Friday, October 26, 2012

எக்ஸ் ஒய் இசட் - சிறுகதை


கொரடாச்சேரி இதுதான் என் சொந்த ஊர் என்று யாரிடமாவது சொன்னால் எங்கள் குடும்பத்தினருக்கு பிடிக்காது. “பில்டிங் காண்டிராக்டர்” அப்படி என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்வதைப்போல, விஸ்வநாதபுரம், பழவனக்குடி என அருகில் இருக்கும் பெயரில் “சேரி” இல்லாத கிராமங்களை சுட்டி, மேட்டுக்குடிகளாக காட்டிக்கொள்ள எத்தனிக்கும்
சூழலில் வளர்ந்தவன் நான்.

ஆண்டுக்கொருமுறை ஊருக்குப்போகும் பொழுதெல்லாம், என் பெரியப்பா வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் எக் ஒய் இசட் வீட்டைத் தாண்டும்பொழுது, என் சொந்தக் காரர்கள் எல்லாம் எக்ஸ் ஒய் இசட் இப்பொவெல்லாம் முழுப்பைத்தியமாவே ஆயிட்டான் என்று சொல்லுவார்கள்.

எக்ஸ் ஒய் இசட்டின் பெயர் அதுவல்ல, அது ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியின் பெருமைப் பெயரைச் சுட்டும் பெயர். அவன் அதைச் சார்ந்தவன் என்பதால், அந்தப் பெயரைவைத்துத்தான் அவனை அழைப்பார்கள்.
கருத்துதான் முக்கியம் என்பதால், அவர் எந்த சாதியைச் சேர்ந்தவன் என்ன என்பதெல்லாம் அவசியமில்லை என்பதால் எக்ஸ் ஒய் இசட் என்ற குறியீடு.

 இதே எக்ஸ் ஒய் இசட் சாதியைச் சேர்ந்தவர்கள் , டெல்டா மாவட்டங்களின் வேறு சிலப்பகுதிகளில் ஏபிசி எனவும் கே எல் எம் எனவும் பட்டம் வைத்துக்கொள்வார்கள். நான் கூட எக்ஸ் ஒய் இசட் என்றாலும் , என் அம்மா வழி ஏபிசி எனப்பட்டம் வைத்துக்கொண்டதால் கொஞ்சம் உயர்குடி ஆகிவிட்டோம் என்ற சிறிய பெருமையும் உண்டு.

சுற்றமேத் திட்டினாலும், என் அப்பா மட்டும் எக்ஸ் ஒய் இசட்டைப் பார்க்கும்பொழுதெல்லாம் காசு கொடுப்பார்.

”எதுக்குமே அசராதவனை ஒரு சின்ன விசயத்தில அசைச்சிட்டானுங்க,, நிஜமான போராளி ”  என்று பைத்தியக்காரனைப் பாராட்டும்பொழுது எல்லாம் என் அப்பாவின் மனநிலையின்  மேலேயே சந்தேகம் வரும்.

எக் ஒய் இசட் டிற்கு இப்பொழுது ஒரு 80 வயது இருக்கும்.  அந்தக் காலத்தில் எக்ஸ் ஒய் இசட் , பெரியாரின் கருத்துக்களில் தீவிர ஈடுபாட்டில் இருந்தவராம்.
 ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில்,  தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்படும் நபர்கள் அதிகம் இருக்கும்  பொதுவுடமைக் கட்சிக்கூட்டங்களிலும் பங்கேற்றதால், எக்ஸ் ஒய் இசட், ஏபிசி, கே எல் எம் என அனைத்துக்கூட்டத்தினரும் அவரின் மேல் கடுங்கோபத்தில் இருந்தனாரம்.

 எக்ஸ் ஒய் இசட்டோட பழைய நண்பர்கள் ரங்கநாதன் , சுவாமிநாதன்
தட்சிணாமூர்த்தி போன்றவர்களுக்கு கூடப்பிடிக்கவில்லையாம். அவரோட சொந்த அண்ணன் சொத்தில் எந்தப் பங்கும் கொடுக்காத பொழுதும்
கவலைப்படாமல் களப்பணி செய்தார் என்று என் அப்பா எக்ஸ் ஒய் இசட்டின் பெருமைப்பாடுவார்.

