Showing posts with label உலகத்திரைப்படம். Show all posts
Showing posts with label உலகத்திரைப்படம். Show all posts

Sunday, March 16, 2014

First Spaceship on Venus - அணு உலை எதிர்ப்பாளர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம்


First Spaceship on Venus, அணுசக்தி பேரழிவான ஒன்று என்ற கருத்தைத் தாங்கி வந்திருந்த படம் இது. 1960 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், முன்னாள் சோவியத் யூனியன் நண்பர்களான பழைய கிழக்கு ஜெர்மனி - போலாந்து கூட்டுத் தயாரிப்பாக வெளிவந்தது. சோவியத் சம்பந்தபட்ட / அமெரிக்க எதிர்ப்பு சமாச்சாரங்கள் நீக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அமெரிக்காவிலும் வெளியானது.

கோபி பாலைவனத்தில் கண்டெடுக்கப்படும் ஓர் அன்னியமான பொருள், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சைபீரியாவின் மேல் வெடித்த விண்கலத்தின் துண்டு என அறியப்படுகின்றது. அதில் சூசகமாகப்பொதிந்து இருக்கும் ஆனால் பாதி மட்டுமே கண்டுபிடிக்க முடிந்த எலக்ட்ரானிக் தகவலின் வழியாக வெள்ளி கோளில் உயிரினங்கள் இருப்பதாக அறிகின்றனர்.

சோவியத் யூனியன் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப தயார் செய்து வைத்திருந்த விண்கலம், வெள்ளிக்கு அனுப்ப முடிவு செய்யப்படுகின்றது. வெள்ளி கிரகத்தை அடையும் முன்னர், விண்கலத்தில் இருக்கும் இந்திய கணிதப்பேராசிரியர் , அன்னியமான அந்த காஸ்மிக் பொருளில் பொதிந்து இருக்கும் மிஞ்சிய தகவலையும் கண்டறிகின்றார். வெள்ளிகிரக வாசிகள் , பூமியை அணுஆயுதங்கள் தாங்கிய விண்கலம் கொண்டு தாக்க முடிவு செய்துள்ளனர் என்பதுதான் அது.
வெள்ளி கிரகத்தை அடையும் விண்கலம், அங்கு உயிரினங்கள் யாருமில்லாதது கண்டு வியப்படைகின்றனர். பூமியைத் தாக்க அனுப்பப்படவேண்டிய அணு ஆயுதங்கள் அடங்கிய விண்கலத்தையும் கண்டுபிடிக்கின்றனர். முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது. வெள்ளி வாழ் மக்கள் , அக்கிரகத்தில் ஏற்பட்ட அணு ஆயுதப்போர்கள், அணு உலை விபத்துகள் ஆகியவற்றினால் ஒட்டுமொத்தமாக ஏற்கனவே அழிந்துப்போய் விட்டனர். ஆனால் அவர்கள் பூமியைத் தாக்க உருவாக்கிய அணு ஆயுத கலம் , சில பூச்சி வடிவ எந்திரங்கள் , மின்சார கட்ட்மானங்கள் மட்டும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. கதிரியக்க வீச்சு, எதிர்மறை ஈர்ப்பு விசை இவற்றில் இருந்து விஞ்ஞானிகள் எப்படி தப்பித்து வெள்ளிக்கிரகத்தில் இருந்து மீண்டும் பூமிக்கு திரும்புகின்றனர் என்பதுதான் கிளைமேக்ஸ்.

சோவியத் காலத்தில் இந்தியா நண்பன் என்பதால் கதையில் இந்திய விஞ்ஞானி பாத்திரம் முக்கியமானதாக இருக்கின்றது.

படத்தில் வரும் இந்திய ஆண் கதாபாத்திரங்கள் நேரு குல்லா அதாவது தற்கால ஆம் ஆத்மி குல்லா அணிந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில், முக்கிய அணு உலை எதிர்ப்பாளர்கள் கூட ஆம் ஆத்மி குல்லாகாரர்கள்தான் 

ஹிரோசிமா, நாகாசகி அழிவுப்பற்றிய குறிப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்ட ஆங்கிலப்பதிப்பில் நீக்கப்பட்டிருக்கின்றன.

