கால்கமார்க்கன் - சிறுகதை
எதிரில் இருக்கும் பெண்ணை கண்ணாலேயே காமுற்றுக் கொண்டிருக்கும்பொழுது அந்தப் பெண் "உனக்கு பேய்கள் மேல் நம்பிக்கை இருக்கின்றதா?" எனக் கேட்டால் எப்படி இருக்கும்.இதோ அவள் அழகில் சில வினாடிகள் முன் வரை புல்லரித்துப் போய் இருந்த நான், தற்பொழுது பயத்தில் மயிர் கூச்செறிய எழுந்து ஓடிவிடலாமா என்ற எண்ணத்தில் உட்கார்ந்து இருக்கிறேன்.
அவள் சுவிடீஷில் கேட்டது புரிந்தாலும் ஒரு முறை உறுதி படுத்திக் கொள்ள "வாட் டிட் யு ஸே" என்றேன்.
"இந்த உலகத்தில் பேய்கள் இருக்கின்றது என நம்புகின்றாயா" என மறுபடியும் ஆங்கிலத்தில் பதில் சொன்னாள்.
இவள் அரபிஸ்காவா , செர்பிஸ்காவா அல்லது தலைமுடியைக் கருப்பாக்கி இருக்கும் ஸ்வென்ஸ்க் மங்கையா என யோசித்துக் கொண்டே கண்களால் அவளைக் கட்டவிழ்ப்பு செய்து கொண்டிருந்ததை ஒரு வேளை கண்டுபிடித்து விட்டதனால்தான் இப்படி கேட்கிறாளோ. இவளைச் சரிகட்டிவிட்டால் அம்முவை எப்படிக் கழட்டி விடலாம் எனும் அளவிற்குச் சென்ற எண்ண ஓட்டத்திற்கு இவளின் இந்தக் கேள்வி அணைபோட்டது.
"சிறுவயதில் நம்பி இருக்கின்றேன், ஆனால் இப்பொழுது இல்லை, பேய்களை விட உன்னைப்போன்ற அழகான பெண்களிடம் தான் அதிகம் பயம் இருக்கின்றது" பேய் பயத்திலும் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு என்னுடைய முதல் கடலை விதையை தூவினேன்.
"நான் விளையாட்டிற்குக் கேட்கவில்லை, அந்த தானியங்கி கதவுகளைப் பார்த்தாயா !! தானாகவே திறந்து மூடுகின்றன, எனக்கு என்னமோ நம்மிருவரைத் தவிர இந்த அறையில் வேறு யாரோ ஒருவரும் உள்ளது போல தோன்றுகிறது" என்றாள் நிதானமான சுவிடீஷில்.
அவள் சொல்லுவதற்கு முன்னமே அந்த தானியங்கிக் கதவுகள் யாரும் உள்ளே வராமல் தானாகவே திறந்து மூடுவதைக் கவனித்திருந்தேன். காற்று அதிகம் இருப்பதனால் பறந்து வரும் இலைகள் அகச்சிவப்புக் கதிர் ஓட்டத்தை தடைப்படுத்துவதால் தானாகவேத் திறந்து மூடிக் கொண்டிருக்கின்றன என்ற எனது அறிவியல் அறிவு எப்பொழுதோ விளக்கி விட்டிருந்தது. எனது கடலையை அடுத்த நிலைக்குத் தள்ள ஒரு வாய்ப்பு கொடுத்த அவளின் பேய்க் கேள்விக்கு மானசீகமாக நன்றிச் சொல்லிவிட்டு , ஒரு இலையை எடுத்து நுழைவு வாயிலின் கதவின் முன் காட்டி அவளுக்கு நிறுபித்ததோடு மட்டுமல்லாமல், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவளின் தோளோடு தோளாக இருமுறை வேண்டுமென்ற உரசியும் பார்த்தேன். கோதுமை மாவு கணக்காய் வழுவழுவென இருந்தாள்.
