Tuesday, December 22, 2009

உபரி ஓட்டங்கள் (Extras 22-December-2009)

கிரிக்கெட் ஆட்டத்தில் உபரி ஓட்டங்கள்(Extras) என்று ஓட்டங்கள் கணக்கெடுக்கப்ப்படும் ஒரு வகை உண்டு. பெரும்பாலும் இந்த உபரி ஓட்டங்கள் பெருமளவில் வெற்றி தோல்வியில் பங்கு பெறுவதில்லை என்றாலும், சிற்சிலச் சமயங்களில் ஆட்டத்தின் முடிவை மாற்றி
அமைக்ககூடிய வகையில் எண்ணிக்கை அமைந்து விடும்.99 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா ஜிம்பாப்வே அணிக்கெதிராக பாரி வள்ளல் போல 51 உபரி ஓட்டங்களை வாரி வழங்கியது.அதில் 31 ஓட்டங்கள் நோபால்No ball), மற்றும் வொயிட்(Wide) முறைகளில் கொடுக்கப்பட்ட ஓட்டங்கள். கடைசியில் இந்தியா மூன்று ஓட்டங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

அந்த தோல்வியினால் அடுத்து வரும் ஆட்டங்கள் அனைத்தையும் வென்றால் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு தகுதிப் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்ட தோட மட்டும் அல்லாமல்
இந்தச் சுற்றில் பெற்றிருக்க வேண்டிய போனஸ் பாயிண்டுகளையும் இந்தியா இழந்தது.அடுத்தச் சுற்றில்(super six) தர்ம அடி வாங்கி உலகக் கோப்பையை போட்டிகளில் இருந்து இந்தியா வெளியேறியது.



ஒரு வேளை ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா குறைவான உபரி ஓட்டங்களைக் கொடுத்து வென்றிருக்குமானால் உலகக் கோப்பை அரையிறுதி வரையாவது இந்தியா முன்னேறி இருக்க வாய்ப்பு இருந்தது.அந்த ஆட்டத்தின் விபரத்தைப் பார்க்க இங்கேச் சொடுக்கவும்


திடீரென ஏன் உபரி ஓட்டங்கள் பற்றியக் கதை என்கிறீர்களா, பிரபலபதிவர்கள் எழுதும் கொத்துபரோட்டா, என்'ண்ணங்கள், சாண்ட்விச் அண்ட் நான்வெஜ், நங்கநல்லூர் பஞ்சாமிர்தம், குவியல், இட்லி-வடை-பொங்கல் ஆகியனவற்றை தொடர்ந்து வாசித்து வந்த
பாதிப்பினால் நானும் உபரி ஓட்டங்கள் தலைப்பில் சிலப் பல சுவாரசியமான தகவல்களை, அனுபவங்களை, பார்த்து ரசித்து சிந்தித்த விசயங்களை , புலம்பல்களைப் பதிவு செய்யலாம் எனத் தோன்றியது. மேற்சொன்ன பதிவுகளைப் போல சுவாரசியமானதாக இருக்குமா எனத்
தெரியவில்லை. இருந்த போதிலும் முயற்சித்தல் தவறில்லையே!!!

உபரி ஓட்டங்கள் ஆட்டத்தின் வெற்றித் தோல்விகளுக்கு பங்கு வகிப்பதைப் போல என்னுடைய இந்த உபரி ஓட்டங்களும் உங்களின் அன்றாட வாழ்வின் சுவாரசியத்தை அதிகப் படுத்தலாம் அல்லது yet another post என்ற வகையில் படித்தும் படிக்காமலும் ஒதுக்கிவிடலாம். வாரத்திற்கு ஒரு முறையாவது எழுதிவிட வேண்டும் என்ற உறுதியில் இதோ எனது முதல் உபரி ஓட்டங்கள் தொகுப்பு,

உபரி ஓட்டங்கள் என்று பெயர் வைத்தபின் கிரிக்கெட்டை வைத்து துவக்குவதுதான் சாலப்பொருத்தமாக இருக்கும். நேற்றைய ஒரு நாள் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தான் டெண்டுல்கரின் சத வாய்ப்பைக் கெடுத்து விட்டார் என ரசிகர்கள் நொந்து கொள்வதாக எழுதி
இருக்கின்றனர். தினேஷ் கார்த்திக் விரைவாக ஒட்டங்கள் பெற்றது தவறு, டெண்டுல்கருக்கு மட்டையடிக்க வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என கூறுவதில் நியாயம் இருந்தாலும், தொடர்ந்து கார்த்திக்கை ஆட்டமிழக்கச் செய்யும் வகையில் நடுவரிடம் முறையிட்டுக்கொண்டிருக்கையில் பந்தை அதிரடியாக சிகஸருக்கு விரட்டாமல் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்து இருந்தால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா ரசிகர்களுக்கு முன்னொரு காலத்தில் பழக்கப்பட்ட தோல்விக் காட்சிகள் மறுஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கும்.ஒரு முனையில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா பந்து வீசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



