Friday, June 29, 2007

பார்த்த ஞாபகம் இல்லியோ - கூட்டு தொடரின் சுட்டிகள்

பார்த்த ஞாபகம் இல்லியோ வலைப்பதிவர்களின் கூட்டுத்தொடரின் அனைத்து அத்தியாயங்களின் சுட்டிகள்.

சிந்தாநதி’யின் ஞாபகம் -1
வெட்டிப்பயல்’ன் ஞாபகம் -2
CVR’ன் ஞாபகம் 3
ஜி’யின் ஞாபகம் - 4
இம்சை அரசியின் ஞாபகம் - 5
வைகை ராமின் ஞாபகம் - 6
தேவின் ஞாபகம் - 7
ஜி. ராவின் ஞாபகம் - 8
சிரில் அலெக்ஸின் ஞாபகம் - 9
சேவியர் ஞாபகம் - 10
மாசிலாவின் ஞாபகம் 11-

வினையூக்கியின் இறுதிபகுதி

பார்த்த ஞாபகம் இல்லியோ - வலைத் தொடர்கதையின் நிறைவுப்பகுதி

இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப்பட்டு,இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்களால் தொடரப்பட்ட இந்த வித்தியாசமான தொடரின் இறுதிப்பகுதியை எழுத மாசிலா என்னை அழைத்துள்ளார்.

எல்லா அத்தியாயங்களையும் படித்துவிட்டு இறுதிப்பகுதியையும் படித்துவிட்டு அபிப்ராயங்களை சொல்லவும்.

சிந்தாநதி’யின் ஞாபகம் -1
வெட்டிப்பயல்’ன் ஞாபகம் -2
CVR’ன் ஞாபகம் 3
ஜி’யின் ஞாபகம் - 4
இம்சை அரசியின் ஞாபகம் - 5
வைகை ராமின் ஞாபகம் - 6
தேவின் ஞாபகம் - 7
ஜி. ராவின் ஞாபகம் - 8
சிரில் அலெக்ஸின் ஞாபகம் - 9
சேவியர் ஞாபகம் - 10
மாசிலாவின் ஞாபகம் 11-


முன் கதைச் சுருக்கம்

ரோட்டோரத்தில் வரும் போகும் பேருந்துகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பொன்னுச்சாமி. பத்து வருடங்களுக்கு முன்னர் ஓடிப்போன மகளைப் பற்றி ஒரு செய்தி. அதான் வந்திருக்கிறார். காவேரி அவர் மகள். பள்ளிக்கூடத்தில் உடன் படித்தவன் வினோத். நல்ல பையன். ஒரு நாள் காதல் என்று உளற…நட்பு மறைகிறது. பட்டினம் போகிறாள் காவேரி. பொறியியல் படிக்க. அங்கு நண்பர்களாகிறார்கள் உமாவும் வசந்தும். வசந்தின் மீது ஒரு வித நட்பு கலந்த காதலில் இருக்கிறாள் காவேரி. உமா யாரையோ காதலிப்பதாகவும் அறிமுகப் படுத்த விரும்புவதாகம் உமாவை அழைத்துச் செல்கிறாள். அது பழைய வினோத். அப்பொழுது பூக்கொத்தோடு காவேரியிடம் தன்னுடைய காதலைச் சொல்கிறான் வசந்த்.
கதை மீண்டும் காத்திருக்கும் பொன்னுசாமிக்கு திரும்புகிறது. அவரை வினோத் சந்திக்கிறான். காவேரியும் அவர் பேத்தியும் இருக்குமிடத்தொற்கு கூட்டிச் செல்வதாக அவரை காரில் அழத்துச் செல்கிறான் வினோத்.

கதை மீண்டும் பழைய இடத்திற்கு வருகிறது. தன்னை நோக்கி வரும் வினோதைப் பார்த்து அதிர்கிறாள் காவேரி. எதிர்பாராத விதமாய் அப்போது நிகழும் விபத்தில் காவேரிக்கு செலக்டிவ் அமினீஷியா !

வினோத் மட்டுமே காவேரியின் நினைவில் !!!ஆனால் வசந்தின் உருவத்தில், மீண்டும் நிகழ்காலத்திற்கு வரும் சென்ற அத்தியாயத்தில், தன்னுடைய இந்த நிலைமைக்கு வசந்த்தின் திட்டமிட்ட சதிதான் என உமாவிடம் புலம்புகிறான்.

இனி பார்த்த ஞாபகம் இல்லியோ தொடரின் - நிறைவுப்பகுதி

-------------------

காவேரியைவிட வினோத்தே மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதை நன்றாக புரிந்துகொண்டாள் உமா.

வினோத்தின் மேல் திணிக்கப்பட்ட தியாகம் அவனை இத்தனைக் காலம் மனதிற்குள் குமுறலாகவே இருந்து இன்று வார்த்தைகளில் விசமாக தெளிக்கிறது. கல்லூரியில் காவேரிக்கு ஏற்பட்ட அந்த விபத்துக்குப் பிறகு எவ்வளவு விசயங்கள் நடந்து விட்டன. கதை மீண்டும் கடந்த காலத்திற்கு செல்கிறது.
--------
கடந்தகாலம்

அடுத்த ஆறு மாதத்தில் டாக்டர் மாயனின் ட்ரீட்மெண்டினாலும், உமா, வினோத், வசந்த் அரவணைப்பினாலும் காவேரி மீண்டும் ஜீவநதியானாள். படிப்பு என்ற சுழலுக்குள் சிக்கிக் கொண்ட பின்னர் இளம்பிராய ஈர்ப்புகள் மெதுவாக மறையத் தொடங்விடுகின்றன.
காவேரிக்கு வினோத்தின் மேல் அதீத பிரியம் இருக்கு என்பதை உணர்ந்த உமா, வினோத்தை விட்டு மெல்ல விலக ஆரம்பித்தாள். வினோத் வேறு கல்லூரி என்பதால் இது மிகவும் சுலபமானது. ஆனால் வசந்த்தும் வினோத்தும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

திரைப்படங்களில் காட்டுவது போல அவர்களுக்கு கல்லூரி வாழ்க்கை அவ்வளவு சுலபமாக அமையவில்லல. ஒவ்வொரு ஆய்வக அப்சர்வேஷன்களில் கையெழுத்து வாங்க புரபெஷர்களுடன் போராட வேண்டி இருந்தது. படுத்தால் அசைன்மெண்ட் கனவுகள், எழுந்தால் ரெகார்டுகள். இப்படியே கல்லூரி இறுதியாண்டும் வந்தது.

