Friday, October 10, 2008

சுவீடனில் படிக்கலாம் வாங்க, படிப்பு இலவசம், ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்

டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து சுவீடனில் மேற்படிப்பு படிக்க, அடுத்த வருடத்திற்கான சேர்க்கை ஆரம்பித்துவிட்டது. ஜனவரி 15 வரை இணையத்தில் பதிவு செய்யலாம். சான்றிதழ்கள் தபாலில் அனுப்ப வேண்டிய கடைசித்தேதி பிப்ரவரி 1 2009.


சுவீடனில் இந்திய பொறியியல்,அறிவியல் பட்டதாரி மாணவர்களுக்கு ஆங்கில நுழைவுத்தேர்வு கிடையாது.

சுவீடனில் படிப்புக்கான கட்டணம் கிடையாது.

அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள், மாணவ நண்பர்களே!! விரைவாக இந்தத்தளத்தில் பதிவு செய்து கொண்டு https://www.studera.nu/studera/1499.html

விண்ணப்ப வேலைகளை ஆரம்பியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தையப் பதிவைப்படிக்க இங்கே சொடுக்கவும்

நான் படிக்கும் கல்லூரியான பிலெக்கிஞ் தொழிற்நுட்பக் கல்லூரியில் விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்
--------------------

இதைப்படிக்கும் கல்லூரி மாணவர்கள்/விரிவுரையாளர்கள்/பேராசிரியர்கள் அவர்களின் கல்லூரி தகவற்பலகைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் இந்த அரிய வாய்ப்பு மேலும் பலரைச் சென்றடையும்.

நிறைய நேரங்களில் சாதாரண உரையாடல்கள் கூட வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடலாம். இந்த வருட ஆரம்பத்தில் வாழ்க்கையில் ஒரு மாற்றம் உடனடியாகத் தேவை என எண்ணிக்கொண்டே ஒரு முறை பதிவர் ரவிசங்கருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, எதேச்சையாக மேற்படிப்பு பற்றி பேச்சு ஆரம்பித்தது.

அவர் உரையாடலின் ஊடாக 'ஸ்கேண்டிநேவியன்' நாடுகளில் படிப்பு இலவசமாகத் தரப்படுகிறது என சொன்னபொழுது , எனக்குள் நீண்ட நாட்களாக மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு மீண்டும் உயிரோட்டம் கிடைத்தது. மனிதனின் சிறந்த உருவாக்கங்களில் ஒன்றான கூகிளில் தேட ஆரம்பித்தேன்.

ஸ்கேண்டிநேவியா நாடுகள் என்பது டென்மார்க்,சுவீடன்,நார்வே,பின்லேந்து மற்றும் ஐஸ்லேந்து. டென்மார்க்கில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதாலும், பின்லாந்து பல்கலைக் கழகங்கள் 75% மதிப்பெண் எதிர்பார்த்ததாலும் , நார்வே, ஐஸ்லேந்து குளிர் பிரதேசங்களாக இருப்பதாலும் எஞ்சிய சுவீடன் பற்றி தேட ஆரம்பித்தேன்.

தேடலில் மிக மிக மிக அத்தியாவசியமான மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு தகவல் தரப்பட்டிருந்தது.

இந்தியாவில் தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் அறிவியல் படிப்புபடித்திருப்பவர்களுக்கு ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக எனது மேற்படிப்புக்கான முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்ததற்கு இந்த மொழித்தேர்வும் ஒரு காரணம். ஆகையால், மக்களே சுவீடனில் மேற்படிப்பு படிக்க IELTS/TOEFL போன்ற ஆங்கில மொழித்தேர்வுகள் எழுதத்தேவை இல்லை. இது பி.எஸ்.சி படித்திருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இந்த விபரத்துக்கான சுட்டியைப்படிக்க இங்கே சுட்டவும்

ஐரோப்பாவில் அமைதியான நாடுகளில் ஒன்று என பொதுவாக அறியப்படும் சுவீடனில் படிப்புக்க்கட்டணம் கிடையாது. மொத்த படிப்புக்கான செலவும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.அது எல்லா நாட்டு குடிமக்களுக்கும் பொருந்தும்.

சுவீடனில் மொத்தம் 48 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் அரசாங்கமே நடத்துபவை. இவற்றின் கல்வித்தரம் அனைத்திலும் ஏறக்குறைய சமமாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நிறைய மக்களால் அறியப்படும் பல்கலைகழகங்களின் பெயர்கள், ராயல் இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி(KTH),உப்பசாலா, கோதன்பர்க், சால்மர்ஸ் , லுந்த் மற்றும் பிலெக்கிஞ் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி ஆகியன.