நள்ளிரவு 12 மணிக்கு கார்ல்ஸ்க்ரோனாவிற்கான கடைசி ரயிலைப் பிடிக்கத்தான் இவளும் காத்திருக்கின்றாள் என்பது புரிந்தது. நானும் அதே ரயிலுக்காகத்தான் காத்திருக்கின்றேன். அம்மு குடிப்போய் இருக்கும் புதிய வீட்டில் தனியாக இருக்க பயமாக இருப்பதனால் கிளம்பி வரச்சொல்லி இருந்தாள். மணிரத்னம் படங்களில் வருவதைப்போல இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொள்வாள், கன்னத்தில் சில சமயங்களில் முத்தம் கொடுப்பாள், சில சமயங்களில் கன்னத்தைக் கடித்துக் கூட வைத்து விடுவாள். ஆனால் அதற்கு மேல் நான் இறங்க முயற்சித்தால் உனக்காக என் அப்பாவின் நம்பிக்கையை குலைக்க முடியாது என அழுகையுடன் சண்டை ஆரம்பிக்கும். கட்டிப்பிடித்தல் கண்ணத்தைக் கடித்தல் அப்பாவின் நம்பிக்கையை குலைப்பது ஆகாதா எனக் கேட்டால் கிடைப்பதுக் கூட கிடைக்காமல் போய்விடும் என்பதனால் தருவதைத் தரட்டும் எனவிட்டுவிடுவதுண்டு.
அவள் இருக்கும் தெருவின் பெயர் கால்கமார்க்கன்,கால்க என்ற சுவிடீஷ் சொல்லின் அர்த்தம் தூக்கில் இடுவது என்பதாகும்.சென்ற நூற்றாண்டில் அங்கு இருக்கும் தெருவில் தான் குற்றவாளிகளைத் தூக்கில் இடுவார்களாம். இதைச் சொன்னதால் தான் அம்முவுக்கு பயம்.
ஏற்கனவே வயதானவர்களின் அழு குரல்கள் கேட்பது போல இருக்கு அவளின் பயத்தோடு இதுவும் சேர்ந்து அவளின் பயத்தை இரு மடங்காக்கியது.வயதானவர்கள் கத்துவதுபோல இருப்பதற்கான காரணமும் எனக்குத் தெரியும். அம்மு இருக்கும் கால்கமார்க்கன் தெருவிற்கு
பின் சில அடிகள் தொலைவில் பால்டிக் கடல். பனிக்காலம் முடிந்து விட்டதால் கடலில் நீள் உறக்கத்தில் இருந்த சீல்கள் வெளியே வந்து தனது துணைகளை அழைக்க இப்படி கூச்சலிடும். அது நோய்வய்யப்பட்டவர்கள் கொஞ்சம் சத்தமாக முன்குவதைப்போல இருக்கும். ஆனால்
இதைச் சொல்லவில்லை. சொல்லாமல் கொஞ்ச நேரம் கெஞ்ச விட்டு, வந்தால் உதட்டில் முத்தம் கொடுப்பதாக அவள் உறுதி அளித்ததானால் சடுதியில் கிளம்பி இங்கு வந்தால் இப்படியான அதிர்ச்சி கலந்த இன்பமான திருப்பம். அங்கு பழம் என்றால் இங்கு பழத்தோட்டமே காத்திருக்கின்றதே!!
12 மணியாக இன்னும் 15 நிமிடங்களும், அதன் ரயில் பயணம் 15 நிமிடங்களும் இருப்பதனால் இவளிடம் எப்படியும் மின்னஞ்சல் வாங்கிவிடலாம் என மனதில் திட்டமிட்டுக் கொண்டே இந்த முறை அவளின் எதிரில் உட்காரமல் வலப்பக்கமாக நெருக்கமாகவே அமர்ந்து கொண்டேன். அளவான செய்ற்கை நறுமணத்துடன், பெண்ணின் வியர்வை வாசமும் கலந்து அடிக்கும் வாசனைதான் அவர்களின் அழகை மெருகூட்டுவதே !! அம்முவின் வாசத்தை விட இவளின் வாசம் உணர்ச்சிவசப்பட வைப்பதற்கான வீச்சு அதிகமாக இருந்தது.