கல்லூரியில் முதல் வருடங்களில் ஏற்படும் ஈர்ப்புகளைவிட இறுதியாண்டுகளில் வரும் ஈர்ப்புகளுக்கு பலம் அதிகம்.
ஒரு நல்ல நாளில் காவேரி
"நேசித்தேன் நேசிக்கின்றேன் நேசிப்பேன்
உன்னையும் .. இல்லை இல்லை உன்னை மட்டும்" என தன் கவிதையாய் காதலை வசந்திடம் சொல்ல "காத்திருந்தேன் காத்திருக்கிறேன் காத்திருப்பேன் உன் நேசத்திற்காக" என்று அவள் காதலை அங்கீகரித்தான்.

காவேரியும் நன்றாகப் படித்தாள். முதல் செமஸ்டரில் எடுத்த அதே மதிப்பெண்களை அடுத்து வந்த செமஸ்டர் தேர்வுகளிலும் எடுத்து இருந்ததால் கல்லூரி கேம்பஸ் இண்டர்வியூ வில் வேலையும் கிடைத்தது.வசந்துக்கும் அதே கம்பெனியில் வேலை.. உமா மேற்படிப்பு படிக்க ஸ்காட்லேண்டு சென்றாள். வினோத் கோரக்பூர் ஐஐடியில் சேர்ந்தான்.

காவேரிக்கு வேலை கிடைத்த சந்தோசத்தில் காவேரியின் தந்தை, ஊருக்கே கிடா வெட்டி விருந்தளித்தார். அவருடைய சந்தோசம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
பெங்களூரில் வசந்தும், காவேரியும் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை உமாவின் கடிதம் மூலம் தெரிந்து கொண்டார். கொஞ்ச நாள் பித்துப் பிடித்தவர் போல இருந்தவர், பிரிவு துயரகரமானது ... ஆனால் எஞ்சியுள்ள வாழ்க்கை அதைவிட துன்பகரமானது அல்லவோ.. என்றாவது ஒரு நாள் காவேரி வருவாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தார்.

கல்யாணம் முடிந்த அடுத்த ஆண்டு வசந்தும் காவேரியும் அமெரிக்கா சென்றனர். ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது... செல்லமாக ஜெனி என பெயரிட்டனர். 4 ஆண்டுகள் சந்தோசமாக போய் கொண்டிருந்த போதுதான் காவேரியின் வாழ்க்கையில் ஒரு புயல் மையம் கொண்டது. வசந்த் ஒரு நாள் வினோத்தையும் வீட்டிற்கு அழைத்து வந்தான்.
வினோத் வேலை நிமிர்த்தமாக கடந்த வாரம்தான் வந்ததாகச் சொன்னான். அதன் பிறகு வினோத் வார இறுதிநாட்களில் வசந்தின் வீட்டிற்கு வருவது வழக்கமானது.
வசந்த், காவேரிக்கு ஷாப்பிங் எங்கேயாவது போகவெண்டுமென்றால் கூட வினோத்தை அழைத்து செல்ல சொன்னான்.

வசந்தின் பேச்சில், நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. திடிரென்று ஒரு நாள் காவேரியிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டான். காரணம், நடத்தை சரியில்லை.

மனரீதியாக செத்துப் போன காவேரியை, சட்டப்பூர்வமான சடங்குகள் முடிந்தவுடன், வினோத்தே அவளது குழந்தையுடன் ஏற்றுக்கொண்டான். ஆரம்பத்தில் இந்த தியாகம் உவகையாக இருந்த போதிலும், நாட்கள் போகப் போக இயல்பான வாழ்க்கை தனக்கு அமையவில்லையே என்ற வருத்தம் அவனை வாட்ட ஆரம்பித்தது. அவளை எங்கு வெளியே அழைத்து சென்றாலும் அவளுடைய அன்பிரடிக்டபிள் மனநிலையினால் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாக வேண்டியிருந்தது. அவளை வீட்டிலேயே வைத்திருந்தான்.

இதனிடையில் வசந்தை, அவனது வெள்ளைக்காரி மனைவியுடன் பார்த்தபோது திட்டமிட்டு ஏமாற்றுபவனுக்கு வாழ்க்கை எவ்வளவு சுலபமாக அமைகிறது., தனக்கு மட்டும் ஏன் கடினப்பாதை அமைந்தது என்ற எண்ணம் அடிக்கடி மேலோங்கியது. வாழ்க்கையை மேலும் கடினமாக்க அவனது கம்பெனி அவனை முக்கியமான பணிக்காக ஆஸ்திரேலியா இரண்டு வருடங்கள் செல்ல பணித்தது. சரி, காவேரியையும் ஜெனியையும் மாமனார் பொன்னுசாமியின் பொறுப்பில் விட்டுவிடுவோம் என்று அமெரிக்கவிலிருந்து அவர்களை அழைத்துக் கொண்டு இந்தியா வந்தான்.
--------
நிகழ்காலம்
"மாமா, வீடு வந்திருச்சு"

வாசலில் சின்ன வயது காவேரியே விளையாடிக் கொண்டிருந்தது போல் அவருக்கு ஒரு பிரமை,

"மாமா என்ன பார்க்கிறிங்க, அது உங்க பேத்தி ஜெனி.."

