Sunday, May 15, 2011

பின் தொடரும் பேய் - சிறுகதை

நள்ளிரவைக்கடந்தும் மடிக்கணினியில் இணையத்தை மேய்ந்து கொண்டிருந்ததனால் கண்களுக்கு ஏற்பட்ட இறுக்கத்தைக் குறைக்க நிமிர்ந்து வரவேற்பறையைப் பார்க்கையில் பகீர் என்றது. அங்கு ஒருவன் உட்கார்ந்து இருந்தான், என்னையே உற்றுப்பார்த்துக் கொண்டு ... பொன்னிறத்தில் தலைமுடி, ஸ்காண்டிநேவிய நிறம், உட்கார்ந்திருக்கும்பொழுதே உயரமாகத் தெரிந்தான்.


சன்னல்களையும் கதவையும் தாழிட்டுத்தானே வந்தேன், என்ற யோசனையில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,

“ஹூ ஆர் யூ ... வெம் எர் டு” என ஆங்கிலத்திலும் சுவிடிஷிலும் மாறிக்கேட்டுக்கொண்டு அவனருகே நெருங்கினேன்.

அவனை நெருங்க நெருங்க அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியுடன் அப்படியே பின்னோக்கிப்போனான். வேகமாக நகர நகர அவனும் பின்னோடிப்போய் சுவற்றில் மறைந்துப்போனான். இல்லை இல்லை போனது, இது பேய் ... திரும்ப என் அறைக்கு வர, உருவமும் சுவற்றைக் கிழித்துக்கொண்டு அதே தூர இடைவெளியுடன் மீண்டும் வந்தது.

நான் வேகமாக ஓடி கதவைத் திறந்து கொண்டு வெளியே வர, உருவமும் என்னைப் பின் தொடர்ந்தது. நான் நின்றால் அதுவும் நின்றது. நான் அதை நோக்கிப்போனால் அது என்னைவிட்டு நகர ஆரம்பித்தது. பாதகமான பேய் இருக்கும் எனப் பார்த்தால் விளையாட்டு காண்பிக்கிறதே !!

சரி என்ன ஆனாலும் ஆகட்டும் என மீண்டும் வீட்டிற்கே வந்தேன். படுக்கை அறையினுள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டேன். அந்த உருவம் நல்ல வேளை உள்ளே வரவில்லை. பயம் தூக்கத்தை விரட்டினாலும், அசதி இரட்டிப்பான தூக்கத்தைக் கொண்டு வந்தது.

மறுநாள் காலை படுக்கை அறையின் கதவைத் திறக்க அதே இடத்தில் அந்த உருவம் இருந்தது. நள்ளிரவிலேயே பேயைச் சமாளித்தாகிவிட்டது. பகலிலா தொந்தரவு செய்யப்போகின்றது, என சிரித்து வைத்தேன். பேயும் சிரித்தது. கண்டிப்பாக பிரமை இல்லை.

”பேர் என்ன, ஊர் என்ன என்ன வேண்டும்” ம்ஹூம் எந்த கேள்விக்கும் பதில் இல்லை. நான்கு பிரெட் துண்டுகள், கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே கிளம்பியதும் கதவைக் கிழித்துக்கொண்டு அந்தப் பேய் என்னைப்பின் தொடர்ந்தது.

பேருந்து, பின்னர் ரயில் என பயணச்சீட்டு இல்லாமல் அதுவும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருந்தது. இது சிரிப்புப் பேயாக இருக்கும் என கொஞ்ச நஞ்சம் இருந்த பயமும் போனது.

அலுவலகத்தில் எனக்கு 20 அடிகள் தள்ளி நின்று கொண்டே இருந்தது. அலுவலக நண்பனிடம் , பேய் இருந்த இடத்தைச் சுட்டி அங்கு யாரேனும் நிற்கிறார்களா எனப்பாரேன் எனக்கேட்டேன். அவன் என்னை ஒரு தினுசாக “லூஸாப்பா நீ” என்ற வகையில் முறைத்துவிட்டுப்போனான்.

வீட்டிற்கு பேயுடன் திரும்பினேன். பிறரின் தனிமையை மதிக்கும் நாகரிகமான ஸ்காண்டிநேவியர்களின் குணம் அப்படியே இந்தப் பேயிற்கும் இருந்தது. படுக்கை அறையிற்கோ குளியல் அறைக்கோ நுழைவது இல்லை. வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு செல்லுங்கள் என்னும் வகையிலேயே அடுத்தப் பத்து நாட்களுக்கு என்னுடன் பயணம் செய்து கொண்டிருந்தது. இது என்னடா இழவு என , தமிழ்நாட்டிற்கு ஒரு வாரம் விடுமுறை எடுத்து வந்து சேர்ந்தேன். சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும், விமானத்திலும், பின் சென்னையில் என்னுடைய டாக்ஸியிலும் பேயின் பயணம் தொடர்ந்தது.

சென்னை வீட்டில் தொந்தரவுகள் இல்லாத போதிலும், எதற்கு ஒரு மனநல மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து விடுவது என முடிவு செய்தேன்.

“தொடர்ந்து பிம்பங்கள் வருவது ஒரு விதமான ஹாலுசினேசன், நீங்கள் பார்த்து, உங்களைப் பாதித்த உருவங்கள் தெரிவது போல இருப்பது இயல்பானது”

“இல்லை டாக்டர், இப்பொழுது கூட உங்கள் மருத்துவமனையின் வரவேற்பறையில் தான் இருக்கின்றது”

என்னைப் படுக்கவைத்து ஆழ்ந்த மனநிலையில் ஏதோ ஏதோ முயற்சி செய்து, நான் பார்த்த ஒரு படு பயங்கரமான பழைய ஸ்விடீஷ் திகில் படத்தில் வந்த வில்லனின் உருவம் தான் அந்த பேயாக எனக்குத் தெரிகின்றது என முடிவு செய்தார். அந்தப் படத்தை அவரும் பார்த்து இருப்பதாகவும் சொன்னார்.

காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டதால், அந்த பிரமை என்னை விட்டு விலகி விடும் என என்னை ஆறுதல்படுத்திவிட்டு என்னை வழியனுப்பினார். வெளியில் அந்த பேய் இன்னும் உட்கார்ந்து இருந்தது. என்னை நோக்கி வருவது போல வந்து என்னைக் கடந்துப் போய் அந்த மனநல மருத்துவரின் அறைக்குள் நுழைந்தது. உள்ளே ஸ்விடிஷில் ஒரு ஆண் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.

Wednesday, May 11, 2011

Paraskevidekatriaphobia, 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை

மேற்கத்திய பாரம்பரிய நம்பிக்கைகளில் பொதுவாக 13 ஆம் எண்ணும் வெள்ளிக்கிழமையும் தனித்தனியாக துரதிர்ஷ்டமான விசயங்களாக கருதப்படுகின்றன. இவையிரண்டும் இணைந்து ,13 ஆம் தேதி வெள்ளியன்று வந்தால்,அன்று ஆரம்பிக்கப்பட வேண்டிய விசயங்களை கொஞ்சம் மிரட்சியாக அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போடுவது மேற்கத்திய நாடுகளில் இயற்பான ஒன்றாக இருக்கிறது. கிறிஸ்தவ நம்பிக்கைகளில் இயேசு கிறிஸ்து வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டதும், அவரின் கடைசி இரவு உணவில் அவரின் சீடர்களுடன் அவரையும் சேர்த்து 13 பேர் இருந்ததும் , 13வதாக யூதாஸ் வந்ததும் இந்த Friday 13th மீதான பயத்தை வலுப்படுத்தும் ஒரு காரணி எனவும் சொல்லுவார்கள்.ஆதாமும் ஏவாளும் சாத்தான் அளித்த பழத்தை உண்டதும்,காயின் ஆபேலைக் கொன்றதும் இதே வெள்ளியன்றுதான் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.



ஆண் மைய கத்தோலிக்க மடாலயங்கள் பெண் மைய பாகான் மதங்களை,வழிபாட்டு முறைகளை ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, நோர்ஸ் கலாச்சார பெண் தெய்வங்களின் புனித நாளாகக் கருதப்பட்ட வெள்ளிக்கிழமையையும் , 13 என்ற ராசியான எண்ணையும் துரதிர்ஷ்டமானது ,அந்நாளில் துவக்கப்படும் எதுவும் சரியாக அமையாது என அவநம்பிக்கை ஏற்படுத்தினார்கள் எனவும் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். பாகானிய வழிபாட்டு முறைகளில் ஒரு ஆண்டில் சந்திரனை அடிப்படையாக கொண்ட மாதங்களின் எண்ணிக்கை 13 என்பதும் குறிப்பிடத்தக்கது.

13 ஆம் தேதி வெள்ளியன்று வருவதனால் ஏற்படும் பயத்தை paraskevidekatriaphobia என்று அழைப்பார்கள். எண் 13, வெள்ளிக்கிழமை, பயம் ஆகிய மூன்று தனித்தனி கிரேக்க மொழி வார்த்தைகளின் தொகுப்புதான் மேற்சொன்ன வார்த்தை. மேற்கத்திய நாடுகளில் மட்டுமல்ல சீனாவிலும் எகிப்திலும் 13 ராசி இல்லாத எண்ணாக இன்றும் கருதப்படுகிறது.



14ஆம் நூற்றாண்டில் நைட் டெம்ப்ளேற்ஸ் ஆட்களை பிரான்சு மன்னர் பிலிப் IV ,போப் கிளமெண்ட் V இன் ஆணையின் பேரில் அக்டோபர் 13 ஆம் வெள்ளிக்கிழமை,1307 அன்றுதான் வேட்டையாடிக் கொன்றனராம். அன்று முதல் இந்த 13,வெள்ளிக்கிழமைப் பற்றிய பயம் உருவெடுத்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. பன்னெடுங்காலம் வரை பிரிட்டனில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டது வெள்ளிக்கிழமைதான்.

பிரிட்டனில் வெள்ளிக்கிழமை பயத்தை உடைத்தெறிய அந்த நாட்டுக் கடற்படை எச்.எம்.எஸ் ப்ரைடே என்ற பெயரில் , ஜேம்ஸ்பிரைடே என்ற ஒருவரை கப்பற்தலைவனாகக் கொண்டு ,வெள்ளிக்கிழமையன்று பயணத்தை துவக்க வைத்தனராம். அந்தக் கப்பல் ஒரு அருமையான வெள்ளியன்று கடைசியாகப் பார்த்தபின் கரை திரும்பவே இல்லையாம். இது உண்மையிலேயே நடந்ததா இல்லையா என்று உறுதி செய்யப்படவில்லை எனினும், ஏப்ரல் 13 வெள்ளியன்று ,அப்போல்லோ 13 விண்கலத்தில் ஆக்ஸிசஜன் சிலிண்டர் வெடித்தது இந்த நம்பிக்கை ஆதரிப்பவர்களுக்கும் மூட நம்பிக்கை என ஒதுக்கியவர்களிடமும் அதிர்ச்சி அலைகளைப் பரவச்செய்தது. அந்த விண்கலத்தில் இருந்த மூவரும் பத்திரமாக பூமிதிரும்பினர் என்பது வேறுவிசயம். இதனை Successful Failure எனவும் சொல்வார்கள்.



கனடாவிலும், அமெரிக்காவிலும் பன்மாடிக் கட்டடங்களில் பதிமூன்றாவது எனக் குறிப்பிடப்படாமல் 13 வது தளம் அமைந்திருக்குமாம். எண் பதிமூன்றைப் பற்றிய பயத்தை Triskaidekaphobia என சொல்லுவார்கள்.

