Thursday, June 19, 2008

வா ஜெனி, போயிடலாம் - சிறுகதை

கார்த்தியை அந்த பிள்ளையார் கோவிலின் மதிலின் அருகே பார்த்த பொழுது முதன்முறையாக ஜெனிநடுங்கிப்போனாள். கார்த்தியின் ஒவ்வொரு அசைவுகளும் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருந்த நாட்கள் எப்படி மாறிவிட்டன.அவனைப் பார்த்ததும் தன்
கழுத்தில் அணிந்திருந்த சிலுவையை இறுக்கமாக பிடித்துக்கொண்டே “கார்த்தருக்கு தோத்திரம்” என முணுமுணுத்துக்கொண்டே வேகமாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிய அவளை பின் தொடர்ந்த கார்த்தி

“வா போயிடலாம், ஜெனி, உனக்காக இங்கேயே காத்திருப்பேன்” என்று சொன்னது மட்டும் அவள் காதில் விழுந்தது.

வீட்டிற்கு வந்து சேர்ந்து அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்து அழுது முடித்துவிட்டு அம்மாவிடம் ஏதும் சொல்லாமல் பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள். பயம்,துக்கம் வருத்தம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது போல இருந்தது. கார்த்தியும் ஜெனியும்
உயிருக்கு உயிராக காதலித்தவர்கள். கார்த்தியுடன் போய்விட ஜெனிக்கு விருப்பம்தான், இருந்த போதிலும், அப்பா இறந்த பிறகு கண்ணும் கருத்துமாக தன்னை வளர்த்த அம்மாவை நிராதரவாக விட்டு செல்ல அவள் மனசாட்சி விட்டுக்கொடுக்கவில்லை.

பைபிளை மூடி வைத்து ஜெனி சற்று கண்ணயர்ந்த போது பைபிளின் மேல் வைத்திருந்த கைத்தொலைபேசி அடித்தது.

“ஜெனி,நான் கார்த்தி பேசுறேன், இரண்டு நாட்களாக உனக்காக காத்திருக்கின்றேன், நீ இன்னும் வரல, கடைசி வரை இருப்பேன்னு சொன்ன, ஆனால் கடைசிக்குப்பிறகு வரமாட்டியா? நான் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ எப்படி உனக்கு எப்படி மனசு வருது, ஆத்மார்த்தமானது நம் காதல்னு சொன்ன, நான் ஆத்மாவாக இருக்கிறப்ப ஏன் என்னைப்பார்த்து பயப்படுற? எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிற கடைசி நிமிசம் வரை உன்னைதான் நினைச்சுட்டு இருந்தேன், சீக்கிரம் வா காத்திருக்கிறேன்” என கார்த்தி சொல்லி முடிக்க அழைப்பு துண்டிக்கப்பட்டது.

சரியாக மணி பனிரண்டு அடிக்க, அம்மாவிற்காக வாங்கி வைத்திருந்த தூக்க மாத்திரைகளை எண்ண ஆரம்பித்தாள். மொத்தம் 18 இருந்தது. மூன்றாவது மாத்திரையை வாயில் போடும்பொழுது திரைச்சீலை விலகி இருந்த சன்னலுக்கு வெளியே கவனித்தாள். அவள் அப்பா நிற்பது போல இருந்தது. உண்மைதான் அவர் இறந்த அன்று போட்டிருந்த உடையுடன் அங்கு நின்று கொண்டிருந்தார்.

”ஆக்ஸிடெண்ட்ல, நான் போனப்ப, அம்மாவும் உன்னை மாதிரியே முடிவு எடுக்க நினைச்சிருந்தா நீ, இந்த நிலைக்கு படிச்சு முன்னுக்கு வந்து இருக்க முடியுமா, துக்கத்தை விட்டுட்டுப்போகனும்னா எல்லோரும் செத்துதான் போகனும்.. இந்த நிலையும் மாறும்.. இந்த முடிவு வேண்டாம்”

என ஜெனியின் அப்பா அவளது காதில் சன்னமாக கூறுவது போல இருந்தது. திரைச்சீலையை மூடிவிட்டு தீர்க்கமான முடிவுடன் மாத்திரைகளை மீண்டும் இருந்த இடத்தில் வைத்துவிட்டு அவளது அப்பா கடைசியாக எழுதி வைத்திருந்த நாட்குறிப்பு புத்தகத்தை எடுத்து தலைமாட்டில் வைத்துக்கொண்டு தூங்கிப்போனாள்.

