Tuesday, April 01, 2008

எனக்கே எனக்கா - குறுந்தொடர் (2)

எனக்கே எனக்கா - முதல் பாகம் இங்கே

கல்லூரியில் கார்த்தியின் துறையில் ஒரு வருட இளைய மாணவியான ரம்யாவிற்கு இரண்டாம் வருடத்தில் ஆய்வக நோட்டுப்புத்தகங்களைக் கொடுத்து உதவியதில் ஆரம்பித்த கார்த்தி-ரம்யா நட்பு, கார்த்தியின் இறுதி ஆண்டில் தினம் பொடிநடையாக திருப்பரங்குன்றம் கோவில் சென்று வருவதில் வலுப்பெற்றது.

உடன் படிக்கும் மாணவ மாணவிகள் அரசல் புரசலாக இருவருக்கும் காதல் என பேச ஆரம்பிக்க, ஒரு நாள் ரம்யா நேரடியாகவே கார்த்தியிடம் கேட்டாள்.

"கார்த்தி, நம்ம பிரன்ட்ஸிப் லவ் ஆகிடுமா?"

"ம்ம் தெரியல ரம்யா, பிரன்ட்ஸிப்புக்கும் லவ்வுக்கும் நடுவுல இருக்கிற இந்த ஸ்டேட் ஆப் மைன்ட் ரொம்ப நல்லா இருக்கு.. "

"ம்ம்ம்"

"ஆனால் ஒரு விசயம், நானா லவ் சொல்ல மாட்டேன், நீயா சொன்னின்னா, நான் மறுக்க மாட்டேன்"

சாந்தமாக இருந்த ரம்யாவின் முகம் சட்டென மாறி எழுந்துபோனாள். அதில் பொய்க்கோபம் மட்டுமே ஒளிந்திருந்தது.

அன்றிரவு "Do I deserve you" எனக் கார்த்தி ஒரு குறுந்தகவலை அனுப்பிய சிலநிமிட இடைவெளிக்குப்பின்னர் "எஸ்" என பதில் வந்தது.

அந்த சமயத்தில் வெளிவந்த ரிலையன்ஸின் கைத்தொலைபேசி இணைப்பினால் இருவரும் செலவில்லாத "சங்கீத ஸ்வர" இரவுகளினால் தங்களது காதலை வளர்த்தனர்.


"ரம்யா, ஒரு கவிதை சொல்லவா"

"சொல்லு கார்த்தி"

"நீ தும்மும்போது அருகில் நான் இருக்க
வேறு யார் உனை நினைக்க என தேட தொடங்குது மனம்"

"ம்ம் நல்லா இருக்கு, தாங்ஸ்,,, இன்னொன்னு சொல்லு ப்ளீஸ்"

"உன் இதழ்களில் தவழும்
உரிமை என் பெயருக்கு மட்டும்"

இப்படி காதலும் கவிதையுமாக, காலையில் எழுந்தவுடன் தன்னுடன் பேசவேண்டும், வகுப்புகள் இல்லாத பொழுது தன்னுடன் இருக்க வேண்டும் ,மதிய உணவு தன்னுடன் அருந்த வேண்டும். என "காதலன்" என்ற உரிமையுடன் கார்த்தி கட்டளை இடுவது அனைத்தும் ரம்யாவிற்கு பிடித்திருந்தது.


கார்த்தியும் தான் என்ன ரம்யாவிடம் எதிர்பார்க்கிறானோ, அதே அளவு முக்கியத்துவத்தை ரம்யாவிற்கும் கொடுத்துவிடுவான். வேலை வாய்ப்பிற்கான கல்லூரி வளாக இறுதிச்சுற்று நேர்முகத் தேர்விற்கு செல்லும்முன் ரம்யாவின் வாழ்த்து கிடைக்கவில்லை என்பதால் கடினமான முந்தைய சுற்றுக்களை எளிதாக கடந்திருந்த அவனுக்கு வேலை உறுதி என்ற நிலையில் பேராசிரியர்கள் கடிந்து கொண்டபோதிலும் அவன் கடைசி சுற்றுக்கு செல்ல மறுத்துவிட்டான்.