ஒருதடவை வெட்டாற்றுப்பாலத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யக்கூடப் பார்த்தார்களாம், அப்பொழுது கூட அசரவில்லை.
அடி வாங்கியபின்னர் அவரின் வேகம் அதிகமாகத்தான் இருந்ததாம்.

அப்பா, எக்ஸ் ஒய் இசட்டை பற்றி சொல்லும்பொழுதெல்லாம், என் அலுவலகத்தில் இருக்கும் பசுபதி தான் நினைவுக்கு வருவான்.
எங்கு யாரு ஒடுக்கப்பட்டாலும், அவனுக்கு தூக்கம் வராது. இந்த சமுதாயத்தை மாற்ற ஏதாவது செய்யவேண்டும் சொல்லிக்கொண்டும்
அவனால் முடிந்ததை செய்து கொண்டும் இருப்பான். அவனுடைய கணினியில் அம்பேத்கார், பெரியார், விபிசிங் படங்கள் வைத்திருப்பது
எனது மேலாளர்கள் சிலருக்குப் பிடிக்காது. நேர்மையானவன், என் வீட்டிற்கு கூட வந்து இருக்கின்றான், என் அப்பாவிற்கு அவனது சிந்தனைகள் பிடிக்கும், அவனையும் பிடிக்கும். வேலையில் எள் என்றால் எண்ணெய் ஆக இருப்பான்.
ஆனாலும், அலுவலக நேரத்தின் பாதியில் இணையம் மேயும் எனக்கு கிடைக்கும் சம்பள உயர்வில்  அவனுக்கு கால்வாசி கூட கிடைக்காது. எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும் என எனது மேலாளர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு இருக்கின்றேன்.

திரும்ப எக்ஸ் ஒய் இசட்டிற்கு வருவோம், ஏதோ ஒரு நாள் ரங்கநாதன், சுவாமிநாதன், தட்சினாமூர்த்தி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாய் வாழும் தெரு வழியாக  நமது கதையின் நாயகன் வர, தெருமுனையிலேயே , அந்தத் தெருவில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நொங்கு நொங்கு என நொங்கிவிட்டனராம். அந்தப் பிரச்சினைக்குப் பிறகு அடங்கியவர்தானாம், பைத்தியம் மாதிரி உலாவுவாராம், யாராவது சோறு போட்டால் சாப்பிட்டு, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை கழித்துவிட்டார்.

”சரியான நேரத்தில காயடிச்சிட்டானுங்க,  வேரில வெந்நீரை எப்போ ஊத்தனும்னு அவனுங்களுக்குத் தெரியும்”

”எவனுங்கப்பா ? “ என இது வரை அப்பாவிடம் கேட்டதில்லை.

காலையில் எழுந்தோமா, வழுவழுப்பான தாளில் வரும் ஆங்கில தமிழ் நாளிதழ்களைப் படித்தோமா, பேஸ்புக்கில் இளையராஜா பாட்டைப் போட்டுட்டு, பங்கு வணிகம் பார்த்துட்டு, மிஞ்சிய நேரத்தில் கொஞ்சம் மென் நிரலி அடித்து வீட்டு, மஞ்சள் வண்ணம் பூசிய வீட்டில் என் அம்முவை கட்டியணைத்துக் கொண்டு தூங்குவதுதான் என் வழமையான வாழ்க்கை.

விடுப்பு முடிந்து அலுவலகம் வந்து பின்னர் தெரிந்தது, பசுபதியின் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு  அவனை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள் என்று. என்ன பிரச்சினை என்று விசாரித்ததில் , அவனது திட்டக்குழுவில் இருந்த  ஒரு பெண்ணை படுக்கைக்கு பகிரங்கமாக அழைத்தானாம்.

