Showing posts with label திகில். Show all posts
Showing posts with label திகில். Show all posts

Saturday, July 11, 2015

சுடுகாட்டு செல்ஃபி - திகில் சிறுகதை

"கார்த்தி, எங்கேயாவது கல்லறைக்கு ஒரு எட்டு போய்ட்டு வருவோமா"  

"எதுக்குடா கணேஷ்" 

"இப்போதைய டிரென்ட், சுடுகாட்டில இல்லாட்டி கல்லறையில போய் செல்ஃபி எடுத்து சோசியல் மீடியால போடுறதுதான்" 

என் அறைத்தோழன் கணேஷ், தீவிர சமூக ஊடக வெறியன். காட்டாற்று வெள்ளம்போல சமூக ஊடகத்தில் ஏதாவது ஒரு நிகழ்வு ஏற்பட்டால் இவன் காரண காரியமே ஆராயாமல் அதை செய்வான்.  கேள்வி கேட்டால் "இதான் நண்பா , இப்போதைய டிரென்டு" என்பது அவனது பதிலாக இருக்கும். சென்ற ஆண்டு, குளிரடிக்கிற நள்ளிரவில் குளிர்ந்த நீரை தன்மேல் ஊற்றிக்கொண்டதோடு மட்டுமல்லாமல், என் மேலேயும் ஊற்றி ஐஸ் பக்கெட் சாலெஞ் என்றான். ஒரு வாரம் காய்ச்சலடித்து கிடந்தது நான் மட்டுமே. 

"நான் வரலடா கணேஷ், எனக்கு இது தேவையில்லாத விஷப்பரிட்சையா தோணுது, எனக்கு அடுத்தவாரம் கான்பரன்ஸ் பேப்பருக்கு டெட்லைன் வேற இருக்கு, ஒரு சூப்பர் ரெபரன்ஸ் பேப்பர் புடிச்சிட்டா அதை வச்சி என் பேப்பரை முடிச்சுடுவேன், சோ டைமில்லை" 

"கான்பரன்ஸ் கீன்பரன்ஸெல்லாம் கதைவிடாத, பகுத்தறிவு பேசுற உனக்கு பேய் வந்து கடிச்சி சாப்புட்டுறும்னு பயம் கார்த்தி "

"நான் ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டுக்குப்போகனும்" என்ற நடிகர் வடிவேலுவின் மனக்குரல்தான் எனக்கும் கேட்டது. 

நான் என்னதான் பகுத்தறிவு பேசினாலும், கடவுளிடம் இல்லாத பயம் எனக்கு பேய்கள் மேல் உண்டு.  காரணம் மிகவும் எளிமையானது. இல்லை என்று நினைக்கும் கடவுள் வந்துவிட்டால் கூட நல்லம்சமாகத்தான் இருக்கப்போகின்றது. பேய் இல்லை என்று நினைத்து வம்பு பேசி, ஒருவேளை அது உண்மையாகவே வந்துவிட்டால் என்ன செய்வது.  அதனால் நான் வரவில்லை என்று மறுத்தேன். 

"போடா பயந்தாங்குளி, நீ வரலேன்னாலும் நான் போகப்போறேன்" 

இப்பொழுது எனக்கு அடுத்த பயம். ரோம் நகரத்தின் புறநகர்ப்பகுதியில் பெரிய ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் எங்களது வீடு.  கால்நடை தூரத்தில் எங்களது ஆய்வகமிருப்பதால் இவ்வளவு தள்ளி வீடு எடுத்திருக்கிறோம். இவனும் இரவில் கிளம்பிப்போய்விட்டால் எனக்கு தனியே இருக்க பயம். இவன் இஷ்டத்திற்கு கல்லறைக்குப்போய் அங்கு தூங்கிக்கொண்டிருக்கும் பேய்களை தட்டி எழுப்பிவிட்டு வீடுவரை கூட்டிவந்துவிட்டால் என்ன செய்வது என்ற அபத்தமான பயம் வேறு. 

"கணேஷா, நாம போய் போட்டோ எடுத்து, அந்த போட்டோவில் பேய் பிசாசு தெரிஞ்சுட்டா , வேண்டாம்டா பிளீஸ்" 

"கார்த்தி, வெறும் டுபாக்கூர் போட்டோஷாப்பையெல்லாம் நம்புறீயா , நீயெல்லாம் என்ன சயின்டுஸ்டு,   , பேயும் கிடையாது பிசாசும் கிடையாதுன்னு நாம நிருபிக்கிறோம். "

"பொதச்ச பின்னாடி எரிச்ச பின்னாடி திரும்பிப்பார்க்காம போற இந்தியா மாதிரி இங்கே கிடையாது , இவனுங்க கல்லறைக்கு உரிய மரியாதை செய்றவனுங்க , நாம போய் விளையாட்டா கல்லறை மேல நின்னு போட்டோ எடுத்து பேஸ்புக்ல போட்டால், அவமரியாதை செஞ்சுட்டோம்னு எவனாவது வீடு பூந்து அடிக்கப்போறான்டா.. மோர் ஓவர்,  கல்லறை மேல நின்னுக்கிட்டு, படுத்துக்கிட்டு போஸ் கொடுத்து போட்டோ எடுக்கிறது , செத்தவங்களை நிஜமாலுமே அவமானப்படுத்துறதுதான்" 

" நோ நோ உன்னோட பயத்தை எதுக்கு சென்டிமென்ட் போட்டு மறைக்கிற, இனிமே பகுத்தறிவுன்னு எதுவும் பேசாதே , ஷேம் ஷேம் பப்பி ஷேம்" 


"இது சென்டிமென்ட் கிடையாது,  வெறுமனே இல்லைன்னு நிராகரிப்பது மட்டும் பகுத்தறிவு இல்லை, லாஜிக்கலா யோசிக்கிறதும் பகுத்தறிவுதான்.எதுக்காக அனாவசிய ரிஸ்க் எடுக்கனும்,  நாம இருக்கிற ஏரியா ஒரு காலத்துல மாபியா மீட்டிங் பாயின்ட், செத்துப்போனவங்களை இங்கே இருக்கிற கல்லறையிலத்தான் புதைச்சிருப்பானுங்க , நாம போட்டோ எடுக்கிற சமாதிக்காரன்  மாபியாக்காரனுங்களுக்கு சொந்தக்காரனா இருந்தால் என்ன பண்றது,. கல்லறைத்தோட்டம் போதை மருந்து அடிக்ட், டிரக்ஸ் வாங்குறவன் விக்கிறவன் எல்லாம் ஒன்னு கூடுற இடம்னு வேற படிச்சிருக்கேன்.. பிரச்சினையாயிடும்னு தோனுது " 

"இந்த நொரநாட்டியமெல்லாம் வேனாம், வரியா இல்லியா" 

"வரேன் ஒரு கண்டிஷன் கணேஷ், கல்லறையில இருக்கிற ஆட்களோட பேர் வராதபடி போட்டோ எடுக்கனும் சரியா " 

"ஓகே டன்"

 இங்கே தனியாக இருப்பதைவிட கல்லறைத்தோட்டத்தில் துணையுடன் இருப்பது பரவாயில்லை என்பதால் கணேஷுடன் கிளம்பினேன். 

நள்ளிரவில், தேய்பிறை வெளிச்சத்தில் நடக்கும்பொழுது நேரம் ,மற்றவர்களைக் காட்டிலும் மெதுவாக செல்லும் என்று ஐன்ஸ்டீன் அவரோட சார்பியல் கோட்பாட்டில் சொல்லியிருப்பாரோ. குறைந்த தூரத்தை கடக்க  ஏதோ பலமணிநேரம் எடுத்துக்கொண்டதைப்போல ஓர் அசதி .ஒரு வழியாக ஒரு கல்லறைத்தோட்டம் தென்பட்டது.

உள்ளே நுழைந்தோம். முதல் கல்லறை கிறிஸ்டியானோ எர்பானி. கல்லறையின் மேல் நாங்களிருவரும் சாய்ந்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டோம். எடுத்து முடித்தவுடன் எடுத்த படத்தை ஒரு முறை சரிபார்த்துக்கொண்டேன். பேய் பிசாசு எதுவுமில்லை.  அடுத்தது பவுல் ராபின்சன் , பின்னர் யோனஸ் வில்லியம்சன் நான்கவது கல்லறையில் இருந்த  பெயரைப்பார்த்ததும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது.  ஆர்.எஸ்.சுவாமிநாதன் என்றிருந்தது. 

"கணேஷ், என்னமோ தப்பா படுது, இட்டாலியன் கத்தோலிக்க கல்லறையில எப்படிடா சுவாமிநாதன், வேண்டாம்டா போயிடுவோம்" 

"கார்த்தி, பயப்படாதே. செகன்ட் வேர்ட் வார் அப்போ, நிறைய பிரிட்டீஷ் இன்டியன் சோல்ஜர்ஸ் பாசிஸ்டுகளை எதிர்த்து சண்டை போட்டாங்க , அதுல செத்தவங்களை நிறைய இடத்தில் பொதச்சி மரியாதை செஞ்சாங்க , பவுல் ராபின்சன், யோனஸ் வில்லியம்சன் கூடத்தான் இத்தாலியன் நேம்ஸ் கிடையாது .. கூல் கூல் நண்பா" 

சுவாமிநாதன் கல்லறையில் ஏறி நின்று எடுக்கும்பொழுது என் காலணிகளை கழட்டிக்கொண்டேன். பயம் தானாகவே மரியாதை கொடுக்க வைத்தது. 

வந்த வழியே வீடுவந்து சேர்ந்தோம்.  நிபந்தனையின் படி கல்லறையில் பெயர் தெரிந்த படங்களை கணேஷ் முற்றிலுமாக அழித்துவிட்டு எஞ்சியப்படங்களை மட்டும் சமூக ஊடகங்களில் தரவேற்றினான். இத்தாலிய விடியற்காலை, இந்தியாவில் பரபரப்பான நேரமென்பதால் விருப்பங்களும் கருத்துகளும் பகிர்வுகளும் அள்ளின. கணேஷ் நிம்மதியாக தூங்கினான். 

என்னால் தூங்க இயலவில்லை. ஆங்கிலேய, அமெரிக்க , இந்தியப் பெயர்கள் எப்படி கல்லறையில்.. எனக்கு இரண்டாம் உலகப்போர் போர்வீரர் கல்லறைத்தோட்டத்தைப்பற்றி வரலாற்று சுவாரசியம் தொற்றிக்கொண்டது.  முற்றிலும் விடிந்ததும் , முந்தைய நள்ளிரவு நடந்த அதே பாதையில் கல்லறைத்தோட்டத்தை தேடிப்போனேன். 10 - 12 கிலோமீட்டர்கள் நடந்தும் என்னால் அந்த கல்லறைத் தோட்டத்தை கண்டே பிடிக்கமுடியவில்லை.  பாதை மாறி வந்துவிட்டோமா .. இல்லையே சரியான பாதைதான் என்று எனக்குள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, ஒரு கார் வந்து என்னருகில் நின்றது. 

"இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் கார்த்தி"  என்று ஆங்கிலத்தில் கேட்டார் என் பேராசிரியர். 

"ஒன்றுமில்லை, ஆராய்ச்சித்தாள் வேலை நகரவில்லை, ஒரு மாற்றத்திற்காக இங்கு நடந்து வந்தேன்" 

"சரி , வண்டியில் ஏறு"

வண்டியில் ஏறிய பின்னர்

"இங்கே அருகில் ஏதேனும் கல்லறைத்தோட்டமிருக்கிறதா ? குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் மறைந்த பிரிட்டீஷ் அமெரிக்க வீரர்களின் கல்லறைத்தோட்டம்"  


"35 ஆண்டுகளாக இங்கிருக்கிறேன். இந்த சாலையில் கல்லறை எதுவும் கிடையாதே. நிச்சயமாக போர்வீரர்களின் கல்லறை இங்கு கிடையவே கிடையாது... அது சரி, உனது கருத்தரங்க ஆராய்ச்சித்தாளுக்கான நல்லதொரு தரவை காலையில் கண்டுபிடித்துவிட்டேன் உனக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன் , படித்துப்பார்"

எனது நினைவுகள் அந்த இல்லாத கல்லறைத்தோட்டத்தின் மேலேயே இருந்தபோதும் அனிச்சையாக எனது திறன்பேசியில் கணக்கைத் திறந்து பேராசிரியரின் மின்னஞ்சலில் இணைப்பை வாசிக்க ஆரம்பித்தேன்.  அந்த ஆராய்ச்சித்தாளின் ஆசிரியர்களின் பெயர் வரிசைக் கிரமமாக கிறிஸ்டியானோ எர்பானி, பவுல் ராபின்சன், யோனஸ் வில்லியம்சன் , ஆர்.எஸ்.சுவாமிநாதன். 
***********************************************************************************************************************

Sunday, February 01, 2015

முடிக்கப்படாத கதை - சிறுகதை

"ஆர் யூ எ கோஸ்ட் ரைட்டர்" வீட்டின் கதவைத் தட்டியவர், நான் கதவைத் திறந்தவுடன் ஒரு வணக்கம் கூட வைக்காமல் பேச்சைத் தொடர்ந்தார்.

"மை நேம் ஈஸ் கார்த்தி, உங்களின் பழையவீட்டில் தேடினேன், இந்த வீட்டிற்கு ஷிப்ட் ஆயிட்டதா சொன்னாங்க"

"ஆமாம், வீடுமாறிட்டேன், சொல்லுங்க என்ன விசயம்"

"எனக்கொரு அட்டகாசமான அமானுஷ்யக் கதை வேண்டும், எழுதித் தரமுடியுமா "

எனது பெயரும் கார்த்தி என்றாலும் மண்டப எழுத்தாளனாக, அடுத்தவர்களுக்கு காசுக்கு , அவர்களின் பெயரில் எழுதிக்கொடுப்பதனால் Ghost Writer என்றே என் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பேன்.  ஒருவேளை அதை பேய்க்கதை எழுத்தாளன் என்று தவறாகப் புரிந்து கொண்டு பேய்க்கதை எழுதச் சொல்கின்றாரா என்ற ஐயம்

"ரெடி கேஷ்,  இரண்டு பக்கங்கள் வேண்டும் 10,000 தருகின்றேன்" என்றதும் உடனடியாக நீங்கியது.

"எந்த மாதிரியான அமானுஷ்யக்கதை  வேண்டும், சினிமாவுக்கா, ஷார்ட் பிலிமிற்கா"

"முடிவில்லாமல் பாதி மட்டுமே எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதையின் மறுபாதியை நீங்கள் எழுதிக்கொடுங்கள். உங்களைத் தவிர வேறுயாராலும் இதன் மறுபாதியை எழுத முடியாது. இதை சினிமாவா, ஷார்ட் பிலிமா , பத்திரிக்கையில் பப்ளிஷ் பண்ணுவதா , நாங்க பாத்துக்குவோம், யூ டோண்ட் வொர்ரி "

அவர் கொடுத்த தாளை இரண்டாக மடித்து எனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். யாரோ ஒருவர் எழுதியக் கதைக்கு இரண்டாம் பகுதி எல்லாம் எழுத எனக்கு விருப்பமில்லை. நானே ஒருகதையை எழுதப்போகின்றேன். கதைக்குள் கதையாக கார்த்தி கொடுத்த கதையை சொருகிவிடலாம் என்று முடிவு செய்தேன்.

அரசியல் கட்டுரைகள்,  திரைக்கதை வசனங்களில் உதவி, மேடைப்பேச்சுகள் , சாமியார்களுக்கு வார இதழ் கட்டுரைகள் தயாரித்துக்கொடுப்பது என்று எழுத்தின் பயணத்தை மாற்றிவிட்டதால் சிறுகதைகள் எழுதி தசாப்தங்கள் ஆகிவிட்டன.  சிறுகதைகளிலேயே பேய்க்கதை எழுதுவதுதான் சிரமம்.  குறுகிய வட்டத்திற்குள் எழுதியாக வேண்டும். ஒரு நல்ல பேய்க்கதை ரசிகனால் , இரண்டாவது வரியிலேயே யார் பேய் , என்ன முடிவு என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். ஆனால் அவனை கடைசி வரி வரைப் படிக்க வைத்து முடிவை சொல்வதில்தான் பேய்க்கதை எழுத்தாளனின் கைவண்ணம் இருக்கின்றது.  இழந்த அந்த கைவண்ணத்தைப் பெற , நான் எழுதியிருந்த முப்பத்து சொச்ச பழையப் பேய்க்கதைகளை கணினியில் மீண்டும் வாசித்தேன்.  தாளில் எழுதியிருந்த சிறுகதைகள் எல்லாம் பழைய வீட்டின் பரணில் கிடக்கின்றது.  அடுத்த வாரம் போய் எடுக்க வேண்டும்.

எனது அமானுஷ்யக்கதைகளில், வருபவை யாரையும் கொல்லாது. வரும் பேய்களோ பிசாசுகளோ அமானுஷ்யங்களோ எல்லாம் வாழும் காலத்தில் நல்லவர்களாக இருந்தவை. கதைகளில் ரத்தமோ குரூரமோ செக்ஸோ இருக்காது.  மனிதன் - அமானுஷ்யம் சந்திப்பு , அல்லது அதற்கு முந்தைய வினாடிக்குண்டான திகில் இதுதான் என் அமானுஷ்யக்கதைகளின் மையப்பொருள்.

