Thursday, January 31, 2008

T20 போட்டியில் டெண்டுல்கர் அறிமுகமா?!!!! CNN-IBN இன் தவறான தகவல்



சச்சின் டெண்டுல்கர் பிப்ரவரி 1 வெள்ளியன்று நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 ஆட்டத்தில் முதன்முறையாக களமிறங்குகிறார் என CNN-IBN தொலைக்காட்சியின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் 2006 டிசம்பர் 1 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக T20 ஆட்டத்தில் டெண்டுல்கர் ஏற்கனவே அறிமுகம் ஆகிவிட்டார்.
கிரிகின்போ இணையதள ஆட்டவிபரம் இங்கே


செய்தியின் சுட்டி இங்கேhttp://www.ibnlive.com/news/tendulkar-set-to-make-t20-debut-ponting-not-to-play/57842-5.html




ஆட்டநுணுக்கங்களை அலசிக்காயப்போடும் தொலைக்காட்சியின் இணையதளத்தில் இப்படி தவறான தகவல் வெளியிடப்பட்டிருப்பது துரதிருஷ்டமானது.

வந்ததற்கு டெண்டுல்கரின் முதற்சதத்தின் வீடியோவைப்பார்த்துவிட்டு செல்லுங்கள்.

"Hussey" சகோதரர்கள்


லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து கடந்த இரண்டு வருங்களாக கிரிக்கெட் ஆடுகளத்தில் கலக்கிவருபவர் ஆஸ்திரேலியாவின் மைக்கெல் ஹஸ்ஸி. முதல் தர போட்டிகளில் 15000 க்கும் அதிகமான ரன்களைகுவித்தும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க முடியாமல் காத்துக் கொண்டிருந்த மைக்கெல் எட்வர்ட் கில்லின் ஹஸ்ஸிக்கு, ஜஸ்டின் லேங்கரின் காயம் காரணமாக அணியில் இடம்பெற வாய்ப்புக்கிடைத்தது.



கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் தனது இரண்டாவது டெஸ்ட்போட்டியில் சதமடித்து தனது வருகையை உலகிற்கு அறிவித்த ஹஸ்ஸி எட்டு சதங்கள், எட்டு அரைசதங்களுடன் இரண்டாயிரம் ரன்களை மிகவிரைவாகக் கடந்து இருக்கிறார். இதில் சிறப்பம்சம் என்னவெனில் இவரின் சராசரிதான்... பிராட்மேனுக்கு அடுத்தபடியாக 78 யை இருபத்திரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்குப்பின்னரும் வைத்திருப்பது பெரிய விசயமாகக் கருதப்படுகிறது.
டெஸ்ட் போட்டிகள் மட்டுமன்றி ஒருநாள் போட்டிகளிலும் அதிரடியாக ஆடி விரைவாக ரன்குவிப்பவதிலும் மைக்கெல் ஹஸ்ஸி வல்லவர்.வலுவான பேட்டிங் வரிசை கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியில் பின்வரிசை ஆட்டக்காரராக களமிறங்கும் ஹஸ்ஸிக்கு பெரும்பாலான சமயங்களில் ஆட வாய்ப்பு இல்லாத போதும் , சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம் சிறப்பாக ஆடி அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டெடுப்பார். இவரை பெரும்பாலும் ஆட்டமிழக்க செய்வது கடினமான பணியாகும்.பேட்டிங் செய்ய வாய்ப்புக்கிடைத்த 55 ஆட்டங்களில் 23 முறை ஆட்டமிழக்காதவராக வெளிவந்து இருக்கிறார்.



கடந்த உலகக்கோப்பை ஆட்டங்களில் கடைசி சில ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்புக்கிடைத்தாதால் விரைவாக ஆட முயற்சித்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது மட்டுமே ஹஸ்ஸியின் கிரிக்கெட் வாழ்வில் சுமாரான விசயமாகும்(உலகக்கோப்பை சராசரி 17.4).
மிஸ்டர். கிரிக்கெட் என அன்பாக அழைக்கப்படும் நான்கு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் தலைவராக இருந்துள்ளார்.இந்த நான்கு ஆட்டங்களில் வெற்றி ஏதும் பெறாவிடினும் முக்கியம வீரர்கள் யாரும் இல்லாதபோதும் இவர் அணியை வழிநடத்தியவிதமும் , பேட்டிங்கும் நினைவுகூறத்தக்கது.



இவரைப்போலவே இவரது இளைய சகோதரர் டேவிட் ஜான் ஹஸ்ஸியும் நீண்ட காத்திருப்பிற்குப்பின் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்து இருக்கிறார். 31வது வயதில் இந்தியாவுடன் ஆன T20 ஆட்டத்திற்காக இவர் அணியில் இடம்பிடித்து இருக்கிறார். அண்ணனைபோல் இல்லாமல் வலது கை ஆட்டக்காரரான டேவிட் ஹஸ்ஸி அதிரடியாக ஆடுவதில் கெட்டிக்காரர். இங்கிலாந்து கவுண்டி ஆட்டம் ஒன்றில் எட்டுபந்துகளில் ஏழு சிக்ஸர்களை அடித்துள்ள இவர் உள்ளூர் 44 T20 ஆட்டங்களில் 141யை ஆட்டவேகமாக (Strike rate) வைத்துள்ளதால் அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா அணிக்காக ஆடும் இவர் சமீபத்தில் நிறைவு பெற்ற KFC T20 போட்டிகளில் விக்டோரியா அணி கோப்பையைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்து இருக்கிறார்.

இந்த ஹஸ்ஸி சகோதர்கள் மூன்று வருடங்களுக்குப்பிறகு ஒரே அணியில் ஆட இருக்கின்றனர். மைக்கெல் ஹஸ்ஸி மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக ஆடுபவர்.
வாக் சகோதரர்கள், ஷேன் லி, பிரட் லீ சகோதர்களைத் தொடர்ந்து இவர்களும் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Tuesday, January 29, 2008

ஜெனி & ஜெனி - சிறுகதை

”அது நான் இல்லை, ஜெனி என்னோட ஐடெண்டிகல் டிவின்ஸிஸ்டர், , நாங்க எல்லாம் சுவீடன்ல ஒன்னாத்தான் இருந்தோம், நாங்க 2004 ல இண்டியா வந்தப்ப சுனாமி என்னையும் அவளையும் பிரிச்சிடுச்சு”

மெரினா கடற்கரையில் ஜெனி என நினைத்து துரத்திப் போய் பேசிய பெண் இப்படி சொன்னவுடன் கார்த்திக்கு தலை சுற்றி மயக்கமே வந்தது. ஜெனி இறந்து போய் மூன்று வருடம் ஆகிறதா!! பிறகு தன்னுடன் சுவீடனில் இருந்து யாஹு அரட்டைத்தோழியாக கடந்த சில மாதங்களாக பேசிக்கொண்டிருப்பது ?????!!! அந்த அரைமயக்கத்தில் நடைமேடையில் உட்கார்ந்த கார்த்தியின் நினைவு ஜெனியுடன் ஆன முதல் யாஹு அரட்டைக்கு சென்றது .

கார்த்தி , யாஹூ தமிழ்நாடு பொது அரட்டை அறையில் எல்லோருக்கும் தமிழில் வணக்கம் என தனியாக தட்டச்சு செய்து வெட்டி ஒட்டிக்கொண்டிருக்கும்பொழுது

"எப்படி நீங்க தமிழ்ல டைப் பண்றீங்க” என்பதை அப்படியே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து ஒரு யாஹு விண்டோ ஜெனியிடம் இருந்து வந்து விழுந்தது.

தமிழ்தட்டச்சுக்கான எல்லா வழிமுறைகளையும் கார்த்தியிடம் அறிந்துகொண்டபின் ஜெனி தான் சுவீடன் நாட்டில் முதுகலைப் பட்டம் படிப்பதாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். அதன்பின் அடுத்தடுத்த அரட்டைகள் கார்த்தியின் சுவாரசியமான உரையாடல்கள், ஜெனியை அதிக நேரம் அவனுடன் ஆன்லைனில் இருக்க வைத்தது. கார்த்திக்கும் தனது பழைய தோல்விகளை எல்லாம் சொல்லிப் புலம்ப, தற்கால வெற்றிகளை எல்லாம் பறைசாற்றிக் கொள்ள ஒரு நட்பு அதுவும் ஒரு பெண் நட்புக் கிடைத்ததில் ஏக மகிழ்ச்சி.


