நடு இரவில் - திரைப்படக் கண்ணோட்டம்
தமிழில் சஸ்பென்ஸ்-திரில்லர் வகையில் வந்தத் திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றில் சிறப்பான சிலத் திரைப்படங்கள் ஜெய்சங்கரோ ரவிச்சந்திரனோ நடித்து 60 களிலேயே வந்துவிட்டன. அதிர்ச்சியூட்டும் முடிச்சுகள் இருந்தாலும் ரசிகர்களை மறுமுறை திரையரங்கத்திற்கு வரவழைக்கவும் படத்தின் வியாபர மதிப்பைக் கூட்டவும் கவர்ச்சி நடனங்களும் வலுவில் திணிக்கப்பட்ட பாடல், சண்டைக் காட்சிகளும் இருக்கும். அப்படியானக் காலக் கட்டத்தில் கவர்ச்சி நடனமோ , சண்டைக் காட்சிகளோ இல்லாமல் கதைக்கு தேவையான வெறும் இரண்டு பாடல்களுடன் வெளிவந்த படம் தான் 'நடு இரவில்'.
ஒரு பெரிய மாளிகை ,அங்கு வசிக்கும் பணக்கார தம்பதியினர் , அவர்களின் குடும்ப டாக்டர், சில வேலைக்காரர்கள், தம்பதியினரின் உறவினர்கள், சிலக் கொலைகள் ஆகியனவற்றுடன் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாகச் செல்லும் 'நடு இரவில்' படத்தின் இயக்குனர் எஸ்.பாலசந்தர். தானே ஒரு இசை விற்பன்னராக இருந்தாலும் 'அந்த நாள்' படத்தில் பாடல்களை எதுவுமே வைக்காமல் சமகால உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர். பிற்காலத்தில் வீணை எஸ்.பாலசந்தர் என வீணை மீட்டலில் சக்கரவர்த்தியான இவர் இயக்கிய கடைசிப் படம் 'நடு இரவில்'. கலையுலகில் இருப்பவர்கள் எல்லாம் கடைசியில் கரை சேரும் இடம் என சினிமாவை நினைத்துக் கொண்டிருக்கையில் , சினிமாவில் அசத்தலானப் படங்களைக் கொடுத்தபின்னர், தனது சங்கீதத் தேடலை வீணையில் தொடர, திரைப்பட உலகை விட்டு தூரம் சென்றது , திரைரசிகர்களுக்கு ஒரு இழப்புதான்.
வல்லவனுக்கு வல்லவன் அல்லது வல்லவன் ஒருவன் படங்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்த பொழுது எதேச்சையாக 'நடு இரவில்' படம் சிக்கியது. அந்த நாளில் அசத்தலாக கதை சொன்னவரின் படம் என்பதால் ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது. துப்பறியும் படங்களில் நிஜக்குற்றவாளி யார் என ரசிகனால் எவ்வளவு தாமதமாக ஊகிக்க வைக்க முடிகிறதோ அந்த அளவிற்குப் படத்தின் வெற்றி இருக்கிறது. முடிச்சு அவிழ 5 நிமிடம் இருக்கும் பொழுதுதான் குற்றவாளியை ஊகிக்க முடிந்தது.
தாழ்த்தப்பட்ட பெண்ணை மணந்து கொண்டதால் உடன் பிறந்தவர்களால் மிகுந்த துன்பத்துக்குள்ளான செல்வந்தர் தயானந்தம் (மேஜர் சுந்தர்ராஜன்), உறவுகளை வெறுத்து தனித்தீவு மாளிகையில் மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பொன்னியுடன் (பண்டரிபாய்) வாழ்ந்து வருகிறார். பராமரிப்புகளுக்காக சில வேலைக்காரர்கள்( கொட்டாப்புளி ஜெயராமன், சோ, ராமானுஜம் மற்றும் சரோஜா ).
தயானந்தத்தின் நண்பரும் , குடும்ப மருத்துவருமான சரவணன் (எஸ்.பாலசந்தர்) தயானந்தத்திற்கு ரத்தப் புற்றுநோய் சிலவாரங்களில் இறந்துவிடுவார் எனச்சொல்லுவதுடன் படம் துவங்குகிறது. கோடிக்கணக்கான சொத்துகள் வாரிசு இல்லாமல் போய்விடக்கூடாதே என்றும், பொன்னியை எதிர்காலத்தில் கவனிக்க ஒருவர் வேண்டும் என்பதற்காகவும் தயானந்தம் வெறுக்கும் உறவுகளை, டாக்டர் சரவணன் வரவழைக்கின்றார்.