*********************

Wednesday, June 18, 2008

மாற்றி அடி - Reverse Sweep - கெவின் பீட்டர்சன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரிடம் ரிவர்ஸ் ஸ்வீப் என்ற பதத்தை சிலகாலம் முன்பு வரை உபயோகித்தால், அவர்களுக்கு 1987 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றுப்போனது நினைவுக்கு வந்து தொலையும். அந்தக் காலத்தில் சற்றுக் கடினமான வெற்றி இலக்கான 254 எடுத்தால் வெற்றி என்று ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு நிர்ணயித்து, இங்கிலாந்து துடிப்பாக இலக்கைத் துரத்திக் கொண்டிருக்கையில் , 135/2 என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தலைவர் அலன் பார்டர் பந்து வீச வருகிறார். ஆஹா,அல்வா மாதிரியான பந்துவீச்சு என குதுகலத்துடன் மைக்கேட்டிங் ரிவர்ஸ் ஸ்வீப் வகையில் ஆட , மட்டையில் பட்டு பந்து , மேலே எழும்பி நேராக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கையில் தஞ்சம் புகுந்தது. சுறுசுறுப்பாக ஆடிக்கொண்டிருந்த மைக்கேட்டிங் ஆட்டமிழந்ததும் , பின்வரிசை ஆட்டக்காரர்களில் அலன் லேம்பைத் தவிர வேறு யாரும் நிலைத்து ஆடாமல் கடைசியில் வெறும் 7 ரன்களுக்கு உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி இழந்தது. அந்த நேரத்தில் தேவை இல்லாத மைக்கெட்டிங்கின் ரிவர்ஸ் ஸ்வீப் ,இங்கிலாந்தின் பரம வைரிகளான ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தின் துவக்கமாக அமைந்தது எனவும் சொல்லலாம்.



ஆட்டவிபரம் இங்கே

முதன் முதலாக பாகிஸ்தானின் ஹனீப்முகமது இந்த வகையான ரிவர்ஸ் ஸ்வீப் ஆட்டமுறை ஆட ஆரம்பித்திருந்தாலும் இதைப்பிரபல படுத்தியவர் அவரின் சகோதரர் முஸ்தாக் முகமதுதான். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வேகமாக ரன் எடுக்கும் முயற்சியின் போது இந்த வகையான ஆட்டத்தை,ஆட்டமிழந்துவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருந்தும் மட்டையாளர்கள் வெளிப்படுத்துவார்கள். டெண்டுல்கர் கூட சில சமயங்களில் இந்த வகையில் வெற்றிகரமாக ஆடுவார்.



வழக்கமாக ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுபவர்கள் மட்டையைப் பிடிக்கும் விதத்தை மாற்றாமல் வலதுகை ஆட்டக்காரராக இருந்தால் இடது கை ஆட்டக்காரர்போலவும் இடதுகை ஆட்டக்காரராக இருந்தால் வலது கை ஆட்டக்காரர் போல ஆடுவதாக தெரியும். இடது கை ஆட்டக்காரர்களில் ஆண்டிபிளவர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆக மாற்றி அடிக்கும் கலையை அருமையாக தன்வசம் வைத்திருந்தவர்.

கடந்த உலகக்கோப்பை ஆட்டம் ஒன்றில் இக்கட்டான நிலையில் இங்கிலாந்தின் இடது கை ஆட்டக்காரர் பால் நிக்ஸன் இலங்கையின் முரளீதரன் பந்தை வலதுகை ஆட்டக்காரர்போல சிக்ஸர் அடித்தார்.



முதன்முறையாக இந்த வகையான ரிவர்ஸ் ஸ்வீப் , மாற்றி அடித்தல் ஆட்டமுறை கிரிக்கெட் ஆர்வலர்களால் கடந்த சில நாட்களாக அலசப்படுகிறது. காரணம் கெவின்பீட்டர்சன். இங்கிலாந்து அணியின் வலதுகை மட்டையாளரான இவர், நியுசிலாந்து அணிக்கெதிராக ஜூன் 15 , 2008 அன்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நியுசிலாந்தின் ஸ்காட் ஸ்டைரிஸின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் விதத்தில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார்.


இரண்டு சிக்ஸர்களும் பாரட்டப்பட்ட அதே வேகத்தில் விமர்சனங்களும் ஆரம்பித்தன. சிக்ஸர்களை விளாசியபோது, வலது கை ஆட்டக்காரரான அவர், இடது கை ஆட்டக்காரர்கள் பிடிப்பது மட்டையைப்பிடிக்கும் விதத்தை மாற்றியதுதான். பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்பொழுது கைகளை மாற்றி வீசுவதற்கு முன்னால் நடுவரிடம் தெரிவிக்க வேண்டும். அதே விதி மட்டையாளர்களுக்குப் பொருந்தாதா என கிரிக்கெட் விமர்சகர்கள் , முன்னாள் ஆட்டக்காரர்கள் குறிப்பாக மேற்கிந்தியதீவுகளின் முன்னாள் ஆட்டக்காரர் மைக்கெல் ஹோல்டிங் விவாதக்கனலை ஆரம்பிக்க,கிரிக்கெட் விதிமுறைகளுக்குப் பொறுப்பான Marylebone Cricket Club(MCC) தலையிட்டு இந்த வகையான ”மாற்றி அடித்தல்” விதிமுறைகளுக்குட்பட்டது எனவும், இந்த புதுவகையான ஆட்டம் கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கவல்லது எனவும் அறிவித்தது.

