Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Monday, September 27, 2010

சத்யா - குறும்படம் - ஒரு பார்வை

மனக்கண்ணில் விரிவதை குறுந்திரையில் விவரித்து, அதை விசிடிங் கார்டாக வைத்து எப்படியாவது கனவுத் தொழிற்சாலையில் காலடி எடுத்து வைத்து சாதித்து விடமாட்டோமா என ஏங்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களில் நண்பர் திரு பிரபுவும் ஒருவர். என்னுடன் கல்லூரியில் படிக்கும் தமிழ் நண்பரான பிரபு , சத்யா எனற குறும்படத்தை எடுத்துள்ளார். மெல்லிய புன்னகையை வரவழைக்கும் முடிவு என்றாலும் , முடிவு முன்பாதியின் வலியை நீர்த்துப் போக செய்துவிடுகிறது. வாழ்க்கையில் சீரியஸாக இல்லாத , அல்லது சீரியஸாக இருப்பதைக் காட்டிக்கொள்ள விரும்பாத ஒருவனின் காதல் எப்படி கைகூடும் என குறும்படத்தைப் பார்த்தவுடன் யோசிக்க வைக்கிறது. இதுதான் இந்த குறும்படத்தின் பின்னடைவோ !!


நடுவில் வரும் நாயகனின் நண்பருக்கு தேவையில்லாத பின்னணி இசை , சட்டென உணர்வுப்பூர்வமான சூழலில் இருந்து அனாவசிய இயல்பற்ற மனநிலைக்கு மாற்ற முயற்சிக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தின் தேவையும் குறும்படத்தில் இல்லை.
காதலி சத்யாவின் மனதை ஊடுருவும் குரல் பிரமாதம். பிரிவுக்கு காரணம் நாயகனின் பெண் பித்து என நானாகவே ஊகித்துக் கொண்டேன்.

முடிவில் வரும் வசனங்கள் நாளைய இயக்குனர் புகழ் நளன் எடுத்த ஒரு குறும்படத்தை நினைவுப்படுத்துகிறது.

குறும்படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும், கோர்வையாக இணைத்துள்ள இசைத்துணுக்குகள், இதமான ஒளிப்பதிவுடன் தொடர்ந்து பார்க்க வைக்கிறது. பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் இது முதல் முயற்சி என்பதால் என் சார்பில் பாராட்டுக்களைப் பதிவு செய்கின்றேன். நீங்களும் ஒரு எட்டு எட்டிப்பார்த்துவிட்டு அபிப்ராயங்களைச் சொல்லிவிட்டு போய்விடுங்கள்.


SATHYA--Tamil Short Film--2010
Uploaded by prabhuhearts. - Classic TV and last night's shows, online.

Saturday, August 14, 2010

நாக்ருதனா திரன்னனா நா


இளையராஜா, தனது கர்நாடக சங்கீத குருவான டி.வி.கோபாலகிருஷ்ணனை டிக் டிக் டிக் திரைப்படத்தில் கதையின் மூன்று நாயகிகளையும் ஒரே காட்சியில் நீச்சலுடைகளில் மிதக்கவிட்ட இது ஒரு நிலாக்காலம் பாடலின் இடையில் வரும் மாதவியின் நாட்டியத்திற்கு நாக்ருதனா திரன்னன வரிகளைப் பாடச் சொல்லி இருக்கும்பொழுது , அது பிற்காலத்தில் ஜொள்ளுக்கான இசையாக மாறி விடும் என நினைத்தே பார்த்து இருக்க மாட்டார். டி.வி.கோபாலகிருஷ்ணனின் குரலை பிற்பாடு அந்தி மழை பொழிகிறது இடையினில் பயன்படுத்தி இருப்பார்

அமெரிக்க ஜனாதிபதியின் நெஞ்சினில் பாய்ந்த குண்டை எடுக்க கண்டுபிடிக்கப்பட்ட மெட்டல் டிடெக்டர் பிற்பாடு பாதுகாப்பு கருவிகளில் முக்கியமான ஒன்றாக மாறியதைப்போல நாக்ருதனா மெட்டும் எதிர்பாராத விதத்தில் பிரபல்யம் அடைந்தது.




80 களின் மத்தியில் பக்யராஜின் (டிக்டிக்டிக் படத்திற்கு திரைக்கதை பாக்யராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது) இயக்கத்தில் வெளிவந்த சின்னவீடு திரைப்படத்தில் , நாயகன் வேறு பெண்களைப் பார்த்து சலனப்படும் பொழுதெல்லாம், இளையராஜா இந்த மெட்டை பின்னணி இசையாகப் பயன்படுத்தி இருந்ததோடு மட்டுமல்லாமல் மச்சமுள்ள ஆளுட பாடலின் இடையிலும் சேர்த்து இருப்பார்.





கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப்பிறகு சமீபத்தில் வெளிவந்த கோவா திரைப்படத்தில் கதையின் நாயகர்களில் ஒருவரான வைபவ் பெண்களைப் பார்த்து சலனப்படும் பொழுதெல்லாம் வரும் இசைக்கோர்வையாக மீள்பதிவு செய்யப்பட்டு இன்றைய இளைய சமுதாயத்தினரின் கைபேசி அழைப்பு மணியாக ஆகிவிட்டது.




கடைசியாக ஆன்மீகக் கதவுகளைத் திறந்து கடலைக் காற்றாய் இந்த 30 வினாடிகள் ஓடும் நாக்ருதனா திரன்னனா நா வரிகள் நான்காவது முறை நக்கீரனின் பார்வையால் ஜென்ம சாபலயம் அடைந்தது.

Thursday, May 13, 2010

நடு இரவில் - திரைப்படக் கண்ணோட்டம்

தமிழில் சஸ்பென்ஸ்-திரில்லர் வகையில் வந்தத் திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றில் சிறப்பான சிலத் திரைப்படங்கள் ஜெய்சங்கரோ ரவிச்சந்திரனோ நடித்து 60 களிலேயே வந்துவிட்டன. அதிர்ச்சியூட்டும் முடிச்சுகள் இருந்தாலும் ரசிகர்களை மறுமுறை திரையரங்கத்திற்கு வரவழைக்கவும் படத்தின் வியாபர மதிப்பைக் கூட்டவும் கவர்ச்சி நடனங்களும் வலுவில் திணிக்கப்பட்ட பாடல், சண்டைக் காட்சிகளும் இருக்கும். அப்படியானக் காலக் கட்டத்தில் கவர்ச்சி நடனமோ , சண்டைக் காட்சிகளோ இல்லாமல் கதைக்கு தேவையான வெறும் இரண்டு பாடல்களுடன் வெளிவந்த படம் தான் 'நடு இரவில்'.





ஒரு பெரிய மாளிகை ,அங்கு வசிக்கும் பணக்கார தம்பதியினர் , அவர்களின் குடும்ப டாக்டர், சில வேலைக்காரர்கள், தம்பதியினரின் உறவினர்கள், சிலக் கொலைகள் ஆகியனவற்றுடன் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாகச் செல்லும் 'நடு இரவில்' படத்தின் இயக்குனர் எஸ்.பாலசந்தர். தானே ஒரு இசை விற்பன்னராக இருந்தாலும் 'அந்த நாள்' படத்தில் பாடல்களை எதுவுமே வைக்காமல் சமகால உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர். பிற்காலத்தில் வீணை எஸ்.பாலசந்தர் என வீணை மீட்டலில் சக்கரவர்த்தியான இவர் இயக்கிய கடைசிப் படம் 'நடு இரவில்'. கலையுலகில் இருப்பவர்கள் எல்லாம் கடைசியில் கரை சேரும் இடம் என சினிமாவை நினைத்துக் கொண்டிருக்கையில் , சினிமாவில் அசத்தலானப் படங்களைக் கொடுத்தபின்னர், தனது சங்கீதத் தேடலை வீணையில் தொடர, திரைப்பட உலகை விட்டு தூரம் சென்றது , திரைரசிகர்களுக்கு ஒரு இழப்புதான்.

வல்லவனுக்கு வல்லவன் அல்லது வல்லவன் ஒருவன் படங்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்த பொழுது எதேச்சையாக 'நடு இரவில்' படம் சிக்கியது. அந்த நாளில் அசத்தலாக கதை சொன்னவரின் படம் என்பதால் ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது. துப்பறியும் படங்களில் நிஜக்குற்றவாளி யார் என ரசிகனால் எவ்வளவு தாமதமாக ஊகிக்க வைக்க முடிகிறதோ அந்த அளவிற்குப் படத்தின் வெற்றி இருக்கிறது. முடிச்சு அவிழ 5 நிமிடம் இருக்கும் பொழுதுதான் குற்றவாளியை ஊகிக்க முடிந்தது.