ரயில் வரும் வரையில் நடந்த உரையாடல்களில் நான் தெரிந்து கொண்டவை, அவள் போலாந்து நாட்டைச் சேர்ந்தவள், அவளின் தாத்தா வீடு ரோன்னிபேயின் புறநகர்ப்பகுதிகளில் இருக்கின்றது, அவளின் தாத்தா இரண்டாம் உலகப்போரின் போது கொல்லப்பட்டார். வீடு அரசாங்கத்தின் பரமாரிப்பில் இருக்கின்றது. அம்முவின் வீட்டிற்குச் செல்ல நான் இறங்கப்போகும் ரயில் நிறுத்தமான பெரிஓஸா நிலையத்தில் தான் அவளும் இறங்கப்போகிறாள். ரயிலில் ஏறியபின்னரும் அவளின் அருகில் இருக்கும் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டேன்.
"நதியும் குன்றும் சந்தித்துப் பேசிக்கொள்ளும் இடம் என பெரிஓஸா வைப் பொருள் கொள்ளலாம்" என சுவிடீஷ் புலமையைக் காட்டி அசத்தலாம் என்ற பொழுது,
"தெரியும், குன்றும் நதியும் மட்டும் அல்ல, நானும் எனது நண்பர்களும் அங்கு தான் பேசிக்கொள்வோம்" எனச் சொல்லிச் சிரித்தாள். ரயில் பரிசோதகர் வர,அடுத்தப் பெட்டியில் அவளின் நண்பர்கள் இருப்பதாகச் சொல்லி சென்று விட்டாள். பயணச்சீட்டு எடுக்காமல் இருந்திருக்கலாம். பரிசோதகர் என் முன் அவளிடம் கேட்டால் அவளுக்கு அவமானமாக இருக்கும் சென்றிருப்பாள் என நினைத்துக் கொண்டேன்.
தோட்டத்தின் பழங்கள் தன் வசப்படாவிட்டால் ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என , கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என அம்முவை நினைத்தபடியே அடுத்த சில நிமிடங்கள் ஓட, நான் இறங்கும் நிறுத்தம் வந்ததும் , குறைந்த பட்சம் போய் வருகிறேன் என்று சொல்லி விடைபெற அந்த போலாந்துப் பெண்ணைத் தேடினேன். அவளைத் தேடி முடிப்பதற்குள் ரயில் நிறுத்த நடைமேடையில் அம்மு நின்றுகொண்டிருப்பதை பார்த்து விட்டு விடுவிடுவென இறங்கி
"நீ ஏன் ஸ்டேஷனுக்கு வந்த"
"ரொம்ப பயமா இருந்துச்சு, அதுதான் உன்னை ரிசீவ் பண்ண இங்கேயே வந்துட்டேன்"
இந்த ரயில் நிறுத்தத்திற்கும் கால்கமார்க்கன் தெருவிற்கும் 10 நிமிட நடைதான்.
"அந்த அழுவுற வாய்ஸ் சீல்கள் தன்னோடா பார்ட்னர்ஸைக் கூப்பிட கொடுக்கிற சிக்னல்டா அம்மு"
"தெரியும் கூகிள்ல கண்டுபிடிச்சேன், நம்ம ஊருல காக்கா முன்னோர்கள்னு சொல்ற மாதிரி, இங்கே சீல்கள் இறந்து போன ஆன்செஸ்டர்ஸாம்"
அம்முவின் வீடு இருக்கும் குடியிருப்பின் முனையை அடையும் பொழுது,
"கேம்பஸ் பின்னாடி இருக்கிற கடல் மேட்டுல வச்சி உனக்கு கிஸ் கொடுக்கவா" முகத்தை பவ்வியமாக வைத்தபடியேக் கேட்டாள்.