பொன்னுசாமி ஓடி போய் பேத்தியை வாரி அணைத்துக் கொண்டார்.

வீட்டினுள் காவேரி கண்களில் மிரட்சியுடன் உட்கார்ந்திருந்தாள்.
அவளுக்கு தன் அப்பா வந்திருக்கிறார் என்று புரிகிறது.. அவரின் காலைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் போல தோனுகிறது... ஆனால் இது எதுவுமே அவள் செய்யவில்லல... அப்படியே இருந்தாள்..

வினோத் நடந்த அனைத்து விசயங்களையும் சொன்னான். தான் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வரும் வரை இதே வீட்டில் இருந்து காவேரியையும் ஜெனிக்குட்டியையும் கவனித்துக் கொள்ளுமாறுக் கேட்டுக் கொண்டான்.

"இல்லை, மாப்ளே, நான் கிராமத்துக்கே கூட்டிட்டுப் போறேன், பக்கத்து டவுன்ல ஜெனி பாப்பவ படிக்க வச்சுடுறேன், அங்க ஒரு இங்கிலிசு மீடியம் ஸ்கூல் இருக்கு"

---------
எதிர்காலம்

"தாத்தா!! நான் தான் +2 ல ஸ்கூல் ஃப்ர்ஸ்ட்..தமிழ்ல மார்க்கு கம்மி ஆயிடுச்சு, இல்லாட்டி ஸ்டேட் ரேங்க் கிடைச்சு இருக்கும் " என்று சொல்லியவண்ணம் ஜெனி தாத்தா பொன்னுசாமியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்...

இதே சூழல் அவருக்கு சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் பார்த்த ஞாபகம்,காவேரி 10ஆம் கிளாஸ் பண்ணப் போ இருந்த சூழல் மீண்டும் வந்தது போல் உணர்வு அவருக்கு.

"கடவுளே, இவளை கரைசேர்க்கும் வரை எனக்கு பலமான ஆயுளைக் கொடு" என்று மனதினுள் வேண்டிக்கொண்டார்.

"தாத்தா, நானும் என் கிளாஸ்மேட் கார்த்தியும் மதுரைப் போய் காலேஜ் அப்ளிகேஷன் வாங்கி வந்துடுறேன்"

"சரிம்மா, இருட்டுறதுக்குள்ள வந்துடு"


"சார், போஸ்ட், " தபால் காரரின் குரல் கேட்க

"..."

"உங்க மருமகன் அனுப்பி இருக்கிற லெட்டர் தான்"

லெட்டரைப் பெற்றுக் கொண்ட

இரண்டு வருடத்தில் திரும்பி வருகின்றேன் என்று சொல்லிப் போனவன் 8 வருடங்கள் ஆகியும் திரும்ப வரல... இவன் அனுப்புற காசு மட்டும் தனக்கு எதுக்கு என்று மனதினுள் முனகிக் கொண்டே லெட்டரை தனது பழைய டிரங்கு பெட்டிக்குள் போட்டார்.

எல்லாம் புரிந்திருந்தும் புரியாதது போல் வெளியுலகத்திற்கு தன்னை மனநோயாளியாக காட்டிக் கொண்டிருக்கும் காவேரி எல்லாவற்றையும் மவுன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
---------------------------------முற்றும்-----------------------------------------

Wednesday, June 27, 2007

கதையில் வந்த பெண் - சிறுகதை

ஒரு வாரம் அலுவலக விசயமாக திருச்சி சென்று விட்டு சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருக்கையில், திண்டிவனத்திற்கு முன் ரோட்டின் நடுவே ஒரு பெண் கையை ஆட்டி லிஃப்ட் வேண்டும் என்று கேட்பதை சில மீட்டர்கள் முன்னமே கார்த்தி கவனித்து விட்டான். நள்ளிரவில் வரும் கார்களில் இது போல லிஃப்ட் கேட்டு வழிப்பறி செய்யும் கும்பலின் ஆளாக இருப்பாளோ என்ற பயம், பாவம் உதவலாம் என்ற அவனது எண்ணத்தை வென்றது. அழகான , பார்ப்பவர் முகத்தில் சட்டென்று பதியும் வட்ட முகம். சிவப்பு கலர் சுடிதார், கண்ணாடி அணிந்திருந்தாள். வண்டியை நிறுத்தாமல் இன்னும் வேகமெடுத்தான்.

மறுநாள் தனது வீட்டில் கலைந்து கிடந்த தினசரிகளை அடுக்கி வைக்கையில் அவனது கண்ணில் பட்ட செய்தி

"திண்டிவனம் அருகே இளம்பெண் கொலை, சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகள்..."

செய்தியின் அருகே, நேற்றிரவு என்னிடம் லிஃப்ட் கேட்ட பெண்ணின் புகைப்படம் இருந்தது... அய்யோ !!! ஒரு வேளை லிஃப்ட் கொடுத்திருந்தால் அவளைக் காப்பாற்றி இருக்கலாமோ என்ற குற்ற உணர்ச்சி அவனக்கு அதிகமாகிய போது எதேச்சையாக தினசரியின் தேதியைக் கவனித்தான்.. அந்த செய்தி இரண்டு நாட்களுக்கு முந்தையது !!!!!
.....................

மங்கலான வெளிச்சத்தில் பஸ்ஸினுள் மேற்சொன்ன ஒரு பக்க கதையை வார இதழுக்காக நான் எழுதி முடித்தபோது, பஸ் விழுப்புரம் அடுத்து எதோ ஒரு ஊரில் பயண இடைவெளிக்காக நின்றது. வழக்கமாக நான் கதையை எழுதும்பொழுது கதை மாந்தர்களுக்கு கற்பனை உருவம் கொடுப்பது போல் வந்த அந்த பெண் கதாபாத்திரத்துக்கும் ஒரு அழகான உருவம் மனதில் கொடுத்து வைத்தேன். பஸ் மீண்டும் நகர... அப்படியே கண்களில் அந்த உருவத்துடன் கண்ணயர்ந்தேன். பஸ்ஸின் அதிர்வுகள் நின்றதை அடுத்து தூக்கம் கலைந்தது.