தாழ்த்தப்பட்ட பெண்ணை மணந்து கொண்டதால் உடன் பிறந்தவர்களால் மிகுந்த துன்பத்துக்குள்ளான செல்வந்தர் தயானந்தம் (மேஜர் சுந்தர்ராஜன்), உறவுகளை வெறுத்து தனித்தீவு மாளிகையில் மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பொன்னியுடன் (பண்டரிபாய்) வாழ்ந்து வருகிறார். பராமரிப்புகளுக்காக சில வேலைக்காரர்கள்( கொட்டாப்புளி ஜெயராமன், சோ, ராமானுஜம் மற்றும் சரோஜா ).

தயானந்தத்தின் நண்பரும் , குடும்ப மருத்துவருமான சரவணன் (எஸ்.பாலசந்தர்) தயானந்தத்திற்கு ரத்தப் புற்றுநோய் சிலவாரங்களில் இறந்துவிடுவார் எனச்சொல்லுவதுடன் படம் துவங்குகிறது. கோடிக்கணக்கான சொத்துகள் வாரிசு இல்லாமல் போய்விடக்கூடாதே என்றும், பொன்னியை எதிர்காலத்தில் கவனிக்க ஒருவர் வேண்டும் என்பதற்காகவும் தயானந்தம் வெறுக்கும் உறவுகளை, டாக்டர் சரவணன் வரவழைக்கின்றார்.




அண்ணன்(சி.வி.வி. பந்துலு), அண்ணனின் மகள்(வி.ஆர்.திலகம்) மற்றும் அவளின் கணவன்(கோபாலகிருஷ்ணன்), கோபக்காரத் தம்பி (ஈ.ஆர்.சகாதேவன்), அவரின் மனைவி (எம்.எஸ்.எஸ்.பாக்கியம்), மகள் (கல்பனா), கண்பார்வை இழந்த மற்றும் ஒரு தம்பி (வி.எஸ்.ராகவன்), அவரின் மகள் (சௌகார் ஜானகி), இரண்டு மகன்களுடன் (விஜயன், சதன்) வரும் மற்றொரு தங்கை (எஸ்.என்.லட்சுமி), இறந்துபோன மற்றொரு அண்ணனின் மனைவி (எஸ்.ஆர்.ஜானகி) , அவரது மகன் (மாலி) என ஒட்டு மொத்த உறவுகளும் தீவு பங்களாவிற்கு வந்து சேர்கின்றனர்.
என்னடா இது படத்தில் நடிக்கும் அத்தனை பேரையும் சரியாக எழுதி இருக்கின்றதே எனப் பார்க்கின்றீர்களா !! படம் ஆரம்பித்து 15 நிமிடங்களுக்குப்பிறகு அனைத்து கதாபத்திரங்களையும் ஒவ்வொருவராக கதையின் ஓட்டத்துடன் அறிமுகப்படுத்தி பெயர் போடும் உத்தியினால் விளைந்த உபயம். படத்தில் இவர்களைத் தவிர வருபவர்கள் கடைசியில் வரும் நான்கு போலிஸ்காரர்கள். அவர்களுக்கு வசனம் கிடையாது. ஆக மொத்தம் 24 கதாபாத்திரங்கள் மட்டுமே.

அன்றைய இரவில் யாருமே இல்லாமல் பியானாவில் தானாகவே இசை வாசிக்கப்படுதல், காற்றடித்து திரைச்சீலைகள் நகர்ந்து நிழலுருவங்கள் தெரிவது என திகிலுடன் வந்திருக்கும் உறவினர்களுக்கு மாளிகை வாழ்வு ஆரம்பிக்கின்றது. அடுத்த சில தினங்களில் மேஜர் சுந்தர்ராஜனின் அண்ணியை அனைவரும் தேட, எல்லோரும் அமர்ந்திருக்கும் சாப்பாட்டு மேஜையின் அடியிலேயே கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டு கிடைக்கிறார். அடுத்ததாக மூத்த அண்ணன் தற்கொலை செய்து கொள்ள, மேஜர் சுந்தர்ரஜனின் மீதும் அவரது டாக்டர் நண்பரின் மேலும் சந்தேகம் விழுகிறது. இதனிடையில் சௌகார் ஜானகி , பண்டரிபாயின் மேல் பிரியமாய் இருக்க, உறவினர்கள் தீவை விட்டு வெளியேற விரும்பியும் மேஜர் சுந்தர்ராஜன் அனுமதிக்க மறுக்கிறார்.