எழுத்துஉரையாடல் ஒலி வடிவம் பெற்று பின் ஒலியுடன் ஒளியும் சேர்ந்து கார்த்தி ஜெனி நட்பு அடுத்தக் கட்டத்தை எட்டியது. ஜெனி நல்லா பேசிக்கொண்டிருக்கும்பொழுது “டோண்ட் எக்ஸ்பெக்ட் மச் பிரம் மி , நான் திடீர்னு ஓரு நாள் காணாப் போயிடுவேன்” என்று சொல்வது கார்த்திக்கு எரிச்சல் மூட்டினாலும் கோபத்தை வெளிக்காட்டாமல் சின்ன ”ஸ்மைலி” போட்டு வேற ஏதாவது பற்றி உரையாடலைத் திசைத் திருப்பி விடுவான்.

கார்த்தி ஜெனி இணையநட்பு ஆரம்பித்து சிலமாதங்கள் கழித்து , தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு வழக்கமான நேரத்திற்கு ஜெனி யாஹு,ஜிடாக் , ஸ்கைப் எதிலும் வராததால் ”நலம் வளம் அறிய ஆவல்” என ஆஃப்லைன் மெசேஜஸ் அனுப்பிய அடுத்த ஐந்து நிமிடத்தில் ஜெனி ஜிடாக்கில் அழைத்து “நான் தான் ஏற்கனவே உன்னிடம் சொல்லி இருக்கேன்ல, எதுக்கு ஆப்லைன் மெசேஜ் அனுப்புறேன்னு” ஏகத்துக்கும் அர்ச்சனை செய்து தொடர்பைத் துண்டித்தாள். ஜெனி ஏற்கனவே ஒரு முறை ஆஃப்லைன் மெசேஜச் பற்றி சொல்லி இருந்தாலும் இதற்கெல்லாமா கோபப்படுவாள் என கார்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது.

அடுத்த வாரத்தில் ஜெனி ஆன்லைனில் தென்பட்டாலும் கார்த்தி அவளை கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் தானாகவே வந்தாள்.

“கார்த்தி, கோபமா இருக்கியா.. என்கிட்ட பேசுவியா!!!”

“எப்போ மாட்டேன்னு சொல்லி இருக்கேன்,”

“இப்பொவெல்லாம் உன்கிட்ட பேச எனக்கு பயமாயிருக்கு, உன் அக்கறை பயமாயிருக்கு, உன் பிரியம் பயமாயிருக்கு.. எனக்கு அதெல்லாம் வேண்டாம்”

”ஏன் ? நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல.. என் மனசுல இன்னமும் என் பழையக் காதலி ரம்யா தான் இருக்காள்...டோண்ட் திங் மச்... புரோபஸ் எல்லாம் செய்ய மாட்டேன் ”

“யா, ஐ க்னோ... ஸ்டில் உன் அக்கறை வேண்டாமே.... ”

“அக்கறை இல்லாமல் எல்லாம் பேச முடியாது.. அப்படி என் அக்கறை வேண்டாம் என்றால் என்னையும் வேண்டாம்னு ஒதுக்கிடு.. மெசெஞ்சர், மெயில் எல்லாத்துலேயும் என்னை பிலாக் பண்ணிடு.. “

”நான் அவ்வளவு கொடுமைக்காரி கிடையாது.. உன்னோட அக்கறை எல்லாம் ஏத்துக்க முடியாத சூழலில் இருக்கேன், சரி அடுத்த ஒரு மாதம் ஆன்லைன் வரமாட்டேன் தேடாதே!!! அதற்கப்புறம் கூட வருவனா மாட்டேனே என்பதும் தெரியாது ”

“எக்ஸாம்ஸா?”

“ஆமாம்”

இந்த உரையாடலுக்குப்பின்னர் ஜெனி ஆன்லைன் வரவே இல்லை. அனுப்பிய மின்னஞ்சலுக்கும் பதில் இல்லை. கார்த்திக்கு இதுபோல பல இணைய நட்புகள் முறையாக முற்று பெறாமல் விடைபெற்றது உண்டு. கிட்டத்தட்ட ஜெனியை மறந்து போன நிலையில் தான் இப்பொழுது ஜெனியை போல இருக்கும் அந்த பெண்ணை சந்தித்தது. யோசனையில் இருந்து விடுபட்டு ஜெனி போல இருந்த பெண்ணைத் தேடினான். ரொம்ப தூரத்தில் போய் கொண்டிருந்தாள்.

கார்த்தி கொஞ்சம் தெளிவடைந்து, அவனுக்கு பேய் இருக்கு அப்படிங்கிற நம்பிக்கை இருந்தாலும், வெப்கேம் , வாய்ஸ் சாட்ல எல்லாம் வரவேண்டிய கட்டாயம் இல்லை என்பது புரிந்தது. ஒரு மாதம் தான் ஆன்லைன் வரமாட்டேன் என்று சொன்ன ஜெனி இந்தியாவுக்குத் தான் வந்திருக்கிறாள். எதிர்பாராதவிதமாக கார்த்தி ஜெனியைப் பார்க்க , அவனிடம் இருந்து தப்பிக்க , தனக்கு ஒரு இரட்டைசகோதரி இருக்கிறாள் என்று பொய் சொல்லி இருக்கிறாள் . பெரும்பலான இணைய நட்புகள் இப்படித்தான் இருக்கும், மணிக்கணக்கில் ஆன்லைனில் அரட்டை அடிப்பார்கள்.. ஆனால் நேரில் சந்திக்க துளிக்கூட விருப்பம் காட்ட மாட்டார்கள். எது எப்படியோ இணையத் தோழியை ஒரு நிமிடமாவது நேரில் சந்திக்க வாய்ப்புக்கிடைத்ததே.. என்ற திருப்தியுடன் வீட்டிற்கு வந்ததும் மடிக்கணினியில் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்த போது முதல் அஞ்சலாக ஜெனியிடம் இருந்து, ”தேர்வு நல்ல படியாக எழுதி இருப்பதாகவும், நல்ல மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் . அரட்டைக்கு வரவும்” என்றக் குறிப்போடு அஞ்சல் நிறைவுப் பெற்றிருந்தது. பெண்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்ற மனதில் சிரிப்போடு கார்த்தி யாஹூ மெசெஞ்சரை திறந்தான்.


“உன் அக்கறை வேண்டும்” , ”உன் அன்பு வேண்டும் “ “உன் பிரியம் வேண்டும்” என ஏகப்பட்ட பாசமான ஆஃப்லைன் மெசேஜஸ் .. எல்லாம் கடைசி சில நிமிடங்களில் அடித்திருப்பதை நேரம் காட்டிக்கொடுத்தது. ஜெனி ஆன்லைனில் இருந்தாள். வெப்கேமும் வாய்ஸ் சாட்டும் ஆரம்பித்தான்.

கார்த்தி மனதில் நக்கலுடன், “ஜெனி உனக்கு ஒரு ட்வின்ஸிஸ்டர் இருப்பதை ஏன் சொல்லவில்லை?,”

“ஆமாம் கார்த்தி எனக்கு ஒரு டிவின் ஸிஸ்டர் இருந்தாள், இப்போ இல்லை, 2004 கிறிஸ்துமஸுக்கு இண்டியா வந்து இருந்தோம், அப்போ டிசம்பர் 26 சுனாமி அலை அவளை அடிச்சுட்டுப் போயிடுச்சு,...அவ செத்துப் போனதாகவே நாங்க நினைக்கல, என் கூடவே இருக்கிறது போல ஒரு ஃபீல் எப்போதும் இருந்துக்கிட்டே இருக்கு....”

”.............?!!!!!!!!!!!”


-------------------முற்றும்-------------------------------------

தோழியின் பதிவு, சிங்கார சென்னையின் ஒளி

நண்பர்கள் வட்டத்துக்குள் இருக்கும் நபர்களுக்கு, கணினியில் தமிழ் தட்டச்சு முறைகளை சொல்லிக்கொடுத்து அவர்களை தமிழில் வலைப்பதிய வைப்பதில் இருக்கும் ஒரு ஆனந்தம் சொல்ல இயலாதது. அப்படி சொல்லிக்கொடுத்து எழுதப்பட்ட முதல் வலைப்பதிவு முயற்சி இங்கே

சிங்கார சென்னையின் ஒளி

Sunday, January 27, 2008

ராஜேஷ் கண்ணாவும் நாகேஷும்

ஆனந்த்பாபு நாயகனாக நடிக்க இந்தியில் வெளிவந்த டிஸ்கோ டான்சர் படத்தை அப்படியே தமிழில் உருவாக்கம் செய்து பாடும் வானம்பாடி என்ற பெயரில் வெளிவந்தது.
ஜீவிதா கதாநாயகியாக நடிக்க , இந்தியில் ராஜேஷ் கண்ணா செய்த வேடத்தை தமிழில் நாகேஷ் செய்து இருப்பார். தமிழிலும் பப்பிலஹரியின் இந்திபதிப்பின் மெட்டுக்களிலேயே பாடல்கள் அமைந்திருக்கும்.