"மெட்ராஸ், ஒரு சீட் இருக்குமா!!!"

"சீட் இல்லை, ஸ்டாண்டிங் தான், 200 ரூபாய்"

பஸ்ஸின் மாற்று டிரைவர், பஸ்ஸை நடுவழியில் நிறுத்திய அந்த பெண்ணுக்கு கதவைத் திறந்துவிட்டார். கதையில் வந்த பெண்ணுக்கு நான் கொடுத்த உருவத்தின் அச்சு அசலாய் இந்த பெண்..

பஸ்ஸின் வெளிச்சத்தில் ரோட்டின் இடது புறத்தில் உள்ள தூரப் பலகைக் காட்டியது திண்டிவனம் 8 கி.மீ
---------------------------------------

Friday, June 22, 2007

கோவில் பிரசாதம் - சிறுகதை

வெளியே மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. மழை அதிகம் பிடிக்கும் முன் வீட்டிற்கு செல்ல வேண்டுமே என்று நினனத்துக் கொண்டே அலுவலகத்தை விட்டு கிளம்பும் போதுதான் எங்கள் அலுவலகம் இருக்கும் தெருவில் உள்ள பெருமாள் கோவிலின் திருவிழாவின் ஆரம்ப நாள் இன்று என்பது ஞாபகம் வந்தது. மெதுவாக தூறலில் சுகமாக நனைந்து கொண்டே கோவிலை அடைந்த பொழுதுதான் கவனித்தேன். மூன்று வரிசைகள், இலவச தரிசனம், 30 ரூபாய் மற்றும் வி.ஐ.பி தரிசன வரிசைகள்.. இத்தனைக்கும் இது அவ்வளவு பெரிய கோவில் இல்லை. ஆறு வருடங்களுக்கு முன், முச்சந்தியில் இருக்கிறது என்பதற்காக தானம் கொடுக்கப்பட்ட அரை கிரவுண்டில் சிறிய அளவில் கட்டப்பட்ட இந்தக் கோவிலில், இந்தப் பகுதியில் இருக்கும் நடிகர் எதோ தனிப்பட்ட விசயத்துக்காக வேண்டி அது நடந்து விட, அப்பொழுதிருந்து இந்த கோவிலுக்கு மவுசு அதிகமானது. அவரால் அருகில் இருந்த காலி மனைகளும் வாங்கப்பட்டு இந்தப் பகுதியின் திருப்பதியாக இக்கோவில் விரிவுபடுத்தப்பட்டது.

அன்று கடவுள்கள் விசுவரூபம் எடுத்தனவோ இல்லியோ இன்று கோவில்கள் எடுக்கின்றன.

சீக்கிரம் தரிசனம் முடித்து விட்டு மழைக்கு முன் கிளம்ப வேண்டும் என்று, இலவச வரிசையில் நிற்காமல் 30 ரூபாய் வரிசையில் நான் நிற்பதைப் பார்த்த அந்த கோவிலின் நிர்வாகிகளில் ஒருவர் ஓடி வந்து,

"என்ன சார், நீங்க இந்த வரிசையிலே வாங்க" என வி.ஐ.பி கதவைத் திறந்து விட்டார்.

அலுவலகங்களில் மேலதிகரிகளுக்கு காரியதரிசியாக இருப்பதில் இது போல லாபங்களும் உண்டு.பல இடங்களில் அதிகாரிகளை விட நம்மை அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆனால்
வி.ஐ.பி வரிசையில் உள்ளே சென்ற பிறகு தான் தெரிந்தது,அங்கு 30 ரூபாய் வரிசையில் உள்ளவர்களை விட ஏகப்பட்ட வி.ஐ.பிக்கள் என்று.

தரிசனம் முடிந்ததும்,

"வெளியே பிரசாதம் வாங்கி போங்க சார், " என வி.ஐ.பிக்களை அடையாளம் கண்டு கொள்ளும் அந்த நிர்வாகி சொல்ல, வெளிப்புறம் வந்து பிரசாதம் கொடுக்கும் இடத்தில், என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மோகன், வரிசையில் நின்று கொண்டிருந்தான்.

இவன் எப்படி இங்க!!!?? மோகன் புதிதாய் அலுவலகத்தில் சேர்ந்து இருப்பவன். கலகலப்பானவன். வேலையிலயும் கெட்டிக்காரன். என்னைப் பொருத்தவரை எனக்கு இவனிடம் பிடிக்காத விசயம், இவன் அலுவலகத்தில் சாமியாவது பூதமாவது எகத்தாளமா விதண்டாவதம் பேசிட்டு இருப்பான். யாரவது கோவில் பிரசதம்னு கொடுத்தா, அதில சாப்பிடுற மாதிரி எதாவது இருந்த அதை மட்டும் எடுத்துக் கிட்டு ஸ்வீட் சூப்பர்னு சொல்லுவான்.

இதனாலேயெ அவனைப் பார்த்தாலே நான் விலகிப் போய்விடுவது உண்டு. இருந்தும் போன மாசம் நான் பழனி போனப்ப, ஸ்வீட் வாங்கிட்டு வாங்கன்னு 200 ருபாய் கொடுத்து, நான் பழனி போனதும் மறக்காம வாங்கிட்டு வந்திடுங்க என்று போன் பண்ணி ஞாபகப் படுத்திக்கிட்டு இருந்தான்.


"என்ன மோகன் ஸ்வீட் வாங்க வந்திங்களா?!!"

