Sunday, March 04, 2007

மொழி - ஒரு பாராட்டுப் பதிவு

சில நல்ல விசயங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் உரக்கச் சொல்லலாம். ஏற்கனவே சகபதிவர்கள் மொழிப்படத்தை பற்றி எழுதிவிட்டாலும், ஒரு சந்தோசமான படத்தை பார்த்த திருப்தியில் நானும் ஒரு பாராட்டு பதிவை பதிவு செய்கிறேன்.


உடற், மன, வாழ்க்கைக் குறைபாடுகளை கேலி செய்யாமல், மிகைப்படுத்தாமல் அதே சமயம் அவற்றின் வலிகள், வேதனைகளை மக்கள் மனதில் பதியும் வண்ணம் மிக அழகாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ராதாமோகன் இயக்கத்தில் , பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் வெளிவந்துள்ள் மொழி. படத்தில் குறைவான கதாபாத்திரங்கள், ஆனால் ஒவ்வொன்றும் நிறைவாக நினைவில் நிற்கும்படி இயக்குனர் திரைக்கதை அமைத்துள்ளார்.




இசைக்கலைஞரான கார்த்திக்(பிரிதிவிராஜ்) நண்பர விஜியுடன் (பிரகாஷ்ராஜ்) ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் வசிக்கும், வாய் பேச , காது கேள முடியாத அர்ச்சனாவை(ஜோதிகா) நேசிக்க ஆரம்பிக்கிறார்.

கார்த்திக், அர்ச்சனாவின் தோழி ஷீலா(சுவர்ணமால்யா) மூலம் சைகை மொழியையும் கற்றுக் கொண்டு அர்ச்சனாவிடம் இயல்பாக பழகுகிறார். ஒரு கட்டத்தில் தனது திருமண விருப்பத்தை கார்த்திக் அர்ச்சனாவிடம் தெரிவிக்க, அர்ச்சனா கார்த்திகை புறக்கணிக்க ஆரம்பிக்கிறார்.
கடைசியில் அர்ச்சனா, கார்த்திக்கை ஏற்ருக்கொண்டாரா இல்லையா என்பதுதான் பிற்பாதி கதை.

மலையாள நடிகர் பிரித்விரரஜ் "கனாகண்டேனில்" வில்லனாக அறிமுகமாகி, "பாரிஜாதத்தில் கதாநாயகனாகி, மொழியினில் பிரகாசிக்கிறார். மம்மூட்டி, ஜெயராமை தொடர்ந்து இவரும் தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்படுவார்.

ஜோதிகாவைப் பற்றி சொல்வதற்கில்லை, படம் பாருங்கள், பூவெல்லாம் கேட்டுப்பாரிலிருந்து மொழி வரை எத்தனை பரிமாணங்கள். ஒரு ஹை-கிளாஸ் நடிப்போடு அவர் திரையுலகிலிருந்து விடைபெறுவது ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம்.


வேற்று மொழி நகைச்சுவை நடிகர்கள் , தமிழில் ரசிக்கும்படி நடித்ததில்லை என்ற குறையை தெலுங்கு முன்னனி நகைச்சுவை நடிகர் பிரம்மானந்த் தீர்த்து வைத்து விட்டார். கடைசியில் இவர் பிரித்விராஜிடம் கரப்பான் பூச்சியைக் காட்டுவது இயல்பான நகைச்சுவை.

எம்.எஸ் பாஸ்கர் "ஞானப்பிரகாஷம்" புரொபெஷர் ஞானப்பிரகாஷம் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வதிலிருந்த்து அழுது தீர்த்து தனது மன சோகத்தை விட்டு விலகும் காட்சி வரைக் கலக்கி இருக்கிறார்.

பிரகாஷ்ராஜ் சுவர்ணமால்யா வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன.

எல்லாக் கதாபாத்திரங்களையும் கண்ணியமானதாக திரையில் உலவ விட்டுள்ள இயக்குன்ரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

"இயற்கையின் மொழிகள் புரிந்துவிடின்
மனிதனி மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்திவ்டின்
மனிதனுக்கு மொழியே தேவையில்லை"

வைரமுத்து பாடற் வரிகள் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு அழகூட்ட முடியும் என்பதற்கு ஒரு உதாரணம்.