மனோதத்துவ நிபுணர்கள், 13க்கும் வெள்ளிக்கிழமைக்கும் எந்த ராசி,ராசி இல்லாத காரணிகளும் கிடையாது, அவரவர் மனோபாவத்தை பொறுத்து அந்த நாள் அமைகிறது, அடடா, இன்றைக்கு 13 வெள்ளியாச்சே, காப்பி சிந்திவிட்டதே, சட்டை சரியாக சலவை செய்யப்படவில்லையே, போக்குவரத்து விதிகளை மீறி காட்டுத்தனமாக வண்டி ஓட்டுகின்றானே என தினசரி ஏற்படும் வருத்தங்கள் இது போன்ற சிலநாட்களில் நமக்கு பூதகரமானதாக தோன்றுகிறது என சொல்லுகின்றனர். காரணிகளால் நம்பிக்கை ஏற்படுவதில்லை, நம்பிக்கை உருவாக்கப்பட்டபின்னரே காரணிகளை தேடிக்கண்டுப்பிடிக்கப்படுகின்றன. மனம் சாட்சியங்களை தேடிக் கிடைக்காத போது , ஏதாவது ஒன்றை உருவாக்கி அதை தன்மேல் திணித்துக் கொள்கிறது. மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட நாட்கள் எல்லாமும் நல்ல நாளே!!!

பதிவர் தமிழ்மாங்கனியின் வெள்ளிக்கிழமை 13 அனுபவம் வாசிக்க இங்கே சொடுக்கவும்

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி இதே தினத்தில் வெளியான தசாவதாரம் பெரும் வெற்றிப் பெற்றது ,2011 தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் 13 ஆம் தேதி வெள்ளியன்று வெளியானது என்பதும் குறிப்பிடத் தக்கது.

Monday, May 09, 2011

ஜோன் ஆஃப் ஆர்க் - பிரான்சின் வீரமங்கை

மொழி அடிப்படையில் உருவாகும் தேசியமே காலங்கடந்து கம்பீரமாக நிற்கும் என்பதற்கு ஐரோப்பிய வரலாற்றுப்பக்கங்கள் உதாரணம். நிறத்தாலும், குணத்தாலும் , நம்பிக்கைகளினாலும் ஒன்றுபோல இருந்தாலும் , ஐரோப்பியர்கள் தங்களை நிலைநிறுத்திக் காட்டிக்கொள்வது மொழியின் அடிப்படையிலேயே இருக்கின்றது. அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் பிரெஞ்சு தேசமான பிரான்சு.


14 ஆம் நூற்றாண்டில் உள்ளடி வேலைப்பார்க்கும் துரோகிகளினாலும், போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சோம்பித்திரிந்த அரசர்களாலும் துண்டாடப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில தேசமாக மாறிக்கொண்டிருந்த பிரான்சை மீண்டும் முழு தேசியமாக எழுச்சி பெற வித்திட்டவர் ஜோன் ஆஃப் ஆர்க்.




”அந்த சிலுவையை உயரேக் காட்டுங்கள், என் நாட்டிற்காக நான் இந்தத் தீ ஜூவாலைகளில் கரையும் பொழுது, எனது இறைவனை நினைவுகூற விரும்புகின்றேன்” என பிரெஞ்சில் கூறியபடியே மரிக்கும் தருவாயிலும் மொழி, தேசியம், தெய்வீகம் மூன்றையும் இணைத்து பிரான்சை மீட்டெடுத்த குவியப்புள்ளிதான் ஜோன் ஆஃப் ஆர்க் (Jeanne d'Arc).

14 , 15 ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு அரசுரிமைக்கானப் போட்டியில் நடந்த போர்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து நடந்தது. வலுவா (House of Valois) குடும்பத்தினரும், இங்கிலாந்த்தைச் சேர்ந்த பிளாண்டஜெனட் (House of Plantagenet) குடும்பத்தினரும் பிரஞ்சு அரசுரிமையை தங்களுக்கே சொந்தம் எனக் கொண்டாடி சண்டையில் ஈடுபட ஆரம்பித்தனர்.





இன்றைய பாரிஸ் நகரம் உட்பட மூன்றில் ஒரு பகுதியான வடக்குப்பகுதியை ஆங்கிலேயர்கள் ஆதரவுப்பெற்ற பருகெண்டிய பிரபுக்கள் ஆண்டு வந்தனர். எஞ்சிய மீதத்தை வலுவா குடும்பத்தை சேர்ந்த புத்திசுவாதீனமில்லாத ஆறாம் சார்லஸ் ஆண்டு வந்தார். பருகண்டி பிரபுக்களின் சூழ்ச்சிகள், தனது ஏழு வயது மகளை இங்கிலாந்து இளவரசரனுக்குக் திருமணம் செய்து கொடுத்து சமாதானம் பேச முயன்றும், தொடர்ந்த இங்கிலாந்தின் படையெடுப்புகள் என பிரெஞ்சு தேசம் கொஞ்சம் கொஞ்சமாக சுயத்தை இழந்து கொண்டிருந்தது. ஏறத்தாழ இதேக் காலக்கட்டத்தில் இன்றைய பிரான்சின் வடக்கிழக்கு கிராமமான தொம்ரெமெவில் ஒரு விவாசயக் குடும்பத்தில் ஜாக்குவஸ் த’ஆர்க் என்பவருக்கும் இஸபெல்லா ரொமே என்பவருக்கும் மகளாக ஜோன் பிறந்தார்.

பருகெண்டிய பிரபுக்களின் நிலப்பகுதியில் இருந்தாலும் ஜோனின் குடும்பம் இருந்த கிராமம் பிரெஞ்சு அரசருக்கு விசுவாசமாக இருந்தபடியால் அடிக்கடி சூறையாடப்பட்டது. பிஞ்சு வயதில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த துரோகிகளின் அட்டூழியம், கொடுங்கோல்தன்மை ஆகியவற்றினால் சுதந்திரம் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் பயனில்லை எனும் விதை ஜோனின் மனதில் ஆழப்பதிந்தது.

தேசிய எண்ணங்கள் ஆழப்பதிய, தெய்வீகமும் ஜோனைச் சூழ்ந்து கொண்டது, ஜோன் 12 வயதாக இருக்கும்பொழுது, கிறித்தவ புனிதர்களான மைக்கெல், கேத்தரின், மார்க்கரேட் ஆகியோரை தரிசித்ததாகவும் , அவர்கள் ஜோனிடம் ஆங்கிலேயர்களை பிரெஞ்சு மண்ணைவிட்டே விரட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும் நம்பப்படுகிறது.

ஆறாம் சார்லஸின் கட்டுப்பாட்டில் இருந்த பிரான்சிலும், வடகிழக்கில் இருந்து ஒரு வீரமங்கை வந்து இளவரசரருக்கு (ஏழாம் சார்லஸ்) முடிசூட்டுவாள் என ஒரு நம்பிக்கை பரவிவந்தது.