பணம் , நகைகளைத் திருட நினைக்கும் தங்கை மகனும் அண்ணன் மகனும் , நகைகள் இருக்கும் பீரோவில் எஸ்.என் லட்சுமியை பிணமாகப் பார்க்கின்றனர். படகுத்துறையில் தப்பிக்க நினைக்கும் ஈ.ஆர்.சகாதேவன் சுட்டுக்கொல்லப்படுகிறார். பியானோ வாசிக்கப்படும் மர்மம் விலக, கண் தெரியாத வி.எஸ்.ராகவன் மடிப்படிகளில் இருந்து உருட்டிவிடப்படுகிறார். அடுத்து மொட்டை மாடியில் இருந்து பண்டரிபாயும் தள்ளிவிடப்பட்டு சாகடிக்கப்படுகிறார். அடுத்து யார் கொல்லப்படுவோமோ என திகிலுடன் எஞ்சிய உறவினர்கள் நாட்களை நகர்த்த, சௌகார் ஜானகியை பின்னாலில் இருந்து கொல்ல வரும் உருவத்தை மேஜர் சுந்தர்ராஜன் சுட, சுடப்பட்ட உருவம் டாக்டராக இருக்கும் என நினைக்கையில் மாடியில் இருந்து டாக்டர் 'ஏதோ துப்பாக்கிச் சத்தம் கேட்டதே ' எனக் கேட்டபடி வெளியே வருகிறார்' . (டைரக்ஷன் - எஸ்.பாலசந்தர் என இங்குதான் போடப்படுகிறது ) கொலைகாரன் யார் எனத் தெரிகையில் உறவினர்களுக்கு மட்டுமல்ல , பார்க்கும் நமக்கும் தான் அதிர்ச்சி.




சுந்தர்ராஜன், சௌகார் ஜானகி, சோ, எஸ்,என்.லட்சுமி ஆகியோரைத் தவிர ஏனையவர்கள் தற்கால ரசிகர்களுக்கு அதிக பரிச்சயமில்லாதவர்கள். இறுக்கமான படத்தில் சோ, மாலி, சதன் ஆகியோரின் கதையுடன் ஒன்றிய நகைச்சுவை கொஞ்சம் புன்னகைக்க வைக்கின்றது. அந்தக்காலத்து அஷ்டாவதனியாக கதை, இசை, தயாரிப்புடன் இயக்கி டாக்டர் சரவணனாக வரும் எஸ்.பாலசந்தரே படத்தில் நம்மை கவர்பவர். உதட்டில் சிகரெட்டை வைத்துக் கொண்டே இவர் பேசும் பாணி, ஆங்கில வசனங்களின் உச்சரிப்பு மனிதர் நிஜமாகவே பின்னி இருக்கிறார். இயக்குனராக மட்டும் அல்ல, நடிகராகவும் எஸ்,பாலசந்தரை இசைக்குப் பறிகொடுத்து இருக்கிறது தமிழ்த் திரையுலகம். (சாதனைக்கு சினிமா, ஆராதனைக்கு வீணை என அடிக்கடி எஸ்.பாலசந்தர் சொல்லுவாராம்)




நூறு வயலின்கள் கதறுவதை விட, தொடர்ந்த மவுனம் தான் திகிலுக்கு சரியான பின்னணி இசைக்கோர்வையாக இருக்க முடியும். பல இடங்களில் நிசப்தமே பயமூட்டுகின்றது. கேமராக் கோணங்கள், குறிப்பாக ஈ.ஆர்.சகாதேவனின் பிணத்தை நடு வீட்டில் போட்டு வைத்து அனைவரும் அழுது கொண்டிருக்கும் பொழுது தொங்கு விளக்கின் கோணத்தில் உச்சியில் இருந்து காட்டுவது அபாரம். பண்டரிபாய் மாடியில் தள்ளப்படுவதற்கு முன் கொலைகாரனாக வரும் கேமரா, ஒரு மனிதன் நின்றால் சத்தமில்லாமல் நடந்து வந்து நின்றால் ஏற்படும் தள்ளாட்டங்களையும் காட்டி நிற்பது அருமை.

அடுத்தடுத்து வரும் கொலைகளும் அதனால் வரும் பாத்திரங்களுக்கு வரும் பயத்தைக் காட்டியிருக்கும் விதமும், படத்தில் எட்டிப்பார்க்கும் நாடகத் தன்மையை எட்டித்தள்ளி விடுகின்றன. இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பங்கள் போல் ஏதும் இல்லா காலக் கட்டங்களில் இருப்பதை வைத்து ஒரு நிறைவான படத்தைக் கொடுத்த வீணை எஸ்.பாலசந்தர் தமிழில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட வேண்டியவர். படம் வெளியாகி 45 ஆண்டுகளுக்குப் பின்னரும் சலிப்பின்றி ஒரு முறை இந்தப் படத்தை நிச்சயமாகப் பார்க்கலாம்.

