Thursday, April 04, 2013

ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை (பகுதி 4 )


Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி


பகுதி 1 - http://vinaiooki.blogspot.it/2013/04/1.html 


---

அப்பா முன் செல்ல, அவரின் இடுப்புப் பெல்ட்டைப் பிடித்துக்கொண்டேன். வேடிக்கையான விசயம் என்னவெனில் , தனியாகப் போகும்பொழுது நான் பயப்படுவதில்லை, ஆனால் அப்பாவுடன் போகும்பொழுது அவரைப்பிடித்துக் கொள்வேன். பழக்கமாகக் கூட இருக்கலாம்.பழக்கமென்றாலும் இந்த முறை கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

எல்லொரும் இறந்துவிட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அப்பா கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்னர் ரேடியோ குரல்களைக் கேட்டார், சிலக் கடைசி மனிதர்கள் இறப்பதையும் பார்த்து இருக்கின்றார். அவர்கள் எங்களைப்போல கொடுத்து வைத்தவர்கள் அல்ல, நாங்கள் மிகவும் பாதுகாப்பான சூழலில் இருக்கின்றோம். ஆக, ஒருவேளை ஏதேனும் ஒன்று தட்டுப்பட்டால், அது நிச்சயம் மனிதர்களாகவோ நட்பாகவோ இருக்க முடியாது.

மேலும், எப்பொழுதும் இரவு என்ற உணர்வு, அதுவும் குளிர் இரவு... இரவின் பய உணர்வு அந்தப் பழைய நாட்களில் கூட இருந்ததாக அப்பா சொல்வார். ஆனால் விடியலில் சூரியன் வருகையில், அந்த உணர்வு அடித்துச் செல்லப்படும். நான் அப்பாவின் வார்த்தைகளைக் கேட்டுத்தான் ஆக வேண்டும், எனக்குத் தெரிந்தவரை சூரியன் என்பது மிகப்பெரும் நட்சத்திரத்தை விட பிரம்மாண்டமான ஒன்று.

கவனியுங்கள், அந்த கருப்பு நட்சத்திரம், பூமியை சூரியனிடம் இருந்து பிரித்து எடுத்தபொழுது நான் பிறக்கவே இல்லை. கருப்பு நட்சத்திரம் இப்பொழுது பூமியை புளுட்டோவின் சுற்றுப்பாதையையும் தாண்டி இழுத்து சென்று கொண்டிருக்கின்றது.... ஒவ்வொரு நொடியும் விலகி தூரப்போய்க் கொண்டிருக்கின்றோம் என்பார் அப்பா.

ஒருவேளை அந்த கருப்பு விண்மீனிற்கு இங்கிருந்து ஏதோ ஒன்று தேவைப்பட்டிருக்குமோ , அப்படி இருந்தால் எதற்காக அது பூமியைப் பிடித்தது என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி எழும்.

தாழ்வாரத்தின் கடைசிக்கு வந்து, உப்பரிகைக்கு வந்து சேர்ந்தோம்.

பழங்காலத்தில், இந்த நகரம் எப்படி இருந்தது என எனக்குத் தெரியாது, ஆனால் இப்பொழுது அழகாக இருக்கின்றது. விண்மீன் வெளிச்சத்தினால் அந்த அழகைப் பார்க்க முடிகிறது. அந்த கரிய வானத்தில் புள்ளி புள்ளியாய் விண்மீன்கள் ஒளியைத் தந்து கொண்டிருந்தன. முன்பெல்லாம் நட்சத்திரங்கள் மின்னியதாக அப்பா சொல்லுவார், அப்பொழுதெல்லாம் வளிமண்டலம் உறையாத காற்றாக இருந்ததனால் மின்னுவது தெரியுமாம். எங்கள் இருப்பிடம் ஒரு குன்றின் மேல் இருக்கின்றது. ஜொலிக்கும் குன்றின் சாய்மானம், அப்படியே தூரம் தள்ளி தட்டையாக சமதளமாக இருந்தது. தூரத்தில் தெரியும் பள்ளங்கள் ஒரு காலத்தில் தெருக்களாக இருந்தனவாம். பிசையப்பட்ட உருளைக்கிழங்கு மாவில் இதைப்போல செய்து விளையாடுவேன்.

