Sunday, October 27, 2013

பேஸ்புக் - பொழுதுபோக்கு குட்டிக் கதை


காட்சி - 1

அம்மு :- 'யாருடா கார்த்தி அந்தப் பொண்ணு, அடிக்கடி உன் போஸ்ட் களுக்கு லைக் கமெண்ட் எல்லாம் போடுறா ?" 

கார்த்தி :- 'எந்த பொண்ணுடா அம்மாடி, நிறைய பொண்ணுங்க என் பக்கம் வருவாங்களே ' 

அம்மு :- "அதுதான் அபிராமி-அபிராமி அப்படின்னு ஒருத்தி வந்து கமெண்ட் போடுவாளே , அவள் யாரு? "

கார்த்தி :- "அதுவா , அந்தப் பொண்ணு என்னோட ரசிகை , எழுத்துக்கு மட்டும், நீ கண்டுக்காதே "


காட்சி - 2

அம்மு :- "ஏன்டா கார்த்தி, என்னை பிலாக் பண்ணிட்ட ... "

கார்த்தி :- "சும்மா நொய் நொய் நு கேள்வி கேட்டுட்டு இருந்தீன்னா அப்படித்தான் "

அம்மு :- "அப்போ சரி, நீ உன் உன் கடலை கேர்ல்ஸ் கூட happy ya இரு, நான் பேஸ்புகில் இருந்தால் தானே கேள்வி எல்லாம் வருது, நானே டி - ஆக்டிவேட் செஞ்சுட்டு பேஸ் புக்கு விட்டுட்டு போய்டுறேன் "
காட்சி - 3

கார்த்தி :- "தங்கம்முலு , நான் பேஸ்புக்கில ஒரு ஆர்டிக்கிள் போட்டு இருக்கேன் பாரு ... செம கைத்தட்டு கிடைச்சிட்டு இருக்கு நான் உன்னை அன்-பிலாக் பண்றேன் .. நீ பாரேன் "

அம்மு:- ",போடா நாயே ... என்னை நீ பிலாக் பண்ண பிறகு டி ஆக்டிவேட் பண்ணிட்டேன்"

கார்த்தி :- " சரி, நான் என்னோட வேற ஒரு ஐடி தரேன்.. அதுல பாரு "

அம்மு :- "சரி சொல்லித் தொலை ..."

கார்த்தி :- " abhirami-abhirami@*****.com பாஸ்வேர்ட் உன்னோட பேரு தான் "

Saturday, October 26, 2013

Languages often teach more history than the documented history


சென்னைத்தமிழ், நெல்லைத்தமிழ், தஞ்சைத்தமிழ் போல , சேரளத் தமிழான மலையாளமும் தமிழின் ஒரு பேச்சு வழக்கு என அறிந்திராத காலம் அது. எகத்தாளம் , கேலி , நக்கல் எல்லாம் நிரம்பிய இருபதுகளின் ஆரம்ப நாட்கள். ஆங்கிலத்தில் மட்டும் பேசிக்கொண்டிருந்த மலையாளி ஒருவர் முன்னிலையில் அவரைப்பற்றி தமிழில் இன்னொரு நண்பரிடம் ஏதோ மென்மையான நக்கல் ஒன்றை அடித்துவிட மலையாள நண்பர் சில நாட்கள் என்னிடம் பேசவில்லை. பின்பு ஒரு நாள் அவர் தான் சொன்னார் , மலையாளிக்கு தமிழ் நன்றாக விளங்கும் , விளையாட்டுக்குக் கூட மலையாளிகளைக் கிண்டல் செய்ய அவர்களின் முன்னால் , அவர்களுக்குப் புரியாது என நினைத்துக் கொண்டு, பிறரிடம் தமிழில் கிண்டல் செய்து விடாதே என்று அறிவுறுத்தினார். அந்த மலையாள நண்பருக்கு பெயரில் எந்தவிதமான சாதிப் பின்னொட்டு இல்லை என்பது ஓர் உபரித் தகவல்.

