Tuesday, October 15, 2013

புக்பேஸ் - சிறுகதை

"இப்படியே போனால் இன்னும் இரு வருடங்களில் இந்தியா வல்லரசு ஆகி விடும் , ஏதாவது செய்து அவர்களை பிரச்சினைக்குட்படுத்த வேண்டும் , உங்கள் யோசனைகளை சொல்லலாம்" என அமெரிக்க - ஐரோப்பிய - சீன  கூட்டு அமைப்பின் தலைவர் கூடியிருந்த உயர்மட்ட உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்

"வழமைப்போல , சாதி கலவரம்  மத கலவரங்களைத் தூண்டி விட்டு விடுவோமா " என்றாள் சீனாக்காரி

"பல வருடங்களுக்கு முன்பு அது மிகவும் எளிது , அன்று தமிழ்நாட்டில் மட்டும் பெரியாரியத்தினால் இருந்த சகிப்புத் தன்மை , இன்று  நாடு முழுவதும் இருக்கின்றது.... நாடே பெரியார் பெயரை உச்சரிப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை "  என்றான் சுவீடனின் ஆண்டர்சன்

"இந்தியாவின் மீது படை எடுக்கலாமா? "

"வேண்டாம்... அது மூன்றாம் உலகப் போரில் கொண்டு வந்து விட்டு விடும்.  நாம் விற்ற ஆயுதங்களாலேயே இன்று அவர்கள் பலமாக இருக்கின்றார்கள்  கூடங்குளம் அணு உலை கூட சிறப்பாக செயற்பட்டு கொண்டு இருக்கின்றது"

"மருத்துவ ரீதியாக, ஏதேனும் நோய்களை உருவாக்கி விடலாமா "

"மூட நம்பிக்கைகளை ஒழித்த கையோடு , போலி மருத்துவம் எல்லாம் ஒழித்து, தடுப்பூசிகள், சிறப்பான அறிவியல்  மருத்துவத்தினால் பாதுகாப்பான நம்மை விட சுகாதார  வளமான சமுதாயமாக இருக்கின்றது ..  " என்றான் ஒரு ஜெர்மானியன்.

கடைசியாக  "என்னிடம் கத்தியின்றி இரத்தமின்றி இந்தியாவில் ஒரே இரவில் பிரச்சினைகளைக் கொண்டு வர ஒரு வழி இருக்கின்றது "  என சொல்லியபடி எழுந்தான் அமெரிக்காவின் ஆரஞ்சுபிட்டர்.

ஆவல் மேலிட அவனை எல்லோரும் பார்க்க , ஆரஞ்சுபிட்டர் தொடர்ந்தான்.

"என்னுடைய புக்பேஸ் சமூக இணைய தளத்தில்  இந்தியாவிற்கு மட்டும் பயனாளர்களுக்கு தகவல் பாதுகாப்பு பாக்கியங்களை நீக்கி விடுகின்றேன் "

"புரியவில்லை " என்பது போல அனைவரும் ஒரே சேர புருவம் உயர்த்தினர்

"புக்பேஸ் இந்திய பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் சக இந்திய பயன்பாட்டாளர்களின் தனித் தகவல்கள் பரிமாற்றங்கள், தனி அரட்டை பரிமாற்றங்கள் , புகைப்படங்கள் இவற்றை எந்தவித கட்டுப்பாடு இன்றி   யார் வேண்டுமானாலும் யாருடையதை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ள முடியும்,   இந்தியர்கள் யாரும்  தகவல்களை அழிக்கவோ மாற்றவோ முடியாது , மேலும்  அவர்கள் கணக்கை முடக்கவோ தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ முடியாது.. ஒவ்வொரு இந்தியரின்  ரகசியமும் எல்லா இந்தியர்களுக்கும் சொந்தம்"

உயர் மட்ட கூட்டம் வெற்றிச் சிரிப்புடன் கலைந்தது.  அடுத்த சில நாட்களில் இந்தியா பற்றி  எரிந்தது.