ஜோனிற்கு 16 வயதாக இருக்கும்பொழுது, பிரெஞ்சு ராணுவத்தளபதி ராபர்ட்டை சந்திக்க முற்படுகிறார். ராபர்ட் சிறு பெண் என ஏளனப்படுத்தினாலும், தொடர் முயற்சிகளினால் ஏற்கனவே உலவி வந்த நம்பிக்கைகளினாலும் , ஏழாம் சார்லஸை சந்திக்க ராபர்ட் அனுமதிக்கின்றார்.



ஜோன் அழகிய இளமங்கையாக இருந்ததால் , பிரச்சினைக்குரிய பருகெண்டிய பிரதேசத்தைக் கடக்கவேண்டி , அவருக்கு ஆணைப்போல திருத்தமான முடிவெட்டு மற்றும் போர் வீரர்களின் உடை தரிக்கப்பட்டது.

ஜோனை சோதிக்க, பணியாள் ஒருவர் ஏழாம் சார்லஸைப்போல வேடமிட்டு வரவேற்றாலும், ஜோன் நேரிடையாக கூட்டத்தில் இருந்த ஏழாம் சார்லஸை மண்டியிட்டு அரசரே என வணங்கியபோது, காத்துக்கொண்டிருந்த நம்பிக்கைத் தேவதை வந்துவிட்டாள் என ஆர்ப்பரித்தனர்.

ஆங்கில - பிரெஞ்சு யுத்தத்தை இறைவனின் பெயரால் ஜோன் எடுத்துச் செல்ல முற்பட்டதைக் கண்டு ஏழாம் சார்லஸ் அஞ்சினார். ஒரு வேளை வென்றால் ஜோன் சூனியக்காரியாகவும், தனது அரசாங்கம் சாத்தானின் கைவண்ணமாகக் கண்டு கொள்ளப்படுமோ என்ற பயம் அவருக்கு. அன்றைக்கு உண்மையில் ஆங்கிலேயர்களைப் பொருத்தமட்டில் ஜோன் ஒரு சூனியக்காரியாகவே பிரபலப்படுத்தப்பட்டாள். இவ்வளவு ஏன், ஷேக்ஸ்பியரின் ஆறாம் ஹென்றி முதல் பாகத்தில் ஜோன் எதிர்மறைக் கதாப்பத்திரமாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பார்.

ஏழாம் சார்லஸின் ஐயத்தை , எதைத் தின்னால் பித்தம் தெளிந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் என்று இருந்த பிரெஞ்சு மதக்குருமார்கள் ஜோன் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவள் என நேரிடையாகக் கூறாமல் அதே சமயத்தில் நேர்மை, எளிமை, விசுவாசம் ஆகியனவற்றைக்கொண்ட ஒரு நல்ல கிறித்தவப்பெண் எனப் பிரகடப்படுத்தினர்.




ஓர்லியான்ஸ் நகரத்தை மீட்போம் என்ற ஜோனின் கணிப்பை சோதிக்க, ஜோன் ஓர்லியான்ஸிற்கு அனுப்பப்பட்டார். முதலில் ஓர்லியான்ஸ் பிரபுவின் நம்பிக்கை பெறமுடியாமல், ஒதுக்கிவைக்கப்பட்டாலும் சிறுக சிறுக தனது கணிப்புகளினாலும் சாதுரியமான ஆலோசனைகளினாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

எச்சரிக்கை உணர்வுடனேயே சண்டை போட்டு வந்த பிரெஞ்சுப்படைகளுக்கு ஜோனின் அதிரடித் திட்டங்கள் அசர வைத்தன. பெண், அதுவும் பதின்மத்தில் இருக்கும் பெண் படைகளுக்கு தலைமை எடுத்துப் போனது மக்களுக்கும் படைவீரர்களுக்கும் அளப்பரிய உற்சாகத்தைக் கொடுத்தது. ஓர்லியன்ஸின் கோட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஆங்கிலயரின் வசத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. ஓர்லியான்ஸ் நகரை மீட்டு எடுத்தல் இங்கிலாந்து - பிரான்சு க்கு இடையிலான போர்களின் போக்கை மாற்றியது.

தூர் நகரை மீட்டெடுக்கும் முயற்சியில் அம்புப் பட்டு , கழுத்தில் காயம் அடைந்தாலும் போராடி வெற்றியை மீட்டு எடுத்த ஜோனைப் பார்த்து
சோம்பிக்கிடந்த பிரெஞ்சு மக்கள் வீர எழுச்சிப் பெற்றனர். தொடர்ந்து ஆங்கிலேயர் வசம் இருந்த பிரெஞ்சு நகரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மீட்கப்பட்டன. பதாய் போர்க்கள வெற்றிக்குப் பின்னர் ரெய்ம்ஸில் ஏழாம் சார்லஸ் பிரெஞ்சு அரசராக முடிசூடப்பட்டார்.



ஜோன் தனது தொடர் வெற்றிகளினால், பிரான்சின் இதயமான பாரிஸை மீட்டெடுக்க, ஏழாம் சார்லஸின் அனுமதியைக் கேட்டார். வடக்கில் இருந்த பாரிஸை மீட்பது சிரமம் தான் என்ற போதிலும், தயக்கத்துடனேயே ஏழாம் சார்லஸ் ஜோனிற்கு பெரும்படையை தலைமை எடுத்து செல்ல அனுமதித்தார். படையை அனுமதித்த போதிலும் ஏழாம் சார்லஸ் பருகெண்டி பிரபுக்களுடன் அமைதியையே விரும்பினார். மீண்டும் மீண்டும் காயம்பட்டாலும், கடைசி வரை பாரிஸை மீட்கும் களத்தில் இருந்த ஜோன், அரசரின் ஆணையால் முயற்சியைக் கைவிட்டு திரும்ப வேண்டியதாகியற்று.