1. கதையைச் சொல்லிக்கொண்டிருப்பவன் ஒரு பேய். அவன் மனிதர்களை சந்திக்கின்றான்.
2. கதையைசொல்லிக்கொண்டிருப்பவன் ஒரு மனிதன், ஆனால் அவன் ஒரு பேயை சந்திக்கின்றான்.
3. கதையைச் சொல்லிக்கொண்டிருப்பவன் ஒரு பேய், அவன் பேயை சந்திக்கின்றான்.
4. கதையை சொல்லிக்கொண்டிருப்பவன் ஒரு மனிதன், அவன் சந்திக்கும் மனிதனை பேய் என்று தவறாக நினைத்துக் கொள்கின்றான்.

இந்த நான்கு வடிவங்களையே சுற்றி சுற்றி வெவ்வேறு கதைகளாக எழுதியிருக்கின்றேன்.  இந்த நான்கு வடிவத்திற்கும் அப்பாற்பட்டு ஒரு பேய்க்கதை எழுதவேண்டும்.  பேய்கள் இறந்து மனிதர்களாகப் பிறக்கினறன அல்லது பிறக்காத மனிதர்களே பேய்கள் ஹைக்கூ வரியை நீட்டி முழக்கி சிறுகதையாக  எழுதலாமா ? வேண்டாம் யாராவது ஒரு  மேற்கத்திய எழுத்தாளர் இதைப்போல எழுதியிருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு .  நான் நகல் எடுத்துவிட்டேன் என்று புரளி கிளம்பலாம். இணையம் இல்லாத 1980 கள் என்றால் பிரச்சினையில்லை.  மொழிப்பெயர்த்தோ நகல் எடுத்தோ பெரிய எழுத்தாளராகிவிடலாம்.  2015 யில் சொடுக்குப்போடும் நேரத்தில் ஆதி அந்தம் தோண்டி எடுத்துவிடுவார்கள்.  எனக்கு நேரடிப்பிரச்சினை எதுவுமில்லை என்றாலும் கூட,  யார் பெயரில் வெளிவருதோ அவர்களுக்கு தர்மசங்கடங்களை உருவாக்கிவிடக்கூடாது என்ற நல்லெண்ணம் உண்டு. சமயங்களில் நான் எழுதியதே எனக்கு மறந்துப் போய்விடுகின்றது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒரு சாமியாருக்கு எழுதிக் கொடுத்தது, மீண்டும் வரிக்குவரி மாறாமல் மனதில் தோன்ற , இன்னொரு சாமியாருக்கு எழுதிவிட்டேன். நல்லவேளை மின்னஞ்சல் செய்யும் முன்னர் மூளையில் பொறித்தட்டியதால் தப்பித்தேன்.

நல்லெண்ணத்தை விட்டுவிட்டு பய எண்ணத்தைக் கொண்டால்தான் பேய்க்கதை எழுதமுடியும்.
பயங்கொண்டு யோசித்தும் பேய்க்கதைக்கு கரு கிட்டாதபொழுது இயல்பாக நடந்த சம்பவத்தில் பேயேற்றி பேய்க்கதையாக மாற்றுவது எளிது.   இதுவரை நீங்கள் வாசித்ததை அப்படியே தட்டச்சினேன். அச்செடுத்து தாளில் ஒரு முறை வாசித்தேன். பாதிக்கதை தயாராகிவிட்டது. 5000 ரூபாய் அளவிற்கு நன்றாகவே வந்திருக்கின்றது. அச்செடுத்தத் தாள்களை மேசையின் மேல் வைத்துவிட்டு  பாதி உண்மையும் பாதி கற்பனையும் கலந்த கதைகளே சிறந்த கதைகளுக்கு எடுத்துக்காட்டு என்ற என் சிறுகதை இலக்கணப்படி மறுபாதிக்கு கற்பனை செய்ய ஆரம்பித்தேன்.  இனி வருவது என் கற்பனை.

கதவைத் தட்டி மீதிக் கதையை பேய்க்கதையாக  எழுத கேட்டவனுக்கு ஓர் அமானுஷ்ய அடையாளம் கொடுத்துதான் கதையை முடிக்கவேண்டும். அவன் பேய் என்று முடித்தால் படித்துபடித்து சலித்துப்போன முடிவாக இருக்கும். வேற்றுக்கிரகவாசி, ஏலியன் என்று முடிக்கலாம். ஆனால் அதற்கு ஏன், எதற்கு , எப்படி என்றெல்லாம் விளக்கவேண்டும்.

ஆரம்பம் சுமாராக இருந்தாலும் முடிவு சிறப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்ததில் நான் எழுதி முடிக்காமல் வைத்திருந்த கதையின் கதாப்பாத்திரம், அந்தப் பாதிக்கதையை எடுத்துக்கொண்டு என்னை சந்திக்க வருகின்றது என்ற இழைத் தட்டியது. நீ தான் என்னை உருவாக்கினாய்,  எத்தனை முறைக் கேட்பது.  இன்றாவது எனக்கொரு முடிவைச் சொல் என்று வீட்டின் கதவை வந்து தட்டியது. கதைகளை பாதியில் விடாதீர்கள். கதாப்பத்திரங்கள் துரத்தி வந்து முடிவைக் கேட்கும்.

கற்பனை முடிவு கிடைத்ததும் கதையின் கடைசிப்பகுதியை எழுதி முடித்தேன்.  மறுநாள்  , கதை முடிக்கச் சொல்லிக் கேட்ட கார்த்தி வந்தார். அச்செடுத்தத் தாள்களை அவரிடம் கொடுத்துவிட்டு,

"கார்த்தி, உங்க பர்ஸ்ட் ஆப் கதையை நான் படிக்கல, ஆனால் படிக்க வேண்டிய அவசியமுமில்லை  எங்க வேண்டுமானாலும் ஜாயின் பண்ணிக்கோங்க, கரெக்ட்டா பிட் ஆகும், அருமையான அமானுஷ்யக் கதையா பினிஷ் ஆகும் " என்றேன்.

"தாங்க்யூ, நாளைக்கு காசு கொண்டுவரேன்" என்றபடி பிரித்துப் பார்க்காமலேயே அச்சுத்தாள்களுடன் கார்த்தி  சென்றார்.

எனது மேசைக்கு வந்தேன். கதையின் முடிவுப்பகுதியின் தாள் மேசையின் மேலேயே இருந்தது. கார்த்தியிடம் முடிவில்லாமல் முதற்பாதியை மட்டும் தான் கொடுத்திருக்கின்றேன். சரி நாளை பணம் கொண்டு வரும்பொழுது  முடிவுப்பகுதியைக் கொடுத்துவிடலாம் .

கார்த்தி கொடுத்த அந்த முதற்பாதி கதை என்னவாக இருக்கும் என்று ஒரு சின்ன ஆர்வம் ஏற்பட்டது. நேற்றுப்போட்டிருந்த சட்டைப்பையில் இருந்தத் தாளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.  அப்படியே வரிக்கு வரி நான் இப்பொழுது எழுதிக் கொடுத்தக் கதை.  முடிவுப் பகுதி மட்டுமில்லை. கதவு தட்டப்பட்டது.  கதவு உடைபடுவதைப்போல தட்டும் வேகம் அதிகப்பட்டது... முடிவுப்பகுதியை எடுத்துக் கொண்டு கதவை நோக்கி நடந்தேன்.



Thursday, July 17, 2014

பிரதிகள் - சிறுகதை

தொலைபுலன் தொடர்பு மூலம்  என்னை நெருங்கமுடிந்தவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம்.  எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் நட்பு தேவையில்லை என்பது என் கருத்து. அப்படி இருக்கையில் இந்த நட்பு அழைப்பை எப்பொழுது ஏற்றுக் கொண்டேன் எனத் தெரியவில்லை. தானாகவே இணைத்துக் கொள்ளும் இயந்திர முகப்புப் பக்கமாக இருக்கக் கூடும் அல்லது அரசாங்கம் என்னை வேவு பார்க்க அனுப்பப் பட்ட பக்கமாக இருக்கும் என்று நீக்கிவிடலாம் என்று நினைக்கையில்  தொலைபுலன் தொடர்பில்  பேச அழைப்பு வந்தது.

"சமீபத்தில் தாங்கள் எடுத்த  முடிவைப் பற்றி , நாளை எங்கள்  பத்திரிக்கைக்கு ஒரு சிறிய பேட்டி ஒன்றைக் கொடுக்க இயலுமா ? "

அன்று காகிதம், கணினி ; இப்பொழுது தொலைபுலன் தொடர்பு பத்திரிக்கைகள். நினைத்த மாத்திரத்தில் காற்றில் தொடுதிரை உருவாக்கி வாசித்துக் கொள்ளலாம்.

எழுத்தாளர்களிடம் சொற்களை வலியப் பிடுங்கி அரசாங்கப் பிரச்சினைகளுக்குள் சிக்கவைப்பதே இப்பத்திரிக்கைகளின் இயல்பு என்றாலும், கடைசி 10 ஆண்டுகளாக அறிவியல் புனைவுகள், பேய்க் கதைகள், துப்பறியும் கதைகள் என்று இருந்ததால் பேட்டிகளில் எனக்கு பெரிய சிக்கல் இதுவரை இருந்ததில்லை.  சர்ச்சைகளுக்குள் சிக்காத சமகால எழுத்தாளன் நான் ஒருவன்தான். சர்ச்சை இல்லை என்றாலும் என் மேல் இருந்த ஒரே விமர்சனம்  குருதியும் குரூரமும் கதைகளில் மிகுதியாக இருக்கின்றன என்பது . கதைகளைப் படித்த பின்னர் அதைப் பரிட்சித்துப் பார்க்கவேண்டும் என்று தோன்ற வைக்கின்றது என்று சிலர் நினைப்பதாக அரசாங்கம் எனக்கு தகவல் அனுப்பி இருந்தது  . இப்படி எனக்கு  பெரும் புகழைக் கொடுத்த குரூரக்கதைகளை இனி எழுதப் போவதில்லை என முடிவெடுத்து இருக்கின்றேன்.  அந்த முடிவைப் பற்றிதான் பேட்டிக்கு கேட்டிருக்கின்றனர்.

பேட்டிக்கு ஒப்புக்கொண்டுவிட்டு  மீண்டும்என் தொலைபுலன் தொடர்பு பக்கத்திற்கு வந்தேன். 'குரூரமான கதைகளை இனிமேல் எழுதப்போவதில்லை என்ற தங்களின் முடிவிற்கு மிக்க நன்றி ' என்று பல வாசகர்களிடம் இருந்துபாராட்டும் தொனியில் வாசகர் மன்றத்திற்கு தகவல்கள்  வந்து இருந்தன.

எதிர் மறையான பேய்க் கதைகள் எழுதுவதினால், எனக்கே ஒரு திகில் சூழ்ந்த உலகில் நான் மட்டும் தனியாக இருக்கின்றேன் என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. தனிமை அதிகமானால் குரூர கற்பனைகள் இயல்பாகிவிடும்.  அக்கற்பனைகளை அப்படியே எழுத்தாக்கிவிடுவதால் பணமும் செல்வாக்கும்  சிறப்புத் தொழில் நுட்ப வசதிகள்  கிடைத்தாலும் ஒரு வித விட்டேத்தியான விரக்தி மனப்பான்மை இருந்து கொண்டே இருந்தது. கழிவறைக்கு இரவில் செல்ல பயம். கத்தியை எடுத்து தக்காளியை வெட்டக் கூட பயம். நெருப்பைக் கண்டால் பயம். யாராவது தொட்டால்கூட கழுத்தை நெறிக்க வருகின்றார்களோ என்ற பயம். நான் வர்ணிக்கும் குரூரங்கள் எனக்கு நடந்துவிடுமோ என்ற பயம்.

ஒரு நாள் அறிவியல் புனைவு ஒன்றை எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு வாக்கியம் என்னை அறியாமல் மனதில் தோன்றியது.

 'நீ எழுதுவது எல்லாம் வேறு ஓர் இணை உலகில் யாருக்கோ  நடக்கின்றது, உனக்கு நடப்பது எல்லாம் வேறோர் உலகில் யாராலோ  எழுதப்படுகின்றது, எழுதப்படுபவை எல்லாம் யாருக்காவது நடக்கும்,  நடப்பவை எல்லாம்  நிச்சயமாக எழுதப்பட்டிருக்கும், அதுதான் இயற்கையின் நியதி'

கடவுளே, என் குரூர விவரணைகள் நிஜத்தில் நடந்தால்? . அந்த நொடியில்தான்  முடிவு செய்தேன். இனிமேல் நேர்மறைக் கதைகள் மட்டுமே எழுதவேண்டும் என.  உங்களிடம் சொன்ன இந்த உண்மையை  அப்படியே நாளை,  பேட்டியில் சொன்னால் சிரிப்பார்கள்.

' எழுத்தாளன் என்பவன் பலவகைகளில் எழுதி நிருபிக்கவேண்டும். நேர்மறை சமுதாயக் கதைகள் இப்பொழுது எல்லாம் அரிதாகி வருவதால் , நானே களத்தில் குதிக்க முடிவு செய்தேன் '  என்று பொய்யை சொல்லி அரசாங்கத்திடம் பாராட்டுகளைப் பெற்றேன்.

அடுத்து வந்த நாட்கள் முழுவதும் எனது யோசனை,

என் வாழ்க்கைக் கதையை யார் எழுதிக் கொண்டிருப்பர் . ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனித்தனி ஆள் எழுதுவாரா? இல்லை ஒரே ஆளா ? அப்படி எழுதுபவர்தான் கடவுளா ?  அப்படி என்றால் வேறோர் உலகத்தில் இருக்கும் சிலருக்கு நான் தான் விதியை நிர்ணயிக்கின்றேனா ? நான் படைத்த மனிதர்களை நிஜத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? அந்த இணை உலகத்திற்கு போக முடியுமா ? போக முடிந்தால் எப்படி போவது ? . பைத்தியக்காரத்தனமாக யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த யோசித்தலைக் கூட எவனோ ஒருவன் எழுதுகின்றானோ ?

parallel universe என்று தேடி 300 ஆண்டுகள் கோப்புகளில் இருந்து கண்டதையும் படித்தேன். இறந்த ஆத்மா எங்கு வேண்டுமானால் செல்லும் சக்தியைப் பெறும் என்று ஒருவன் எழுதியிருந்தான். இறந்த பின் அறிந்து என்ன பயன், இருக்கும்பொழுதே எனக்கான கடவுளை , கடவுள்களை அறிய வேண்டும்.

 'இப்பேரண்டம் முழுமையும் , இப்பேரண்டத்தில் இருக்கும்ஒவ்வொரு சிறிய துகளிலும்   அடங்கி இருக்கின்றது. '

அச்சிறியத் துகள் அளவுக்கு மாறினால் இணை உலகங்களை அடைய முடியுமோ?

'ஒரு மனிதனால் தன்னை கண்ணுக்குப் புலப்படாத துகள் அளவுக்கு சுருக்கிக் கொள்ள முடியுமா? " என்று தனிஅரட்டையில் நண்பனிடம் கேட்டேன்.  படித்துவிட்டான் என்று காட்டியது , ஆனால் பதில் சொல்லவில்லை. பைத்தியக்காரன் என்று நினைத்திருப்பான்.

அந்த சமயத்தில் ஒரு குழந்தை  பொம்மை விமானத்தை உருட்டி விளையாடுவதைப் போல ஒரு புகைப்படம் எனக்கான திரையில்  மேல் எழும்பியது.  நான் இயந்திர முகப்புப் பக்கம் என்று நீக்க நினைத்திருந்த பக்கம் தான் அது.  ஒரு பொதுவான நண்பர்கள் கூட இல்லை. குழந்தை - பொம்மை விமானப் படத்தைத் தவிர இருந்த ஏனைய படங்கள் எல்லாம்  வரைகலை வடிவப்படங்களாக இருந்தன. எத்தனை முயற்சி செய்தும் நீக்க முடியவில்லை. யோசித்து யோசித்து களைத்து அப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் அனைத்து வகையான தியானம் சம்பந்தப்பட்டவைகளை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதி பெற்று  தொலை புலன் தொடர்பில்  ஏற்றி வாசித்து தியானங்களின் வழியாக இணை உலகத்திற்குப் போக முயற்சி செய்தால் பசி மயக்கம்தான் வந்தது.

இணை உலகத்திற்கு செல்ல  நான் எடுத்த ஒரு முயற்சியும் வெற்றி அடையாததால்  வெறுத்துப் போய் இருந்த சூழலில்  ,  அந்த இயந்திர முகப்பு என்று கருதிய பக்கத்தில் இருந்து ஒரு செய்தி வந்திருந்தது .

