ரோமில் இருந்து வியன்னா வரை - பயணக்கட்டுரை
கற்றார்க்கு சென்றவிடமெல்லாம் சோறு, எனக்கு சோறு கண்ட இடமே சொர்க்க லோகம் என்பதால், சென்கென் விசாவுக்கு உட்பட்ட நாடுகளில் யார் கூப்பிட்டாலும், நான்கு ஆடைகளை மூட்டைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவது வழக்கம். ரையான் ஏர் என்ற விமான சேவை, சில சமயங்களில் ஒரு பைசா இரண்டு பைசாவுக்கு எல்லாம் தள்ளுபடியிலோ, வியாபார முன்னெடுப்பிற்காகவோ கொடுப்பார்கள். உறுமீன் வரக் காத்திருக்கும் கொக்காய் அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டால், புரவலர்களின் ஆசியுடன் விடுமுறைகளை இனிதே கழித்துவிடலாம். இப்படியான வகையில் நான் திட்டமிட்ட ரோம் - பிராட்டிஸ்லாவா வழியாக வியன்னா பயணத்தில் நான் பெற்ற அனுபவங்களை இங்கே எழுதத் தோன்றியது.
பிப்ரவரி முதல் வாரத்தில் எனது பேராசிரியர் ஊரில் இல்லை, சரி திங்கள் செவ்வாய் இரண்டையும் சேர்த்து நான்கு நாட்களுக்கு வியன்னாவில் பொழுதைப்போக்கலாம் என முன்பதிவு செய்த நேரம், ரோம் நகரத்தில் பனிப்பொழிவு வரும் என வானிலை முன்னெச்சரிக்கை விடப்பட்டது. நாங்க எல்லாம் அந்தக் காலத்துல ஸ்வீடனில் பனிச்சறுக்கு விளையாடுறவனுங்க, என்னவோ அண்டார்டிகாவில் பிறந்து வளர்ந்த அளவிற்கு பந்தாவாக பேஸ்புக்கில் நிலைத்தகவல் எல்லாம் வைத்து ரோமில் ஆரம்பித்திருந்த பனிப்பொழிவை குறைவாக எடை போட்டுவிட்டேன். வெள்ளியன்று இரவு கொட்டிய பனியில் ரோம் நகரமே ஸ்தம்பித்துப்போனது. எந்த விசயத்தை மிக அலட்சியமாக நினைக்கின்றோமோ அதுவே பூதகரமாக வெளிப்படும்.
பிப்ரவரி 4, சனிக்கிழமை 12 மணிக்கு ரோமில் இருந்து ஸ்லோவாக்கியா நாட்டின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிற்கு விமானம். பின் பிராட்டிஸ்லாவாவில் இருந்து வியன்னாவிற்கு முக்கால் மணி நேரப் பேருந்து, இப்படியான திட்டமிடலுக்குப்பின்னர், எல்லாம் தயாராகி காலை ஆறு மணிக்கு வெளியே வந்தால் பனிக் கொட்டிக்கொண்டிருந்தது.ரோமில் 86 ஆம் வருடத்திற்குப்பின்னர் இந்த அளவிற்கு பனிக்கொட்டுவது இதுவே முதன்முறை. சாலைகளில் பனியை அப்புறப்படுத்தும் வேலைகளை எப்படி செய்வது என்பதை மறந்தே போய் இருப்பார்கள்.
பனி விழும் மலர்வனம் எல்லாக் காலங்களிலும் சுவாரசியமாக இருப்பதில்லை. பேருந்துகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. வாடகை வண்டிகள் ஒருத்தரும் பனியின் காரணமாக வரவில்லை. என்னுடைய இந்தி பேசும் நண்பர்கள், பயணத்தைக் கைவிடுவதுதான் நல்லது, உன்னை சிரமப்படுத்திக் கொள்ளாதே என அறிவுரை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கடைசி வரை முயற்சிக்காமல் கைவிடுவது எனது பழக்கமல்ல, ஆகையினால் எப்படி விமான நிலையத்தை அடையலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்பொழுதே, எனது மாணவர் விடுதியின் பொறுப்பாளர் தானே கொண்டு வந்து விமான நிலையத்தில் விடுவதாக சொன்னார்.
எங்கு எல்லாம் நான் சிக்கலில் இருக்கின்றேனோ அங்கு எல்லாம் யாராவது ஒருவர் கிருஷ்ணராக வருவார். என் வாழ்க்கையில் வந்த கிருஷ்ணர்களின் எண்ணிக்கை, கோபிகையர்களுக்கு காட்சியளித்த கிருஷ்ணர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.
