Showing posts with label சுவீடன். Show all posts
Showing posts with label சுவீடன். Show all posts

Thursday, December 26, 2013

சுமார் எழுத்து குமாரு - அனுபவம்


காதல் தோல்வியை மறக்க ஏதாவது ஒரு போதை தேவை ... 2005 ஆம் ஆண்டு மறுபாதியில், அம்மு வெர்ஷன் 1 என்னை ரன் அவுட் ( http://www.youtube.com/watch?v=MIaMmtAsZsg) ஆக்குகையில்,  அப்படியான ஒரு போதையை எழுத்தில் தேடிக்கொள்ளலாம் என எழுத ஆரம்பித்து.... எழுதிக்கொண்டே இருக்கின்றேன். சில கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் இருப்பார்கள். பெரிதாக மட்டையடித்தலிலோ பந்து வீச்சிலோ சாதித்து இருந்திருக்கமாட்டார்கள். ஆனாலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என ஆடி , பத்து ஆண்டுகள் கூடத் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து ஆடிக்கொண்டு இருப்பார்கள்.,,,, ஆக என் எழுத்து வாழ்க்கைப் பயணமும் எட்டு ஆண்டுகளை கடந்து சிலப்பல மாதங்கள் ஆகிவிட்டன.  ஆகாஷ் சோப்ரா ஓட்டங்கள் எடுப்பதைப்போல , ஹிட் ஏறிக்கொண்டிருந்த சூழலில், எங்கிருந்தோ வந்த ஆபத்பாந்தவன் அனாதரட்சகன் 'கலைஞர்' ஒரே நாளில் சும்மா ஹிட்ஸை டிஜிவி ரயில் வேகக்கணக்கில் எகிற வைத்தார். எல்லாப்புகழும் கலைஞருக்கே....

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என நினைத்தால் எழுத்தில் மட்டும் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை எல்லாமே ஈட்டல்தான்.  தமிழ்மணம் ஆகட்டும் ... சமூகஊடகங்கள் ஆகட்டும்... எழுத்தினால் எல்லாமே பெற்றவைதான். பெற்றவைகள் நூறு இருந்தாலும் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் கங்குலி இறங்கி வந்து கூரைக்கு மேல சிக்ஸர் அடித்தது ( http://www.youtube.com/watch?v=hle1TAoR9sc) கண்ணுக்குள்ளேயே நிற்பதைப்போல சில எழுத்தாக்கங்களின்  அனுபவங்கள் செம 'கெத்து' கொடுக்கும். 

சில ஆண்டுகள் முன்பு, சுவீடனில் , விசா நீட்டிப்பிற்காக , குடியுரிமை அலுவலகம் ஒன்றில் காத்துக் கொண்டு இருந்தேன்.  சில இருக்கைகள் தள்ளி, தமிழ்க்குரல்... தமிழ்மாணவர்கள் சிலர், நகைச்சுவைகளை அள்ளித் தெறித்துப் பேசிக்கொண்டு இருந்தனர்.  அந்தக் காலக்கட்டம் கொஞ்சம் சிரமமான காலம்.. அம்மு வெர்ஷன் 2 என்னை பவுன்சர் போட்டு ஹிட் விக்கெட் (http://www.youtube.com/watch?v=yZjGdWt82k0) ஆக்கிவிட்டு சென்று இருந்தார். தீஸிஸ் வேறு நீட்டிக்கொண்டே போனது.  கையில் காசும் தீர்ந்துவிட்டது. டிராவிற்கு ஆடலாமா... வென்றுவிடலாமா... வென்றுவிட நினைத்தால் தோற்றுவிடுவோமா கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்க சொதப்பல் ஆட்டம் போல நாட்கள் போய்க்கொண்டிருந்தன.  முகத்தை இறுக்கிக் கொண்டு அமர்ந்து இருந்தாலும் , என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து விட்டேன். அங்கிருந்த மாணவர்கள், தூரத்தில் அமர்ந்தபடியே 

"என்ன தமிழா, எந்த யுனிவர்சிட்டி , எந்த பேட்ச் " எனக் கேள்விகள் கேட்டனர்.  சிலப்பல பொது நண்பர்கள் பேரைச் சொல்லித் தெரியுமா எனக் கேட்டனர். தெரியும் என்றேன்.  பேஸ்புக் ஐடி கேட்டார்கள்.  செல்வகுமார் வினையூக்கி என சொன்னவுடன், அமர்ந்து இருந்தவர்கள் உடனே எழுந்து நின்றார்கள். 