கொம்பியன் என்ற இடத்தில் கடைசி ஆளாய் ஆங்கிலேய பருகெண்டிய படைகளை எதிர்த்து சண்டைப்போட்டுக் கொண்டிருக்கையில் நிராதரவாய் ஜோன் சிறைப் பிடிக்கப்பட்டார். சிறைப்பிடிக்கப்பட்டவர்களை அக்கால வழக்கப்படி பெரும் பணம் கொடுத்து ஏழாம் சார்லஸ் ஜோனை மீட்பார் என எல்லோரும் எதிர்பார்க்கும்பொழுது ஏழாம் சார்லஸ் யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டார். பருகெண்டியர்கள் ஜோனை ஆங்கில அரசாங்கத்திடம் விற்றனர்.

ராஜ துரோகம் (அதாவது ஏழாம் சார்லஸின் போட்டி அரசரான இங்கிலாந்து ஆதரவு பெற்ற ஆறாம் ஹென்றிக்கு எதிராக ), மதவிதி முறைகளை மீறி ஆண் உடைகள் தரித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

“நீ கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவளா?” என்ற கேள்விக்கு, ஆம் என்றால் மதத்திற்கு எதிரானவள் என்றவகையில் தண்டனை அளிக்கப்படும், இல்லை என்றால் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிவிடும் என்ற நிலையில் ஜோனின் பதில் பின்வருவனவாக இருந்தது.

“நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்றால் கடவுள் என்னைக் ரட்சிப்பார், இல்லை என்றால் என்னை கைவிடுவார்”

சிறையில் இருந்து ஜோன் பலமுறை தப்பிக்க முயன்றாலும் எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தது.





ஒரு சார்பான விசாரணைக்குப்பின்னர் , ஜோனிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மே 30, 1431 ஆம் ஆண்டு ஜோன் உயிருடன் கொளுத்தப்பட்டார். நம்பியவர்கள் கைவிட்டாலும், இறைவனின் மேலான நம்பிக்கையை கைவிடாமல் சிறிய சிலுவையை உடையில் தரித்து சாம்பலாகிப்போனார். அவரின் சாம்பல் சைன் நதியில் வீசப்பட்டது.

ஜோனின் மறைவுக்குப்பின்னரும் தொடர்ந்து 22 ஆண்டுகள் நடைபெற்ற ஆங்கில பிரெஞ்சுப் போர்களின் முடிவில் பிரான்சு தனது பிரதேசங்கள் அனைத்தையும் மீட்டு எடுத்தது.

போப் மூன்றாம் காலிக்ஸ்டஸின் முயற்சியால் ஜோனின் மறைவுக்குப்பின்னர் ஜோனின் குற்றச்சாட்டுகள் மறுவிசாரனை செய்யப்பட்டன. ஓர்லியான்ஸ் மங்கை ஜோனின் வீர்தீரத்தினால் மட்டுமே இந்த சுதந்திரம் சாத்தியப்பட்டது என அனைவரும் உணர்ந்தனர். ஜோனிற்கு மாவீரர் என்ற கௌரவம் அளிக்கப்பட்டது.




மாவீரர்கள் மதம் என்னும் சமுத்திரத்திற்குள் உறிஞ்சிக்கொள்ளப்படுவது இயல்பே. போப் பெனடிக்ட் 15 ஆல் ஜோன் மே 16 1920 ஆம் ஆண்டு புனிதப்படுத்தப்பட்டார். வீரமங்கை ஜோன் ஆஃப் ஆர்க், புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் ஆக மாற்றப்பட்டு உலகமெங்கும் இருக்கும் கத்தோலிக்க கிறித்தவர்களின் மனதில் என்றும் வாழ்ந்து வருகின்றார். இரண்டாம் உலகப்போரின் போது , பிரான்ஸ் ஜெர்மனியிடம் தொடர்ந்து அடி வாங்கிக்கொண்டிருந்த பொழுது, பிரெஞ்சு மக்கள் , பிரெஞ்சு மக்கள் ஜோன் ஆஃப் ஆர்க்கின் நினைவாக சிலுவையை கொடியின் மையத்தில் கொண்டது அவர்கள் மீள் எழுச்சிப்பெற உதவியது.




ஒவ்வொரு ஆண்டும் மே முதல் வாரத்தில் ஓர்லியான்ஸ் நகரில் ஜோன் ஆஃப் ஆர்க்கின் நினைவாக பெரும் விழா எடுக்கப்படுகிறது. ராணுவ அணிவகுப்புகள், கலாச்சார நிகழ்ச்சிகள் , ஜோனின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படங்கள், நாடகங்கள் என மக்கள் தங்களின் பிரெஞ்சு தேசிய எழுச்சியை மீள் நினைவு செய்து கொள்கின்றனர்.

ஜோன், இன்று மதத்தின் அடையளமாக மாற்றப்பட்டாலும் , என்றும் அவர், சுயமரியாதையை மீட்டு எடுக்கும் விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு ஓர் எழுச்சிச் சின்னம்தான். விதைத்தவரே அறுவடை செய்ய வேண்டிய அவசியம் வேண்டியதில்லை. சுதந்திரம் நீண்ட காலக் கனி, கனியும் காலம் வரும்பொழுது மாவீரர்கள் மரணமடைந்தாலும் அவர்களின் முயற்சிகள் வீணாகாது என்பதற்கு ஜோனின் வரலாறு ஓர் உதாரணம்
----

இந்தப் பதிவு ஈழத்தில் தமிழின் மானத்தைக் காக்க போரில் வீர மரணம் அடைந்த ஈழத்து வீரமங்கைகளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

--------

நன்றி - சாம் விஜய் http://parisvijay.blogspot.com/(படங்கள் மற்றும் நுட்பமான தகவல்கள் உதவிகளுக்காக )





Wednesday, May 04, 2011

இயற்கை என்னும் ... - சிறுகதை

என் வீட்டு ரோஜா வருவதாலோ என்னவோ , அந்தப் பூங்காவின் எல்லா மலர்களும் புன்னகைத்துக்கொண்டிருந்தன. என் மனைவி அம்மு வழக்கம்போல சிடுசிடுவென முன்னால் வேகமாக நடக்க, நானும் எனது குட்டி தேவதை அஞ்சலிப்பாப்பாவும் ஒவ்வொரு பூவிடமும் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தோம். ஐரோப்பிய வசந்தகாலம் அங்கிருந்தவர்களின் முகத்தில் பூக்களைப்போல பூரிப்பைத் தந்து கொண்டிருந்தது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக நல்ல வெயில் காட்டுவதால் ஐரோப்பிய வெள்ளையர்கள் கொஞ்சம் மாநிறமாக மாறிக்கொண்டு இருந்தனர். அடுத்த ஒரு வாரத்திற்கும் மிதமான வெப்பம் இருக்கும் என்பதுதான் தட்பவெப்ப நிலை முன்னோட்டமாக ஊடகங்களில் கூறிக்கொண்டு இருந்தனர். எனக்கு இந்த வெயில் என்னவோ பிடிக்காது.


