Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, May 13, 2014

பக்கத்து வீட்டுப்பெண் - சிறுகதை

ஒட்டுக்கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சுவற்றில் காதை வைத்து, அடுத்தவர் வீட்டில் என்னப் பேசிக்கொள்கின்றார்கள் என்பதில் ஏனோ ஓர் ஆர்வமுண்டு. பக்கத்துவீட்டில் பேசிக்கொள்ளப்படும் மொழி எனக்குப் புரியவில்லை எனினும்,வாக்கியங்களின் ஏற்ற இறக்கங்களை வைத்து, சண்டையா, கொஞ்சிக் கொள்கின்றனரா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த புதுக்குடியிருப்புக்கு வந்தபின்னர், ஓட்டுக்கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.

காதில் ஒலிவாங்கியை மாட்டி, பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தாலும், உள்நுழைந்து என் கவனத்தைத் திசைத் திருப்பும் அளவிற்கு பக்கத்து வீட்டில் இருந்து எப்பொழுதும் சத்தம்தான். கணவன் மனைவியா , காதலன் காதலியா என்று தெரியவில்லை.

பக்கத்துவீட்டுப் பெண் அலறிக்கொண்டே இருப்பாள். ஆண் கத்திக் கொண்டே இருப்பான். சமயங்களில் சண்டை நள்ளிரவு வரை நீடிக்கும். ஒருநாள் கதவைத் தட்டி, அமைதிக் காக்கும்படி சொல்லிவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவர்களின் ஆக்ரோசச் சண்டையில் வெளிநாட்டுக்காரனான என்னை அடித்துவிட்டால் என்ன செய்வது என்று காதில் பஞ்சடைத்துக் கொண்டு தூங்கிவிடுவேன்.

ஒருநாள், பக்கத்துவீட்டு, ஆண் கதவைப் பூட்டிவிட்டுப் போவதைப் பார்த்தேன். உள்ளிருந்து பெண்ணின் குரல். எனது அடிப்படை இத்தாலிய அறிவை வைத்து, நான் புரிந்து கொண்டது,

"பூட்டிவிட்டு போகதே, நான் எங்கும் வெளியே போகமாட்டேன்".

கொடுமைக்கார காதலன்/ கணவனாக இருப்பான் போலிருக்கின்றதே. தொடர்ந்து ஒரு வாரம் கவனித்தேன், பெண்ணின் கதறலை மீறி, இவன் பூட்டிவிட்டு செல்வதைப் பார்த்ததும் என்னுள் இருந்த துப்பறியும் சாம்பு விழித்துக்கொண்டான்.

ஒருநாள் எனது வேலைகளை விட்டுவிட்டு, அவனைப் பின் தொடர்ந்தேன். அவனது அலுவலகம் சென்றான். மதியம் உணவு இடைவேளையில், அருகில் இருந்த பூங்காவிற்கு வருகின்றான், மடிக்கணினியைத் திறந்து ஏதோ  பார்க்கின்றான். நடைபழகுவதைப் போல அவன் பின் பக்கம் சென்று என்னப் பார்க்கின்றான் எனப்பார்த்தேன். அவனது வீட்டில் இருந்து நேரலை ஒளிப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சிசிடிவி கேமரா வைத்து, பெண்ணைக் கண்காணிக்கின்றானே. தேர்ந்த கொடுமைக்காரன் போல.

பக்கத்துவீட்டு வாக்குவாதங்களைப் புரிந்துகொள்வதற்காகவே இத்தாலிய மொழியை வேகமாகக் கற்றுக்கொண்டேன். வழக்கமாக ஓங்கி ஒலிக்கும் பெண்குரல் இன்று கெஞ்சிக் கொண்டிருந்தது.

"செத்துப்போய்டவா, ஒழுங்கா சொன்ன பேச்சைக் கேட்கலான்னா, உன் கண் முன்னாடியே கையை அறுத்துக்கிட்டு செத்துடுவேன், நான் வாழனும்னு நீ நினைச்சின்னா ஒழுங்க இரு, யாரையும் எதையும் செய்யவேண்டாம்" என்றான் ஆண்.

பெண் கெஞ்சி கெஞ்சி அழும் குரல் கேட்டு பின் நிசப்தமானது.