அணுசக்தி/உலைகள் எதிர்ப்புக்குழுவினர் , இப்படத்தின் உரிமம் வாங்கி தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு தங்களது பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

படத்தின் சுவாரசியத்திற்காக , நீங்கள் அணுசக்தி ஆதரவாளராக இருந்தால் கூட இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம். நான் அப்படித்தான் பார்த்தேன்.

படத்திற்கான சுட்டி https://www.youtube.com/watch?v=n7V9QbF8QxI#aid=P-0hfh2pGwU

Monday, November 25, 2013

இரண்டாம் உலகம் - திரைப்படம் - சிலக்குறிப்புகள் - எழுதியவர் மண்டப எழுத்தாளர் கிளிமூக்கு அரக்கன்


சிலப்பள்ளிகளில் நூற்றுக்கு எழுபது மதிப்பெண்கள் எடுப்பவன் தான் முதல் மாணவனாக இருப்பான். அவனுக்கு அடுத்தபடியாக எடுத்தவன் மதிப்பெண்களைப் பார்த்தால் வெறும் 25 அல்லது முப்பது இருக்கும். பள்ளியின் நிலைமை , மாணவனின் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் , முதல் மாணவனை , வேறு பள்ளியில் 95 சதவீதம் எடுக்கும் மாணவனுடன் ஒப்பிட்டு , அடி அடி என அடித்தால் என்ன செய்வது... செல்வராகவனும் அந்த எழுபது சதவீத முதல் மதிப்பெண் மாணவனைப் போன்றவர்தான். தமிழ்த் திரைப்பட சூழல், அதன் வர்த்தகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு , இரண்டாம் உலகம் படத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். நம்மவர்களுக்கு பிரச்சினையே, மனைவியிடம் முன்னாள் காதலியைத் தேடுவது, ரோகித் சர்மாவிடம் டெண்டுல்கரைப் பார்ப்பது, ஆங்கிலப் படத்தை தமிழில் தேடுவது என்பதுதான். முதல் உலகின் வணிகப்படங்களின் தரத்தை, மூன்றாம் உலகத்தின் திரைப்படத்தில் தேட வேண்டிய அவசியம் இல்லை. 

சிலப் படங்களை ஆற அமர உட்கார்ந்து ரசித்துப் பார்க்க வேண்டும். இரண்டு மணி நேரப் படம் , இருபது நிமிடம் போல் கடக்க வேண்டும் என நினைப்பவர்களால் , இரண்டாம் உலகத்தை ரசிக்க முடியாது என்பதல்ல, அவர்களுக்கு அத்தனை நேரம் மற்றும் பொறுமை இருக்காது. இழுவை, புரியவில்லை என கமர்சியல் விமர்சகர்களால் கிழிக்கப்பட்ட அன்பே சிவம் , மும்பை எக்ஸ்பிரஸ் போன்று காலம் கடந்து நிற்கும் சிலப் படங்களின் வரிசையில் இரண்டாம் உலகம் சேரும். 

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான பொழுது , சோழர்களைக் காட்டுமிராண்டிகளாக காட்டுவதா என கொதித்து எழுந்த தமிழ்த் தேசியவாதிகள் , இரண்டாம் உலகத்தில் எங்கும் தமிழ் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். நமக்கு வீரர்களாக தெரிந்த , சோழர்கள் காட்டுமிராண்டிகளா என்பதை அக்கால மலேசியத் தீபகற்ப மக்களைக் கேட்டால் தான் தெரியும். சோழர்களை மிகைப்படுத்தல் இன்றி , புனைவில் காட்டியமைக்காகவே ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை எனக்குப் பிடிக்கும். ஆயிரத்தில் ஒருவனைப் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக இரண்டாம் உலகம் பிடிக்கும். 