"என்னைப் பார், எல்லாம் புரியும்"

குழந்தை - பொம்மை விமானம் அதே முகப்புப் படம், பெரிதாக்கி பார்த்தேன், விமானத்தின் எண் MH370. இது சில நூறாண்டுகளுக்கு  முன்னர் காணாமல் போன விமானம் அல்லவா ?  கடைசி வரை அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லையே அதைப் பற்றி ஒரு வரிக்கதைக் கூட எழுதி இருக்கின்றேனே.. ஒவ்வொருப் புகைப்படமாகப் பார்த்தேன். நூற்றாண்டு பழமை வாய்ந்த படங்களில் வரும் வேற்றுக் கிரக காட்சிகளைப் போல இருந்ததன. கடைசியாக ஒரு வீடியோ. அதை ஓடவிட்டேன். அதில் என்னைப் போல் ஒருவன்... அச்சு அசலாக..  இல்லை அது நானேதான்.

"என்ன கார்த்தி , நலமா ... என்னைத் தானே தேடிக்கொண்டிருக்கின்றாய். உனக்கான அத்தியாயங்களை எழுதுபவன் நான்தான். அதேப் போல் எனக்கான அத்தியாயங்களை எழுதுபவன் நீ .
நீ என்னைத் தேட தொடங்கிய அன்றே உன்னிடம் நான் வந்துவிட்டேன்...  "

பதிவ செய்யப்பட்டது என்று பார்த்தால், அது நேரலை வீடியோ.

"நீங்கள், நீ எந்த உலகத்தில் இருந்து பேசுகின்றாய் , யார் அந்த குழந்தை? எப்படி நான் உன் உலகிற்கு வருவது ? "

"யாரும் யார் உலகத்திற்குள்ளும்  நுழைய முடியாது, வேண்டுமானால் தன்னைத் தேட விரும்பும் எவரும்  தன் பிரதியைப்  பார்க்கலாம், எப்படி நான் உன்னைத் தேடி இப்படி வந்தேனோ அதைப் போல ஒவ்வொருவருக்கு ஒரு தளம் கிடைக்கும் "

"நீ ஏன் என்னைப் போல் இருக்கின்றாய் , உனக்கு பின்னால் வரும் அந்த பெண் யார் ? "

"கார்த்தி, நான் உன்னுடைய மூத்த பிரதி அதாவது , இவ்வுலகத்தில் நீ நானாக முன் கூட்டியே வாழ்கின்றாய்.  இவளை அடுத்த ஆண்டு நீ அறிந்து கொள்வாய், கடைசியாக சொல்கின்றேன்,  நாம் தான் நம் வாழ்க்கை அத்தியாயங்களை எழுதுகின்றோம். வேறு யாரும் எழுதுவதில்லை, எதைப்பற்றியும் குழப்பிக் கொள்ளாமல் நன்றாக தூங்கு, நாளை எல்லாம் சரியாகும்."  வீடியோ நின்றது, அந்த முகப்பும் காற்றுவெளியில் இருந்து சுவடின்றி மறைந்தது.

தன்னையறிந்த இந்த அனுபவத்தையே  பேட்டி கொடுத்தபத்திரிக்கைக்கு என் முதல் நேர்மறைக் கதையாய் அனுப்பி வைத்தேன்.  அதைப் படித்த வாசகிகளில் ஒருத்தியான  அம்மு  தொலை மனத்தொடர்பில் பாராட்டினாள்  .  நட்பு ஆனது. நட்பு காதல் ஆனது. காதல் வந்தால் தனிமை கிடையாது. தனிமையின் வெறுமை மறைந்தால்  இனிமை,  நேர்மறை எண்ணங்கள். முன்பை விட அதிக புகழ் பெற்றேன். ஆண்டுகள் ஓடின. ஒரு   நாள்  எங்கள் அஞ்சலிப் பாப்பாவிற்கு சிறிய விமான பொம்மையை வாங்கிக் கொடுத்தாள் அம்மு. சில நூற்றாண்டுகளுக்கு  முன்னர் காணாமல் போன ஒரு  விமானத்தின் சிறிய வடிவம் அது. குழந்தை குட்டி விமானத்துடன் விளையாட அம்மு அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க ,

ஆவணப் பெட்டகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பல நூற்றாண்டுபழமை வாய்ந்த சமூகவலைத்தளம் ஒன்று என் தொலைபுலன் தொடர்புத் திரையில் காரணமில்லாமல் வந்தது. அந்தகாலத்து வடிவமைப்பு, புரியாத வரிவடிவ எழுத்துக்களுடன் இருந்தது. எனது மென்பொருளினால் எனக்குப் புரியும் வரிவடிவத்திற்கு மாற்றினேன். பேஸ்புக், கார்த்தி அட, என் பெயரில் எவனோ ஒருவன் அந்த காலத்தில் இருந்திருக்கின்றான். ஏதோ ஒரு தகவல் பதிந்து இருக்கின்றான்.

"என் வாழ்க்கைக் கதையை யார் எழுதிக் கொண்டிருப்பர் . ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனித்தனி ஆள் எழுதுவாரா? இல்லை ஒரே ஆளா ? அப்படி எழுதுபவர்தான் கடவுளா ?  அப்படி என்றால் வேறோர் உலகத்தில் இருக்கும் சிலருக்கு நான் தான் விதியை நிர்ணயிக்கின்றேனா ? நான் படைத்த மனிதர்களை நிஜத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? அந்த இணை உலகத்திற்கு போக முடியுமா ? போக முடிந்தால் எப்படி போவது ? . பைத்தியக்காரத்தனமாக யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த யோசித்தலைக் கூட எவனோ ஒருவன் எழுதுகின்றானோ ? "

------------- 





Tuesday, May 13, 2014

பக்கத்து வீட்டுப்பெண் - சிறுகதை

ஒட்டுக்கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சுவற்றில் காதை வைத்து, அடுத்தவர் வீட்டில் என்னப் பேசிக்கொள்கின்றார்கள் என்பதில் ஏனோ ஓர் ஆர்வமுண்டு. பக்கத்துவீட்டில் பேசிக்கொள்ளப்படும் மொழி எனக்குப் புரியவில்லை எனினும்,வாக்கியங்களின் ஏற்ற இறக்கங்களை வைத்து, சண்டையா, கொஞ்சிக் கொள்கின்றனரா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த புதுக்குடியிருப்புக்கு வந்தபின்னர், ஓட்டுக்கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.

காதில் ஒலிவாங்கியை மாட்டி, பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தாலும், உள்நுழைந்து என் கவனத்தைத் திசைத் திருப்பும் அளவிற்கு பக்கத்து வீட்டில் இருந்து எப்பொழுதும் சத்தம்தான். கணவன் மனைவியா , காதலன் காதலியா என்று தெரியவில்லை.

பக்கத்துவீட்டுப் பெண் அலறிக்கொண்டே இருப்பாள். ஆண் கத்திக் கொண்டே இருப்பான். சமயங்களில் சண்டை நள்ளிரவு வரை நீடிக்கும். ஒருநாள் கதவைத் தட்டி, அமைதிக் காக்கும்படி சொல்லிவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவர்களின் ஆக்ரோசச் சண்டையில் வெளிநாட்டுக்காரனான என்னை அடித்துவிட்டால் என்ன செய்வது என்று காதில் பஞ்சடைத்துக் கொண்டு தூங்கிவிடுவேன்.

ஒருநாள், பக்கத்துவீட்டு, ஆண் கதவைப் பூட்டிவிட்டுப் போவதைப் பார்த்தேன். உள்ளிருந்து பெண்ணின் குரல். எனது அடிப்படை இத்தாலிய அறிவை வைத்து, நான் புரிந்து கொண்டது,

"பூட்டிவிட்டு போகதே, நான் எங்கும் வெளியே போகமாட்டேன்".

கொடுமைக்கார காதலன்/ கணவனாக இருப்பான் போலிருக்கின்றதே. தொடர்ந்து ஒரு வாரம் கவனித்தேன், பெண்ணின் கதறலை மீறி, இவன் பூட்டிவிட்டு செல்வதைப் பார்த்ததும் என்னுள் இருந்த துப்பறியும் சாம்பு விழித்துக்கொண்டான்.

ஒருநாள் எனது வேலைகளை விட்டுவிட்டு, அவனைப் பின் தொடர்ந்தேன். அவனது அலுவலகம் சென்றான். மதியம் உணவு இடைவேளையில், அருகில் இருந்த பூங்காவிற்கு வருகின்றான், மடிக்கணினியைத் திறந்து ஏதோ  பார்க்கின்றான். நடைபழகுவதைப் போல அவன் பின் பக்கம் சென்று என்னப் பார்க்கின்றான் எனப்பார்த்தேன். அவனது வீட்டில் இருந்து நேரலை ஒளிப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சிசிடிவி கேமரா வைத்து, பெண்ணைக் கண்காணிக்கின்றானே. தேர்ந்த கொடுமைக்காரன் போல.

பக்கத்துவீட்டு வாக்குவாதங்களைப் புரிந்துகொள்வதற்காகவே இத்தாலிய மொழியை வேகமாகக் கற்றுக்கொண்டேன். வழக்கமாக ஓங்கி ஒலிக்கும் பெண்குரல் இன்று கெஞ்சிக் கொண்டிருந்தது.

"செத்துப்போய்டவா, ஒழுங்கா சொன்ன பேச்சைக் கேட்கலான்னா, உன் கண் முன்னாடியே கையை அறுத்துக்கிட்டு செத்துடுவேன், நான் வாழனும்னு நீ நினைச்சின்னா ஒழுங்க இரு, யாரையும் எதையும் செய்யவேண்டாம்" என்றான் ஆண்.

பெண் கெஞ்சி கெஞ்சி அழும் குரல் கேட்டு பின் நிசப்தமானது.

மறுநாள், முதன்முறையாக பக்கத்துவீட்டு ஆண், அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தான். அந்தப் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில்,  அவர்களை முந்திச்சென்று, அவளை ஓரக்கண்னால் பார்த்தபடி, அவனுக்கு வணக்கம் சொன்னேன்.

நான் ஓரக்கண்ணால் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, சுட்டெரிப்பதைப் போலப் பார்த்தாள். பார்வையில் பயந்துப்போய் , அவர்களுடன் லிஃப்டில் செல்லாமல், படியில் இறங்கிவிட்டேன். . அன்றிரவு சத்தம் குறையும் என்று பார்த்தால் மறுபடியும் அதிகரித்தது.  ஆண் தான் செத்துப்போகப்போவதாக மிரட்டிக்கொண்டிருந்தான். பெண்ணின் அழுகுரல். யாராவது இவனைக் காப்பாற்றுங்களேன் என்ற குரல்.

உடனடியாக போலிஸிற்கு அழைத்து வரவழைத்தேன். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து, உள் நுழைய மணிக்கட்டை அறுத்துக்கொண்டு இரத்தவெள்ளத்தில் கிடந்தான். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டான்.

அப்பெண்ணை அவ்வீட்டினில் தேடினேன். அவள் இல்லை. சன்னல் எல்லாம் அடைக்கப்பட்டுத்தான் இருந்தது. மெல்ல குடியிருப்பின் சொந்தக்காரரை நெருங்கி,

"இவ்வீட்டில் இந்தப் படத்தில் இருக்கும் பெண்ணும் இருக்கின்றாள் சார், அவளின் குரலைக் கேட்டிருக்கின்றேன், அடிக்கடி சண்டைப்போட்டுக்கொள்வார்கள், இவன் மிரட்டுவான் , அவள் அழுவாள், அவளை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டுப் போய்விடுவான்,"

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,

"அவள் அவனின் காதலி, சிலரால் கொடூரமாக கொல்லப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன, அவள் இறந்தபின்பு இவன் கிறுக்குப்பிடித்தவன் மாதிரி அவளின் குரலிலும் தன் குரலிலும் மாறிமாறிப்பேசிக்கொள்வான், அதைத்தான் நீ கேட்டிருப்பாய்"

அப்படியானால், அவர்கள் இருவரையும் ஒருசேர அன்று பார்த்தேனே!!, பார்த்ததை அவரிடம் சொல்லவில்லை. மருத்துவமனைக்கு விரைந்தேன். கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர் சொன்னார். அவனின் நெருங்கிய நண்பன் என்று சொல்லி மன்றாடி அனுமதிப் பெற்றுவிட்டு அந்த சிகிச்சை அறைக்குள் நுழைந்தேன். அந்தப்'பேய்'ப்பெண்ணும் அங்கிருந்தாள். இந்தமுறை உக்கிரமான பார்வையில்லை.

மெல்ல கண் திறந்த பக்கத்துவீட்டுக்காரன், உடைந்த ஆங்கிலத்தில்,

"இதோ இவள் என் காதலி, இறந்துவிட்டாள், . இவளுக்கு அவளைக் கொன்றவர்களைப் பழிவாங்க வேண்டும்,  பழிக்குப் பழிக்கூடாது என்பது என் நோக்கம். அந்த வாக்குவாதங்களைத்தான் நீ கேட்டிருப்பாயே, என்னை மீறி அவள் வெளியேப்போகக் கூடாது என்பதன் உணர்வுப்பூர்வமான தடைதான் அவளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்வது"

பேய்கள் மனிதர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதைப் பற்றி படித்திருக்கின்றேன். ஆனால், ஒரு பெண் இறந்து பழிவாங்கத் துடிக்கும் பேய் ஆன பின்னரும் காதலின் அன்பின்  கட்டுக்குள் இவன் வைத்திருக்கின்றானே....

"நான் என்ன செய்யவேண்டும், சொல் " என்றேன்.

"இதோ, இந்த மருத்துவக் கவசங்களை நீக்கி என்னைக் கொன்றுவிடு, இவளுடன் நான் வேறுலகத்திலாவது இணைந்து வாழ்கின்றேன்"

அந்தப்பேய்ப்பெண், உக்கிரமான பார்வையில் ,

"இவன் வாழவேண்டும், இவனுக்கு ஏதாவது நேர்ந்தால் உன்னைக் கொன்றுவிடுவேன்"

 "சீக்கிரம் என்னைக் கொன்றுவிடு" என்ற அவன் என்னைக் கெஞ்ச

"அவனை ஒன்றும் செய்யாதே" என்று பேய் அலற, மருத்துவர் கதவைத்திறக்க,

அவனைக் கொன்று விடுதலை செய்யவா, கொல்லாமல் வாழவிடவா
நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் நீங்களே சொல்லுங்கள்.

Monday, March 24, 2014

ஒரு குட்டிக்கதை - கொஞ்சூண்டு திகில் இருக்கலாம்

'டாக்டர், என் பேர் கீர்த்தனா, ஐடி ல வொர்க் பண்றேன்'
'சொல்லுங்க கீர்த்தனா , என்ன பிராப்ளம்'
'இப்பொவெல்லாம் நடுராத்திரில காதுக்குள்ள டைப்படிக்கிற சத்தம் கேட்டு தூக்கம் கலையுது டாக்டர்'
'காலையிலேந்து , கம்ப்யூட்டர், லேப்டாப் என டைப்பிங் என்விரான்மென்ட்ல இருப்பதுனால அந்த பிரமையிருக்கலாம்'
'பர்ஸ்ட் நானும் அப்படித்தான் நினைச்சேன் டாக்டர், பட் இது நிறைய கம்ப்யூட்டர்ஸ் ல அடிக்கிற டைப்பிங் சவுன்ட் கிடையாது, ஒரு கம்ப்யூட்டர்ல பொறுமையா பத்து கீஸ்ட்ரோக்ஸ் அடிச்சா இருக்குமே அப்படி கேட்குது, அப்புறமா நின்னுடுது'
'பகல்ல இதுமாதிரி கேட்டிருக்கா'
'வீக்டேஸ்ல தெரியல டாக்டர், வீக் என்ட்ஸ்ல , காதுக்குள்ள டைப்படிக்கிறமாதிரி கேட்டிருக்கு, இதோ இப்பக்கூட கேட்குது டாக்டர்'
பல மைல்கள் தொலைவில், அமெரிக்காவின் ஒரு மூலையில் , விடிந்ததும் விடியாததுமாய் கார்த்தி, தனது மின்னஞ்சலுக்கான பாஸ்வேர்டை அடிக்க ஆரம்பித்தான்.  Keerthanaa

Thursday, February 06, 2014

மேரி - சிறுகதை

சந்தர்லேந்தில் இருந்து 20 மைல்கள் தொலைவில் இருக்கும் இந்த பள்ளிக்கு, அம்மு, நிரந்தர தலைமை சமையல்காரராக வந்ததும் வராததுமாய்   தனது உதவியாளர்கள் லின், ஜாக்குலின் , ஜின், கரோலின் ஆகியோர்களிடம் கேட்ட கேள்வி " மேரி எப்படி இருக்கின்றாள் " என்பதுதான்.

ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்த  அவர்களை அம்மு அப்படி கேட்க ஒரு பெரிய கதை இருக்கின்றது. அந்தக் கதையை நான் உங்களுக்கு சொல்கின்றேன்.  ஆறு மாதங்களுக்கு முன்னர் , இதே பள்ளிக்கு தற்காலிக தலைமை சமையல் ஆளாக அம்மு வந்திருந்த பொழுது நடந்த கதை.   
---
அம்மு, இந்தியத் தமிழ்ப்பெண்,  வடக்கு இங்கிலாந்தில் , அதுவும் வயதில் 50 களைக் கடந்த  உதவி சமையல் ஆட்களுக்கு  வெள்ளையரல்லாத ஒருத்தி அதிகாரம் செலுத்தும் இடத்திற்கு வருவது அறவே பிடிக்கவில்லை.  ஆங்கிலேயர்களுக்கு அன்றும் இன்றும் மற்றவர்கள் ஏவலாட்களாக இருந்தால் பிடிக்கும்.  மேலாளர்களாக , மற்றவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது.   இருந்தாலும் , இரண்டு வாரங்கள் தானே என வெறுப்பைக் காட்டிக்கொள்ளாமல் அம்முவுடன் நட்பு பாராட்டினர். 

" இனிமேல் நாங்கள் நான்கு பேரும் உன் தோழிகள், இன்னொரு தோழியும்  கூட இருக்கின்றாள் "  

" யார் அந்த தோழி , வேலைக்கு விடுப்பா ?"  என்ற அம்முவின் கேள்விக்கு   நான்கு ஆங்கிலேய உதவியாளர்களும் சிரித்தனர். 

" மேரி ,  இந்தப்பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வேலை பார்த்தவள் , ஒரு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே மாரடைப்பினால் இறந்து போனாள்"  

"பயப்படாதே , புதிதாய் வந்து இருப்பவர்களை மட்டும் மிரட்டும், பழைய ஆட்களை ஒன்றும் செய்யாது " என லின் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க 

அம்முவின் கண்களில் கலவரம் தெரிந்தது . இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல்  

"இந்தியாவில் இருந்த பொழுது , உங்களின் ஆங்கிலேயப் பேய்களை விட பயங்கரமான பேய்களைப் பார்த்து இருக்கின்றேன் , சரி வேலையை ஆரம்பிப்போம் "   என பயத்தையும் வேலையாட்களையும் விரட்டினாள். 

ஒரு நாள் கழிப்பறை உட்பக்கமாக தாழிடப்பட்டு இருக்கிறது. மற்றொரு நாள் யாரோ ஓடுவதைப்போல இருக்கின்றது என லின் , ஜாக்குலின் அம்முவிடம் வந்து சொன்னார்கள். 
  
அடுத்த வாரம் ,

 "லின் ... மேசையில் இருந்த இனிப்புகளைக் காணவில்லை  இனிப்பின் காகிதங்கள், குப்பைத் தொட்டியில் கிடக்கின்றன , வெள்ளியன்று நான் தான் சமையல் அறையைப் பூட்டினேன் , இன்று திங்கள் , நான் தான் முதல் ஆளாய் திறந்தேன் .. வார இறுதியில் வேறு யாரவது இங்கு வருவார்களா  "  

"அனேகமாக , மேரி எடுத்து சாப்பிட்டு இருக்கலாம் "  

" நகைச்சுவைக்கான நேரம் இதுவல்ல, லின்,  பொருட்கள் ஏதேனும் காணமல் போய் இருக்கின்றதா எனப்பாருங்கள் " 

கெகெபிக்கெவென நான்கு உதவியாளர்களும் சிரித்ததைப் பார்த்த அம்மு அவர்களைப் பார்த்து முறைத்தபடி 

" தங்களை வைத்து கிண்டல் செய்யப்பட்டால், இந்தியப் பேய்களுக்கு கோவம் வரும், தொடர்ந்து வந்து துரத்தும்...  ஆங்கிலப் பேய்களுக்கு எப்படி எனத் தெரியவில்லை "  

வெட்டியாய் இருத்தல்தான் கிலியைத்தரும். சமையல் கால் பங்கு என்றால், அது சார்ந்த சுகாதாரம்,  சரிவிகித உணவு கண்காணிப்பு , பரிமாறுதல்  வேலைகள்  ஆகியன முக்கால் பங்கு. ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கான உணவு என்பதால் இந்தக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். இந்தக்கவனக்குவிப்பான வேலை மும்முரத்தில் பேயாவது பிசாசாவது என அடிக்கடி சொல்லிக்கொண்டு அம்மு பணிகளில் மூழ்கி போய்விட்டாள். தற்காலிகப் பொறுப்பின் கடைசி நாளன்று ஒரு புகார் ஒன்று வந்தது.  தலைமை ஆசிரியர் , அம்முவை அழைத்து , ஒரு குழந்தை , உணவு சூடாகப் பரிமாறப்படுவதில்லை என , தனது பெற்றோரை இன்று கூட்டி வருகின்றது என சொன்னார். 

உதவியாளர்கள் இந்த பிரச்சினையைப்பற்றி கவலையேப்படாமல்  அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அம்மு, தான் இந்தப்பள்ளிக்கு வந்த நாள் முதல் , உணவு விகிதங்கள் , வெப்ப அளவீடுகள் என அனைத்தையும் அலுவலக  குறிப்பு ஏடுகளில் ஆவணப்படுத்தி வைத்து இருந்தமையால் உதவியாளர்களின் அக்கறை இன்மையை பற்றிக் கவலைப்பட்டதாக தெரியவில்லை.  குழந்தைகளுக்கு உணவுப் பரிமாறப்படும் முன் , சூட்டை அளவு எடுத்துவிடலாம் என்றால் , வெப்ப மணியைக் காணவில்லை.  அதைத் தேடி எடுத்து சூட்டை சோதித்தால் கருவி வேலை செய்யவில்லை. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அம்மு படபடப்பானாள்.  புதிதாக வாங்கிய கருவி. பழுதாக வாய்ப்பில்லை என ஆராய்ந்ததில்  பேட்டரியைக் காணவில்லை.  பேட்டரி கழண்டு கீழே விழும் அளவிற்கு இலகுவான மூடி அல்ல.  

" இறுக்கமாக மூடி இருக்கின்ற வெப்ப மானியில் எப்படி பேட்டரி காணாமல் போகும்  "  

'ஒரு வேளை மேரி எடுத்து இருப்பாளோ "  என்று சொன்ன லின்னைப் பார்த்து ஒரு பேயைப்போல முறைத்தாள் அம்மு. 

அனைவரும் தேடினர். பாத்திரங்கள் வைக்கும் மரப்பலகைக்கு அடியில் சுவற்றை ஒட்டியபடி கிடந்த அந்த சிறிய  பேட்டரியை அம்மு எடுத்தாள், வெப்பமானியை சரி செய்தாள், சூட்டை குறித்துக் கொண்டாள். புகார் செய்த குழந்தையின் பெற்றோர் உணவை சரிப்பார்த்தனர். அவர்களுக்கு திருப்தி.  தலைமை ஆசிரியருக்கும் திருப்தி.  கடைசி நாள் அதுவுமாக பிரச்சினை ஏற்பட்டு நல்லவிதத்தில் சரியானது அம்முவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.  எல்லோரிடமும் இருந்து விடைபெற்றுக் கொள்கையில் , அவளின் உதவியாளர்கள் பேயறைந்ததைப் போல இருந்தனர். 

நான்கு உதவியாளர்களும் , கறி பெண்   என அம்முவை திட்டிக்கொண்டே கூடினர் . கறி என்பது  இந்தியர்களுக்கான பட்டப்பெயர்.  

" ஜாக்குலின்  தானே பேட்டரியைக் கழட்டினாள்" 

" ஆமாம் லின் , இதோ பார், என்னிடம் தான் இருக்கின்றது, அப்புறம் எப்படி அந்த கறி பெண்ணிற்கு பேட்டரி கிடைத்தது " 

'ஒரு வேளை மேரி "  என்றாள் லின் . 

---

இதுதான் ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்த கதை. இருங்கள் ... இருங்கள் , கதை முடியவில்லை.  உண்மையில் வெப்பமானியை வாங்கும் பொழுது ஒன்றிற்கு இரண்டாய் பேட்டரிகளை அம்மு வாங்கி வைத்து இருந்தாள்.  பேட்டரியைக் காணவில்லை என்றவுடன்,  இவர்கள் தான் எடுத்து இருப்பார்கள் என அவளுக்குப் புரிந்தது.  படபடப்பானதைப் போல காட்டிக்கொண்டு , பேட்டரியை அடியில் உருட்டி விட்டு பயம் காட்டியவர்களுக்கே பயம் காட்டிப் போனவள் தான் திரும்ப நிரந்தர தலைமையாக வந்து இருக்கின்றாள்.   சரி இந்தக் கதை எனக்கு எப்படித் தெரியும்  ....தெரியும்   தெரியும்   ....இதை எல்லாம் பார்த்தவள் நான்...நான் தான் மேரி. 

Saturday, January 11, 2014

இவருக்குப் பதில் இவர் - சிறுகதை


"இந்த வீடு நல்ல ராசியான வீடாம், நினைச்சது எல்லாம் நடக்குமாம், ஹவுஸ் ஓனர் சொன்னதைக் கேட்டியா?"   நான் சொன்னதை கவனிக்காமல்

'சூப்பர், இந்த  கேரக்டருக்கான ஆளை மாத்திட்டாங்க ... '  என அம்மு குதித்தற்கான காரணம் அவளுக்குப் பிடித்த தொலைக்காட்சித் தொடர் ஒன்றில், தொடர்கள் அடிக்கடி செய்யக் கூடிய 'இவருக்குப் பதில் இவர்' என ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவருக்குப் பதிலாக பிரபலமான நடிகர் ஒருவரை மற்றியதுதான்.

'சீரியல்ல ஆளை மாத்துற மாதிரி, இவருக்குப் பதில் இவர் என வாழ்க்கையிலும் ஆளை மாற்றும் வாய்ப்பு இருந்தால் எப்படி இருக்கும்?"

அம்மு மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.  அந்தப் பார்வை ஏதோ சண்டைக்கான அடித்தளம் போல இருந்தது.

"அப்படி மாத்தலாம்னு இருந்தால், யார கார்த்தி, நீ மாத்துவ'

சரியான அளவில் கால்களுக்கும் மட்டைக்கும் இடையில் எறியப்பட்ட பாதங்களைப் பதம்பார்க்கும் பந்து. இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது எனத் தெரியவில்லை.

"சும்மா, ஒரு கியுரியாசிட்டி, டிஸ்கஷனுக்காக கேட்டேன் அம்மு, நெவர் மைன்ட்"

"நானும் கியுரியாசிட்டிலதான் கேக்குறேன், எனக்கான உருவத்தைத் தானே மாத்திடுவ.... " இது மூக்கை உரசிச் சொல்லும் பவுன்சர்.

பந்துவீச்சாளர்கள் கடுங்கோபத்தில் பந்து வீசும் பொழுது, ஒன்றும் செய்யாமல் எப்படியாவது ஒப்பேத்திவிடனும். அப்படி இல்லை எனில், ஒன்று பெவிலியன் அல்லது ஹாஸ்பிடல்.  நான் பதில் சொல்லவில்லை.

"உனக்கு இன்னும் அவளை மறக்க முடியல கார்த்தி, ரிப்ளேஸ்மென்ட் சான்ஸ் கிடைச்சா, நான் தான் பர்ஸ்ட் பலியா இருப்பேன், அப்படித்தானே"

"அம்மு, லிசன் ... முகமும் குரலும் மாறினாலும், இந்த சீரியல்ல கேரக்டர் , மத்த கதாபாத்திரங்களோட நட்பு உறவு எல்லாம் அதேதானே , என் அம்முன்னா வெறும் முகமும் குரலும் மட்டுமில்ல, அவளோட கேரக்டர் , அன்பு பாசம் நேசம் எல்லாம், இதை எல்லாம் ரிப்ளேஸ் செய்ய முடியாது"
என்று ஒருவழியாக பந்தைத் தடுத்தாடினேன்.

சிலவினாடிகள் மௌனத்திற்குப்பின்னர், "சரி, அம்மு உனக்கு அப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா யாரை மாத்துவ"  கவர் டிரைவ் என நானே நினைத்துக் கொண்டு கேள்வியைக் கேட்டேன்.

என் கேள்வியைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாதவள் போல , மடிக்கணினியை திறந்து , யுடியூபில் மீண்டும் அந்தத் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்க ஆரம்பித்தாள்.

 பெண்கள் தங்களுக்குப் பதில் தெரியாத, பதில் சொல்ல விரும்பாத கேள்விகளை எப்படி தவிர்ப்பது எனத்தெரியும்.  ஆண்கள்தான் வேலை மெனக்கெட்டு பொய்யாக இருந்தாலும் ஏதாவது ஒரு பதிலை சொல்லுவார்கள்.

என் எண்ணம் எல்லாம், அந்த 'இவருக்குப் பதில் இவர்' என்பதிலேயே இருந்தது.

 அம்மு சொல்லுவதைப்போல , அம்முவை மாற்றி இருப்பேனோ... மாற்றி இருந்தால் யாரை வைத்து அவளை மாற்றி இருப்பேன். என் முதல் காதலி... இருக்கலாம். முதல் காதலின் பிரெஷ்னெஸ் மழைச்சாரல்.   அம்மு கியுட் தான், ஆனால் என்னுடைய ஆரம்ப இருபதுகள் மனநிலைக்குப் போனால், முதல் காதலி செம கியுட். முதல் காதலியின் முகம் மற்றும் குரல்  ஆகியவற்றுடன் அம்முவோட அன்பு பாசம் நேர்மை அர்ப்பணிப்பு அட்டகாசமாக இருக்கும் தானே !!!

இன்றைக்கான அத்தனைத் தொலைக்காட்சித் தொடர்களையும் அம்மு பார்த்து முடித்துவிட்டாள் என்பதை அவள் என் தோளைத் தொட்டு , முகத்தைத் தோள்பட்டையில் வைத்துக் கொள்கையில் புரிந்து கொள்ள முடியும்.

"புது வீடு, புது வாசம் புதுசா ஏதாவது டிரை பண்ணுவோமா " என அவளை அணைத்துக் கொண்டேன்.  விடியல் விரைவாகவே வந்தது.

அதிகாலையில், ஒரு பெண்ணின் குரல் குளியல் அறையில் இருந்து அலறலாகக் கேட்டது. எங்கேயோ கேட்ட குரல்.

முகத்தைப் பொத்திக் கொண்டு "கார்த்தி, இங்கே பாரு என் முகம் வேற மாதிரி கண்ணாடியில் தெரியுது"

கண்ணாடியில் தெரியும் முகமும் அவளின் முகமும் ஒன்று. அவள் என் பழையக் காதலி. இவளுக்குப் பதில் அவளா...

திரும்பக் கண்ணாடியைப் பார்த்தேன். அய்யோ !!! இது நானில்லை. வேறு ஒருவன். அம்மு முகத்தில் இருந்து கைகளை விலக்கினாள்.

"ஜீவா,,,, நீயா ,,, நீ இங்க எப்படி... கார்த்தி "

 எனக்குப் பதில் அவனா.

என்னை விட ஜீவா , அழகா இருந்திருப்பான் போல.

அம்மு திகில் அடித்ததைப்போல இருந்தாள். வீட்டில் இருக்கும் அத்தனை கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினாள்.

அவள் அளவுக்கு எனக்கு திகிலும் இல்லை கோபமும் இல்லை.
வாழ்க்கையில் இனி என்ன வேண்டும், முன்னொரு காலத்தில் நான் உருகி உருகி காதலித்தப் பெண் வடிவில் , இன்று என்னை உருகி உருகி நேசிக்கும் பெண். அவளுக்கு அவள் ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்த ஆணின் உருவில் நான்.  எனக்கு இது வின் - வின் சூழலாகத் தெரிந்தது.

"அம்மு, ஒருவேளை நம்முடைய பிரமையாக இருக்கும். ஒரு போட்டோ எடுத்துப் பார்ப்போமா"

புகைப்படத்திலும் எனக்குப்பதில் அவன், இவளுக்குப்பதில் அவள்.  இதுக் கூட தோற்ற மயக்கமாக இருக்கலாம் என பேஸ்புக்கில் புகைப்படத்தைத் தரவேற்றினால்.


"யார் இவர்கள், உங்களது தோழர்களா " என நண்பன் ஒருவன் கேட்டு இருந்தான்.

 உண்மையிலேயே எங்களை அவர்கள் ரிப்ளேஸ் செய்துவிட்டார்கள் என்பது விளங்கியது. எனக்கு திகிலை மீறிய கிளுகிளுப்பு இருந்தது. புத்தம் புதிதாய் ஒரு புதிய பெண் என் படுக்கை அறையில், எனக்கானவளாய்.

வாழ்க்கை என்ற நுண்கணிதத்தில் ஆண்கள் தொகைநுண்கணிதம் போல. அவர்களால் வாழ்க்கையில் அனைத்தையும் அரவணைத்துச் செல்ல முடியும்.

அம்முவின் தோளைத் தொட்டேன், விலக்கினாள்.

"வேண்டாம் கார்த்தி, தொடாதே !!  "  அம்முவின் அழுகையை நிறுத்த முடியவில்லை.  அன்றைய நாள் முழுவதும் வீட்டை விட்டு வெளியேப்போகவில்லை.  யாரைப்பார்ப்பது என்ன செய்வது எதுவுமே தெரியவில்லை.  அம்முவை கார்த்தையையும் நாங்கள் கொன்றுவிட்டோம் என கைது கூட செய்யப்படலாம்.