அவனின் வேலை நீக்க செய்தி , நமிபீயாவில் புயலடித்து நான்கு பேர் பலி என்பது எப்படி இருக்குமோ அந்த வகையில்தான் எனக்கு சாதாரணமாக இருந்தது. பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அடுத்த வருடம் அமெரிக்கா போனேன். ஒரு வருடம் இருந்தேன். புறநகர்ப்பகுதியில் பங்களா கட்டினேன். ஒரு நாள் அப்பாவுடன் காரில் செல்லும்பொழுது,  ஒரு தெருமுனை மீட்டிங்கில் ஏதோ ஒரு வாழ்வாதார பிரச்சினைக்காகப் பசுபதி பேசிக்கொண்டிருந்தான்.

“தீர்க்கமாக தெளிவாப் பேசுறான், அப்ப மாதிரி, இப்ப எல்லோரையும் எக்ஸ் ஒய் இசட்டுக்குப் பண்ண மாதிரி ஈசியா நசுக்கிட  முடியாது”

என் அப்பா சொன்னதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.




Tuesday, October 23, 2012

கடவுள் - பின்நவீனத்துவக் கதை?!!கவிதை

கடவுளுக்காகக் காத்திருந்தேன்
கடவுள் வரவில்லை ...
இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது !!!

கண்டிருந்தால் வரவேண்டிய
அதே மகிழ்ச்சி இப்பொழுதும்...
மகிழ்ச்சியுடன்  தலைவலியும்

வேறுதலையை மாற்ற பெட்டியைத் திறந்தால்
பலவற்றில் ஒரு தலையைக் காணவில்லை !!
கதவுத் தட்டப்பட்டது !!!
கிடைத்ததை மாற்றிக்கொண்டு  கதவைத் திறந்தேன்.

கதவுக்கு வெளியேயும் நான்
கையில் காணாமல் போன தலையுடன்
“ நான் கடவுளைக் கொன்றுவிட்டேன்” என்றேன் !! 

உபரி ஓட்டங்கள் - 23-10-2012 (சினிமா , கிரிக்கெட்)

கைதி, ஆட்டோராணி, இதுதாண்டா போலிஸ் தொடங்கி நேற்றைய அருந்ததி, இன்றைய நான் ஈ வரை நான் தெலுங்கு மொழிமாற்றுப்படங்களின் மிகப்பெரும் ரசிகன். அந்தப்புரம் என்ற படம், முதல் பாதி மொழிமாற்றுப்படமாகவும், பிற்பாதி நேரடிப்படமாகவும் இருக்கும். இப்பொழுது வரும் மொழிமாற்றுப்படங்களில் எல்லாம், நகைச்சுவைப்பகுதியை மட்டும் சொருகி நேரடிப்படங்கள் மாதிரியான தோற்றத்தைக் கொடுத்துவிடுகிறார்கள். சரி தமிழில் வந்த மொழிமாற்றுப் படம் என்னவென தேடியதில் நாகேஷ்வரராவ், அஞ்சலி தேவி வில்லியாக நடித்த கீலுகுர்ரம் என்ற படம் தான் முதல் டப்பிங் படம் என்று ராண்டார் கை எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டப்பட்டிருந்தது.  இதில் சுவாரசியமான விசயம் என்னவெனில் , இந்தப்படம் தமிழில் உரிமை வாங்கப்பட்டு, பாலய்யா நாயகனாக நடித்து, எம்.ஜி.ஆர், வி.என் ஜானகி சிறுவேடங்களில் நடிக்க மோகினி என்ற பெயரில் தமிழில் நேரடியாக வெளிவந்து பெரும் தோல்வியடைந்ததாம். இதைப்பார்த்த கீலுகுர்ரம் படத்தின் தயாரிப்பாளர் தெலுங்குப்படத்தை மாயக்குதிரை என டப் செய்து வெளிவிட்டு கொஞ்சம் காசு பார்த்தாராம்.

தகவலுக்கான தரவு - http://www.thehindu.com/arts/cinema/article3790929.ece 

-----

ஒரு கிரிக்கெட் கேள்வி, ஆட்டத்தின் கடைசிப்பந்து, ஐந்து ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி, மட்டையாளர் பந்தை வேகமாக விளாசுகிறார், பந்து தரையில் உருண்டோடி , மெல்ல எல்லைக்கோட்டை நோக்கை நகர்ந்து எல்லைக்கோட்டைத் தொடுகிறது.  அதற்குள் மட்டையாளர்கள் ஐந்து ஓட்டங்கள் ஓடிவிடுகின்றனர். ஆட்டத்தின் முடிவு என்ன? ஏன்?