அண்ணன்(சி.வி.வி. பந்துலு), அண்ணனின் மகள்(வி.ஆர்.திலகம்) மற்றும் அவளின் கணவன்(கோபாலகிருஷ்ணன்), கோபக்காரத் தம்பி (ஈ.ஆர்.சகாதேவன்), அவரின் மனைவி (எம்.எஸ்.எஸ்.பாக்கியம்), மகள் (கல்பனா), கண்பார்வை இழந்த மற்றும் ஒரு தம்பி (வி.எஸ்.ராகவன்), அவரின் மகள் (சௌகார் ஜானகி), இரண்டு மகன்களுடன் (விஜயன், சதன்) வரும் மற்றொரு தங்கை (எஸ்.என்.லட்சுமி), இறந்துபோன மற்றொரு அண்ணனின் மனைவி (எஸ்.ஆர்.ஜானகி) , அவரது மகன் (மாலி) என ஒட்டு மொத்த உறவுகளும் தீவு பங்களாவிற்கு வந்து சேர்கின்றனர்.
என்னடா இது படத்தில் நடிக்கும் அத்தனை பேரையும் சரியாக எழுதி இருக்கின்றதே எனப் பார்க்கின்றீர்களா !! படம் ஆரம்பித்து 15 நிமிடங்களுக்குப்பிறகு அனைத்து கதாபத்திரங்களையும் ஒவ்வொருவராக கதையின் ஓட்டத்துடன் அறிமுகப்படுத்தி பெயர் போடும் உத்தியினால் விளைந்த உபயம். படத்தில் இவர்களைத் தவிர வருபவர்கள் கடைசியில் வரும் நான்கு போலிஸ்காரர்கள். அவர்களுக்கு வசனம் கிடையாது. ஆக மொத்தம் 24 கதாபாத்திரங்கள் மட்டுமே.
அன்றைய இரவில் யாருமே இல்லாமல் பியானாவில் தானாகவே இசை வாசிக்கப்படுதல், காற்றடித்து திரைச்சீலைகள் நகர்ந்து நிழலுருவங்கள் தெரிவது என திகிலுடன் வந்திருக்கும் உறவினர்களுக்கு மாளிகை வாழ்வு ஆரம்பிக்கின்றது. அடுத்த சில தினங்களில் மேஜர் சுந்தர்ராஜனின் அண்ணியை அனைவரும் தேட, எல்லோரும் அமர்ந்திருக்கும் சாப்பாட்டு மேஜையின் அடியிலேயே கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டு கிடைக்கிறார். அடுத்ததாக மூத்த அண்ணன் தற்கொலை செய்து கொள்ள, மேஜர் சுந்தர்ரஜனின் மீதும் அவரது டாக்டர் நண்பரின் மேலும் சந்தேகம் விழுகிறது. இதனிடையில் சௌகார் ஜானகி , பண்டரிபாயின் மேல் பிரியமாய் இருக்க, உறவினர்கள் தீவை விட்டு வெளியேற விரும்பியும் மேஜர் சுந்தர்ராஜன் அனுமதிக்க மறுக்கிறார்.
பணம் , நகைகளைத் திருட நினைக்கும் தங்கை மகனும் அண்ணன் மகனும் , நகைகள் இருக்கும் பீரோவில் எஸ்.என் லட்சுமியை பிணமாகப் பார்க்கின்றனர். படகுத்துறையில் தப்பிக்க நினைக்கும் ஈ.ஆர்.சகாதேவன் சுட்டுக்கொல்லப்படுகிறார். பியானோ வாசிக்கப்படும் மர்மம் விலக, கண் தெரியாத வி.எஸ்.ராகவன் மடிப்படிகளில் இருந்து உருட்டிவிடப்படுகிறார். அடுத்து மொட்டை மாடியில் இருந்து பண்டரிபாயும் தள்ளிவிடப்பட்டு சாகடிக்கப்படுகிறார். அடுத்து யார் கொல்லப்படுவோமோ என திகிலுடன் எஞ்சிய உறவினர்கள் நாட்களை நகர்த்த, சௌகார் ஜானகியை பின்னாலில் இருந்து கொல்ல வரும் உருவத்தை மேஜர் சுந்தர்ராஜன் சுட, சுடப்பட்ட உருவம் டாக்டராக இருக்கும் என நினைக்கையில் மாடியில் இருந்து டாக்டர் 'ஏதோ துப்பாக்கிச் சத்தம் கேட்டதே ' எனக் கேட்டபடி வெளியே வருகிறார்' . (டைரக்ஷன் - எஸ்.பாலசந்தர் என இங்குதான் போடப்படுகிறது ) கொலைகாரன் யார் எனத் தெரிகையில் உறவினர்களுக்கு மட்டுமல்ல , பார்க்கும் நமக்கும் தான் அதிர்ச்சி.