"அண்ணே ,நீங்களா அது, உங்க பிலாக்கில சுவீடன் மேற்படிப்பு கட்டுரை படிச்சுத்தான் நாங்க சுவீடனுக்கே வந்தோம்" 

கிட்டத்தட்ட மாணிக் பாட்ஷா மொமென்ட் அது.  

மேற்சொன்ன அனுபவம் ஒருவகை என்றால் சமீபத்தில் ஒன்று நடந்தது. இத்தாலியில், ஆராய்ச்சிப்படிப்பிற்கு புதிதாக ஒரு மாணவர் வந்து சேர்ந்து இருந்தார்.  சென்ற மாதம் , முன்னாள் கோபாலன் டிராபி இலங்கை அணியின் பிரபல'எறிபந்து' வீச்சாளர் முரளிதரன் சிலப்பல முதுகுசொறிதல் கருத்துக்களை சொல்லி இருந்தது உங்களுக்கு எல்லாம் நினைவுக்கு இருக்கலாம்.  அதைப்பற்றிய பேச்சு வருகையில், புதிய மாணவரிடம் , முரளிதரனையும் முகமது அலியையும் ஒப்பிட்டு சிலக்கருத்துக்களை சொன்னேன்.  உடனே அந்த புதிய மாணவர்,

"சார், இது எல்லாம் மூனு வருஷத்துக்கு முன்னமே எழுதிட்டாங்க,,,, நீங்க அதைப்படிச்சிட்டு வந்து இங்க சொல்லுறீங்களாக்கும்" என்றார். 

"அந்தக் கட்டுரையை எழுதினதே நான் தான் சார்" என்றேன் பதிலுக்கு... 

தட் வாஸ் எ , அந்தக்குழந்தையே நீங்கதான் மொமென்ட். 

சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த  முரளிதரன் - முகமது அலி கட்டுரை வெளிவந்த பொழுது,  கொழும்பு வெள்ளவத்த டமில் பாய்ஸ் கூட்டம் போட்டு  அந்தக் கட்டுரை வெளியான தமிழோவியம் இணைய இதழில் பின்னூட்டங்களாக  என்னைத் திட்டித் தீர்த்தார்கள்.  சென்ற மாதம் அதேக்கட்டுரை வெட்டி ஒட்டி நீட்டி முழக்கி சிலப்பல தமிழ்த்தேசிய இணைய தளங்களிலும் காணக்கிடைத்தது.. 

சச்சின் அடித்த சிக்ஸர்கள் கூட மக்களுக்கு மறந்துப் போய் இருக்கலாம்.... ஆனால் வெங்கடேஷ் பிரசாத், நைரோபியில் அடித்த கவர் டிரைவ் சிக்ஸரை ( http://www.youtube.com/watch?v=hl4ajI2oUcE) யாராலும் மறக்க முடியாது... சொல்லிக்கொள்ள ஒன்றிரண்டு சிக்சர்கள் தான் இருந்தாலும்  இரண்டுமே  கெத்து சிக்சர் இந்த சுமார் எழுத்து குமாருக்கு....

Wednesday, October 02, 2013

போலிஷ் பெண்ணும் நானும் மற்றும் காந்தியும் - புனைவு அல்லது அனுபவம்

பின் வரும் சம்பவத்தை உண்மையாக எடுத்துக் கொண்டாலும் சரி புனைவாக எடுத்துக் கொண்டாலும் சரி , சொல்ல வருவது காந்தியைப் பற்றிதான். 
----
சுவீடன் கார்ல்ஸ்குரொனாவில் ( Karlskrona) இருந்து போலாந்து கிடினியா (Gdynia) விற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து உண்டு. வார நாட்களில் மிக மிக மலிவான விலையில் பயணச்சீட்டுகள் கிடைப்பது உண்டு. இன்று போல அன்றும் ஏழை மாணவன் தான். ஆக, குறைவான விலை பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு வீட்டிலேயே கட்டிக் கொண்ட கட்டு சோறு . கொஞ்சம் போலிஷ் சிலாத்தி பணம் என தனியாக கப்பல் ஏறிவிட்டேன். அம்மு பிரிந்து போன சோகக் காலக்கட்டம் அது . காதல் சோகங்களை மறக்க இரண்டு வழிமுறைகள் உண்டு., ஒன்று மதுவில் மூழ்கலாம் அல்லது பயணங்கள்... காட்டுத்தனமாக பயணம் செய்யும் பொழுது, சந்திக்கும் புது மனிதர்கள், அனுபவங்கள் மெல்ல மெல்ல மீட்டு, மனிதனை பக்குவமாக்கும். நான் தேர்ந்து எடுத்தது பயணங்களை. நான் படு சுமாரான எழுத்தாளன் என்பதால், அனுபவங்களை கதைகளாக்கி நான்கு பேர் கைத் தட்டி படிக்கும் அளவிற்கு வாசகர் கூட்டமும் சேர்த்து வைத்து இருக்கின்றேன். ஆக பயணங்கள் பலவகைகளில் பயனுள்ளதாக இருந்தன. 

