Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, September 25, 2014

அரசியல் - ஒரு நிமிடக்கதை

"மச்சி, நீ கேளேன், இன்னக்கி அந்த க-கா-கீ கட்சி மாவட்டத்தலைவரை கிழிகிழின்னு கிழிச்சி எழுதின என் பேஸ்புக் போஸ்ட்டை , நம்ம அ-ஆ-இ கட்சி மாவட்டம் லைக் போட்டிருந்தாரு ? "
"பார்த்தேன் மச்சி, நேத்து க-கா-கீ பெரியத்தலைவரை பத்தி நீ எழுதினதுக்கும் நம்ம மாவட்டம் கமெண்ட் போட்டிருந்தாரு "
"நான் செம ஹேப்பி, நாளைக்கு கட்சி மீட்டிங் ல பார்க்கலாம்னு நம்ம மாவட்டம் சொல்லிருக்காரு "
மறுநாள், நம் கதையின் நாயகன் உற்சாகமாக கட்சி கூட்டத்தில் க-கா-கீ பெரியத்தலைவரை மானே தேனே பொன் மானே எல்லாம் போட்டு கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட நாயகனின் மாவட்டம் விழுந்து விழுந்து சிரித்தார். உற்சாகமான நம் கதையின் நாயகன் , அடுத்து க-கா-கீ கட்சி மாவட்டத்தலைவரை ஏக வசனத்தில் பேசப்போக, உடனே எழுந்த நம் நாயகனின் மாவட்டம், மைக்கை வாங்கி, அடுத்ததாக வேறொரு தொண்டர் பேசுவார் என அறிவித்தார். நம் நாயகன் சோகமானான். கூட்டம் முடிந்தவுடன் மாவட்டம் , நம் நாயகனிடம் வந்து
"தம்பி, இன்டர்நெட் வேற, நிஜம் வேற. க - கா - கீ மாவட்டத்தலைவர் என் மச்சான். என்னோட பிசினஸ் பார்ட்னர் வேற ,, நீ அந்த பெரியதலைவரை என்ன வேணுமினாலும் பேசிக்கோ, லோக்கல் மீட்டிங்ல லோக்கல் ஆட்களை திட்டக்கூடாது, அதுவும் சொந்தக்காரன்னா கூடவே கூடாது , என்ன புரிஞ்சுதா ? "
"புரிஞ்சுது சார் "
அரசியலை புரிந்து கொண்ட நம் கதையின் நாயகன், மறுநாள் கட்சியை எல்லாம் மறந்து 'நான் டியூன் ஆயிட்டேன்னு " சினிமாக்காரங்களை கலாய்த்து ஸ்டேடஸ் போட ஆரம்பித்தான்.

Sunday, August 24, 2014

தற்கொலை - சிறுகதை

சென்ற ஒளி ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஒளி ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றன. அதற்கு நான் தான் முக்கிய காரணம். வீம்புக்கு தற்கொலை செய்ய நினைப்பவர்களை பேயாகவும் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களை மனசாட்சியாகவும் பயமுறுத்தி வாழவைக்கும் தெய்வம் நான்.

தற்கொலைகளைத் தடுப்பது பெரும்பாலும் எளிது. தற்கொலை செய்துகொள்ள நினைப்பவரின் பிரிவை யாரால் தாங்கிக் கொள்ள முடியாதோ அவர்களின் நினைவைத் தூண்டிவிட்டால் போதும். ஆனால்இவனின் மனதை மாற்ற கடைசி ஒரு மணி நேரமாக முயற்சிக்கின்றேன்.இவனோ சாவதற்கு துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றான்.

"காதலின் தீபம் ஒன்று "  பாடல் தொலைக்காட்சியில்

"எளவெடுத்த இந்த பாட்டால என் லைஃபே போச்சு" தொலைக்காட்சிப்பெட்டியை உடைத்தான்.

"சாவதை விட வாழ்வது எளிது" இவன் முன்னர் தோன்றினேன்.

"நோ இட்ஸ் எ  ப்ரீடம்"

"மிகப்பெரிய பிரச்சினைகள் விடுதலை என்று நாம் எதை நினைக்கின்றோமோ அந்த விடுதலை கிடைத்த பின்னர்தான் வரும்"

"ஹூ ஆர் யூ , எப்படி என் வீட்டிற்குள் வந்தாய் "

"பேரண்டங்களின்  தற்கொலை தடுப்பு காவலன்"

"செம ஜோக் மச்சி, சாவப்போறதுக்கு முன்ன ஒரு காமெடி பீஸை பார்க்கனும்னு என் தலைவிதி..."  சில நொடிகள் அமைதிக்குப் பின்னர்

"திருடனா நீ ,  இந்தா நான் செத்த பிறகு இந்த வீட்டில இருக்கிற அத்தனையும் உனக்குத்தான் எடுத்துட்டுப் போய் நீயாவது நல்லா இரு"  இரண்டாவது தூக்க மாத்திரையை எடுத்து போட்டான்.

"விளையாட்டுக்கு சொல்லவில்லை. உண்மையாகவே நான் மனிதர்களின் தற்கொலை எண்ணங்களை மாற்றுபவன், இப்பேரண்டங்களின்   காவலர்களின் ஒருவன் "

"ஓகே ஒகே , ஏன் தற்கொலையை தடுக்கவேண்டும், நான் செத்துப் போவதால் இந்த யுனிவர்சுக்கு என்ன நஷ்டம்  " நக்கலாய் ஓரச்சிரிப்பு சிரித்தபடி மூன்றாவது மாத்திரையை எடுத்தான்.

"அதை சொல்ல முடியாது. ஆனால் நீ எந்த எந்த பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்ள நினைக்கின்றாயோ அவை ஒருபோதும் மாறாது , இன்னும் அதிகமாகத்தான் ஆகும் "

"ஒ , மை டியர் திருடன், அந்த பிராபளம்ஸை நான் பார்க்க வேண்டியதில்லையே "

"நீங்கள் பார்ப்பீர்கள்  அனுபவிப்பீர்கள் "

"என்ன, ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாய் அலைவேன்னு சொல்றியா"

"இல்லை இல்லை. உங்கள் பிரச்சினைகளை நீங்கள் அனுபவிக்காமல் தப்பிக்க முடியாது , அதுதான் இப்பேரண்டத்தின் விதி "  நான் சொல்லி முடிப்பதற்குள் ஆறேழு மாத்திரைகளை எடுத்துஇவன் சாப்பிட்டிருந்தான்.

தற்கொலை தடுப்பு முயற்சி தோல்வி அடைந்த கவலையை விட,  தற்கொலையில் இறந்துப் போகப் போகின்ற இவனுக்காக நான் ஒரு பிரதி பேரண்டத்தை உருவாக்கவேண்டுமே என்ற கவலை எனக்கு . தற்கொலையில் இறக்கும் ஒவ்வொருவருக்காகவும் ஒரு பேராண்டத்தை உருவாக்க அதிக ஆற்றல் தேவைப்படுவதால் , ஆற்றல் சேமிப்பிற்காகத்தான்   நான் தற்கொலைகளைத் தடுக்க முயற்சிக்கின்றேன் .  இவன் உயிருக்குப் போராடும் அந்த சொற்ப நேரத்திற்குள் பிரதிகளை உருவாக்கி , இதே நேர பரிமாணத்தில்  இவனை அங்கு வாழவைக்க வேண்டும்.

ஆம் தற்கொலையில் இறப்பவர்கள் ,  நீங்கள் நினைப்பதைப் போல இறந்து விடுவதில்லை. மிச்சம் இருக்கும் வாழ்க்கையை அதே மனிதர்கள் , அதே உணர்வுகள் , இன்னும் கடுமையான சூழலுடன் இணைப் பேரண்டத்தில் வாழ்ந்து முடிக்க வேண்டும்.  இங்கு இறந்த இவன் இணை பேரண்டத்தில் தூங்கி எழுவதைப் போல சாதரணமாக இன்று எழுவான், ஆனால் புதிய உலகில் இங்கிருப்பதை விட ஆயிரம் மடங்கு பிரச்சினைகள் இவனுக்காக காத்திருக்கின்றன. இங்கு ஓடிப்போன காதலி அங்கு இவனுக்கு கிடைப்பாள். ஆனால் மனைவியான பின்னர் ஓடிப்போவாள். மறுபடியும் தற்கொலை செய்துகொண்டால், இன்னும் அதிகப் பிரச்சினைகளுடன் அதே வாழ்க்கையை மற்றுமோர் உலகில் வாழ்ந்தாகவேண்டும்.

உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருக்கின்றனவா? இருந்தால் தொலைத்துவிடுங்கள்.  எனக்கும் வேலை மிச்சம், ஆற்றலும் மிச்சம். எல்லாவற்றையும் விட உங்களுக்கான பிரச்சினைகளை இங்கேயே அனுபவித்து  இயற்கையாக  விடுதலையானால் என்னைப் போல ஆகலாம். இப்பேரணடங்களின் காவலர்களில் ஒருவனாக .. இபேரண்டத்தின் ஆற்றலாக. ஆவீர்களா!!!  .


Monday, June 02, 2014

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் - பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

முதலமைச்சர் கருணாநிதி, திமுக தலைவர் கருணாநிதி, எழுத்தாளர் கருணாநிதி இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தது முதலமைச்சர் கருணாநிதி, அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டின் பொற்காலமான 1996-2001 ஐந்தாண்டுகள் தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர் கலைஞரை மிகவும் பிடிக்கும். வடிகட்டிய சுயநலவாதியான எனக்கு ஒருவரைப் பிடிக்கவேண்டுமெனில் நான் ஓர் ஆதாயமாவது அவரிடம் இருந்து அடைந்திருக்க வேண்டும். நான் அடைந்திருக்கின்றேன்.
1996 வரை ஒவ்வொரு பொறியியற் கல்லூரிகளுக்கும் தனித்தனி விண்ணப்பம் அனுப்பி இருந்த நிலையை மாற்றி, ஒற்றைச் சாளர முறையை அறிமுகப் படுத்தியப் பின்னர் நேரடியாகப் பயன் அடைந்தவன் நான்.
அதற்கு முன்னர், ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் 100 ரூபாய் விண்ணப்பப் படிவத்திற்கான செலவு என்று வைத்துக் கொண்டால் கூட, பத்துக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் அனுப்ப ரூபாய் 1000 ஆகும். ஏழ்மைக்கும் நடுத்தரத்திற்கும் அல்லாடிக்கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு அன்று ஆயிரம் ரூபாய்கள் என்பது மிகப்பெருந்தொகை.
ஆனால் கலைஞர் ஆட்சியில், ஒரே விண்ணப்பம், ஒற்றைச் சாளர முறையில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் பொதுவாக என்ற முறை வந்த பின்னர் நேரடியாக மிகவும் பயனடைந்தது நடுத்தர ஏழை மாணவர்கள். . அதுவரை சமூக நீதி இடஒதுக்கீடுகளில் 'உட்டாலக்கடி' செய்து கொண்டிருந்த கல்லூரிகளும் வழிக்குக் கொண்டு வரப்பட்டு கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டிக் கொண்டிருக்கின்றது.
ஒருவேளை, ஒற்றைச் சாளரமுறை இல்லாமல் இருந்திருந்தால் நான் பொறியியல் படிப்பு படிக்காமலேயே இருந்திருக்கலாம். இப்பொழுது இருக்கும் நிலையை அடைந்திருப்பேனா எனச் சொல்ல முடியாது. ஒருவேளை அடைந்திருக்கலாம், ஆனால் அந்தப் பாதை இன்னும் கடுமையானதாக இருந்திருக்கும். அரசாங்கத்தின் ஒரு சிறியத்திட்டம், ஒரு தலைமுறை இளைஞர்களின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் வளமையாக்கி இருக்கின்றது.
என்னைப்போல, இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு பயணப்படும் வாழ்க்கைப் பாதையை வசதியாக்கிக் கொடுத்தமைக்காகவே முன்னாள் முதலமைச்சர் கலைஞரை போகுமிடமெல்லாம் நினைவு கூர்ந்து கொண்டே இருப்பேன்.
இன்னும் ஓராண்டில் சமர்ப்பிக்கப்போகும் தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சிப் படிப்பிற்கான எனது ஆராய்ச்சி நூலை கலைஞருக்கு சமர்ப்பிப்பதே அவருக்கு நான் செய்யப்போகும் என்னால் முடிந்த மிகப்பெரும் நன்றி காணிக்கை.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Saturday, February 15, 2014

பாலுமகேந்திரா என்ற நாயகனும் அவரின் நாயகிகளும் - சிறுகுறிப்பு

ஒவ்வொரு இயக்குநரும் தங்களுக்கென்று ஒரு மைதானத்தை  வைத்திருப்பார்கள். அங்கு அவர்கள் களமிறங்கினால் அடிப்பொளிதான். பாலுமகேந்திராவிற்கு 'ஓர் ஆண் - இரண்டு பெண்கள் - காதல்' இதுதான் அந்தக்களம். சமூகம் அங்கீகரிக்கும் ஒரு காதல், அதைத் தாண்டி சமூகம் முகம் சுளிக்கும் இன்னொரு காதல் , இந்தப் பிரச்சினையை எப்படி நாயகன் சமாளிக்கின்றான் என்பதை  வெவ்வேறு காலக்கட்டங்களில் தான் விரும்பிய முடிவுகளுடன் கோகிலா, ஓலங்கள், இரட்டைவால் குருவி, மறுபடியும், சதிலீலாவதி, ஜூலி கணபதி என வரிசையாக படம் எடுத்தவர் இயக்குநர் பாலுமகேந்திரா.

கோகிலா :-  காதலன் - காதலி, காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் விபத்தாக தொடர்பு , புதியவள் கர்ப்பமடைகின்றாள் காதலன் புதிய பெண்ணுடன் வாழ்க்கையைத் தொடங்குகின்றான்.

ஓலங்கள்:- கணவன் - மனைவி , கணவனின் முந்தையக் காதல் குழந்தையின் ரூபத்தில் வாழ்க்கையில் வருகின்றது, எப்படி நாயகன் சமாளிக்கின்றான்.

இரட்டைவால் குருவி :- கணவன் - இரண்டு மனைவிகள். இறுதியில் இரண்டு மனைவிகளும் சமாதானமாக ஒரே குடும்பமாக கணவனுடன் தத்தமது குழந்தைகளுடனும் வாழ்வதாக படம் முடியும்.

மறுபடியும் :-  பத்தாண்டுகள் பழைய ,   மகேஷ் பட் தன் வாழ்வின் ஒரு பகுதியை கதையாக எடுத்திருந்தஅர்த் எனும் இந்திப்படத்தைத் தூசித்தட்டி மறு உருவாக்கம் செய்த படம். பாலுமகேந்திராவின் வாழ்க்கைக்கு நெருக்கமான படம் என்றும் சொல்வார்கள். இயக்குநர் - மனைவி - புதிதாய் வந்த நடிகை. என்ன ஆகின்றது என்பதுதான் கதை.  பாலுமகேந்திராவை அறிந்தவர்களுக்கு 'மறுபடியும்' என்ற பெயரே கதையைச் சொல்லிவிடும்.

சதிலீலாவதி :-  கணவன் - மனைவி - குழந்தைகள், புதிதாய் வரும் பெண்.  புதிதாய் வரும் பெண் தனது பழையக் காதலனுடன் போய்விட,  கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.

ஜூலிகணபதி :- மணமான எழுத்தாளன் மேல் எழுத்தின் மேல் மையல் கொண்டு அவனை சிறைப்பிடித்து வைத்திருக்கும் பெண். அவளிடம் இருந்து நாயக எழுத்தாளன் எப்படி தப்பிக்கின்றான்.