சில உயரமான கட்டிடங்கள், சிறகுக்கூட்டம் போல காட்சியளிக்கும் தரையில் இருந்து வட்ட வடிவ உறைந்த காற்றின் படிகங்களில் தலையில் கொண்டபடி. உயர்ந்து நிற்கின்றன, அம்மாவின் வெள்ளைக் குளிர்த் தொப்பியும் இப்படித்தான் இருக்கும்.  அந்தக் கட்டிடங்களில் கருப்பு சதுரங்கள், சன்னல்களாக , காற்றுப்படிகங்களால் அடிகோடு இடப்பட்ட்டிருக்கும். சிலக் கட்டிடங்கள் சாய்ந்தபடி இருக்கும். கருப்பு நட்சத்திரம் பூமியை ஆட்கொண்டபொழுது, ஏற்பட்ட நில அதிர்வுகளால் ஏனைய கட்டிடங்கள் திருகலாக மாறிப்போயின. அங்கொன்றும் இங்கொன்றுமாக பனிக்கூரிகள் தொங்கிக் கொண்டிருந்தன. குளிர் ஆரம்பித்த ஆரம்பக் காலங்களில் அவை உறைய ஆரம்பித்த நீர், சிலவை உறைந்த காற்றினால் ஆனவை. நட்சத்திர வெளிச்சம் இந்தப் பனிக்கூரிகளில் பட்டு பிரதிபலிப்பது, வெளிச்ச நட்சத்திரம் ஒன்று பூமிக்கு வந்து இறங்கியதைப்போல இருக்கும். இதைத்தான் நான் பார்த்திருக்கலாம் என அப்பா நினைத்து இருந்தார். நானும் பனிக்கூரி வெளிச்சம் என்றுதான் நினைத்தேன், ஆனால் இந்தப் பனிக்கூரி பிரதிபலிப்பு இல்லை என்று உறுதியாகத் தெரிந்தபின்புதான் வேறு ஏதோ ஒன்றைப் பார்த்து இருப்பதாக முடிவு செய்தேன்.

எளிதாகப் பேசுவதற்காக என் தலைக்கவசத்தைத் தொட்டபடி, எந்த சன்னல் எனக் கேட்டார்.  இப்பொழுது எந்த வெளிச்சமும் நகரவில்லை. எங்கேயும் இல்லை.
என் எதிர்பார்ப்பிற்கு மாறாக அப்பா என்னைத் திட்டவில்லை. மௌனமாக சுற்றும் புறமும் பார்த்தார். வாளியில் ஆக்சிஜனை நிரப்பிக்கொண்டார். கூட்டிற்கு திரும்பும் முன்னர், முன்பு காவலாளிகள் தங்கள் இருப்பை உணர்த்துவதற்காக சத்தம் எழுப்புவதைப்போல, சிலத்தட்டுகள் தட்டிச்சென்றார்.

என்னால் உணர முடிகின்றது. முன்பு இருந்த அமைதி இந்தப்பகுதியில் இப்பொழுது இல்லை. ஏதோ ஒன்று ஒளிந்து இருக்கின்றது, கவனிக்கிறது, காத்திருக்கிறது... தயாராகிக் கொண்டிருக்கிறது.


தலைக்கவசத்தைத் தொட்டபடி,

 “நீ பார்த்ததைத் திரும்பப் பார்த்தால் மற்றவர்களிடம் சொல்லாதே, உன் அம்மா உடல்நிலைப்பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது உனக்குத் தெரியும், அவருக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுப்பது நமது கடமை... உன் தங்கை பிறந்த பொழுது, ஒரு கட்டத்தில் விரக்தியானது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு செத்துப் போய்விடலாம் எனபது போல இருந்தது, அந்த சமயங்களில் உன் அம்மாதான் உத்வேகமாக இந்தப் போராட்டத்தைத் தொடரவேண்டும் என சொன்னார், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பொழுது, ஒரு வாரம் முழுவதும் நெருப்பைக் கவனித்துக் கொண்டார், என்னையும் உன்னையும் தங்கையையும் கவனிக்கும் பொறுப்புடன்”

 அப்பா மேலும் தொடர்ந்தார்,

“நானும் உன் அம்மாவும்  அப்பொழுது  சிறு விளையாட்டு விளையாடுவோம், பந்தை மாறி மாறித் தூக்கிப்போட்டுப்பிடித்தல். துணிவு என்பது இந்தப் பந்தைப்போலத்தான், பந்தை கையில் வைத்திருக்க முடியும் நேரம் வரை வைத்திருக்கலாம், முடியாத பட்சத்தில், அடுத்தவரிடம் தரவேண்டும், தன்னிடம் பந்து வரும்பொழுது, கச்சிதமாக இறுக்கமாகப் பற்றிக்கொள்ளவேண்டும், அடுத்தவரிடம் கொடுக்கும் நேரத்தில் யாரேனும் ஒருவர் அதை வாங்கிக் கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும், இல்லாவிடின் தொடர்ந்து துணிவாக இருத்தல் களைப்பைக் கொடுத்து விடும்”

அப்பா பேசியது, என்னை வளர்ந்த நல்ல பிள்ளையாக உணர வைத்தது. ஆனாலும், நான் பார்த்ததை அப்பா விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் தன் கவனத்தில் வைத்துக் கொண்டது என் மனதை விட்டு அகலவில்லை.

தொடரும் --- > http://vinaiooki.blogspot.it/2013/04/5.html