கப்பலில் வழமைப் போல சூதாட்ட அறையில் கூட்டம் இருந்தது. சூதாட்டம் பிடிக்காது என்பதாலோ அல்லது சூதாட்டம் ஆடும் அளவிற்கு பணம் இருக்காது என்பதாலோ எப்பொழுதுமே , அந்த அறைகள் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. அப்படியே கப்பலை ஒரு சுற்று சுற்றிவிட்டு , வெளித்தளத்தில் கடலை வேடிக்கைப் பார்க்க ஆரம்பிக்கையில் , தடுப்புக் கம்பிகளுக்கு அருகில் இருந்த நீள் நாற்காலியில் , மென் சோகத்துடன் ஒரு பெண் வந்து அமர்ந்தாள். எப்பொழுது என் பக்கம் திரும்புவாள், புன்னகையைத் தரலாம் என காத்து இருந்தேன். அவள் என் பக்கம் திரும்பிய அடுத்த நொடி, நான் கொடுத்த சிரிப்பிற்கு , மின்னலைப் போல பதில் புன்னகை வந்து விழுந்தது. என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். இந்தியா என்றதும் பெஞ்சின் அடுத்த முனையில் இருந்து நகர்ந்துநெருங்கி வந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள். 

அவளின்  பெயரைச் சொல்லப் போவதில்லை. சொன்னால் என்னுடைய பேஸ்புக்கை நீங்கள் தோண்டி அவளைக் கண்டுபிடித்து விடுவீர்கள். அவளின் தேசம் போலாந்து , அவளின் தாத்தா பாட்டி ஜெர்மானியர்கள். கிடினியாவும் அதன் இரட்டை நகரமான கிடான்ஸ்க் (Gdansk)  நகரமும் பல காலங்கள் ஜெர்மானிய ஆதிக்கத்தில் இருந்தன. போருக்குப் பின்னர் போலாந்து வசம் வந்து விட்டது. ஜெர்மானியர்கள் அப்படியே இங்கேயே இருந்து விட்டனர். 

குளிர் எடுக்க ஆரம்பித்த்து விட்டதால், கப்பலின் வரவேற்பு தளத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். சுவீடனில் தனது காதலனுடன் வாழ்ந்து வந்ததாகவும் , தற்பொழுது பிரிந்து விட்டதால் மீண்டும் தனது நாட்டிற்கே போகின்றதாக அவள் சொன்ன பொழுது அவளின் மென் சோகம் புரிந்தது. 

தமிழ், கிரிக்கெட், இலங்கை எனது படிப்பு, எனது வாழ் சூழல் என பேச்சு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நள்ளிரவின் பொழுது, தனக்கு அன்றுதான் பிறந்த நாள் எனக் கூறினாள். கைக்குலுக்கினேன். வரியற்ற கடையில் ஏதேனும் வாங்கித் தரலாம் என்றாலும் கையில் இருந்த பணம் மிக மிகக் குறைவு. யோசிக்கையில் சட்டென அம்மு நினைவுக்கு வந்தாள். ஆம் மெட்ராசில் இருந்து கிளம்புவதற்கு முதல் நாள், சிலப் பல பத்து ரூபாய்த் தாள்களை என் கையில் திணித்து "என் நினைவாக வைத்துக் கொள், படித்து முடித்து விட்டு திரும்புகையில், என்னைப் பார்க்க வருகையில் இந்தப் பணத்தை பயன்படுத்து" என சொன்னது நினைவுக்கு வந்தது. அதை என் பணப்பையில் ஒளித்து வைத்து இருந்தேன். சட்டென அதில் இருந்த ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து, கப்பல் தோழியின் பெயரை எழுதி, பிறந்த நாள் வாழ்த்துகள் என தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் கொடுத்தேன். 

"காண்டி " எனச் சொல்லியபடி என்னை அணைத்துக் கொண்டாள். 

"உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நீ வருவதற்கு முன்னர் ஒரு நொடி கடலில் குதித்து விடலாம் எனத் தான் நினைத்தேன். உன் சக்கர நாற்காலி, இந்திய முகம் ஆகியன, முடிவை ஒத்திப் போட வைத்தது ... இப்பொழுது காந்தியின் படம் போட்ட பணத்தாள் "

நாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தேன். 

"இந்த நேர்மறை சம்பவங்கள் எல்லாம் எனக்கு ஏதோ ஒன்றை சொல்லுகின்றதோ ... ஹிட்லரின் காலத்தில் காந்தி என்றொரு ஒரு மகான் வாழ்ந்து இருக்கின்றார் என்பதை நினைக்கையிலேயே சிலிர்க்கின்றது... இந்தக் கப்பலில் வந்தமைக்கும் நன்றி ... இந்த காந்தி பணத்தாளிற்கும் நன்றி " எனச் சொல்லிவிட்டு அவளின் அறைக்கு சென்றுவிட்டாள். 

நான் எனது மலிவுவிலை நாற்காலிப் பயண அறைக்கு சென்றுவிட்டேன். அடுத்த இணைய இணைப்பு வந்தவுடன் பேஸ்புக்கில் அவளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவளின் பெயரை குறித்து வைத்துக் கொண்டேன். 

மறுநாள் அவளைப் பார்த்தேன். அப்பாடா கடலில் விழவில்லை. பேஸ்புக்கில் சேர்த்துக் கொண்டாள். சோகமாய் இருக்கும்பொழுது எல்லாம் பேசுவாள், நான் இல்லை என்றால் காந்தியைப் பற்றி ஏதாவது ஒன்றைப் படித்து விட்டு சோகத்தில் இருந்து மீண்டு கொண்டதாக சொல்லுவாள். அவள் ஸ்காட்லாண்டு சென்ற பொழுது , காந்தியின் மேல் மதிப்புக் கொண்ட ஒரு பிரிட்டிஷ் தோழனுடன் தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றாள். அவளின் பேஸ்புக் தளத்தில் , நான் அளித்த காந்தி பணத்தாளின் மின்னச்சு வடிவம் , தன்னை மீட்டு எடுத்த விஷயம் என்றத் தலைப்பில் இன்றும் இருந்து கொண்டு இருக்கின்றது.

Friday, October 10, 2008

சுவீடனில் படிக்கலாம் வாங்க, படிப்பு இலவசம், ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்

டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து சுவீடனில் மேற்படிப்பு படிக்க, அடுத்த வருடத்திற்கான சேர்க்கை ஆரம்பித்துவிட்டது. ஜனவரி 15 வரை இணையத்தில் பதிவு செய்யலாம். சான்றிதழ்கள் தபாலில் அனுப்ப வேண்டிய கடைசித்தேதி பிப்ரவரி 1 2009.


சுவீடனில் இந்திய பொறியியல்,அறிவியல் பட்டதாரி மாணவர்களுக்கு ஆங்கில நுழைவுத்தேர்வு கிடையாது.

சுவீடனில் படிப்புக்கான கட்டணம் கிடையாது.

அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள், மாணவ நண்பர்களே!! விரைவாக இந்தத்தளத்தில் பதிவு செய்து கொண்டு https://www.studera.nu/studera/1499.html

விண்ணப்ப வேலைகளை ஆரம்பியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தையப் பதிவைப்படிக்க இங்கே சொடுக்கவும்

நான் படிக்கும் கல்லூரியான பிலெக்கிஞ் தொழிற்நுட்பக் கல்லூரியில் விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்
--------------------

இதைப்படிக்கும் கல்லூரி மாணவர்கள்/விரிவுரையாளர்கள்/பேராசிரியர்கள் அவர்களின் கல்லூரி தகவற்பலகைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் இந்த அரிய வாய்ப்பு மேலும் பலரைச் சென்றடையும்.

நிறைய நேரங்களில் சாதாரண உரையாடல்கள் கூட வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடலாம். இந்த வருட ஆரம்பத்தில் வாழ்க்கையில் ஒரு மாற்றம் உடனடியாகத் தேவை என எண்ணிக்கொண்டே ஒரு முறை பதிவர் ரவிசங்கருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, எதேச்சையாக மேற்படிப்பு பற்றி பேச்சு ஆரம்பித்தது.