வைரமுத்துவின் வரிகளில் வாழும்வரை போராடு எனத்தொடங்கும் பாடலின் வீடியோ கீழே


அதேக்காட்சியமைப்பு, மெட்டில் மூல இந்திப் பாடலின் ஒளி ஒலி வடிவம் கீழே



இந்தி வரிகளும் அர்த்தம் பொதிந்து இருப்பதாக இந்தி தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னார்.

Saturday, January 26, 2008

ஆடம் "கில்லி” கில்கிறிஸ்ட் - சகாப்தம்


அடிலெய்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தியவுடன் ஆன நான்காவது டெஸ்ட்டுடன் டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வுபெறப்போவதாக ஆஸ்திரேலிய அணியின் துணைத் தலைவரும் விக்கெட் கீப்பருமான ஆடம் கில்கிறிஸ்ட் அறிவித்துள்ளார். 36 வயது கில்கிறிஸ்ட் 1996 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக, பரிதாபாத்தில் டைட்டன் கோப்பைக்கான ஒரு நாள் போட்டி ஆட்டங்களில் ஒன்றில் அறிமுகமானார். இவர் 76 ஒருநாள் ஆட்டங்கள், 2376 ரன்கள், ஐந்து சதங்களுக்குப் பின் 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கப்பா மைதானத்தில் தான் ஆடிய முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தன்னுடைய ஒருநாள் அனுபவத்தை அதிரடியான 88 பந்துகளில் 81 ரன்கள் மூலம் வெளிப்படுத்திய இவரின் சராசரி சில வருடங்கள் முன்புவரை 50 ரன்களாக இருந்தது 96 ஆட்டங்களுக்குப்பிறகு 47 யை சுற்றி இருக்கிறது. முரட்டுத்தனமாக ஆடும் ஆஸ்திரேலிய வீரர்கள் மத்தியில் கொஞ்சம் “ஜெண்டில்மேன்” ஆட்டத்தை கடந்த 10 வருடங்களாக வெளிப்படுத்தி வருபவர் என்ற முறையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இவரது ஆட்டமும், இவரையும் பிடிக்கும்.2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை அரைஇறுதியில் நடுவர் அவுட் கொடுக்கும் முன்னரே இவராகவே வெளியேறியது பலரை ஆச்சரியப்படுத்தியது.

ஷேன் வார்னே வுடன் பெரிய நட்பு ஏதும் இல்லாத போதும், அதை ஒரு போதும் ஆடுகளத்திலோ , பேட்டிகளிலோ காட்டிக்கொள்ளதவர். ஷேர்வார்னே விக்கெட் எடுக்கும்பொழுதெல்லாம் கில்கிறிஸ்ட் காட்டும் உற்சாகம் ஏதோ அவர்கள் இருவரும் பால்ய சினேகிதர்கள் என்று நினைக்கவைக்கும்.

மார்க் டெய்லரால் இந்தியாவில் செய்ய இயலாததை , ஸ்டீவன் வாக் கினால் செய்ய முடியாததை கில்கிறிஸ்ட் செய்து காட்டினார். போண்டிங் காயமடைய 2004 ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தில் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மூன்றாவது ஆட்டத்திலேயே 2-0 என்ற நிலையில் தொடர் வெற்றியை உறுதிசெய்தார்,


2006 ஆஷஸ் தொடரில் இரண்டு வாத்து முட்டைகளுக்குப் பிறகு பெர்த் ஆடுகளத்தில் இவர் ஆடிய காட்டடியில் இங்கிலாந்து குறிப்பாக மோண்டி பனேசர் மிரண்டு போனது உண்மைதான்.



சில பந்துகளில் விவியன் ரிசர்ட்ஸின் அதிகவேக சதத்தை முறியடிக்கும் வாய்ப்பை இழந்த கில்லி , சொன்னது

"I would have guessed Viv Richards was somewhere in the mix, but I've never known exactly how many balls," he said. "It's a shame I didn't tickle that wide one from Hoggard.

"I probably wouldn't have wanted a message from the dressing room. Viv deserves that mantle as the fastest hundred."


கடந்த வருடம் நடந்த உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் கில்கிறிஸ்ட் ஆடிய அற்புதமான ஆட்டத்தில் இரண்டாவது முறை உலகக் கோப்பையை வெல்லப் போகிறோம் என்ற இலங்கையின் கனவு தகர்ந்து போனது. ஆடுகள சுவாரசியங்கள் குறைந்த அந்த உலகக் கோப்பை போட்டியின் முடிவில் கில்லியின் ஆட்டத்தை பார்க்க முடிந்தது ஒரு குறைந்த பட்ச ஆறுதல்.



இந்த சதத்தின் மூலம் மூன்றாவது முறையாக உலகக்கோப்பை இறுதிபோட்டிகளில் 50+ ரன்களை அடித்தவர் என்ற சாதனையையும் சத்தமில்லாமல் செய்து முடித்தவர்.

அட, சில சமயங்களில் கில்லி தான் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதை மறக்கடித்துவிடுவார். எந்த ஒரு அணிக்கும் விக்கெட் கீப்பிங் பணி இல்லாமலே ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் என்ற அளவில் கூட சேர்க்க பரிந்துரைக்கபடக்கூடிய அளவில் பேட்டிங் திறமையில் ஜொலிக்கும் டெஸ்ட் ஆட்டங்களில் அதிக பேரை ஆட்டமிழக்க செய்தவர் என்ற சாதனையை அடைந்து இருக்கிறார்.



ஆடம் கில்கிறிஸ்ட் பிடித்த அற்புதமான கேட்சுகளில் சாம்பிளுக்கு இரண்டு





டெஸ்ட் ஆட்டங்களில் 100 சிக்ஸர்களை அடித்தப் பெருமையையும் வைத்துள்ள கில்கிறிஸ்ட்,
தனது அறிமுக டெஸ்ட்டில் இருந்து இந்த 96 வது ஆட்டம் வரை ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் ஆடி இருக்கும் அவர் 100 டெஸ்ட்டுகளை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறுவது சிறிது வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது.

30 ரன்கள் அடித்து , கைக்கு வரும் கேட்ச்சுகளைப் பிடித்தால் போதும் என்ற நிலையை மாற்றி . விக்கெட் கீப்பரின் பேட்டிங் பணி எவ்வளவு முக்கியத்துவமானது என்று உலகுக்கு இந்த பத்தாண்டுகளில் உணர்த்தியவர் கில்கிறிஸ்ட் என்றால் மிகையாகாது.அவரின் தாக்கம் கிரிக்கெட் ஆடும் தேசங்களில் விக்கெட்கீப்பர்கள் ஆடும் பரிமாணத்தை நிச்சயமாக மாற்றியது.

சமுதாயத்தின்பால் அக்கறைக் காட்டும் சந்தர்ப்பங்களை எப்போதும் தவறவிடாத கில்கிறிஸ்ட் ,வேர்ல்ட்விசன் அமைப்பின் குழந்தைகள் மறுவாழ்வு விசயங்களுக்காக அந்த அமைப்பின் தூதராக மூன்றாண்டுகளாக இருந்து வருகிறார்.

ஆட்டத்திறன்,பெருந்தன்மை,போராடும் குணம், தன்னடக்கம் இவையனைத்தும் ஒரு சேர மனிதர்களிடம் அமைவது மிக அரிது. அரிய மனிதரான கில்கிறிஸ்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கை நிச்சயம் கிரிக்கெட் சகாபதங்களுள் ஒன்று.
கில்கிறிஸ்ட்டின் சாதனை விபரங்களை ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்

தனது பள்ளித்தோழி மெலிண்டாவை மணமுடித்து மூன்று குழந்தைகளுடன் பொறுப்பான குடும்பஸ்தராகவும் இருக்கும் கில்கிறிஸ்ட் கிரிக்கெட்டுக்கு வழங்கிய மகத்தான சேவையைப் பாராட்டி, எதிர்காலம் மேலும் சீரும் சிறப்புமாக இருக்க வாழ்த்துவோம்.

Friday, January 25, 2008

காதலால் - ஒரு நிமிடக்கதை

வளரும் சாதனையாளர்கள் நிகழ்ச்சியில் இன்று நாம் சந்திக்கப் போகும் விருந்தினர் திரு.கார்த்திக், இவர் குறுகிய காலத்திலேயே தனது உழைப்பாலும், விடாமுயற்சியாலும் தனது நிறுவனத்தை உலகளவில் கொண்டு சென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றால் மிகையாகாது என்ற தொலைக்காட்சி அறிவிப்பாளரின் கார்த்தி பற்றிய அறிமுகத்தை தொடர்ந்து கார்த்தியின் பேட்டி ஒளிபரப்பானது.

பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த மோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி ஒரு அசூர வளர்ச்சி. மோகனுக்கு கார்த்தியுடன் ஜெனியும் ஞாபகத்திற்கு வந்தாள். கார்த்தி ஒரு சமயம் மோகனிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறான்.

”சார், இது ஜெனி, நாங்க கல்யாணம் பண்ணிக்கப்போறோம்”

திடீர்னு ஒரு நாள் ஜெனியும் அவனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட எல்லா புகைப்படங்களையும் போட்டு எரித்துக்கொண்டிருந்தான். என்ன நடந்திருக்கும் என்பதை மோகனால் புரிந்துகொள்ள முடிந்தது.. ஒரு வாரம் அறையை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் இருந்த கார்த்தி,

“மோகன் சார், நான் வேலையை ரிசைன் பண்னிட்டேன், மதுரை போறேன்” சொல்லிட்டு அறையைக் காலி செய்து கொண்டு கிளம்பிப் போனவன் சில காலம் மின்னஞ்சலில் தொடர்பில் மோகனுடன் இருந்தான். தொடர்பு நாளாவட்டத்தில் சுத்தமாக நின்று போன பிறகு இப்பொழுதுதான் மோகன் கார்த்தியைப் பற்றிக் கேள்விப்படுகிறார். அதுவும் ஒரு நல்ல நிலையில் கார்த்தியைப் பார்ப்பது அவருக்கு சந்தோசமாக இருந்தது.

பேட்டியின் முடிவில் தரப்பட்ட கார்த்தியின் மின்னஞ்சல் முகவரிக்கு , அவனின் வளர்ச்சியைப் பாராட்டி , காதலில் தோற்றவர்கள் சோகக்கடலில் மூழ்காமல் எப்படி வெற்றி தேவதையின் கழுத்தில் மணமாலை சூட முடியும் என்பதற்கு கார்த்தி உன் வாழ்க்கை ஒரு உதாரணம் என அழகான ஆங்கிலத்தில் மோகன் அனுப்பிய மின்னஞ்சலை அன்று மாலை படித்தக் கார்த்திக்கு மனதில் வெறுமையான சிரிப்புத்தான் வந்தது.

எத்தனை வெற்றிகள் வந்தாலும், காதலின் வெற்றிக்கு ஈடாகுமா!!! இந்த வெற்றிகள் எதுவுமே இல்லாமலும் கூட ஜெனியுடன் வாழ்ந்திருந்தால் கிடைத்திருக்கக்கூடிய மகிழ்ச்சி, இனி எவ்வளவு பெரிய புகழ் வந்தாலும் கிடைக்கவே கிடைக்காது என்ற ஆழ் மன வலியை தன்னுடனே வைத்துக் கொண்டு ,

ஜெனியுடன் எடுத்துக் கொண்ட எல்லாப் புகைப்படங்களையும் எரித்தாலும், அதன் நெகட்டிவ் மட்டும் பத்திரமாக இன்னும் கார்த்தியின் பழைய பெட்டியில், ஜெனி அவன் மனதில் இருப்பது போலவே இருக்கிறது என்பதை மோகனிடம் சொல்ல விருப்பம் இருந்தும் சொல்லாமல் மோகனின் மின்னஞ்சலுக்கு நலம் விசாரிப்பு பதிலுடன் கார்த்தி தனது மனைவி ரம்யா மற்றும் குட்டி அஞ்சலிபாப்பா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அனுப்பிவைத்தான்.

Wednesday, January 23, 2008

திருநெல்வேலி பாசஞ்சர் - ஒரு நிமிடக்கதை

நகரத்திற்கு வெளியே அமைந்திருந்த அந்தக் கல்லூரியில் இருந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த ஜெனி , கார்த்தி எதிர்புறம் உள்ள கடையில் இருக்கிறானா என்று பார்த்தாள். கடையில் இருந்து சற்றித் தள்ளி இருந்த தந்திக் கம்பத்தில் தன் காயம்பட்ட முகத்துடன் ஜெனியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். கார்த்தி ஏன் இப்படி இருக்கிறான்? இவ்வளவு அடிவாங்கியும் இவன் திருந்தவில்லையே என்ற நினைப்புடன் , தன்னை பின் தொடர்ந்து வந்தவனை அசட்டை செய்து பேருந்தில் ஏறினாள்.

கார்த்தி, சில மாதங்களுக்கு வலிய வந்து நட்பு வேண்டுமென்று என்று அறிமுகப் படுத்திக் கொண்டவனுடன் பேசாமல் விலகிச்சென்ற ஜெனிக்காக தினமும் காத்திருப்பவன். சில நாட்களில் கைலியில், சில நாட்களில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் இருப்பான்..எப்போதாவது ஜீன்ஸ், டீசர்ட்டில் இருப்பான். அடுத்த பேருந்து நிறுத்தத்திற்குப் போனால் தொடர்ந்து வருவான்.. தொந்தரவு ஏதும் செய்ய மாட்டான். ஆனால் போன வாரம் வீடு வரை பின் தொடர்ந்து வந்ததால், வகுப்பு நண்பர்களிடம் வேறு வழி இல்லாமல் சொல்லி வைக்க, நண்பர்கள் அவனை பின்னி எடுத்து விட்டார்கள். கார்த்தி தான் அடி வாங்கிய பின்னரும் அவளைப் பார்ப்பதற்காக காத்திருப்பதை நிறுத்தவில்லை.

மறுநாள், மாலை சிறப்பு வகுப்புகள் இருந்ததால், மோகனுடன் நடந்து வந்தாள். மோகன் அவன் அங்கு நிற்பதைப் பார்த்தவுடன்

”ஜெனி போய் இன்னும் நாலு சாத்து சாத்திட்டு வரவா?”

“வேண்டாண்ட, விட்டுடு வா போகலாம்”

மினிபஸ்ஸில் ஏறிய பின்பு தான் கவனித்தாள். கார்த்தி தனது வண்டியில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். ஜெனிக்கு கார்த்தி மேல இருந்த கோபம் எரிச்சல் எல்லாம் போய் பரிதாபமாக இருந்தது. அவனின் மெல்லிய புன்னகையை ஏற்றுக்கொள்ள நாட்டமில்லாமல் வலதுபுறத்தில் இருந்து இடப்புறம் மாறி அமர்ந்தாள். தூரத்தில் வழக்கமான நேரத்தை விட ஒரு மணிநேரம் தாமதமாக வந்து கொண்டிருந்த திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலின் சத்தம் கேட்க,, வண்டி வருவதற்கு முன் அந்த ஆளில்லா லெவல் கிராசிங்கை கடந்து விட வேண்டும் என்று வண்டி வேகமெடுத்தது. சில நூறு மீட்டர்கள் தள்ளி ரயில் வரும்பொழுதே பாதுகாப்பாக மினிபஸ் கிராசிங்கை பாதுகாப்பாகக் கடந்தது..


வார இறுதியில் தீர யோசித்து , கார்த்திக்கு என்னதான் வேண்டும் என்று நேரடியாகக் கேட்டுவிட வேண்டும் என்ற முடிவை ஜெனி எடுத்தாள். ,திங்களன்று மாலை கார்த்தியை ஜெனியின் கண்கள் தேடியது. ம்ஹூம் ம்ஹூம் அவன் கடையில் நிற்கவில்லை. அடுத்த நிறுத்தத்தில் நிற்கிறானா எனப் பார்த்தாள் அங்கும் இல்லை. மறுநாளும் தேடினாள். அந்தக் கடையில் கேட்கலாம என நினைத்தாள், வேண்டாம், வலிய போய் ஏதும் பிரச்சினை ஆகிவிடக்கூடாது என நினைத்து, வேண்டாம் என்று விட்டு விட்டாள்.

இரவு, கர்த்தருக்கு தோத்திரம் சொல்லிவிட்டு தேர்வுக்குப் படிக்கும் ஜெனியை மிக அருகில் கார்த்தியின் உருவம் மனதில் அந்த திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலுக்கு நன்றி சொல்லிவிட்டு ரசித்துக் கொண்டிருந்தது.

Saturday, January 19, 2008

எங்களுக்குப் பிடிக்காத ஒரே நெம்பர் பதினேழு

"When you least expect it, it (cricket) comes back and bites you." இது ஸ்டீவ் வாவ்,அவர் தலைமையிலான அணி, தொடர்ச்சியாக 17 டெஸ்ட் ஆட்டங்களை வெற்றிபெறும் வாய்ப்பை கோல்கத்தாவில் இழந்ததை நினைவுகூறும்போது சொல்லிய வாசகம்.