மேற்சொன்ன படங்களில் முடிவுகள் வெவ்வேறாக இருந்தாலும் மைய இழை,  ஒரே சமயத்தில் இரண்டு பெண்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஓர் ஆணின் மனப்போராட்டம்தான்.  தனது படைப்புகளுக்கும் தன் வாழ்க்கைக்கும் பெரிய இடைவெளிகளை வைக்காதவன் கலைஞன். அவ்வகையில் தன்னுடைய போராட்டங்களையே கதைகளாக்கி திரையில் ஓவியமாக்கி , தனது இயல்வாழ்க்கை  எதிர்பார்ப்புகளை திரை முடிவுகளாக பரிசோதித்து இருக்கின்றாரோ என அடிக்கடித்தோன்றும்.

பாலு மகேந்திரா என்ற மனிதனைத் தெரிந்து கொள்ள இந்தப்படங்களைப் பார்த்தாலே போதுமானதோ !!

பிகாசோ சொன்னபடி, தனது படைப்புகளில் தன் வாழ்க்கையை ஒளித்துவைத்திருப்பவன் தான் மிகச்சிறந்த கலைஞன். பாலுமகேந்திரா பிகாசோ வகைக் கலைஞன்.

Friday, February 14, 2014

அம்முவின் அப்பா - காதலர் தின சிறப்பு சிறுகதை

சென்ற ஆண்டு இதைப் பற்றி நான் யோசித்ததுக் கூட இல்லை. போன வருடம் வரை, என் மகள்அம்மு இங்கு வீட்டில் இருந்து கல்லூரி போய் படித்துக் கொண்டிருந்தாள். படிப்பு முடிந்து போன செப்டம்பரில் இருந்து வேலை நிமித்தமாக  சென்னைவாசியாகிவிட்டாள். சமீபத்தில் வேறு அடிக்கடி கார்த்தி என்ற பையனைப் பற்றி  அடிக்கடி பேசுகின்றாள்.  பழக்கம் பத்து நாட்கள், நட்பு நாற்பது நாட்கள் என ஐம்பதே நாட்களில் காதல் பூத்துவிடலாம். இன்னும் சில தினங்களில் காதலர் தினம் வேறு வருகின்றது.

காதலுக்கும் பயமில்லை, காதலர் தினத்தன்று ஊர்ச்சுற்றுவாளோ என்ற கெட்ட எண்ணமும் இல்லை. நானே காதல் திருமணம் செய்து கொண்டவன் தான்.  என்னுடைய ஒரே பயம், காதலர் தினத்தன்று ஊர்ச்சுற்றிக்கொண்டிருக்கும் ரவுடிகள் தான். முன்பெல்லாம் ரவுடிகள் என்றால் கைலிகள் கட்டி இருப்பார்க்கள், மீசை வைத்திருப்பார்கள், மரு இருக்கும். கண்களில் சிவப்பு நிறம் கொப்பளிக்கும். இப்பொழுது ரவுடிகள், காவித்துண்டு அணிந்து இருக்கின்றார்கள் அல்லது குல்லா வைத்திருக்கின்றார்கள். முன்பெல்லாம் ரவுடிகள் சென்னைத்தமிழ் அல்லது சேரித்தமிழ் பேசுவார்கள். இப்பொழுதெல்லாம் ரவுடிகள் சமஸ்கிருதம், அரபி எல்லாம் பேசுகின்றார்கள், சமயங்களில் ஆங்கிலமும்....

பிப்ரவரி 14, வெள்ளியன்று வருகின்றது, நானும் அம்முவின் அம்மாவும், அப்படியே வார இறுதிக்கு சென்னை வருவதைப்போல போய், பாதுகாப்பாக அவளுடன் இருந்துவிடலாமா...

ச்சே... கருமாந்திரம் பிடித்தவர்களுக்காக, ஏன் என் மனம் இப்படி எல்லாம் யோசிக்கின்றது.   என் பிள்ளைக்கு அத்தனை சுதந்திர எண்ணங்களையும் விதைத்து வளர்த்து இருக்கின்றேன். அவளுக்குத் தெரியாததா... ஒருவேளை கார்த்தியைக் காதலித்தால் அம்முவின் முதல் நண்பனான என்னிடம் சொல்லாமலா இருப்பாள் , ஒருவேளை பிறகு சொல்லிக் கொள்ளலாம் என இருந்தாலும்  வாலன்டைன்ஸ் தினத்தன்று கொண்டாடிவிட்டுத்தான் போகட்டுமே...

விடியற்காலையில் கெட்ட கனவு,  நாங்கள் வெறும் நண்பர்கள் என்று சொல்ல சொல்ல, கார்த்தியையும் அம்முவையும் இரண்டு வகையான ரவுடிகளும் அடிக்கின்றனர். கனவு கலைந்து  எழுந்து செய்தித்தாளைப் படித்தால், கடற்கரை வரும் காதலர்களை விரட்டுவோம் என கூட்டாக ரவுடிகள் பேட்டிக்கொடுத்து இருந்தனர்.

பிப்ரவரி 14 ஆம் தேதியன்று அம்முவிற்கு உடம்புக்கு சரியில்லாமல் போய் அவள் விடுதியிலே இருந்துவிடவேண்டும் என அபத்தமாய் மனம் யோசித்தது.  அம்முவோட அம்மாவிற்கு உடம்புக்கு சரியில்லை, உடனே கிளம்பி வா, என சொல்லி வரவழைக்கலாம் , ஆனால் என் மகளிடம் இதுவரை பொய் சொன்னது இல்லையே ....

கவலைகள், குழப்பங்கள், சஞ்சலங்கள், சங்கடங்கள் அனைத்தின் எரிச்சலையும் அம்முவின் அம்மாவிடமே காட்டினேன். காரணங்களைக் கேட்கவில்லை. வழக்கம்போல சகித்துக் கொண்டிருப்பாளாய் இருக்கும்.  காதலின் மற்றொருவடிவம் சகிப்புத்தன்மை.

பிப்ரவரி 14 , காலையில் வெகுசீக்கிரம் அலுவலகம்  வந்துவிட்டேன். அம்முவின் கைப்பேசிக்கு அழைக்கலாமா... ச்சே வேண்டாம் ..அநாகரிகம்... எந்தக்காலத்திலும் அம்முவிற்கும் எனக்குமான அந்த நட்பை , அப்பா என்ற அதிகாரத்தால் பிடுங்கி எறியக்கூடாது என நினைத்துக் கொண்டிருக்கையில். அம்முவிடம் இருந்தே அழைப்பு....

"மிஸ்டர், சுப்ரமணி, கொஞ்சம் வீட்டிற்கு வரமுடியுமா?" அம்மு உற்சாகமாய் இருந்தால் என்பெயரைச் சொல்லித்தான் அழைப்பாள்.  என் நிறுவனம் என் உரிமை என யாருடனும் சொல்லிக்கொள்ளாமல், வீட்டிற்கு விரைந்தேன்.

"மிஸ்டர் சுப்ரமணி, வேலன்டைன்ஸ் டே அன்னக்கி , நான் காதலிப்பதை, என் அப்பா அம்மாகிட்ட தான் சொல்லனும்னுதான் திடீர்னு கிளம்பி வந்தேன்"

"சொல்லுடாமா ..."

" கார்த்தின்னு சொன்னேன்ல, அந்த பையன் தான், பிடிச்சிருந்துச்சு,  பேசிக்கிட்டோம், அவங்கவீட்டுல அவன் இன்னைக்கி தகவல் சொல்லிடுவான், நான் இங்க வந்து சொல்லிட்டு இருக்கேன்"

அனுமதி என்றில்லாமல், தகவல் என்ற பொருளில் அவள் சொல்லுவது எனக்குப்பிடித்து இருந்தது. ஒரு பெண் குழந்தைக்கான பரிபூரண சுதந்திரத்தை என் மகள் முழுமையாக்கிக் கொண்டு இருக்கிறாள்.

இடையில் கார்த்தியின் பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. பேசினோம். நல்ல நாளில் எல்லாம் நல்லபடியாக அமைந்தது.

இரவு மொட்டை மாடியில், விளையாட்டாய் அம்முவிடம்

"அம்முக்குட்டி, வாலன்டைன்ஸ்டே அன்னக்கி பொதுவா லவ்வர்ஸ் ஊர்தானே சுத்துவாங்க,,,, நீங்க இரண்டு பேரும் எப்படி இப்படி டிசைட் பண்ணீங்க"

".. பிப்ரவரி 14 அன்னைக்கு ரவுடிங்க தொல்லை தாங்க முடியாது, அதனால நாங்க இரண்டு நாளைக்கு முன்னமே வேலன்டைன்ஸ் டே கொண்டாடிட்டோம்."





Sunday, February 09, 2014

ஓர் அனுபவமும் யுவன் சங்கர் ராஜாவும்

பிடிப்பு ஏதேனும் சிக்காதா , தத்தளித்துக் கொண்டிருக்கும் நடுக்கடலில் இருந்து தப்பிக்கமாட்டோமா , என ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு காலக்கட்டம் வரும். அப்படியான ஒரு காலக்கட்டம் எனக்கும் வந்தது. எதைத் தின்னால் பித்தம் தெளியும், சீக்கிரம் தெளியும் என்று மந்திரிச்சுவிட்டபடி இருந்த காலக்கட்டம். அந்த சமயத்தில்தான் என் கல்லூரி சீனியர் அரவிந்த்ராஜேஷ் தமிழ்மணி அவர்களை நீண்டகாலம் கழித்து சந்தித்தேன். பண்ணையாரும் பத்மினி படத்தில் வரும் சிறுவர்களைப்போல நானும் கார் பிரியன். அதுவும் முன் சீட்டில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தபடி போகவேண்டும் என ஆசைப்படுபவன். காரில் வந்தார், முன் சீட்டில் அமரவைத்தார், சோறு வாங்கிக் கொடுத்தார். வயிற்றுக்கு ஈயப்பட்டப்பின், பவுலோ கோயல்ஹோ எழுதிய The Alchemist என்ற புத்தகத்தை வாங்கித்தந்தார். ஒரே இரவில் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். பித்தம் தெளிந்தது. கரை சேர்ந்ததாக உணர்ந்தேன். அல்கெமிஸ்ட் புத்தகத்தைவிட சிறப்பான புத்தகங்களை எல்லாம் அதன் பின்னர் மற்ற நண்பர்கள் பரிந்துரைக்க படித்திருக்கின்றேன். ஆனால் எப்பொழுது எல்லாம் தத்தளிக்கும் தருணங்கள் வருகின்றனவோ அப்பொழுதெல்லாம் அல்கெமிஸ்ட் புத்தக்கத்தை மனம் தேடும். ஒருவேளை அல்கெமிஸ்ட் படித்தவர்களைக் கொண்டு ஒரு மதம் உருவாக்கப்பட்டு, பவுலோ கோயல்ஹோ தூதராக அறிவிக்கப்பட்டு இருந்தால் ரசவாத மதத்தில் வினையூக்கியாக சேர்ந்து இருப்பேன். இன்றும் நண்பர்கள், வாசகர்கள், தோழிகள் தடுமாற்றத்தில் இருக்கும் சமயங்களில் நான் பரிந்துரைக்கும் முதல் புத்தகம் அல்கெமிஸ்ட்.

மனம் பிடிப்பற்ற சூழலில் இருக்கையில் பிடிப்பாய் ஒரு கருவி கிடைக்கையில் கருவியின் தாசனாய் மாறிப்போவது சமயங்களில் தவிர்க்கமுடியாது. ஒருவேளை கருவி இல்லாவிடின் கிடைக்காவிடின் அழிந்துபோய் விடக்கூட வாய்ப்பு அதிகம். யுவன் சங்கர் ராஜாவிற்கும் அத்தகைய சூழல் ஏற்பட்டு இருக்கக்கூடும். திருக்குரான் புத்தகம் வாழ்க்கையில் அவருக்கு மிகுதியான பிடிப்பையும், இழந்த நம்பிக்கையை மீட்டு எடுத்துக் கொடுத்து இருக்கலாம். தன்னை இழக்க விரும்பாத யுவ-ராஜா தாசன் ஆகலாம். தவறில்லை.

யுவன் சங்கர் ராஜா வாக இருந்தாலும் சரி, அவர் யூனுஸ் அப்துல்லாவாக மாறினாலும் அவரின் இசை ஒன்றுதான். மீட்டப்படும் வீணைக்கு விரல்கள்தான் முக்கியம். விரல்களுக்கான உடல், என்ன ஆடை போட்டுஇருக்கின்றது பார்ப்பதில்லை. இசை என்னும் இயற்கை அவதாரத்தின் தூதுவன் யுவன் சங்கர் ராஜாவிற்கும் அவரின் புதுத்தத்துவ வாழ்க்கைக்கும் வாழ்த்துகள்.

Saturday, February 08, 2014

520 ஈரோ - சிறுகதை

"இந்த மாசம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் அனுப்ப முடியுமா" என்ற அப்பாவின் மென்மையான வேண்டுகோளும்
"எவ்வளவு நாள்தான்டா கார்த்தி படிச்சிக்கிட்டே இருப்ப, சீக்கிரம் வேலைக்குபோடா" என்ற அம்மாவின் புலம்பலும்  காதில் இருந்து அகன்றுவிட்டாலும் இன்னும்   மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.

நான் ஆராய்ச்சிப்படிப்பு மாணவன்.  ஆராய்ச்சிப்படிப்பிற்கு என் நிறுவனம் தரும் 1000 ஈரோ , வீட்டிற்கு அனுப்ப 500 எனக்கு ஐநூறு என சரியாகப் போய்விடுகின்றது.  நான் ஊர்ச்சுற்ற, வெளிநிறுவனத்திற்கு , மாதத்தில்  நான்கு ஐந்து நாட்கள் மென்பொருள் நிரலி அடித்து கொடுத்தால் இருநூறு முன்னூறு தேறும். பத்து நாட்கள் செய்ய வேண்டிய வேலையை, மாட்டினான்டா மங்குனிசாமி என, இரண்டே நாட்களில் செய்யச் சொல்வார்கள்.  எல்லா மாதங்களிலும் இந்த வேலை கிடைக்காது. வேலை இல்லாத மாதங்களில்  Running Royal Life Only On Photos என முன்பு எடுத்த சுற்றுப்பயண போட்டோக்களை பேஸ்புக்கில் போடுவதோ அல்லது இப்படி இந்த பிரஸ்காட்டி மலை மேல் உட்கார்ந்து தூரத்தில் ரோம் நகரைப் பார்ப்பதிலோ நேரம் போகும்.

 வெப்பமண்டல தமிழ் நாட்டுக்காரன் ஆன எனக்கு ஐரோப்பாவில்  மழைப்பிடிக்கும். குளிர்காலத்தில் மழை பெய்தால் தட்பவெப்பம் சுழியத்திற்கு மேல் இருக்கின்றது எனப்பொருள். மேலும் மேகமூட்டம் வெப்பத்தை வெளியிடாமல் காத்து வைத்திருக்க , குளிர் வாட்டாது. ஆதலால் மனம் மழைக்கு ஏங்கும். இரண்டு நாட்கள் மழை அடித்து ஓய்ந்து இன்றுதான் கதிரவனின் வெளிச்சம் வந்து இருப்பதால் இந்தக் குட்டி மலை நகரத்தின் தெருக்களில் நல்ல சன நெருக்கடி.  காப்பிக்கடைகள் இன்று களை கட்டின. மதியம் வந்ததில் இருந்து மூன்று காப்பிசினோ வகை காப்பிகள் குடித்தாகிற்று.  வெளிச்சம் மறைய வெப்பம்  குறைய  குளிர் என்னை வாட்டியது.  பசி இருந்தால் குளிர் அதிகமாக தெரியும்.  பசியுடன் வருத்தமும் சேர்ந்து கொண்டதால் மென்குளிர் நடுக்கக் குளிராக எனக்குத் தெரிந்தது.