(BTH- Blekinge Institute of Technology கல்லூரியில் தான் நான் Software Engineering படிக்கிறேன். BTH மென்பொருள் துறைக்காகவே அப்போது மிகவும் பின் தங்கி இருந்த பிலெக்கிஞ்ச் மாகாணத்தில் ரோன்னிபே,கார்ல்ஸ்க்ரோனா,கார்ல்ஷாம் ஆகிய மூன்று நகரங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. )

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் நேரிடையாக அனைத்து பொறியியற் கல்லூரிகளுக்கு ஒரே விண்ணப்பிக்கும் முறை வைத்திருப்பது போல , சுவீடனில் படிக்க Studera என்ன மையப்படுத்தப்பட்ட முறையின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அதற்கான இணையத்தளம் www.studera.nu ஆங்கிலத்தில் இணையதளத்தைப்பார்க்க இந்த சுட்டியைப் பயன்படுத்தவும். https://www.studera.nu/studera/241.html


ஸ்டூடரா தளத்தில் உங்களுக்கான கணக்கைத் துவக்கிக்கொள்ளவும்.
உங்களுக்கான 4 விருப்பத்தேர்வுகளுக்கு ஒரே சமயத்தில் விண்ணப்பிக்கலாம்.
(போன வருடம் 8 விருப்பத்தேர்வுகளை வைத்திருந்தார்கள். இந்த வருடம் 4 ஆக குறைத்துவிட்டார்கள்.)

இணையத்தின் வாயிலாக விண்ணப்பித்துவிட்டு , நமது சான்றிதழ்களை நோட்டரி பப்லிக் கையொப்பம் பெற்று சுவீடனுக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

தபாலில் அனுப்பவேண்டிய சான்றிதழ்களைப் பற்றிய விபரங்களை இந்தச்சுட்டியில் வாசிக்கலாம்.

https://www.studera.nu/studera/1175.html

சுவீடன் பல்கலைகழகங்களில் வருடத்தில் ஜனவரியிலும் செப்டம்பரிலும் என இரண்டு முறை சேர்க்கை முறை இருக்கும். அடுத்த 2009 செப்டம்பர் சேர்க்கைக்கு 2009 பிப்ரவரி இரண்டாவது வாரம் கடைசியாக இருக்கும்.

செப்டம்பரில் வருபவர்களுக்கு மே மாத இறுதியில் சேர்க்கை நிலவரம் அறிவிக்கப்படும். அனுமதி கிடைத்தவுடன் விசா விற்கு விண்ணப்பிக்கலாம். விசா விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் கிடைத்து விசா கிடைத்தவுடன் சுவீடனுக்கு பறக்க ஆரம்பிக்கலாம்.

ஆகையால் அடுத்த செப்டம்பரில் இங்கு வர நினைப்பவர்கள் இப்பொழுதே பல்கலைக்கழகங்களைத் தங்களது விருப்பப்பாடங்களுக்கு ஏற்ற படி விபரங்களைத் தேட ஆரம்பியுங்கள்.

படிக்கும் காலங்களில் சிக்கனமாக இருந்தால் , இரண்டு வருட மேற்படிப்பை 3 லட்சரூபாய்க்கும் குறைவாகவே முடித்துவிடலாம். இருந்த போதிலும் விசா பெறுவதற்கு கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் நம் வங்கிக் கணக்கில் காட்டவேண்டும். பெரும்பலான மக்கள் குறுகிய கால கடனாக நண்பர்கள்/உறவினர்களிடம் வாங்கி விசா பெறும் வரை கணக்கில் வைத்துவிட்டு பிறகு திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.

பகுதி நேர வேலை என்பது சுவீடனைப் பொருத்த மட்டிலும் கொஞ்சம் கடினமே என்றாலும் சிறிய அளவிலான வேலைகள் கிடைக்கின்றன. வேலை அதிக அளவில் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் சுவீடீஷ் மொழி . சுவிடீஷ் மொழியை ஆறு மாதத்தில் கற்றுக்கொள்பவர்களுக்கு இங்கு எளிதாக வேலைக் கிடைக்கும்.