கண்ணாடித்துகள்களை எல்லாம் கூட்டிப்பெருக்கினோம். நேற்றைய மீத சாப்பாட்டை சாப்பிட்டோம்.  அம்மு தொலைக் காட்சித் தொடர்களின் அன்றைய பகுதிகளைப் பார்க்க ஆரம்பித்தாள். தோளைத் தொட்டாள் சாய்ந்தாள். அணைத்து முத்தமிட முயற்சிக்கையில் தள்ளிவிட்டாள்.

"நீ கார்த்தி தான், ஆனால் என் கண்களுக்கு நீ அவன்... எனக்குப்பிடிக்கல கார்த்தி, உன் கூட எந்தவிதத்திலும் நெருக்கமாக இருக்க என்னால் முடியாது , செத்துடலாம் போல இருக்கு... நான் செஞ்ச ஒரே தப்பு, நேத்து நீ அந்த கேள்வியைக் கேட்டப்ப , நீ ஒருவேளை ஜீவா உருவத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என யோசிச்சதுதான்... ஆனால் சத்தியமா உன்னைத் தவிர உன்னிடத்தில் வேறு எந்த உருவத்தையோ குரலையோவைக்க முடியாது"

பெண்கள் வகைநுண்கணிதம் போல. பகுப்பாய்வின் அடிப்படையில் வாழ முடியும். ஒன்றை பழைய காலத்தில் பிடித்து இருந்தாலும், காலம் கடந்து பழையது மீண்டு வந்தாலும் பகுத்து அவர்களால் ஒதுக்க முடியும்.

இருவரும் விலகியேப் படுத்துக் கொண்டோம்.  இந்தப் பாழாய்ப்போன வீட்டிற்கு ஏன் குடிவந்தோம் என இருந்தது.  விடியல் நீண்டு கொண்டே இருந்தது. எப்பொழுது தூங்கினேன் எனத் தெரியவில்லை, காலையில் கார்த்தி என காது மடல்களுக்கு அருகே அம்முவின்  குரல். கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். இமைகளை  மெதுவாகத் திறந்தேன்.
                         ---------------------





Thursday, December 19, 2013

தன்னைப் போல் ஒருத்தி - சிறுகதை

"காரோ ..." 

மூன்றாவது தடவையாக ஆஞ்சலிகா என்னைக் கூப்பிட்டாள்.  காரோ என்பது அன்பே என்பதற்கான இத்தாலியச்சொல். 

"சொல்லுடி ..."  அவளுக்குத் தமிழ் தெரியாது என்றாலும் இந்த வார்த்தைப்புரியும். 

" அந்த டோல்சே - கப்பானா (Dolce & Gabbana The One: "Street of Dreams) விளம்பரம் பார்த்தாயா? "  இத்தாலியத்தில் கேட்டாள். 

" ஆமாம் பார்த்தேன், ஸ்கேர்லத் யோகன்சன் நடித்தது ...  கறுப்பு வெள்ளையில் கவனத்தை ஈர்க்கின்றது "   ஆங்கிலத்தில் பதில் கொடுத்தேன். 

"அதில் வரும் ஸ்கேர்லத் யோகன்சனைப் போல அச்சு அசப்பில் நான் இருக்கின்றேன் அல்லவா " 

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. ஸ்கேர்லத் அத்தனை அழகு.  யுடியூபில் வரும் அத்தனை விளம்பரங்களையும் தவிர்க்க முடியாத அந்த ஐந்து வினாடிகள் மட்டும் காத்து இருந்து ,முழு விளம்பரத்தையும் பார்க்காமல் நேரிடையாக பாடலுக்கு தாவிவிடுவேன். ஆனால் இந்த டோல்சே கப்பானா வாசனைத் திரவிய விளம்பரம் மட்டும் விதிவிலக்கு.ஸ்கேர்லத் யோகன்சன் மட்டும் என் கண் முன் வந்து நின்றால் இந்த ஆஞ்சலிகா, இந்த இத்தாலிய வேலை , பணம், புகழ் அத்தனையையும் விட்டுவிட்டு ஸ்கேர்லத் காலடியில் கிடப்பேன். 

எனது நக்கல் சிரிப்பைக் கவனித்த ஆஞ்சலிகா , பழைய நாளிதழ்களில் சிலவற்றுடன் தனது படங்களையும்  எடுத்து வந்து அதில் இருந்த ஸ்கேர்லத் படங்களுடன் ஒப்பிட்டு பேசிக்கொண்டு இருந்தாள்.  ஆஞ்சலிகாவும் அவளது படங்களில் நன்றாகத்தான் இருந்தாள். ஆனால் ஸ்கேர்லத் யோகன்சனின் சினிமா ஸ்டில்களுக்கு முன்னால் ஆஞ்சலிகா தூசு. 

பெரும்பாலும் வெள்ளைக்காரப் பெண்கள் ஓர் அதிக ஈர்ப்புடன் இருப்பதற்கான காரணம் அவர்களின் உடலுக்கு ஏற்ற உடை தேர்வும் அவர்களின் நிறமும். ஆஞ்சலிகா உட்பட , பெரும்பாலான வெள்ளைக்காரப் பெண்களை மாநிறமாக மாற்றிவிட்டால் நம்மூரின் சுமாரானப் பெண்களைவிட சுமாராகத்தான் இருப்பார்கள்.  ஆனால் ஸ்கேர்லத் ஒரு விதிவிலக்கு. அவளை ஆப்பிரிக்க கறுமை நிறத்திற்கு மாற்றினாலும் அழகு. அனேகமாக கிளியோபட்ரா கறுப்பு ஸ்கேர்லத்தாக இருந்து இருக்கவேன்டும். 

ஐரோப்பா வந்ததும் வெள்ளைக்காரத் தோழி இருக்கின்றாள் என்பதை உலகத்திற்குக் காட்டிக்கொள்ள முதலில் சிக்கும் பெண்ணிடம் பெரும்பாலான இந்தியர்கள் அதீதநட்புடன் இருப்பார்கள். இங்கு நட்பு  படுக்கைக்கும் சில சமயங்களில் போய்விடுவதால் அது காதலாய் கசிந்துருகிவிடுகின்றது.  இந்திய் ஆண்களுக்கு வெள்ளைக்காரத் துணை இருப்பது, ஒருவிதத்தில் சமூக பாதுகாப்பு மேலும் விசா போன்ற விசயங்களுக்கும் துணைபுரியும்,  கடைசி வருடப்படிப்பின் பொழுது ஆஞ்சலிகாதான் மெக்டோனல்ட்ஸில் வேலை பார்த்து என்னைப் படிக்க வைத்தாள். ஆக வெள்ளைக்கார மோகம் காமத்தில் ஆரம்பித்து இப்பொழுது ஓர் அளவிற்கு வேறு வழி இல்லாத அன்பில் வந்து நிற்கின்றது. 

மறுநாளும் ஆஞ்சலிகா , ஸ்கேர்லத் புராணத்தை ஆரம்பித்தாள். 

"கடைசி பத்து ஆண்டுகளாகவே ஸ்கேர்லத் போல இருக்கின்றேன் என எனக்குத் தெரியும்... ஆனால் யாரிடமும் சொன்னதில்லை... உன்னைக்கூட , உனது விருப்பமான நடிகை ஸ்கேர்லத் யோகன்சன் என சொன்னபிறகுதான் மிகவும் பிடித்துப் போனது " 

நான் ஒன்றும் சொல்லவில்லை.  கல்லூரியில் படிக்கும்பொழுது நடிகர் மாதவன் அலைபாயுதே படத்தில் காட்சி தந்த  பக்காவாட்டு தோற்றம் எனக்கும் இருந்ததாக நானும் நினைத்துக் கொண்டதுண்டு.  பின்னர் நந்தா சூரியா போல அசப்பில் நான் இருப்பதாக நினைத்துக் கொண்டு சிலப்படங்கள் எடுத்து வைத்திருக்கின்றேன்.  அவர்களுக்கும் எனக்கும் ஸ்னானபிராப்தி கூட இல்லை என்பது மிகவும் தாமதமாகத்தான் புரிந்தது. 

ஒரு நாள், இரு நாள் ,, இரு மாதங்களாய் இந்த ஸ்கேர்லத் புராணம் தொடர்ந்தது. எனக்கு ஸ்கேர்லத்தின் மேல் வெறுப்பு வந்துவிடுமோ என்ற பயத்துடன்  ஒருவேளை என் ஆஞ்சலிகா பைத்தியமாகிவிட்டாளோ என்ற பயமும் சேர்ந்துவிட்டது. 

ஒருநாள் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று 

"ஆஞ்சி, நீ ஸ்கேர்லத் யோகன்சனைப் போல கொஞ்சம் கூட முக அமைப்பில் இல்லை " 

"இல்லை, அவளைப்போலத்தான் இருக்கின்றேன்.. வேண்டுமானால் என் அம்மா அப்பா என் தோழிகளைக் கேட்போம்" சாமியாடும் பெண்களைப் போலப் பேசினாள். 

அந்த வார இறுதியில் அனைவரும் வந்தார்கள். அவர்கள் எவ்வளவு எடுத்து சொல்லியும் ஆஞ்சலிகா தன் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.  இறுதியாக ஆஞ்சலிகாவை ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிப்போவது என முடிவு எடுக்கப்பட்டது.  இந்தியத் துணைக்கண்ட ஆண்களுடன் காதல் வயப்படும் ஐரோப்பிய பெண்கள் கொஞ்சம் மறை கழன்டவர்கள் என்ற எனது கருதுகோள்களில் ஒன்று நிஜமாகிவிடுமோ எனத் தோன்றியது. 

பலத்தரப்பட்ட  பரிசோதனை, தனி ஆலோசனைகளுக்குப்பின்னர்... 

"Apophenia வில் ஒரு வகை இது ... Pareidolia , மேகங்களில் , மலைகளில் மனித உருவங்களையோ தனக்குப்பிடித்த உருவங்களையோ பார்ப்பதைப்போல...  தான் தனக்குப்பிடித்த ஓர் ஆளுமையைப்போல முகச்சாயலுடன் இருக்கின்றோம் என்பதை ஆழமாக நம்புவது.. இந்த வகையான மயக்குறு சூழலில் உங்களது ஆஞ்சலிகா இருக்கின்றார்  "  என்ற மருத்துவர்  தொடர்ந்து 

"ஆஞ்சலிகாவை வேறு ஏதாவது ஊருக்கு சுற்றுலாவாக கூட்டிக்கொண்டு போங்கள் ... ஸ்கேர்லத் யோகன்சனைப் பற்றி பேசாதீர்கள்"  என அறிவுறுத்தினார்

அதற்குப்பின்னர் ஆஞ்சலிகா , ஸ்கேர்லத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.  உற்சாகமாகவே பாரீஸ் பயணத்திற்குத் தயாரானாள்.  ரோம் விமானநிலையத்தில் நடைமுறைகளை முடித்துவிட்டு விமானத்திற்காகக் காத்துக் கொண்டு இருக்கையில் , தூரத்தில் ஒரு பரபரப்பு. அது நடிகை ஸ்கேர்லத் யோகன்சன் என மக்கள் உற்சாகமாகினர். இந்த சூழலில் எனக்கு ஆஞ்சலிகாவே முக்கியம் எனத் தோன்றியதால் அங்கு போகவில்லை. ஆஞ்சலிகாவிற்கு அந்த பரபரப்பில் கவனம் போகவில்லை. அவள் இளையராஜா பாடல்களை கேட்டுக்கொண்டு இருந்தாள்.  ஸ்கேர்லத் பாரீஸ் தான் போகப்போகின்றார் போலும்... எங்கள் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். பிரயாணிகள் தங்களது கைபேசிகளில் அவரைப் படமெடுத்துக் கொண்டு இருந்தனர். ஸ்கேர்லத் எங்கள் இருக்கைகளுக்கு எதிரே வந்து நின்றார். 

வியப்புடன், ஆஞ்சலிகாவைக் கண்ணுக்குக் கண் பார்த்த ஸ்கேர்லத் ஆங்கிலத்தில் சொன்னது  

"என்ன ஆச்சரியம்... நீ அச்சு அசப்பில் என்னைப்போலவே இருக்கின்றாய்?" 
                               ------------------  

Wednesday, October 16, 2013

அங்கு கண்ட மனிதர்கள் - சிறுகதை

பன்னாட்டு வான்வெளி ஆய்வு மையம் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருந்தது.  ஆம் பல நூறு ஒளியாண்டுகள் தள்ளி இருக்கும் ஒரு கோளில் மனிதர்கள் இருப்பதை கண்டுபிடித்து விட்டனர். அண்ட சராசரத்தில் முடிவிலா பயணம் மேற்கொண்டு இருக்கும் புவியில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு விண்கலம்  அதை  படம் பிடித்து அனுப்பி இருக்கின்றது.  வந்து இருந்த படத்தில், மிகப்பெரிய சமவெளியில்  கூட்டம் கூட்டமாக மனிதர்கள் இருக்கின்றனர்.

"ஆடைகள் இன்றி இருப்பதால் , நாகரிக காலம் இன்னும் அங்கு தோன்றாமல்  நாம் ஆதியில் இருந்ததைப் போல இருக்கின்றனர் போலும் "  என்றார் ஓர் அறிவியல் ஆளர்

"இந்தக் கோளின் ஒரு பகுதியைத் தானே படம் பிடித்து இருக்கின்றது நமது விண்கலம்... மறு பகுதிக்கான படங்கள் என்று வரும் ?"  என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு

"இன்னும் ஓர் ஆண்டில் எதிர்பார்க்கின்றோம் "  பதில் சொன்னார் தலைமை அறிஞர்.

உலகமே இதைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தது . கல் தோன்றா மண்  தோன்றா  காலம் முன்னரே அங்கு சென்ற நமது தொப்புள் கோடி உறவுகளாக இருக்கும் என தமிழ் நாட்டுத் தலைவர்கள் கட்டுரைகள் எழுதினர்.  ஏக இறைவன் மனிதனைப் படைத்தான். பல இடங்களில் அவனை அமர வைத்தான் என ஆபிரகாமிய மதங்கள் புது விளக்கங்கள் கொடுத்தன.  அவர்கள் அனேகமாக இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களாக இருக்கக் கூடும். ஆடை இல்லை என்பது ஒரு முக்கியமான விஷயம் என்பதால் , ஒளிக்கூசும் ஆடைகளை விண்கலம் படம் பிடிக்க இயலவில்லை என வேத விற்பனையாளர்கள் விளக்கம் சொன்னார்கள்.  மேற்கு உலகில் ,  எவ்வளவு விரைவில் அங்கு போக முடியும் என்பதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கலாயின.

அதே நேரத்தில் மனிதர்களைக் கண்டுபிடித்த கோளின் மறுபக்கத்தில், 

பிரம்மாண்டமாய் இருந்த டைனசோர்கள்,  கற்பனையின் உச்சத்தில்   ஒரு கட்டிடம் இருந்தால் எப்படி இருக்குமோ அவ்வகையான கட்டமைப்பின் மையத்தில்,  இன்னும் இருபது வருடங்களுக்குள் ஏற்படப் போகும் உணவுப் பற்றாக்குறையை விவாதிக்கக் கூடி இருந்தன.

"மனித இனப்பெருக்கம் குறைந்து கொண்டே வருகின்றது .. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நமக்கு சத்தான மனித மாமிசம் கிடைப்பது நின்று விடும் °

விவாதம் போய்க் கொண்டிருக்கையில்  தலைமை காவல் மையத்திடம் இருந்து தகவல் வந்தது.  ஐயத்திற்கு இடமான ஒரு பொருள் ஒன்று நமது  கோளின் மேல் சுற்றிக் கொண்டு இருக்கின்றது.

"அழித்து விட வேண்டாம்,  அதன் தொடர்புகளைக் கண்காணியுங்கள்... பின் தொடருங்கள் "

அடுத்த சில மணி நேரத்தில் அடுத்த செய்தி வந்தது

"மகிழ்ச்சியான செய்தி,   அந்த சந்தேகத்திற்கு இடமான பொருள் தொடர்பு கொள்ளும் கிரகத்தில்  , நாம் உணவிற்காக வளர்க்கும் மனித விலங்குகள் ஏராளமாக இருக்கின்றன."

"அருமை... நாளையே நமது கலங்களைத் தயார் செய்யுங்கள் .. நமது எதிர்கால உணவுப் பிரச்சினை தீர்ந்தது "

கோளின் மறுபக்கப் படங்கள் புவிக்கு வரும் முன்னரே, டைனோசர்கள் பூமியில் களம் இறங்கின



Saturday, September 21, 2013

பேயோட்டி - சிறுகதை

முதலில் சாமியார் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தேன்.  இத்தாலியில் சாமியார் வேடங்களுக்கு  வங்காள தேசத்தவர்களும் ஹரே கிருஷ்ணா  குழுமமும் பிரபலம் ஆகிவிட்டதால் , சொகுசா இருக்கிற ஒரு வேலை என்ன என தேடிய பொழுது சிக்கிய தொழில் தான் 'பேயோட்டி' ... ஆங்கிலத்தில் Ghost Buster , Exorcist எனச் சொல்லுவார்கள். ஸ்டைலாக பில்டிங் காண்டிராக்டர் என்பது போல  நான் எனக்கு வைத்துக் கொண்ட தொழில் பெயர்  Para Normal Scientist.  பேய் வீடுகளில் இருக்கும் பேய்களை ஒட்டுவதற்குத்தான் என் முதல் முன்னுரிமை. மனிதர்களுக்குப் பேய் பிடித்ததாக சொன்னால் நான் எதுவும் செய்ய மாட்டேன், நல்ல மன நல மருத்துவரைப் பரிந்துரைப்பேன்.