இந்த இரண்டு சிக்சர்களைப் பற்றி கெவின் பீட்டர்சனிடம் கேட்டபொழுது, முந்தைய இரவு படுக்கையில் மட்டையைபிடிக்கும் விதத்தை இடது கை ஆட்டக்காரர்கள் பிடிப்பது போல் பிடித்து பந்தை விளாசுவதை கற்பனை செய்து பார்த்து அதை ஆடுகளத்தில் நிறைவேற்றினாராம். கெவின் பீட்டர்சன் இதற்கு முன்பு ஒரு முறை இலங்கைக்கெதிராக 2006 ஆம் ஆண்டு எட்பாக்ஸ்டனில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டம் ஒன்றில் தான் ஆட்டமிழப்பதற்கு முந்தையப் பந்தை முரளிதரன் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து உள்ளார். அந்த சிக்ஸரின்போது அவர் மட்டைப்பிடிக்கும் விதத்தை மாற்றாததால் பிரச்சினை ஒன்றும் எழுப்பப்படவில்லை.



முன்பு ஒரு முறை ஜிம்பாப்வே அணியின் டௌக்லஸ் மரில்லியர் விக்கெட் கீப்பர் தலைக்கு இந்திய பந்துவீச்சை சிக்ஸர்களாக அடித்து ஒரு ஆட்டத்தை வெற்றி பெறச் செய்தார். அதன்பின்பு அப்படி ஆடும் முறைக்கு மரில்லியர் ஷாட் என பெயர் வந்தது. இனி மட்டையைப்பிடிக்கும் விதத்தை மாற்றி ,ரிவர்ஸ் ஸ்வீப் செய்யப்போவது “பீட்டர்சன் அடி” என வழங்கப்படலாம். ரிவர்ஸ் ஸ்வீப் என்றால் ஒரு நேரத்தில் எட்டிக்காயாக கசந்த இங்கிலாந்து ஊடகங்களுக்கு இந்த பீட்டர்சன் அடி இப்பொழுது தித்திக்கின்றது. எது எப்படியோ ஏற்கனவே சுவாரசியமான கிரிக்கெட் ஆட்டங்களில் இது போன்று அவ்வப்பொழுது ஆடுகளத்தில் நடக்கும் விசயங்கள் கிரிக்கெட் பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றி அடி ரிவர்ஸ் ஸ்வீப் பற்றி பிரபலங்கள்

"Now that he has played that shot against Styris, I can finish off what I tried to say so many years ago. The argument is, if the batsman can change from being right-handed to left-handed, there shouldn't be a problem with a bowler changing from being right-handed to left-handed, either, without having to tell the umpire, nor should he have to tell the umpire if he is going over or round the wicket."
Michael Holding

"It just should be outlawed straightaway. If you want to hit to one side of the field, you've got to do it in a cross fashion, and not swap the way you're facing or your grip. Otherwise you are going to start to allow the bowlers to go round the wicket, over the wicket, and keep swapping during their run-ups."
Ian Healy

"I wasn't working on that game. I was watching it on television and I nearly jumped out of my seat. I thought he was absolutely brilliant, and it was a stroke of genius."
The ever-excitable David Lloyd manages to get even more excited

"That was outrageous. I hope he tries it on me. I might have more chance of getting him out."
Shane Warne

"If he [the batsman] is going to do that then you tell your bowler to bowl short into his ribs - and we have three leg slips and a gully [in case you have three slips and a gully to begin with]. If the batsmen is being so cute and clever, then I am going to say, 'Right, you are having a bit of Bodyline son'."
Nasser Hussain

"It incurs a great deal of risk for the batsman. It also offers bowlers a good chance of taking a wicket and therefore MCC believes that the shot is fair to both batsman and bowlers."
The MCC, after much deliberation, rules in favour of Pietersen


Sunday, June 15, 2008

தமிழ்மணம் நிர்வாகிகளுடன் சந்திப்பு, ஜூன் 15 2008

தமிழ்மணம் நிர்வாகிகளான தமிழ்சசி மற்றும் சொர்ணம் சங்கரபாண்டி ஆகியோர் சென்னைப்பதிவர்களை சந்தித்து தமிழ்மணம் பற்றி கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் ‘விவசாயி' இளாவும் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். நான் நீண்ட காலமாக சந்திக்க வேண்டும் என நினைத்திருந்த "பண்புடன்” ஆசிப் அண்ணாச்சியும் அங்கு வந்திருந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.தனித்தனி அறிமுகங்களுடன் கலந்துரையாடல் ஆரம்பமானவுடன் , பதிவர்களின் தமிழ்மணம் தொடர்பான கேள்விகளுக்கு சொர்ணம் சங்கரபாண்டியும் தமிழ்சசியும் பதில் சொல்ல ஆரம்பித்தனர்.