கல்விக்கட்டணம் இல்லை என்பதால், ஸ்காலர்ஷிப் கள் அதிக அளவில் கிடையாது. இருந்தபோதிலும் இந்த சுட்டியில் நீங்கள் சில ஸ்காலர்ஷிப் முறைகளைப்பார்க்கலாம்.
http://www.studyinsweden.se/templates/cs/Article____5001.aspx


மேற்படிப்பு படிக்க அனைத்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும் கடன் தருகின்றனர். 7.5 லட்சம் வரை பெற்றோர் மற்றும் Guarantor உறுதிமொழியுடன் தருகிறார்கள். 4 லட்சம் வரை பெற பெற்றோர் கையொப்பம் மட்டும் போதுமானது. 7.5 லட்சத்துக்கும் அதிகம் பெற சொத்து பத்திரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். சுவீடனைப்பொறுத்தமட்டில் 4 அல்லது 7.5 லட்சம் வகையில் கல்விக்கடன் விண்ணப்பிக்கலாம்.


இந்தப்பதிவின் அதிமுக்கிய நோக்கம், 2010 ஆம் ஆண்டில் இருந்து சுவீடனும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இன்னும் அரசாங்க ஆணை ஏதும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை எனினும் மிகவிரைவில் செயற்படுத்தப்படலாம் என்ற ஒரு பேச்சு இருக்கிறது.

இருந்த போதிலும் அதிகாரப்பூர்வமாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால் மேற்படிப்பு படிக்க வருபவர்கள் 30 ECTS அதாவது நான்கு பாடங்கள் முடித்துவிட்டால் 48 மாதங்களுக்கு வேலைக்கான விசாவும்/தற்காலிக தங்கும் குடியுரிமையும் (Residence permit) உடனடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதி இந்த வருடம் டிசம்பர் 15 லிருந்து செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் மேற்கத்திய நாடுகளில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என நினைத்து, ஆங்கிலப்புலமை குறைவு என்பதினாலோ அல்லது அதிகக் கட்டணம் கட்டவேண்டும் என்றோ இது நாள் வரை தவிர்த்து வந்தவர்களுக்கு சுவீடனில் படிக்கும் வாய்ப்பு ஒரு அரிய வரப்பிரசாதம்.

முக்கியமான விசயம், சுவீடனைப்பொருத்தமட்டில் எல்லாம் ஸ்டூடரா இணையத்தளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதைத்தவிர எனது கல்லூரி BTH போன்றவை நேரடியாகவும் அவர்களின் கல்லூரித்தளங்களில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

சுவீடனை பொருத்தமட்டில் நேரடியாக செய்ய வாய்ப்பு இருப்பதால் எந்த ‘மேற்படிப்பு படிக்க உதவும் ஏஜென்சிகளையும் அணுக வேண்டாம். எந்த ஏஜென்சிக்கும் ஏனைய மேற்கத்திய கல்லூரிகளைப்போல சுவீடன் கல்லூரிகளால் உரிமம் கொடுக்க்கப்படவில்லை. ஏஜென்சிகளை அணுகினாலும் அவர்களும் இந்த ஸ்டூடரா வழியாகத்தான் விண்ணப்பிப்பார்கள். வீணாக 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை கன்சல்டன்சி கட்டணம அழ வேண்டாம்.

சுவீடனில் மேலும் நிறைய தமிழ்க் குரல்களைக் கேட்க விருப்பம். மேற்படிப்பு படிக்க விரும்பும் தமிழ் நண்பர்களே வாருங்கள், சுவீடன் உங்களை வரவேற்கிறது.

அதி முக்கிய இணையத்தளங்கள்;

1. Studyinsweden.se, சுவீடனில் மேற்படிப்புப்பற்றிய அனைத்து விபரங்களும் அறிய

2. சுவீடன் பல்கலைகழங்களுக்கு விண்ணப்பிக்கும் இணையத்தளம் Studera.nu

3. விசா விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் ஏனைய குடியேற்ற சட்டதிட்டங்கள் பற்றி அறிய

4. Blekinge Institute of Technology யில் மென்பொருள் சம்பந்தமாக படிக்க விரும்புவர்கள் இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பருக்கான அறிவுப்பு விரைவில் வரும்.

5. இந்த வருடம் விண்ணப்பித்த முறை, அதில் சந்தித்த சங்கடங்கள் ஆகியனவற்றைப்பற்றி விபரமாக இந்தத் தளத்தில் காணலாம்

6. www.facebook.com என்ற சமுதாய இணையத்தளத்தில் இந்த வருடம் சுவீடனுக்கு விண்ணப்பித்தவர்களின் அனுபவங்களை வாசிக்கலாம். இது வரும் வருடம் விண்ணப்பிப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.ஆரம்பம் முதல் கடைசி விசா முடியும் வரை அனைத்து விபரங்களும் தெளிவாக இருக்கும்.