இரண்டாம் உலகத்தில் எங்கும் தமிழ் என்பதை வழமைப்போல மென்-இந்துத்வா 'பதிப்பக இணையதளம்' ஒன்று ஆரிய கிண்டல் அடித்து இருந்ததைப் படித்தது தான் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க தூண்டு கோலாக இருந்தது. சிலப் படங்களை யார் எதிர்க்கின்றார்கள் என்பதை வைத்துதான் பார்க்க வேண்டும். 

பின்னிப்பிணைந்து இருக்கும் இரண்டு உலகங்கள். இரண்டிலும் ஆரியா அனுஷ்கா . ஓர் உலகின் காதல் தோல்வி எப்படி மற்றொரு உலகத்தில் மாற்றம் கொண்டு வருகின்றது என்பதுதான் கதையின் அடி நாதம். செல்வராகவனின் முந்தையப் படங்களை விட , இந்தப்படத்தில் மென்மை அதிகம். 

படம் நெடுக விரவிக் கிடக்கும் நகைமுரண்கள் இரண்டாம் உலகத்தை சுவாரசியம் ஆக்குகின்றது. பெண் தெய்வத்தை வழிபடும் சமூகத்தில், பெண் அடிமைத்தனம். 

இவ்வுலகில் மட்டுமல்ல, இரண்டாம் உலகிலும் கடவுளைக் காப்பாற்றுபவன் மனிதன், அவனுக்கு வீரமும் ஈரமும் ஊட்டுவது காதல் மட்டுமே .. அதுவே மனித நாகரிகத்தின் மையப்புள்ளி

"அந்தக் கடவுளைத் தவிர அத்தனைபேரையும் கொல்லுங்கடா" - நாத்திகம் ஆத்திகம் என எப்படி பார்த்தாலும் இந்த வசனம் ஆழ்ந்த பொருள் தரும் வசனம். 

இரு வேறு துருவ ஆளுமைகளாக ஆரியா அனுஷ்கா கதாபாத்திரங்கள். 

இரண்டாம் உலகம் எனக் காட்டப்படும் ஜார்ஜியா , உண்மையில் சமகால வரலாற்றில் இரண்டாம் உலக நாடுகளில் ஒன்று. ( மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் முதல் உலகம், பழைய சோவியத் தலைமையிலான பொதுவுடைமை நாடுகள் இரண்டாம் உலகம், இந்தியா போன்ற வளரும் நாடுகள் மூன்றாம் உலகம் ) 

ஆடல் பாடல் கவர்ச்சிக்கு வில்லத்தனத்திற்கு மட்டும் வெளிநாட்டு நடிகர்களைப் பயன்படுத்தும் இந்தியத் திரைப்படங்களில் , விதிவிலக்காக பெரும்பகுதியான படத்தில் , வெளிநாட்டு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் அனேகமாக இரண்டாம் உலகமாகத்தான் இருக்கும். 

ஒரு சிலத் தமிழ்த் தேசிய இயக்குநர்கள் போல தனித் தமிழ் வசனங்கள் ஆன திரைப்படம் எனத் தம்பட்டம் அடிக்காமல், இயல்பான தமிழ் வசனங்களால் பெரும்பாலும் இரண்டாம் உலகம் நிரம்பி இருப்பது பாராட்டப்பட வேண்டியது. கலகமான விசயங்களை கூட்டம் கூட்டி விளம்பரப்படுத்தாமல் , நாத்திகமோ , உறவுச் சிக்கல்களோ போறப் போக்கில் சொல்லிவிட்டுப் போவதனால் தான் செல்வராகவன் தொடர்ந்து கவனிக்கப்படுகின்றார். 