என்னை அந்த இடத்தில் சற்றும் எதிர்பாராத அவன், சுதாரித்துக் கொண்டு,

"என்ன சார், பண்றது சிட்டில பெஸ்ட் ஸ்வீட் கடையிலேந்து வாங்கி கொண்டுப் போய் என் அம்மா அப்பாகிட்ட கொடுக்கிறப்ப அவங்க முகத்துல கிடைக்கிற சந்தோசத்தை விட இந்த பிரசாதத்தைக் கொண்டு போய் கொடுக்கிறப்ப அதிகமா இருக்கு, அதனாலதான் இங்க வாங்க நிற்கிறேன்,என்னோட விருப்பு வெறுப்புகளுக்காக அவர்களின் நம்பிக்கையை அலட்சியப் படுத்த விரும்பல சார்.. இன்னும் அவர்கள் வாழப் போகும் கொஞ்ச காலத்துக்கு அவர்கள் விருப்பங்களுக்கு மதிப்புக் கொடுக்கலாமேன்னுதான்"

என்னை அறியாமல் அவன் தோளைத் தட்டி பாராட்டி விட்டு

"இந்த பொங்கலோட, இதையும் கொடு, இன்னும் ரொம்ப சந்தோசப் படுவாங்க" என குங்குமத்தையும் துளசியையும் அவனிடம் கொடுத்தேன்.

அலுவலகம் வந்து வண்டியை எடுத்துக் கொண்டு, போகும் வழியில் வட இந்திய கோவில்களுக்கு அழைத்துச் செல்லும் டிராவல்ஸில் என் அப்பா அம்மா பெயரை முன் பதிவு செய்து வீடு வந்தேன். இதுக்காகத்தான் இரண்டு பேரும் கடைசி ஒரு வருசமா என்னிடம் இந்த திருத்தலதரிசனம் போகனும்னு கெஞ்சிக்கிட்டு இருந்தார்கள்.

மறுநாள் அலுவலகத்தில் , மோகன் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான்

"கடவுள் தன்னைப் போல மனிதனைப் படைத்தார்னு சொல்லுவாங்க, ஆக்சுவலா அப்படி இல்லை, மனிதன் தான் தன்னைப் போல கடவுளைப் படைத்தான்"

மோகன் பேசி காதில் விழுந்த வார்த்தைகள் எதுவும் எனக்கு எரிச்சல் தரவில்லை.

Tuesday, June 19, 2007

பாஸ்வேர்டு - ஒரு நிமிடக்கதை

அலுவலக வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த ரம்யா, கணவனின் அழைப்பு வர, கைத்தொலைபேசி எடுத்து

"ஹலோ, கார்த்தி சொல்லுங்க"

"ரம்யா, ஒரு ஹெல்ப் பண்றீயா!!! என்னோட ஜிமெயில் ஐடி ஓபன் பண்ணி அந்த,யுஎஸ் கன்சல்டன்சி மெயிலை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்துடுறியா, நான் ஆபிஸ்ல எடுக்க மறந்துட்டேன், "

"சரி, கார்த்தி, பாஸ்வேர்ட்?"

"jeni22091980"

"சரி, நான் எடுத்துட்டு வந்துடுறேன்" அழைப்பைத் துண்டித்த பிறகு அந்த பாஸ்வேர்டு அவளை நெருடியது... பிரிண்ட் அவுட் எடுத்த பிறகு அவனது மெயிலை லாக் அவுட் செய்தாள்.

"ஜெனி, கார்த்தியின் கல்லூரித் தோழியல்லவா!!! .. ம்ம்ம் இருக்கலாம்..
எதுவாக இருப்பினும் இதைப் பற்றி கார்த்தியிடம் கேட்க கூடாது" என்று முடிவு செய்துவிட்டு, தனது மின்னஞ்சலை திறந்து "mohan143" என்பதை "karthiramya" என மாற்றிவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

Wednesday, June 13, 2007

வெங்கடாஜலபதி கோயில் - சிறுகதை

"என்னங்க வர்ற வர்ற கார்த்தியோட நடவடிக்கைகள் எல்லாம் மாறிக்கிட்டே இருக்கு, ஒன்னும் சரியில்லை... அவன் படிக்கிற புக் எல்லாம் புரட்சிகள் பத்தின புக்ஸ், ரூம்ல செகுவெரா, பெரியார் படங்கள் தான் மாட்டி வச்சு இருக்கான், பூஜை, சாமி, பக்தி பத்தி எல்லாம் கேலி பேசுறான், இதைப் பத்தி எல்லாம் கேட்க மாட்டிங்களா!!"

"ஏன் இப்படி காலங்கார்த்தாலேயே புலம்புற, நமீதா படங்கள் ஒட்டி வச்சிருந்தா கேட்கலாம், இதைப் பத்தி எல்லாம் கேட்கக் கூடாது, நானும் அவன் வயசுல அப்படித்தான் இருந்தேன்,, கொஞ்ச நாள்ல தானா சரியா ஆயிடுவான்.. இதுக்கெல்லாம் வொரிப்படாதே"

அம்மாவின் என்னைப் பற்றிய புலம்பல் அப்பா அலுவலகம் போனப்பிறகும் வரை தொடர்ந்தது.

"கார்த்தி, குளிச்சிட்டியா!!, வெங்கடாஜலபதி கோயில் திருவிழா நாளைக்கு ஆரம்பிக்குது... அதுக்கு இந்த 2000 ரூபாய போய் கொடுக்கனும்... நல்ல நேரத்துல போய் கொடுத்துட்டு வந்துடு.. "

ஈஎஸ்பிஎன் ல பழைய கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நான், எரிச்சலுடன்

"ஏன்ம்மா இப்படி படுத்துற, நான் ஜீன்ஸ் வாங்க காசு கேட்டப்ப தரமாட்டேன்னு சொன்ன, ஏற்கனவே பணக்கார சாமியா இருக்கிற இந்த கடவுளுக்கு எதுக்கு இந்த காசு, டேபிள்ல வை, ஹைலைட்ஸ் முடிஞ்ச பிறகு போய் கொடுக்கிறேன்"

"எல்லாம் உனக்காக வேண்டிக்கிட்டது தாண்டா... நல்ல நேரத்துல கொடுத்துட்டா, ரொம்ப விசேசம்.."