மேற்சொன்ன அனுபவம் மலையாளத்திற்கு என்றால், பின்வரும் சம்பவம் தெலுங்கு சம்பந்தப்பட்டது. சுவீடனில் படிக்கையில் , ஆரம்ப காலத்தில் தெலுங்கானா பகுதியைச் சார்ந்த தெலுங்கு மாணவர்கள் என் வீட்டில் சில காலம் இருந்தார்கள் அவர்களுடன் பேசிப் பேசி தெலுங்கானா தெலுங்கு கொஞ்சம் புரிபட ஆரம்பித்தது. ஒரு நாள் இரவில் நான் அரைத்தூக்கத்திற்கு சென்ற பின்னர் , அவர்களின் உரையாடல் ஆரம்பித்தது. அதில் ஒரு நண்பன் சுத்த தெலுங்கில் பேசு, இவனுக்கு தெலுங்கானா பேச்சு வழக்குப் புரியும் என குறிப்பு கொடுக்க சுத்தத் தெலுங்கில் பேச ஆரம்பித்தார்கள் . அவர்கள் பரிசுத்த தெலுங்கில் , அவர்கள் உடனடியாக வீட்டைக் காலி செய்ய விரும்புகின்றார்கள், புது வீடு அவர்களுக்கு குறைந்த வாடகையில் வேறு பகுதியில் கிடைத்து இருக்கின்றது. உடனடியாக வீட்டைக் காலி செய்தால் , தனி ஒருவனாக முழு வாடகை கொடுக்க எனக்கு சிரமம் இருக்குமே எனக் கவலை இல்லாமல், அவர்களின் வசதியைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டு இருந்தார்கள். இரண்டு நாட்கள் கழித்து சொன்னார்கள். இந்த விஷயம் 'ஏற்கனவே தெரியுமே' என்றேன். எப்படி என்றக் கேள்விக்கு,
சுத்தத் தெலுங்கு , தெலுங்கானத் தெலுங்கை விட தமிழுக்கு மிக நெருக்கமாக இருக்கும், மேலும் தெலுங்கில் இருக்கும் பண்டைய சொற்கள் தமிழின் இலக்கியச் சொற்கள். , தமிழின் குழந்தை தெலுங்கு என என் தமிழரசியலையும் அவர்களிடம் விதைத்து விட்டு அவர்களை சுமுகமாக வழியனுப்பி வைத்தேன்.

சுவீடனில் மற்றும் ஒரு முறை , சிங்கப்பூர் சீனாக் காரன் , பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூரியா வரிசையாக பூக்களின் பெயர்களைச் சொல்லுவதைப் போல, பல தமிழ்க்கெட்ட வார்த்தைகளை சொன்னான். எப்படி சீனாக்காரர்கள் தமிழில் கிண்டலடிக்கப்டுவார்கள் என்பதையும் சொன்னான். இவை அனைத்தும் அவனது சிங்கப்பூர் தமிழ் நண்பர்களிடம் சிறு வயதில் இருந்து கற்று கொண்டதாம். அன்றில் இருந்து சீன ஆட்களை மறந்தும் கூட கிண்டலடிப்பதில்லை.

இப்படி திராவிட மொழி அனுபவங்கள் ஒரு வகை என்றால் , இத்தாலியில் வேறு ஒருவகையில் இருந்தது. ரோமை சுற்றிப்பார்க்க வந்திருந்த எனது எகிப்திய நண்பர்களை , என் இத்தாலிய - சிசிலி நண்பனிடம் அறிமுகப் படுத்தினேன். எகிப்திய நண்பர்கள் அவர்களுக்குள் அவ்வப்பொழுது அரபியில் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தனர். இது சகஜமான ஒன்று என்பதால் நான் கண்டு கொள்ளவில்லை. கொண்டாட்ட ஒன்று கூடல்களில் இந்தி'யர்கள் அவர்கள் மொழியில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது , நானும் என் தமிழ் நண்பர்களும் தமிழில் பேசிக் கொண்டு இருப்போம். ஆனால் என் இத்தாலிய நண்பனின் முகம் அடிக்கடி கடுமையாக மாறிக்கொண்டு இருந்தது. பின்னர் , இத்தாலிய நண்பனிடம் 'அவர்கள் அரபியில் பேசிக் கொண்டு இருந்ததால் நீ கோபம் ஆகிவிட்டாயா? ' எனக் கேட்டதற்கு
"கோபம் அவர்கள் அரபியில் பேசியதற்காக இல்லை, அரபியில் அவர்கள் இத்தாலியைப் பற்றியும் என்னையும் கேலி செய்து கொண்டு இருந்தார்கள். எனக்கு அரபி தெரியாது என்றபோதிலும் , அவர்கள் கேலி செய்யப் பயன்படுத்திய அரபி வார்த்தைகள் அப்படியே இன்றும் சிசிலியில் புழக்கத்தில் உண்டு, சிசிலித் தீவு , வரலாற்று ரீதியாக ரோமப் பேரரசு / இத்தாலிக்கு எந்த அளவிற்கு நெருக்கமோ அதே அளவிற்கு எகிப்திற்கும் நெருக்கம். அரபிக் கலப்பு என்பது  சிசிலியின் இத்தாலிய பேச்சு வழக்கில் சாதாரணமான ஒன்று " என்றான்.