ஓர் ஊரில் மிகப்பெரிய ஓவியன் இருந்தான். அவனது ஓவியங்கள் அகில உலகப் பிரபலம். மில்லியன் பவுண்ட் கணக்கில் அவனது ஓவியங்கள் விலை போகும். ஆளுமைகளின் வீட்டில் எல்லாம் அவனது ஓவியம் தான் வரவேற்கும். ஆனால் அவனது அம்மாவின் வீட்டில், ஓவியன் பதின்மங்களில் வரைந்த ஓவியம் ஒன்று மாட்டப்பட்டு இருக்கும். அவனது அம்மா வீட்டில் , ஏன் ஒவியனது சமகால ஓவியம் மாட்டப்படமால் , ஒப்பீட்டளவில் சுமாராக உள்ள ஓவியனது ஆரம்ப கால ஓவியம் இருக்கின்றது என அனைவருக்கும் வியப்பு. அவனது அம்மாவின் பதில், " இன்றைய மதிப்பில்லா ஓவியங்களின் ஆரம்ப விதை , அந்த ஓவியமே .. அது பாராட்டப்பட்டதனாலேயே இன்றைக்கு இவ்வளவு ஓவியங்கள் கிடைத்துள்ளன. என்னளவில் எனது மகனது சிறந்த ஓவியம் அவனது இந்த பழைய ஓவியமே "

செல்வராகவனும் ஓர் ஓவியனே ... ஓவியனின் அம்மாவைப்போல இன்று தோள் தட்டிப் பாராட்டுவோம். ஆளுமையும் வயதும் திமிரும் இந்த ஓவியனுக்கு இருக்கின்றன, இவை அனைத்தும் தொடக்கமே !! 

குழந்தைகளை மட்டுமல்ல, திரைப்படங்களையும் 'சமமற்ற' வைகளுடன் ஒப்பிடக் கூடாது. தமிழ் டப்பிங்கில் ஆங்கிலப் படங்களைப் பார்த்துவிட்டு, ஐ எம் டி பி யில் குறிப்புகள் படித்து விட்டு, விக்கிப்பிடியாவில் இருந்து மொழிப் பெயர்த்து விட்டு உலக சினிமா பேசுபவர்களைப் புறந்தள்ளி விட்டு , இரண்டாம் உலகத்தைப் பாருங்கள். எனக்குப் பிடித்து இருந்ததைப் போல உங்களுக்கும் பிடித்து இருக்கும். ஒரு வேளை பிடிக்காவிடினும் கவலைப் படாதீர்கள். சில ஆண்டுகள் கழித்துப் பிடிக்கும். வாழ்க்கையில் நிறைய விசயங்கள் ஒத்திப் போடப்பட்டே ரசிக்கப்படுகின்றன.