(புகைப்படம் நன்றி: பத்ரி)


தமிழ்மணம் அறிவித்திருந்த விருது பற்றி ஏதும் பின்னறிவிப்பில்லையே என்றக் கேள்விக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தில் தானியங்கியாக ஓட்டளிக்கும் முறையில் விருது வழங்கும் முறை முடிவுசெய்யப்பட்டிருந்ததாகவும் , ஆனால் தொழில்நுட்ப வேலைகள் குறித்த காலத்தில் முடிவுபெறாமையால் இந்த வருட இறுதிக்குள் தொழில்நுட்ப வேலைகள் முழுமை செய்யப்பட்டு , அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று சங்கரபாண்டி பதிலளித்தார்.

இடுகைகளின் வகைப்படுத்தல் இனிவரும் காலங்களில் முற்றிலுமாக நீக்கப்பட்டு குறிச்சொற்கள் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படும் என்று தெளிவுப்படுத்தினர்.

பூங்கா பற்றிய எதிர்பார்ப்புகள் மீண்டும் ஒரு முறை அலசப்பட்டன. இந்த வருட இறுதிக்குள் வரும் என நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.

தனிப்பட்ட இடுகைகளைப் பரிந்துரைக்கும் முறை மாற்றப்பட்டு பயனர் கணக்குடன் கூடிய தெரிவுகள் முறைக் கொண்டுவரப்படும் என தமிழ்சசி அறிவித்தார்.

பின்னூட்டம் இட்டவர்களின் பெயர்களின் வீக்கம் அவர்கள் இட்ட பின்னூட்டத்திற்குநேர்மாறலானது என்றும் 'ம' திரட்டியை பிரபல்யப்படுத்தும் நோக்குடன் முகப்பில் வைக்கப்பட்டதாகவும் சசி மேலும் சொன்னார்.

தேன்கூடு போட்டிகள் போல போட்டிகள் அறிவித்தல் ஒரு கவனக்குவிப்பைக் கொண்டு வந்து பதிவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்து அது நல்ல தரமான பதிவுகளை கொண்டு வரக்கூடும் என்றக் கேள்விக்கு போட்டிகளை பதிவர்கள் குழுக்களாக அமைந்து நடத்திக்கொண்டால், அதற்கு தமிழ்மண முகப்பில் இடமளிக்கப்படும் என சங்கரபாண்டி உறுதி அளித்தார்.

சில இடுகைகள், சிலபதிவர்களின் ஒட்டு மொத்தப் பதிவுகளும் ஏன் நீக்கப்பட்டன என்றக் கேள்விக்கு சிலவிதிமுறைகளுக்குட்பட்டு அவை நீக்கப்பட்டன என்றும் ,இருந்த போதிலும் தனிப்பட்ட வகையில் அவர்களின் பதிவுகளை தான் படித்துவருவதாகவும் சொர்ணம் சங்கரபாண்டி கூறியபோது பார்வதி அரங்கில் நிரம்பி இருந்த பதிவர்களின் மத்தியில் சிரிப்பலை பரவியது.

பின்னூட்ட உயரெல்லை மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் தற்போது சோதனை வடிவம் இருப்பதால் பின்னூட்ட உயரெல்லை தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

தமிழ்மணம் இயங்காத காலங்களில் வலைப்பூக்களுக்கு கருவிப்பட்டையின் காரணமாக ஏற்படும் பிரச்சினை சரிசெய்வதாக தமிழ்சசி உறுதி அளித்தார்.

* லக்கிலுக் தமிழ்மணம் டீ-ஷர்ட்டில் வந்திருந்தர்.

* டி.பி.ஆர் ஜோசஃப் சாரை நீண்ட நாட்களுக்குப்பின்னர் பதிவர் சந்திப்பில் சந்திக்க முடிந்தது.

* இளவஞ்சி,வளர்மதி,டாக்டர் ப்ரூனோ,இளா ஆகியோரை முதன் முறையாக சந்தித்த பொழுது மனம் உவகைக் கொண்டது.

* புதுப்பதிவர்களான ஜிங்கார ஜமீன் மற்றும் அதிஷா ஆகியோர் கலந்துரையாடலை கவனமாக பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

* தமிழ்சசி முக அமைப்பில் இன்னொரு பிரபல பதிவரைப்போலவே அச்சு அசலாக இருந்தார்.

* இந்த வார தமிழ்மண நட்சத்திரம் ஜேகே வும் சந்திப்பில் கலந்து கொண்டது மிகப்பொருத்தமாக இருந்தது.