அதிவேக இணைப்பு இருப்பவர்கள் இந்தச் சுட்டியில் படத்தை பார்க்கலாம்




Saturday, May 01, 2010

ஸுஸு - Zozo - அரபி/சுவிடீஷ் மொழிப் படம் - திரைப்பார்வை

போரின் கொடுமைகளையும் அதன் தாக்கத்தையும் விளக்கும் படங்களின் வன்முறைக்காகவே குழந்தைகளின் உடன் அமர்ந்து பார்க்க இயலாது. ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக போரின் தாக்கத்தையும் புலம் பெயர்ந்த இடத்தில் ஏற்படும் சில மனத்தாங்கல்களையும் ஒரு சிறுவனின் பார்வையில் அழகாக சொல்லப்பட்டிருக்கும் படம் தான் ஸுஸு. தொன்னூறு சதவீதம் அரபியிலும் பத்து சதவீதம் சுவிடீஷ் மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை உள்நாட்டுப்போரில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த லெபனான் நாட்டில், எண்பதுகளின் இறுதியில் இருந்து துவங்குகிறது.





எலும்புக் கூடாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் பெய்ரூட் நகரத்தில் எஞ்சியிருக்கும் அடுக்கு மாடி நகர்ப்புற குடியிருப்புகளினில் ஒன்றில், சிலவாரங்களில் சுவீடனுக்கான விசா கிடைத்து நிம்மதியான வாழ்க்கையைத் தொடங்கிவிடலாம் என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் லெபனானிய மத்திய வர்க்க குடும்பத்தின் இளையமகனாக கதையின் நாயகன் சிறுவன் ஸுஸு அறிமுகமாகின்றான்.

போர்ச்சூழலிலும் இயல்பாக இருக்கும் அல்லது இருக்க முயற்சிக்கும் பெற்றோர், பதின்ம வயதில் இருக்கும் அக்கா, ‘விமானத்தில் இடம் இல்லையாம், அதனால அடுத்த முறை சுவீடன் கூட்டிட்டுப்போய் நிச்சயமாய் திருமணம் செய்து கொள்கிறேன்‘ என எதிர்வீட்டில் இருக்கும் பெண்ணுடன் ஈர்ப்பாய் இருக்கும் மூத்த சகோதரன் ஆகியோருடன் , சுவிடீஷ் கனவுகளுடன் நாட்களை நகர்த்தி வரும் ஸுஸுவின் வாழ்வில் இடி வீட்டின் மேல் குண்டாக வந்து விழுகிறது.

சுவீடன் கிளம்பும் அன்று தனது குடும்பத்தினரை போரின் குண்டு வீச்சுகளுக்கு பலி கொடுத்து மூத்த சகோதரனுடன் தப்பி ஓடி, அவனையும் ஒரு கட்டத்தில் இழந்து நிராதரவாய் இருக்கும் ஸுஸுவிற்கு கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் கீர்த்தனாவைப்போல ஒரு சினேகிதி, நல்மனம் படைத்த ராணுவ அதிகாரி ஆகியோரின் உதவி கிடைத்து சுவீடனுக்குப் பயணமாகின்றான்.

குடும்பமே வரும் என எதிர்பார்த்திருந்த தாத்தா பாட்டிக்கு, கடைசிக் கிளையாவது எஞ்சியதே என ஒற்றை ஆறுதலுடன் அவனை சுவிடீஷ் பள்ளியில் சேர்க்கின்றனர். பள்ளியில் ஏனையோருடன் அன்பாக இருக்க நினைக்கும் ஸுஸுவிற்கு வன்முறையே பதிலாக கிடைக்கின்றது.

“யார் அடித்தாலும் திருப்பி அடி, என் பேரன் அடி வாங்கி திரும்பக்கூடாது ” என அடிக்கு அடி பழிக்குப் பழி போதிக்கும் பிரியமான தாத்தாவின் பேச்சையும் மீறி கடைசி வரை வன்முறையை எடுக்காமல் வரும் தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ளும் ஸுஸுவிற்கு சக சுவிடீஷ் மாணவனின் நட்பு கிடைப்பதுடன் படம் நிறைவேறுகிறது.