Thursday, January 19, 2012

ஜின்னா - உலகத்திரைப்படம் - ஒரு பார்வை

காயிதே ஆசாம் முகமது அலி ஜின்னா, இவரின் பெயரைக் கேட்டாலே அன்றைய பிரிட்டிஷ் - இந்திய அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனம். இன்றும் கூட ஜின்னாவைப் புகழ்ந்தால் இந்திய தேசியத்தின் எதிரி எனக் குற்றஞ்சாட்டப்படவும் வாய்ப்புகள் உண்டு. இந்திய துணைக்கண்டத்தில் ஒரு பகுதி மக்களுக்கு நாட்டைத் துண்டாடிய வில்லன், மறுபகுதி மக்களுக்கு வரலாற்று கதாநாயகன், அரசியல் வரலாற்று நோக்கர்களுக்கு ஒரு புதிர். ஒரு வேளை முகமது அலி ஜின்னா , இந்தியாவின் நேருவைப்போல அதிக காலம் ஆண்டிருந்தால் பாகிஸ்தான் ஒரு நவீன, மக்கள் நலன் நாடாக உருவெடுத்து இருக்கும் எனக் கூறும் அரசியல் நிபுணர்களும் உண்டு. ஒருங்கிணைந்த இந்தியாவிற்கான, தனது 14 அம்சத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படாமல் அரசியலில் வேண்டுமென்றே தனிமைப்படுத்தப்பட்டபொழுது, தனது வீச்சைக் காட்டவேண்டும் என்று வீம்பாக பாகிஸ்தானிய கோஷத்தை எடுத்தவர், தனக்கு பிரதமர் பதவி கிடைக்காது என்ற கோபத்தில் பிரிவினை வாதத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. காந்தி கதாநாயகன் , நேரு துணை கதாநாயகன் , ஜின்னா வில்லன் என திரைப்படங்களில் காட்டப்படும் கதாபாத்திரக் கட்டமைப்புகளில்தாம் நாம் வரலாற்றில் படித்திருப்போம். ஸ்வீடன் வந்தபின்,
ஒரு திட்ட மேலாண்மை பாடத்தில் தலைமைப்பண்புகளை பற்றி ஒரு தலைவனை உதாரணமாகக் கொண்டு கட்டுரை எழுதவேண்டியிருந்தது. பெரும்பான்மையான பாகிஸ்தானிய மாணவர்கள் எழுதியது முகமது அலி ஜின்னாவைப் பற்றியதுதான். கட்டுரைகள் மிகையாக எழுதப்பட்டிருந்தாலும், சிலக்கட்டுரைகளை, படித்தபொழுது சுவாரசியமான மனிதராகப் பட்டார்.



எனக்குத் தெரிந்திருந்த ஜின்னா, காந்தி திரைப்படத்தில் சிகரெட் பிடித்தபடி, முகத்தைக் கடுமையாக வைத்திருக்கும் இந்திய நடிகர் அலிக்பதமஸி தான். காந்தி திரைப்படத்தில் பிரிட்டீஷ் கதாபாத்திரங்களுக்கு அடுத்தபடியாக கெட்டவராக சித்தரிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் ஜின்னாவினது. காந்தி திரைப்பட உருவாக்கத்தில் இந்திய திரைப்பட வாரியமும் பங்கு பெற்று இருந்ததால் திட்டமிட்ட சேறடிப்பு இருந்ததாக ஒரு வாதம் உண்டு. சரி காந்தியைப் பற்றி திரைப்படம் உலகிற்கு வந்தாகிவிட்டது. அவருக்கு இணையான வரலாற்று நாயகன் ஜின்னாவைப் பற்றி படம் வேண்டும் அல்லவா... பொதுவாக பொழுது போக்கு அம்சங்களுக்கு நேரிடை சந்தையிலோ கள்ள சந்தையிலோ இந்தித் திரைப்படங்களை நம்பி இருக்கும் பாகிஸ்தானிய சமூகம் போர்கள், சர்வாதிகாரிகள் என அல்லல்பட்டுக்கொண்டிருக்கையில் அவர்கள் திரைப்படம் எடுக்க எங்குப்போவார்கள்.



காந்தித் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து, பன்னாட்டு வெகுசனங்களுக்கு ஜின்னா ஒரு எதிர்மறைநாயகன் என ஸ்திரப்படுத்தியப்பின்னர், 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜின்னா. கலைகளின் இருப்பிடம் கல்கத்தாவில் பிறந்து, இங்கிலாந்தில் குடியேறிய ஜமீல் தெஹ்லாவி இயக்க ஜின்னா திரைப்படம் ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் வெளியானது. ஜமீல் தெஹ்லாவியின் முந்தையத் திரைப்படமான தெ பிளட் ஆஃப் ஹுசைன் , ஜியா உல் ஹக் அரசாங்கத்தால் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று கதாப்பாத்திரங்களைத் திரையில் வடிவமைக்கும்பொழுது, தேர்ந்தெடுக்கப்படும் நாயகர்கள்-நாயகிகள் வேறு எந்த பிம்பங்களுக்குள்ளும் சிக்காதிருப்பவர்களாக இருந்தால் நல்லது. மாறாக ஜின்னாவாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிறிஸ்டோபர் லீ.