“கார்த்திபா, கார்த்திபா பூவெல்லாம் எப்படிப்பா பேசும்”

“வாசனை வழியா பேசுண்டா குட்டி”

“எனக்கு ஏன் அது பேசுறது எல்லாம் கேட்கமாட்டேங்குது” என் கன்னத்தை தடவியபடியே அஞ்சலிப்பாப்பா கேட்க, பதில் சொல்வதற்குள்

“குழந்தையையும் இயற்கை அது இதுன்னு பேசி கெடுத்துடாதீங்க, நாலு இங்கிலிஷ் வார்த்தை பேசி, இங்கிலிஷை இம்ப்ரூவ் பண்றதை விட்டுட்டு , சாமியார் மாதிரி பேசிட்டு இருக்கீங்க”

பெண்கள் எப்படி வருடங்களில் மாறிவிடுகிறார்கள். இதே பூங்காவில் தான் மலர்களையும் செடி மரங்களையும் பற்றி அம்முவுடன் பேசிப்பேசி அவளின் மனதை வென்று மனைவியாக்கிக்கொண்டேன். அஞ்சலிப்பாப்பா பிறந்த இந்த மூன்றரை வருடங்களில் பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் போராட்ட வாழ்க்கையில் பழைய விசயங்களை மறந்து விட்டாளோ எனத் தோன்றும்.

“பூக்கள் பேசுவது கூட புரியுண்டா செல்லம்” அம்முவின் பேச்சைக் கவனத்தில் கொள்ளாமல் எனது இளவரசியுடன் பேச்சைத் தொடர்ந்தேன்.

“எப்படி எப்படி கார்த்திபா” கார்த்திபா எனக்கூப்பிடும் பழக்கம் அப்படியே அம்முவிடம் இருந்து அஞ்சலிப்பாப்பாவிடம் தொற்றிக்கொண்ட ஒன்று.
அம்முவை குழந்தைப் பருவத்தில் இருந்து பார்க்க முடியவில்லையே என்ற குறையை அஞ்சலிப்பாப்பா தீர்த்து வைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறந்ததில் இருந்து என் பாசம் அன்பு எல்லாம் அம்முவிடம் இருந்து அஞ்சலியிடம் குவிந்து விட்டதால், அம்முவிற்கு பொறாமையோ எனக்கூட எனக்குத் தோன்றும்.

“மென்மையா பூக்களையும் செடிகளையும் மரங்களையும் தொட்டு மனசுக்குள் ஏதாவது சொன்னா நமக்கு பதில் சொல்லும்” குட்டிப்பாப்பாவின் தலையை வருடிக்கொண்டே சொன்னேன்.

”அப்பாவும் பொண்ணும் இப்படியே பேசிப்பேசி லூசா ஆகிடுங்க, என்னால இதுக்கு மேல நடக்க முடியாது” என எங்களைத் திட்டிக்கொண்டே பெரிய மரத்தின் அடியில் புல்தரையில் அமர்ந்து கொண்டாள்.

“கார்த்திபா கார்த்திபா, அந்த மரத்துக்கிட்ட பேசிட்டு வரவா” என என் பதில் எதிர்பாராமல் அஞ்சலிப்பாப்பா மரத்திற்கருகில் ஓடிபோனது.

“அம்மா, மரத்துக்கிட்ட என்ன கேக்க”

“மதியானம் வெதர் எப்படி இருக்கும்னு கேளு”

அஞ்சலிப்பாப்பாவிற்கு வெதர் என்றால் புரிந்துருக்காது. இருந்தாலும் குழந்தை கண்ணை மூடிக்கொண்டு, சிலவினாடிகள் எதோ முணுமுணுத்து விட்டு, திரும்ப ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டது.

“மரம் என்ன சொல்லுச்சு தங்கம்”

“இன்னக்கி நல்லா இருக்கும்னும் சொல்லுச்சு கார்த்திபா”

கொஞ்சம் இளைப்பாறிவிட்டு வீட்டிற்கு கிளம்பலாம் எனும்பொழுது மேகங்கள் சூழ்ந்து இருட்ட ஆரம்பித்தது. ஐரோப்பியர்களுக்கு மழை என்றால் எட்டிக்காய். மழை தூறல் போடுவதற்கு முன்னர் காருக்குள் வந்து அடைந்தோம்.

அதிவிரைவு சாலையில் வேகமாக காரை செலுத்திக் கொண்டிருக்க மழை வலுவடைந்தது. பின்னிருக்கையில் அஞ்சலிப்பாப்பா தூங்கிக்கொண்டிருந்தாள். என் தோளில் சாய்ந்த அம்மு

“அந்த மரம் பாப்பா கிட்ட சரியாத்தான் பதில் சொல்லி இருக்கு, மரங்கள் செடி கொடிக்கு மழை பெய்தால் தானே நல்ல வெதர்”


Monday, May 02, 2011

கிரிக்கெட் வினாடி - வினா - ஆறுக்கு ஆறு

1. இந்திய மத்தியவரிசை மட்டையாளர் சுரேஷ் ரைனா வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் வைத்திராத ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த சாதனையை தன் கைவசம் வைத்துள்ளார். கிறிஸ் கெயில், மெக்கல்லம், ஜெயவர்த்தனே ஆகியோரும் உலகளவில் இந்த சாதனையை செய்துள்ளனர். அப்படி சுரேஷ் ரைனா செய்த சாதனைதான் என்ன?


2. ரன் அவுட் வகையில் ஆட்டமிழக்கப்படும் விக்கெட்டுகள் பந்து வீச்சாளர்கள் கணக்கில் சேராது. அது போல வேறு எந்த ஆட்டமிழக்கப்படும் முறைகள் பந்து வீச்சாளர்கள் கணக்கில் சேராது?