படத்தின் நாயகனைப்போலவே 10 வயதில் லெபனானில் இருந்து சுவீடனுக்குப் புலம்பெயர்ந்த இயக்குனர் ஜோசப் பரேஸ், ஸுஸு வின் பார்வையில் தன் வாழ்க்கை அனுபவங்களை இயக்கி இருக்கிறார். 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் பல பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் இடம் பெற்று பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கின்றது.

இழந்ததை இழந்துவிட்டோம், பேரனிடம் குடும்பத்தைப் பற்றிக் கேட்டு அவனை வருத்தப்படுத்துவதை விடுத்து நம் துக்கத்தை ஜீரணித்து அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்வொம் என வரும் தாத்தா பாட்டி உரையாடல்கள், நமது ஈழத்துத் தோழமைகளின் துயரங்கள் கண்ணில் நிழலாடிச் சென்றது. சிறுவன் ஸுஸுவின் இடத்தில் தமிழ் பேசும் சுபர்ணனையோ அல்லது தமயந்தியையோ வைத்துப் பார்த்த பொழுது மனதைக் கவ்விக்கொண்ட holocaust survivor’s guilt, கண்ணில் ஓரத்தில் நீர்த்துளிகள் எட்டிப்பார்த்தவுடன் (வழக்கம்போலவே )விலகியது.

முதல் 60 நிமிடங்களுக்கு, கதை லெபனானில் நிகழும் வரை தொய்வில்லாமல் நகரும் திரைப்படம் , சுவீடனுக்கு நகர்ந்த பின்னர் தொந்தரவு செய்யும் மூத்த மாண்வர்கள், நட்புப் பாராட்டுபவர்கள் காட்டிக்கொடுக்க, எரிச்சல் அடையும் கதாநாயகச் சிறுவன் என வழக்கமான பாணியில் பயணம செய்கின்றது. பிற்பாதியில் இதைச் சரி செய்யும் ஒரே காட்சி, மூத்த மாணவர்கள் தொந்தரவு செய்ய கோபத்தின் உச்சிக்கு செல்லும் ஸுஸுவின் முன் மாயையாக விரியும் சுவிடீஷ் பள்ளிக் குண்டு வெடிப்புக் காட்சி தான். “ஏனம்மா, என்னை விட்டுட்டுப்போனாய்” என அந்தக் காட்சியில் தன்னைக் காப்பாற்ற வரும் அம்மாவிடம் கேட்பதுடன் தனது தந்தை, சகோதரன், சகோதரியையும் பார்க்க தனது மனதை மீண்டும் அன்பால் நிரப்பி தொந்தரவு செய்தவர்களை விட்டுச் செல்கின்றான்.

ஸுஸுவின் குடும்பத்தினர், தாத்தா, பாட்டி, சிறுவயது தோழி ரீட்டா, சிலக்காட்சிகளிலேயே வரும் கதாபாத்திரங்கள் என அனைவருமே கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும் அளவில் தேர்ந்தெடுத்தமைக்காக இயக்குனரை நிச்சயமாகப் பாராட்டலாம். இவரின் படங்களுக்குத் தங்களின் உறவினர்களையே நடிக்க வைப்பாராம்.

படம் முடிந்தபின்னரும் நீண்ட நேரத்திற்கு ஸுஸுவாக நடித்த இமாத் கிரெய்டியின் பாசம், மிரட்சி, சோகம், ஏக்கம் என அனைத்தையும் காட்டும் கண்கள் நம் கண்களில் நிற்கும். ரீட்டா கேன் ரீட்டா (Rita kan rita ) ரீட்டாவினால் படமும் வரைய முடியும் என ஸுஸு சுவிடீஷில் சிலேடையாகக் கூறுவது, ஆப்பிளில் உப்புத் தடவிச் சாப்பிடுவது, பெண் தோழமையைப் பற்றி பேசிக்கொள்வது என ஆங்காங்கே மனதிற்கு இலகுவான காட்சியமைப்புகளும் உண்டு.