கிறிஸ்டோபர் லீ, தேர்ந்த நடிகர்தான், அதில் சந்தேகமுமில்லை, பிரச்சினை என்னவெனில் அவர் டிராகுலா வரிசைப்படங்களில் தொடர்ந்து நடித்தவர். பொதுவாகவே தொட்டாச்சிணுங்கிகளான துணைக்கண்ட மக்கள் இதற்கு குரூரமான படங்களில்
நடித்த நடிகர், தங்களின் தலைவனாக எப்படி நடிக்கலாம் என பாகிஸ்தானிய மக்களின் ஒரு பிரிவினர் கொதித்து எழுந்தனர். அடுத்தது, ஜின்னாவின் மனைவி ரத்தன்பாய் ஜின்னாவாக நடித்தவர் - இந்திரா வர்மா. காமசூத்திரா திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர். கேட்கவா வேண்டும், பாகிஸ்தானிய அரசாங்கம், நடுவில் திரைப்படத்திற்கு வழங்கிவந்த நிதி உதவியை நிறுத்தியது. தளராத ஜமீல் ஒத்தக் கருத்து உடைய மக்களின் உதவியுடன் திரைப்படத்தை முடித்து வெளியிட்டார்.

சுயசரிதங்களைப் படமாக்கும்பொழுது எழுதப்படவேண்டிய நேரிடை திரைக்கதை இந்தத் திரைப்படத்தில் பின்பற்றப்படவில்லை என்பது மூன்றாவது கோணல். மரணமடைந்த ஜின்னாவின் ஆத்மா வானுலகிற்கு வருகிறது. இந்தித் திரைப்பட நடிகர் சசிகபூர் தான் வானுலக தேவதூதர். ஜின்னா நரகத்திற்கு அனுப்பபடவேண்டியவரா, சொர்க்கத்திற்கு வரவேண்டியவரா என சசிகபூர் தனது கணினியின் கோப்புகளில் விபரங்களைத் தேடுகிறார். சிலக்கோப்புகள் அழிந்துவிட்டபடியால், சசிகபூரும் ஜின்னாவின் ஆத்மாவும் மீண்டும் பூமிக்குப் பயணிக்கின்றனர். சசிகபூருக்கும் ஜின்னவின் ஆத்மாவிற்கும் நடக்கும் உரையாடல்கள், கடந்த கால மீள்பார்வைகளாக விரிகின்றன. படம் முழுக்க, ஜின்னாவின் வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும்படியாகவே ஒவ்வொரு காட்சியமைப்பும் அமைக்கப்பட்டிருப்பது மிகப்பெரும் நெருடல். போகிற போக்கில் விளக்கங்கள் இல்லாமல், முழுத் திரைக்கதையும் விளக்கங்களைச் சுற்றியே இருக்கின்றது.

ஜின்னா நாயகப்பாத்திரம் என்றால், நேருவின் பாத்திரம் எதிர்மறைப்பாத்திரமாக சித்தரிக்கப்படுகிறது. ஜின்னா - ரத்தன்பாய் காட்சிகளை விட, நேரு - எட்வினா காட்சிகள் படத்தில் அதிகம். நேரு பத்திரமாட்டுத் தங்கமல்ல, என அவரை வெளிச்சப்படுத்தி,
ஜின்னாவை உயர்த்திக் காட்டும் கதைப்போக்கு இருப்பது ஒரு சறுக்கல். எந்தவித ஒப்புமைகளும் இல்லாமலேயே ஜின்னா மகத்தான தலைவர் என படத்தில் காட்சிப்படுத்தி இருக்கலாம். நேருவும் எட்வினாவும் படுக்கை அறையில் அமர்ந்து பேசிக்கொண்டும் சிகரெட் பிடித்துக் கொண்டும் இருப்பதும் போன்ற காட்சியமைப்புகள் உண்மையிலேயே தைரியமானவையே. மௌண்ட்பேட்டன் மற்றும் நேரு, எட்வினாவின் கைப்பாவைகள் எனக் குறிப்புகளால் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது, இந்திய வரலாற்று கற்பிதங்களில் ஊறியவர்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடும்.