”History repeats itself" கோல்கத்தாவில் 2001 ஆம் ஆண்டில் வைத்த ஆப்பு மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் வைக்கப்பட்டது. கும்ப்ளே தலைமையிலான அணி மூன்று நாட்களில் சுருண்டுவிடும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்களுக்கு தண்ணி காட்டி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் , மீதம் ஒரு நாள் இருக்கும் நிலையில் வெற்றி பெற்றுள்ளது.


இந்த வெற்றிக்கு மிகப்பெரும் காரணம் நிச்சயமாக சிட்னி ஆட்டத்தின் தோல்வியும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள்தாம் இந்திய அணியை மனதளவில் ஒருங்கிணைத்தது. ”போராளி” கும்ப்ளே "Diplomatic" ஆக பிராட் ஹாக் மீதான புகாரை திரும்பபெற்றுக்கொண்டதும், துணிச்சலாக சேவாக்கை ஆட்டத்தில் சேர்த்ததும் வெற்றிக்குப் பெரும்பங்கு உண்டு.

இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தாலும்,
இளங்கன்று பயமறியாது என்பதை மீண்டும் ஒரு முறை நிருபிக்கும் விதத்தில் இசாந்த் சர்மா ரிக்கி பாண்டிங்கை திணறடிக்க்கும் காணோளி பாருங்கள்.



4 வருடங்களுக்கு முன்பு அடிலெய்டில் பதானின் அட்டகாசமான அறிமுகம் இந்திய அணியின் வெற்றியுடன் ஆரம்பித்தது. நாளடைவில் தான் மட்டையாளரா, பந்துவீச்சாளாரா என கிரெக்சாப்பலின் தயவால் அவருக்கு சந்தேகம் ஏற்பட அவரின் ஆட்டத்திறன் சரிந்து தென்னாப்பிரிக்க தொடரினிடையிலேயே திருப்பி அனுப்பப்பட்ட கொடுமையும் நிகழ்ந்தது. 20-20 உலகக்கோப்பை பதானின் மறுபிரவேசத்திற்கு வித்திட்டபோதிலும், பெங்களுரு சதத்தினால் அவரின் நம்பிக்கை மேலதிகமாகி இன்றைய பெர்த் ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது பெறும் அளவுக்கு “அவரது கடின உழைப்பு” வகை செய்துள்ளது.

மார்க் டெய்லரின் ”என்ன பண்ணீங்க, அருமையான மறுபிரவேசம்” என்ற கேள்விக்கு “கடின உழைப்பு” என்ற அவரின் பதில் நிச்சயமாக கபில்தேவின் இடத்தை நோக்கிச் செல்கிறார் என்பதற்கு ஒரு அச்சாரம்.

அடுத்து வீரேந்திர சேவக், இன்னமும் கிட்டத்தட்ட 50 யை சராசரியாக வைத்திருக்கும் இவர் அணியில் இருப்பதே பலம் தான். 25 ஓவர்களில் மட்டை போட்டு 30 ரன்களை எடுப்பதைக் காட்டிலும் வந்தோமா,நாலு சாத்து சாத்தி பந்து போடுறவர்களை கிலியடைய செய்தோமான்னு இருக்கனும். இவர் ஆட்டம் கிராம மக்கள் சொல்வது போல வாச்சான் போச்சான் ஆட்டமாக இருந்தாலும் நின்றுவிட்டால் 150 அடிக்காமல் போக மாட்டார். உபயோகமான பந்துவீச்சாளர் கூட. கில்கிறிஸ்ட்டை காலைசுத்தி பவுல்ட் ஆக்கும் காணொளி இங்கே.



ஒவ்வொரு ஆட்டமும் தேர்வு ஆட்டம் போல ஆட வேண்டிய கட்டாயத்தில் எப்போதும் இருக்கும் லக்ஷ்மனின் இரண்டாவது இன்னிங்ஸ் 79,திராவிட், டெண்டுல்கரின் முதல் இன்னிங்ஸ் அரைசதங்கள், ஆர்பி சிங்கின் பந்துவீச்சு மற்றும் அந்த 30 ரன்கள், தோனியின்
7 கேட்ச், 1 ஸ்டம்பிங் , முக்கியமான 38 ரன்கள் என அணியில் ஏறத்தாழ அனைவரின் கூட்டு முயற்சியில் கிடைத்த இவ்வெற்றிப்பயணத்தின் ஆரம்பம் அடிலெய்டிலும் தொடரும் என வாழ்த்துவோம்.இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும் உண்மையான வெற்றி கிரிக்கெட் ஆட்டத்திற்கே... Cricket is the greatest leveller என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது.

Wednesday, January 16, 2008

சக்கரநாற்காலியில் ஒரு நடனம்



பொங்கலன்று மாலை மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய 13வது தேசிய இளைஞர் திருவிழாவின் மூன்றாம் நாள் கலாச்சார நிகழ்ச்சிகளை, சென்னை நேரு விளையாட்டரங்கில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. 13,14,15 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கோலாகலமான விழாவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் போட்டிகளிலும் , போட்டிகள் அல்லாத பிரிவுகளிலும் பங்கேற்று தங்கள் தனித்திறமைகளைக் காட்டினர்.

பீகார், அந்தமான் நிகோபார், ஜம்முகாஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் கலைநிகழ்ச்சிக்குப் பின்னர் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்த வீரமல்லுவின் “wheel chair" நடனம் இடம்பெற்றது.பார்வையாளர்கள் அனைவரின் கைத்தட்டலைப் பெற்ற அந்த சக்கரநாற்காலி நடனத்தின் சிலக்காட்சிகளின் காணொளி இங்கே


ஆரம்ப 90களில் வளைகுடா நாடு ஒன்றில் கட்டடப் பணியில் இருந்தபோது , தவறி மிக உயரமான தளத்தில் இருந்து கீழே விழுந்து, தன் கால்களின் செயற்திறனை இழந்த வீரமல்லு , சிகிச்சைக்குப் பின் , தளராத தன்னம்பிக்கையுடன் கணினிப்பயிற்சி பெற்று , தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் நிரலாளராகப் பணிபுரிகிறார். அவரின் இந்த பங்கேற்பு தேசத்தின் பலபகுதிகளில் இருந்து வந்திருந்தவர்களை நெகிழ்ச்சியும் உற்சாகமும் கலந்த ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றது. பாராட்டுக்கள் திரு வீரமல்லு.

Monday, January 14, 2008

வாரணம் ஆயிரம் - திரைப்பட முன்னோட்டம்

ஆஸ்கார் பிலிம்ஸ் திரு.ரவிச்சந்திரன் தயாரிக்க மின்னலே, காக்க காக்க , வேட்டையாடு விளையாடு ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கவுதமின் இயக்கத்தில் சூர்யா, சமீரா, திவ்யா நடிக்க விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் வாரணம் ஆயிரம்.

ஆயிரம் யானைகளின் மன,உடற்பலம் உடைய தனிமனிதனைப் பற்றிய ஒரு தனித்துவம் வாய்ந்தக் கதை என இப்படத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தப் படத்தின் இந்த முன்னோட்டம் பலத்த எதிர்பார்ப்பை திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கிளப்பி இருக்கிறது. சூரியா - ஹாரிஸ் ஜெயராஜ் - கவுதம் மீண்டும் ஒருமுறை இணையும்
இப்படம் வெற்றி அடைய வாரணம் ஆயிரம் திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

நன்றி : youtube தளத்தில் இந்த Trailer யை வலையேற்றி வைத்திருந்த TamilTerminaldotcom

ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது

எழுதிய பதிவுகளில் பிடித்த பதிவு ஒன்றை தேர்வு செய்யச்சொல்லும் தொடர் ஓட்டத்தில், என்னையும் "Tag" செய்த பாஸ்டன் பாலாவிற்கு நன்றி. முதலில் சிரமமானதாகத் தோன்றினாலும் அந்த 143 ஞாபகம் வந்தபிறகு எளிமையாகிவிட்டது.