ஒரு பக்கம் அகண்ட சிரியாவை அமைக்கும் கனவுடன் இருக்கும் சிரியா, மறுப்பக்கம் யூதக் குடியரசை மேற்காசியாவில் மேலும் வலுப்படுத்த எதையும் செய்ய துணியும் இஸ்ரேல், வேறொரு பக்கம் அழையா விருந்தாளிகள் பாலஸ்தீன போராட்டக்குழுக்கள் என உள்நாட்டுப்போரினால் சின்னா பின்னமான லெபானான் நாட்டில் நடக்கும் கதையில் , பள்ளியில் பிரெஞ்சு சொல்லிக் கொடுப்பது, (ஒட்டோமான் பேரரசு வீழ்ந்தபின் பிரெஞ்சு காலனியாக லெபனான் இருந்தது) ஸுஸுவையும் அவனது சகோதரனையும் துரத்தும் படையினர் முகமுடி அணிந்திருப்பது(ஹிஸ்புல்லாவைக் குறிக்கிறதோ), பின்னணியில் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள், உதவி செய்யும் ராணுவம் (லெபனானின் ஒரு பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் நீண்ட காலம் இருந்தது) என சில நுண்ணரசியல்களும் உண்டு. ஏனைய மேற்காசிய அரபு நாடுகளைப் போல லெபனானில் பெண்கள் முழு அங்கி அணிந்துதான் வர வேண்டும் என்றக் கட்டுப்பாடு எல்லாம் கிடையாது என்பதை இங்கு சுவீடனில் வசிக்கும் ஒரு லெபனான் பெண் சொல்லி இருந்த போதிலும் இந்தப் படத்தைப் பார்த்த பின் உறுதியானது.




போரினால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளையும் புலம் பெயர்ந்த நாடுகளில் ஏற்படும் அடையாளச்சிக்கல்களையும் மேலோட்டமாக சொல்லி இருந்தாலும் சொல்ல வந்ததன் சாராம்சத்தை ஸுஸுவின் பார்வையில் ஜோசப் பெரஸ் தந்து இருப்பதைப்போல , யாராவது ஒருவர், வணிக ரீதியிலான எந்த அம்சத்திலும் சிக்கிக் கொள்ளாமல் நம் மக்களின் வலியையும் வரலாற்றில் திரைப்படமாகப் பதிவு செய்ய மாட்டார்களா எனத் தோன்ற வைத்ததும் இந்தப் படத்தின் வெற்றி.

-------

லெபனானைப் பற்றியும் அங்கு ஏற்பட்ட உள்நாட்டுச் சிக்கல்களைப் பற்றி அறிய கீழ்கண்ட சுட்டிகளை வாசிக்கலாம்





Friday, April 23, 2010

அவுட்சோர்ஸ்ட் - Outsourced - திரைப்பார்வை

இந்தியாவின் அடையாளங்கள் என மேற்கத்திய உலகினரால் அறியப்படும் நெரிசாலான ரயில்கள், சண்டை போட்டுக்கொள்ளும் டாக்ஸி டிரைவர்கள் , எருமை மாடுகள், ஹோலிப்பண்டிகை என வழக்கமான அம்சங்களுடன், ஒரு அமெரிக்க ஆள் இந்தியாவில் படும் பாட்டைச் சொல்லப்போகும் படமாக இருக்கும் என 'அவுட்சோர்ஸ்ட்' படத்தை ஆர்வமின்றி பார்க்க ஆரம்பித்தால் என்ன ஆச்சரியம், எதிர்பார்த்ததை விட சுவாரசியமாகவே இருந்தது. டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற அளவில் மட்டுமே இன்னும் ஆங்கிலம் இருப்பதால், புரிந்து கொண்ட அளவிற்கு இந்த திரைப்பார்வையைப் பதிகின்றேன்.



இந்தியாவின் ஏழ்மைக்கு ஆஸ்கார் வாங்கித் தந்த ஸ்லாம்டாக் மில்லியனர் வெளியாவதற்கு மூன்று வருடங்களுக்கு முன் வெளியான அவுட்சோர்ஸ்ட் ஆங்கில ஹாலிவுட் திரைப்படத்தின் கதை, மும்பையில் காராபுரி என்னும் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் சேவை அளிக்கும் மையத்தின் பணித்திறனை அதிகப்படுத்த வரும் அமெரிக்க கதாநாயகனின் பார்வையில் விரிகின்றது.

சாராசரியாக,ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் எடுக்கும் சேவை அழைப்பின் நேரத்தை(MPI - Minutes per Incident) ஆறு நிமிடங்களுக்கு கீழ் குறைக்க வேண்டும் என்ற பணியுடன்வரும் டாட் ஆண்டர்சன் (ஜோஸ் ஹாமில்டன்) எப்படி சக ஊழியர்களை அரவணைத்து (ஊழியர்களில் ஒருவரான கதாநாயகி ஆயிஷா தார்கரையும் தான்)தன்னுடைய நோக்கத்தை செயலாக்குகிறார் என்பதை நகைச்சுவை இழையோடச் சொல்லி இருக்கிறார்கள்.