மேலதிகமாக பணம் அனுப்பவில்லை என்றாலும் அப்பா சமாளித்துக்கொள்வார். ஆனால் அனுப்பினால் உதவியாக இருக்கும், யாரிடம் கேட்பது என்ற யோசனையை ஒரே இடத்தில் இருந்தபடி அசைபோடுவது அயற்சியாய் இருந்தது. இரண்டு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து  கீழேப்போய் ரயில் நிலையத்தில் அமர்ந்து ரயிலை வேடிக்கைப் பார்த்தபடி யோசிக்கலாம். ரயிலும் ரயில் நிலையங்களும் பல சமயங்களில் எனக்கு போதிமரம்.

சாலையின் ஓரமாக வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களை ஒன்று இரண்டு என எண்ணிக்கொண்டே, பத்தாவது கார் இருந்த பெஞ்சில் ஒரு தாத்தா உட்கார்ந்திருந்ததால் அவரைக் கடந்து  இருபதாவது கார் அருகே இருந்த மரப்பெஞ்சில் அமர்ந்தேன். ரயில் நிலையத்திற்கு இன்னும் சில கார்களை எண்ணவேண்டும்.

 அந்த தாத்தாவுடன் உட்கார்ந்து இருக்கலாம் . மூன்று காரணங்களினால் அவருடன் உட்காரவில்லை. அவர் பேச ஆரம்பித்தால் என்னால் சரளமாக இத்தாலியத்தில் பேச முடியாது. இரண்டாவது , எனக்கு புன்னகையைக் கொடுத்தாலும் அவரின் தோற்றம் படு ஏழ்மையாக இருந்தது. மூன்றாவது  மணி பத்து ஆகப்போகின்றது, சரியான மேலங்கி கூட இல்லாமல் குளிரில் உட்கார்ந்து இருக்கின்றார். ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகி நமக்கு ஏன் பிரச்சினை என்பதால் தான் இந்த  இருபதாவது கார் அருகே இருந்த பெஞ்ச் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பெஞ்சில் உட்கார்ந்தவுடன் தாத்தா நினைவுப்போய், பணத்தின் நினைவு வந்தது.  என்ன செய்யலாம் என்ற யோசனையின் அசை தொடர்ந்தது. கண்களுக்கு மட்டும் குளிர்வதில்லை.  மனதிற்கு எது தேவையோ அதைக் காட்டும்.   தூரத்தில் ஈரோ பணத்தாள் இருப்பதாக மூளைக்கு சொன்னது. கவலையில் கானல் நீர் தென்படலாம் என பார்வையைத் திருப்பிக் கொண்டேன். உந்தப்பட்ட இரண்டாம் பார்வையில் அது பணத்தாள் என உறுதியானது. பணம் கிடந்த இடத்திற்கு அருகில் இருபத்திரண்டாவது கார் நின்றிருக்கவேண்டும்.  நான் ஓடிய வேகத்தில் 100 மீட்டர் பந்தயங்களில் ஓடியிருந்தால் உசைன் போல்ட்டைத் தோற்கடித்து இருப்பேன். ஓடிய வேகத்திற்குப் பரிசாய் அது 500 ஈரோத்தாள்.   கடைசியாக நான் இப்படி சாலையில் பணம் எடுத்தது , வியன்னா சென்றிருந்த பொழுதுதான். அன்று  ஒரு பத்து ஈரோத்தாள் கிடைத்தது. ஆஸ்திரியாவில் பத்து ஈரோ அல்லது அதற்கு குறைவான மதிப்புள்ள பொருட்கள் கீழே கிடந்தால் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் பெஞ்சில் வந்து அமர்ந்து, பணக்கவலைத் தீர்ந்தது என கடவுளுக்கு நன்றி சொல்லும் தருணத்தில் புதுக்கவலைகள் முளைத்தன.
ஒருவேளை, என்னைப்போன்ற சிரமமான சூழலில் இருப்பவர்கள் பணத்தைத் தொலைத்துவிட்டு போய் இருந்தால் ;
கள்ளநோட்டாக இருந்தால் , இத்தாலியில் இது சர்வசாதாரணம், புழக்கத்திலே இல்லாத ஆயிரம் ஈரோத்தாள் கூட இத்தாலியில் கிடைக்கும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருவதைப்போல பணத்தை தரையில் போட்டுவிட்டு தூரத்தில் இருந்து படம்பிடித்து பகடி செய்யப்போகின்றார்களோ என்ற பயமும் வந்தது.

உன்னுடைய பணம் இல்லை.. வேண்டாம்...
உழைக்காத பணம் ஒட்டாது.
ஆனால் நான் திருடவில்லை. ஏமாற்றவில்லை. தானாகவே பணம் , இயற்கையாய் வந்து விழுந்து இருக்கின்றது.
 முதன் முதலாய் ரோம் வந்து இறங்கியபொழுது, எனது கைப்பை கிட்டத்தட்ட 600 ஈரோ பணத்துடன் காணாமல் போனதற்கான இழப்பீட்டு பணமாக எடுத்துக் கொள்ளலாமே ...
எத்தனை நாட்கள் சம்பளம் இல்லாமல் வேலைப்பார்த்து இருக்கின்றாய் அதற்கான சன்மானமாய் இருக்கட்டும்.
 மனம் இரண்டு பக்கத்திற்கும் பேசியது.  கடைசிப்பேருந்திற்கு இன்னும் நாற்பது நிமிடங்கள் இருந்தன. இங்கிருந்து பேருந்து நிலையம் நடக்க 10 நிமிடங்கள். இன்னும் முப்பது நிமிடங்கள் காத்து இருப்போம்.  யாராவது வந்து தேடினால் கொடுத்துவிடுவோம். இல்லாவிடில் இன்று நான் அதிர்ஷ்டமானவன்.

ஒவ்வொரு நிமிடமும்  மெல்ல நகர்ந்தது.  யாரும் வந்துவிடக்கூடாதே என்று ஒரு புறமும் , முப்பது நிமிடங்கள் எப்படி கரையும் என மறுபுறமும் என்னிடம் நான் அருமையாக நடித்துக் கொண்டிருந்தேன்.  அந்த பத்தாவது பெஞ்ச் தாத்தா மெல்ல ஒவ்வொரு காராக தொட்டபடி என்னை நோக்கி வந்தார்.

கண்டிப்பாக இந்த தாத்தாவின் பணமாக இருக்காது.   அருகில் வந்த தாத்தா,

"இந்த இருபது ஈரோத்தாள் நீ சென்றவழியில் கிடந்தது , இப்பொழுதான் பார்த்தேன் , உன் பணமா " என இத்தாலியத்தில் கேட்டார்.

ஐநூறுடன் மேலும் இருபதா... இதுவரை இரண்டு பக்கமும் வாசித்துக் கொண்டிருந்த மனம், விடாதே வாங்கிக் கொள் என்றது.  முப்பது நிமிட கெடு ஒருமுகம் ஆன ஆசை மனத்தினால் வெறும் 5 நிமிடங்களில் மறந்து போனது.

"ஆம் என்னுடையதுதான் நன்றி " என பொய்யுடன் வாங்கிப் பையில் வைத்துக் கொள்ளும்பொழுது கொஞ்ச தூரத்தில் ஒரு கார் மெல்ல  வருவதையும் கவனித்தேன். ஒருவேளை தொலைத்த பணத்தைத் தேட வரும் காரா !! .

தூரத்தில் ரயிலின் சத்தம் கேட்டது.

"சரி தாத்தா, ரயிலுக்கு நேரம் ஆகிவிட்டது, நல்லிரவு" என மற்றொருப் பொய்யை  சொல்லிவிட்டு நடக்கையில் ,  ஒருகணம் கூடத்திரும்பிப் பார்க்கவில்லை , ஒரு வேளை அந்தக் கார் பணத்தைத் தேடும் காராக இருந்து, தேடுபவர்களைப் பார்த்தால் ஆசைமனம் தோற்றுவிடுமோ என்ற பயம்... நிமிடங்களில் மாறியதற்கு மனம் வெட்கப்படவில்லை. சமாதானத்தை தேடிக்கொண்டிருந்தது.
  ரயில்  எனக்கு போதி மரம் தானே ... ஊர் சுற்றிப்போகப் போகும்  ரயில் பயணத்தில் இந்த 520 ஈரோக்களுக்கு ஏதாவது ஒரு சமாதானம் கண்டுபிடித்துகொள்ளலாம்.  மழைப்புழுக்கமா மனப்புழுக்கமா எனத் தெரியவில்லை...வெக்கையாக இருந்தது.  மென்குளிரை வென்ற வெக்கையுடன்   ரயில் நிலையம் நோக்கி நடந்தேன்.
--------------------


Wednesday, December 04, 2013

பேஸ்புக், ஒரு மாணவன் , ஒரு பெண் மற்றும் ஒரு பொய்

முதலில் இதை சிறுகதையாகத் தான் எழுதலாம் என இருந்தேன். ஆனால் அனுபவங்களை அனுபவப்பதிவாக எழுதினால் அதன் தாக்கத்தின் வீச்சு அதிகம் என்பதால் உண்மையில் பொய்யைக் கலந்து புனைவாக்கும் எண்ணத்தை ஒதுக்கி விட்டு இதை அப்படியே உள்ளது உள்ளபடியே எழுதுகின்றேன். நாம் ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ சிலரின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் விளையாடிவிடுவோம். அந்த விளையாட்டுக்கள் சில சமயங்களில் நன்மையிலும் பல சமயங்களில் பகையிலும் முடியலாம். அடுத்தவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைத் தரக் கூடிய விதியின் விளையாட்டுகளின் ஆட்டக்காரனாக அடிக்கடி நான் இடம் பெறுவதுண்டு. கல்லூரிக் காலங்களில் அவ்வகையான ஆட்டங்களை சாதுர்யமாக தெரிந்தே விளையாடி இருக்கின்றேன். கால ஓட்டத்தில் அறிவும் பக்குவமும் அதிகமாக அதிகமாக மற்றவர்களின் உணர்வுகளைப் பணயம் வைத்து ஆடும் ஆட்டம் அறவே மறந்துப் போய் விட்டது. கடைசியாக பங்கேற்ற ஆட்டம், ஒரு பிரபல வலைப்பதிவரினால் தொடர்கதையாக எழுதப்பட்டு பரவலான வரவேற்பையும் பெற்றது. அத்தொடரில் நானும் ஒரு முக்கிய கதை மாந்தர். 

தமிழ் , தெலுங்கு, இந்தி என இந்திய அளவிலேயே இருந்த அடுத்தவரின் வாழ்க்கையை திசைத் திருப்பும் ஆட்டங்கள் இன்று பன்னாட்டு அந்தஸ்தையும் அடைந்தது 

ஒரு மாணவன் , பேஸ்புக் , ஒரு பெண் மற்றும் ஒரு பொய் ஆகியனவும் இவ்வாட்டத்தில் முக்கியமானவை. எனது துறையில் ஆராய்ச்சி மாணவனாக , பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவன், சென்ற ஆண்டு சேர்ந்தான். கடந்த ஜூன் மாதம் , பாகிஸ்தானிற்கு சென்றவன் , அங்கிருந்து துறைப் பேராசிரியருக்கு , தனது தந்தை உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாகவும் , அதனால் ஆறு மாதங்கள் படிப்பில் விலக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு மின்னஞ்சல் செய்து இருந்தான். 

மாணவர் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்ட எனது பேராசிரியரும் , அதற்கான சாத்தியக் கூறுகளை பரிசீலித்து அதற்கான முன்னெடுப்புகளை எடுத்து இருந்தார். பல்கலை கழக விதிமுறைகளின் படி , மாணவர்களுக்கு உடல் நோவு வந்தால் மட்டுமே ஆறு மாதங்களோ ஒரு வருடமோ விலக்கு அளிக்கப்படும், ஆனாலும் பேராசிரியர் மிகவும் நல்லவர் என்பதால், இண்டு இடுக்கு விதி முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு நல்லது செய்வார் அடிக்கடி என்னிடமும் எனது சக மாணவனான  மற்றொரு பாகிஸ்தானியனிடமும், விலக்கு கோரிய மாணவனைப் பற்றியும் அவனது தந்தையின் உடல் நலம் பற்றியும் விசாரிப்பார். 

இன்று மாலை, ஒரு சந்தர்ப்பத்தில் பாகிஸ்தானிய மாணவனைப் பற்றி பேச்சு வருகையில் , அந்த மாணவனது பேஸ்புக்கில் ஏதேனும் தகவல் இருக்கின்றதா என எங்களிடம் கேட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரம் இருந்ததால் இன்று தான் சிலப் பலப் புகைப்படங்கள் போட்டு சுயத்தம்பட்டம் அடித்துக் கொண்டு இருந்தேன். வாத்தியார்கள் எள் என்றால் எண்ணெய் ஆக மாறும் தமிழ் வழிப் படிப்புச் சூழலில் வளர்ந்ததால் உடனே , அவனது பேஸ்புக்கைப் பார்த்து , மாணவன் எதுவும் தகவல் பகிரவில்லை ஆனால், அவனது தோழி ஒருத்தி புகைப்படங்களில் அவனை இணைத்துள்ளதைக் காட்டுகின்றது என மட்டும் சொன்னேன். பேராசிரியர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உடனே என் இருக்கைக்கு வந்து படங்களைப் பார்த்தார். மாணவனும் அவனது ஐரோப்பியத் தோழியும் , ஜெர்மணியின் மியுனிக் நகரில் நடந்த ஒரு திருவிழாக் கொண்டாட்டத்தில் தங்களது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட படங்கள் கடந்த செப்டம்பர் மாதம் தரவு ஏற்றப்பட்டிருந்தன. பேராசிரியரின் முகம் மாறியது. 

பயபுள்ள, அப்பாவிற்கு உடல் நலம் சரியில்லை என கூறிவிட்டு , ஜெர்மனியில் ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றது என எனக்கு விளங்கியது. 

அந்த மாணவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே இத்தாலியும் எங்களது துறையையும் பிடிக்கவில்லை. ஆராய்ச்சிப் படிப்பிற்கான ஊக்கத் தொகையும் மிகவும் குறைவு என்ற மனக்குறையும் அவனுக்குண்டு. நான் சேர்ந்த ஆண்டில், நிதி நிலைமை காரணமாக ஊக்கத் தொகை எனக்கு கிடையாது. பல்கலை கழகத்தில் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் நான் வேலைப் பார்ப்பதால் தான் அப்படி இப்படி என ஓர் ஆயிரம் ஈரோக்கள் எனக்கு கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு தான் அரசனைப் போல வாழ்வதாக இங்கு கொஞ்சம் பந்தா காட்டுவதுண்டு. எனது பந்தாக்களைப் பற்றி எழுதினால் அது பத்து பக்கங்கள் போகும், அதைப் பின்னர் பார்க்கலாம். 

"சார் ஒருவேளை , இந்தப் பெண் சென்ற வருடம் எடுத்த புகைப்படங்களை இப்பொழுது தரவேற்றி இருக்கலாம் " பொய்மையும் வாய்மை இடத்து என சமாளிக்க முயலுகையில் ...... 

சமீபத்தில் , அதே தோழி , மாணவனது சுவற்றில் 'இன்றிரவு சாக்லெட் காப்பி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றாயா ' என எழுதி இருந்ததையும் பேராசிரியர் கவனித்து விட்டார். 