Tuesday, October 22, 2013

தங்கச் சாமியார்


எனது முதன்மை சீடனுக்காகக் காத்து இருக்கின்றேன். எனது ஆசிரமத்தில் இருந்து 50 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் பாழடைந்த சோழர்கள் கால மண்டபத்தில் அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டு இருக்கின்றது. அங்கிருந்து எதிர்பார்த்து இருக்கும் நல்ல செய்தி ஒன்றிற்காகக் காத்து இருக்கின்றேன். 

முப்பது வயதில் என்னளவிற்கு யாரேனும் சாதிக்க முடியுமா எனத் தெரியவில்லை. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து தட்டுத் தடுமாறி பொறியியல் படித்து சில நாட்கள் துறை சார்ந்து வேலைப் பார்த்து , பின்னர் பக்கத்து வீட்டு சித்த மருத்துவரிடம் கொஞ்சம் சித்த மருத்துவம் கற்றுக்கொண்டு ஊரில் ஒரு சித்த மருத்துவக்கடை ஒன்றைப் போட்டது வரை சுமாராகத்தான் போய்க் கொண்டு இருந்தது. ஒரு நல்ல நாளில், சித்தத்தில் கொஞ்சம் காவி கலந்து பகவத் கீதைல என்ன சொல்லியிருக்கிறது என்றால் என பேச ஆரம்பித்து மருந்துகள் கொடுக்க ஆரம்பித்த பின்னர் கூட்டம் கூடியது. கொஞ்சும் தமிழ், நிறைய ஆங்கிலம், கொஞ்சம் வடமொழி என பேசியதால் மக்களுக்கு அபிமானம் கூடிக் கொண்டே போனது.

மன நிம்மதியற்று வருபவர்களுக்கு மருந்து என வெல்லசூரணத்துடன் போதைப்பொருளையும் சேர்த்துக் கொடுக்க ஆரம்பித்த பின்னர் வெளிநாட்டுக் காரர்களும் என் சீடர்களில் இடம் பிடித்தனர் ஆம்ஸடர்டாம் நகருக்கு அடுத்தப்படியாக என் குட்டி ஆசிரமம் விசயத்திற்கு பிரபலம்.

மற்ற வணிகத்தில் வடநாட்டவர்கள் கலக்கினாலும் இந்த ஆன்மிகத்தில் தென்னிந்திய சாமியார்கள் தான் பேரரசர்கள் . என்னைப் போல நிறைய தமிழ்ச் சாமியார்கள் பெருகிவிட்டதால் நான் பெற்ற இடத்தை இழக்காமல் இருக்க , ஆன்மிக வியாபரத்திற்கு சம்பந்தம் இல்லாத பிரபாகரன் , பெரியார் என பேசி எல்லாம் கூட்டம் சேர்க்க வேண்டியதாக இருக்கின்றது. ஆன்மிகத்தையும் அரசியலையும் இணைக்கும் போராளிகளே எனது சீடர்கள் என நான் அடிக்கடி சொல்லுவதுண்டு.

ஒரு நாள் ஏதேச்சையாக , தொலைக்காட்சியில் குறும்படம் ஒன்றைப் பார்க்க, அதில் கதைப்படி ஒரு சாமியார் பண்டைய அரசனின் கோவிலில் தங்கம் இருப்பதாக சொல்லுவார். அதையே என் கனவாக மாற்றி , சோழர் மண்டபத்தில் தங்கப் புதையல் எனச் சொல்லிவிட்டேன். இரண்டு நாட்களாக , நான் தான் செய்திகளின் செல்லப்பிள்ளை. அகழ்வாராய்ச்சி நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் ஒருவர் என் சூரணத்திற்கு கட்டுப்பட்டவர் என்பதால் கனவை மெய்ப்பிக்கத் தோண்டிக் கொண்டு இருக்கின்றார். என் கனவு என் உரிமை என, அவருக்கு முன்னரே என் சீடனை அனுப்பி 150 கிலோ தங்கத்தை அங்கேப் புதைக்க சொல்லி இருந்தேன். தங்கம் கிடைக்கும் ... என் புகழ் மேலும் பரவும் ... என சீடனுக்காகக் காத்து இருக்கின்றேன். அவனோ கைப்பேசி அழைப்பையும் எடுக்க மாட்டேன் என்கின்றான். ஒருவேளை தங்கத்தைப் புதைக்காமல் எடுத்துக் கொண்டு ஓடி இருப்பானோ !!