* சந்திப்பில் கலந்துகொண்ட ஏனைய பதிவர்கள் பத்ரி,ஐகாரஸ்பிரகாஷ், டோண்டு ராகவன்,ஜ்யோவ்ராம் சுந்தர்,பைத்தியக்காரன்,சுகுணாதிவாகர்,முரளிக்கண்ணன்,நந்தா,உண்மைத்தமிழன்,லிவிங்ஸ்மைல்வித்யா,
கடலையூர் செல்வம்,மக்கள் சட்டம் சுந்தர்ராஜன்,நடைவண்டி ஆழியூரான், ஜெயகார்த்தி,ராம.பாலன்,வாதி சரவணன்,ஆடுமாடு மற்றும் சோமன்.


* சந்திப்பை ஒருங்கிணைத்த பாலபாரதிக்கு நன்றிகள்.

தேநீர் அருந்திய பின்னர் பதிவர்கள் தனித்தனி குழுக்களாக கதைக்க ஆரம்பித்தனர். உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவராக விடைபெற்றனர்.வலைப்பதிவுலகில் மற்றும் ஒரு உற்சாகமான மாலைப்பொழுதாக தமிழ் வலையுலகம் அடுத்தக் கட்டத்தை நோக்கி மெல்ல நகர்கிறது,நகரும் என நம்பிக்கையோடு கழிந்தது.

Friday, June 13, 2008

தசாவதாரம் பட விமர்சனமும் டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் கூத்தும்





தசாவதாரம் படத்தைப்பற்றி எந்த வகையிலும் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. இங்கு விசயம் விமர்சனம் பற்றியதல்ல, நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ விமர்சனம் எழுத எல்லோருக்கும் உரிமை உண்டு. பிரச்சினை படத்தின் இயக்குனர் என்ற இடத்தில் கமலஹாசன் என்றிருப்பதுதான்.

விமர்சனம் எழுதியவர் நிக்கத் காஸ்மி. இவர் 20 வருடங்களுக்கு மேலாக இந்தப் பத்திரிக்கையில் திரைப்படங்கள் பற்றி எழுதிவருபவராம். சிறந்த சினிமா விமர்சகராம், இவர் ஒரு படத்தின் இயக்குனர் யார் எனத் தெரியாமலேயே படத்தைப் பற்றி விமர்சனம் செய்துள்ளது வருந்ததக்கது. உண்மையிலேயே இவரே எழுதி இருப்பாரா, அல்லது மண்டபத்தில் யாரேனும் எழுதிக் கொடுத்து வலையேற்றி இருப்பார்களா என்பது Times OFF India க்குதான் வெளிச்சம்.

கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்குப்பின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் என சரிசெய்து இருக்கிறார்கள்.



தசாவதாரம் படத்தைப் பற்றி Times of India வின் இணைய விமர்சனத்தின் சுட்டி இங்கே.
http://timesofindia.indiatimes.com/moviereview/3127454.cms


-----

தசாவதாரம் பட விமர்சனங்கள்

1. பினாத்தல் சுரேஷ்

2. வெட்டிப்பயல்

3. அபிஅப்பா

4. பரத்

5. சிறில் அலெக்ஸ்

6. ரீடிப் விமர்சனம் ஆங்கிலத்தில்

7. சினிமா நிருபர்

8. மைபிரண்டு

9. லக்கிலுக்

10. ஜி.ராகவன்

தசாவதாரம் படம் வெற்றி அடைய வாழ்த்துகள்

Tuesday, June 10, 2008

மீதமான உணவு - சிறுகதை

ரம்யாவிற்கு வருத்தமோ கோபமோ இருப்பது தெரிந்தால் நான் செய்யும் முதற்காரியம், அவளை வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் செல்வது தான். அதிகாலையிலேயே எழுந்து எங்களது அலுவலக நண்பர்களின் வருகைக்காக பலவகையான கூட்டுக்களுடன் மதிய உணவைத் தயாரித்து வைத்திருந்து , உறுதியளித்திருந்த படி சிலர்
வராததுதான் ரம்யாவின் வருத்ததிற்குக் காரணம்.

ரம்யாவிற்கு உணவு மீதமானாலோ, யாராவது அதிகமாக தட்டில் போட்டுக்கொண்டு அதை சாப்பிடாமல் போனாலோ அத்தனை கோபம் வரும். சின்ன வயசில அரைவயிறு கால்வயிறு சாப்பிட்டிருந்தால் சாப்பாட்டோட அருமை தெரியும் என அடிக்கடி என்னிடம் சொல்லுவாள்.