வேண்டுமென்றே அம்மா சொன்ன நேரம் முடிஞ்ச பிறகு, பணத்தை எடுத்துக் கொண்டு கோயில் நிர்வாகியிடம் கொடுத்து திரும்புகையில், போகும் போது இல்லாத ஒரு கம்பம் கோயில் திருவிழா பந்தலுக்காக நடுரோட்டில் நட்டு வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் இடிக்கக் கூடாதே என்று வண்டியை இடதுபுறம் ஒடிக்க, பேலன்ஸ் தவறி, கீழே நான் விழுந்து, என் மேல் வண்டி விழுந்து , எனக்கு காலில் சரியான அடி, கைகளிலும் ரத்தம் வரும் அளவுக்கு சிராய்ப்புகள்...

கை கால்களில் காயங்களுடன் வீட்டுக்கு வந்தபோது அம்மா மிகவும் பதறிப் போனார்,
அம்மாவை சமாதானப்படுத்தி விட்டு, ரகசியமாய் காலண்டரில் நான் விழுந்த நேரத்தைப் பார்த்தேன்.. எமகண்டம் எனப் போட்டிருந்தது.

அம்மாவின் முகம் வாடிப் போய் இருந்தது, நான் மதியம் சாப்பிட்டு, தூங்கப் போனேன். அம்மா சாப்பிடாமல், எனக்காக ஏதோ ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருந்தது தூக்கத்திலும் மெலிதாய் கேட்டுக் கொண்டிருந்தது.

ஆழ்ந்த மதிய தூக்கத்தில் ஒரு கனவு, வெங்கடாஜலபதி வருகிறார்,கடவுள் வெங்கடாஜலபதி தான். நடுரோட்டில் வைத்திருந்த அந்த கம்பத்தை பிடுங்கி எறிகிறார். கோவில் உண்டியல் பணத்தை தூக்கி வீசுகிறார். அப்படியே விசுவரூபம் எடுக்கிறார். அவரின் முன்னே சின்ன புள்ளியைப் போல நான்.

"என்ன பயந்துட்டியா கார்த்தி.. நல்ல நேரத்துல என்னை வந்து பார்க்கததுனால தான் உனக்கு அடி பட்டுச்சுன்னு நினைக்கிறியா!!! "

"......."


"சரியோ தப்போ அம்மா பேச்சை கேட்காத நீ எப்படி பெரிய புரட்சியவாதிகளோட வார்த்தைகளை உள்வாங்கிக்கப் போற!! ... உன் கவலை பக்தி என்கிற பேர்ல எனக்கு 2000 ரூபாய் கொடுப்பதில் இல்லை.. உனக்கு ஜீன்ஸ் கிடைக்கலியேங்கிற வருத்தம்.. நல்ல ஹைலைட்ஸ் பார்க்கும் போது தொந்தரவா இருக்கே!! அப்படிங்கிற எரிச்சல்.. "


"..........."

"வீம்புக்காக எதுவும் செய்யாதே!! மற்றவர்களின் நம்பிக்கையை அவமதிக்கனும்னு எதுவும் பண்ணாதே!! அதுக்குத்தான் ஒரு சின்ன தண்டனை உனக்கு... உன்னைப் போல எனக்கும் நல்ல நேரம் கெட்ட நேரம் , பூஜை, பரிகாரம் எதிலேயும் நம்பிக்கை கிடையாது... நீ படிக்கும் கொள்கைகள் புரிதலுக்காக.. உன் புரிதல் எல்லோராலும் அதே மாதிரி புரிந்துகொள்ளப்படனும்னு நினைக்காதே"

அப்பா வந்து எழுப்ப, கனவு கலைந்து எழுந்தேன்... மணி மாலை 7.20

"என்ன கார்த்தி, ரொம்ப அடிபட்டுடுச்சா!!" காலை தடவியபடி பரிவுடன் கேட்டார் அப்பா..

"இல்லைப்பா... சிராய்ப்புகள் தான்.. ஆயின்மெண்ட் வச்சு இருக்கேன்.. இப்போ ஓகே!!"

"சரி வா சாப்பிடலாம்"

சாப்பிட்ட பிறகு எனது புரொபசர் பெருமாளை தொலைபேசியில் அழைத்தேன். இவர் தான் எனக்கு பெரியாரிலிருந்து செகுவேரா வரை அறிமுகப்படுத்தியவர். ஜனரஞ்சக வாசிப்புகளிலிருந்து என்னை மீட்டெடுத்தவர்.

அவரிடம் காலையில் நடந்த எமகண்டம் விசயத்தை சொன்னேன்....

கிட்டத்தட்ட மதியம் என் கனவில் வந்தது போல அமைந்திருந்தது அவரின் விளக்கங்கள்.. தொலைபேசியை வைத்த பிறகு தான் எனக்கு இன்னொரு விசயமும் புரிந்தது.. அவரின் பாதிப்புகள் என்னுள் நிறைய இருக்கின்றன என்று... கனவில் கடவுள் வெங்கடாஜலபதி புரொபசரின் குரலில் தான் பேசினார்.
-----------
மறுநாள், காலையில் புரொபசரின் வீட்டுக்குப் போகலாம் என்று தயாராகி வீட்டை விட்டு வெளியே வர எத்தனித்த போது

அப்பா தொலைபேசியில்,

"சின்ன அடிதான்.. இருந்தாலும் பயமாயிருக்கு.. எதாவது கண்டமா இருக்கலாம்"

".............."

"சரிண்ணே, அந்த பூஜையே பண்ணிடலாம்.. பரவாயில்லை, அடுத்த வாரம் நான் குடும்பத்தோட வர்றேன்.கார்த்திக்கும் லீவுதான்"


குலதெய்வத்திற்கு ஏதோ பரிகார பூஜை பத்தி அப்பா பேசுகிறார்,

மனதிற்குள் சிரித்துக் கொண்டே, வெளியே வந்தேன்..