பனிக்கூழில் சிக்கிய பல கார்களை அப்படியே சாலையின் ஓரத்தில் கைவிட்டபடி மக்கள் நடக்கத் தொடங்கி இருந்தனர். அவற்றை எல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி விமான
நிலையத்தை அடைந்தால் அங்கு ஏகப்பட்ட கூச்சல்களும் குழப்பங்களும்., ஸ்பானிய, இத்தாலிய, குரோஷிய , இன்னும் பல ரோமானிய ஜெர்மானிய குடும்ப மொழிகளில் சாபங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். காலையில் முதலில் புறப்பட வேண்டிய எந்த விமானங்களும் புறப்படவில்லை என்பது புரிந்தது. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், என்னதான் நடக்கிறது எனப் பார்த்துவிடுவோமே என ரையான் ஏர் செக் இன் நுழைவாயில் முன் காத்திருக்க ஆரம்பித்தேன். மக்களின் முகத்தில் கலவரரேகை விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்பதை காட்டிக்கொண்டே இருந்தன.
கடும்பனியினால் பணியாளர்கள் வராததால் விமான நிலைய உணவரங்கங்களும் மூடிக்கிடந்தன. காத்திருத்தல் இரண்டு வகை, நடந்து விடும் என காத்திருத்தல் ஒரு வகை, ம்ற்றவகையான நடக்குமா நடக்காத என்றவகையில் காத்திருத்தல் கொஞ்சம் தன்னிரக்கத்தைக் கொடுக்கும். மூட்டை முடிச்சுகளுடன், குழந்தைகளுடன் ஏகப்பட்ட பயணிகள், ஒவ்வொருவரும் எப்படியாவது வீடு போய் சேர வேண்டும் என்ற உந்துதலில். வினாடிகள் , நிமிடங்களாகி, நிமிடங்கள் வேகவேகமாக கரைய, விமானங்கள் புறப்படுவதற்கான அறிகுறிகளோ, பயணச்சீட்டு பரிசோதனைக்கான ஆட்களோ தென்படவில்லை. ஒரு வழியாக நான்கு மணி நேர காத்திருப்பிற்குப்பின்னர், பயணச்சீட்டு பரிசோதனை
ஆட்கள் வர, மக்கள் முகத்தில் கொஞ்சம் உற்சாகம்.
பாதுகாப்பு பரிசோதனைகளை முடித்துவிட்டு, விமானத்திற்காகக் காத்திருக்கையில்,. அதிர்ச்சியாக , பிராட்டிஸ்லாவா செல்லும் விமானம் ரத்து செய்யப்படுகின்றது என்ற அறிவிப்பு. நான் செல்ல வேண்டிய விமானத்துடன் நெதர்லாந்து நகரம் ஒன்றிற்கு, ஸ்பானிய நகரம் ஒன்றிற்கு செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. ஏனைய விமானங்கள் எப்பொழுது புறப்படும் என்பதும் சொல்லப்படவில்லை.
நான் ரசித்துக்கொண்டிருந்த ஒரு பெண் உடைந்து அழ ஆரம்பித்தாள், இயலாமை, அங்கும் இங்கு ஓடிக்கொண்டிருந்த தன் குழந்தையை அடித்ததன் வழியாக ஓர் இளம் அம்மாவிற்கு
வெளிப்பட்டது. ரையான் ஏர் வகையிலான மலிவு விலை விமான சேவைகளில் பிரச்சினை என்னவென்றால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டால், ஒன்று காசைத் திரும்பக்
கொடுப்பார்கள் அல்லது வேறு நாட்களில் விமான சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவுதான், குடிக்கத் தண்ணீர் கூடக் கொடுக்க மாட்டார்கள். தன்னிரக்கமும்
இயலாமையும் ஓர் உச்சத்தை அடையும்பொழுது, பெரும் ஆத்திரமாகவும் போராட்டமாகவும் வெளிப்படும். கிட்டத்தட்ட 1000 நபர்கள் ஒன்று கூடி பாதுகாப்பு பரிசோதனை வளையத்தைச்
சுற்றி, சிலர் தடுப்பு வளையங்களின் மேல் ஏறி நின்று, அங்கிருந்த அறிவிப்பு தொலைக்காட்சிகளைத் தட்டியபடி தங்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். வன்முறை ஏதும் வெடிக்கவில்லை, வன்முறைக்குச் சற்று முந்தையத் தருணம் அது. போராட்டத் தத்துவங்கள் மேல் மிகுந்த நம்பிக்கை இருந்த போதும், நேரிடையாக எங்குமே நான் பங்கேற்றதுமில்லை, அருகில் இருந்து பார்த்ததுமில்லை. நானும் என் பங்கிற்கு Ryan Air down down Ryan Air Cheat Cheat என்று சில நிமிடங்கள் கத்திவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தேன்.