ஒரு நிமிடம் இருங்கள், அகழ்வாராய்ச்சி நிபுணரிடம் இருந்து அழைப்பு !!!

"ஹல்லோ"

Wednesday, October 16, 2013

அங்கு கண்ட மனிதர்கள் - சிறுகதை

பன்னாட்டு வான்வெளி ஆய்வு மையம் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருந்தது.  ஆம் பல நூறு ஒளியாண்டுகள் தள்ளி இருக்கும் ஒரு கோளில் மனிதர்கள் இருப்பதை கண்டுபிடித்து விட்டனர். அண்ட சராசரத்தில் முடிவிலா பயணம் மேற்கொண்டு இருக்கும் புவியில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு விண்கலம்  அதை  படம் பிடித்து அனுப்பி இருக்கின்றது.  வந்து இருந்த படத்தில், மிகப்பெரிய சமவெளியில்  கூட்டம் கூட்டமாக மனிதர்கள் இருக்கின்றனர்.

"ஆடைகள் இன்றி இருப்பதால் , நாகரிக காலம் இன்னும் அங்கு தோன்றாமல்  நாம் ஆதியில் இருந்ததைப் போல இருக்கின்றனர் போலும் "  என்றார் ஓர் அறிவியல் ஆளர்

"இந்தக் கோளின் ஒரு பகுதியைத் தானே படம் பிடித்து இருக்கின்றது நமது விண்கலம்... மறு பகுதிக்கான படங்கள் என்று வரும் ?"  என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு

"இன்னும் ஓர் ஆண்டில் எதிர்பார்க்கின்றோம் "  பதில் சொன்னார் தலைமை அறிஞர்.

உலகமே இதைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தது . கல் தோன்றா மண்  தோன்றா  காலம் முன்னரே அங்கு சென்ற நமது தொப்புள் கோடி உறவுகளாக இருக்கும் என தமிழ் நாட்டுத் தலைவர்கள் கட்டுரைகள் எழுதினர்.  ஏக இறைவன் மனிதனைப் படைத்தான். பல இடங்களில் அவனை அமர வைத்தான் என ஆபிரகாமிய மதங்கள் புது விளக்கங்கள் கொடுத்தன.  அவர்கள் அனேகமாக இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களாக இருக்கக் கூடும். ஆடை இல்லை என்பது ஒரு முக்கியமான விஷயம் என்பதால் , ஒளிக்கூசும் ஆடைகளை விண்கலம் படம் பிடிக்க இயலவில்லை என வேத விற்பனையாளர்கள் விளக்கம் சொன்னார்கள்.  மேற்கு உலகில் ,  எவ்வளவு விரைவில் அங்கு போக முடியும் என்பதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கலாயின.

அதே நேரத்தில் மனிதர்களைக் கண்டுபிடித்த கோளின் மறுபக்கத்தில், 

பிரம்மாண்டமாய் இருந்த டைனசோர்கள்,  கற்பனையின் உச்சத்தில்   ஒரு கட்டிடம் இருந்தால் எப்படி இருக்குமோ அவ்வகையான கட்டமைப்பின் மையத்தில்,  இன்னும் இருபது வருடங்களுக்குள் ஏற்படப் போகும் உணவுப் பற்றாக்குறையை விவாதிக்கக் கூடி இருந்தன.

"மனித இனப்பெருக்கம் குறைந்து கொண்டே வருகின்றது .. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நமக்கு சத்தான மனித மாமிசம் கிடைப்பது நின்று விடும் °

விவாதம் போய்க் கொண்டிருக்கையில்  தலைமை காவல் மையத்திடம் இருந்து தகவல் வந்தது.  ஐயத்திற்கு இடமான ஒரு பொருள் ஒன்று நமது  கோளின் மேல் சுற்றிக் கொண்டு இருக்கின்றது.

