Saturday, October 20, 2012

நான் சொன்ன பேய்க்கதைகள் - ஒரு நிமிடக்கதை

”அம்மு அந்தக் கண்ணாடியைப் பார்க்காதே, நம்மளைத் தவிர வேற யாரோ இந்த ரூம்ல வேற யாரோ இருக்காங்க”

ஒவ்வொரு காதலுக்கும் ஒரு துருப்புச்சீட்டு, இப்பொழுது எல்லாம் அம்முவை என் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுவது, பேய்களைப் பற்றிய புனைவுகளே !!

”அம்மு, நேத்து நைட், ஒரு பேய் உன்னைத் துரத்திட்டு வர்ற மாதிரி கனவு கண்டேன், கையில பெரிய கோடாரி, கருப்புக் கோட்டு போட்டுக்கிட்டு”

“நீ வந்து என்னைக் காப்பாத்தினியா”

“உன்னைத் துரத்துனதைப்பார்த்தேன், பேய் உன் பக்கத்தில வர்றப்ப கனவு கலைஞ்சிடுச்சு”

பேய்க்கதைகளில் என்னை நாயகனாக்கிக்கொள்ள விரும்புவதில்லை. பெரும்பாலான பேய்ப்படங்களில் வரும் நாயகர்கள், பாரதிராஜா படத்தில் வரும் நடிகர் ராஜாவைப் போன்றவர்கள்தாம்.

அம்முவிற்கு படிப்பில் இருக்கும் ஆளுமை க்கு நேர் எதிர்பதம் அவளின்  பயந்த சுபாவம். நூடுல்ஸ் மாதிரி குழப்பமா இருக்கிற அல்காரிதத்தைக் கூட நுனி முதல் அடிவரை , அரைநொடியில் புரிந்து கொண்டு, அட்டகாசமா நிரலி எழுதுபவளுக்கு இந்த பேய் மாதிரியான அமானுஷ்ய விசயங்கள்னா ஒரு திகில். அதனால, அம்முவை சுற்றி ஏதோ ஒரு அமானுஷ்ய வளையம் இருப்பதைப்போலத் தோற்றத்தை உருவாக்கி , நான் மட்டும் அவளைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறேன்.

”நீ சொல்லுறது எல்லாம் ஏற்கனவே நிஜமாவே நடந்துட்டு இருக்கோன்னு பயமா  இருக்கு கார்த்தி”,

கல்லூரியில் இருந்து வீடு திரும்பும்பொழுது, சிறிய காட்டுப்பாதையைக் கடந்தாகவேண்டும். ஒரு நாள் அம்முவுடன் கைக்கோர்த்து வந்து கொண்டிருந்த பொழுது, அங்கே யாருமே இல்லாத பொழுதும்,அவளின் கையை விட்டுவிட்டு, இல்லாத ஒன்றை துரத்திப்போய் இரண்டு நிமிடங்கள் கழித்து அம்முவிடம் வந்து

“என்னோட கனவில் வந்த பேய் , அங்க நின்னு உன்னைப்பார்த்துச்சுடா குட்டி, போய் விரட்டிட்டேன்”

அம்முவிற்கு பேய் பயம் காட்டுவதற்காகவே,  ஆங்கில, கொரிய , தமிழ், இந்தி என திகில் படங்களைப் பார்க்க ஆரம்பித்து, பி.டி.சாமியில் இருந்து இணையத்தில் எழுதும் கத்துக்குட்டி பேய் எழுத்தாளர்கள் வரை படித்ததில் எனதுப் புனைவுகள் கொஞ்சம் பரிணாம வளர்ச்சியடைந்த்து, வேற்றுக்கிரகவாசிகளுக்கு மாறியது.

“நாலடி தாண்டா அம்மு இருக்கு, மூக்கு மட்டும் கூர்மையா, மனுஷரூபத்தில, கைக்குப்பதிலா பெரிய ரெக்கை”

என நான் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே, நான் வர்ணித்த அதே உருவம், தூரத்தில் சிறிய விண்கலம் மாதிரி வாகனத்துடன் நின்று கொண்டிருக்க, அம்மு  என் கையை உதறிவிட்டு, அதை நோக்கி ஓட, நான் திகிலிலும் பயத்திலும்  மூர்ச்சையானேன். ஆழ்மனதில், நான் அம்முவிடம் சொன்ன கதைகளில் இல்லாத  தொடர்ச்சி, இப்பொழுது புரிய ஆரம்பித்தது.
---

பிற்சேர்க்கை - இதைத் திகில் கதையாகவும் படிக்கலாம். ஓர் உருவகக்கதையாகவும் படிக்கலாம்.  காதலிக்கு சொல்லுகின்ற பேய்க்கதைகள் ---| ஒவ்வொரு காதலனும் தன் காதலியைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுக்க பிரயத்தனங்கள்,  எதை நமக்கு சாதகமாக்கிக்கொள்ள நினைக்கின்றோமோ அதுவே பாதகமாவது, கடைசியில் ஏலியன் போல எவனாவது வந்துத் தூக்கிகொண்டு போய்விட, எல்லாம் புரிந்து கொள்ளும்பொழுது டூ லேட்