 நான் படு சுமாராக ஆண்டிராய்டு நிரலி எழுதும் பொழுது கூட கோபப் படமாட்டார். தந்தைக்கு உடல் நலம் சரி இல்லை என சொல்லிவிட்டு , அதன் பொருட்டு சொந்த நாட்டில் இருப்பதாக விலக்கு கேட்டு , இங்கு குடியும் கும்மாளமுமாக இருப்பதைப் பார்த்த பேராசிரியரின் முகத்தில் அவ்வளவு கோபம் வெடித்தது.

உடனடியாக அந்த மாணவனுக்கு மின்னஞ்சல் செய்து விட்டு , அவனுக்காக எடுத்திருந்த முயற்சிகளை கைவிடுமாறு துறைத் தலைவருக்கும் தெரிவித்து விட்டார். 
மார்ச்சில் அவன் திரும்ப வந்தால், முதலில் பாஸ்போர்ட் இம்மிக்ரேஷன் முத்திரையை பார்க்க வேண்டும் என கோபமாக சொல்லிக்கொண்டு இருந்தார். 

ஐரோப்பா வரும் இந்தியத் துணைக்கண்ட மாணவர்களில் சிலர், , ஒரு நாட்டில் படிப்பிற்கான அனுமதியை வாங்கிக் கொண்டு , அனுமதி பெற்ற படிப்பிற்கு போக்குக் காட்டிவிட்டு , மற்றொரு நாட்டிற்கு சென்று அங்கு படிப்பிற்கோ வேலைக்கோ பெண்களுக்கோ தூண்டில் போட்டுக் கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் இந்த பாகிஸ்தான் மாணவன் செயல்பட நினைத்து இருந்து இருக்கலாம். அதற்காக அப்பா உடல்நிலை என்ற திரைக்கதையை எழுதி இருக்கலாம்.ஆறு மாதங்கள் வேறு நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்து ஒரு வேளை கிடைக்காவிட்டால் , மீண்டும் இத்தாலிக்கே வந்துவிடலாம் என்பது மாணவனின் திட்டமாக இருந்து இருக்கும். திட்டமிட்டு எழுதப்பட்ட திரைக்கதையில் எழுதியவருக்கே ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக பேஸ்புக் அமைந்துவிட்டது. அவனது பெண் தோழி மட்டும் அந்தப் படங்களைப் பகிராமல் இருந்திருந்தாலோ  அல்லது Tag செய்வதை இந்த மாணவன் எடுத்துவிட்டு இருந்தாலோ ஆப்பசைத்த  குரங்காய் மாட்டாமல் இருந்து இருக்கலாம். அந்த மாணவன் நேர்மையாக இல்லை, பொய் சொன்னான் என்பதெல்லாம்  ஒரு புறம் இருந்தாலும், நாளை என் பேஸ்புக் வழியாகத் தான் அவனது தகவல்களைப் பேராசிரியர் பார்த்தார் என அவனுக்கு தெரிய வரும் பொழுது, நான் அவனுக்கு வில்லன் ஆவேன். ஒரு நாயகனுக்குத்தான் எத்தனை வில்லன்கள்.... 

சமூக டக உலகமானது , தகவல் பரிமாற்ற யுகம் மட்டுமல்ல, தகவல் கசிவு உலகமும் கூட... எத்தனை எச்சரிக்கையாக இருந்தாலும், மறைக்க வேண்டும் என நினைக்கும் விசயங்கள் சமூக ஊடகத் தொடர்பு சங்கிலியில் எங்கேயாவது ஓர் இணைப்பில் தெறித்து விழும். அதே போல , சொல்லப்பட்ட பொய், நீருக்குள் அமுக்கப்பட்ட காற்றடைத்தப் பந்து மேல் எழும்பி வருவதைப் போல என்றாவது ஒரு நாள் மேலே வரும்.

Tuesday, November 12, 2013

பேஸ்புக் புகைப்படம் - குட்டிக் கதை

'கார்த்தி , ஒரு சின்னப் பிரச்சினை...'

 பொதுவாக அம்மு அவளின்  பிரச்சினைகளை என்னிடம் கொண்டு வர மாட்டாள் , அவளுடைய பிரச்சினைகளை அவளே சரி செய்து கொள்ள முடியும் என்ற திமிரான எண்ணம் அவளுக்கு உண்டு.  என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன்   "சொல்லு அம்மு" என்றேன்.

'இந்த ஜீவா, என்னுடைய போட்டோக்களை எல்லாம் ரிசேர் செய்றாரு, அதுக்கு தேவதை , அழகி அப்படி இப்படி , ஹார்ட் சிம்பல்களுடன் என வர்ணனைகளுடன் பண்றது எனக்குப் பிடிக்கல"

அந்த ஜீவா , அம்முவோட போட்டோக்களை எல்லாம் மறுபகிர்வு செய்து , அதில் அவரின் நண்பர்கள் ஆபாசத்திற்கு சற்று குறைந்த அளவில் வார்த்தை விளையாட்டுகளுடன் உரையாடுவதைப் பார்த்து இருக்கின்றேன். அம்முவே அதை ஒன்றும் சொல்லுவதில்லை எனும்பொழுது , நான் என்ன சொல்லுவது என அமைதியாக இருந்துவிடுவதுண்டு.  இது மாதிரியான விசயங்களில் பெண்களிடம் பிரச்சினை என்னவென்றால் ஏதாவது  கேள்வி கேட்டால் சந்தேகம் என்பதாகவும், கேட்க வில்லை என்றால் அக்கறை இல்லை என்பதாகவும் புரிந்து கொள்வார்கள்.

"பிடிக்கவில்லை என்றால்  ஜீவாவிடமே சொல்லிவிடு, இல்லை என்றால் டோட்டலா பிலாக் பண்ணிடு அம்மு "

"சொல்லிப் பார்த்துட்டேன் கார்த்தி ,  பிலாக் செய்ய மனசு வரல,  பொதுவா நல்ல மனுஷன், நீ இதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு ஒரு ஐடியா கொடேன்"

"பொம்பளபுள்ளங்க பஞ்சாயத்துக்குப் போறது எரிச்சலான விசயம்னு சொல்லி இருக்கேன்ல,  போட்டோ போட்டு கூடி கும்மி அடிக்கிறப்ப இப்படியான விஷயம் எல்லாம் வரத்தான் செய்யும் என்னால எதுவும் செய்ய முடியாது ... நீயே பார்த்துக்கோ அம்மு   "
தொலைப்பேசி அழைப்பை உடனடியாக துண்டித்து விட்டாள்.  இரண்டு மணி நேரம் கழித்து அழைத்தாள்.

"கார்த்தி, அந்த ஜீவா என்னோட எல்லா போட்டாக்களையும் எடுத்துட்டாரு, சாரி சொல்லி மெசேஜ் கூட அனுப்பிட்டாரு,,,,, நீ ஏதாவது செஞ்சியா"

" அவரோட மனைவி புரபைலை கண்டுபிடிச்சி , எனக்கு விசிபிளாக   தெரியுற அவங்களோட போட்டோவுல , நீங்கள்  அழகு, உங்கள் கண்களில் சொக்கி விட்டேன்.  உங்கள்  கணவர் கொடுத்து வைத்தவர், அவரின் மேல் எனக்கு பொறாமையாக இருக்கின்றது என்பதுடன் ஒரு ஹார்ட் சிம்பலுடன் கமெண்ட் போட்டு இருந்தேன்"
                   --------------

Monday, November 04, 2013

தமிழுக்குத் தேவை சீன வரிவடிவம் - கட்டுரை

சில விசயங்களுக்கு மூக்கை மூடிக் கொண்டுப் போய் விடலாம் என்றாலும் , அப்படியே அமைதியாக இருந்து கொண்டு இருந்தால் எல்லா ஆற்றிலும் அவரவர் வீட்டு சாக்கடைகளைக் கலந்து விடுவார்கள்.  தமிழில் எழுதும் ஓர் எழுத்தாளர் , தமிழ் வரி வடிவங்களை மாற்ற வேண்டும் என்ற ஒரு கருத்தை தமிழ் தினசரி ஒன்றில் எழுதி(http://tamil.thehindu.com/opinion/columns/ஆங்கில-எழுத்துருவில்-தமிழை-எழுதினால்-என்ன/article5311674.ece) இருந்ததை வாசிக்க நேர்ந்ததன் எதிர்வினை என்பதாக இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

நாகரிகத்தின் தொடர்ச்சி , சிந்தனையோட்டங்களின் தொடர்ச்சி ஆகியன மொழியை மட்டும் சார்ந்தது அல்ல, மொழியுடன் பின்னிப்பிணைந்து இருக்கும் அதன் சொந்த வரிவடிவத்தையும் சார்ந்தது.  ஒன்றாய் இருந்தத் தமிழ் , மூன்றாய் நான்காய், ஐந்தாய் , இன்று திராவிட மொழிக் குடும்பமாய் மாறியதற்கு காரணம் வெவ்வேறு  காலக் கட்டங்களில் தமிழ் வழக்குகளாக இருந்த தெலுங்கு , கன்னடம், மலையாளம் ஆகியன தங்களுக்கு என்று புதிய வரி வடிவங்களை ஏற்றுக்கொண்டமைதான்.  சிந்து சமவெளி வரி வடிவங்கள் தமிழுக்கானவை என்றக் கருத்தும் உண்டு. இந்தக் கருத்தை ஒட்டி,  கைபர் போலன் கணவாய் வழி வந்த காட்டுமிராண்டி படையெடுப்புகள் , பேச்சு மொழியை மட்டும்  விட்டுவைத்து விட்டு , பயன் பாட்டு வரிவடிவத்தை மாற்றி இருந்து இருக்கும்  என்பதையும்  முன் வைக்கலாம்.

சில மாதங்களுக்கு முன்னர், துருக்கியத் தோழி ஒருவரிடம் , நவீன துருக்கியின் தந்தை முஸ்தபா கமால் அத்தாதுர்க்கைப் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டு இருக்கையில், அந்த தோழி சொன்னது,  'அத்தாதுர்க் அற்புதமான தலைவர், ஆனால் ஒரு விதத்தில் துருக்கிய வரலாற்றில் கரும்புள்ளி அவர் ... அற்புதமான துருக்கிய கடந்த காலத்தை எங்களிடம் இருந்து ஒட்டு மொத்தமாகத் துண்டித்து விட்டார்"

அந்தத் துருக்கியத் தோழி அப்படி சொன்னதற்கான காரணம் , 1928 ஆம் ஆண்டு , அத்தாதுர்க் , அரேபிய வரி வடிவத்தில் அமைந்து இருந்த துருக்கிய மொழி, இனி லத்தீன் வரி வடிவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் என அறிவித்ததுதான்.  பழைய வரி வடிவம் தடை செய்யப்பட்டது.  ஓட்டோமான் துருக்கியர்களின் மேல் நூற்றாண்டுகளாக கடுங்கோபம் கொண்டிருந்த மேற்கத்திய உலகம், மேற்கத்திய மோகம் கொண்ட , அத்தாதுர்க்கைக் கொண்டு தான் நினைத்ததை சாதித்துக் கொண்டது என்பது துருக்கியத் தோழியின் கருத்தாக இருந்தது.  இன்றைய துருக்கியத் தலைமுறைக்கு , ஓட்டோமான் துருக்கிய பண்பாட்டு ஆக்கங்களை அதன் உண்மையான வடிவில் வாசிக்கத் தெரியாது.மொழி மாற்றத்தில் தொலைந்தவைகளை விட வரிவடிவ மாற்றத்தில் தொலைந்தவைகள் தாம் ஏராளம்.

பாரசீகம் இஸ்லாமைத் தழுவிய பொழுது, அரேபிய வரி வடிவத்தையும் தழுவிக் கொண்டது.  உலகப் போர்களுக்குப் பின்னர் ஈரானில் லத்தீன் வரி வடிவத்திற்கு மாறிக்கொள்ளலாம் என கருத்தாக்கங்கள் எழுந்த பொழுது எல்லாம், இஸ்லாமிய அடையாளம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சி மாற்றப்படவில்லை.  உயிர் எழுத்துகளுக்கான சரியான வடிவங்கள் இல்லை என்ற குறைபாடு இருந்த பொழுதிலும் , இன்றைய தலைமுறை கடந்த காலத்துடன் எப்பொழுதும் தொடர்பில் இருக்கின்றது என்ற மகிழ்ச்சி பாரசீக மக்களுக்கு உண்டு. லத்தீன் வரி வடிவம் இன்றி சொந்த கிரேக்க வரி வடிவத்துடன் கிரீஸ் ஐரோப்பாவுடன் தான் இருக்கின்றது.

நூறாண்டுகளுக்கு முன்னர், வரி வடிவத்தை மாற்றுவதும் , இன்றையக் காலக் கட்டத்தில் மாற்றச் சொல்லுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. அன்று கல்வியறிவு பெற்றவர்களின் விழுக்காடு மிக மிகக்குறைவு. ஐரோப்பாவிற்கு நெருக்கமாக மாறவேண்டும் என்ற நிலையின் அடிப்படையில் துருக்கியில்  அன்று அந்த முடிவு எடுக்கப்பட்டது.  மெல்லத் தமிழினிச் சாகும் என்றக் கூற்றைப் பொய்ப்பிக்க திராவிட இயக்கங்கள், அதைத் தொடர்ந்து இளையராஜா,  தமிழ்த் தொலைக் காட்சி ஊடகங்கள்  தொடர்ந்து மறுமலர்ச்சிகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.  யுனிகோட் சாத்தியத்திற்குப் பின்னர் கன்னித் தமிழ் கணினித் தமிழாகவும் உருவெடுத்து உள்ளது.

சிலர் மலாய் மொழியை உதாரணம் காட்டுகின்றார்கள். இன்று லத்தீன் வரிவடிவங்களில் எழுதினாலும் அரேபிய வரி வடிவமும் புழக்கத்தில் உண்டு. மலாய் மொழி எடுப்பார் கைப்பிள்ளையாக , தொடர்ந்து வரி வடிவங்களை மாற்றிக் கொண்டே இருந்ததன் மூலம் பல வரலாற்றுச்  சுவடுகளைத் தொலைத்ததுதான் மிச்சம். அதில் தொலைந்துப் போனது மலாய் தீபகற்ப வரலாறு மட்டுமல்ல, தென்னிந்திய சோழர் வரலாறுகளும் தொடர்ந்த வரிவடிவ மாற்ற சுனாமிகளால் காணாமல் போனது.


இந்தோனேசியாவைப் பொறுத்த மட்டில், அது பலவேறு தேசிய இனக்குழுக்களை உள்ளடக்கிய பெரும் தீவுக் கூட்டம் அதனை ஒருங்கிணைக்க 'திணிக்கப்பட்ட மொழி' ஒன்றையும் கடன் வாங்கிய லத்தீன் வரி வடிவமும் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது.
இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்கி , லத்தின் வரி வடிவத்தை அதிகாரப் பூர்வம் ஆக்குதல் போன்றது ஒடுக்குதல் ஆகும் அது.

தமிழ்ப் பேசும் சமூகம் ஆங்கில மோகம் கொண்டு அலைந்துத் தமிழைத் தொலைக்கின்றது என்பதே பொய்யான வாதம்.  அப்படி தொலைப்பது உண்மை என்றால் எல்லா நாளிதழ்களும் வார இதழ்களும் தங்களது இணைய வடிவங்களைத் தமிழில் உருவாக்கி இருந்திராது.