மறுநாள், முதன்முறையாக பக்கத்துவீட்டு ஆண், அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தான். அந்தப் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில்,  அவர்களை முந்திச்சென்று, அவளை ஓரக்கண்னால் பார்த்தபடி, அவனுக்கு வணக்கம் சொன்னேன்.

நான் ஓரக்கண்ணால் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, சுட்டெரிப்பதைப் போலப் பார்த்தாள். பார்வையில் பயந்துப்போய் , அவர்களுடன் லிஃப்டில் செல்லாமல், படியில் இறங்கிவிட்டேன். . அன்றிரவு சத்தம் குறையும் என்று பார்த்தால் மறுபடியும் அதிகரித்தது.  ஆண் தான் செத்துப்போகப்போவதாக மிரட்டிக்கொண்டிருந்தான். பெண்ணின் அழுகுரல். யாராவது இவனைக் காப்பாற்றுங்களேன் என்ற குரல்.

உடனடியாக போலிஸிற்கு அழைத்து வரவழைத்தேன். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து, உள் நுழைய மணிக்கட்டை அறுத்துக்கொண்டு இரத்தவெள்ளத்தில் கிடந்தான். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டான்.

அப்பெண்ணை அவ்வீட்டினில் தேடினேன். அவள் இல்லை. சன்னல் எல்லாம் அடைக்கப்பட்டுத்தான் இருந்தது. மெல்ல குடியிருப்பின் சொந்தக்காரரை நெருங்கி,

"இவ்வீட்டில் இந்தப் படத்தில் இருக்கும் பெண்ணும் இருக்கின்றாள் சார், அவளின் குரலைக் கேட்டிருக்கின்றேன், அடிக்கடி சண்டைப்போட்டுக்கொள்வார்கள், இவன் மிரட்டுவான் , அவள் அழுவாள், அவளை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டுப் போய்விடுவான்,"

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,

"அவள் அவனின் காதலி, சிலரால் கொடூரமாக கொல்லப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன, அவள் இறந்தபின்பு இவன் கிறுக்குப்பிடித்தவன் மாதிரி அவளின் குரலிலும் தன் குரலிலும் மாறிமாறிப்பேசிக்கொள்வான், அதைத்தான் நீ கேட்டிருப்பாய்"

அப்படியானால், அவர்கள் இருவரையும் ஒருசேர அன்று பார்த்தேனே!!, பார்த்ததை அவரிடம் சொல்லவில்லை. மருத்துவமனைக்கு விரைந்தேன். கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர் சொன்னார். அவனின் நெருங்கிய நண்பன் என்று சொல்லி மன்றாடி அனுமதிப் பெற்றுவிட்டு அந்த சிகிச்சை அறைக்குள் நுழைந்தேன். அந்தப்'பேய்'ப்பெண்ணும் அங்கிருந்தாள். இந்தமுறை உக்கிரமான பார்வையில்லை.

மெல்ல கண் திறந்த பக்கத்துவீட்டுக்காரன், உடைந்த ஆங்கிலத்தில்,

"இதோ இவள் என் காதலி, இறந்துவிட்டாள், . இவளுக்கு அவளைக் கொன்றவர்களைப் பழிவாங்க வேண்டும்,  பழிக்குப் பழிக்கூடாது என்பது என் நோக்கம். அந்த வாக்குவாதங்களைத்தான் நீ கேட்டிருப்பாயே, என்னை மீறி அவள் வெளியேப்போகக் கூடாது என்பதன் உணர்வுப்பூர்வமான தடைதான் அவளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்வது"

பேய்கள் மனிதர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதைப் பற்றி படித்திருக்கின்றேன். ஆனால், ஒரு பெண் இறந்து பழிவாங்கத் துடிக்கும் பேய் ஆன பின்னரும் காதலின் அன்பின்  கட்டுக்குள் இவன் வைத்திருக்கின்றானே....

"நான் என்ன செய்யவேண்டும், சொல் " என்றேன்.