"குறைகளையும் மீறி தைரியத்துடன் வாழ்றவங்களை பார்க்கும்போது வாழ்க்கையிலே சுவாரசியம்,வாழனும்கிற ஆசை இன்னும் அதிகமாகுது"

விஜியின் வசனங்கள் , ஆங்கில கலப்பு அதிகம் இல்லாமல் அனைவருக்கும் எளிதில் புரியும்படியா அழகான, கருத்துள்ள வசனங்கள்.


சிறப்பு வல்லமை பெற்றவர்களை கதையின் முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு கடந்த சில வருடங்களில் வெளிவந்த படங்களில் (என் மனவானில், காசி, பேரழகன், பட்டியல்) இந்த படம் சிறந்தது எனக் கூறலாம்.

பிரகாஷ்ராஜ் ஏன் அதிகப்படியான படங்களில் நடிக்கிறார் என்ற வருத்தமிருந்தது உண்டு. ஆனால் இது போன்ற நல்ல படங்களை எடுக்க, "பாசிட்டிவ்" எண்ணங்களை விதைக்கும் இயக்குநர்களை ஊக்குவிக்க அவருக்கு தேவையான பொருளை சம்பாதிக்க எவ்வளவு மசாலா படங்களில் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

இசை, இந்தப் படத்திற்கு பெரிய பலம், பின்னணி இசையும் பாடல் இசையும் அருமையாக உள்ளது.

'காற்றின் இசை" , "செவ்வானம் சேலைக் கட்டி " இரு பாடற்களும் படமாக்கப்பட்ட விதமும் கண்ணுக்கு குளிர்ச்சி, காதுக்கு இனிமை.

படம் ஒவ்வொரு பிரேமிலும் அழகாத் தெரிய வைத்த ஒளிபதிவு இயக்குனருக்கு ஒரு சிறப்பு பாராட்டு.

இது நகைச்சுவைப் படமல்ல, செண்டிமெண்டு படமும் அல்ல,
மகிழ்ச்சியான படம், சந்தோச எண்ணங்களை , சக மனிதனை கண்ணியமாக நடத்த , நினைக்கத் தூண்டும் ஒரு அற்புதமான படம்.

நிச்சயம் பாருங்கள் , ஒரு முறை அல்ல இரண்டு முறை.

7 பின்னூட்டங்கள்/Comments:

said...

nanu prathutane romba nalla padam

Anonymous said...

//சிறப்பு வல்லமை பெற்றவர்களை கதையின் முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு...//


மிகச் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கவனமாக எழுதும் உங்கள் 'மொழி'யும் பாராட்டுக்குரியதே!

-பிரதாப்

said...

see my post abt mozhi

Anonymous said...

<ref>
பிரகாஷ்ராஜ் ஏன் அதிகப்படியான படங்களில் நடிக்கிறார் என்ற வருத்தமிருந்தது உண்டு. ஆனால் இது போன்ற நல்ல படங்களை எடுக்க, "பாசிட்டிவ்" எண்ணங்களை விதைக்கும் இயக்குநர்களை ஊக்குவிக்க அவருக்கு தேவையான பொருளை சம்பாதிக்க எவ்வளவு மசாலா படங்களில் வேண்டுமானாலும் நடிக்கலாம்
</ref>

சரியாகச் சொன்னீர்கள்.

'மொழி' ஒரு தவற விடக்கூடிய திரைப்படமல்ல.

-சுந்தர் ராம்ஸ்

said...

இன்னும் படம் பார்க்கல்லே...
உங்கள் பதிவு பார்க்கத்தூண்டுகிறது.......

said...

கார்த்திக் பிரபு, பிரதாப், சிவஞானம்ஜி, சுந்தர் ராம்ஸ் அனைவருக்கும் நன்றிகள்

said...

நல்ல விமரிசனம்..

அனேகமாக எல்லா படங்களையும் பார்த்துவிடுகிறீர்கள் போல..

தொடர்ந்து பதியுங்கள்.