"அழித்து விட வேண்டாம்,  அதன் தொடர்புகளைக் கண்காணியுங்கள்... பின் தொடருங்கள் "

அடுத்த சில மணி நேரத்தில் அடுத்த செய்தி வந்தது

"மகிழ்ச்சியான செய்தி,   அந்த சந்தேகத்திற்கு இடமான பொருள் தொடர்பு கொள்ளும் கிரகத்தில்  , நாம் உணவிற்காக வளர்க்கும் மனித விலங்குகள் ஏராளமாக இருக்கின்றன."

"அருமை... நாளையே நமது கலங்களைத் தயார் செய்யுங்கள் .. நமது எதிர்கால உணவுப் பிரச்சினை தீர்ந்தது "

கோளின் மறுபக்கப் படங்கள் புவிக்கு வரும் முன்னரே, டைனோசர்கள் பூமியில் களம் இறங்கின



Tuesday, October 15, 2013

புக்பேஸ் - சிறுகதை

"இப்படியே போனால் இன்னும் இரு வருடங்களில் இந்தியா வல்லரசு ஆகி விடும் , ஏதாவது செய்து அவர்களை பிரச்சினைக்குட்படுத்த வேண்டும் , உங்கள் யோசனைகளை சொல்லலாம்" என அமெரிக்க - ஐரோப்பிய - சீன  கூட்டு அமைப்பின் தலைவர் கூடியிருந்த உயர்மட்ட உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்

"வழமைப்போல , சாதி கலவரம்  மத கலவரங்களைத் தூண்டி விட்டு விடுவோமா " என்றாள் சீனாக்காரி

"பல வருடங்களுக்கு முன்பு அது மிகவும் எளிது , அன்று தமிழ்நாட்டில் மட்டும் பெரியாரியத்தினால் இருந்த சகிப்புத் தன்மை , இன்று  நாடு முழுவதும் இருக்கின்றது.... நாடே பெரியார் பெயரை உச்சரிப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை "  என்றான் சுவீடனின் ஆண்டர்சன்

"இந்தியாவின் மீது படை எடுக்கலாமா? "

"வேண்டாம்... அது மூன்றாம் உலகப் போரில் கொண்டு வந்து விட்டு விடும்.  நாம் விற்ற ஆயுதங்களாலேயே இன்று அவர்கள் பலமாக இருக்கின்றார்கள்  கூடங்குளம் அணு உலை கூட சிறப்பாக செயற்பட்டு கொண்டு இருக்கின்றது"

"மருத்துவ ரீதியாக, ஏதேனும் நோய்களை உருவாக்கி விடலாமா "

"மூட நம்பிக்கைகளை ஒழித்த கையோடு , போலி மருத்துவம் எல்லாம் ஒழித்து, தடுப்பூசிகள், சிறப்பான அறிவியல்  மருத்துவத்தினால் பாதுகாப்பான நம்மை விட சுகாதார  வளமான சமுதாயமாக இருக்கின்றது ..  " என்றான் ஒரு ஜெர்மானியன்.

கடைசியாக  "என்னிடம் கத்தியின்றி இரத்தமின்றி இந்தியாவில் ஒரே இரவில் பிரச்சினைகளைக் கொண்டு வர ஒரு வழி இருக்கின்றது "  என சொல்லியபடி எழுந்தான் அமெரிக்காவின் ஆரஞ்சுபிட்டர்.

ஆவல் மேலிட அவனை எல்லோரும் பார்க்க , ஆரஞ்சுபிட்டர் தொடர்ந்தான்.

"என்னுடைய புக்பேஸ் சமூக இணைய தளத்தில்  இந்தியாவிற்கு மட்டும் பயனாளர்களுக்கு தகவல் பாதுகாப்பு பாக்கியங்களை நீக்கி விடுகின்றேன் "

"புரியவில்லை " என்பது போல அனைவரும் ஒரே சேர புருவம் உயர்த்தினர்

"புக்பேஸ் இந்திய பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் சக இந்திய பயன்பாட்டாளர்களின் தனித் தகவல்கள் பரிமாற்றங்கள், தனி அரட்டை பரிமாற்றங்கள் , புகைப்படங்கள் இவற்றை எந்தவித கட்டுப்பாடு இன்றி   யார் வேண்டுமானாலும் யாருடையதை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ள முடியும்,   இந்தியர்கள் யாரும்  தகவல்களை அழிக்கவோ மாற்றவோ முடியாது , மேலும்  அவர்கள் கணக்கை முடக்கவோ தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ முடியாது.. ஒவ்வொரு இந்தியரின்  ரகசியமும் எல்லா இந்தியர்களுக்கும் சொந்தம்"

உயர் மட்ட கூட்டம் வெற்றிச் சிரிப்புடன் கலைந்தது.  அடுத்த சில நாட்களில் இந்தியா பற்றி  எரிந்தது.

