்டும் என்பதுதான் ஆசை,”


உலகத்தில் ஒரு நபரை மற்றொரு நபருடன் தொடர்புப்படுத்த, அதிக பட்சம் ஏழு பேர்கள்தான் தேவை என்று எங்கோப் படித்தது நினைவுக்கு வந்தது.  நான் விமான ஓட்டப்பழகப்போகும் பயிற்சியாளரின் பெயரும் ஸ்டெபனோ ஆண்டர்சன் தான். அவனுக்கும் ஏறத்தாழ கரோலினாவின் வயதுதான். ஒரு வேளை அவனாக இருக்குமோ !!!

“ஸ்டெபனோவை இணையத்தில் கண்டுபிடிக்க விருப்பமில்லை, ஏதோ ஒரு நாள் அவனை நேரில் , உலகத்தில்
எந்த மூலையிலாவது ஏதேச்சையாக சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. பேசிப்பழகிய பத்து நாட்களில் உன்னைச் சந்திக்க விருப்பம் காட்டியது கூட, நீ ரோமில் வசிப்பதுதான், யார் கண்டது உன் நட்புக்கூட அவனை சந்திக்க வழிவகை செய்யலாம்”

மறுநாள் காலை ஸ்டெபனோ ஆண்டர்சனைப் பற்றி கரோலினாவிடம் சொல்லலாம் என்று நினைத்தபடி , அவளுடன் கொஞ்சம் மது அருந்தினேன். கடந்த பத்து வருடங்களில் கற்றறிந்த வன்முறையற்ற முத்தங்கள் கொடுத்தேன்.

இதற்கு மேல், பழையத் தமிழ் சினிமாக்களில் காட்டுவதுபோல பூவுடன் பூ உரசிக்கொள்வதை, பறவைகள் கொஞ்சிக்கொள்வதை, பாம்புகள் பின்னிப்பிணைந்து கொள்வதை எல்லாம் கற்பனை செய்து கொள்ளுங்கள். வீரேந்திர சேவக் போல அதிரடியாக டிரிபிள் செஞ்சிரி எல்லாம் அடிக்கவில்லை என்றாலும், திராவிடைப்போல நிதானமாக இரட்டை சதம் அடித்து இருந்தேன்.

விடியலுக்கு முன்னர், நெஞ்சில் தலைவத்து படுத்திருந்தவளை தோளைச் சுற்றி அணைத்து இருந்தேன்.

“கார்த்தி, என்னுடைய பழைய ஆண் தோழர்கள் கொடுக்காத பாதுகாப்பு உணர்வை, உன் அணைப்பில் உணர்கின்றேன்”

அவளின் நெற்றியில் முத்தமிட்டேன்..

“நான் கொடுத்த கடைசி முத்தங்கள் ஸ்டெபனோவின் நினைவின்றி உனக்குக் கொடுக்கப்பட்டவை”

மௌனமாக இருந்தேன்.

“நன்றி” என்றாள்,  அவளின் நன்றி உடல் மனம் எண்ணம் மூன்றும் பூரணமடைந்திருந்ததை  அவளின் கண்களின் வழியேக் காட்டியது. படுக்கையில் என்னிடம் நன்றி சொன்ன முதல் பெண் கரோலினாதான்.

மறுநாள் கரோலினாவிடம், எனதுப் பயிற்சியாளர் ஸ்டெபனோவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.  விமானம் ஓட்டும் பயிற்சியில் இருந்து விலகிக்கொள்கிறேன்  ஸ்டெபனோவுக்கு மின்னஞ்சல் செய்துவிட்டேன்.