ஒரு காட்சியில் லியாகத் அலிகான், சிலக்கடிதங்களைக் கொண்டு வந்து ஜின்னாவிடம் கொடுத்து, இக்கடிதங்கள் நேரு எட்வினாவிற்கு இடையில் பரிமாறப்பட்டவை, இவற்றைப் பகிரங்கப்படுத்தவேண்டும் எனச் சொல்லுவார். அதற்கு ஜின்னா இந்தக் கடிதங்கள் இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலானது, அதைப் பிரசுரிப்பது என்பது தவறு, இக்கடிதங்களை எரித்துவிடுங்கள் என கோபமாக உத்தரவிடுவார். நேருவிற்கும் ஜின்னாவிற்கும் இடையிலான நீயா நானாப் போட்டியில் ஜின்னா எத்தனைப் பெருந்தன்மையானவர் என்பதை நிருபிப்பதிலேயேப் பாதிப்படம் போகின்றது.




பலரும் அறிந்திராத ஜின்னாவின் இளமைப்பருவத்தை உள்ளபடியே கூறியிருப்பது படத்திற்கு பலம் சேர்க்கும் விசயம். முதல் மனைவி இறந்த சோகத்தில் தனித்து இருக்கும் ஜின்னா, ரத்தன்பாய் என்ற பார்சிப் பெண்ணின் மேல் ஈர்ப்பாகிறார். ரத்தன்பாய் குடும்பம் எதிர்க்க, ரத்தன்பாய் சட்டப்பூர்வ திருமண வயது வரைக் காத்திருந்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அரசியல் போராட்டங்கள், அரசியல் தனிமைப்படல், மனைவியின் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு ஈடுகொடுக்கமுடியாமை, மேற்கத்திய சிந்தனையோட்டம் - இஸ்லாமிய தேசிய முன்னெடுப்பு இரண்டு நேரெதிர் கருத்தாங்களுக்கு இடையில் அல்லல் படல் என இளமையான ஜின்னாவாக ரிச்சர்ட் லிண்டர்ன் அருமையாக நடித்து இருக்கின்றார்.
படத்தில் என்னைக் கவர்ந்தப் பாத்திரமும் இவரே !!!!



ஆண் பெண் சமம் என, தனது தங்கை பாத்திமா தீவிர அரசியலில் ஈடுபடுவதையும், தனக்கு ஆலோசனைகள் வழங்குவதையும் ஆதரித்த ஜின்னா, முஸ்லீம் அடிப்படைவாதிகளின் எதிர்ப்பை சம்பாதிப்பதாகவும் படத்தில் காட்டப்படுகிறது. ரத்தன்பாய் இறந்த பின்னர் பாத்திமா தனது பல்மருத்துவமனையை மூடிவிட்டு, தனது அண்ணனுடனேயே வந்துத் தங்குகிறார். ஜின்னா எடுக்கும் பெரும்பான்மையான முடிவுகளில் பாத்திமாவின் பங்கும் உண்டு என்பதை திரைப்படம் பதிவு செய்து இருக்கின்றது. (பாகிஸ்தானின் இந்திரா காந்தியாக உருவெடுத்து இருக்கக்கூடியவர், பின்னாட்களில் அயுப்கானின் அடாவடி தேர்தல் தில்லுமுல்லுகளால் அதிபராக முடியாமல் போய்விட்டார். )