“கிருஷ்ணமூர்த்தி , வாசுதேவன் கிட்ட எத்தனை தடவை சொன்னோம் கண்டிப்பாக பேமிலியோட வரச்சொல்லி, அட்லீஸ்ட் காலையிலவாது வர முடியாதுன்னு சொல்லி இருக்கலாம், குறைச்சு சமைச்சிருப்பேன்... “

“பராவாயில்லை ரம்யா,வராதவங்களா பத்தி ஏன் பேசனும்...அஜீஸ் , சேவியர் பேமிலிஸுக்கு இன்னக்கி மறக்க முடியாத லஞ்சுன்னு சொல்லிட்டுப்போனாங்கள்ல, அதை நினைச்சு சந்தோசப்படு , மீதமான சாப்பாட்டை நைட் டின்னர் ல காலி பண்ணிடுவோம்..டோண்ட் வொரி”

“ம்ஹூம், அப்படியும் நாலு பேரு சாப்பிடுற அளவுக்கு சாப்பாடு மீதி இருக்கும் ”

தொடர்ந்து கோவிலை நோக்கி நடந்து கொண்டிருக்கையில் எங்களது வீட்டில் இருந்து நான்கு வீடு தள்ளி புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு எளிமையான வீட்டின் அருகே
ஒரு கணம் நின்று என்னைப் பார்த்தாள். கட்டிடம் கட்டுபவர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த குடிசையின் வாசலில் கணவன் மனைவி தங்களது மூன்று குழந்தைகளுடன் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

அந்தக் கணவன், மனைவி மேலும் சிலபேருடன் அந்த வீட்டைக் கட்டும்
பணியில் ஈடுபட்டிருப்பதை நான் வாரநாட்களில் பார்த்திருக்கின்றேன். அந்த வீடு கடைசி மூன்று மாதங்களாக மெதுவாக வளர்ந்து வருகிறது. ஒரு மாத இடைவெளியில் மாளிகை மாதிரி வீடுகளே எழும்பும் இந்த காலத்தில், இப்படி மெதுவாக வேலை நடப்பது ஆச்சரியமாக இருக்கும். வீடு கட்டுபவருக்கு என்ன பிரச்சினையோ. என யோசித்துக் கொண்டிருந்தபொழுது ரம்யா என் தோளைத் தொட , அதன் காரணத்தைப் புரிந்து கொண்ட நான்

மெல்லியத்தயக்கத்துடன் , நான் அந்தக் கட்டிடத்தொழிலாளியை அணுகி

“வீட்டில விருந்து செஞ்சோம் கொஞ்சம் சாப்பாடு இருக்கு, தந்தால் சாப்பிடுவிங்களா?” ஏதாவது கடினமாக சொல்லி மறுத்துவிடுவாரோ என்ற பயத்துடனேயே கேட்டேன்.

ஒரு கணம் யோசித்த அவர், தனது காலைக்கட்டிக்கொண்டிருந்த குழந்தைகளை தலையில் தடவிக்கொடுத்துவிட்டு “இருங்க சார், பாத்திரம் எடுத்துட்டு வரேன்”

கட்டிடத்தொழிலாளியை அழைத்துக்கொண்டு நானும் ரம்யாவும் வீடுத் திரும்பியபின், அவர் கொண்டு வந்திருந்த பாத்திரம் சாப்பாடு மற்றும் உடன் உணவு வகையறாக்களை வைக்க போதுமானதாக இல்லாததால் எங்கள் வீட்டில் இருந்த சில கிண்ணங்களில் அனைத்து சாப்பாட்டையும், கூட்டு வகையறாக்களையும்,குழம்பு வகைகளையும், வாழை இலைகளையும் கொடுத்தனுப்பினாள்.

இப்பொழுது ரம்யாவின் வருத்தம் கொஞ்சம் தணிந்திருந்தது அவளின் முகத்தில் தெரிந்தது. எல்லா உணவையும் கொடுத்துவிட்டதால் வெளியே உணவகம் போய் சாப்பிடலாம் என முடிவு செய்து, நானும் ரம்யாவும் அந்த கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டைக் கடக்கையில் கட்டிடத்தொழிலாளி அவரின் மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக சாப்பிட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த ரம்யா என்னிடம்

“கிருஷ்ணமூர்த்தி பேமிலியும், வாசுதேவன் பேமிலியும் லஞ்சுக்கு வராதது நல்லது தான், ” சொன்ன பொழுது அவளின் முகத்தில் கோவிலுக்கு சென்று வந்த மகிழ்ச்சிக்களைத் தெரிந்தது.
*****

Wednesday, June 04, 2008

Hypocrites - சிறுகதை

சாப்பாடு மேசையில் வைத்திருந்த மிளகுத்தூள் கிண்ணத்தை உருட்டியபடியே நான் ஜெனியிடம் "நம்ம எம்.டி மோகன் மாதிரி ஒரு ஹிப்பொகிரட்டை நான் பார்த்ததே இல்லை"

"ஏன் கார்த்தி, அப்படி சொல்லுற?"