பயணத்தைக் கைவிட்டு வீடு திரும்ப மனமில்லை, தினமும் வியன்னாவிற்கு நேரிடை ரயில் ஒன்று போவது நினைவுக்கு வந்தது. மதியம் இரண்டரை அளவில் சாலைகள் ஓரளவிற்கு சுத்தம் செய்யப்பட ஆரம்பிக்க, ரோம் மத்திய ரயில் நிலையத்திற்கு சாம்பினோ விமானநிலையத்தில் இருந்து பேருந்துகள் ஓடத்தொடங்கின. அவற்றில் ஒன்றைப்பிடித்து ரோம் ரயில் நிலையம் வந்து, சேர்ந்தால் நீண்ட வரிசை, பயணச்சீட்டுகள் வாங்குவதற்கு..... நாற்காலிகளுக்கு என்றுமே மதிப்பு உண்டு, அதுவும் சக்கரநாற்காலிக்கு ஐரோப்பாவிற்கு சிறப்பு சலுகைகள்... பயணச்சீட்டை வாங்கிவிட்டு, ரயில் ஏற இறங்க உதவித் தரும் அலுவலகத்திலும் (Sala Blu) பதிவு செய்துவிட்டு
“அப்பாடா ஒரு வழியாக இயற்கையை வென்றுவிட்டோம்” என்ற நினைப்பில் மேலும் சில மணி நேரங்கள் ரயிலுக்காகக் காத்திருக்க, அந்த அலுவலகத்தில் உதவி செய்யவரும் நபர்,
நேற்றைய ரயில் ஃபுளோரன்ஸ் (Firenze - Florence) நகரத்திலேயே நின்றுவிட்டதால், ஒரு ரயில் மாறி, ஃபுளோரன்ஸ் வரைச் சென்று பின் வியன்னா ரயிலைப்பிடிக்கவேண்டும் எனக் கூறினார். ஏற்கனவே இருந்த களைப்பில் இது கடுப்பு ஏற்றினாலும், ஃபுளோரன்சிலும் என்னை ஏற்றி இறக்க சாலா ப்ளூ மக்கள் உதவி செய்வார்கள் என்பதால் இன்னும் ஒரேயொரு தடங்கல் தானே என மனதைத் தேற்றிக்கொண்டேன்.
ஈரோஸ்டார் அதிவிரைவு ரயில் மணிக்கு 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றரை மணி நேரத்தில் ஃபுளோரன்ஸில் என்னை இறக்கிவிட்டது. இரவு ஒன்பதரை மணியளவில் வியன்னாவிற்கான ரயிலிலும் ஏறியாகிவிட்டது. வெனீஸ் வழியாக, ஆல்ப்ஸ் மலைத் தொடரைக் கடந்து இந்த ரயில் பயணப்படும். இரவில் பயணப்படுவதால் இருட்டில் அவ்வளவாக ஆல்ப்ஸ் மலைகளைப் பார்க்க முடியாது, போன முறை பேருந்தில் வியன்னாவில் இருந்து ரோம் வந்த பொழுது, இருட்டில் கண்களை
இடுக்கிக் கொண்டு பார்த்ததில் ஒற்றைத் தலைவலிதான் மிச்சம்.
இனி கொஞ்சம் கண்ணசந்தால் , காலையில் வியன்னா , அடுத்த மூன்று நாட்களுக்குக் கொண்டாட்டம்தான் என நினைத்த அடுத்த அரை மணி நேரத்தில், ரயில் திடுமென ஒரு குகைப்பாதையில் நின்றது. இதோ கிளம்பிவிடும் அதோ கிளம்பிவிடும் என நினைத்து அரைத்தூக்கம் தூங்கினாலும் ரயில் நகர்ந்தபாடில்லை. என்னவென்று விசாரித்ததில், ரயில் எஞ்சினில் கோளாறாம், சரி செய்து கொண்டிருக்கிறார்கள் எனச் சொன்னார்கள்.
நினைத்துப் பாருங்கள் அதிவேக விரைவு ரயில்கள் செல்லும்பாதையில் , அதுவும் நீண்ட குகையில் ரயில் திடிரென நின்றுவிட்டால், எனது பெட்டிதான் தொடர்வண்டியின் கடைசிப்பெட்டி. கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது.கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் கழித்து ரயில் மெல்ல நகர, மிதமான வேகத்தில் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பிடித்தன அந்தக் குகைப்பாதை முழுவதும் கடப்பதற்கு. இனி 10 மணி நேரங்கள் கொஞ்சம் தாமதத்துடன் வியன்னா போய்விடலாம் என ஆசுவாசப்படுத்திக்கொண்டபொழுது, திடிரென குளிர் அதிகமாக ஆரம்பித்தது. வெப்பசாதனம் வேலை செய்யவில்லை. வெளியே உறைநிலைக்குக் கீழே 10 டிகிரி இருக்கும், வண்டியினுள் எப்படியும் - 5 டிகிரியாவது இருக்கக்கூடும். பையில் வைத்திருந்த அனைத்து சட்டைகளையும் எடுத்து மாட்டிக்கொண்டு நடுங்கியபடியேத் தூங்கிப்போனேன்.