மறுநாள் ரம்யா, "ஏன் கார்த்தி இப்படி பைத்தியக்காரத்தனமா பண்றே!!"

"பைத்தியம் தான், உன் மேல .. நான் செய்யுற ஒவ்வொரு விசயத்துலேயும் உன் பிரசன்ஸ் வேண்டும் ரம்யா!!"

நட்பின் போது மென்மையாய் இருந்த அன்பு காதலில் முரட்டுத்தனமாக கார்த்தியிடம் மாறி இருப்பது ரம்யாவிற்கு ஒரு வித பயத்தைக் கொடுத்தது.

அடுத்த வளாகத்தேர்வில் காலை நுழைவுத்தேர்வில் இருந்து, குழு உரையாடல், தொழில்நுட்பச்சுற்று,மனிதவளச்சுற்று என இரவு பத்து மணிவரை கார்த்தியை உற்சாகப்படுத்த அவனுடனே ரம்யா இருந்தாள். கார்த்தியின் பெயர் தேர்வு முடிவுகளில் அறிவிக்கப்பட , ரம்யா மகிழ்ச்சியின் உச்சத்தில் சுற்றம் பற்றிக் கவலைப்படாமல் கார்த்தியை இறுகத் தழுவிக்கொண்டாள்.

அடுத்த சில நாட்களில் இருவருக்கும் செமஸ்டர் முடிவுகள் வர, சராசரியாக 10 விழுக்காடு குறைவாகப் பெற்று வகுப்பில் 10 இடங்கள் ரேங்கில் கீழ் இறங்கிய ரம்யாவை துறைத் தலைவர் அழைத்து படிப்பில் மட்டும் கவனம் வேண்டும் என்று சொல்லவந்ததை பல உதாரணங்களுடன் சொல்லி எச்சரித்து அனுப்பித்தார்.

கார்த்தி தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என எல்லாப் பாடங்களிலும் இதுவரை இல்லாத அளவு மோசமான மதிப்பெண்களுடன் தேர்வாகி இருந்தான்.

ஆனால் இருவருமே அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. எதிர்கால வாழ்க்கையை வார்த்தைகளில் திட்டமிடவே நேரம் போதவில்லை. எந்த ஒருவிசயத்திற்கும், உச்சத்தில் இருக்கும்பொழுதுதான் அதன் வீழ்ச்சி தொடங்குகிறது. கார்த்தி ரம்யாவின் காதலுக்கும் அந்த நிலை வந்தது.

தொடர்ச்சிக்கு இங்கே சொடுக்கவும்

--------------

கவிதைகள்,நன்றி : 'கண்ணாடி மழை' எழில்பாரதி

9 பின்னூட்டங்கள்/Comments:

Anonymous said...

ரொம்ப நல்லாருக்கு!! அடுத்தது எப்போ??
அன்புடன் அருணா

said...

\\நட்பின் போது மென்மையாய் இருந்த அன்பு காதலில் முரட்டுத்தனமாக கார்த்தியிடம் மாறி இருப்பதனால் ரம்யாவிற்கு ஒரு வித பயத்தைக் கொடுத்தது. \\

Well said:)

said...

\\"நீ தும்மும்போது அருகில் நான் இருக்க
வேறு யார் உனை நினைக்க என தேட தொடங்குது மனம்"\\

So cute!!!

said...

Good flow vinayooki,
Waiting for the next part.....

said...

ம்

said...

good flow, Selva.. waiting for NEXTs...

said...

ரொம்ப இயல்பா அழகா இருக்கு கதை

அடுத்த பகுதி சீக்கரம் பதியுங்கள்!!!!

said...

சூப்பரா போகுது கதை!! அசுத்துங்க வினையூக்கி!

said...

கதை நல்லா போயிட்டிருக்கு. அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க.