சுந்தர்ராஜன், சௌகார் ஜானகி, சோ, எஸ்,என்.லட்சுமி ஆகியோரைத் தவிர ஏனையவர்கள் தற்கால ரசிகர்களுக்கு அதிக பரிச்சயமில்லாதவர்கள். இறுக்கமான படத்தில் சோ, மாலி, சதன் ஆகியோரின் கதையுடன் ஒன்றிய நகைச்சுவை கொஞ்சம் புன்னகைக்க வைக்கின்றது. அந்தக்காலத்து அஷ்டாவதனியாக கதை, இசை, தயாரிப்புடன் இயக்கி டாக்டர் சரவணனாக வரும் எஸ்.பாலசந்தரே படத்தில் நம்மை கவர்பவர். உதட்டில் சிகரெட்டை வைத்துக் கொண்டே இவர் பேசும் பாணி, ஆங்கில வசனங்களின் உச்சரிப்பு மனிதர் நிஜமாகவே பின்னி இருக்கிறார். இயக்குனராக மட்டும் அல்ல, நடிகராகவும் எஸ்,பாலசந்தரை இசைக்குப் பறிகொடுத்து இருக்கிறது தமிழ்த் திரையுலகம். (சாதனைக்கு சினிமா, ஆராதனைக்கு வீணை என அடிக்கடி எஸ்.பாலசந்தர் சொல்லுவாராம்)
நூறு வயலின்கள் கதறுவதை விட, தொடர்ந்த மவுனம் தான் திகிலுக்கு சரியான பின்னணி இசைக்கோர்வையாக இருக்க முடியும். பல இடங்களில் நிசப்தமே பயமூட்டுகின்றது. கேமராக் கோணங்கள், குறிப்பாக ஈ.ஆர்.சகாதேவனின் பிணத்தை நடு வீட்டில் போட்டு வைத்து அனைவரும் அழுது கொண்டிருக்கும் பொழுது தொங்கு விளக்கின் கோணத்தில் உச்சியில் இருந்து காட்டுவது அபாரம். பண்டரிபாய் மாடியில் தள்ளப்படுவதற்கு முன் கொலைகாரனாக வரும் கேமரா, ஒரு மனிதன் நின்றால் சத்தமில்லாமல் நடந்து வந்து நின்றால் ஏற்படும் தள்ளாட்டங்களையும் காட்டி நிற்பது அருமை.
அடுத்தடுத்து வரும் கொலைகளும் அதனால் வரும் பாத்திரங்களுக்கு வரும் பயத்தைக் காட்டியிருக்கும் விதமும், படத்தில் எட்டிப்பார்க்கும் நாடகத் தன்மையை எட்டித்தள்ளி விடுகின்றன. இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பங்கள் போல் ஏதும் இல்லா காலக் கட்டங்களில் இருப்பதை வைத்து ஒரு நிறைவான படத்தைக் கொடுத்த வீணை எஸ்.பாலசந்தர் தமிழில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட வேண்டியவர். படம் வெளியாகி 45 ஆண்டுகளுக்குப் பின்னரும் சலிப்பின்றி ஒரு முறை இந்தப் படத்தை நிச்சயமாகப் பார்க்கலாம்.
அதிவேக இணைப்பு இருப்பவர்கள் இந்தச் சுட்டியில் படத்தை பார்க்கலாம்
9 பின்னூட்டங்கள்/Comments:
நீங்கள் எழுதியதே படம் பார்த்தது போல் இருந்தது
இது மிக அருமையான படம். சின்ன வயதில் வீடியோ டேப்பில் பார்த்தது. இப்பொழுது சிடி கிடைக்கமாட்டேன்கிறது.
பழைய கருப்பு வெள்ளை திரைப்படங்கள், குறிப்பாக மார்டன் தியேட்டர்ஸ், எஸ்.பாலச்சந்தர் போன்றோர் அந்தக் காலத்திலேயே மிக ஸ்டைலான த்ரில்லர்களை தந்திருக்கிறார்கள்.
இது போல இன்னும் நிறைய எழுதுங்கள்.
அட்டகாசம்!
Excellent...! I will watch this movie.
நல்ல எழுத்து. இணைப்பு கொடுத்ததற்கும் மிக்க நன்றி.
இது மிக அருமையான திரைப்படம்.... அத்துடன் எனக்கு அதே கண்கள் படத்தையும் மிகவும் பிடிக்கும்.. அப்படத்திலும் கடையில் நாம் எதிர்பார்க்காத படி திருப்பங்கள் நடக்கும....
Hi, maplae, Eppadi irukkenga?. Naan nalla irukken. I am Saravanakumar from 2000 TCE Mechanical Enginnering Dept. Do u remember me? Unga blog naan regularaa padikkuren. The film Nadu Iravil was inspired from the English film `And then there were None (1945)`. This film is available in YOUTUBE. If u have time watch and reply. bye.
அருமை அருமை, தொடுப்பைத் தந்தமைக்கும் நன்றி நண்பா
Post a Comment