"இதோ, இந்த மருத்துவக் கவசங்களை நீக்கி என்னைக் கொன்றுவிடு, இவளுடன் நான் வேறுலகத்திலாவது இணைந்து வாழ்கின்றேன்"

அந்தப்பேய்ப்பெண், உக்கிரமான பார்வையில் ,

"இவன் வாழவேண்டும், இவனுக்கு ஏதாவது நேர்ந்தால் உன்னைக் கொன்றுவிடுவேன்"

 "சீக்கிரம் என்னைக் கொன்றுவிடு" என்ற அவன் என்னைக் கெஞ்ச

"அவனை ஒன்றும் செய்யாதே" என்று பேய் அலற, மருத்துவர் கதவைத்திறக்க,

அவனைக் கொன்று விடுதலை செய்யவா, கொல்லாமல் வாழவிடவா
நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் நீங்களே சொல்லுங்கள்.

Friday, February 14, 2014

அம்முவின் அப்பா - காதலர் தின சிறப்பு சிறுகதை

சென்ற ஆண்டு இதைப் பற்றி நான் யோசித்ததுக் கூட இல்லை. போன வருடம் வரை, என் மகள்அம்மு இங்கு வீட்டில் இருந்து கல்லூரி போய் படித்துக் கொண்டிருந்தாள். படிப்பு முடிந்து போன செப்டம்பரில் இருந்து வேலை நிமித்தமாக  சென்னைவாசியாகிவிட்டாள். சமீபத்தில் வேறு அடிக்கடி கார்த்தி என்ற பையனைப் பற்றி  அடிக்கடி பேசுகின்றாள்.  பழக்கம் பத்து நாட்கள், நட்பு நாற்பது நாட்கள் என ஐம்பதே நாட்களில் காதல் பூத்துவிடலாம். இன்னும் சில தினங்களில் காதலர் தினம் வேறு வருகின்றது.

காதலுக்கும் பயமில்லை, காதலர் தினத்தன்று ஊர்ச்சுற்றுவாளோ என்ற கெட்ட எண்ணமும் இல்லை. நானே காதல் திருமணம் செய்து கொண்டவன் தான்.  என்னுடைய ஒரே பயம், காதலர் தினத்தன்று ஊர்ச்சுற்றிக்கொண்டிருக்கும் ரவுடிகள் தான். முன்பெல்லாம் ரவுடிகள் என்றால் கைலிகள் கட்டி இருப்பார்க்கள், மீசை வைத்திருப்பார்கள், மரு இருக்கும். கண்களில் சிவப்பு நிறம் கொப்பளிக்கும். இப்பொழுது ரவுடிகள், காவித்துண்டு அணிந்து இருக்கின்றார்கள் அல்லது குல்லா வைத்திருக்கின்றார்கள். முன்பெல்லாம் ரவுடிகள் சென்னைத்தமிழ் அல்லது சேரித்தமிழ் பேசுவார்கள். இப்பொழுதெல்லாம் ரவுடிகள் சமஸ்கிருதம், அரபி எல்லாம் பேசுகின்றார்கள், சமயங்களில் ஆங்கிலமும்....

பிப்ரவரி 14, வெள்ளியன்று வருகின்றது, நானும் அம்முவின் அம்மாவும், அப்படியே வார இறுதிக்கு சென்னை வருவதைப்போல போய், பாதுகாப்பாக அவளுடன் இருந்துவிடலாமா...

ச்சே... கருமாந்திரம் பிடித்தவர்களுக்காக, ஏன் என் மனம் இப்படி எல்லாம் யோசிக்கின்றது.   என் பிள்ளைக்கு அத்தனை சுதந்திர எண்ணங்களையும் விதைத்து வளர்த்து இருக்கின்றேன். அவளுக்குத் தெரியாததா... ஒருவேளை கார்த்தியைக் காதலித்தால் அம்முவின் முதல் நண்பனான என்னிடம் சொல்லாமலா இருப்பாள் , ஒருவேளை பிறகு சொல்லிக் கொள்ளலாம் என இருந்தாலும்  வாலன்டைன்ஸ் தினத்தன்று கொண்டாடிவிட்டுத்தான் போகட்டுமே...