கார்த்தி என யாரோக்கூப்பிட, எங்க வீட்டு அடுத்த போர்ஷனில் குடியிருக்கும் சதாசிவம் அங்கிள்,

"கார்த்தி, போஸ்ட் ஆபிஸ் வழியாப் போறியா"

"ஆமாம் அங்கிள்"

"இதை ரெஜிஸ்டர் போஸ்ட் பண்ணிடுறியா....11 மணிக்குள்ள நல்ல நேரம் முடிஞ்சுடும்.. அதுக்கு முன்ன பண்ணுடுறியா.. ரம்யாவோட யூபிஎஸ்சி அப்ளிகேசன்...பிளீஸ்"

"ஸ்யூர் அங்கிள்"

அந்த கவரை வாங்கும் போது, சதாசிவம் அங்கிள்

"வெங்கடாஜலபதி கோயில் வழியாகப் போகாதே!! நேத்து நைட் அடிச்ச காத்துல ரோட்டுல போட்டு வச்சிருந்த கீத்து பந்தல் சாஞ்சிருச்சு.... "

"சரி அங்கிள், நான் கணபதி ஸ்டோர்ஸ் வழியாத்தான் போகப்போறேன்" என்றேன்..

நேத்து வெங்கடாஜலபதி கோயில் பந்தல் கம்பத்தில் விழுந்து அடிபட்டது இன்னும் மறக்கவில்லை..

அந்த அப்ளிகேஷனை நல்ல நேரத்திற்குள் அனுப்பிவிட்டு, எனது புரொபசர் வீட்டுக்குப் போயிட்டு வரும் வழியில் வெங்கடாஜலபதி கோயில் வழியா வந்தேன்... இரும்புக் குழாயகள் தகர சீட்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன.

அங்கு அதை மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்த கோயில் நிர்வாகியிடம் விசாரித்த போது,

"நேத்து நைட் அடிச்ச காத்துல கீத்துப் பந்தல் கீழே சாஞ்சுடுச்சு,, அதனால இரும்பு சீட் போட்டு பந்தல், மேடை போடலாம்னு முடிவு பண்ணிட்டோம்."

அந்த தெருவின் இரு முடிவுகளிலும் ஒன்றுக்கு இரண்டாக தெருவை மறைத்து இரும்புக் கம்பத்தை ஊன்றி பந்தல் போடும் வேலையை ஆரம்பித்துக் கொண்டிருந்தனர்.

ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும்போது அவை தானாகவே மந்தையை விட்டு வெளியேறும்... நீ உணர்ந்து விட்டாய் அது போதும். உன் சந்ததியினருக்கு உணர்த்து, இவர்கள் மாற்ற முடியாதவர்கள்.. இவர்களைப் பற்றிய கவலையை விடு.

புரபெசரின் வார்த்தைகள், மீண்டும் நினைவுக்கு வந்தது... தெருவில் நட்டு வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளுக்கிடையில் வண்டியை எச்சரிக்கையாக ஓட்டி அவ்விடத்தைக் கடந்தேன்.

Sunday, June 10, 2007

பிளீஸ் பார்வர்ட் - ஒரு நிமிடக்கதை

"லைலா மஜ்னு காதலர்கள் பிரிக்கப்பட்ட தினம் இன்று, காதலின் மகிமையை உலகுக்கு உணர்த்த இந்த மின்னஞ்சலை குறைந்தபட்சம் 20 பேருக்கு, அடுத்த 15 நிமிடத்திற்குள்ளாக அனுப்பவும், தவறும்பட்சத்தில் உங்கள் காதல் தோல்வி அடையும். இது உறுதி"

என்று ஒரு குறும்பான மின்னஞ்சலை நான் ஆங்கிலத்தில் தயார் செய்துவிட்டு ஒரு 20 பேருக்கு அனுப்பி விழுந்து விழுந்து சிரிக்கலானேன். அடுத்த 30 நிமிடங்களுக்குள் அலுவலகமே பரபரப்பாய் அந்த மின்னஞ்சலை கண்ணும் கருத்துமாய் உலகத்தின் அனைத்து மூலைகளுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தது. மக்களுக்கு எத்தனை பயம்.. எல்லோருக்கும் தன் காதல் மேல் அவ்வளவு நம்பிக்கை.. ஹூம்,ஹூம்... இதுல அடுத்த வாரம் காதலர் தினம் வேற,

நான் அனுப்பிய மெயில் எனக்கே 30 முறை வந்து சேர்ந்தது.. எல்லாவற்றையும் அழித்துவிட்டு என் வேலையை பார்க்கலானேன்.

அன்று மாலை, மெரீனா கடற்கரையில் நானும் ஜெனியும்

"ஜெனி, என்ன முகம் டல்லா இருக்கு, என்ன விசேசம் ஊர்ல , டிரிப் எப்படி இருந்துச்சு"

"கார்த்தி, ஐயம் ரியலி சாரி, எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளைப் பார்த்துட்டங்க, வேற வழியில்லை, இது அப்பாவுக்கு கவுரப்பிரச்சினை.. உன்னை விட எனக்கு எங்க வீடுதான் முக்கியம்,அடுத்த மாசம் திருநெல்வேலில கல்யாணம், லெட் அஸ் பி குட் ஃபிரெண்ட்ஸ்"

"......."