Wednesday, October 02, 2013

போலிஷ் பெண்ணும் நானும் மற்றும் காந்தியும் - புனைவு அல்லது அனுபவம்

பின் வரும் சம்பவத்தை உண்மையாக எடுத்துக் கொண்டாலும் சரி புனைவாக எடுத்துக் கொண்டாலும் சரி , சொல்ல வருவது காந்தியைப் பற்றிதான். 
----
சுவீடன் கார்ல்ஸ்குரொனாவில் ( Karlskrona) இருந்து போலாந்து கிடினியா (Gdynia) விற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து உண்டு. வார நாட்களில் மிக மிக மலிவான விலையில் பயணச்சீட்டுகள் கிடைப்பது உண்டு. இன்று போல அன்றும் ஏழை மாணவன் தான். ஆக, குறைவான விலை பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு வீட்டிலேயே கட்டிக் கொண்ட கட்டு சோறு . கொஞ்சம் போலிஷ் சிலாத்தி பணம் என தனியாக கப்பல் ஏறிவிட்டேன். அம்மு பிரிந்து போன சோகக் காலக்கட்டம் அது . காதல் சோகங்களை மறக்க இரண்டு வழிமுறைகள் உண்டு., ஒன்று மதுவில் மூழ்கலாம் அல்லது பயணங்கள்... காட்டுத்தனமாக பயணம் செய்யும் பொழுது, சந்திக்கும் புது மனிதர்கள், அனுபவங்கள் மெல்ல மெல்ல மீட்டு, மனிதனை பக்குவமாக்கும். நான் தேர்ந்து எடுத்தது பயணங்களை. நான் படு சுமாரான எழுத்தாளன் என்பதால், அனுபவங்களை கதைகளாக்கி நான்கு பேர் கைத் தட்டி படிக்கும் அளவிற்கு வாசகர் கூட்டமும் சேர்த்து வைத்து இருக்கின்றேன். ஆக பயணங்கள் பலவகைகளில் பயனுள்ளதாக இருந்தன. 

கப்பலில் வழமைப் போல சூதாட்ட அறையில் கூட்டம் இருந்தது. சூதாட்டம் பிடிக்காது என்பதாலோ அல்லது சூதாட்டம் ஆடும் அளவிற்கு பணம் இருக்காது என்பதாலோ எப்பொழுதுமே , அந்த அறைகள் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. அப்படியே கப்பலை ஒரு சுற்று சுற்றிவிட்டு , வெளித்தளத்தில் கடலை வேடிக்கைப் பார்க்க ஆரம்பிக்கையில் , தடுப்புக் கம்பிகளுக்கு அருகில் இருந்த நீள் நாற்காலியில் , மென் சோகத்துடன் ஒரு பெண் வந்து அமர்ந்தாள். எப்பொழுது என் பக்கம் திரும்புவாள், புன்னகையைத் தரலாம் என காத்து இருந்தேன். அவள் என் பக்கம் திரும்பிய அடுத்த நொடி, நான் கொடுத்த சிரிப்பிற்கு , மின்னலைப் போல பதில் புன்னகை வந்து விழுந்தது. என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். இந்தியா என்றதும் பெஞ்சின் அடுத்த முனையில் இருந்து நகர்ந்துநெருங்கி வந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள். 

அவளின்  பெயரைச் சொல்லப் போவதில்லை. சொன்னால் என்னுடைய பேஸ்புக்கை நீங்கள் தோண்டி அவளைக் கண்டுபிடித்து விடுவீர்கள். அவளின் தேசம் போலாந்து , அவளின் தாத்தா பாட்டி ஜெர்மானியர்கள். கிடினியாவும் அதன் இரட்டை நகரமான கிடான்ஸ்க் (Gdansk)  நகரமும் பல காலங்கள் ஜெர்மானிய ஆதிக்கத்தில் இருந்தன. போருக்குப் பின்னர் போலாந்து வசம் வந்து விட்டது. ஜெர்மானியர்கள் அப்படியே இங்கேயே இருந்து விட்டனர். 