அவர் உரையாடலின் ஊடாக 'ஸ்கேண்டிநேவியன்' நாடுகளில் படிப்பு இலவசமாகத் தரப்படுகிறது என சொன்னபொழுது , எனக்குள் நீண்ட நாட்களாக மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு மீண்டும் உயிரோட்டம் கிடைத்தது. மனிதனின் சிறந்த உருவாக்கங்களில் ஒன்றான கூகிளில் தேட ஆரம்பித்தேன்.

ஸ்கேண்டிநேவியா நாடுகள் என்பது டென்மார்க்,சுவீடன்,நார்வே,பின்லேந்து மற்றும் ஐஸ்லேந்து. டென்மார்க்கில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதாலும், பின்லாந்து பல்கலைக் கழகங்கள் 75% மதிப்பெண் எதிர்பார்த்ததாலும் , நார்வே, ஐஸ்லேந்து குளிர் பிரதேசங்களாக இருப்பதாலும் எஞ்சிய சுவீடன் பற்றி தேட ஆரம்பித்தேன்.

தேடலில் மிக மிக மிக அத்தியாவசியமான மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு தகவல் தரப்பட்டிருந்தது.

இந்தியாவில் தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் அறிவியல் படிப்புபடித்திருப்பவர்களுக்கு ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக எனது மேற்படிப்புக்கான முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்ததற்கு இந்த மொழித்தேர்வும் ஒரு காரணம். ஆகையால், மக்களே சுவீடனில் மேற்படிப்பு படிக்க IELTS/TOEFL போன்ற ஆங்கில மொழித்தேர்வுகள் எழுதத்தேவை இல்லை. இது பி.எஸ்.சி படித்திருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இந்த விபரத்துக்கான சுட்டியைப்படிக்க இங்கே சுட்டவும்

ஐரோப்பாவில் அமைதியான நாடுகளில் ஒன்று என பொதுவாக அறியப்படும் சுவீடனில் படிப்புக்க்கட்டணம் கிடையாது. மொத்த படிப்புக்கான செலவும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.அது எல்லா நாட்டு குடிமக்களுக்கும் பொருந்தும்.

சுவீடனில் மொத்தம் 48 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் அரசாங்கமே நடத்துபவை. இவற்றின் கல்வித்தரம் அனைத்திலும் ஏறக்குறைய சமமாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நிறைய மக்களால் அறியப்படும் பல்கலைகழகங்களின் பெயர்கள், ராயல் இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி(KTH),உப்பசாலா, கோதன்பர்க், சால்மர்ஸ் , லுந்த் மற்றும் பிலெக்கிஞ் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி ஆகியன.

(BTH- Blekinge Institute of Technology கல்லூரியில் தான் நான் Software Engineering படிக்கிறேன். BTH மென்பொருள் துறைக்காகவே அப்போது மிகவும் பின் தங்கி இருந்த பிலெக்கிஞ்ச் மாகாணத்தில் ரோன்னிபே,கார்ல்ஸ்க்ரோனா,கார்ல்ஷாம் ஆகிய மூன்று நகரங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. )

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் நேரிடையாக அனைத்து பொறியியற் கல்லூரிகளுக்கு ஒரே விண்ணப்பிக்கும் முறை வைத்திருப்பது போல , சுவீடனில் படிக்க Studera என்ன மையப்படுத்தப்பட்ட முறையின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அதற்கான இணையத்தளம் www.studera.nu ஆங்கிலத்தில் இணையதளத்தைப்பார்க்க இந்த சுட்டியைப் பயன்படுத்தவும். https://www.studera.nu/studera/241.html


ஸ்டூடரா தளத்தில் உங்களுக்கான கணக்கைத் துவக்கிக்கொள்ளவும்.
உங்களுக்கான 4 விருப்பத்தேர்வுகளுக்கு ஒரே சமயத்தில் விண்ணப்பிக்கலாம்.
(போன வருடம் 8 விருப்பத்தேர்வுகளை வைத்திருந்தார்கள். இந்த வருடம் 4 ஆக குறைத்துவிட்டார்கள்.)

இணையத்தின் வாயிலாக விண்ணப்பித்துவிட்டு , நமது சான்றிதழ்களை நோட்டரி பப்லிக் கையொப்பம் பெற்று சுவீடனுக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

தபாலில் அனுப்பவேண்டிய சான்றிதழ்களைப் பற்றிய விபரங்களை இந்தச்சுட்டியில் வாசிக்கலாம்.

https://www.studera.nu/studera/1175.html

சுவீடன் பல்கலைகழகங்களில் வருடத்தில் ஜனவரியிலும் செப்டம்பரிலும் என இரண்டு முறை சேர்க்கை முறை இருக்கும். அடுத்த 2009 செப்டம்பர் சேர்க்கைக்கு 2009 பிப்ரவரி இரண்டாவது வாரம் கடைசியாக இருக்கும்.