என்னுடைய பாட்டி ஒரு முறை தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாகவும் அந்த செய்வினை பேயாக தனது  அறையில் சுத்திக் கொண்டு இருப்பதாகவும் தினமும் பகலில் புலம்புவார். இரவில் அலறுவார்.  நீடாமங்கலம் அருகில் இருக்கும் கோட்டையூர் கிராம மந்திரவாதி வந்தால்  தான் இந்தப் பேய்  வீட்டை விட்டுப் போகும்  என தினம் தினம் கதறல்.  என் அப்பா அவரின் அலுவலகத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் ஐயர் ஒருவரை கோட்டையூர் மந்திரவாதியின் அசிஸ்டெண்ட் என பாட்டியிடம் சொல்லி,  நடிக்கக் கூட்டிக் கொண்டு வந்தார்

"உன் அப்பாவிற்கு அறிவே இல்லை, மனுஷனை ஒட்டுறவங்களுக்கு, பேயை எப்படி ஓட்டத் தெரியும்  ... பூணுல் போட்ட ஐயர் கோட்டையூர்  மந்திரவாதியாம்"   என என் அம்மாவிற்கு ஒரே சிரிப்பு.

"ஆம் இந்த அறையில் பேய் இருக்கின்றது"  என சொல்லியபடி பாட்டி காட்டிய திசையில் கங்கை நீர் என அவர் கொண்டு வந்து இருந்த காஸ்ட்லி மினரல் வாட்டரைத் தெளித்தார்.  பாட்டியும் தெளிந்தார்

"அவநம்பிக்கைகளை நிராகரிக்காமல் , அவர்கள் போக்கிலேயேப் போய் அதை தெளிய வைக்க வேண்டும், அதற்கு நாமும் அந்த அவ நம்பிக்கையை நம்புவதாக சொல்ல வேண்டும். "  என ஐயர் அப்பாவிடம் சில நூறு ரூபாய்த் தாள்களை வாங்கிக் கொண்டே சொன்னதைக் கேட்டேன்.இன்றைய பேயோட்டும் தொழிலில் ஐயர் சொன்னதே எனது  தாரக மந்திரம்.

கடவுளைக் காண்பிப்பதை விட பேயோட்டுவது மிகவும் எளிது என நினைத்ததற்கு மாறாக .  பேய் வீட்டில் வசிப்பவர்கள்  , வெறும் மதப் புத்தகங்களையோ மதச் சடங்குகளையோ நம்புவதில்லை.  ஹைடெக் கருவிகள் , புதுயுக மடிக் கணினி , காமா பீட்டா தீட்டா கதிர்களைப் பற்றிய புத்தகங்கள் இப்படி உடன் இருந்தால் தான் மரியாதையே கொடுக்கின்றனர். அதனால் வியாபர நுணுக்கமாக பேய்களைக் கண்டுபிடிக்க உதவும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்கள் கூட ஆண்டிராய்ட்  ஆப்பிள் கைபேசிகளுக்கும்  தயாரித்து வெளியிட்டு இருக்கின்றேன்.

பெரும்பாலான பயந்தாங்குளிகள் , இந்த அப்ளிகேஷன்களின் டெமோ வேர்சனைப் பார்த்துவிட்டுத்தான் வருகின்றார்கள்.   சாமியார்களுக்கு எப்படி கடவுள் இல்லை என்பது தெரியுமோ அது போல பேயோட்டிகளுக்கும் பேய் இல்லை என்பது தெரியும்.  சாமியார்கள் காணும் கடவுளை சமயங்களில் பக்தர்களும் தங்களுக்குத்  தெரிகின்றது  என சொல்கிறார்களோ அது போல , பேய் வீட்டில் இருப்பவர்கள்  பார்க்கும் பேய்களை நானும் பார்த்ததாக சொல்ல வேண்டும்.  அப்படி சொல்லும் பொழுதே பாதிப் பேய் ஓடிவிடும்.

 செய்வது ஏமாற்று வேலை என்றாலும் கடவுளையா ஏமாற்றுகின்றோம் , இல்லாத பேயைத் தானே என்று, குற்ற உணர்ச்சி  எதுவும் இல்லை.  இப்படியாக நாளொரு பேயும் பொழுதொரு வீடும் என நன்றாக கல்லா கட்டிக் கொண்டு இருக்கையில் , சில நாட்களாக பக்கத்து வீட்டில் இருந்து அடிக்கடி அலறல் கேட்கின்றது . நீண்ட நாட்களாகப் பூட்டிக் கடந்த வீடு, சென்ற வாரம் தான் ஒரு குடும்பம் குடி வந்து இருக்கின்றது.

மறு நாள் அந்த வீட்டின் குடும்பத் தலைவன் என் வீட்டுக் கதவைத் தட்டினான்.

"நீங்கள் வீடுகளில் இருந்து பேய்களை விரட்டுபவர் எனத் தெரிந்து கொண்டேன். என்  மகளுக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது.  இந்த வீட்டில் பேய் இருக்கின்றது என அடிக்கடி கத்திக் கொண்டு இருக்கின்றாள். இந்த வீட்டில் மட்டுமல்ல , இதற்கு முன்னர் குடி இருந்த வீடுகளிலும் அப்படித் தான் சொல்லி சொல்லி பயந்துப் போய்க் கிடக்கின்றாள், நீங்கள் வந்து கொஞ்சம் உதவ வேண்டும்"

"தொடர்ந்து வரும் பேய் " சொல்லிப் பார்க்கையிலேயே எனக்கு திக் என்று இருந்தது. ஒருவேளை உண்மையாக இருக்குமோ... சேச்சே இருக்காது. நானே அந்த வீட்டில் ஒரு வருடம் குடி இருந்து இருக்கின்றேன்.  வழமையைப் போல   என்னுடைய உபகரணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அவர் வீட்டிற்கு மறு நாள் சென்றேன். அவர்,  அவரின் மனைவி ,  பதின்ம வயது பெண். .

வழக்கமான என்னுடைய டெக்னாலஜி போங்காட்டத்திற்கு பின்னர், அந்தப் பெண்ணுடன் தனியேப் பேச வேண்டும் எனச் சொன்னேன்.  அதற்கு காரணம் கழிவறையில் கிடந்த போதை ஊசி சிரிஞ்சைகளைப் பார்த்தது தான்


"இந்த வீட்டில் மட்டுமல்ல  இதற்கு முன்னர் நீங்கள் இருந்த  எந்த வீட்டிலும் நீ பேயைப் பார்த்ததாக சொன்னது எல்லாம் பொய். ஏன் இப்படி செய்கிறாய்

"அப்படி சொன்னால் தான்,  உன்னிடம் நல்லவன் போல பேசும் , என் அம்மாவின் கணவன் என்னைத் தொந்தரவு செய்ய என் அறைக்குள் வரமாட்டான் "  என அழுதாள்.

எனக்குப் புரிந்து போனது.  ஒளிக்கற்றைகளால் உருவங்களைக் கொண்டு வரும் ஒரு சிறிய கருவியை அவளிடம் கொடுத்து , "இனிமேல் நீ பேயைப் பார்க்க வேண்டியதில்லை, உன் அம்மாவின் கணவனைப் பார்க்க வை, இந்த பிடிப்பை அமுக்கினால், ஓர் உருவம் வரும், நீ தூங்கும் முன்னர் இயக்கிவிட்டுத் தூங்கி விடு , எவனுமே தவறான நோக்கத்தில் உன்னை நெருங்க முடியாது"

மகளிடம் பேசி முடித்தவுடன் குடும்பத் தலைவனிடம் வந்து "பேய் உங்கள் மகளைத் துரத்தவில்லை , நீங்கள் ஏதோ தவறு செய்து இருக்கின்றீர்கள் உங்களைத் தான் வீடு வீடாக துரத்துகின்றது , ஜாக்கிரதையாக இருங்கள்"  அந்த ஆளுக்குப் புரிந்ததா எனத் தெரியவில்லை.

இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அந்த பதின்ம பெண்ணையும் அவளின் அம்மாவையும் கடைத் தெருவில் பார்த்தேன். குடும்பத் தலைவனைப் பற்றி விசாரித்தேன். அவன் அவர்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டதாக அந்த அம்மா கவலையுடன் சொல்ல, அந்த பதின்மப் பெண் உதட்டின் ஓரமாகப் புன்னகைத்தாள்.

வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு பேயை விரட்டியடித்த மன மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன்.

Thursday, July 25, 2013

பேய் பயம் - சிறுகதை

பேய்கள் பயமுறுத்தாது. பேய்கள் யாரையும் கொல்லாது. நூற்றுக்கு நூறு பயம் தான் நம்மைக் கொல்லும், பேய்கள் அல்ல. இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான்  பேய்களுக்கு நான் பயப்படுவதில்லை. மாக்கியவல்லி சொல்லியபடி எது நம்மைக் கொல்லாதோ அது நம்மை பலப் படுத்தும்.   கடமையின் காரணமாக காட்டு வழிப் போகும் பொழுது எல்லாம் என்னுடைய பெரிய பலம், மிகப் பெரிய துணை பேய்களே .  பல நேரங்களில் அவைகளே வழிகாட்டிகள். 

எதன் மேல் பயம் அதிகமாக இருக்கின்றதோ, அதை சந்தித்து விட்டால் பயம் அகன்று அபிமானம் வந்துவிடும். எனது சிறுவயது பேய் பயம் அப்படித்தான் போனது.  எனக்கு பத்து  வயது இருக்கும், நள்ளிரவில் அப்பா அம்மாவுடன் ,  பைவ் ஸ்டார் சாக்லெட் வாங்கித் தராத  கோபத்தில் கொட்ட கொட்ட விழித்தபடி ஓட்டுனர் இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்து ஒரு நள்ளிரவில்  மன்னார்குடியில் இருந்து திருச்சி பயணப்பட்டுக் கொண்டு இருக்கையில்  , ஓட்டுநரிடம் இன்றைக்கு 15 பேர்  என்ற  நடத்துனர் உறங்கிப் போனார் திருச்சி போகும் வரை எங்கும் நிற்க வில்லை. திருச்சி நெருங்குகையில் தலைகளை எண்ணினேன். மொத்தம் 35. எங்களுக்குப் பின்னர் அவைகளை கண்டக்டர்  சீக்கிரம் இறங்கும் படி அதட்டினார் .  போகும் பொழுது அவைகளில் ஒன்று என் கையில் ஃபைவ் ஸ்டார் சாக்லெட் ஒன்றைத் திணித்து விட்டுப் போனது. 

பேய்கள் என் கண்களுக்கு மட்டும் தெரியும் படி பெரிய சக்தி எல்லாம் எனக்கு கிடையாது. எல்லோருக்குமே தெரியும்.  அந்தக் கண்டக்டருக்கு மனிதர்களாகவே தெரிந்தது போல ,உங்களுக்கும் கூட தெரியும்.  கூட்டத்தோடு கூட்டமாய் ஜனங்களுக்கு இடையிலேதான் இருக்கின்றன. என்ன அவை பேய்கள் எனப் புரிந்து கொள்ள கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பேய்களின் மீதான எனது பழைய பயமும் இன்றைய அபிமானமும் அவற்றை மனிதர்களிடம் இருந்து பிரித்து இனங்கண்டு கொள்ள உதவுகின்றன. 

மலை மேல் ஒரு பெட்டி கடை கூட இல்லாத ஓர் ஊரில் எனக்கு வேலை கொடுத்து இருக்கின்றார்கள். ஊர் என்றாலும் இப்பொழுது இது ஊர் கிடையாது. எப்பொழுதோ நடந்த ஒரு போரின் இறுதியில் இந்த காட்டுப் பகுதி கிராமம் சூறையாடப்பட்டு ஒட்டு மொத்த மக்களும் கொல்லப்பட்டுவிட்டதால், இங்கு அதன் பின்னர் யாரும் வசிக்கவில்லை. இறந்தவர்கள் பேய்களாக உலவுவதாக ஒரு வதந்தி. மற்றவர்களுக்கு வதந்தி என்றாலும் எனக்கு அது  உண்மை எனப் புரியும். 

என்னுடைய பணி சுலபமானது தான், , அந்த கிராமத்து  பாழடைந்த மலை வீட்டில் இருந்து கொண்டபடி  ஒரு கிலோ மீட்டர் தொலைவில்  இருக்கும் மலையடிவார  வேலியிட்ட மிகப்பெரும் மைதானத்தை கண்கானிக்க வேண்டும். மைதானத்தின் கீழ் ரகசிய அறைகளில் ஏதோ ஆராய்ச்சி நடைபெறுவதாக எனக்கு சம்பளம் கொடுக்கும் ஏஜென்சிகளுக்கு ஓர் ஐயம் , அதனால் தான் இங்கு நான் அனுப்பப்பட்டேன்.  

மலை வீட்டை நானே சீர்ப் படுத்தி எனக்கான ஓர் அறையை கதவுகளுடன்  அமைத்துக் கொண்டேன். கொடுக்கப்படும் மில்லியன் கணக்கான சம்பளத்திற்கு இவையும் செய்ய வேண்டும். வந்து ஒரு வாரம் ஆகின்றது. ஒரு நாள் , மைதானத்தில் மனிதர்கள் போல நடமாடுவதைப் போல தோன்றியதால் என அதிநவீன கேமராவினால் படம் எடுத்துப் பார்த்தால், எதுவுமே பதிவாகவில்லை. ஆம், பேய்கள் கண்களுக்கு மட்டும் தான் தெரியும் கருவிகளில் பதிவாகாது.  காட்டுப் பாதையில் சந்தித்த ஒருவனை இல்லை ஒன்றை படம் எடுக்க முயற்சித்தேன். முறைத்தது.  எடுக்காமல் விட்டுவிட்டேன், எடுத்து இருந்தாலும் தெரியப் போவதில்லை,. அதன் பின்னர் சிலப் பல பேய்களைப் பார்த்தேன். படம் எடுக்கவில்லை. அவைகளும் சிரித்தபடியே நகன்று போய்விட்டன.  சிலவை வீட்டிற்குள்ளும் அதுவாக வந்து அதுவாகப் போயின. 

மனித நடமாட்டம் இல்லை என மட்டும் தலைமைக்கு செய்தி அனுப்பினேன். பேய்களைப் பார்த்தேன் என சொல்ல முடியாது அல்லவா. இன்னும் ஒரு வாரம் இருந்துப் பார்க்க சொன்னார்கள். 

மறுநாள் காலையில்  ஏதோ ஒன்று கழுத்தை நெறிப்பதைப் போல உணர்வு. பேயாக இருக்க முடியாதே ... பேய்கள் கொல்லாதே !!  இடுங்கிய கண்களில் வழியேப் பார்த்தேன். என் கழுத்தை நெறிப்பதன்   கண்களில் குரூரம் தெறித்தது. என் நம்பிக்கை வீண் கிடையாது. அது பேய்  அல்ல .. அந்த முகத்தைப் பார்த்து இருக்கின்றேனே ... புகைப்படம் எடுக்க முயற்சிக்கையில் முறைத்ததே ... இல்லை இல்லை முறைத்தானே  .... நிஜமான மனிதன் !! 
"உளவாளி நாயே ".... எனத் திட்டியபடி அவனது பிடி இறுகியது . 

Thursday, June 13, 2013

இது ஒரு ஸ்பாம் கதை - சிறுகதை

”கார்த்தி, சின்னப் பிரச்சினை” என அதிகாலையிலேயே  என் நண்பர் அப்பாவி கணேசன் எழுப்பினார்.

அப்பாவி கணேசன் பிரச்சினை என்றாலே அது ஒரு சின்னப் பிரச்சினையாகத்தான் இருக்கும். சின்னப் பிரச்சினை என்றால் கண்டிப்பாக ஒரு மொன்னையான பிரச்சினையாகத்தான் இருக்கும் என எரிச்சலுடன் எழுந்தேன்.