விடியலில் ஆஸ்திரிய - இத்தாலிய எல்லையில் ரயில் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் மாற புதிதாக வந்தவர், பெட்டியில் வெப்பசாதனம் வேலை செய்யவில்லை என என்னை வேறு ஒரு
பெட்டிக்கு மாற்றினார். அங்கு கிடைத்த காப்பி இரவு பட்ட அவதியை கொஞ்சம் தணித்தது. மூன்று மணி நேரத்தில் மூன்று ஐரோப்பியத் தலைநகரங்கள் என நிலைச்செய்தி வைக்கலாம்
என்றிருந்த எனக்கு கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க வெவ்வேறு வகையிலான அனுபவங்களையும் கற்றல்களையும் கொடுத்த இயற்கை இன்னும் ஏதோ ஒன்றை எனக்காக
வைத்திருக்கின்றது என்று மட்டும் பட்டது., அது நிச்சயமாக மகிழ்ச்சியான ஒன்றாகத்தான் இருக்கக் கூடும் என்று இருந்த பொழுது, Klagenfurt என்ற ஆல்ப்ஸ் மலை நகரத்தில்
வயதான ஆஸ்திரிய நபர் ஏறினார்.
கிட்டத்தட்ட 70 வயது இருக்கும், மெல்ல நான் பேச்சுக்கொடுக்க, மிடுக்கான அந்தக்கால ஆங்கிலத்தில் அவர் பேச ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப்பின்னர் ஆங்கிலத்தில் பேசுகிறாராம். தமிழ் மொழி, தமிழர்கள் என நான் ஆர்வமாகப் பேச ஆரம்பித்து இருந்த பொழுது, அருகில் இருந்த சக்கர நாற்காலியைப் பார்த்துவிட்டு
“போரில் ஈடுபட்டதனால் சக்கரநாற்காலி பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டதா “ எனக்கேட்டார். “அப்படியான பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை” என்று சொல்லிவிட்டு பேச்சு தொழில்நுட்பம் நோக்கி மாறியது., கிட்டத்தட்ட 40 வருடங்கள் கணினித் துறையில் பொறியியளாராக இருந்த அவர், கடைசி 10 வருடங்களாக கணினி , அது சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு முழுக்குப்போட்டுவிட்டு நண்பர்கள், உறவுகள், வாசிப்புகள் என முன்பு இழந்த விசயங்களை மீட்டு எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறாராம். நான் தனியாகப் பயணப்படுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அவருக்கு என்னுடைய பதில்.
”ஐரோப்பவைப் பொறுத்தமட்டில், சக்கரநாற்காலியுடன் பயணம் செய்யும்பொழுது, தனியாக இருந்தால் பேருந்து ஓட்டுனர், மெட்ரோ ரயில் பயணிகள், விமான நிலைய அதிகாரிகள் என ஓர் ஊரே உதவி செய்யும், அதுவே கூடத் துணையுடன் இருந்தால் ஒருவரும் கண்டுகொள்ள மாட்டார்கள். துணையாக இருப்பவர் கவனித்துக்கொள்வார் என சக பயணிகள் ஒதுங்கியே இருப்பார்கள். துணையின்றி தனியாக சக்கர நாற்காலியில் பயணம் செய்தால் ராஜமரியாதைதான்..... “
கோபால் நிரல்கள், கப்பாபிளாங்கா செஸ், ஆஸ்திரிய ஹங்கேரியப் பேரரசின் வீழ்ச்சி, கிரிக்கெட் என பலத்தரப்பட்ட விசயங்களில் பேச்சுத் தொடர்ந்தது. அடுத்த மூன்றரை மணி நேரங்களில் பேச்சின் சுவாரசியத்தோடு , ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அழகை பகல் சூரிய வெளிச்சத்தில் ரசிப்பதையும் தவறவிடவில்லை. பனியில் பிரதிபலித்த ஒளி, முந்தைய நாள் பட்ட அனைத்து கஷ்டங்களையும் அழகாக துடைத்து எடுத்தது. ஒவ்வொரு தடங்கல்களும், அதனை சமன் செய்யும் மறைமுகமான மகிழ்ச்சியையும் கொண்டுள்ளது என்பதை மற்றும் ஒரு முறை அனுபவத்தின் வழியினால கற்றல், ரயில் வியன்னா வந்தடைய , பெரியவ்ருடன் விடைபெற்று இனிதே முடிவடைந்தது.