லத்தீன் வரிவடிவத்தில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. ஜெயமோகன் என்பதை Jayamokan  என்று எழுதலாம்.  ஐரோப்பிய மொழிகளில் J  என்பதற்கு ஜெ எனவும் யெ எனவும் உச்சரிப்பு உண்டு.   சில சமயங்களில் உச்சரிக்கவும் படாது. வருங்காலத் தலைமுறை Jayamokan  என்ற பெயரைப் படிக்கையில்  J வை உச்சரிக்காமல்  விட்டு விட்டு ஆயா மூக்கன் அதன் பின்னர் ஆய் மூக்கன் எனவும் மாறிவிட வாய்ப்பு உண்டு.

காந்தி மற்றவர்களுக்கு போதிக்கும் முன்னர் சுயப் பரிசோதனை செய்து கொள்வாராம்.  இந்து ஞான மரபு கூட அதைத் தான் சொல்லுகின்றது எனப்படித்ததும் நினைவுக்கு வருகின்றது.  எழுத்துரு கட்டுரையாசிரியர் காந்தியத்தில் நம்பிக்கைக் கொண்டவர் என்றும் இந்து ஞான மரபை பரப்புபவர் என்ற வகையில் அவரே தனது அடுத்தப் புதினத்தை லத்தீன் வரி வடிவத்தில் வெளியிடலாம்.

அந்த 'எழுத்துரு' கட்டுரை ஆசிரியர் விவாத எண்ணங்களை விதைக்கின்றார் என சிலர் பூசி மெழுகிக் கொண்டு இருப்பதால்,  நாம்  விவாத நோக்கில் பார்த்தோம் என்றாலும், இன்னும் இருபது வருடங்களில் சீன மொழி தான் உலக மொழியாகப் போகின்றது.  தமிழை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்  என்ற நோக்கம் இருந்திருந்தால் அந்தக் கட்டுரையாசிரியர் சீன வரி வடிவங்களைத் தான் முன் மொழிந்து இருக்க வேண்டும்.

ஸ்னொவ்டன் அவர்களின் கலகத்திற்குப்பின்னர் மென் பொருள் என்றாலே ஐயப்பட வேண்டி இருக்கின்றது.  ஒரு வேளை அந்தக் கட்டுரையாசிரியருக்கு தமிழ்த் தட்டச்சு மென்பொருள்கள் மேல் சந்தேகம் வந்து இருக்கலாம்.  எதற்கு சின்ன எலி பெரிய எலிக்கு தனித்தனி பொந்துகள் , ஒரேப் பொந்தாக , தனித் தனி மென்பொருள் தேவையின்றி லத்தீன் வரி வடிவம் இருந்தால் Thamiz  Vazhka எனச் சொல்லிவிடலாம் எனக் கருதி எழுதி இருப்பதாகத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

லத்தீன் வரி வடிவம், தமிழைத் தொடர்ந்து மற்ற மொழிகளுக்கும் பின்பற்றப்படுமானால் ஒரு பயன் இருக்கின்றது.  மலையாளம் , சேரலத்து தமிழ் வழக்காக மீண்டும் தமிழுடன் சேரும். பின்னர் தொடர்ந்து துளு, கன்னடம் தெலுங்கு என இந்த வரி வடிவ மாற்றத்தால் தமிழுடன் சேர்ந்து தமிழ் செழுமையுறும் என கட்டுரையாசிரியர் நினைத்து இருந்து இருக்கலாம் என நாமும் நம் பங்கிற்கு ஒரு சப்பைக் கட்டு கட்டிவிடுவோம்.

குரூர அரசியல் நகைச்சுவையாக நீண்ட நாட்களுக்கு முன்னர் , நண்பர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. தமிழர்களை ஒடுக்க வன்முறையைக் கையில் எடுத்தற்குப் பதிலாக , தமிழுக்கு சமமான அந்தஸ்து உண்டு , ஆனால் தமிழ் சிங்கள வரிவடிவத்தில் எழுதப்பட வேண்டும் என உடன்படிக்கை செய்து கொண்டிருந்தால் ஈழத்தமிழர்கள் மலையாளிகளைப் போல தனிச் சமூகமாக மாறி இருந்து இருப்பார்கள்.  ஆனால் நம்பூதிரிகளைப் போல சிங்களவர்கள் புத்திசாலிகள் இல்லை என நண்பர்  சொன்னார்.

சரி முடிவாக, அடுத்தத் தலைமுறைக்கு தமிழைக் கொண்டுச் செல்லவேண்டும் என்றால், தமிழைப்படியுங்கள் , இணைப்பு மொழியாக ஆங்கிலம் / ஐரோப்பிய மொழிகளைப் படியுங்கள்.  இவற்றுடன் சீன வரி வடிவத்தையும் கற்றுக் கொள்ள மறவாதீர். எதிர்காலத்தில் இழப்பின்றி வரலாற்றை வரிமாற்றம் செய்யப் பயன்படும். சித்திர எழுத்து வரி வடிவம் தமிழுக்குப் புதிதல்ல .. 'சிந்துசமவெளி'யில் இருந்த தமிழுக்கும் சித்திர எழுத்துதான். 

Sunday, October 27, 2013

பேஸ்புக் - பொழுதுபோக்கு குட்டிக் கதை


காட்சி - 1

அம்மு :- 'யாருடா கார்த்தி அந்தப் பொண்ணு, அடிக்கடி உன் போஸ்ட் களுக்கு லைக் கமெண்ட் எல்லாம் போடுறா ?" 

கார்த்தி :- 'எந்த பொண்ணுடா அம்மாடி, நிறைய பொண்ணுங்க என் பக்கம் வருவாங்களே ' 

அம்மு :- "அதுதான் அபிராமி-அபிராமி அப்படின்னு ஒருத்தி வந்து கமெண்ட் போடுவாளே , அவள் யாரு? "

கார்த்தி :- "அதுவா , அந்தப் பொண்ணு என்னோட ரசிகை , எழுத்துக்கு மட்டும், நீ கண்டுக்காதே "


காட்சி - 2

அம்மு :- "ஏன்டா கார்த்தி, என்னை பிலாக் பண்ணிட்ட ... "

கார்த்தி :- "சும்மா நொய் நொய் நு கேள்வி கேட்டுட்டு இருந்தீன்னா அப்படித்தான் "

அம்மு :- "அப்போ சரி, நீ உன் உன் கடலை கேர்ல்ஸ் கூட happy ya இரு, நான் பேஸ்புகில் இருந்தால் தானே கேள்வி எல்லாம் வருது, நானே டி - ஆக்டிவேட் செஞ்சுட்டு பேஸ் புக்கு விட்டுட்டு போய்டுறேன் "
காட்சி - 3

கார்த்தி :- "தங்கம்முலு , நான் பேஸ்புக்கில ஒரு ஆர்டிக்கிள் போட்டு இருக்கேன் பாரு ... செம கைத்தட்டு கிடைச்சிட்டு இருக்கு நான் உன்னை அன்-பிலாக் பண்றேன் .. நீ பாரேன் "

அம்மு:- ",போடா நாயே ... என்னை நீ பிலாக் பண்ண பிறகு டி ஆக்டிவேட் பண்ணிட்டேன்"

கார்த்தி :- " சரி, நான் என்னோட வேற ஒரு ஐடி தரேன்.. அதுல பாரு "

அம்மு :- "சரி சொல்லித் தொலை ..."

கார்த்தி :- " abhirami-abhirami@*****.com பாஸ்வேர்ட் உன்னோட பேரு தான் "

Saturday, October 26, 2013

Languages often teach more history than the documented history


சென்னைத்தமிழ், நெல்லைத்தமிழ், தஞ்சைத்தமிழ் போல , சேரளத் தமிழான மலையாளமும் தமிழின் ஒரு பேச்சு வழக்கு என அறிந்திராத காலம் அது. எகத்தாளம் , கேலி , நக்கல் எல்லாம் நிரம்பிய இருபதுகளின் ஆரம்ப நாட்கள். ஆங்கிலத்தில் மட்டும் பேசிக்கொண்டிருந்த மலையாளி ஒருவர் முன்னிலையில் அவரைப்பற்றி தமிழில் இன்னொரு நண்பரிடம் ஏதோ மென்மையான நக்கல் ஒன்றை அடித்துவிட மலையாள நண்பர் சில நாட்கள் என்னிடம் பேசவில்லை. பின்பு ஒரு நாள் அவர் தான் சொன்னார் , மலையாளிக்கு தமிழ் நன்றாக விளங்கும் , விளையாட்டுக்குக் கூட மலையாளிகளைக் கிண்டல் செய்ய அவர்களின் முன்னால் , அவர்களுக்குப் புரியாது என நினைத்துக் கொண்டு, பிறரிடம் தமிழில் கிண்டல் செய்து விடாதே என்று அறிவுறுத்தினார். அந்த மலையாள நண்பருக்கு பெயரில் எந்தவிதமான சாதிப் பின்னொட்டு இல்லை என்பது ஓர் உபரித் தகவல்.

மேற்சொன்ன அனுபவம் மலையாளத்திற்கு என்றால், பின்வரும் சம்பவம் தெலுங்கு சம்பந்தப்பட்டது. சுவீடனில் படிக்கையில் , ஆரம்ப காலத்தில் தெலுங்கானா பகுதியைச் சார்ந்த தெலுங்கு மாணவர்கள் என் வீட்டில் சில காலம் இருந்தார்கள் அவர்களுடன் பேசிப் பேசி தெலுங்கானா தெலுங்கு கொஞ்சம் புரிபட ஆரம்பித்தது. ஒரு நாள் இரவில் நான் அரைத்தூக்கத்திற்கு சென்ற பின்னர் , அவர்களின் உரையாடல் ஆரம்பித்தது. அதில் ஒரு நண்பன் சுத்த தெலுங்கில் பேசு, இவனுக்கு தெலுங்கானா பேச்சு வழக்குப் புரியும் என குறிப்பு கொடுக்க சுத்தத் தெலுங்கில் பேச ஆரம்பித்தார்கள் . அவர்கள் பரிசுத்த தெலுங்கில் , அவர்கள் உடனடியாக வீட்டைக் காலி செய்ய விரும்புகின்றார்கள், புது வீடு அவர்களுக்கு குறைந்த வாடகையில் வேறு பகுதியில் கிடைத்து இருக்கின்றது. உடனடியாக வீட்டைக் காலி செய்தால் , தனி ஒருவனாக முழு வாடகை கொடுக்க எனக்கு சிரமம் இருக்குமே எனக் கவலை இல்லாமல், அவர்களின் வசதியைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டு இருந்தார்கள். இரண்டு நாட்கள் கழித்து சொன்னார்கள். இந்த விஷயம் 'ஏற்கனவே தெரியுமே' என்றேன். எப்படி என்றக் கேள்விக்கு,
சுத்தத் தெலுங்கு , தெலுங்கானத் தெலுங்கை விட தமிழுக்கு மிக நெருக்கமாக இருக்கும், மேலும் தெலுங்கில் இருக்கும் பண்டைய சொற்கள் தமிழின் இலக்கியச் சொற்கள். , தமிழின் குழந்தை தெலுங்கு என என் தமிழரசியலையும் அவர்களிடம் விதைத்து விட்டு அவர்களை சுமுகமாக வழியனுப்பி வைத்தேன்.

சுவீடனில் மற்றும் ஒரு முறை , சிங்கப்பூர் சீனாக் காரன் , பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூரியா வரிசையாக பூக்களின் பெயர்களைச் சொல்லுவதைப் போல, பல தமிழ்க்கெட்ட வார்த்தைகளை சொன்னான். எப்படி சீனாக்காரர்கள் தமிழில் கிண்டலடிக்கப்டுவார்கள் என்பதையும் சொன்னான். இவை அனைத்தும் அவனது சிங்கப்பூர் தமிழ் நண்பர்களிடம் சிறு வயதில் இருந்து கற்று கொண்டதாம். அன்றில் இருந்து சீன ஆட்களை மறந்தும் கூட கிண்டலடிப்பதில்லை.

இப்படி திராவிட மொழி அனுபவங்கள் ஒரு வகை என்றால் , இத்தாலியில் வேறு ஒருவகையில் இருந்தது. ரோமை சுற்றிப்பார்க்க வந்திருந்த எனது எகிப்திய நண்பர்களை , என் இத்தாலிய - சிசிலி நண்பனிடம் அறிமுகப் படுத்தினேன். எகிப்திய நண்பர்கள் அவர்களுக்குள் அவ்வப்பொழுது அரபியில் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தனர். இது சகஜமான ஒன்று என்பதால் நான் கண்டு கொள்ளவில்லை. கொண்டாட்ட ஒன்று கூடல்களில் இந்தி'யர்கள் அவர்கள் மொழியில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது , நானும் என் தமிழ் நண்பர்களும் தமிழில் பேசிக் கொண்டு இருப்போம். ஆனால் என் இத்தாலிய நண்பனின் முகம் அடிக்கடி கடுமையாக மாறிக்கொண்டு இருந்தது. பின்னர் , இத்தாலிய நண்பனிடம் 'அவர்கள் அரபியில் பேசிக் கொண்டு இருந்ததால் நீ கோபம் ஆகிவிட்டாயா? ' எனக் கேட்டதற்கு
"கோபம் அவர்கள் அரபியில் பேசியதற்காக இல்லை, அரபியில் அவர்கள் இத்தாலியைப் பற்றியும் என்னையும் கேலி செய்து கொண்டு இருந்தார்கள். எனக்கு அரபி தெரியாது என்றபோதிலும் , அவர்கள் கேலி செய்யப் பயன்படுத்திய அரபி வார்த்தைகள் அப்படியே இன்றும் சிசிலியில் புழக்கத்தில் உண்டு, சிசிலித் தீவு , வரலாற்று ரீதியாக ரோமப் பேரரசு / இத்தாலிக்கு எந்த அளவிற்கு நெருக்கமோ அதே அளவிற்கு எகிப்திற்கும் நெருக்கம். அரபிக் கலப்பு என்பது  சிசிலியின் இத்தாலிய பேச்சு வழக்கில் சாதாரணமான ஒன்று " என்றான்.

Tuesday, October 22, 2013

தங்கச் சாமியார்


எனது முதன்மை சீடனுக்காகக் காத்து இருக்கின்றேன். எனது ஆசிரமத்தில் இருந்து 50 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் பாழடைந்த சோழர்கள் கால மண்டபத்தில் அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டு இருக்கின்றது. அங்கிருந்து எதிர்பார்த்து இருக்கும் நல்ல செய்தி ஒன்றிற்காகக் காத்து இருக்கின்றேன். 

முப்பது வயதில் என்னளவிற்கு யாரேனும் சாதிக்க முடியுமா எனத் தெரியவில்லை. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து தட்டுத் தடுமாறி பொறியியல் படித்து சில நாட்கள் துறை சார்ந்து வேலைப் பார்த்து , பின்னர் பக்கத்து வீட்டு சித்த மருத்துவரிடம் கொஞ்சம் சித்த மருத்துவம் கற்றுக்கொண்டு ஊரில் ஒரு சித்த மருத்துவக்கடை ஒன்றைப் போட்டது வரை சுமாராகத்தான் போய்க் கொண்டு இருந்தது. ஒரு நல்ல நாளில், சித்தத்தில் கொஞ்சம் காவி கலந்து பகவத் கீதைல என்ன சொல்லியிருக்கிறது என்றால் என பேச ஆரம்பித்து மருந்துகள் கொடுக்க ஆரம்பித்த பின்னர் கூட்டம் கூடியது. கொஞ்சும் தமிழ், நிறைய ஆங்கிலம், கொஞ்சம் வடமொழி என பேசியதால் மக்களுக்கு அபிமானம் கூடிக் கொண்டே போனது.