முழுநிலவு, கடல்காற்று, இதற்குமேலும் ரம்மியமான சூழல் கிடைக்காது என கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் கடல்பகுதிக்கு அம்முவை அழைத்துச் சென்றேன். குவிந்த அம்முவின் உதட்டின் அருகே மெதுவாக என் உதடுகளைக் கொண்டுச் சென்றபொழுது என்னை விலக்கிவிட்டு,
"நம்ம இரண்டு பேரைத்தவிர வேற யாரோ இங்க இருக்கிற மாதிரி இருக்குடா"
அந்தப்போலாந்து பெண் சொன்னதைப்போலவே அம்முவும் சொல்ல, பயம் மனதில் மெதுவாக கவ்வ ஆரம்பித்தது.
"இந்தக் கடல்ல சீல்களைத் தவிர வேற யார் இருக்கப்போறாங்க" என மீண்டும் அம்முவை முத்தமிட எத்தணித்தேன். காமம் பயத்தை ஓட வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. அணைக்கப்பட்ட முதுகு எண்ணைய் பசையில் இருக்கும் சப்பாத்தி மாவு போல இருக்க, போலாந்துப் பெண்ணின் மணம் என் நாசிகளில் மெதுவாக ஏற ஆரம்பித்தது. இறந்தவர்கள் சீல்களாக மறுபிறப்பு எடுப்பார்கள் என்ற நம்பிக்கையைப் பற்றி படித்தது மின்னலென வந்து மறையவும், எனது உடலும் பிசுபிசுப்பாக சீலாக மாறவும் சரியாக இருந்தது. அந்த பெரிஓஸா கடற்பகுதி முழுவதும் சீல்களின் கூட்டங்கள் ஓலமிட ஆரம்பிக்க,"இதோ கேம்பஸ் வரை போயிட்டு வரேன்னு" சொன்னவனை இன்னமும் காணவில்லையே என அம்மு கலக்கத்துடன் கால்கமார்க்கன் வீட்டில் தூங்க ஆரம்பித்தாள்.
11 பின்னூட்டங்கள்/Comments:
இதுக்கு தான் பேய் கதை நிறைய எழுத வேண்டாம்னு சொல்லறது , இப்ப பாருங்க !!!!
//ரோகிணிசிவா said...
இதுக்கு தான் பேய் கதை நிறைய எழுத வேண்டாம்னு சொல்லறது , இப்ப பாருங்க !!!!//
ரிப்பீட்டுகிறேன்...
நல்லா இருக்கு
என்ஜாய் பன்னி படித்தேன்
நம்மள் பாருங்க
www.jillthanni.blogspot.com
அருமை... இவ்வகை கதைகள் உங்களுக்கு கை வந்த கலை போலிருக்கிறது.. ஒரு முறை கடைசி பத்திகளை வாசித்து பார்த்தால் இன்னும் மெருகூட்டலாம்... (எங்கேயோ இடிக்குதுண்ணே!)
//தோட்டத்தின் பழங்கள் தன் வசப்படாவிட்டால் ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என , கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என அம்முவை நினைத்தபடியே அடுத்த சில நிமிடங்கள்//
அது.. அது தான் வரி. சிறுகதை பிரமாதம்.
அய்யய்யோஓஓஓஓஓஓஓஓஓ!
:)
கலக்கல்ண்ணே...
பாஸ்... ஆண் பேய்களை நீங்கள் பார்த்ததே இல்லையா! :D
நல்லாருக்கு... பேய் என்றால் உங்களுக்கு கைவந்த கலை ஆச்சே... :-)
எப்படி இப்படியெல்லாம் யோசனை பண்றிங்க?! கதையோட்டம் நல்லா இருக்கு!
Post a Comment