செப்டம்பரில் வருபவர்களுக்கு மே மாத இறுதியில் சேர்க்கை நிலவரம் அறிவிக்கப்படும். அனுமதி கிடைத்தவுடன் விசா விற்கு விண்ணப்பிக்கலாம். விசா விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் கிடைத்து விசா கிடைத்தவுடன் சுவீடனுக்கு பறக்க ஆரம்பிக்கலாம்.

ஆகையால் அடுத்த செப்டம்பரில் இங்கு வர நினைப்பவர்கள் இப்பொழுதே பல்கலைக்கழகங்களைத் தங்களது விருப்பப்பாடங்களுக்கு ஏற்ற படி விபரங்களைத் தேட ஆரம்பியுங்கள்.

படிக்கும் காலங்களில் சிக்கனமாக இருந்தால் , இரண்டு வருட மேற்படிப்பை 3 லட்சரூபாய்க்கும் குறைவாகவே முடித்துவிடலாம். இருந்த போதிலும் விசா பெறுவதற்கு கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் நம் வங்கிக் கணக்கில் காட்டவேண்டும். பெரும்பலான மக்கள் குறுகிய கால கடனாக நண்பர்கள்/உறவினர்களிடம் வாங்கி விசா பெறும் வரை கணக்கில் வைத்துவிட்டு பிறகு திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.

பகுதி நேர வேலை என்பது சுவீடனைப் பொருத்த மட்டிலும் கொஞ்சம் கடினமே என்றாலும் சிறிய அளவிலான வேலைகள் கிடைக்கின்றன. வேலை அதிக அளவில் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் சுவீடீஷ் மொழி . சுவிடீஷ் மொழியை ஆறு மாதத்தில் கற்றுக்கொள்பவர்களுக்கு இங்கு எளிதாக வேலைக் கிடைக்கும்.

கல்விக்கட்டணம் இல்லை என்பதால், ஸ்காலர்ஷிப் கள் அதிக அளவில் கிடையாது. இருந்தபோதிலும் இந்த சுட்டியில் நீங்கள் சில ஸ்காலர்ஷிப் முறைகளைப்பார்க்கலாம்.
http://www.studyinsweden.se/templates/cs/Article____5001.aspx


மேற்படிப்பு படிக்க அனைத்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும் கடன் தருகின்றனர். 7.5 லட்சம் வரை பெற்றோர் மற்றும் Guarantor உறுதிமொழியுடன் தருகிறார்கள். 4 லட்சம் வரை பெற பெற்றோர் கையொப்பம் மட்டும் போதுமானது. 7.5 லட்சத்துக்கும் அதிகம் பெற சொத்து பத்திரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். சுவீடனைப்பொறுத்தமட்டில் 4 அல்லது 7.5 லட்சம் வகையில் கல்விக்கடன் விண்ணப்பிக்கலாம்.


இந்தப்பதிவின் அதிமுக்கிய நோக்கம், 2010 ஆம் ஆண்டில் இருந்து சுவீடனும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இன்னும் அரசாங்க ஆணை ஏதும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை எனினும் மிகவிரைவில் செயற்படுத்தப்படலாம் என்ற ஒரு பேச்சு இருக்கிறது.

இருந்த போதிலும் அதிகாரப்பூர்வமாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால் மேற்படிப்பு படிக்க வருபவர்கள் 30 ECTS அதாவது நான்கு பாடங்கள் முடித்துவிட்டால் 48 மாதங்களுக்கு வேலைக்கான விசாவும்/தற்காலிக தங்கும் குடியுரிமையும் (Residence permit) உடனடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதி இந்த வருடம் டிசம்பர் 15 லிருந்து செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் மேற்கத்திய நாடுகளில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என நினைத்து, ஆங்கிலப்புலமை குறைவு என்பதினாலோ அல்லது அதிகக் கட்டணம் கட்டவேண்டும் என்றோ இது நாள் வரை தவிர்த்து வந்தவர்களுக்கு சுவீடனில் படிக்கும் வாய்ப்பு ஒரு அரிய வரப்பிரசாதம்.