Saturday, June 09, 2007

அறை எண் 420 - சிறுகதை

கார்த்தி எப்போ கோயம்புத்தூர் வந்தாலும் இப்படித்தான் ஆகுது, போன தடவை இண்டர்சிட்டி 3 மணி நேரம் லேட்டு. இன்னக்கி இந்த வெஸ்ட்கோஸ்ட் 2 மணி நேரமா, டிரெயின் திருப்பூருக்கு முன் ஏதோ ஒரு இடத்தில் போட்டுட்டான். டிரெயின்ல தனியா வந்த சில பேரு பொடி நடையா இறங்கி அரைக் கிலோமீட்டர் தள்ளி இருக்கிற ரோட்டுல போய் பஸ் பிடிச்சுப் போயிடலாம்னு போயிட்டாங்க. மூட்டை முடிச்சுகளோட அப்படி இறங்கிபோனதுல பொண்ணூங்களும் இருந்தாங்க. டிரெயின்ல புத்தகம் விற்கிற பையன் அவன் அருகில் வைத்து விட்டு போன சில புத்தகங்களை எடுத்துப் புரட்டலானான். “நம்பிக்கை" விலை 25 ரூபாய் என போட்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருக்கையில்,

"சார் இன்னக்கி எதுவுமே விக்கல, வாங்கிக்கங்க, சார் , 20 ரூபாய் போதும்"

நம்பிக்கையை 5 ரூபாய் குறைத்து வாங்கியதில் அவனுக்கு ஒரு சின்ன சந்தோசம்.

காசை வாங்கிக் கொண்டு அவன் நகரவும் டிரெயின் கிளம்பவும் சரி ஆக இருந்தது. புத்தகத்தை மேலொட்டமாக மேய்ந்தான், பல துணுக்குகளுடன் புத்தகம் கட்டுரைகளின் தொகுப்பாக இருந்தது.

டிரெயின் கோயம்புத்தூர் 10.30 மணிக்கு வந்து சேர்ந்தது. கார்த்தி எதுவும் லக்கேஜ் எடுத்து வரவில்லை. ஆமாம் இன்று ஒரு இரவு பிறகு அவன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகிறான். காரணம், என்னங்க வழக்கமான காரணம்தான் காதல் தோல்வி, மனிதனால் கடைசி மூச்சுவரை ஜீரணித்துக் கொள்ளமுடியாத தோல்வி.. அவனாலும் முடியவில்லை... மூச்சை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்துவிட்டான்.
----------------------
அந்த பிரபல லாட்ஜில்,

“சார் இன்னக்கி ஒரு நைட் மட்டும் ரூம் கிடைக்குமா?”

“சாரி சார், சீசன் டைம் எல்லா புக் ஆயிடுச்சு, ஃபேமிலியா வந்தவங்களுக்கு கூட ரூம் இல்லைன்னுதான் சொல்லிட்டோம்..”

“நான் ஏற்கனவே இங்க தங்கியிருக்கேன் சார், பிளீஸ் திஸ் ஈஸ் மை பேவரிட் லாட்ஜ் நான் வேற எங்கேயும் போக விரும்பல" பாக்கெட்டிலிருந்து முன்பு தங்கி இருந்ததற்கான ரசீதைக் கார்த்தி காட்டினான்.

ஜெனியுடன் கோயம்புத்தூர் வந்திருந்த போது கூட இங்குதான் அவளுடன் தங்கினான்.

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க , யாராவது வெக்கேட் பண்ணால் தரேன்.. பட் ஐ யம் னாட் ஸ்யூர்"

ஒரு 20 நிமிடங்களுக்குப் பிறகு ரிசப்ஷனில் இருந்தவர் மிகுந்த யோசனையுடன் ரும் நெம்பர் 420க்கான சாவியை எடுத்து அவனிடம் கொடுத்தார். முழுப்பணத்தையும் கட்டிவிட்டு சாவியை வாங்கி கொண்டு தனது ரூம்முக்கு கார்த்தி போன பிறகு, ரூம் பாய்,
“என்ன சார் அந்த 420 ரூமையா கொடுத்தீங்க, கடைசி ஒரு வருசத்துல அந்த ரூம்ல தங்கியிருந்த 10 பேர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க, முதலாளி அந்த ரூமை யாருக்கும் கொடுக்க வேண்டாம்னுல சொன்னார்"

“இந்த ஆளு அடிக்கடி இங்க தங்கி இருக்காரு, ரெகுலரான ஆளு, பயப்படாதே எதுவும் நடக்காது".

“இல்லை சார், முதலாளி அந்த ரூம்ல ஆவி எல்லாம் உலவுதுன்னு சொல்லி இருக்காரு"
-------------------------
மறுநாள் காலை,
“சார், ரூம் 420ல இருப்பவரு இன்னும் பிரேக்ஃபாஸ்ட் கேட்கல, டைம் இப்பொவே 10, போன் அடிச்சாலும் எடுக்கல, பயமாயிருக்கு சார்"

“நேத்து நைட்டு லேட்டாதானே ரூம் கொடுத்தோம், தூங்கிக்கிட்டு இருப்பாரு"
என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே படிக்கட்டில் கார்த்தி இறங்கி வந்து கொண்டிருந்தான்.

“பார்த்தியா, ஆள் வந்துட்டாரு" ரிசப்ஷனிஸ்ட் கிசுகிசுப்பான குரலில் ரூம் பாயிடம் சொல்லிவிட்டு "4வது புளோர் போ" என்று அவனை விரட்டினார் .

கார்த்தி ரிசப்ஸனிஸ்ட்டை பார்த்து ஒரு குறும்பான புன்னகை செய்துவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

கார்த்தி போன பிறகுதான் ரிசப்ஸனிஸ்ட்டுக்கு ஞாபகம் வந்தது, ஒரு இரவுதானே தங்குவதாக சொல்லி ரூம் எடுத்தான், ரூம் சாவியையும் கொடுக்கலியே!!!, நேற்றிரவு எடுத்து வைத்திருந்த "நம்பிக்கை" புத்தகம் அவன் போகும் கையில் வைத்திருந்தானா!!! வைத்திருந்தது போல் தான் இருக்கு..உறுதியா சொல்ல முடியலியே!!!!

அறை எண் 420லிருந்து போன் அழைப்பு வருவதை போர்டு காட்டியது..
திகிலுடன் "ஹலோ ரிசப்ஷன்"
-----------------------