“பேஸ்புக்ல, 16 வயசுப் பெண் தற்கொலைப் பண்ணிக்கிற வீடியோன்னு ஒன்னு வந்துச்சு”

“யோவ், அதை எல்லாம் ஏன் பார்க்கிறீர்... அது ஸ்பாம்... நீங்க கிளிக் செஞ்சீங்கன்னா, உங்க பிரண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் அது போகும்”

“ அது தெரியும் கார்த்தி, இது ஸ்பாம் மாதிரி இல்லை, வீடியோவே இருந்துச்சு, அந்தப் பொண்ணு நிஜமாவே தற்கொலைப் பண்ணிக்குது”

“அப்போ , ஏதாவது சினிமா டிரெயிலர் ஆ இருக்கும்,படுத்துத் தூங்குங்க கணேசன்”

”கார்த்தி, கொஞ்சம் சீரியஸா கேளு ... அந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிற ரூம்ல என் போட்டோ மாட்டி இருக்கு, திரும்பத் திரும்ப வீடியோவைப் பார்த்துட்டேன், அதுல என் போட்டோ இருக்குது, ரொம்பப் பயமா இருக்கு”

“கணேசன்,  அந்த வீடியோ லிங்கை எனக்கு அனுப்புங்க, மதியானம் பார்க்குறேன்”

அதன் பின்னர்  எனக்குத் தூக்கம் வரவில்லை.  எனக்கும் அடிக்கடி இந்த மாதிரி ஸ்பாம் வீடியோக்கள் ,  பாருங்கள் பாருங்கள் டீன் ஏஜ் பெண், திறந்து காட்டுகின்றாள் என அடிக்கடி பேஸ்புக் டைம்லைனில் மேல் எழும்பும்.  யாஹூ காலத்தில் இருந்து பார்க்க வேண்டியதை எல்லாம் மெய்யாகவும் மெய்நிகராகவும் எதார்த்தமாகவும் பதார்த்தமாகவும் பார்த்துவிட்டதால், வெற்று ஆர்வம் கூட வந்தது இல்லை. கடைசியாக வீடியோ சாட்டில், நான் பார்த்தது காத்தரீனாவைத்தான், மால்மோவில் இருந்தபொழுது நிஜத்தில் அறிமுகமானவள், பின்னர் நான் ஸ்டாக்ஹோல்ம் வந்தபின் அடிக்கடி வீடியோ காதல் எங்களுக்குள் நடக்கும். கல்யாணம் செய்து கொள்ள வேண்டினாள், காதலுக்கும் காமத்திற்கும் இடையில் கல்யாணம் அவசியமில்லை என்ற மறுநாளில் இருந்து அவளைக் காணவில்லை.

“கார்த்தி, கார்த்தி” எனத் திரும்ப என்னை உலுக்கினார்.

“யோவ் , என்னய்யா.. இப்போ”

“கார்த்தி, யார் பார்க்கிறாங்களோ , அவங்களுக்கு எல்லாம் அந்தப் பொண்ணோட ரூம்ல, அவங்க அவங்க போட்டோ வருது”

“கணேசன், இது சிம்பிள் ட்ரிக் ஆ இருக்கும்,  பேஸ்புக் போட்டோஸ்ல எதுனாச்சும் ஒன்னை  ஆட்டோமெடிக் ஆ எடுத்துட்டு, அந்த வீடியோல சேர்க்கிற மாதிரி அப்ளிகேஷன் எழுதி இருப்பானுங்க... நோ வொர்ரீஸ்”

“அட , ஆமாம் கார்த்தி, எல்லோருக்கும் அவங்க புரபைல் போட்டோஸ் தான் வருது... கார்த்தினா கார்த்திதான்... பிரில்லியண்ட் பாய்”

நல்லத்தூக்கம் தூங்கி எழுந்து, சாயங்காலம், கணேசன் எனக்கு அனுப்பி இருந்த அந்த வீடியோவை ஓடவிட்டேன். ஒரு பெண்ணின் கைகள் தெரிந்தது. மணிக்கட்டை அறுத்துக் கொள்கின்றாள். ரத்தம் சொட்டு சொட்டாக பொங்கி வழிகின்றது. மறுகையால், வெப்காம் பொசிஷன் சரி செய்யப்படுகின்றது. சுவற்றில், எனது படம் இருக்கின்றது... இருங்கள் இருங்கள்... அது என் பேஸ்புக் புரபைல் போட்டோ இல்லை. அது மால்மோவில் எடுத்தது. அந்தப் படத்தை எடுத்தவள் காத்தரீனா.  அந்தப் படத்தை இதுவரை எங்குமே இணையத்தில் ஏற்றியதில்லையே....

வெப்காம் மீண்டும் சரி செய்யப்படுகின்றது .. அந்தப் பெண்,,,, அது காத்தரீனா....

-----

Saturday, May 25, 2013

இறந்த பின் - சிறுகதை

”கார்த்தி, அந்த அரதப் பழசான சைக்கிளை புது வீட்டிலேயும் கொண்டு வந்து வைக்கனும்னு அடம் பிடிக்கிறாருடா உன் அப்பா”

அம்மா குறிப்பிடும் மிதிவண்டி என் அப்பா வழி தாத்தாவின் உடையது. அந்த தாத்தா இறந்து இருபது வருடங்கள் ஆனாலும், அப்பா அந்த சைக்கிளை கண்ணும் கருத்துமாய் பராமரித்து வருகின்றார். ஒன்றிற்கு இரண்டு கார்கள், மூன்று மோட்டார் பைக்குகள் என வீட்டில் இருந்தாலும் அந்த சைக்கிளும் அவற்றிற்கு இணையாக வாசலில் நிற்கும்.

“பழைய பேரீச்சம்பழம், ஈயம் பித்தாள” என தெருவில் குரல் கேட்கும்பொழுதெல்லாம் அப்பாவைத் தவிர அனைவரும் நமட்டுச் சிரிப்பு சிரிப்போம்.

அந்த அசட்டையான நமுட்டு சிரிப்புகளை ஐந்தாறு வருடங்கள் கழித்து இன்னும் எட்டு மணி நேரத்தில் மீண்டும் அனுபவிக்கப் போகின்றேன். பிராங்பர்டில் விமானம் ஏறியாகிவிட்டது.  அருகில் ஓர் அமெரிக்கன். கையில் ஒருப் புத்தகம். வளைந்து நெளிந்து புத்தகத்தின் பெயரை ஒரு வழியாகப் பார்த்துவிட்டேன்.  "Energy of life" என எழுதி இருந்தது. எழுதியவர் பெயர் தெரியவில்லை. நாசாவின் இலச்சினை ஓர் ஓரத்தில் இருந்தது.

விமானம் வானில் நிலைபெற்ற பின்னர், அரைவாசிப் புன்னகையைக் கொடுத்ததற்கு முழுப்புன்னகையையும் கொடுத்தார்.

தன்னை “தனடோஸ்” என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

”நாசா,  வாழ்வியல் மேலாண்மையைப் பற்றி எல்லாம் புத்தகம் எழுதி இருக்கின்றதா?” எனக் கேட்டேன்.

மென்மையாய் சிரித்துவிட்டு, சன்னமான குரலில், “அதிரகசியமான ஆய்வைப் பற்றியப் புத்தகம் இது, இந்த விமானம் சென்னை போய் சேர்ந்துவிட்டால், அந்த ஆராய்ச்சியின் கடைசிப் பரிசோதனையும் வெற்றி “ என்றார்.

”அப்படி என்ன வகையான ஆராய்ச்சி” என்றேன்.

”நாம் அனைவரும் இறந்த பின், அந்த ஆற்றல் எங்கேப் போகின்றது ?”  என்ற அவரின் கேள்வி  வடிவேலுவின் ”மூனைத் தொட்டது யாரு” நகைச்சுவை நினைவுக்கு வந்தது. இன்னும் எட்டு மணி நேரம் பொழுது போகவேண்டுமே, பேச்சுக் கொடுத்தேன்.

“நம்பிக்கையாளராக இருந்தால், சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ போகும்,  பகுத்தறிவாளராக இருந்தால், இயற்கையோடு கலந்துவிடும்”

”நான் ஒரு விஞ்ஞானி, ஆக இயற்கையோடு கலந்துவிடுகிறது என எடுத்துக் கொள்வோம். அப்படி இருக்கையில் அந்த ஆற்றலை வழிமறித்து நமக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ள முடியும் தானே”

”புரியவில்லையே”  சிரிக்காமல் சுவாரசியமாகக் கேட்டேன்.

“ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு வகையான ஆற்றலை மற்றொரு வகையான ஆற்றலாக மாற்ற முடியும் இது அடிப்படை விதி, ஆக, இறந்த ஆன்மாவை பிடித்து ஏன் வேறுவகை ஆற்றலாக மாற்றி பயன் படுத்திக் கொள்ளக்கூடாது என்பதான ஆராய்ச்சி அது”

உண்மையோ பொய்யோ , இந்த வகையான விசயங்களை எனக்கு கேட்கப் பிடிக்கும்.

“வல்லரசுகள் ஏன் போர்களில் ஈடுபடுகின்றன?”

”கனிம, எண்ணெய் வளத்திற்காக?”

”ஆம், அவற்றுடன், போரினால் அழியும் ஏகப்பட்ட உயிராற்றல்களுக்காகவும்”


புதுவகையான கான்ஸ்பிரைஸி தியரியாக இருந்தது.


“இப்பொழுதெல்லாம், போர்களில் வல்லரசுகள், புதுவகையான குண்டுகளைப் பயன்படுத்துகின்றன, அந்தக் குண்டு உடலில் பாயும்பொழுது, குண்டில் உயிராற்றல் சேகரிக்கப்பட்டுவிடும்”

நான் பதில் பேசவில்லை.

”பின்னர் அந்த ஆற்றலை, எரி சக்தியாகவோ, மின்னாற்றலாகவோ மாற்றிவிடுவோம்”

“எவ்வளவு நாட்களுக்கு ஓர் உயிராற்றல் வரும்”

“நல்ல கேள்வி, ஓர் இயந்திரத்திற்கு உயிராற்றலை ஆற்றல் மூலமாக கொடுத்துவிட்டால், முடிவிலா காலம் வரை அந்த இயந்திரம் தொடர்ந்து இயங்க, அந்த ஆற்றல் போதுமானது.  இந்த விமானம் கூட சோதனை ஓட்டமாக ஓர் ஆன்மாவின் ஆற்றலால் தான் முதன் முறையாக இயக்கப்படுகின்றது”

மல்டிலெவல் மார்க்கெட்டிங் அல்லேலூயா ஹரே கிருஷ்ணா அளவிற்கு பில்ட் அப் கொடுக்கின்றாரே என நினைத்துக் கொண்டேன்.

“யாரிடமும் சொல்லக் கூடாத ஒரு வல்லரசு ரகசியத்தை உன்னிடம் சொல்கின்றேன் , கவனமாகக் கேட்டுக்கொள்,  அடுத்தப் பத்து வருடங்களில், உலகத்தின் மக்கள் தொகையில் பாதி திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிடும், மக்களின் உயிர்கள் எல்லாம் எந்திரங்களுக்கு உயிராற்றல் மூலங்களாக மாற்றப்பட்டுவிடும்”

“ஏன் விலங்குகளின் உயிராற்றலை எடுத்துக் கொள்ளக்கூடாதா, எதற்கு சாமானிய மனிதர்களைக் கொல்ல வேண்டும்” எனக்குள் இருந்த மனிதாபிமானி விழித்துக் கொண்டான்.

“நல்ல கேள்வி, இயற்கைக்கு ஒவ்வாத ஓர் உயிரினம் எதுவென்றால், மனித இனம் மட்டுமே, மனித இனம் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும், இயற்கையின் சமனிலை பாதிக்கப்படாது...அதனால் தான் மனித உயிர்களை நாங்கள் எடுக்க முடிவு செய்தோம்”

அதன் பின்னர் நான் ஒன்றும் பேசவில்லை. சாப்பாடு வந்தது, சாப்பிட்டேன். அதன் பின்னர் அவரை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. கதைக் கேட்க சுவாரசியமாகவும் திகிலாகவும் இருந்தாலும் அது எல்லாம் சாத்தியப்படுமா எனக்கு நான் கேட்டுக்கொண்ட கேள்விக்கு , சாத்தியமில்லை என மனசாட்சி சொன்னது.கட்டுக்கதைகளைப் பரப்பிவிடும் கோஷ்டியைச் சேர்ந்தவராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.
அவ்வப்பொழுது ஓரக்கண்ணால் பார்த்தபடி இருந்தார். சென்னை விமான நிலையத்தில் விமான தரை இறங்கியது.  விமானத்தை விட்டு வெளியேப்போகையில் தனடோஸ், விமானிகளிடம் இறுக்கமாக கைகளைக் குலுக்கி வெளியேறினார்.

--
எனது வீட்டின் புதுமனைப் புகுவிழா விற்கு வந்து இருந்த அனைவரும் கேட்டது, திருஷ்டிக்காக அந்த பழையை சைக்கிளை வைத்து இருக்கிறீர்களா என்பதுதான்.  அன்று மாலை அப்பாவிடம் அந்த சைக்கிளை யாரிடமாவது கொடுத்துவிடலாம எனக்கேட்டேன்.

“குன்றத்தூர் போகலாமா, வடபழனி போகலாமா” எனக்கேட்டார்.

“வடபழனி” என கார் சாவியை எடுத்தேன்.

“இல்லை சைக்கிளில் போகலாம் வா” எனக்கூப்பிட்டார்.

அந்த சைக்கிளில் தாத்தா இறப்பதற்கு அவருடன் கொரடாச்சேரி கிராமத் தெருக்களில் சுற்று போக சிறுவனாக இருக்கும்பொழுது ஏறியது. அதன் பின்னர் இன்றுதான் ஏறுகின்றேன்.

ஆற்காடு சாலை போக்குவரத்து நெரிசலில், என்னை பின்புறம் வைத்து சைக்கிளை எந்த சிரமமும் இன்றி அப்பா ஓட்டிக்கொண்டு வந்தார். சைக்கிளில் ஒரு மிதிக்கு கிட்டத்தட்ட நூறு மீட்டர்கள் தூரம் சர்வசாதாரணமாக ஓடியது.

“கார்த்தி, இந்த சைக்கிள் எனக்கு ஏன் முக்கியம் தெரியுமா, இந்த சைக்கிளுக்குள்ள என் அப்பாவோட உயிர் இருக்குன்னு நினைக்கிறேன், இப்போகூட நான் பெடல் பண்ணல, அவரே ஓட்டுறாருதான்னு எனக்கு ஒரு நம்பிக்கை, அவரோட ஆன்மா, இந்த சைக்கிளுக்குள்ள இருக்கு ... அந்த நம்பிக்கைக்காத்தான் இந்த சைக்கிள் வச்சிருக்கேன், உன் அம்மாவுக்குப் புரியாது, நீயாவது புரிஞ்சுக்கோ”

அப்பா சொன்ன  தாத்தா செண்டிமெண்ட் கதைக்குப் பின்னர் , அதில் இருந்த உணர்வுப் பூர்வ இழையையும் தாண்டி,  தனடோஸ் சொன்னது உண்மையாக இருக்குமோ என நம்பத் தொடங்கினேன்.

-----









Wednesday, April 17, 2013

ஆன்மா - சிறுகதை

அணுஅணுவாய்த் துடித்துக் கொண்டிருக்கும் உயிரைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட கருணையுடன் கொலை செய்துவிடுவதே சரி என்ற நல்ல எண்ணத்துடன், டாக்டர் ரிக்கார்டோ கொடுத்த விஷ ஊசியைப் போட்டு எனது நாய் சீசரைக் கொன்று , தோட்டத்தில் புதைத்தேன்.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் என்னுடன் வளர்ந்த நாய். சீசர் என்னிடம் இருந்து அன்பையும் , சீசரிடமிருந்து நான் துணிவையும் ஒருவருக்கொருவர் பெற்றுக்கொண்டோம்.  ஒரு ரோஜாப்பூச்செடியை புதைத்த இடத்தில் நட்டுவிட்டு , டாக்டர் ரிக்கார்டோவைப் பார்க்க கிளம்பினேன். தூரத்தில் தெரியும் அந்த மலைப்பிரதேசத்தில்தான் வசிக்கின்றார். ஸ்விட்சர்லாந்தில் டாக்டராக இருந்தவர், அங்கு சந்தித்த இத்தாலியப் பெண்ணைக் காதலித்ததால் அவளைப் பின் தொடர்ந்து, ரோமிற்கு வந்து அவளையேத் திருமணம் செய்து கொண்டு இங்கு நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்.

ஆனால் அந்த மனைவியை அவரின் வீட்டில் பார்த்ததே இல்லை. நான் போகும் சிலசமயங்களில் முப்பது வயது மதிக்கத் தக்கப்பெண் அடுப்படியிலோ தாழ்வாரத்திலோ வேலைசெய்து கொண்டிருப்பதைப் பார்த்து இருக்கின்றேன். அறுபது வயது ரிக்கார்டோவிற்கு  முப்பது வயது பெண் தோழி என நானே நினைத்துக் கொண்டேன்.

 வேறு சில சமயங்களில் ஸ்விஸ் ஜெர்மன் பேசும் சில நடுத்தர வயதினர் எண்பதுகளில் இருக்கும் நடை உடை பாவனையுடன் ரிக்கார்டோவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். நான் வந்தவுடன் ரிக்கார்டோ அவர்களை தோட்டத்திற்கோ அல்லது வெளியேவோ அனுப்பிவிடுவார்.  சில நாட்களில் யாருமே வீட்டில் இருக்க மாட்டார்கள்.