பாஸ்டன் பாலா அறிவுறுத்தலில் கடந்த வருடத்தின் கடைசிநாளன்று Best of 2007 போடுவதற்காக , சென்ற வருடத்தில் நான் எழுதிய அனைத்து பதிவுகளையும் மறுபார்வை செய்யக் காரணமாக இருந்த, 2007 ஆம் வருடத்தில் எழுதிய பதிவுகளிலேயே அதிகநேரத்தை எடுத்துக் கொண்ட இந்த 143 வது பதிவே என்னுடைய ”ஒன்றே ஒன்று


நான் ”ஒன்றே ஒன்று” எழுத அழைக்க விரும்பும் பதிவர்கள்

1. வலையுலக அப்ரிடி TBCD
2. "மனசுக்குள் மத்தாப்பூ” திவ்யா
3. சிவபாலன்
4.ஜேகே
5. சென்ஷி

Tuesday, January 08, 2008

பின்னால் நிற்கும் பிலிப்பைன்ஸ் பெண் - ஒரு நிமிடக்கதை

”இன்னக்கி பிலிப்பைன்ஸ் போகலாமா!! நார்வே இல்லாட்டி ஸ்வீடன் போகலாமா!! சே எங்க போனாலும் இந்த இந்தியப் பசங்க இருக்கானுங்க... இந்திய பொண்ணுங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு... என்னதான் இருந்தாலும் பிலிப்பைன்ஸ் பொண்ணுங்க மாதிரி பெருந்தன்மை வராது...” என்ற மனவோட்டத்துடன் கார்த்தி யாஹூ அரட்டையினுள் நுழைந்தான். அதிக இணையக் காணொளி(WebCam) இணைப்புகள் இருக்கும் “மணிலா அரட்டை” அறையினுள் நுழைய முற்பட்ட போது நிறைய ஆட்கள் இருக்கின்றனர் வேறு அறை பார்க்கவும் என யாஹு சொல்ல, குறைந்த நபர்கள் இருக்கும் ஒரு பிலிப்பைன்ஸ் அறைக்கு கார்த்தி நுழைந்து , வயது, ஆணா பெண்ணா என ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகவல்களை சோதித்துக் கொண்டே வரும்போது ஒரு பெயரில் Jeni, 24, Female எனக்காட்ட அதை தனி அழைப்புக்கு அழைத்தான்.

உடனே பதில்வந்தது. ஆங்கிலத்தில் “ஹலோ ” என

”வயது, ஆணா/பெண்ணா வாழுமிடம்“ எனக் கேட்டபோது

“ஜெனி, 24 , பெண், இந்தியா” என வந்ததும் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

உண்மையாக இருக்குமா என்ற சந்தேகம் வருவதை கார்த்தியால் தவிர்க்க இயலவில்லை.

”கார்த்தி, 27 , அழகான ஆண், இந்தியா , சென்னை”

“நானும் சென்னை தான்” என்று ஆங்கிலத்தில் பதில் வர இது ஏதாவது ஒரு ஆண் பெண் பெயரில் இருக்கிறானா என்ற சந்தேகம் மேலும் வலுத்தது.

“வெப் கேமரா” என கார்த்தி கேட்டு முடிக்குமுன் அழைப்பு இல்லாமாலே திரையில் ஜெனி முகம் வந்து தெரிய ஆரம்பித்தது. கார்த்திக்கு ஆச்சரியத்தை நம்பவே முடியவில்லை. ஆமாம் அழகான பெண் , அதுவும் இந்தியப் பெண் திரையில் வந்து கையசைத்தாள். வழக்கத்தை விட திரை தெளிவாகத் தெரிந்தது. முழுக்கை சுடிதார், பார்க்க குடும்ப பாங்காய் இருந்தாள்.

சென்னை, தமிழ் என சொன்னவுடன் ஆங்கிலமும் தமிங்கிலமும் கலந்து அரட்டை தொடர ஆரம்பித்தது. உரையாடல் போய் கொண்டே இருக்க, கார்த்திக்கு ஜெனியின் பின்புறம் ஒரு பிலிப்பைன்ஸ் பெண் கையில் புத்தகத்துடன் நடந்து செல்வதும், சில சமயங்களில் கணினி அருகில் வந்து போவதுமாய் தெரிந்தது.

“ஜெனி, உன் பின்னாடி யார் ?” எனக் கேட்டான்

“இல்லையே யாரும் இல்லையே, நான் மட்டும்தான் வீட்டில் இருக்கேன்”

கார்த்திக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது.

“நீ நிறைய பிலிப்பைன்ஸ் பொண்ணுங்களோட சாட் பண்ணுவியா?..இப்போக்கூட அடுத்த விண்டோல ஒரு பிலிப்பைன்ஸ் காரியைத் தானே பார்த்துட்டு இருக்க, அதனால உன் பிரமையா இருக்கும்”

கார்த்திக்கு ஒருவேளை ஜெனி சொல்லுவது சரியாக இருக்கும் என்றுதான் தோன்றியது. மணி ஏற்கனவே இரவு இரண்டைக் கடந்து இருந்தது. கண்கள் தூக்கக் கலக்கத்தில் சொக்க ஆரம்பித்தன. அனைத்து பிலிப்பைன்ஸ் பெண்களின் அரட்டையையும் மூடிவிட்டு ஜெனியுடம் மட்டும் அரட்டையைத் தொடர்ந்தான்.

மீண்டும் அதே பிலிப்பைன்ஸ் பெண், ஜெனியின் பின், அவளின் தோள் மேல் கைவைத்தாற் போல கணினியை அசைத்தாள். கார்த்திக்கு நிச்சயமாய் இது பிரமை இல்லை எனத் தெரிந்து

“ஜெனி,, மீண்டும் அதே உருவம் உன் பின்னே” என்று சொல்லுவதற்குள் ஜெனியினது அரட்டை இணைப்பு துண்டிக்கப்பட்டது. திரையும் மறைந்தது. மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது தற்சமயம் இணைப்பில் இல்லை எனக்கூறியது.

அய்யோ, ஜெனியின் பின்னால் ஒரு உருவம் ஜெனிக்கு தெரியாமல் நிற்கிறதே.கார்த்திக்கு நெஞ்சம் படபடக்க ஆரம்பிக்க அதே சமயம் பல மைல்களுக்கு அப்பால் பிலிப்பைன்ஸில்,

"காலையில் சீக்கிரம் எழவேன்டும்" என நினைத்துக் கொண்டே கணினி முன் கிடந்த வெற்று நாற்காலியை நகர்த்தி விட்டு அந்த பிலிப்பைன்ஸ் பெண் கணினியை அணைத்தாள்.

Monday, January 07, 2008

"Mankad'ed" ரன் அவுட்டும் கபில்தேவின் ஆவேசமும்

கிரிக்கெட்டில் ஒரு ஆட்டக்காரரை ஆட்டமிழக்க செய்யும் முறைகளில் ஒன்று “Mankad'ed run out". அதாவது பந்து வீசப்படும் முனையில் இருக்கும் ஆட்டக்காரர் பந்துவீச்சாளர் பந்தை வீசும் வரை மட்டை கோட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அப்படி வெளியேறினால் நடுவர் நிற்கும் பக்கத்தில் இருக்கும் விக்கெட்டுகளை தட்டிவிட்டு அந்த மறுமுனை ஆட்டக்காரரை ஆட்டமிழக்கச் செய்யலாம். இந்தியாவின் வினு மன்காட் 1947- 48 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் ஆல்பிரட் வில்லியம் பிரவுனை இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதில் இருந்து இந்தவகையான ஆட்டமிழக்க செய்யும் முறைக்கு "Mankad'ed " ரன் அவுட் என்ற பெயர் தரப்படுகிறது.

பெரும்பாலும் இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்ய பந்துவீச்சாளர்கள் தயங்குவார்கள். எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு விட்டுவிடுவார்கள்.

87 உலகக் கோப்பையின்போது லாகூரில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் அணி, கைவசம் ஒரு விக்கெட் இருக்க , கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சலீம் ஜபார் கோட்டை விட்டு வெகுதூரம் ஓடிவிட , அவரை வால்ஷ் ஆட்டமிழக்க செய்யாமல் எச்சரித்துவிட்டு கடைசி பந்தை வீசினார். அந்த பந்தில் அப்துல் காதிர் இரண்டு ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்தார். வால்ஷின் பெருந்தன்மை இன்றும் நினைவுக் கூறப்படுகிறது.

ஆனால் பலமுறை எச்சரித்தும் கேட்காத மட்டையாளர்களை இவ்வகையில் ஆட்டமிழக்கச் செய்த சம்பவங்களும் கிரிக்கெட் வரலாற்றில் உண்டு. நியுசிலாந்து அணியின் தீபக் பட்டேல் ஒரு முறை ஜிம்பாப்வே அணியின் கிராண்ட் பிளவரை இந்த வகையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

இந்தியாவின் முதல் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தின் போது போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் பீட்டர் கிறிஸ்டன் கபில்தேவின் எச்சரிக்கைக்களைத்
தொடர்ந்து அலட்சியப்படுத்திக் கொண்டே இருந்ததால் கடுப்பாகிப் போன கபில்தேவ் மன்காடட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். பொதுவாக சாந்தமாக இருக்கும் கபில்தேவ்
ஆவேசப்படும் வீடியோ தான் கிழே இருப்பது.