முக்கியமான விசயம், சுவீடனைப்பொருத்தமட்டில் எல்லாம் ஸ்டூடரா இணையத்தளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதைத்தவிர எனது கல்லூரி BTH போன்றவை நேரடியாகவும் அவர்களின் கல்லூரித்தளங்களில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

சுவீடனை பொருத்தமட்டில் நேரடியாக செய்ய வாய்ப்பு இருப்பதால் எந்த ‘மேற்படிப்பு படிக்க உதவும் ஏஜென்சிகளையும் அணுக வேண்டாம். எந்த ஏஜென்சிக்கும் ஏனைய மேற்கத்திய கல்லூரிகளைப்போல சுவீடன் கல்லூரிகளால் உரிமம் கொடுக்க்கப்படவில்லை. ஏஜென்சிகளை அணுகினாலும் அவர்களும் இந்த ஸ்டூடரா வழியாகத்தான் விண்ணப்பிப்பார்கள். வீணாக 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை கன்சல்டன்சி கட்டணம அழ வேண்டாம்.

சுவீடனில் மேலும் நிறைய தமிழ்க் குரல்களைக் கேட்க விருப்பம். மேற்படிப்பு படிக்க விரும்பும் தமிழ் நண்பர்களே வாருங்கள், சுவீடன் உங்களை வரவேற்கிறது.

அதி முக்கிய இணையத்தளங்கள்;

1. Studyinsweden.se, சுவீடனில் மேற்படிப்புப்பற்றிய அனைத்து விபரங்களும் அறிய

2. சுவீடன் பல்கலைகழங்களுக்கு விண்ணப்பிக்கும் இணையத்தளம் Studera.nu

3. விசா விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் ஏனைய குடியேற்ற சட்டதிட்டங்கள் பற்றி அறிய

4. Blekinge Institute of Technology யில் மென்பொருள் சம்பந்தமாக படிக்க விரும்புவர்கள் இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பருக்கான அறிவுப்பு விரைவில் வரும்.

5. இந்த வருடம் விண்ணப்பித்த முறை, அதில் சந்தித்த சங்கடங்கள் ஆகியனவற்றைப்பற்றி விபரமாக இந்தத் தளத்தில் காணலாம்

6. www.facebook.com என்ற சமுதாய இணையத்தளத்தில் இந்த வருடம் சுவீடனுக்கு விண்ணப்பித்தவர்களின் அனுபவங்களை வாசிக்கலாம். இது வரும் வருடம் விண்ணப்பிப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.ஆரம்பம் முதல் கடைசி விசா முடியும் வரை அனைத்து விபரங்களும் தெளிவாக இருக்கும்.

-------------
ஸ்டாக்ஹோல்ம் KTH பல்கலைகழகத்தில்
ICT Entrepreneurship படிக்கும் சாந்தகுமார் கீழ்கண்ட தகவல்களை தனி மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி இருந்தார்.
சென்னையில் AISEC என்ற மாணவர் அமைப்பு இருக்கின்றது.. இதன் மூலமாக இந்தியாவில் படிப்பவர்கள் வெளிநாடுகளில் Internship வாங்க இயலும் .

அதன் சுட்டிகள் கீழே


http://www.aiesecindia.org/

http://www.aiesec.org

http://www.youtube.com/watch?v=dbg3_XAH31o


Statement of Purpose எழுதுவதற்கான உதவியான கையேட்டின் சுட்டி கீழே

http://www.cs.cmu.edu/~harchol/gradschooltalk.pdf

சுவீடனில் இருக்கும் தமிழ் அன்பர்களின் ஆர்குட் குழுமம் http://www.orkut.com/Main#Community.aspx?cmm=71389585 ஆலோசனை , உதவிக்கு தயங்காமல் இந்த குழும தமிழ் நண்பர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

ஸ்டாக்ஹோல்ம் இல் தங்குவதற்கு இப்பொழுதே முன் பதிவு செய்ய இந்த தளத்தை சொடுக்கவும். www.sssb.se
நமக்கு விருப்பமான மாணவர் விடுதி கிடைக்க பொதுவாக 400 நாட்களாகும், இப்பொழுதே முன்பதிவு செய்துவைத்துக்கொள்வது பேருதவியாக இருக்கும்

Thursday, September 18, 2008

Eslöv to Hässleholm பெயர் குழப்பம் (சுவீடன் அனுபவங்கள் - 1 )

சுவீடன் வந்த செப்டம்பர் முதல்வாரத்தில் எனக்கான சக்கர நாற்காலியைப் பெற்றுக்கொள்வதற்காக எஸ்லோவ்என்ற ஊர் வரை செல்ல வேண்டியதாய் இருந்தது. ரோன்னிபே என்ற ஊரில் இருந்து இது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ரயில் பிரயாணம். ஏதோ ஒரு தைரியத்தில் தனியாகவே போய் வாங்கி வந்துவிடலாம் என , ரயிலைப்பிடித்து கிளம்பியாகிவிட்டது.