ரிக்கார்டோவின் வீட்டிற்கு போகும்பொழுதெல்லாம், அக்கம்பக்கத்தினர் , ஏதோ பஞ்சாயத்தில் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த வீட்டிற்கு செல்லுபவரைப் பார்ப்பதைப்போல விசித்திரமாகப் பார்ப்பார்கள்.   ஒருவேளை டாக்டர் சமூகவிரோத செயல்கள்  ஏதேனும் செய்கின்றாரா என ஒரு சந்தேகம் கூட எனக்குண்டு.

“டாக்டர், இவ்வளவு நட்பான நீங்கள், ஏன் அண்டை அயலார்களுடன் பழகுவதில்லை?”

“மனிதர்களைக் காட்டிலும் ஆன்மாக்கள், உனக்குப் புரியும்படி சொல்லவேண்டுமானால் பேய்களையே எனக்குப் பிடித்திருக்கின்றது” அவருடன் ஆன முன்றாவதோ நான்காவதோ சந்திப்பில் இதைச் சொன்னார்.

”என்னைக் கவனித்துக் கொள்வதில் இருந்து, இந்த வீடு, தோட்டம் என அனைத்தையும் பரிமாரிப்பவர்கள் அனைவரும் பேய்களே... இதோ நீ குடித்துக் கொண்டிருக்கும் சிவப்பு வைனைக் கூட தயார் செய்ததும் ஓர் ஆன்மாவே”

அதன் பின்னர் அவரின் வீட்டில் எதுவும் சாப்பிடுவதோ குடிப்பதோ கூட கிடையாது. மருத்துவம்,  தத்துவம், அரசியல், ஆன்மிகம் என அனைத்தையும் கரைத்துக் குடித்த மக்களின் தத்துவார்த்தப் பேச்சு, சில சமயங்களில் திகிலூட்டுவதாகக் கூட இருக்கும். விளங்கமுடியாத தத்துவங்களே திகிலைக் கொடுக்கின்றன.

மெத்தப் படித்ததால், மூளைக் குழம்பிப் போய் இல்லாத விசயங்களை தன்னுடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கலாம்.  ஒரு வேளை என்னைப் பயமுறுத்துவதற்காக கதை கட்டுகின்றார் அல்லது நிஜமாகவே அவர் பேய்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.  எதுவாக இருந்தாலும், அவர் அவர் வீட்டின் வெளிச்சம் , ஒழுங்கமைப்பு, வாசனை எதுவுமே பேய்வீட்டிற்கான அடையாளங்களையோ அல்லது பைத்தியக்கார பிரசன்னத்தையோ தராது.

ரோமில் இருந்து அறுபது கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் இந்த ரிக்கார்டோவின் மலைக்குக்கிராமத்திற்கு வந்து சேர்ந்தேன்.

 அன்றைய ஸ்விட்சர்லாந்து ஜெர்மனிய தினசரிகள் அவரின் மேசையின் மேல் தென்பட்டன.  என் பார்வையின் கேள்வியைப் புரிந்து கொண்டவற்போல

“இவை எல்லாம் என்னால் விடுதலை செய்யப்பட்டவர்கள் கொண்டு வந்து தருவது... ”  என்றார்.

”ஸ்விட்சர்லாந்தில் எல்லாம் சட்டப்பிரச்சினைகள் கிடையாது, விடுதலை வேண்டும் என விரும்பியவர்களை எல்லாம் எளிதாக விடுவித்து விடுவேன், அவர்கள் காலம் கடந்தும் விசுவாசமாக இருப்பார்கள்”

ஏற்கனவே குடித்து இருப்பார் போல, தொடர்ந்து  போதையில் பேசினார்.

”உனக்குத் தெரியுமா, ஒரு நாள், என் மனைவிக்கு விடுதலை கொடுத்தபொழுது, இந்தத் தெரு மக்கள் என் மனைவியை நான் கொலை செய்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துவிட்டனர்”

நான் முகத்தில் காட்டிய அதிர்ச்சியைப் பார்த்தபடி,

“கொஞ்ச நாள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தேன், பின்னர் என் மனைவியே நீதிமன்றம் முன் வந்து , தனது விருப்பத்தின் பேரில்தான் விலகிப்போனேன் என சொன்ன பிறகுதான் விடுதலை செய்யப்பட்டேன்”

“இது எப்பொழுது நடந்தது டாக்டர், உங்கள் மனைவி இப்பொழுது எங்கிருக்கிறார்”

“என்னுடன் தான் இருக்கிறாள், நீ கூட பார்த்திருப்பாய்.... அவள் திரும்ப வந்த பிறகே விடுதலைப் பெற்றவர்களின் விசுவாசத்தை உணர ஆரம்பித்தேன்...  இன்றுடன் முப்பதுவருடங்கள் ஆகின்றன , அது சரி சீசருக்கு விடுதலைக் கொடுத்துவிட்டாயா ”

விடுதலை என்ற வார்த்தையின் நெருடலை உணர்ந்தபடி “ம்ம்ம்” என்றேன்.

“சரி, எனக்கும் விடுதலைக் கொடுத்துவிடு” என ஊசியுடன் கூடிய மருந்தை என்னிடம் நீட்டினார்.

மாடிப்படியில் இருந்து இறங்கி வந்த, அந்த முப்பது வயது பெண்மணியும் ரிக்கார்டோவிற்கு விடுதலைத் தரச்சொன்னார். தோட்டத்தின் பக்கம் இருந்து வந்த ஸ்விஸ் நபர்களும் அதையேச் சொன்னார்கள். வாசலில் வந்து நின்ற  காலையில் மண்ணோடு மண்ணாகப் புதைத்த சீசர் நாயும் ஆமோதிப்பதைப்போல குரைத்துக் காட்டியது.

“விடுதலைப் பெற்றுத்தருபவர்களிடம் காலம் கடந்தும் விசுவாசம் காட்டப்படும்” என ரிக்கார்டோ திரும்பத் திரும்பச் சொல்ல, எல்லாம் புரிந்தபடி விச ஊசியை அவரின் மேல் செலுத்தினேன்.

 ஸ்விட்சர்லாந்தில் பிரபலமான கருணைக் கொலை டாக்டர் ரிக்கார்டோ , ரோமில் அவரது பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் மறுநாளைய தலைப்புச் செய்திகள்.

எனது வீட்டுத்தோட்டத்தில் சீசருடன் ரிக்கார்டோவும் அவரின் மனைவியும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ரிக்கார்டோவின் ஸ்விஸ் நண்பர்கள் வரவேற்பறையில் அவருக்காகக் காத்திருக்கின்றனர்.

நான் கருணைக்கொலைகள் ஏற்புடையதா என்பதைப் பற்றியக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன்.

-----

Tuesday, January 01, 2013

உள்ளுணர்வு - சிறுகதை

இதை செய், இதை செய்ய யோசி இப்படி அடிக்கடி உள்ளுக்குள் இருந்து அடிக்கடி மணி அடித்துக் கொண்டே இருக்கும். பெரும்பாலும் அந்த உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுக்க மாட்டேன். அட என்னதான் நடக்குதுன்னு பார்த்திடலாமேன்னு ஓர் அசட்டுத் துணிச்சல். 

சில வருடங்களுக்கு முன்னர், இடதுப்பக்கம் போகாதே அங்கு ஒரு சோகம் இருக்கிறது, என உள்மனது சொன்னபொழுதும், அதையும் மீறி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அருகில், அம்முவை அவளின் கணவனோடும் அழகான குழந்தையோடும் பார்த்தேன். அவள் என்னைப் பார்க்காமல் இருந்திருந்தால் கூட சங்டமாக இருந்திருக்காது, பார்த்து சிரித்தும் வைத்தாள்,அதன் பின்னர்  பழைய மின்னஞ்சல்களை வாசித்தலில் இரண்டு நாட்களுக்கு தூக்கம் போனது.  

ஒன்பதாவது படிக்கும் பொழுது கணக்காசிரியர் , பத்தாவது பாடத்திற்கான சிலக் கணக்குக் கேள்விகளை கவனக்குறைவில் எங்களுக்கான காலாண்டு  வினாத்தாளில் சேர்த்துவிட ,  எங்கள் வகுப்பில் எவனும் 60 விழுக்காடுகளைத் தாண்டவில்லை. நான் எடுத்தது நூற்றுக்கு நூறு. 

ஆச்சரியப்பட்ட வாத்தியாருக்கு எனக்கான பதில். 

“ஏற்கனவே அடிக்கடிப் போட்டுப் பார்த்த கொஸ்டின்ஸ் மாதிரி இருந்துச்சு சார்”   

அதற்கடுத்த வருடம் 10 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளில் நான் கணக்குப்பாடத்தில் நூற்றுக்கு நூறு. இது மாதிரி ஏகப்பட்ட உதாரணங்கள்,  இப்பொழுது வேலைப் பார்க்கும் ஆஸ்திரியா நிறுவனத்தில் ,முதல் வருடத்தில் ,  ஒருமுறை தெரியாத நிரலி வகையில் நண்பனுக்கு உதவி செய்தேன், ஸ்நான பிராப்தமே இல்லாத ஒன்றில் அகஸ்மாத்தாக செய்த உதவி பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பின்னர் அந்த நிரலிமுறைகளை கடந்த ஆறு மாதங்களில் கற்றுக்கொண்டேன். 

ஐந்து வயதாக இருக்கும்பொழுது, மலைக்கோட்டை அருகில் அப்பாவின் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு சாரதாஸிற்கு செல்லும் கூட்டத்தை வேடிக்கைப்பார்க்கையில், எங்களைக் கடந்த இரண்டு வெள்ளைக்காரர்களை என் அப்பா காட்டி,

“அங்கப் பாரு, இங்கிலீஷ்காரனுங்கப் போறாங்க” 

“அப்பா அவங்க இங்கிலீஷ் காரங்க இல்லை, அவங்கப் பேசுறது ஜெர்மன்” 

நடுவில் கொஞ்சம் அடங்கி இருந்த எச்சரிக்கை மணியோசைகள், அடுத்து நடக்கப்போவதற்கான குறிப்புகள் கடந்த பத்து நாட்களாக அடிக்கடி வந்துப் போகின்றன. ஏதோ நானே இன்னொரு உருவம் எடுத்து எனக்குள் வந்தமர்ந்து கொண்டது போல. கிறிஸ்துமஸ் புது வருட விடுமுறைக்கு ஊருக்குப் போகாதே , வியன்னாவிலேயே கொண்டாடு  என்று சொல்லிய உள்ளுணர்வை நான் கேட்கவில்லை. உனக்கு ஏதோ தப்பு நடக்கப்போகிறது என்ற உள்ளுணர்வை கேட்கவில்லை. ஆழ்வார் திருநகர் வாசுதேவன் வீட்டில் குடிக்க முடிவு செய்த பொழுது, வேண்டாம் பெசண்ட் நகரில் இருக்கும் ரங்கநாதன் வீட்டில் வைத்துக் கொள் என்று சொன்ன மன ஓசையையும் கேட்கவில்லை. 

காமராஜர் சாலை வழியாகப் போகாதே  - நான் கேட்கவில்லை 
 நேரா லாமெக் பள்ளி வழியாகப்போ -  கேட்கவில்லை. 
 குறுக்க நாய்கள் வரலாம் மெதுவாகப்போ - கேட்கவில்லை 

“நாய் வருது, பிரேக் அடி”  

சின்ன கல்லில் தலையில் அடிபட்டு அதோ அங்கே கிடக்கிறேன். 

அறிவுகெட்ட முண்டம், செத்துப் போன என்னை நானே திட்டிக் கொண்டேன். எத்தனைத் தடவைதான் ஆன்மாவாக கடந்த காலத்திற்கு வந்து உள்ளுணர்வாக உதவி செய்வது, ஒவ்வொரு முறையும் இப்படி அல்ப ஆயுசில் செத்துப் போக வேண்டியாதாயிருக்கு.  கடைசியா இன்னொரு முறை முயற்சிப் பண்ணப்போறேன். ஒரு வேளை என்னை நான் காப்பாற்றி விடலாம், அது சரி, என் சோகக் கதை இருக்கட்டும், நீங்கக் கூட,  என்னை மாதிரி உள்ளுணர்வை எல்லாம் கேட்கமா இருக்காதீங்க, Intuitions could be  your own soul coming back from the time of your death and foretelling and warning you the things that had already been experienced. 







Saturday, October 20, 2012

நான் சொன்ன பேய்க்கதைகள் - ஒரு நிமிடக்கதை

”அம்மு அந்தக் கண்ணாடியைப் பார்க்காதே, நம்மளைத் தவிர வேற யாரோ இந்த ரூம்ல வேற யாரோ இருக்காங்க”

ஒவ்வொரு காதலுக்கும் ஒரு துருப்புச்சீட்டு, இப்பொழுது எல்லாம் அம்முவை என் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுவது, பேய்களைப் பற்றிய புனைவுகளே !!

”அம்மு, நேத்து நைட், ஒரு பேய் உன்னைத் துரத்திட்டு வர்ற மாதிரி கனவு கண்டேன், கையில பெரிய கோடாரி, கருப்புக் கோட்டு போட்டுக்கிட்டு”

“நீ வந்து என்னைக் காப்பாத்தினியா”

“உன்னைத் துரத்துனதைப்பார்த்தேன், பேய் உன் பக்கத்தில வர்றப்ப கனவு கலைஞ்சிடுச்சு”

பேய்க்கதைகளில் என்னை நாயகனாக்கிக்கொள்ள விரும்புவதில்லை. பெரும்பாலான பேய்ப்படங்களில் வரும் நாயகர்கள், பாரதிராஜா படத்தில் வரும் நடிகர் ராஜாவைப் போன்றவர்கள்தாம்.

அம்முவிற்கு படிப்பில் இருக்கும் ஆளுமை க்கு நேர் எதிர்பதம் அவளின்  பயந்த சுபாவம். நூடுல்ஸ் மாதிரி குழப்பமா இருக்கிற அல்காரிதத்தைக் கூட நுனி முதல் அடிவரை , அரைநொடியில் புரிந்து கொண்டு, அட்டகாசமா நிரலி எழுதுபவளுக்கு இந்த பேய் மாதிரியான அமானுஷ்ய விசயங்கள்னா ஒரு திகில். அதனால, அம்முவை சுற்றி ஏதோ ஒரு அமானுஷ்ய வளையம் இருப்பதைப்போலத் தோற்றத்தை உருவாக்கி , நான் மட்டும் அவளைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறேன்.

”நீ சொல்லுறது எல்லாம் ஏற்கனவே நிஜமாவே நடந்துட்டு இருக்கோன்னு பயமா  இருக்கு கார்த்தி”,

கல்லூரியில் இருந்து வீடு திரும்பும்பொழுது, சிறிய காட்டுப்பாதையைக் கடந்தாகவேண்டும். ஒரு நாள் அம்முவுடன் கைக்கோர்த்து வந்து கொண்டிருந்த பொழுது, அங்கே யாருமே இல்லாத பொழுதும்,அவளின் கையை விட்டுவிட்டு, இல்லாத ஒன்றை துரத்திப்போய் இரண்டு நிமிடங்கள் கழித்து அம்முவிடம் வந்து

“என்னோட கனவில் வந்த பேய் , அங்க நின்னு உன்னைப்பார்த்துச்சுடா குட்டி, போய் விரட்டிட்டேன்”

அம்முவிற்கு பேய் பயம் காட்டுவதற்காகவே,  ஆங்கில, கொரிய , தமிழ், இந்தி என திகில் படங்களைப் பார்க்க ஆரம்பித்து, பி.டி.சாமியில் இருந்து இணையத்தில் எழுதும் கத்துக்குட்டி பேய் எழுத்தாளர்கள் வரை படித்ததில் எனதுப் புனைவுகள் கொஞ்சம் பரிணாம வளர்ச்சியடைந்த்து, வேற்றுக்கிரகவாசிகளுக்கு மாறியது.

“நாலடி தாண்டா அம்மு இருக்கு, மூக்கு மட்டும் கூர்மையா, மனுஷரூபத்தில, கைக்குப்பதிலா பெரிய ரெக்கை”

என நான் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே, நான் வர்ணித்த அதே உருவம், தூரத்தில் சிறிய விண்கலம் மாதிரி வாகனத்துடன் நின்று கொண்டிருக்க, அம்மு  என் கையை உதறிவிட்டு, அதை நோக்கி ஓட, நான் திகிலிலும் பயத்திலும்  மூர்ச்சையானேன். ஆழ்மனதில், நான் அம்முவிடம் சொன்ன கதைகளில் இல்லாத  தொடர்ச்சி, இப்பொழுது புரிய ஆரம்பித்தது.
---

பிற்சேர்க்கை - இதைத் திகில் கதையாகவும் படிக்கலாம். ஓர் உருவகக்கதையாகவும் படிக்கலாம்.  காதலிக்கு சொல்லுகின்ற பேய்க்கதைகள் ---| ஒவ்வொரு காதலனும் தன் காதலியைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுக்க பிரயத்தனங்கள்,  எதை நமக்கு சாதகமாக்கிக்கொள்ள நினைக்கின்றோமோ அதுவே பாதகமாவது, கடைசியில் ஏலியன் போல எவனாவது வந்துத் தூக்கிகொண்டு போய்விட, எல்லாம் புரிந்து கொள்ளும்பொழுது டூ லேட்