குளிர் எடுக்க ஆரம்பித்த்து விட்டதால், கப்பலின் வரவேற்பு தளத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். சுவீடனில் தனது காதலனுடன் வாழ்ந்து வந்ததாகவும் , தற்பொழுது பிரிந்து விட்டதால் மீண்டும் தனது நாட்டிற்கே போகின்றதாக அவள் சொன்ன பொழுது அவளின் மென் சோகம் புரிந்தது. 

தமிழ், கிரிக்கெட், இலங்கை எனது படிப்பு, எனது வாழ் சூழல் என பேச்சு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நள்ளிரவின் பொழுது, தனக்கு அன்றுதான் பிறந்த நாள் எனக் கூறினாள். கைக்குலுக்கினேன். வரியற்ற கடையில் ஏதேனும் வாங்கித் தரலாம் என்றாலும் கையில் இருந்த பணம் மிக மிகக் குறைவு. யோசிக்கையில் சட்டென அம்மு நினைவுக்கு வந்தாள். ஆம் மெட்ராசில் இருந்து கிளம்புவதற்கு முதல் நாள், சிலப் பல பத்து ரூபாய்த் தாள்களை என் கையில் திணித்து "என் நினைவாக வைத்துக் கொள், படித்து முடித்து விட்டு திரும்புகையில், என்னைப் பார்க்க வருகையில் இந்தப் பணத்தை பயன்படுத்து" என சொன்னது நினைவுக்கு வந்தது. அதை என் பணப்பையில் ஒளித்து வைத்து இருந்தேன். சட்டென அதில் இருந்த ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து, கப்பல் தோழியின் பெயரை எழுதி, பிறந்த நாள் வாழ்த்துகள் என தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் கொடுத்தேன். 

"காண்டி " எனச் சொல்லியபடி என்னை அணைத்துக் கொண்டாள். 

"உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நீ வருவதற்கு முன்னர் ஒரு நொடி கடலில் குதித்து விடலாம் எனத் தான் நினைத்தேன். உன் சக்கர நாற்காலி, இந்திய முகம் ஆகியன, முடிவை ஒத்திப் போட வைத்தது ... இப்பொழுது காந்தியின் படம் போட்ட பணத்தாள் "

நாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தேன். 

"இந்த நேர்மறை சம்பவங்கள் எல்லாம் எனக்கு ஏதோ ஒன்றை சொல்லுகின்றதோ ... ஹிட்லரின் காலத்தில் காந்தி என்றொரு ஒரு மகான் வாழ்ந்து இருக்கின்றார் என்பதை நினைக்கையிலேயே சிலிர்க்கின்றது... இந்தக் கப்பலில் வந்தமைக்கும் நன்றி ... இந்த காந்தி பணத்தாளிற்கும் நன்றி " எனச் சொல்லிவிட்டு அவளின் அறைக்கு சென்றுவிட்டாள். 

நான் எனது மலிவுவிலை நாற்காலிப் பயண அறைக்கு சென்றுவிட்டேன். அடுத்த இணைய இணைப்பு வந்தவுடன் பேஸ்புக்கில் அவளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவளின் பெயரை குறித்து வைத்துக் கொண்டேன். 

மறுநாள் அவளைப் பார்த்தேன். அப்பாடா கடலில் விழவில்லை. பேஸ்புக்கில் சேர்த்துக் கொண்டாள். சோகமாய் இருக்கும்பொழுது எல்லாம் பேசுவாள், நான் இல்லை என்றால் காந்தியைப் பற்றி ஏதாவது ஒன்றைப் படித்து விட்டு சோகத்தில் இருந்து மீண்டு கொண்டதாக சொல்லுவாள். அவள் ஸ்காட்லாண்டு சென்ற பொழுது , காந்தியின் மேல் மதிப்புக் கொண்ட ஒரு பிரிட்டிஷ் தோழனுடன் தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றாள். அவளின் பேஸ்புக் தளத்தில் , நான் அளித்த காந்தி பணத்தாளின் மின்னச்சு வடிவம் , தன்னை மீட்டு எடுத்த விஷயம் என்றத் தலைப்பில் இன்றும் இருந்து கொண்டு இருக்கின்றது.