எதிர்பாராத சமயங்களில் எதிர்பார்க்காத விசயங்களை அள்ளிதருவதில் கிரிக்கெட் ஆட்டங்களைப்போல வேறு எதுவும் இல்லை. கிரிக்கெட்மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் அவளை நான் எப்பாடுப் பட்டாவது திருமணம் செய்து இருப்பேன். ஜெனி,ரம்யா, அம்முவைப்போல கிரிக்கெட்டும் என்னை விட்டுப் போய் இருக்க மாட்டாள். கிரிக்கெட் தந்த சுவாரசியங்கள் போல வேறு எந்த விளையாட்டும் எனக்குத்தராததாலும் கிரிக்கெட் இந்திய துணைக்கண்டத்தில் பிறந்த சாராசரி மனிதனின் மனோநிலைக்கு ஏற்ப இருப்பதாலும் கிரிக்கெட்டை பெண்ணாக உருவகிக்க முடிகிறது என நினைக்கின்றேன்.

சுவாரசியம் என்றதும், தோழர் ஒருவரிடம் ஏற்பட்ட ஒரு சமீபத்திய உரையாடல் நினைவுக்கு வருகிறது. வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்ற அவரின் கேள்விக்கு சுவாரசியமாக இருக்கின்றது என்றேன். அவருக்கு எனது அம்முவுடன் ஆன பிரிவு தெரியும். அவருக்கு ஒரே
வியப்பு, 100 நாட்கள் கூட ஆகவில்லை, எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் என்று கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. சிரிப்பானை போட்ட்டுவிட்டு அடுத்த பேச்சுக்குத் தாவினேன். நான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கின்றது என்று தானே சொன்னேன், மகிழ்ச்சி
என்று சொல்ல வில்லையே!! . சோகங்கள் வருத்தங்கள், ஏமாற்றங்கள் கூட சுவாரசியமான அனுபவங்களைத் தரும் அல்லவா!! அம்முவிற்கு நான் Phd பட்டம் பெறவேண்டும் என்று ஒரு விருப்பம். அடிக்கடி எனக்கு நினைவுப் படுத்தி என்னை உற்சாகப் படுத்துவாள். அவளின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக என்னுடைய மாஸ்டர்ஸ் படிப்பிற்குப் பின் ஆராய்ச்சிப்படிப்பு படிக்க தயாராக வேண்டும் என ஐரோப்பிய பல்கலைக் கழகங்களைத் தேடிக்கொண்டிருக்கையில் பின்லேந்து தேசத்தில் படிக்க இருக்கும் வாய்ப்புகளைப் பற்றிய அதிகாரப்பூர்வமான இணையதளம் கண்ணில் சிக்கியது.மேற்படிப்பு படிக்க விரும்புவர்கள் இந்த தளத்தில் http://www.universityadmissions.fiஉபயோகமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


புதிய தலைமுறையின் ஸ்வீட் ஸ்வீடன் மேற்படிப்புப் பற்றியக் கட்டுரைக்குப்பின்னர் மின்னஞ்சல்கள் வந்தவண்ணம் உள்ளது. வரும் மின்னஞ்சல்களில் வருத்தமான விசயம் என்னவெனில், கன்சல்டன்சிகளை அணுகலாமா என்றக் கேள்வியுடன் மின்னஞ்சல்கள் வருவதுதான்.கட்டுரையின் முக்கிய நோக்கமே பரவலாகத் தகவல்கள் போய்ச்சேர வேண்டும், ஆலோசனை மையங்களிடம் தேவை யில்லாமல் பணம் கட்டி ஏமாறவேண்டாம் என்பவை தான். அந்தக் கட்டுரையில் மாணவர்களே படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான ஆங்கிலத்தில்அனுமதி முறைகள் கொடுக்கப்பட்டிருக்கும் இணையச்சுட்டி http://studera.nu தரப்பட்டுள்ளது. நுனிப்புல் மேய்வது போல தகவல்கள் தரும் கட்டுரைகளை வாசிக்கும் பழக்கம் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களிடம் இருக்ககூடாது.
நினைவூட்டல் ஜனவரி 15 ஆம் தேதி வரை இணையதளத்தில் மேற்படிப்பிற்காக பதிவு செய்யலாம். சிலரின் மின்னஞ்சல்களுக்குப் பதில்தர இயலவில்லை. நேரத்திட்டமிடலில் இன்னும் நான் தேர்ச்சி பெறாததால் வழமையான பதிலான, நேரம் இல்லை,மன்னிக்கவும் என்ற பதிலை சொல்லிவிடுகின்றேன்.