கிரிகின்போ தளத்தில் மன்காடட் ரன் அவுட் முறைப் பற்றியக் கட்டுரை இங்கே

நன்றி : யூடியூப்.கோம்

Wednesday, January 02, 2008

ஒரு 10/10 கிரிக்கெட் ஆட்டமும் அற்புதமான கேட்சும்

இரண்டு அணிகளும் தலா 20 ஓவர்கள் ஆடும் இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை நாம் கண்டிருக்கிறோம். அது போலவே தலா பத்து ஓவர்கள் மட்டுமே வைத்து அரங்கம் நிறைந்து ஒரு ஆட்டம் நடைபெற்று இருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் தெற்காசியாவில் ஏற்பட்ட சுனாமியால் நியுசிலாந்துடனான இலங்கை சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட , அதனால் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்படும் நட்டத்தை தவிர்க்கும் பொறுட்டு பன்னாடு கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் அமைப்பு (The Federation of International Cricketers’ Associations (F.I.C.A)), நியுசிலாந்து அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தது. தொடரை நிர்ணயிக்கும் ஹாமில்டனின் நடைபெற்றக் கடைசி ஆட்டத்தில் FICA XI 21 வது ஓவரில் 81 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதை நியுசிலாந்து அணி 16 ஓவர்களில் துரத்தி எடுத்து தொடரைக் கைப்பற்றியது. அரைநாளிலேயே ஆட்டம் முடிவடைந்ததால் நட்பு ரீதியிலான 10/10 ஆட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் ஆடிய நியுசிலாந்து அணி 10 ஓவர்களில் 178 ரன்களை அதிரடியாக ஆடிக் குவித்தது. அதில் நியுசிலாந்து ஆட்டக்காரர் கைல் மீல்ஸை ஆண்டி பிக்கல் அற்புதமாகக் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்த வீடியோதான் இது



பின்னர் ஆடிய FICA XI அணி 178 ரன்களை எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது. இந்த ஆட்டத்தில் முத்தையா முரளிதரன் துவக்க ஆட்டக்காரராக இறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு சுவாரசியமான ஆட்டவிபரங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

வாழ்க்கையிலும் கிரிக்கெட்டிலும் சுவராசியங்களுக்கு என்றுமே பஞ்சம் கிடையாது.

Tuesday, January 01, 2008

காட்டு ரோஜாக்களுக்கும் கடமை உண்டு - சிறுகதை

விடுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை விடிய விடியக் கொண்டாடிவிட்டு தூங்கிக் கொண்டிருந்த என்னை பக்கத்து அறையில் இருந்து ஒலித்த ”ஆண்டே நூற்றாண்டே” முகவரிப் படப் பாடல் எழுப்பியது.

“அழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா!!!” என்ற வரிகளை மீறி
“டி22 கார்த்தி போன்” என்று விடுதி உதவியாளர் ஒருவரின் குரல் கேட்க எழுந்து வேகமாக தொலைபேசி இருக்கும் அறைக்கு ஓடினேன். இது நிச்சயமாக ஜெனியின் அழைப்புதான். நீண்ட நேரமாக காத்திருப்பில் வைத்திருப்பார்கள் போல, பிற அழைப்புகளுக்காகக் காத்திருந்த விடுதி மாணவர்கள் லேசாக முறைத்தனர்.

“ஹலோ”

“ஹல்லோ கார்த்தி.. நான் ஜெனி பேசுறேன்.. ஏன் லேட், நான் தான் இந்த டைம்முக்கு போன் பண்ணுவேன் வெயிட் பண்ணுன்னு சொன்னேன்ல”

“சாரி, ஜெனி நைட் போட்ட ஆட்டத்துல கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்”

“என்ன தண்ணி அடிச்சியா?”

“அந்தப் பழக்கம்தான் இதுவரை இல்லைன்னு சொன்னேன்ல, “

“பொய் சொல்லாதே!!! வாசனை கப்புன்னு அடிக்குது”

“அது என்கிட்டே இருந்து இல்லை, பக்கத்துல உட்கார்ந்து இருக்கிற ஜூனியர் பசங்க கிட்டே இருந்து”

“இது தான், இந்த டைமிங் தான்..உன்னிடம் ரொம்ப பிடிச்சது, சரி எத்தனை மணிக்கு அந்த இடத்துக்குப் போகனும், நான் ஏற்கனவே ரெடியாயிட்டேன், 2nd ஸ்டாப்ல வெயிட் பண்றேன், சீக்கிரம் வந்து சேரு”

ஜெனிக்கு சரி சொல்லிவிட்டு தொலைபேசி அறையைக் கடக்கும்போது “எப்படி எல்லாம் பில்டப் பண்ணி கடலை போடுறானுங்கப்ப” என ஒரு சக விடுதி மாணவன் சொன்னதைக் காதில் வாங்கி சிரித்துக் கொண்டே வேக வேகமாக கிளம்பி 2வது நிறுத்தத்தை அடைந்த போது ,காத்திருந்த ஜெனி என்னைப் பார்த்தவுடன் “மில்லினியம் விஷஸ்” என சொல்லி ஒரு ”Wishes 2000" என அச்சடிக்கப்பட்டிருந்த அழகான வாழ்த்து அட்டையைக் கொடுத்தாள்.

“தாங்க்ஸ் எ லாட் ஜெனி, டெக்னிகலி அடுத்த வருடம் தான் மில்லினியம் ஸ்டார்டிங்”


”உனக்கு எதாவது எடக்கு மடக்கா பேசலான்னா தூக்கம் வராதே!!” சொல்லிவிட்டு என் வண்டியில் ஏறிய ஜெனியுடன் நகரத்தின் எல்லையைத் தாண்டி அமைந்திருந்த செஷையர் இல்லம் என்றழைக்கப்படும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வண்டியை வேகமாக செலுத்தினேன்.

ஜெனி எங்க கல்லூரில ஒரு வருடம் இளைய மாணவி , அவளோட அப்பா திருப்பூர்ல பெரிய தொழிலதிபர், இங்கே அவங்க சொந்தக் காரங்க வீட்டுல தான் தங்கிப் படிக்கிறாள். போன வருடம் கல்லூரி விழாவுக்காக போடப்பட்ட நாடகத்தில் சேர்ந்து நடித்ததின் மூலமாக ஒருவருக்கொருவர் அறிமுகம் ஏற்பட்டது. அதுவரை நானும் ஜெனியை பெரிய அலட்டல்காரி என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் மற்றவர்கள் சொல்லும் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு அலட்டல் இருக்கிறது. பணக்காரச்சூழலிலேயே வளர்ந்து விட்டதால் அவளோட இயற்பான குணங்கள் அலட்டலாக மற்றவர்களுக்கு தெரிகிறதோ என்னவோ!!

கடைசி ஐந்து மாதங்களில் நட்பின் நெருக்கம் அதிகமாகிவிட்டது என்று தெரிந்த நண்பர்கள் “மாப்லே, ஏற்கனவே அவளோட ரிலேடிவ்ஸ் உன்னைப் பத்தி விசாரிச்சுட்டு இருக்கானுங்க ... அவளோட பழகுறது தண்ணி லாரி மாதிரி... லாரி நம்ம மேல மோதினாலும் நாம லாரி மேல மோதினாலும் சேதாராம் நமக்குத்தான்,,, கொஞ்சம் ஜாக்கிரதை” என்ற நண்பர்களின் அறிவுறுத்தல்களில் அக்கறை இருந்தாலும் அக்கறையை விட பொறாமை அதிகம் இருந்தது என்பதுதான் உண்மை.

தென்னை மரங்கள் இருமருங்கிலும் நிற்க இடையில் இருந்த செம்மண் சாலையின் முடிவில் செஷையர் இல்லம் தெரிந்தது. வண்டியை நிறுத்திவிட்டு ஜெனியுடன் அந்த இல்ல நிர்வாகியின் அறையினுள் நுழைந்து ஜெனியை அவரிடம் அறிமுகப் படுத்தினேன்.
அடுத்த இரண்டு மணிநேரம் அங்கிருந்தவர்களிடம் உரையாடிவிட்டு அவர்களுடனே மதிய உணவும் சாப்பிட்டுவிட்டு திரும்பும்பொழுது தான் உரைத்தது. ஜெனி அவர்கள் யாருடனும் சரியாகவே பேசவில்லை. முகத்தில் எரிச்சல் அருவருப்பு எல்லாம் தெரிந்தது. வண்டியில் திரும்பும்பொழுது ஜெனியே பேச்சை ஆரம்பித்தாள்.

