Sunday, August 24, 2014

தற்கொலை - சிறுகதை

சென்ற ஒளி ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஒளி ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றன. அதற்கு நான் தான் முக்கிய காரணம். வீம்புக்கு தற்கொலை செய்ய நினைப்பவர்களை பேயாகவும் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களை மனசாட்சியாகவும் பயமுறுத்தி வாழவைக்கும் தெய்வம் நான்.

தற்கொலைகளைத் தடுப்பது பெரும்பாலும் எளிது. தற்கொலை செய்துகொள்ள நினைப்பவரின் பிரிவை யாரால் தாங்கிக் கொள்ள முடியாதோ அவர்களின் நினைவைத் தூண்டிவிட்டால் போதும். ஆனால்இவனின் மனதை மாற்ற கடைசி ஒரு மணி நேரமாக முயற்சிக்கின்றேன்.இவனோ சாவதற்கு துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றான்.

"காதலின் தீபம் ஒன்று "  பாடல் தொலைக்காட்சியில்

"எளவெடுத்த இந்த பாட்டால என் லைஃபே போச்சு" தொலைக்காட்சிப்பெட்டியை உடைத்தான்.

"சாவதை விட வாழ்வது எளிது" இவன் முன்னர் தோன்றினேன்.

"நோ இட்ஸ் எ  ப்ரீடம்"

"மிகப்பெரிய பிரச்சினைகள் விடுதலை என்று நாம் எதை நினைக்கின்றோமோ அந்த விடுதலை கிடைத்த பின்னர்தான் வரும்"

"ஹூ ஆர் யூ , எப்படி என் வீட்டிற்குள் வந்தாய் "

"பேரண்டங்களின்  தற்கொலை தடுப்பு காவலன்"

"செம ஜோக் மச்சி, சாவப்போறதுக்கு முன்ன ஒரு காமெடி பீஸை பார்க்கனும்னு என் தலைவிதி..."  சில நொடிகள் அமைதிக்குப் பின்னர்

"திருடனா நீ ,  இந்தா நான் செத்த பிறகு இந்த வீட்டில இருக்கிற அத்தனையும் உனக்குத்தான் எடுத்துட்டுப் போய் நீயாவது நல்லா இரு"  இரண்டாவது தூக்க மாத்திரையை எடுத்து போட்டான்.

"விளையாட்டுக்கு சொல்லவில்லை. உண்மையாகவே நான் மனிதர்களின் தற்கொலை எண்ணங்களை மாற்றுபவன், இப்பேரண்டங்களின்   காவலர்களின் ஒருவன் "

"ஓகே ஒகே , ஏன் தற்கொலையை தடுக்கவேண்டும், நான் செத்துப் போவதால் இந்த யுனிவர்சுக்கு என்ன நஷ்டம்  " நக்கலாய் ஓரச்சிரிப்பு சிரித்தபடி மூன்றாவது மாத்திரையை எடுத்தான்.

"அதை சொல்ல முடியாது. ஆனால் நீ எந்த எந்த பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்ள நினைக்கின்றாயோ அவை ஒருபோதும் மாறாது , இன்னும் அதிகமாகத்தான் ஆகும் "

"ஒ , மை டியர் திருடன், அந்த பிராபளம்ஸை நான் பார்க்க வேண்டியதில்லையே "

"நீங்கள் பார்ப்பீர்கள்  அனுபவிப்பீர்கள் "

"என்ன, ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாய் அலைவேன்னு சொல்றியா"

"இல்லை இல்லை. உங்கள் பிரச்சினைகளை நீங்கள் அனுபவிக்காமல் தப்பிக்க முடியாது , அதுதான் இப்பேரண்டத்தின் விதி "  நான் சொல்லி முடிப்பதற்குள் ஆறேழு மாத்திரைகளை எடுத்துஇவன் சாப்பிட்டிருந்தான்.

தற்கொலை தடுப்பு முயற்சி தோல்வி அடைந்த கவலையை விட,  தற்கொலையில் இறந்துப் போகப் போகின்ற இவனுக்காக நான் ஒரு பிரதி பேரண்டத்தை உருவாக்கவேண்டுமே என்ற கவலை எனக்கு . தற்கொலையில் இறக்கும் ஒவ்வொருவருக்காகவும் ஒரு பேராண்டத்தை உருவாக்க அதிக ஆற்றல் தேவைப்படுவதால் , ஆற்றல் சேமிப்பிற்காகத்தான்   நான் தற்கொலைகளைத் தடுக்க முயற்சிக்கின்றேன் .  இவன் உயிருக்குப் போராடும் அந்த சொற்ப நேரத்திற்குள் பிரதிகளை உருவாக்கி , இதே நேர பரிமாணத்தில்  இவனை அங்கு வாழவைக்க வேண்டும்.

ஆம் தற்கொலையில் இறப்பவர்கள் ,  நீங்கள் நினைப்பதைப் போல இறந்து விடுவதில்லை. மிச்சம் இருக்கும் வாழ்க்கையை அதே மனிதர்கள் , அதே உணர்வுகள் , இன்னும் கடுமையான சூழலுடன் இணைப் பேரண்டத்தில் வாழ்ந்து முடிக்க வேண்டும்.  இங்கு இறந்த இவன் இணை பேரண்டத்தில் தூங்கி எழுவதைப் போல சாதரணமாக இன்று எழுவான், ஆனால் புதிய உலகில் இங்கிருப்பதை விட ஆயிரம் மடங்கு பிரச்சினைகள் இவனுக்காக காத்திருக்கின்றன. இங்கு ஓடிப்போன காதலி அங்கு இவனுக்கு கிடைப்பாள். ஆனால் மனைவியான பின்னர் ஓடிப்போவாள். மறுபடியும் தற்கொலை செய்துகொண்டால், இன்னும் அதிகப் பிரச்சினைகளுடன் அதே வாழ்க்கையை மற்றுமோர் உலகில் வாழ்ந்தாகவேண்டும்.

உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருக்கின்றனவா? இருந்தால் தொலைத்துவிடுங்கள்.  எனக்கும் வேலை மிச்சம், ஆற்றலும் மிச்சம். எல்லாவற்றையும் விட உங்களுக்கான பிரச்சினைகளை இங்கேயே அனுபவித்து  இயற்கையாக  விடுதலையானால் என்னைப் போல ஆகலாம். இப்பேரணடங்களின் காவலர்களில் ஒருவனாக .. இபேரண்டத்தின் ஆற்றலாக. ஆவீர்களா!!!  .