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு பிணங்களுடன் ரயில்கள் வந்ததைப்போல , இந்தியப்பகுதிகளில் இருந்தும் அதே அளவிற்கு பிணங்களுடன் ரயில்கள் அனுப்பப்பட்டன என்பதையும் திரைப்படம் பதிவு செய்து இருக்கின்றது. கடைசிவரை சிறையே செல்லாமல் ஒரு நாட்டை வார்த்து எடுத்தது ஜின்னாவின் சிறப்பாக சொல்லப்பட்டாலும்,, அரசாங்கத்தை எதிர்த்து செய்யப்படும் போராட்டங்களுக்கு ஜின்னா ஆதரிக்கவில்லை என்பது நெருடுகிறது. போராட்ட விதைகளே சுதந்திரத்தை அறுவடை செய்யும் என்பதில் நம்பிக்கை இல்லாமல், ஜின்னா ஒரு மேட்டிமை மேசை அரசியல்வாதியோ எனப் புரிந்து கொள்ளக்கூடிய அபாயமும் இருக்கின்றது.

திரைப்படத்தின் இறுதியில், அனைவரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி ஜின்னா வழக்கறிஞராக வாதாடுவது போன்ற கற்பனையான நீதிமன்றக் காட்சி மேலுலகில் நடத்தப்படுவது போல காட்சிகள் இருப்பது பார்க்க நன்றாக இருந்த போதிலும் முன்பே சொன்னபடி, சுயசரிதைப்படங்களுக்கான இலக்கணக் கூறாக இல்லை. காந்தி, நேருவுடன் ஜின்னா பாபர் மசூதி இடிப்பையும் அதனைத் தொடர்ந்த கலவரங்களையும் கணினியில் பார்ப்பது போலவும், ஜின்னா கலவரங்களைச் சுட்டிக்காட்டி, இவற்றை எல்லாம் தவிர்க்கத்தான் தான் அன்றே முஸ்லீம்களுக்கு தனிநாடு கேட்டதாக சொல்வதுடனும், காந்தியும் நேருவும் மௌனமாக அதை ஆமோதிப்பதுடனும் படம் முடிவடைகிறது.

படம் முழுக்க, ஜின்னாவினது மேல் இருக்கும் அவதூறுகளைக் களையவேண்டும் என்ற இயக்குனரின் தவிப்பு சாமனிய ரசிகனுக்கும் புரிவது போல் இருப்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம். கட்டுப்படுத்தப்பட்ட பொருட்செலவுகளுடனுடம் படத்தைத் தயாரித்து இருந்திருந்தாலும், ஒரு திரைப்படமாக கண்டிப்பாக ஜொலிக்கின்றது. தரமான ஒளிப்பதிவு, பொருந்துகின்ற பின்னணி இசை 50 களுக்கு முந்தைய வருடங்களை மீண்டும் திரையில் கொண்டு வந்தது, நவநாகரிக , மிடுக்கான கிறிஸ்டோபர் லீ மற்றும் ரிச்சர்ட் லிண்டர்ன் ஆகியோரது நடிப்பு ஆகியனவற்றுடன் , இந்தியத் துணைக்கண்டத்தின் மாற்று அரசியல் வரலாற்றைப் பதிவு செய்த படம் வகையில் கண்டிப்பாக ஜின்னா குறிப்பிடத்தக்க திரைப்படம். காந்தி திரைப்படத்துடன் இதை ஒப்பிடுவது நியாயமானது இல்லை என்றாலும், ஒப்புமைகள் தவிர்க்கப்பட முடியாதது. படம் திரையரங்குகளில் வெளிவந்து, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்தே ஜின்னா திரைப்படத்தின் டிவிடி-விசிடி வடிவம் வெளிவந்தது என்பதிலும் சொல்லப்படாத அரசியல்கள் இருக்கின்றன. இத்திரைப்படம் ஆங்கிலத்திலும் உருதிலும் யூடியுப் இணையதளத்தில் கிடைக்கின்றது. திரைப்பட ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் என அனைவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டியத் திரைப்படம். படம் பார்த்து முடிந்த பின்னர், ஜின்னா கதாநாயகன் என்று ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ, அவரை இனிமேல் வில்லன் என கண்டிப்பாக சொல்ல மாட்டீர்கள், அதுவே இந்தப்படத்தின் வெற்றி.