-------------
ஸ்டாக்ஹோல்ம் KTH பல்கலைகழகத்தில்
ICT Entrepreneurship படிக்கும் சாந்தகுமார் கீழ்கண்ட தகவல்களை தனி மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி இருந்தார்.
சென்னையில் AISEC என்ற மாணவர் அமைப்பு இருக்கின்றது.. இதன் மூலமாக இந்தியாவில் படிப்பவர்கள் வெளிநாடுகளில் Internship வாங்க இயலும் .

அதன் சுட்டிகள் கீழே


http://www.aiesecindia.org/

http://www.aiesec.org

http://www.youtube.com/watch?v=dbg3_XAH31o


Statement of Purpose எழுதுவதற்கான உதவியான கையேட்டின் சுட்டி கீழே

http://www.cs.cmu.edu/~harchol/gradschooltalk.pdf

சுவீடனில் இருக்கும் தமிழ் அன்பர்களின் ஆர்குட் குழுமம் http://www.orkut.com/Main#Community.aspx?cmm=71389585 ஆலோசனை , உதவிக்கு தயங்காமல் இந்த குழும தமிழ் நண்பர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

ஸ்டாக்ஹோல்ம் இல் தங்குவதற்கு இப்பொழுதே முன் பதிவு செய்ய இந்த தளத்தை சொடுக்கவும். www.sssb.se
நமக்கு விருப்பமான மாணவர் விடுதி கிடைக்க பொதுவாக 400 நாட்களாகும், இப்பொழுதே முன்பதிவு செய்துவைத்துக்கொள்வது பேருதவியாக இருக்கும்

28 பின்னூட்டங்கள்/Comments:

நந்தா said...

பல உபயோகமான தகவல்கள்.

எல்லாமே புதுசா இருக்கு எனக்கு. ஆனால் இனிமே மறுபடி படிக்கணுமான்னு யோசிக்க வேண்டியதா இருக்கு. ஏற்கனவே நாம அறிவுக் கொழுந்து வேற.

ISR Selvakumar said...

வலைப்பூக்களில் இது போன்ற தகவல்கள் மிக மிக அபூர்வமாகத்தான் வருகின்றன.

உபயோகமான தகவல்.

என்னிடம் 12-15 மாணவர்கள் பல் படிக்கிறார்கள். அவர்களுக்கு இது போல உபயோமானத் தகவல்கள் ஏதாவது உண்டா?

ISR Selvakumar said...

Please read with correction
//என்னிடம் 12-15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பலர் படிக்கிறார்கள். அவர்களுக்கு இது போல உபயோமானத் தகவல்கள் ஏதாவது உண்டா?
//

siva gnanamji(#18100882083107547329) said...

உருப்படியான பதிவு!
உங்களைத்த்விர்த்து அங்கு உள்ள தமிழக மாணவர்களையும் பற்றிக் கூறுங்களேன்

புதுகை.அப்துல்லா said...

சமீபகாலமாக பதிவுலகில் வந்த மிகவும் உபயோகமான பதிவுகளில் இதுவும் ஓன்று. என்னால் முடிந்தவரை பலருக்கும் இணைப்பு குடுத்து விட்டேன்

சி தயாளன் said...

நல்ல தகவல்...நன்றி

Aruna said...

Well done Vinaiyookki!!!
A great and a very useful post.
Good!
anbudan aruna

puduvaisiva said...

Dear Vennai ukki

one of the best article keep it up

write more like this. and my friend also now in Swiss.

Puduvai siva.

ரவி said...

உண்மையில் மிகவும் உபயோகமான பதிவு...

முதுநிலை படித்து முடித்ததுக்கப்புறம், இனி எந்த பரிச்சையிலும் கலந்துகொள்ளமாட்டேன் என்று எங்க ஆத்தா முப்பாத்தா மேல் சத்தியம் செய்துவிட்டதால் என்னால் படிக்க இயலாது...!!!

மற்றவர்கள் பலன் அடையும்படி இதை பிற தளங்களிலும், தமிழ்ஷ் போன்றவற்றிலும் வெளியிடுங்கள்...

சுபானு said...

மிகவும் பயனுள்ள பதிவிது... நன்றி.. )

பரத் said...

Thanks for the information!!

வினையூக்கி said...

@r.selvakkumar
////என்னிடம் 12-15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பலர் படிக்கிறார்கள். அவர்களுக்கு இது போல உபயோமானத் தகவல்கள் ஏதாவது உண்டா?
//

எந்த வகையில் கேட்கறீர்கள் என்று புரியவில்லை சார். ஸ்காலர்ஷிப் மாதிரியா? அல்லது பேச்சிலர்ஸ் படிக்கவா?