"கடவுள் பக்தி ஒரு வீக்னெஸ், தன்மேல நம்பிக்கை இல்லாதவன் தான் கடவுள்,பூஜை பின்னாடி போவான் அப்படின்னு சொல்லுறவரு, நம்ம புரஜெக்ட் சக்ஸஸுக்காக ஒரு சாமியாரைக் கூப்பிட்டு பூஜை செய்யப்போறாராம், ராப்பகலா கஷ்டப் பட்டது நாம... தாங்க்ஸ்
கடவுளுக்கு, இதை வேறயாராவது செய்து இருந்தா ஒன்னுமே தெரிஞ்சுருக்காது, சீர்திருத்தவாதி மாதிரி பேசிட்டு இப்படி செய்றதை ஜீரணிச்சுக்க முடியல"

"டேக் இட் ஈசி கார்த்தி, அந்த சாமியார் வரதுனால உனக்கு என்ன நஷ்டம், அந்த புரஜெக்ட் கிளையண்ட், வரப்போற சாமியோரட பக்தர் வேற , "

நான் இந்த சாமியார் பற்றி என்னோட கல்லூரித் தோழி ரம்யா சொல்ல நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ரம்யாவிற்கு அந்த சாமியரின் போதனைகள் மிகவும் பிடிக்கும். அவரது புத்தகங்கள் ஏதாவது ஒன்றை வைத்து எப்போதும் வாசித்துக்கொண்டிருப்பாள். நான் ஆன்மீகத்தையும் பக்தியையும் , குறிப்பாக இந்த சாமியரை மட்டம் தட்டி பேசுவதினால் எங்களுக்கிடையில் ஆன பெரும்பாலான தொலைபேசி உரையாடல்கள் சண்டையில் தான் முடியும். தான் கல்யாணம் செய்து கொண்டால் ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து கொள்வேன் என அடிக்கடிச் சொல்லுவாள்.

ஜெனி அலுவலகத்தில் என் உடன் வேலை பார்க்கும் பெண். அவளின் சேவை மனப்பான்மை
காரணமாக, அவளின் மத ஈடுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எனக்குப்பிடிக்கும். இந்த மக்களுக்கு ஏதாவது சின்ன உதவிகள் செய்துகொண்டே இருக்கனும் என்று எப்போதும் சொல்லுவாள். அவளின் தாக்கத்தினால் நான் கூட வார இறுதிகளில் ஏதேனும் ஆசிரமங்கள்,ஆதரவற்றோர் இல்லங்கள் போய் அங்கிருக்கும் மக்களுடன் சிறிது நேரம் செலவிட்டு வருவது உண்டு.

"இது பர்ஸ்ட் டைம் இல்லை, போன வாரம் ஏதோ ஒரு அல்லேலூயா கும்பலுக்கு ஓசில ஒரு வெப்சைட் செஞ்சு தர சொன்னாரு, நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்"

அல்லேலூயா கும்பல் என்றவுடன் ஜெனியின் முகம் மாறியது.

"கார்த்தி, உன்னால் வார்த்தைகளில் ஏளனம் இல்லாமல் உன்னால பேச முடியாதா ?"

என்னிடம் ஜெனிக்குப் பிடிக்காத ஒரே விசயம், நான் அவள் நம்பிக்கை சார்ந்த விசயங்களை சகட்டுமேனிக்கு எள்ளலாகப் பேசுவதுதான்.

"இதப்பாரு ஜெனி, டோண்ட் கெட் பர்சனல், நான் சொல்ல வந்தது சாமி, பூஜை , சடங்கு எல்லாம் இருக்க வேண்டியது இல்லைன்னு சொல்லிட்டு அதே விசயங்களை தனக்கு சாதகமாக இருக்கிறப்ப செய்வதுதான் எரிச்சலா இருக்குன்னு சொன்னேன்... "

"ம்ம்" ஜெனி மவுனமாக தலையாட்டிக் கொண்டே சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு முடி எனக் கைக்காட்டினாள்.

சாப்பிட்டு முடித்துவிட்டு அலுவலகம் வரும் வழியில் ஜெனியே ஆரம்பித்தாள்.

"கார்த்தி, கொள்கைகளுக்கும் பிசினஸுக்கும் சம்பந்தம் கிடையாது.. எனக்கு எப்பவுமே நம்ம எம்.டி மேல பெரிய அபிப்ராயம் கிடையாது.. பிசினஸ் அவரோட ரிலிஜன், எலைட் சொசைட்டி அவரோட ஜாதி, இங்கிலீஷ் அவரோட மொழி அவரு செய்ற ஒவ்வொரு
விசயமும் தன்னோட வியாபர வெற்றிக்குத்தான்... அந்த கிறிஸ்தவ அமைப்பின் ஹெட் குவார்ட்டர்ஸ் சுவீடன் ல இருக்கு.. வெப்சைட்டை இலவசமா அந்த அமைப்புக்கு செஞ்சுதரதுனால ஏதாவது பிஸினஸ் லிங்க் எஸ்டாபிலிஷ் ஆகும் அப்படிங்கிற ஹிட்டன்
அஜண்டா வச்சிருப்பாரு . ஒன்னு தெரியுமா, அந்த வொர்க்கை என்னிடம் தான் கொடுத்தாரு...என்னோட எமொஷனல் அட்டாச்மெண்ட்டை சரியா பயன்படுத்திக்கிட்டாரு... அவரு ஒரு பக்கா பிசினஸ்மேன்.. சாதகமான ஆப்பர்சுனிட்டிஸ் முன்ன கொள்கை கத்தரிக்காய் எல்லாம் நீ எதிர்பார்க்கறது முட்டாள்தனம்"