மன நிம்மதியற்று வருபவர்களுக்கு மருந்து என வெல்லசூரணத்துடன் போதைப்பொருளையும் சேர்த்துக் கொடுக்க ஆரம்பித்த பின்னர் வெளிநாட்டுக் காரர்களும் என் சீடர்களில் இடம் பிடித்தனர் ஆம்ஸடர்டாம் நகருக்கு அடுத்தப்படியாக என் குட்டி ஆசிரமம் விசயத்திற்கு பிரபலம்.

மற்ற வணிகத்தில் வடநாட்டவர்கள் கலக்கினாலும் இந்த ஆன்மிகத்தில் தென்னிந்திய சாமியார்கள் தான் பேரரசர்கள் . என்னைப் போல நிறைய தமிழ்ச் சாமியார்கள் பெருகிவிட்டதால் நான் பெற்ற இடத்தை இழக்காமல் இருக்க , ஆன்மிக வியாபரத்திற்கு சம்பந்தம் இல்லாத பிரபாகரன் , பெரியார் என பேசி எல்லாம் கூட்டம் சேர்க்க வேண்டியதாக இருக்கின்றது. ஆன்மிகத்தையும் அரசியலையும் இணைக்கும் போராளிகளே எனது சீடர்கள் என நான் அடிக்கடி சொல்லுவதுண்டு.

ஒரு நாள் ஏதேச்சையாக , தொலைக்காட்சியில் குறும்படம் ஒன்றைப் பார்க்க, அதில் கதைப்படி ஒரு சாமியார் பண்டைய அரசனின் கோவிலில் தங்கம் இருப்பதாக சொல்லுவார். அதையே என் கனவாக மாற்றி , சோழர் மண்டபத்தில் தங்கப் புதையல் எனச் சொல்லிவிட்டேன். இரண்டு நாட்களாக , நான் தான் செய்திகளின் செல்லப்பிள்ளை. அகழ்வாராய்ச்சி நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் ஒருவர் என் சூரணத்திற்கு கட்டுப்பட்டவர் என்பதால் கனவை மெய்ப்பிக்கத் தோண்டிக் கொண்டு இருக்கின்றார். என் கனவு என் உரிமை என, அவருக்கு முன்னரே என் சீடனை அனுப்பி 150 கிலோ தங்கத்தை அங்கேப் புதைக்க சொல்லி இருந்தேன். தங்கம் கிடைக்கும் ... என் புகழ் மேலும் பரவும் ... என சீடனுக்காகக் காத்து இருக்கின்றேன். அவனோ கைப்பேசி அழைப்பையும் எடுக்க மாட்டேன் என்கின்றான். ஒருவேளை தங்கத்தைப் புதைக்காமல் எடுத்துக் கொண்டு ஓடி இருப்பானோ !!

ஒரு நிமிடம் இருங்கள், அகழ்வாராய்ச்சி நிபுணரிடம் இருந்து அழைப்பு !!!

"ஹல்லோ"

Tuesday, October 15, 2013

புக்பேஸ் - சிறுகதை

"இப்படியே போனால் இன்னும் இரு வருடங்களில் இந்தியா வல்லரசு ஆகி விடும் , ஏதாவது செய்து அவர்களை பிரச்சினைக்குட்படுத்த வேண்டும் , உங்கள் யோசனைகளை சொல்லலாம்" என அமெரிக்க - ஐரோப்பிய - சீன  கூட்டு அமைப்பின் தலைவர் கூடியிருந்த உயர்மட்ட உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்

"வழமைப்போல , சாதி கலவரம்  மத கலவரங்களைத் தூண்டி விட்டு விடுவோமா " என்றாள் சீனாக்காரி

"பல வருடங்களுக்கு முன்பு அது மிகவும் எளிது , அன்று தமிழ்நாட்டில் மட்டும் பெரியாரியத்தினால் இருந்த சகிப்புத் தன்மை , இன்று  நாடு முழுவதும் இருக்கின்றது.... நாடே பெரியார் பெயரை உச்சரிப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை "  என்றான் சுவீடனின் ஆண்டர்சன்

"இந்தியாவின் மீது படை எடுக்கலாமா? "

"வேண்டாம்... அது மூன்றாம் உலகப் போரில் கொண்டு வந்து விட்டு விடும்.  நாம் விற்ற ஆயுதங்களாலேயே இன்று அவர்கள் பலமாக இருக்கின்றார்கள்  கூடங்குளம் அணு உலை கூட சிறப்பாக செயற்பட்டு கொண்டு இருக்கின்றது"

"மருத்துவ ரீதியாக, ஏதேனும் நோய்களை உருவாக்கி விடலாமா "

"மூட நம்பிக்கைகளை ஒழித்த கையோடு , போலி மருத்துவம் எல்லாம் ஒழித்து, தடுப்பூசிகள், சிறப்பான அறிவியல்  மருத்துவத்தினால் பாதுகாப்பான நம்மை விட சுகாதார  வளமான சமுதாயமாக இருக்கின்றது ..  " என்றான் ஒரு ஜெர்மானியன்.

கடைசியாக  "என்னிடம் கத்தியின்றி இரத்தமின்றி இந்தியாவில் ஒரே இரவில் பிரச்சினைகளைக் கொண்டு வர ஒரு வழி இருக்கின்றது "  என சொல்லியபடி எழுந்தான் அமெரிக்காவின் ஆரஞ்சுபிட்டர்.

ஆவல் மேலிட அவனை எல்லோரும் பார்க்க , ஆரஞ்சுபிட்டர் தொடர்ந்தான்.

"என்னுடைய புக்பேஸ் சமூக இணைய தளத்தில்  இந்தியாவிற்கு மட்டும் பயனாளர்களுக்கு தகவல் பாதுகாப்பு பாக்கியங்களை நீக்கி விடுகின்றேன் "

"புரியவில்லை " என்பது போல அனைவரும் ஒரே சேர புருவம் உயர்த்தினர்

"புக்பேஸ் இந்திய பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் சக இந்திய பயன்பாட்டாளர்களின் தனித் தகவல்கள் பரிமாற்றங்கள், தனி அரட்டை பரிமாற்றங்கள் , புகைப்படங்கள் இவற்றை எந்தவித கட்டுப்பாடு இன்றி   யார் வேண்டுமானாலும் யாருடையதை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ள முடியும்,   இந்தியர்கள் யாரும்  தகவல்களை அழிக்கவோ மாற்றவோ முடியாது , மேலும்  அவர்கள் கணக்கை முடக்கவோ தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ முடியாது.. ஒவ்வொரு இந்தியரின்  ரகசியமும் எல்லா இந்தியர்களுக்கும் சொந்தம்"

உயர் மட்ட கூட்டம் வெற்றிச் சிரிப்புடன் கலைந்தது.  அடுத்த சில நாட்களில் இந்தியா பற்றி  எரிந்தது.

Thursday, July 04, 2013

ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் - சிறுகதை

மண்டப எழுத்தாளர் "சிக்ஸ்த் சென்ஸ் " எழுதி அனுப்பிய ஒரு சிறுகதை 

---
ஸ்மார்ட்போன் அப்ளிகெஷன்ஸ் உருவாக்குகின்ற நிறுவனங்கள் எல்லாம் ஒன்று கூடி "இந்தியாவில் , குறிப்பாக தமிழர்கள் , ஏன் அதிக அளவில் காசு கொடுத்து கையடக்க கணினிகளில் மென்பொருள்களை தரவிறக்கம் செய்வதில்லை ... அதனால் அவர்களை கவரும் வகையில் ஓர் அப்ளிகேஷனை உருவாக்க வேண்டும், அதன் மூலம் மிகுந்த லாபம் வர வேண்டும் " என பலத்த விவாதம் செய்தார்களாம்.

நல்ல ஐடியா வைத் தருபவர்களுக்கு மிகுந்த சன்மானம் உண்டு என அவரவர் நிறுவன ஊழியர்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டது

கிரிக்கெட், மதம், அரசியல், தமிழ்த் தேசியம் , சினிமா என பலத் தளங்களில் ஐடியா வந்தன. ஆனால் வந்த ஐடியாக்களில் ஒன்று மட்டும் கேலி பேசப்பட்டது . அது அடுத்தவரின் ஜாதி அறியும் அப்ப்ளிகேஷன்.

அடுத்தவரின் பெயர், ஊர், தாத்த பெயர், தாய் மொழி, இட ஒதுக்கீடு பிடிக்குமா பிடிக்காதா, கீழ் கண்டவர்களின் பிடித்த தலைவர் யார் கீழ் கண்டவர்களில் பிடிக்காத தலைவர் யார், அறிய வேண்டியவர் அடிக்கடி பேசும் வழக்கு சொற்கள் , கடைசியாக ஜாதி அறிய வேண்டுபவரின் சமூக வலைத் தள முகவரி, என இவற்றை எல்லாம் கொண்டு உள்ளீட செய்யப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்து ஜாதி அறியும் அல்காரிதம் எழுதப்பட்டு, அப்ளிகேஷன் உருவாக்கப்படும் என்பதாக இருந்தது.

பெரியாரின் திராவிட பூமியில் இது சாத்தியமே இல்லை, இதை தமிழ்நாட்டில் குப்பைக் கூடைக்குள் வீசி விடுவார்கள் என்றனர் சிலர்

இருந்தாலும் போனால் போகிறது எனறு ஜாதி அப்ளிகெஷனும் ஏற்றுக் கொள்ளப் பட்டது

கலைஞர் சார்ந்த அரசியல் அப்ளிகேஷன் , சீமான் சார்ந்த தமிழ்த் தேசிய அப்ளிகேஷன் , சூப்பர் கிங்ஸ் சம்பந்தப் பட்ட அப்ளிகேஷன் எல்லாவற்றையும் காட்டிலும் ஜாதி அப்ளிகேஷன் செம சக்சஸ் .அவற்றை வாங்கியவர்களில் நிறைய பேர் , ஜாதி அப்ளிகேஷனையும் சேர்த்தே வாங்கினர்

புதிதாக காதலிப்பவர்கள், வீடு வாடகைக்கு விடுபவர்கள், அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் கூட்டுபவர்கள் , கம்பெனிகளுக்கு வேலைக்கு நியமனம் செய்பவர்கள் என கோடிக்கணக்கில் அந்த ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் டவுன் லோட் செய்தனர் . அப்ளிகேஷன் எழுதியவர் பணக்காரர் ஆனார். நிறுவனம் மகிழ்ந்தது. இதை ஆரம்பித்தில் நிராகரித்தவர்கள் துறவறம் போனார்கள். எல்லவாற்றையும் பெரியார் பார்த்துக் கொண்டு கோவிலில் சிலையாக சிரித்துக் கொண்டு இருந்தார்.

Friday, October 26, 2012

எக்ஸ் ஒய் இசட் - சிறுகதை


கொரடாச்சேரி இதுதான் என் சொந்த ஊர் என்று யாரிடமாவது சொன்னால் எங்கள் குடும்பத்தினருக்கு பிடிக்காது. “பில்டிங் காண்டிராக்டர்” அப்படி என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்வதைப்போல, விஸ்வநாதபுரம், பழவனக்குடி என அருகில் இருக்கும் பெயரில் “சேரி” இல்லாத கிராமங்களை சுட்டி, மேட்டுக்குடிகளாக காட்டிக்கொள்ள எத்தனிக்கும்
சூழலில் வளர்ந்தவன் நான்.

ஆண்டுக்கொருமுறை ஊருக்குப்போகும் பொழுதெல்லாம், என் பெரியப்பா வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் எக் ஒய் இசட் வீட்டைத் தாண்டும்பொழுது, என் சொந்தக் காரர்கள் எல்லாம் எக்ஸ் ஒய் இசட் இப்பொவெல்லாம் முழுப்பைத்தியமாவே ஆயிட்டான் என்று சொல்லுவார்கள்.

எக்ஸ் ஒய் இசட்டின் பெயர் அதுவல்ல, அது ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியின் பெருமைப் பெயரைச் சுட்டும் பெயர். அவன் அதைச் சார்ந்தவன் என்பதால், அந்தப் பெயரைவைத்துத்தான் அவனை அழைப்பார்கள்.
கருத்துதான் முக்கியம் என்பதால், அவர் எந்த சாதியைச் சேர்ந்தவன் என்ன என்பதெல்லாம் அவசியமில்லை என்பதால் எக்ஸ் ஒய் இசட் என்ற குறியீடு.

 இதே எக்ஸ் ஒய் இசட் சாதியைச் சேர்ந்தவர்கள் , டெல்டா மாவட்டங்களின் வேறு சிலப்பகுதிகளில் ஏபிசி எனவும் கே எல் எம் எனவும் பட்டம் வைத்துக்கொள்வார்கள். நான் கூட எக்ஸ் ஒய் இசட் என்றாலும் , என் அம்மா வழி ஏபிசி எனப்பட்டம் வைத்துக்கொண்டதால் கொஞ்சம் உயர்குடி ஆகிவிட்டோம் என்ற சிறிய பெருமையும் உண்டு.

சுற்றமேத் திட்டினாலும், என் அப்பா மட்டும் எக்ஸ் ஒய் இசட்டைப் பார்க்கும்பொழுதெல்லாம் காசு கொடுப்பார்.

”எதுக்குமே அசராதவனை ஒரு சின்ன விசயத்தில அசைச்சிட்டானுங்க,, நிஜமான போராளி ”  என்று பைத்தியக்காரனைப் பாராட்டும்பொழுது எல்லாம் என் அப்பாவின் மனநிலையின்  மேலேயே சந்தேகம் வரும்.

எக் ஒய் இசட் டிற்கு இப்பொழுது ஒரு 80 வயது இருக்கும்.  அந்தக் காலத்தில் எக்ஸ் ஒய் இசட் , பெரியாரின் கருத்துக்களில் தீவிர ஈடுபாட்டில் இருந்தவராம்.
 ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில்,  தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்படும் நபர்கள் அதிகம் இருக்கும்  பொதுவுடமைக் கட்சிக்கூட்டங்களிலும் பங்கேற்றதால், எக்ஸ் ஒய் இசட், ஏபிசி, கே எல் எம் என அனைத்துக்கூட்டத்தினரும் அவரின் மேல் கடுங்கோபத்தில் இருந்தனாரம்.

 எக்ஸ் ஒய் இசட்டோட பழைய நண்பர்கள் ரங்கநாதன் , சுவாமிநாதன்
தட்சிணாமூர்த்தி போன்றவர்களுக்கு கூடப்பிடிக்கவில்லையாம். அவரோட சொந்த அண்ணன் சொத்தில் எந்தப் பங்கும் கொடுக்காத பொழுதும்
கவலைப்படாமல் களப்பணி செய்தார் என்று என் அப்பா எக்ஸ் ஒய் இசட்டின் பெருமைப்பாடுவார்.

ஒருதடவை வெட்டாற்றுப்பாலத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யக்கூடப் பார்த்தார்களாம், அப்பொழுது கூட அசரவில்லை.
அடி வாங்கியபின்னர் அவரின் வேகம் அதிகமாகத்தான் இருந்ததாம்.

அப்பா, எக்ஸ் ஒய் இசட்டை பற்றி சொல்லும்பொழுதெல்லாம், என் அலுவலகத்தில் இருக்கும் பசுபதி தான் நினைவுக்கு வருவான்.
எங்கு யாரு ஒடுக்கப்பட்டாலும், அவனுக்கு தூக்கம் வராது. இந்த சமுதாயத்தை மாற்ற ஏதாவது செய்யவேண்டும் சொல்லிக்கொண்டும்
அவனால் முடிந்ததை செய்து கொண்டும் இருப்பான். அவனுடைய கணினியில் அம்பேத்கார், பெரியார், விபிசிங் படங்கள் வைத்திருப்பது
எனது மேலாளர்கள் சிலருக்குப் பிடிக்காது. நேர்மையானவன், என் வீட்டிற்கு கூட வந்து இருக்கின்றான், என் அப்பாவிற்கு அவனது சிந்தனைகள் பிடிக்கும், அவனையும் பிடிக்கும். வேலையில் எள் என்றால் எண்ணெய் ஆக இருப்பான்.
ஆனாலும், அலுவலக நேரத்தின் பாதியில் இணையம் மேயும் எனக்கு கிடைக்கும் சம்பள உயர்வில்  அவனுக்கு கால்வாசி கூட கிடைக்காது. எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும் என எனது மேலாளர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு இருக்கின்றேன்.