வினையூக்கி said...

பதிவில் மேலும் சில விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. நண்பர் சாந்தகுமாருக்கு நன்றி

ஆட்காட்டி said...

நன்றி

ஆட்காட்டி said...

மீண்டும் நன்றி

உண்மைத்தமிழன் said...

நல்ல பயனுள்ள தகவல்கள் தம்பி.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிறாய்.. வாழ்க வளமுடன்..

நல்லபடியாக படித்து முடித்து முன்னேறி வா..

ஜே கே | J K said...

நல்ல தகவல்கள்.

நன்றி...

//இனிமே மறுபடி படிக்கணுமான்னு யோசிக்க வேண்டியதா இருக்கு. ஏற்கனவே நாம அறிவுக் கொழுந்து வேற.//

ரிப்பீட்டேய்!...

தருமி said...

a good post.

glad to know about your higher education. wish you all the best....

கலை said...

அட, நம்ம பக்கத்து ஊருக்கு வந்திருக்கிறீங்களா? :)

நோர்வேயில் மேல்படிப்புக்கு, உள்நாட்டினருக்கு படிப்பு முழுமையாய் இலவசமில்லை. கொஞ்சமாய் stipend உம், நிறைய வட்டியுடன் கூடிய கடனும் கொடுக்கிறாங்க. முதலுடன் கூடிய வட்டியை வேலை கிடைத்ததும், அவங்களாவே எடுத்துக்குவாங்க. எங்கே அவர் வேலை செய்கின்றார் என்பதைப் பொறுத்து, தள்ளுபடி சலுகைகள் உண்டு. மத்தபடி முன்னேறிவரும் நாடுகளில் இருந்து வருபவர்களில் முழு scholarship உடன் படிப்பவர்களும் இருக்கிறார்கள். அவங்க வருடம் ஒருமுறை தாய்நாடு சென்று வர allowances உம் கொடுப்பாங்க. பகுதியாக கடன் எடுத்து படிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கடன் எடுத்தாலும்கூட, அவர்கள் தமது சொந்த நாட்டிற்கோ, அல்லது வேறு ஏதாவது ஒரு முன்னேறிவரும் நாட்டுக்கோ திரும்பினால், அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.

ஆனால் நோர்வேயில் ஆங்கில மொழித் தேர்வு அவசியம் என்றே நினைக்கிறேன்.

குளிருக்கு பயப்படாமல் நோர்வே வர விரும்புபவர்களுக்கு என்னாலான மேலதிக தகவல் :).

வினையூக்கி said...

//குளிருக்கு பயப்படாமல் நோர்வே வர விரும்புபவர்களுக்கு என்னாலான மேலதிக தகவல் :). //

மிக்க நன்றி கலை.

ஆட்காட்டி said...

எனக்கும் நோர்வேயில் படிக்க ஆசை என்ன செய்ய வேண்டும்? நான் படித்தது பொறியியல். மனைவி மருத்துவம். இப்பொழுது மிகவும் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.எனது மின்னஞ்சல்
peratamil@gmail.com

வடுவூர் குமார் said...

அருமையான தகவல்களை கொடுத்துள்ளீர்கள்,மிக்க நன்றி.

Alchemist said...

Dear Selva,

This is a very valuable post for all those who are interested in pursuing a Higher education abroad.

Very Informative. Thanks a lot.

I appreciate your good will in sharing all the information you know about it.

One of the best among your posts.

Keep up your good Work..
Take Care,
Mohan

Sateesh said...

தங்கவளுக்கு மிக்க நன்றி... ICT Entrepreneurship படிக்கும் சாந்தகுமார் அவர்களின் தொடர்பு கிடைக்குமா!!?

Rajesh said...

Hi,
I have applied for 1 course each from Lund, Malardalen, Hamstad & Boras universities through studera.nu. Should I have to send the recommendation letters and thesis during sending my supporting documents?
I also applied one course in BTH through their website, but that university is asking for recommendation letters.
Pls advise.
Thanks/Rajesh

வினையூக்கி said...

ராஜேஷ்,
ஆமாம். தாங்கள் ரெக்கமென்டேசன் கடிதங்களையும் அனுப்ப வேண்டும்.

Rajesh said...

Hi Selva,

I came to know that, the address given in Studera website is post box no. So couriers cannot be sent only postal service is posible. Is there any other options to send the documents safely and quickly. How long will it take to send the documents thru postal?

krishna kumar said...

anderson the krishna kumar

Thats great info.Thanks a lot.Please give further info in my mail id krishnaa_kumarr88@yahoo.co.in