பதிவுலக நண்பரான செந்தழல் ரவி கொடுத்த தகவலினால், டெலினூர்(Telenor) என்ற சுவிடனின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனத்தில் ஒரு வருடத்திற்கான சம்பளமற்ற பயிற்சி கிடைத்திருக்கின்றது. பயிற்சி என்ற போதிலும் நானும் அங்கு வேலைப் பார்க்கும்
ஒருவராகத்தான் கருதப்படுவேன். வாரத்திற்கு 30 மணி நேரம் அலுவலகத்திற்கு வர வேண்டும். கணிமை ரவி கொடுத்த பகிர்ந்து கொண்ட தகவலினால் சுவீடன் மேற்படிப்பு சாத்தியம் ஆயிற்று. மற்றும் ஒரு ரவி மற்றும் ஒரு பதிவுலக நட்பு மற்றும் ஒரு பயன்.நன்றி பதிவுலகம். வேலைவாய்ப்புகள் ஒன்றுமே இல்லாதநிலையில் மிகப்பெரும் நிறுவனத்தில் கிடைத்த வாய்ப்புக் கிடைக்க காரணமான செந்தழல் ரவிக்கு ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உபரியில் ஒரு உதிரித்தகவல், இந்த டெலினூர் தான் நமது ஊரில் யுனினூர் என்று வந்திருப்பது.





ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கும் தொடர் பனிப்பொழிவினால் சுவீடன் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ரயில்கள் தாமதமாக வந்தாலும், மாற்று ஏற்பாடாக பேருந்துகளை ஏற்படுத்திக் கொடுத்துவிடுகிறார்கள். பனிப்பொழி ஸ்காண்டிநேவியா மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாகஇருப்பதனாலும் குளிர்காலத்திற்காக தயார் நிலையில் அரசாங்க இயந்திரம் இருப்பதனாலும் அன்றாட வாழ்விற்கு பெரியதாக பிரச்சினை இல்லை. நான் இருக்கும் ரோன்னிபி நகரத்திலும் பணிபுரியும் கார்ல்ஸ்க்ரோனா நகரத்திலும் சென்ற வருடத்தைக் காட்டிலும் பனிபோழிவு அதிகம் தானாம்.


கடைசியாக இந்த வார உபரி ஓட்டக் கேள்வி நியுசிலாந்து தேசத்தில் மவோரிக்கள் எனப்படும் பூர்வக்குடி மக்கள் இன்றும் சிறுபான்மையினராக இருக்கின்றனர். இந்த மவோரி சமூகத்தில் இருந்து நியுசிலாந்து கிரிக்கெட் அணிக்காக ஆடிய முதல் வீரர் யார்? இவர் தன் வசம்

வைத்திருக்கும் மற்றும் ஒரு சுவாரசியமான கிரிக்கெட் சம்பந்தப்பட்ட சாதனை என்ன? விடைகள் அடுத்த உபரி ஓட்டங்கள் பதிவில்.

15 பின்னூட்டங்கள்/Comments:

said...

kalakkal post. Finland is one of the good places in the world to study. Both the research and funding opportunities are high compared to Sweden.

said...

அருமையான தலைப்பு தல!

நீங்க பிஹெச்டிய வெற்றிகரமா முடிப்பிங்க! செய்யுங்க தல!

said...

Adam parore??? or is that Ross Taylor???

said...

Adam Parore...

He also holds the record for the highest One Day International innings score without a boundary (96 vs India, in Baroda, 1994)

Thanks Wiki...

:-)))...

said...

Vijay Anand, one of your answer is correct. How about the answer of second part of the question

said...

உபரி வாழ்த்துகள்!

said...

Excellent Vijay anandh and Wiki. You are CORRECT, I shall publish answer tomorrow

said...

அவர் ஜெஸ்ஸி ரைடர் தானே வினையூக்கி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

said...

@ Sriram
ஜெஸ்ஸி ரைடர் முதல் ஆட்டக்காரர் கிடையாது

said...

ஆடம் பரோரே பத்தியும் அவரது பவுண்டரி இல்லாத 96 பத்தியும் கூகிள் பண்ணி தெரிஞ்சிக்கிட்டேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

said...

Nathan astle fastest double century in test cricket

said...

தம்பி..

நல்லாயிருக்கியா..? படிப்பு முடிஞ்சிருச்சா..? வேலை பார்க்குறேன் சொல்றியே..

உடம்பை நல்லா பார்த்துக்க.. பனில ரொம்பவும் வெளில போகாத.. உடம்புக்கு ஆகாது..!

உபரி ஓட்டங்கள் தலைப்பு நல்லாத்தான் இருக்கு.. நீயும் ஸ்வீடன் பத்தி ஏதாவது தொடர் கட்டுரை எழுது..!

படிக்கிறதுக்கு நாங்க இருக்கோம்..!

said...

Absolutely, Life is like a cricket match, Any part of time , anyone can win. Never judge it.
Education information is worth.
My best wishes to do Phd
Best wishes for upcoming story.

said...

Absolutely Life is like a cricket match, Anytime anyone can win.Match will be change for one turning point(extras,wicket,runs,dot ball),consequently our life will be change at one break point.

My best wishes to do phd and upcoming stories.

said...

Extraordinary!