திரும்ப எக்ஸ் ஒய் இசட்டிற்கு வருவோம், ஏதோ ஒரு நாள் ரங்கநாதன், சுவாமிநாதன், தட்சினாமூர்த்தி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாய் வாழும் தெரு வழியாக  நமது கதையின் நாயகன் வர, தெருமுனையிலேயே , அந்தத் தெருவில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நொங்கு நொங்கு என நொங்கிவிட்டனராம். அந்தப் பிரச்சினைக்குப் பிறகு அடங்கியவர்தானாம், பைத்தியம் மாதிரி உலாவுவாராம், யாராவது சோறு போட்டால் சாப்பிட்டு, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை கழித்துவிட்டார்.

”சரியான நேரத்தில காயடிச்சிட்டானுங்க,  வேரில வெந்நீரை எப்போ ஊத்தனும்னு அவனுங்களுக்குத் தெரியும்”

”எவனுங்கப்பா ? “ என இது வரை அப்பாவிடம் கேட்டதில்லை.

காலையில் எழுந்தோமா, வழுவழுப்பான தாளில் வரும் ஆங்கில தமிழ் நாளிதழ்களைப் படித்தோமா, பேஸ்புக்கில் இளையராஜா பாட்டைப் போட்டுட்டு, பங்கு வணிகம் பார்த்துட்டு, மிஞ்சிய நேரத்தில் கொஞ்சம் மென் நிரலி அடித்து வீட்டு, மஞ்சள் வண்ணம் பூசிய வீட்டில் என் அம்முவை கட்டியணைத்துக் கொண்டு தூங்குவதுதான் என் வழமையான வாழ்க்கை.

விடுப்பு முடிந்து அலுவலகம் வந்து பின்னர் தெரிந்தது, பசுபதியின் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு  அவனை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள் என்று. என்ன பிரச்சினை என்று விசாரித்ததில் , அவனது திட்டக்குழுவில் இருந்த  ஒரு பெண்ணை படுக்கைக்கு பகிரங்கமாக அழைத்தானாம்.

அவனின் வேலை நீக்க செய்தி , நமிபீயாவில் புயலடித்து நான்கு பேர் பலி என்பது எப்படி இருக்குமோ அந்த வகையில்தான் எனக்கு சாதாரணமாக இருந்தது. பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அடுத்த வருடம் அமெரிக்கா போனேன். ஒரு வருடம் இருந்தேன். புறநகர்ப்பகுதியில் பங்களா கட்டினேன். ஒரு நாள் அப்பாவுடன் காரில் செல்லும்பொழுது,  ஒரு தெருமுனை மீட்டிங்கில் ஏதோ ஒரு வாழ்வாதார பிரச்சினைக்காகப் பசுபதி பேசிக்கொண்டிருந்தான்.

“தீர்க்கமாக தெளிவாப் பேசுறான், அப்ப மாதிரி, இப்ப எல்லோரையும் எக்ஸ் ஒய் இசட்டுக்குப் பண்ண மாதிரி ஈசியா நசுக்கிட  முடியாது”

என் அப்பா சொன்னதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.




Saturday, November 20, 2010

கல்கத்தா விஸ்வநாதன் - மும்மொழிகள் , பலப்பரிமாணங்கள்




தமிழ் திரைப்படங்களில் நாடகத்தனமாக மேல்தட்டு மக்களின் உடல் மொழிகளை திரையில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில், ஆங்கில உச்சரிப்புகளாகட்டும் , மேனாட்டு பாவனைகளை வெளிப்படுத்துவதாகட்டும் இருவர் தனித்து நினைவுக்கு வருவார்கள் ஒருவர் வீணை எஸ்.பாலசந்தர். மற்றொருவர் கல்கத்தா விஸ்வநாதன் என தமிழ்ப்பட உலகில் அறியப்படும் பேராசிரியர் என்.விஸ்வநாதன். திரையுலகில் இருந்தாலும் திரையுலகிற்கு அப்பாற்பட்டு வேறு துறைகளில் பிரகாசித்தவர்கள், அதுவும் தமிழ்த்திரை வரலாற்றில் மிகவும் குறைவு. சமீபத்தில் 90 களில் கனவு நாயகனாக இருந்த அரவிந்த்சுவாமி பின்னாளில் தகவல் தொழில்நுட்ப துறையில் பிரகாசித்தார். பணக்காரத் தோரணை நடிப்பில் கல்கத்தா விஸ்வநாதனுக்கு முன்னோடியான எஸ்.பாலசந்தர் வீணை மீட்டுவதில் சக்கரவர்த்தியாய் ஆகி, வீணை எஸ்.பாலசந்தர் என்ற அடையாளத்துடனேயே இன்று நினைவு கூறப்படுகிறார். கல்கத்தா விஸ்வநாதன் பிரகாசித்ததோ கல்வித்துறையில், ஆம் கல்கத்தாவின் நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித சேவியர் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர் என்.விஸ்வநாதன். லக்‌ஷ்மி மித்தல் புனித சேவியர் கல்லூரியில் படித்தபொழுது அவரின் ஆங்கில ஆசிரியர் என்.விஸ்வநாதன் தானாம்.



திராவிடமொழி திரைப்படங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் பிரபலமாய் இருப்பதில் பெரிய வியப்பில்லை. உதாரணமாக எஸ்.வி.ரங்காராவ் தெலுங்கிலும் மதிக்கப்படும் அளவிற்கு தமிழிலும் அறியப்படுகிறார். மலையாளத்தைபொருத்தவரை பிரேம் நசீர், பின்னர் மம்மூட்டி, இன்று பிரித்விராஜ். கன்னட மொழி திரைப்படங்களை எடுத்துக் கொண்டோமானால் ரமேஷ் அரவிந்த் , மோகன் (கன்னடத்தில் கோகிலா மோகன் என அறியப்படுகிறார்) ஆகிய ஒரு சிலர்தான். ஆனால் கிட்டத்தட்ட இரு வேறு துருவங்களாக இருக்கும் வங்காள மொழி திரைத்துறை, தமிழ் திரையுலகம் ஆகியன இரண்டிலும் பிரபலமாக இருந்தவர் என்.விஸ்வநாதன்.

”அந்தநாளில்” இவர் நடித்து இருந்தால் கல்கத்தா விஸ்வநாதனாக இல்லாமல் வேலூர் விஸ்வநாதனாகவே தமிழில் நிரந்தர இடம் பிடித்து இருப்பார். முதலில் தவறிய திரை அறிமுகம் மும்மொழிப்படமான “ரத்ன தீபம்” படத்தில் தேவகி குமார் போஸ் என்பவரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார்.



வேலூரில் பிறந்த இவர், கல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்ததனால் புனித சேவியர் கல்லூரியில் ஆங்கிலம் பயின்று கல்வியாளராய் ஆகி கல்கத்தா விஸ்வநாதனாய் தமிழ் உலகிற்கு வந்தார். இவரின் பெயர் தெரியாதவர்கள் கூட மூன்று முடிச்சில் கிட்டத்தட்ட மூன்றாவது கதாநாயகனாக , ரஜினிகாந்தின் அப்பாவாக ஸ்ரீதேவியின் கணவனாக நடித்திருப்பது நினைவிருக்கும். மூன்று முடிச்சு படத்தில் நடித்திருப்பவர்களின் பெயர்கள் போடப்படும்பொழுது பேராசிரியர்.N.விஸ்வநாத் எனக்குறிப்பிடப்படுகிறது.




ரஜினிகாந்தின் சிகரெட் பிடிக்கும் முறை எத்தனை ஸ்டைலாக இருக்கிறதோ , அத்தனை ஸ்டைலாக இவரது பைப் சிகரெட் பிடிக்கும் விதமும் இருக்கும். தமிழில் இவர் கடைசியாக பாபா திரைப்படத்திலும் ரஜினிகாந்தின் தந்தையாக நடித்தார்.



நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரான விஸ்வநாதன், சிவாஜி கணேசனுடன் வெள்ளைரோஜா, கவரிமான் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.பாலுமகேந்திராவின் மூடுபனியிலும் விஸ்வநாதன் நடித்துள்ளார். அரபிந்த் கோஷு வங்காளத்திற்கும் தமிழகத்திற்கும் இணைப்புப் பாலம் ஆனதைப்போல, தமிழ் கலையுலகிற்கும் வங்காள கலையுலகிற்குமான சந்திப்புப் புள்ளி ஆனார். வங்காள நாடக, திரையுலகில் பெரிதும் மதிக்கப்படும் நடிகராக மட்டும் அல்லாமல் , நாடக , திரைப்பட கதாசிரியராகவும் விளங்கிய விஸ்வநாதனின் மகன் அசோக் விஸ்வநாதன் வங்காள மொழியில் குறிப்பிடத்தகுந்த முன்னணி இயக்குனர்களில் ஒருவர்.





சத்யஜித்ரே, மிருனாள் சென், பஹாரி சன்யால், உத்பல் தத், சோபி பிஸ்வாஸ் ஆகியோரின் விருப்பத் தேர்வு நடிகராக விளங்கிய விஸ்வநாதன் , சத்யஜித் ரேயின் முதல் வண்ணப்படமும் ,சத்யஜித் ரேயின் முதல் சொந்த கதை, திரைக்கதை முயற்சியுமான “கஞ்சன்ஜங்கா” திரைப்படத்தில் மேனாட்டில் கல்வி கற்ற கனவானாக நடித்த பானர்ஜி கதாபத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அவரின் அளவான நடிப்பைக் கீழ்காணும் காணொளியில் காணலாம்.



பல்கலை கழக வளாகத்தில், பிரிட்டிஷ் உச்சரிப்பு, நடை உடை பாவனைகளுக்காகவே வெகுவாக மாணவர்களால் விரும்பப்பட்டதுடன் மட்டுமல்லாமல், கல்வித்துறை, நாடகம், இரு வேறு திரையுலகங்கள் என தனது தடத்தை திடமாகப் பதித்த பேராசிரியர் என்.விஸ்வநாதன் 17, நவம்பர் 2010 அன்று மாரடைப்பால் காலமானர். அன்னாருக்கு வயது 81. கல்கத்தா விஸ்வநாதன் கடைசியாக நடித்தப்படம் கும்ஸுதா , மகன் அசோக் விஸ்வநாதனின் இயக்கத்தில் இந்தி மொழியில் வெளிவந்த இப்படத்திற்கு கதை, திரைக்கதை திரு.விஸ்வநாதன். கும்ஸுதா என்பதன் தமிழாக்கம் இழப்பு. பேராசிரியர் விஸ்வநாதனின் மறைவு நிச்சயம் வங்காள நாடக, திரையுலகிற்கு மட்டும் அல்ல, தமிழ் திரைப்பட உலகிற்கும் ஒரு இழப்புதான். அவரின் ஆன்மா நிம்மதி அடையட்டும்.

Tuesday, April 27, 2010

சுவிடீஷ் (Svenska) மொழி - சில குறிப்புகள்

சுவீடனில் தாய் மொழியாகவும் பின்லாந்து நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகவும் இருக்கும் சுவிடீஷ் (ஸ்விடீஷ் - Swedish) மொழி வடக்கு ஜெர்மானியக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும்.ஆங்கிலத்தில் சுவிடீஷ் என அழைக்கப்பட்டாலும் சுவென்ஸ்கா(ஸ்வென்ஸ்கா - Svenska) என்பதே இந்த மொழியின் இயற்பெயர்.

லத்தீன் எழுத்துருக்கள் பயன்படுத்தப்படும் இந்த மொழியில் மொத்த 29 எழுத்துகள் உள்ளன. ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் 26 எழுத்துகளுடன் சுவென்ஸ்கா மொழிக்கானச் சிறப்பு எழுத்துகள் å, ä,ö ஆகியவற்றுடன் இந்த மொழி புழங்கப்படுகிறது.

ஒரு காலத்தில் ஸ்காண்டிநேவியா முழுவதும் புழங்கப்பட்ட பண்டைய நார்ஸ் மொழியின் பரம்பரையில் வந்த சுவிடீஷ் மொழி ஏறத்தாழ ஒரு கோடி மக்களால் பேசப்படுகின்றது. மேற்கு ஸ்காண்டிநாவியாவில் புழங்கப்பட்ட நார்ஸ் , நார்விஜியன் , ஐஸ்லாண்டிஸ்க் மொழியாகவும் கிழக்கில் புழங்கப்பட்ட நார்ஸ் மொழி டேனிஷ் மற்றும் சுவிடீஷ் மொழியாகவும் உருவெடுத்தது. நவீன சுவிடீஷ் மொழியின் வரலாறு அச்சுத்துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியுடன் தொடங்குகிறது.

சுவீடனிம் புகழ்பெற்ற மன்னரான குஸ்டாவ் வாசா ஆணையின் பெயரில் 1541 ஆம் ஆண்டு பைபிளின் புதிய ஏற்பாடு மொழிப் பெயர்க்கப் படுகிறது. இந்த மொழிப் பெயர்ப்பு பழமையான நார்ஸ் மொழியையும் புழக்கத்தில் இருந்த மொழியையும் இணைத்து ஒரு நிலையான சுவிடீஷ் மொழியை உருவாக்க ஒரு காரணியாக இருந்தது. இன்று கொஞ்சி குலாவிக் கொண்டாலும் அந்த காலத்தில் அடிபிடி சண்டையில் இருந்து டேனிஷ்காரர்களின் பைபிள் மொழிப்பெயர்ப்பில் இருந்து வேறுபடுத்தவும் சுவிடிஷின் சிறப்பு உயிர் எழுத்துகள் ö,ä, å இதில் அறிமுகப்படுத்தப்பட்டன. மொழியாக உருவெடுத்திருந்தாலும் 17 ஆம் நூற்றாண்டு வரை
சுவிடிஷ் மொழியின் இலக்கணங்கள் வரையப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டில்தான் எழுத்துமுறைகள் நிலைப்படுத்தப்பட்டன.

நகரமயமாக்கல், தொழிற்மயமாக்கல் ஆகியவற்றின் தாக்கத்தில் தற்கால சுவிடீஷின் வளர்ச்சி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கின்றது. இலக்கணம், ஒரேச் சீரான வார்த்தை வடிவமைப்புகள் என சுவீடீஷ் நிலை பெறத் தொடங்கியது. சுவிடீஷ் இலக்கிய வரலாறும் இந்தக் காலக் கட்டத்தில் இருந்து தான் துவங்குகின்றது.

தலைவனாக இருந்தாலும் தொண்டனாக இருந்தாலும் /நீ/ என ஒருமையில் அழைக்கக் கற்றுக்கொடுக்கும் சுவிடீஷ் மொழியிலும் மரியாதைக்குரிய அடைமொழிகள் புழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் Mr. , Miss, Mrs, எனக்குறிப்பதை herr, fröken , fru எனவும் பிரெஞ்சில் நீங்கள் என்பதை vous எனக்குறிப்பதைப் போல சுவிடீஷில் ni எனவும் 1960 வரைப் புழங்கப்பட்டு வந்திருக்கின்றன. சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளைச் சீராக்க , மக்கள் அனைவரும் சமம் என்பதை ரத்தத்திலேயே ஊட்ட , வார்க்க வேறுபாடுகளைக் காட்டும் இந்த மரியாதைக்குரிய அடைமொழிகள் அன்றாட வழக்கில் இருந்து மொழிச்சீர்திருத்த நடவடிக்கையில் ஒழிக்கப்பட்டன.