3. ஜாகிர்கான் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வப்பொழுது நேர்த்தியாக பேட்டிங் ஆடுவதிலும் வல்லவர். எடுத்தோம் கவிழ்த்தோம் என ஆடாமல், நிலைமையை உணர்ந்து ஆடும் டெயிலெண்டர் ஆட்டக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர். பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் ஆட்டம் ஒன்றில் இவரும் டெண்டுல்கரும் இணைந்து கடைசி விக்கெட்டிற்கு 133 ஓட்டங்கள் சேர்த்தது இந்திய சாதனையாக உள்ளது. டெண்டுல்கரிடமோ , கங்குலியிடமோ, சேவக்கிடமோ இல்லாத ஒரு அதிரடி பேட்டிங் சாதனையை, (In One Day Internationals) ஜாகிர்கான் தன் கைவசம் வைத்துள்ளார். அந்த சாதனை என்ன?

4. இங்கிலாந்து வீரர் பென் ஹோலியாக், ஜிம்பாப்வேயின் டிரெவர் மடாண்டோ, பங்களாதேஷின் மஞ்சுரல் இஸலாம் ரானா இவர்களுக்கு இடையிலான துயரமான ஒற்றுமை என்ன?

5. காயங்கள் காரணமாக , ஆட்டக்காரர்கள், “ரிடையர்ட் - நாட் அவுட்” வகையில் பெவிலியன் திரும்பி, பின்னர் ஆட வருவது வழக்கம். ஆனால் ரிடையர்ட்-அவுட் என தன்னைத் தானே ஆட்டமிழக்க செய்து கொண்ட முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டக்காரர் யார்? அதே டெஸ்ட் ஆட்டத்தில் இன்னொருவரும் தன்னைத் தானே ஆட்டமிழக்கசெய்து கொண்டார். அதற்கு பின்னர் யாரும் தங்களை இதுவரை ஆட்டமிழக்க செய்து கொள்ளவில்லை.

6. ஒருநாள் ஆட்டங்களில் களத்தடுப்பை இடையூறு செய்தல் (Obstructing the field), பந்தை கையால் தடுத்தல் (handled the ball) என இருவகையிலும் வெவ்வேறு ஆட்டங்களில் ஆட்டமிழந்த ஒரே ஆட்டக்காரர் யார்? இவர் ஒரு இந்திய ஆட்டக்காரர்.

விடைகள்

1. சுரேஷ் ரைனா டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு இருபது என அனைத்து வகை பன்னாட்டு கிரிக்கெட் ஆட்டங்களிலும் சதம் அடித்துள்ள ஒரே இந்திய வீரர்.

2. Hit the ball twice - பந்தை இருமுறை அடித்தல், Obstructing the field - களத்தடுப்பை இடையூறு செய்தல், handled the ball - பந்தை கையால் தடுத்தல், Timed Out - நேரத்திற்கு வராமை

3. ஜாகிர்கான் , ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டம் ஒன்றில் , ஒலாங்கா வீசிய ஓவரில் 4 சிக்ஸர்கள் உட்பட 25 ஓட்டங்கள் எடுத்தது இந்திய அளவில் ஒரு சாதனையாகும். அதில் கடைசி 4 பந்துகளையும் சிக்ஸருக்கு (இடையில் ஒரு Wide பந்து) தொடர்ந்து சிக்ஸருக்கு அனுப்பினார். முரண் நகையாக, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஒரு பந்து, ஒரு விக்கெட் மீதமிருக்கும் நிலையில், 50 வது ஓவரில் ஓட்டங்களை வாரி வழங்கிய ஒலாங்கா வெற்றி ஓட்டத்தை எடுத்து ஜிம்பாப்வே அணிக்கு வெற்றித் தேடித்தந்தார்.


4. மூவரும் இளம் வயதில் உயிர் இழந்த டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள். இதில் டிரெவர் மடோண்டாவைத் தவிர , ஏனைய இருவர் சாலை விபத்தில் காலமானவர்கள்.

5. மார்வன் அட்டப்பட்டு, மஹேலா ஜெயவர்த்தனே

ஆட்ட விபரம் இங்கே http://www.espncricinfo.com/ci/engine/match/63947.html


6. மொகிந்தர் அமர்நாத்

ஃபீனிக்ஸ் தேசத்திலே - தொடர்கதை - பாகம் 5


அவளின் மார்போடு அணைத்த என் கைகளை, கோஸியா மென்மையாக தள்ளி விட்டு,

“கார்த்தி, என் உடலுக்கு ஒரு ஆடவனின் ஸ்பரிசம் தேவைதான், ஆனால் மனதில் டிராட்ஸ்கியை நினைத்துக் கொண்டு , உன்னுடன் என்னால் கூட இயலாது, என்னை மன்னித்துவிடு” என்றாள்.

“தேகத்திற்கு மனம் என்ன நினைக்கின்றது என்பதில் பிரச்சினை இல்லை”

அவள் யாரை மனதில் நினைத்துக்கொண்டாலும், இன்பம் எனக்குத்தான் என்பதால் , வார்த்தைகளை வேறு மாதிரி போட்டு எனக்கு இணங்க முயற்சித்தேன்.

“இல்லை கார்த்தி, ஒரு இந்திய குறிப்பாக தமிழ் ஆடவனை நான் காதலித்ததே, ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு, உங்களது கலாச்சாரத்தில் ஊறி இருப்பதனால்தான், டிராட்ஸ்கி திரும்ப வருவான், அவன் வரும் வரை என் உடல் இச்சையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்”

ஒருவனுக்கு ஒருத்தி என்பது உபரியாக பைபிளுடன் இந்தியாவிற்கு வந்தது என நான் நம்புவதால், அவள் சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. அத்துடன் டிராட்ஸ்கி என்னவோ உத்தமன் என அவள் நினைத்துக்கொண்டு இப்படி பேசுவது எரிச்சல்தான் வந்தது. இந்த சூழலில் நான் டிராட்ஸ்கியைப்பற்றி எது சொன்னாலும் அவளின் அழுகையில் முடியலாம். நாளை சாவகாசமாக சொல்லிவிட்டு, பிறகு திகட்ட திகட்ட கோஸியாவை ஒரு கைப்பார்க்கலாம் என அவளிடம் இருந்து விலகி, வோட்காவை இன்னொரு சுற்று ஏற்றிக்கொண்டு தூங்கிப்போனேன்.