விடியற்காலையில் கெட்ட கனவு,  நாங்கள் வெறும் நண்பர்கள் என்று சொல்ல சொல்ல, கார்த்தியையும் அம்முவையும் இரண்டு வகையான ரவுடிகளும் அடிக்கின்றனர். கனவு கலைந்து  எழுந்து செய்தித்தாளைப் படித்தால், கடற்கரை வரும் காதலர்களை விரட்டுவோம் என கூட்டாக ரவுடிகள் பேட்டிக்கொடுத்து இருந்தனர்.

பிப்ரவரி 14 ஆம் தேதியன்று அம்முவிற்கு உடம்புக்கு சரியில்லாமல் போய் அவள் விடுதியிலே இருந்துவிடவேண்டும் என அபத்தமாய் மனம் யோசித்தது.  அம்முவோட அம்மாவிற்கு உடம்புக்கு சரியில்லை, உடனே கிளம்பி வா, என சொல்லி வரவழைக்கலாம் , ஆனால் என் மகளிடம் இதுவரை பொய் சொன்னது இல்லையே ....

கவலைகள், குழப்பங்கள், சஞ்சலங்கள், சங்கடங்கள் அனைத்தின் எரிச்சலையும் அம்முவின் அம்மாவிடமே காட்டினேன். காரணங்களைக் கேட்கவில்லை. வழக்கம்போல சகித்துக் கொண்டிருப்பாளாய் இருக்கும்.  காதலின் மற்றொருவடிவம் சகிப்புத்தன்மை.

பிப்ரவரி 14 , காலையில் வெகுசீக்கிரம் அலுவலகம்  வந்துவிட்டேன். அம்முவின் கைப்பேசிக்கு அழைக்கலாமா... ச்சே வேண்டாம் ..அநாகரிகம்... எந்தக்காலத்திலும் அம்முவிற்கும் எனக்குமான அந்த நட்பை , அப்பா என்ற அதிகாரத்தால் பிடுங்கி எறியக்கூடாது என நினைத்துக் கொண்டிருக்கையில். அம்முவிடம் இருந்தே அழைப்பு....

"மிஸ்டர், சுப்ரமணி, கொஞ்சம் வீட்டிற்கு வரமுடியுமா?" அம்மு உற்சாகமாய் இருந்தால் என்பெயரைச் சொல்லித்தான் அழைப்பாள்.  என் நிறுவனம் என் உரிமை என யாருடனும் சொல்லிக்கொள்ளாமல், வீட்டிற்கு விரைந்தேன்.

"மிஸ்டர் சுப்ரமணி, வேலன்டைன்ஸ் டே அன்னக்கி , நான் காதலிப்பதை, என் அப்பா அம்மாகிட்ட தான் சொல்லனும்னுதான் திடீர்னு கிளம்பி வந்தேன்"

"சொல்லுடாமா ..."

" கார்த்தின்னு சொன்னேன்ல, அந்த பையன் தான், பிடிச்சிருந்துச்சு,  பேசிக்கிட்டோம், அவங்கவீட்டுல அவன் இன்னைக்கி தகவல் சொல்லிடுவான், நான் இங்க வந்து சொல்லிட்டு இருக்கேன்"

அனுமதி என்றில்லாமல், தகவல் என்ற பொருளில் அவள் சொல்லுவது எனக்குப்பிடித்து இருந்தது. ஒரு பெண் குழந்தைக்கான பரிபூரண சுதந்திரத்தை என் மகள் முழுமையாக்கிக் கொண்டு இருக்கிறாள்.

இடையில் கார்த்தியின் பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. பேசினோம். நல்ல நாளில் எல்லாம் நல்லபடியாக அமைந்தது.

இரவு மொட்டை மாடியில், விளையாட்டாய் அம்முவிடம்

"அம்முக்குட்டி, வாலன்டைன்ஸ்டே அன்னக்கி பொதுவா லவ்வர்ஸ் ஊர்தானே சுத்துவாங்க,,,, நீங்க இரண்டு பேரும் எப்படி இப்படி டிசைட் பண்ணீங்க"

".. பிப்ரவரி 14 அன்னைக்கு ரவுடிங்க தொல்லை தாங்க முடியாது, அதனால நாங்க இரண்டு நாளைக்கு முன்னமே வேலன்டைன்ஸ் டே கொண்டாடிட்டோம்."