ஒலிப்பியல் (phonetic) மொழியான சுவிடீஷில் எழுத்துகளின் உச்சரிப்புகள் , வேற்று மொழியில் இருந்து கடன் வாங்கிய வார்த்தைகளைத் தவிர , ஏனையவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆங்கிலத்தில் cut - put அல்லது through - cough என மாறுபாட்டுடன் ஒலிப்பதைப்போல தொந்தரவுகள் சுவிடீஷில் இல்லை.

9 உயிர் எழுத்துகள்(vowels) குறில் ,நெடில் உச்சரிப்புடன் 18 வகையாக வார்த்தைகளில் உச்சரிக்கப்படும். a,e,i,o,u,y,å,ö,ä . ஏனைய 20 மெய்யெழுத்துகள் (consonants) 23 வகையாக வார்த்தைகளில் உச்சரிக்கப்படுகின்றன. இவற்றின் உச்சரிப்புகளை கேட்டுப் பழக பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும் http://www2.hhs.se/Isa/swedish/chap9.htm#pronunciation

ஆங்கிலமும் சுவிடீஷைப் போல ஜெர்மானியக் குடும்பத்தைச் சார்ந்ததனால் ஆங்கிலத்தின் நிறைய வார்த்தைகள் பல, எழுதும் முறையில்/உச்சரிக்கும் முறையில் சிறுது மாறுபட்டு அப்படியே பயன்படுத்தப் படுகின்றன. இருந்த போதிலும் சில ஆங்கில வார்த்தைகள் சுவிடீஷ் மொழியில் நேர் எதிரிடையான அர்த்தங்களைத் தரக்கூடும். முத்தத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் சுவிடீஷில் சிறுநீரைக் குறிக்கும் , இந்த வேறுபாட்டை அறியாமல் காதலியிடமோ காதலனிடமோ பயன்படுத்தினால் என்னவாகும் என யோசியுங்கள்.

http://sv.wikipedia.org/wiki/Lista_%C3%B6ver_falska_v%C3%A4nner_mellan_svenska_och_engelska

படித்த மேற்தட்டு மக்களின் மொழி என 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் கருதப்பட்ட பிரெஞ்சு மொழியின் தாக்கமும் சுவிடிஷீல் உண்டு. Idé – idée , Dramatik – dramatique , Byrå - Bureau, nivå - niveau ஆகியன சில பிரெஞ்சு வார்த்தைகள் அதே உச்சரிப்புடனும் பொருளுடனும் ஆனால் வேறுபட்ட எழுத்துக் கோர்வையிலும் இருக்கும் சுவிடீஷ் வார்த்தைகள்.

ஆங்கிலத்தில் வாக்கியங்களில் வினைச்சொற்கள் வரும் இடம் மாறுபடலாம். ஆனால் சுவிடிஷில் ஜெர்மன் மொழியைப் போல வினைச்சொல் எப்பொழுதும் இரண்டாம் இடத்தில் தான் இருக்க வேண்டும். ஆங்கிலமோ , ஜெர்மனோ தெரிந்திருந்தால் சுவிடீஷ் மொழியைச் சுலபத்தில் கற்றுக் கொள்ளலாம். சுவிடிஷ் மொழியின் இலக்கணம் மிகவும் எளிது. உச்சரிப்புகளைத் தொடர்ந்த பயிற்சியின் மூலம் கற்றுக்கொண்டால் ஏனைய ஐரோப்பிய மொழிகளைக் காட்டினாலும் எளிதாக கைவசப்படும். குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில் நார்விஜியன், டேனிஷ் மொழிகளை சுவிடீஷ் தெரிந்திருந்தால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஏறத்தழ தமிழ் தெரிந்தவர்கள் ஏனையத் திராவிட மொழிகளைப் புரிந்து கொள்ள முடிவது போல்தான்.

எந்த மொழியாக இருந்தாலும் பெரும்பாலானோர் கற்றுக்கொள்ள விரும்புவது 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்பதை எப்படி அந்த மொழியில் சொல்லுவது என்பதைத்தான்,

jag älskar dig - யாக் எல்ஸ்கார் தெய்க் (புழக்கத்தில் யா எல்ஸ்கார் தெய் எனக் கூறப்படும்).

வேறு சில வாக்கியங்கள்

Vad heter du? - உங்கள் பெயர் என்ன? - வாட் (வா) ஹியத்தர் டு

Jag heter Vinaiooki - என் பெயர் வினையூக்கி - யாக் (யா) ஹியத்தர் வினையூக்கி

Tack så mycket - நன்றிகள் பல - தக் ஸோ மிக்கெத்


மொழித் தெரிந்தால் மட்டுமே அது சார்ந்த நிலப்பரப்பின் கலாச்சாரத்தை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள முடியும்.அதுவே நாம் அந்த மண்ணிற்கு செலுத்தும் மரியாதையாகவும் இருக்கும். நம் வாழ்வியல் முறைகளையும் வேற்று நாட்டு மக்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்க முடியும். தமிழ் அடையாளத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த தாம் வாழும் நிலத்தில் புழங்கப்படும் மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகின்றது. ஆங்கிலம் அகிலத்தின் மொழியாக மாறிவிட்டாலும் கூட, புலம் பெயர்ந்த இடத்தின் மொழியையும் அறிந்து கொள்வது நமது அறிவுக்கும் மட்டும் அல்ல, தமிழுக்கும் வளர்ச்சியாகும் !!.

Saturday, August 08, 2009

சுவீடன் மேற்படிப்பும் சில கல்வி ஆலோசனை நிறுவனங்களும்( Consultancies)

அறியாமை என்பது தவறல்ல, அறிந்தும் தானே போய் வலிய மாட்டிக்கொள்வதுதான் தவறு. சுவீடனில் படிப்பு இலவசம் என்பது பலரும் அறிந்ததே!!! மனிதனின் அவலங்களைக் கூட வியாபரம் ஆக்கும் இந்த உலகத்தில், இலவசமாகக் கிடைக்கும் படிப்பை வைத்து எப்படி எல்லாம் பணம் செய்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்பொழுது வருத்தமாக இருக்கும். சில ஆலோசனை மையங்கள் ஐக்கிய ராச்சியத்திலும் (United Kingdom) ஆஸ்திரேலியாவிலும் இருக்கும் சில பல்கலைகழகங்களோடு நேரிடையாகத் தொடர்பு வைத்து மேற்படிப்பு படிக்க அனுமதி வாங்கித் தருகிறார்கள் என்பது உண்மை. அதற்காக அதே விசயத்தை அனைத்து நாடுகளிலும் செய்ய முடியும் என நம்ப வேண்டியது இல்லை.


ஸ்காட்லேண்ட் தேசத்தில் இருக்கும் அபர்டீன் பல்கலை கழகத்திற்கு மாணவர்கள் நேரிடையாகவும் விண்ணப்பிக்கலாம் , அவர்கள் அனுமதித்து இருக்கும் சில ஆலோசனை மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். சுவீடன் கிடைக்கும் முன்னர், அபர்டீன் பல்கலை கழகத்திற்கு நான் நேரிடையாக விண்ணப்பித்து அனுமதிக்கடிதம் பெற்றேன். முன்னர் சொன்ன படி ஆஸ்திரேலியா , ஐக்கிய ராச்சியத்தில் இருக்கும் பல்கலை கழகங்கள், கல்லூரிகளில் இவர்களுக்கு நேரிடையான தொடர்பு இருக்க்கின்றது.

ஆனால் சுவீடன் உயர்கல்வியை பொருத்த மட்டில் எந்த ஒரு ஆலோசனை மையத்திற்கும் சுவீடன் கல்வி நிறுவனங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. சுவீடனில் மேற்படிப்பு படிக்க இடம் வாங்கித் தருகிறோம் எனச் சொல்லுபவர்கள் செய்யும் வேலை எல்லாம் உங்கள் சான்றிதழ்களின் நகல்களை வாங்கி தபால் உறையில் இட்டு அனுப்புவது தான். உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதோ இடம் கிடைக்கப் பெறுவதோ எந்த வகையிலும் ஆலோசனை மையங்களால் (Consultancies) சிபாரிசோ/நிராகரிப்போ செய்ய இயலாது.

இங்கு ஆலோசனை மையங்களை நொந்து எந்த பிரயோசனமும் இல்லை. ஏமாறுபவன் இருக்கும் வரை தலையில் நன்றாக மிளகாய் அரைப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். சான்றிதழ்களின் நகல்களை “நோட்டரி பப்ளிக்” கையொப்பம் பெற்று தபாலில் அனுப்பக் கூட தெரியாத மாணவர்கள் கண்டிப்பாக மேற்படிப்பு படித்து ஒன்று சாதித்து விடப்போவதில்லை. ஒரு பள்ளிக்கூட இறுதி மாணவனுக்கு இது தெரியவில்லை என்றால் பரவாயில்லை. பொறியியற் படிப்பு முடித்த பின்னர் தெளிவாகக் கொடுத்து இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி எளிமையாக அதிக பட்சம் இரண்டாயிரம் ரூபாய் செலவில் (தபால் செலவு + நோட்டரி பப்ளிக்) விண்ணப்பிப்பதை விட்டு விட்டு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யும் மாணவர்களை நினைத்து வருந்தத்தான் முடிகிறது.

ஆலோசனை மையங்கள் , மேற்படிப்பு அனுமதியில் ஏதாவது பிரச்சினை என்றால் நாங்கள் தொலைபேசியில் சுவீடன் கல்வி நிறுவனத்துடன் பேசி பெற்றுத்தருவோம் என சொல்லுவார்கள். நாம் எந்தக் கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்கின்றோமோ அல்லது மொத்தமாக விண்ணப்பிக்கும் ஸ்டூடராவுக்கோ நாமே தொலைபேசி விடலாம். நாம் எத்தனை மோசமாக ஆங்கிலம் பேசினாலும் அவர்கள் பொறுமையாகக் கேட்டு பதில் தருவார்கள். ஒரு வேளை உங்களுக்கு பேசத் தயக்கம் என்றாலும் மின்னஞ்சல் மூலம் கேட்டாலும் தக்கதொரு பதில் கிடைக்கும்.

சுவீடன் அனுமதியைப் பொருத்த மட்டில் விதிமுறைப்படி உங்களுக்கு அனுமதி என்றால் அனுமதி, இல்லை எனில் யாராக இருந்தாலும் கிடையாது.

செப்டம்பரில் எனது சகோதரனுக்கு நான் படிக்கும் கல்லூரியில் விண்ணப்பித்து இருந்தேன். பரிசீலிக்கும் மையத்தில் இருக்கும் அனைவரையும் எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். எனது சகோதரனது சான்றிதழ்களைச் சரிப்பார்க்க சென்னைப் பல்கலை கழகத்துக்கு அனுப்பப்பட்டு ஒரு நாள் தாமதமாக வந்து சேர்ந்தது. எத்தனையோக் கேட்டுப்பார்த்த பின்னரும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி இருக்க விசயம் , ஆலோசனை நிறுவனங்கள் நாங்கள் முயற்சி எடுத்து வாங்கித் தந்தோம் என்று சொன்னால் அது வடி கட்டியப் பொய்.

இந்தியாவிலோ சுவீடனிலோ அல்லது உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் சுவீடனில் தம்மால் மேற்படிப்பு அனுமதி பெற்றுத்தர முடியும், பிரச்சினைகள் இருந்தாலும் சிபாரிசு செய்து வாங்கித் தரமுடியும் என்று யாராவது சொன்னால் அப்படியே ஏற்றுக்கொண்டு பணத்தைக் கட்டாதீர்கள்.

சுவீடன் மேற்படிப்புக்கான விண்ணப்பிக்கும் முறைகள் எளிமையானது, தெளிவானது. சுமாரான ஆங்கிலப்புலமை உடையவர்கள் கூட எளிமையாக விண்ணப்பிக்கலாம். சில ஆர்குட், கூகுள் யாஹூ குழுமங்களில் நடக்கும் விவாதங்களில் மக்கள் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரைத் தர தயாராக இருக்கின்றனர் என்பதை பார்க்கும்பொழுதுதான் , மாணவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக இந்தப் பதிவை எழுதத் தோன்றியது. சாதாரண விசயத்தை செய்யத் தெரியாத மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வந்து பெரிதாக ஒன்றும் சாதிக்கப்போவதில்லை (கடுமையாக இருந்தால் மன்னிக்கவும், ஆதங்கத்தில் சொல்கின்றேன்). 50 ஆயிரம் ரூபாயை நீங்கள் யாராவது சுயதொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு திரும்பப்பெறும் முதலீடாகத் தரலாம், அதை விட்டு நுனிநாக்கு ஆங்கிலத்தில் கோடிகளில் புரளும் கல்வி ஆலோசனை மையங்களிடம் பணத்தை அழ வேண்டாம்.

சுவீடன் இளங்கலை/முதுகலைப் படிப்புக்காக விண்ணப்பிக்க studera.nu என்ற இணைய தளம் இயங்கு கிறது. இவர்கள்தாம் சேர்க்கையை நடத்துபவர்கள்.


இளங்கலை - First Cycle (Under Graduate)

முதுகலை - Second Cycle (Masters )

தொலை தூரப்படிப்புக்கும் இந்த தளத்தில் விபரங்கள் கொடுத்து இருக்கின்றார்கள்.

அடுத்த வருடம் செப்டம்பருக்கான சேர்க்கை டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கும். அதிக விபரங்களுடன் முன்னர் எழுதப்பட்ட பதிவு இங்கே http://vinaiooki.blogspot.com/2008/10/blog-post_10.html

வருங்கால மாணவர்களுக்கு வாழ்த்துகள்




Tuesday, August 04, 2009

சென்னை பதிவர் பட்டறை(ஆகஸ்ட் 5, 2007) , இரண்டு வருடங்கள் நிறைவு

இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்னை பல்கலை கழக வளாகத்தில் இதே ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பதிவர்கள் திண்ணைப்பேச்சு அரட்டையாளர்கள் அல்ல என்பதை நிருபிக்கும் வகையில் கருத்து மாறுபடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு பதிவர்கள் ஒன்றிணைந்து நடத்தி இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றது.


வலைப்பூக்களின் வீச்சு அதிகரித்து வரும் இந்த காலக்கட்டத்தில் மற்றும் ஒரு பதிவர் பட்டறை சென்னையில் நடத்தப்பட்டால் நன்றாக இருக்குமோ!!!


பட்டறை நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே காணலாம்.

பதிவர் பட்டறைகள் புதியவர்களை உள்ளிழுப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள் மத்தியிலும் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது நிதர்சனம். ஊர் கூடி தேர் இழுத்தல் அழகுதானே!!!

சென்னையில் மீண்டும் ஒரு பட்டறை முன்பை விட சிறப்பாகவும் அதிக நபர்களை உள்ளிழுக்கும் வகையிலும் நடத்தப்பட வேண்டும். சென்னையில் இருக்கும் பதிவர்கள் கவனிப்பார்களா!!!
---

சென்னைப் பதிவர் பட்டறை முடிந்த கையோடு புதுவை பதிவர்கள் இணைந்து நடத்திய புதுவை வலைப்பதிவர் பட்டறையும் மிகுந்த வெற்றி பெற்றது.


---

சிறு நகரங்கள் பெரு நகரங்களுக்கெல்லாம் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என விழுப்புரம் பயிலரங்கம் அமைந்திருந்தது.


---