இந்த ரயில் சுவீடனில் கார்ல்ஸ்க்ரோனா என்ற ஊரில் இருந்து டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகன் வழியாக ஹெல்சின்ஹர் என்ற ஊர் வரை செல்வது. சுவீடனின் நாட்டுப்புற அழகை கண்ணாடி சன்னலுக்கு வெளியே ரசித்தபடியே, அடுத்த வருடம் கீர்த்தனாவுடன் இப்படி போகவேண்டும் என்ற எதிர்கால நினைவலைகளுடன் பயணம் சுவாரசியமாகவே சென்று கொண்டிருந்தது. ரயிலில் அடுத்த நிலையம் அறிவிப்பு எஸ்லோ என வந்தது. அட நாம் வரவேண்டிய ஊரு 20 நிமிடம் முன்னமே வந்துவிட்டதே என இறங்க ஆயத்தமானேன். இருந்தாலும் மனதில் சின்ன நெருடல்.பக்கத்தில் இருந்தவரிடம் , அடுத்த நிலையம் எஸ்லோவ் ஆ எனக்கேட்டபோது ஆமாம் என அவர் தலையாட்ட நானும் ரயிலை விட்டு இறங்கி ஒரு மரபெஞ்சை பிடித்து அமர்ந்து , ரயில் நகர்வதைப் பார்த்துக்கொண்டே, தலையைத் திருப்பி ரயில் நிலையத்தின் பெயரைப்பார்க்க அது Hässleholm என்று இருந்தது. அடடா, நாம் இறங்க வேண்டிய ஊர் Eslov ஆச்சே என யோசித்துக்கொண்டே, ரயில் பாதையை சரிப்பார்த்துக்கொண்டிருந்தவர்களிடம் இது எந்த ஊர் எனக்கேட்டபோது அவர்களும் Eslov க்குரிய உச்சரிப்புடனே யே ஊர் பெயரை சொன்னார்கள்.

நான் அந்த ஊரின் பெயரைப்படித்த போது ஹஸ்லஹோம் எனப்படித்தேன். ஸ்வீடிஷ் மொழி உச்சரிப்புப் படி அது எஸ்லஹோ என புரிந்தது. தவறான ரயில் நிலையத்தில் இறங்கி இருந்தாலும் பயம் ஏற்படவில்லை. சுவீடனில் கையில் காசு இல்லை என்றால் கூட ஊர் போய் சேர ரயில்நிலைய அதிகாரிகளே டிக்கெட் எடுத்துத் தருவார்களாம்.

எனக்கு அப்போது இருந்த ஒரே சந்தேகம், என் கையில் இருந்த பயணச்சீட்டு செல்லுமா என்பதுதான். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு ரயில் நான் செல்லப்போகும் ஊர் வழியாக செல்லும் என்பது தெரிந்திருந்ததால் ரயில் நேரம் பற்றி கவலைப்படவில்லை.

அங்கு ரயில்பாதையில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் என் சந்தேகத்தை நான் ஆங்கிலத்தில் கேட்க, அவர்களுக்கு ஆங்கிலம் சரிவர பேசவராததால் , ரயில்நிலைய அதிகாரியை அழைத்தனர். வந்த ஆண் ரயில் அதிகாரி ரயில் வரும் நேரத்தை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தார், அதுவும் சுவீடிஷ் மொழியில். எனக்கு என் பயணச்சீட்டு செல்லுமா என்பது தான் சந்தேகம். அடுத்த சில நிமிடங்களில் ஒரு பெண் அதிகாரி ஆங்கித்தில் என் பயணச்சீட்டு செல்லும் என்பதை தெளிவாக்கி, என்னை ரயிலில் பத்திரமாக ஏற்றிவைத்தார்.

அடுத்த 20 நிமிடத்தில் நான் இறங்கவேண்டிய இடத்தில் சரியாக இறங்கி, எனக்கான சக்கர நாற்காலியைப் பெற்றுக்கொண்டு, மாலை ஊர் திரும்பினேன்.

புகைப்படங்களுக்கு இங்கே சொடுக்கவும்

-----
அடுத்தப்பதிவு பேருந்துக்காகக் காத்திருக்கையில் ஒரு ஈரானியப்பெண்ணுடன் உரையாடியது.