"ம்ம்ம்"

"இந்த அப்ரைசல்ல நல்ல சாலரி ஹைக் வாங்கினோமா, அமைதியா இருந்தோமான்னு இல்லாம, எல்லாத்தையும் போட்டு குழப்பிக்காதே"

எனக்கும் ஜெனி சொல்லுவது சரிதான் என தோன்றியது. இந்த ஆகஸ்ட் வந்தால் நான்கு வருடம் ஆகிறது. நல்ல சம்பள உயர்வுடன் வேறு வேலை தேடவேண்டும் என முடிவு செய்தேன்.

பூஜை தினத்தன்று, மோகன் என்னை சாமியாரிடம் கூட்டிச்சென்று , 'கார்த்தி தான் அந்த வெற்றிகரமான திட்டத்திற்கு பொறுப்பாளர்' என்று அறிமுகப்படுத்தி வைத்தார். சாமியாரும் தட்டில் இருந்த ஒரு ஆப்பிளை எடுதது அரையடி உயரத்தில் இருந்து என் கையில்
போட்டார். அந்த சாமியார் அப்படித்தான் பழங்களைக் கொடுப்பார் எனக் கேள்விப்பட்டு இருந்ததால் பெரிய வருத்தம் ஏதுமில்லை. ஒரு ஆப்பிள் லாபம்தான் என நினைத்துக்கொண்ட நான் மோகன் என்னை தனிப்பட்ட முறையில் சாமியாரிடம் அறிமுகப்படுத்தி
வைத்தது பிடித்து இருந்தது.

ஒரு வாரம் கழித்து சாமியாரின் சிபாரிசில் புதிதாய் அலுவலகத்தில் சேர்ந்திருந்தவர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து முடித்து வெளியே வரும்பொழுது எனக்காக ஜெனி வெளியே காத்துக்கொண்டிருந்தாள்.

"கார்த்தி, பேப்பர் போட்டுட்டேன்"

"என்ன இது சர்ப்ரைஸா, எனிவே எங்க போறே!!"

"சுவீடன் போறேன் கார்த்தி, ஞாபகம் இருக்கா, ஒரு கிறிஸ்தவ அமைப்புக்கு நான் வெப்சைட் டிசைன் பண்ணேன்ல, அவங்க அதுல ரொம்ப இம்ப்ரஸ் ஆகி என்னை அங்க கூப்பிட்டுட்டாங்க, நல்ல சாலரி, ஈரோப்பியன் செட்டில்மெண்ட், லைஃப் ல ஒரு நல்ல பிரேக்
வர்றப்ப மிஸ் பண்ணிடக்கூடாது தானே!!"

குறுக்குசால் ஓட்டி புத்திசாலித்தனமாகத்தான் ஜெனி காரியம் செய்து இருக்கிறாள் எனப்புரிந்தது. சிலகாலம் நல்ல தோழியாக இருந்த காரணத்தினால் வாழ்த்தி அனுப்பிவைத்தேன். ஜெனி, மோகனைப் பற்றி தனக்கு சாதகமான வாய்ப்புகள் முன்பு கொள்கையாவது கத்தரிக்காயவது என சொன்னது ஞாபகம் வந்தது,

அன்றிரவு நான் சாமியாரிடம் ஆப்பிள் வாங்கிய காட்சியின் புகைப்படத்தை முதல் வேலையாக ரம்யாவிற்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன் . நிச்சயம் இந்தப் படம் ரம்யாவை மகிழ்ச்சி அடைய வைக்கும்,அது ரம்யாவிடம் என் காதலைச் சொல்லும்பொழுது எனது மதிப்பைக்கூட்டிக் கொடுக்கும் என நினைத்தபடி இருந்த பொழுது ரம்யாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

“ஹல்லோ கார்த்தி, நைஸ் போட்டொ, ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, ரொம்ப நாளா ஒரு விசயம் உன்னிடம் சொல்லாமல் இருந்தேன்.. எனக்கானவரை கண்டுபிடிச்சுட்டேன்.. என் கூட வேலை பார்க்கறவர்தான், கடைசி மூனு மாசமா நல்ல பேச ஆரம்பிச்சு போன வாரம் அவரோட விருப்பத்தை சொன்னாரு, இன்னக்கித்தான் அக்செப்ட் பண்ணேன், யூ க்னோ அவரும் உன்னை மாதிரி ஒரு கடவுள் மறுப்பாளர், சாமி, பூஜை , சாமியார் இது மாதிரி விசயங்கள்னா காத தூரம் ஓடிடுவாரு”

------