மறுநாள் காலையில் மார்ச்சின் என்னருகில் வரும்பொழுதெல்லாம் அசூயையாக இருந்தது. கோஸியா என்னைப்பார்த்து கண் சிமிட்டிய பொழுதெல்லாம் , வேண்டும் என்றால் மார்ச்சினை எடுத்துக்கொள் சொல்லுவது போல் இருந்தது.

போலாந்து பாரம்பரிய காலை உணவு வகை என முட்டைப்பொறியல் செய்து கொடுத்துக்கொண்டே,

“உன்னுடைய வேலை விசயம் என்னவாயிற்று”

“என்னைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள், இன்னும் இரண்டு வாரங்களில் கொசோவா புறப்பட்டு போய்விடுவான்”

கொசோவா என்றதும் அவளின் முகம் மாறியது.

“உள்நாட்டுப்போருக்குப்பின்னர் அந்த நாடு இப்பொழுதுதானே தட்டுத் தடுமாறி வளர்கிறது, அங்கு சம்பளம் குறைவாகத்தானே கிடைக்கும், மென்பொருள் பொறியாளனான உனக்கு, மேற்கு ஐரோப்பாவிலே நல்ல சம்பளம் கிடைக்குமே”

“இல்லை, நான் சேரப்போகும் வேலையின் திட்டத்தை சரியாக முடித்துக் கொடுத்துவிட்டால், அடுத்து ஐந்து தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு நான் பொருளாதார மேம்பாடு அடைவேன்”

“ஏதேனும் வங்கியை கொள்ளையடிக்கப்போகிறாயா” என்றாள் சிரித்தப்படியே

என்ன பதில் சொல்லலாம் என்று சிலவினாடிகல் மவுனமாய் இருந்தபொழுது “கோவித்துக்கொள்ளாதே, நான் விளையாட்டாகத்தான் சொன்னேன்” என்றாள்

”வங்கியைக் கொள்ளையடிக்கும் வேலை இல்லை, ஆனால் நான் பார்க்கப்போகும் வேலையில் அதைவிட சவால்கள் அதிகம்”

கோஸியாவின் முகம் இறுக்கமாக, “நானும் விளையாட்டாகத்தான் சொன்னேன்” என்ற பொய்யை சொல்லிவிட்டு , பேஸ்புக் இணையதளத்தைத் திறந்து, டிராட்ஸ்கியின் முகப்புப் பக்கத்தை கோஸியவிடம் காட்ட முடிவு செய்தேன். மார்ச்சினும் இருப்பதால், அவளைத் தேற்றுவதற்கு வசதியாக இருக்கும் என்று , கோஸியாவையும் மார்ச்சினையும் அருகில் அழைத்தேன்.

டிராட்ஸ்கி திருமண கோலத்தில் இருக்கும் படத்தைப் பார்த்தவுடன், ஆங்கிலம், போலிஷ் மொழியில் கெட்ட வார்த்தைகளைக் கொட்டி விட்டு அழ ஆரம்பித்தாள்.

”மார்ச்சின், நீ அன்று சொன்னது சரிதான், டிராட்ஸ்கி நல்லவனாக இருக்க வாய்ப்பு இல்லை என்பது இன்று புரிகிறது”

கோஸியா வெடித்து அழ ஆரம்பிக்க, மார்ச்சின் அவனைத் தேற்றிக்கொண்டு இருந்தான்.

மாலை வரை கோஸியா யாருடனும் பேசாமல் வெறித்துப்பார்த்தபடி, ஏதோ ஏதோ எண்ண ஓட்டங்களுடன் அமர்ந்திருந்தவள், தன்னுடைய மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வந்து என்னருகில் வந்தமர்ந்தாள்.

“கார்த்தி, இங்கே பார், அவனை எத்தனை நம்பகமானவன் என நினைத்து இருந்தால், இத்தனை நெருக்கமாக புகைப்படங்களுக்கு காட்சியளித்து இருந்திருப்பேன், நம்பிக்கைத்துரோகி”

பலப்புகைப்படங்களைக்காட்டினாள், அவற்றில் சிலவை சாதரணமாக காதலர்கள் இருப்பது போல இருந்தாலும் சில படங்களை எங்கேயோ பார்த்தது போல இருந்தது. பொழுது போகாத நேரங்களில் இணையத்தில் கவர்ச்சிப்படங்களைத் தேடிக்கொண்டிருக்கையில் கிடைக்கும் சிலப்படங்கள் மனதில் அப்படியே நின்றுவிடும். அதில் ஒன்று கோஸியா உள்ளாடைகளுடன் டிராட்ஸ்கியின் தோள் பட்டையில் ஏறி யோகாசனம் வகையில் அமர்ந்திருக்கும் புகைப்படம். அவளுடைய மடிக்கணினியிலேயே, என் நினைவில் இருந்த அந்த இணையதளத்தைத் தேடி, டிராட்ஸ்கியின் முகம் மட்டும் மறைக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தைக் காட்டினேன்.

என் இனத்தவனால் , நம்பிக்கை, கண்ணியம் எல்லாம் பாழ்படுத்தப்பட்ட சூழலில் இருக்கும் ஒரு பெண்ணை தேற்றுவது கடினமாக இருந்தது. மார்ச்சினுக்கும் கோஸியாவிற்கும் அழுகையும் ஆத்திரமும் கலந்து நடந்து கொண்டிருந்த விவாதத்தில் இருந்து மெல்ல விலகிக்கொண்டேன். என்னுடைய ஸ்கைப்பில் என்னுடைய கொசோவா திட்டப்பணிக்கான மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் தமிழில் பேச ஆரம்பிக்க, தூரத்தில் மார்ச்சின் என்னுடைய பேச்சை அவனது கைபேசியில் பதிவு செய்து கொண்டிருந்ததை என்னுடைய போராளி மூளைச் சுட்டிக்காட்டியது.

தொடரும்