“கார்த்தி, பிளீஸ் இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் இனி என்னைக் கூப்பிடாதே... ஐ யம் நாட் கம்பர்டபிள் ...இவங்களை எல்லாம் எனக்குப் பார்க்க பிடிக்கல.. ஐ யம் நாட் ஹியர் ஃபார் சோசியல் சர்விஸ்”

அவளின் இந்த பேச்சு என்னுடைய உற்சாக அளவை சிறிதுக் குறைத்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் புன்முறுவலுடன் அவளை இறக்கிவிட்டுவிட்டு விடுதிக்குத் திரும்பினேன். மறுநாள் கல்லூரியில் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டாலும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அடுத்த இரண்டு நாட்கள் இப்படியே போனது. மூன்றாம் நாள் அவள்தான் பேச்சை ஆரம்பித்தாள்,

“புரபஷர் மோகனோட பையன் பர்த்டேவாம்... கூப்பிட்டாரு.. ரம்யா மேடமும் கூப்பிட்டாங்க”

“ம்ம் என்னையும் கூப்பிட்டாங்க”

“ரம்யா மேடமும் மோகன் சாரும் சூப்பர் ஜோடில்ல... உனக்குத் தெரியுமா அவங்க ரெண்டு பேரும் கிளாஸ்மேட்ஸ், லவ் மேரேஜாம். லவ்லி கப்புள்ஸ்”

அவளுக்குத் தலையாட்டிக் கொண்டே மோகன் ரம்யா தம்பதிகளின் 10 வயது பையன் விவேக்கைப் பற்றி நினைவு வந்தது. விவேக்கிற்கு “செரிபரல் பால்ஸி” நரம்பு சம்பந்தபட்ட ஒரு வகையான குறைபாடினால் பாதிக்கப்பட்டவன். ஆனால் மோகன், ரம்யா தம்பதிக்கு குழந்தையாய் வந்ததனால் நிஜமாகவே அவன் ஆசிர்வதிக்கப்பட்டவன் . அருமையாக கவனித்துக் கொள்வார்கள். விவேக்கிற்கு என்னுடன் விளையாடுவது மிகப்பிடிக்கும். ஜெனியின் நட்புக்கு முன்னால் வார இறுதிகள் விவேக்குடன் தான்.

விவேக்கின் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்துவிட்டு திரும்புகையில் “கார்த்தி, விவேக்கிற்கு அப்படி ஒரு டிஸெபிலிட்டி இருக்குன்னு ஏண்டா நீ முன்னமே சொல்லல, தெரிஞ்சிருந்தா நான் வந்தே இருக்க மாட்டேன் “

“நான் அப்படி நினைக்கல..மோகன் சாரிடமோ ரம்யா மேடமிடமோ இப்படி பேசிடாதே..”

“ஏண்டா இப்படி எல்லாம் பொறக்குறாங்க...இவங்களை எல்லாம் பிறந்த உடனேயே கில் பண்ணிடலாம்ல, இவங்களால மத்தவங்களுக்கும் கஷ்டம்... எமொஷனலா ..பிசிக்கலா நிறைய பேருக்குத் தொந்தரவு... இந்த விவேக் இருந்து என்ன சாதிக்கப் போறான்... எல்லோரையும் டிஸ்டர்ப் பண்ணிட்டு கொஞ்ச நாள்ல செத்துப் போகப் போறான்.. ”

ஜெனியை அப்படியே அறைய வேண்டும் என்பது போல இருந்தது. கோபத்தைக் கட்டுப் படுத்திக்கொண்டு “பைபிள் பழைய ஏற்பாட்டுல ஒரு வசனம் வரும்.. --காட்டில் பூக்கும் ரோஜாக்கள் கூட தன் கடமையை உணர்ந்தே பூக்கின்றன-- “

நான் சொன்னதைக் காதில் வாங்கி கொண்டாளா என்று தெரியவில்லை. இருந்தும் ஊதுற சங்கை ஊதி வைப்போம்னு

“ஜெனி, இந்த யுனிவர்ஸோட செண்டர் பாயிண்ட் எது தெரியுமா.. ஒவ்வொரு தனி மனிதன் தான்.. என்னைப் பொறுத்து நான் தான் இந்த யுனிவர்சோட மையம்.. அது மாதிரி உனக்கும்... விவேக்கிற்கும்.. ஒவ்வொருத்தரோட பிறப்பும், இருப்பும், இறப்பும் ஏதாவது காரண காரியங்களுக்காகத்தான் நிகழ்த்தப்படுது..இங்க பில்டிங் கட்டுறப்ப ஏற்படுற சின்ன அதிர்வுகள் வேற எங்கேயோ பூகம்பமா மாறும்..everyhting has got its own reasons for its existance"

"cut the crap... வர வர உன் பேச்சு ஆர்க்யூமெண்ட்ஸ் எல்லாம் கேட்க கடுப்பா இருக்கு" என எரிச்சலைடைந்து பேச்சை நிறுத்த சொன்னாள். பிப்ரவரி 14 ஆம் தேதி அவளிடம் என் விருப்பத்தை சொல்லலாம் என்ற நினைப்பு இனி எழவேக் கூடாது என மனதில் உறுதி எடுத்து அவளை விட்டு விட்டு விடுதிக்கு வந்தேன். அதன் பிறகு வலிய ஜெனியுடன் ஆன நட்பையும் குறைத்துக் கொண்டேன். ஓடிப்போயிற்று கல்லூரியில் அந்த கடைசி ஆறுமாதங்களும் அதன் பின் இந்த ஏழு வருடங்களும்.

பொருளாதரத்தை வளப்படுத்திக் கொள்ளும் போராட்டத்தில் பழைய அக்கறை மனப்பான்மைகள் நீர்த்துப் போயிருந்தன. சம்பிரதாயமாக ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் ஒரு கணிசமான தொகையை சில ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பிவிட்டு அதில் ஒரு பொய்யான ஆத்ம திருப்தி அடைந்து விட்டதாக என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன். செஷையர் இல்லம், மோகன் சார், ரம்யா மேடம் , விவேக் பற்றிய நினைவுகள் மட்டும் அவ்வப்போது வந்து போகும். ஜெனி என் பிறந்த நாளுக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்புவாள். அவள் கல்யாணம் கோயம்புத்தூரே அதிர நடந்ததாக போய் வந்த என் கல்லூரித் தோழர்கள் சொன்னார்கள். பழைய நினைப்பெல்லாம் தூர ஏறக்கட்டிவிட்டு என்னுடைய மடிக்கணியில் ஆங்கில செய்தித் தாள்களின் இணையத் தளங்களை மேய ஆரம்பித்தேன்.
அட..சிறப்புக்கட்டுரை ஒன்றில் மோகன் ரம்யா தம்பதியினரின் பேட்டி,தங்களது வேலைகளைத் துறந்து விட்டு சேமிப்பு பணத்துடன், செரிபரல் பால்ஸியினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக ஒரு மையத்தை இரண்டாண்டுகளுக்கு முன் துவங்கி அதை மிகுந்த நேயத்துடன் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள். .மூன்று வருடங்களுக்கு முன் தங்கள் மகன் விவேக் இறந்துவிட்டதாகவும், அவனின் நினைவாக அவனைப் போல பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு சேவை செய்ய முழுமனதுடன் வந்துவிட்டதாகவும் சொல்லி இருந்தனர்.

”முன்ன விவேக் மட்டும் தான் எங்க குழந்தை, இப்போ இந்த அத்தனைக் குழந்தைங்க முகத்திலேயும் எங்க விவேக்கைப் பார்க்கிறோம்..கடவுள் சில பேரை சில விசயங்களை செய்ய வைப்பதற்காக அனுப்புகிறார்.. அதுமாதிரியான கடவுளோட தூதுவன் தான் விவேக் ” என அந்த பேட்டியில் ரம்யா மேடமும் மோகன் சாரும் குறிப்பிட்டிருந்ததை நெகிழ்ச்சியாகப் படித்து முடித்தேன்.

அந்த இணைய செய்தியின் சுட்டியை அப்படியே ஜெனியின் மின்னஞ்சலுக்கு ”கடமை தவறாத காட்டு ரோஜா “ என தலைப்பிட்டு அனுப்பி வைத்தேன். இந்த மின்னஞ்சலுக்கு ஜெனியிடம் இருந்து பதில் வரலாம் வராமலும் இருக்கலாம், ஆனால் அதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. காலம் சில விசயங்களை சிலருக்கு தாமதமாகத்தான் உணர்த்தும். எனக்கு இன்று உணர்த்தியது. கட்டுரையில் தரப்பட்டிருந்த மோகனின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்தேன்.

-------- முடிந்தது----