”என் வேலையை எடுத்துக்கொள்ளப்போறவனுக்கு நானே பயிற்சி அளிக்க வேண்டுமா” என வேண்டாவெறுப்பாக இந்தியா வரும் நாயகனுக்கும் ஹாலிவுட் ரசிகர்களுக்கும் இந்திய ரயில், டாக்ஸி, எருமை மாடு, தெருவோர ஐஸ் என அறிமுகப்படுத்திய பின்னர் Future Call Center Manager என அறிமுகமாகும் புரோகித் நரசிம்மாசார்யா விஜயநாரயணன் (ஆசிப் பஸ்ரா) வருகைக்குப்பின்னர் படம் சூடு பிடிக்கிறது.



யாரையும் குறைவாக எடைபோடாமலும் மட்டம் தட்டாமலும் இந்திய விழுமியங்களும் அமெரிக்க விழுமியங்களும் இணையும் புள்ளிகளில் மெல்லியக் காதலுடன் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் ஜான் ஜெஃப்கோட்.

நாயகனின் கைபேசியைத் திருடிச்செல்லும் சிறுவன் ஒவ்வொரு கட்டத்திலும் அதைத் திருப்பிக் கொடுக்கும் வகையில் காட்சி அமைத்திருப்பதும் சிறுவனின் ஓவியத்திறமையை நாயகன் ஊக்குவிக்கும் சில நொடிக்காட்சிகளும் பிரமாதம்.



முட்டைக் கண்களுடன் கொஞ்சம் முதிர்ச்சியாகத் தெரிந்தாலும் ஆயிஷா தார்க்கர் 'என் அம்மா என் அப்பாவை நேசிக்க கற்றுக்கொண்டாள், நானும் என் கணவனை நேசிக்கக் கற்றுக்கொள்வேன்' எனும்பொழுதும் ‘ஹாலிடே இன் கோவா' விளக்க காட்சிகளிலும் பின்னுகிறார். சிவலிங்கத்தின் காரணத்தை விளக்கிக் கூறும் இடமும் குறிப்பிடத்தக்க்கது.

ஒரு அமெரிக்கனுக்கான சம்பளத்தில் பத்து பேர் வேலைப்பார்த்ததால் இந்தியாவுக்கு வேலைகளை மாற்றிய அமெரிக்க நிறுவனங்கள் அதே சம்பளத்தில் 15 அடிமைகள் சிக்கினால் இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றவும் தயங்க மாட்டார்கள் என்ற அரசியலையும் சொல்லத் தயங்கவில்லை. இந்தியாவில் சீனாவிற்கு இடம்பெயரும் கால் செண்டருக்கு நிர்வாகியாக புரொகித்தை நாயகன் பரிந்துரைத்து அனுப்புவது புன்னகையை வரவழைக்கும் நெகிழ்ச்சியான காட்சி.

மூன்றாவது கண்ணாக ஜார்ஜ் வாஷிங்டனில் நெற்றியில் வைக்கப்படும் கதாநாயகியின் பொட்டு, மறுபக்கம் இருக்கும் சேரிக்கும் இந்தப்பக்கம் இருக்கும் மாளிகை வீட்டையும் பிரிக்கும் சுவர், காளியின் படம், இடது கையின் பயன்பாடு, அலுவலகத்து தொலைபேசியை சொந்த அழைப்புக்கு பயன்படுத்தாத வெள்ளைக்காரர்களின் மனோபாவம், காதலி நாயகனின் கைபேசியில் அழைப்பு மணி வைப்பது, தன் உள்ளாடைகள் கூட அயர்ன் செய்யப்பட்டிருக்கிறதே என கேட்கும் நாயகனிடம் உன் அம்மாவாக இருந்தால் செய்ய மாட்டாளா என்பது, அமெரிக்கா திரும்பியவுடன் நாயகி தன் தாயாரிடம் பேசுவது எனப்பல விடயங்கள் ரசிக்கும் படியான விதத்தில் படத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. டைட்டிலில் கால் தாளம்போடும்படியான மெட்டில் அமைந்த ஹிந்திப்பாடலும் படம் நெடுக வரும் வீணை பின்னணி இசையும் இனிமையாகவே இருக்கின்றன.

மனதை லேசாக்கிக் கொள்ள ஒரு நூறு நிமிடங்கள் உங்கள் மனதை இந்தப் படத்திற்கு வார இறுதிகளில் கண்டிப்பாக ஒரு முறை அவுட்சோர்ஸ் செய்யலாம். படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு கீழே