Wednesday, April 03, 2013

ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை (பகுதி 3 )

Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி

முந்தையப் பகுதிகள் - http://vinaiooki.blogspot.it/2013/04/2.html
-----


பார்த்தவற்றை சொல்லிவிட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்தேன். கவசத்தில் இருந்து வெளியே வந்தவுடன், ஒட்டு மொத்தத்தையும் பார்த்த அனைத்தையும் வார்த்தைகளாகக் கொட்டினேன். உடனடியாக அம்மா படபடப்பாகி, கைகளைப் பிசைந்து கொண்டே, போர்வைகளின் இடுக்கினுள் வெளியேப் பார்க்க ஆரம்பித்தார். அம்மாவின் கைகளில் மூன்று விரல்கள் கிடையாது. குளிரில் அவை உறைந்துப் போய் எடுக்க வேண்டியதாகிவிட்டது. அம்மாவை பயப்பட வைத்ததனால் அப்பா கோபமாக இருந்தாலும், எல்லாவற்றையும் விளக்கமாக கேட்க விரும்பினார். அவரின் பார்வையில் நான் ஏமாற்றவில்லை என அவர் நம்புவது தெரிந்தது. 

நான் விவரணையை முடித்ததும், 

”சிறிது நாட்களாகவே இந்த வெளிச்சத்தைப் பார்க்கின்றாயா?" அப்பா கேட்டார். 

அந்த வெளிச்சத்துடன், ஓர் இளம்பெண்ணையும் பார்த்தேன் என்ற விசயத்தை சொல்லவில்லை. என்னமோ தெரியவில்லை அதைச் சொல்ல வெட்கமாக இருந்தது. 

“ஐந்து சன்னல்களைக் கடந்து, அடுத்தத் தளத்திற்குப் போகும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்”

“உரசலினால் வந்த மின்சாரப்பொறியா, மிதக்கும் திரவமா,,, துகள்களில் பட்டுப் பிரதிபலிக்கும் விண்மீனின் வெளிச்சமா.. இந்த மாதிரியான வெளிச்சத்தையா பார்த்தாய்”

அப்பா கற்பனையாக இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்கவில்லை. 
குளிருக்கே குளிரடிக்கும் வகையில் உறைந்துப் போய் இருக்கும் பூமியில் ஒத்திசைவற்ற நிகழ்வுகள் நடப்பது ஒன்றும் புதிதல்ல. பருப்பொருள் உறைந்து இறந்துப் போய்விட்டது என நினைக்கையில்
அது வேறுவடிவம் எடுக்கும். மெலிதான ஒன்று, ஒரு நாள் எங்களது கூட்டை நோக்கி வந்தது. குளிரில் , வெப்பத்தைத் தேடும் விலங்கைப்போல.. அது வேறு ஒன்றுமல்ல, திரவ ஹீலியம். நான் சிறுபிள்ளையாக இருக்கையில், ஒரு நாள் மின்னல் அடித்தது, அப்பாவால் அது எங்கிருந்து வந்து இருக்கும் எனக் கண்டறிய முடியவில்லை.. அருகில் இருந்த கோபுரத்தை அடிப்பகுதி வரை ஒட்டு மொத்தமாக தாக்கிய மின்னலின் வெளிச்சம் அடங்க பல வாரங்கள் ஆகின. 

“இதுவரை அது மாதிரியான ஒன்றை நான் பார்த்தது இல்லை”

முகச்சுளிப்புடன் என்னைப் பார்த்தபடி நின்றார். பின்பு

“சரி நான் உன்னுடன் வருகின்றேன், நீ பார்த்ததை எனக்குக் காட்டு” என்றார். 

அம்மா தன்னை தனியாக விட்டுப்போவதற்காக  அலறினார், கூடவே தங்கையும் சேர்ந்து கொண்டாள். அப்பா அவர்களை சமாதானப்படுத்தினார். வெளியே செல்வதற்கான உடைகளை அணிந்து கொண்டோம். என்னுடைய ஆடை அதற்கு முன் நெருப்பில் கதகதப்பில் வைக்கப்பட்டிருந்தது. அவை பிளாஸ்டிக்கில் ஆன, தலைப்பகுதிகளை கொண்டது. பழையப் பெரிய உணவு டப்பாக்களால் உருவாக்கப்பட்டவை அவை. இருந்தாலும் அவை கதகதப்பையும் காற்றையும் பிடித்து வைத்துக் கொள்ளும். அவை தண்ணீர் , கரி ,உணவு ஆகியனவற்றை எடுக்க வெளியேப்போய் வருவதற்குப் போதுமானதாக இருந்தது. 

“அங்கு ஏதோ இருக்கின்றது என எனக்கு முன்பே தெரியும், நம்மை பிடித்துக் கொள்வதற்காக காத்திருக்கின்றது, பலவருடங்களாக காத்திருக்கின்றது” என அம்மா முனக ஆரம்பித்தார். 

”அந்தக் குளிர், இந்தக் கூட்டையும், கூட்டின் வெப்பத்தையும் துவம்சமாக்க விரும்புகின்றது, நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தது, இன்று பின் தொடர ஆரம்பித்துவிட்டது, உங்களைப் பிடித்துக் கொண்ட பின்பு, பின்பு எனக்காக இங்கு வரும், போகாதே ஹாரி” முனகலைத் தொடர்ந்தார் அம்மா. 

தலைக்கவசத்தைத் தவிர அப்பா அனைத்தையும் அணிந்து கொண்டார். நெருப்பு அடுப்பின் முன்பு முழங்காலிட்டு, நீண்ட இரும்புக் கம்பியை எடுத்து புகைப்போக்கியின் உள்ளே விட்டு, பனித்துகள்களைத் தட்டிவிட்டார். வாரம் ஒருமுறை நாங்கள் மாடிக்குச் சென்று ஒரு முறை சரிபார்ப்போம். மிக மோசமான வெளிப்பயணம் என்றால் அதுதான். அப்பா என்னைத் தனியாக செய்யவிடமாட்டார். 

“நெருப்பைக் கவனித்துக்கொள், காற்றுப்ப்போக்கையும் பார்த்துக்கொள், போதிய அளவு இல்லை என்றாலோ, சரியாக கொதிக்கவில்லை என்றாலோ, வாளியில் இருந்து எடுத்துக்கொள், வெறுங்கையினால் எடுக்காதே, துணியை வைத்து எடு~ என தங்கையிடம் அறிவுறுத்தப்பட்டது. 

தங்கை, பயந்துப்போய் இருந்த அம்மாவை விட்டு நகர்ந்து, சொன்ன வேலையை செய்ய ஆரம்பித்தாள். அம்மா அமைதியானாலும்,  அவரின் கண்கள் தீர்க்கமாக அப்பா தலைக்கவசத்தைப் பொருத்துவதையும், நாங்கள் வெளியே போவதையும் பார்த்துக்கொண்டிருந்தன. 

தொடரும் --- > http://vinaiooki.blogspot.it/2013/04/4.html