----

இந்திய அரசாங்காத்தின் தணிக்கைக் குழு, பெரும்பாலான படங்களை பிரச்சினையின்றி தணிக்கை செய்து வெளியிட அனுமதித்தாலும், சிலப்படங்களை கொத்தி குதறி விடுவார்கள். பலக்காட்சிகள் வெட்டப்பட்டுவிடும். அவ்வாறு வெட்டப்படும்பொழுது, ஏன் அந்தக் காட்சி வெட்டப்பட்டது என விதிமுறைகளுடன், ஆவணப்படுத்தப்படும்.  இந்த அதிகாரப்பூர்வத் தளத்தில் திரைப்படங்களின் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் என்ன , ஏன் எனவும் அறியலாம். 

http://cbfcindia.gov.in/ வலது மேற்பக்கத்தில் Search Film என்ற பெட்டியில் தேடுங்கள்

-----

தசாவதாரம் படத்தில், கமலின் பல்ராம் நாயுடு கதாபாத்திரம், ஒரு ரிங் டோன் வைத்திருக்கும் எந்தோ சின்னதி ஜீவிதம் நாகேஷ்வரராவ் நடித்த ஸ்ரீமாந்துடு என்ற தெலுங்குப்படத்தில் வரும் பாடல். இந்தப்பாடலுக்கும் கமலுக்கும் இருக்கும் மற்றும் ஒரு சம்பந்தம் கமல் , சிறு வயதில் இந்தப்பாடலுக்கு நடனமைத்திருக்கிறார். கமலஹாசன் எதையுமே காரியம் இல்லாமல் செய்ய மாட்டார்.

---

ரிடையர்ட் ஹர்ட் முறையில் நிறைய ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்து இருக்கின்றார்கள். அத்தப்பட்டு, ஜெயவர்த்தனே இருவரும் ரிடையர்ட் அவுட் முறையில் கூட ஆட்டமிழந்து இருக்கிறார்கள். ரிடையர்ட் நாட் அவுட் என்ற முறையில் ஆட்டத்தை விட்டு வெளியேறியவர் கார்டன் கிரீனிட்ஜ். தனது மகளின் சிகிச்சைக்காக ஆட்டத்தின் பாதியில் இருந்து வெளியேறியவரின் ஸ்கோர் ரிடையர்ட் நாட் அவுட் என்ற முறையில் குறிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அவரின் மகள் அந்த சிகிச்சையில் பிழைக்கவில்லை.


----

கீழ்க்கண்ட படத்தின் முக்கியத்துவம் என்ன?





Saturday, October 20, 2012

நான் சொன்ன பேய்க்கதைகள் - ஒரு நிமிடக்கதை

”அம்மு அந்தக் கண்ணாடியைப் பார்க்காதே, நம்மளைத் தவிர வேற யாரோ இந்த ரூம்ல வேற யாரோ இருக்காங்க”

ஒவ்வொரு காதலுக்கும் ஒரு துருப்புச்சீட்டு, இப்பொழுது எல்லாம் அம்முவை என் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுவது, பேய்களைப் பற்றிய புனைவுகளே !!

”அம்மு, நேத்து நைட், ஒரு பேய் உன்னைத் துரத்திட்டு வர்ற மாதிரி கனவு கண்டேன், கையில பெரிய கோடாரி, கருப்புக் கோட்டு போட்டுக்கிட்டு”

“நீ வந்து என்னைக் காப்பாத்தினியா”

“உன்னைத் துரத்துனதைப்பார்த்தேன், பேய் உன் பக்கத்தில வர்றப்ப கனவு கலைஞ்சிடுச்சு”

பேய்க்கதைகளில் என்னை நாயகனாக்கிக்கொள்ள விரும்புவதில்லை. பெரும்பாலான பேய்ப்படங்களில் வரும் நாயகர்கள், பாரதிராஜா படத்தில் வரும் நடிகர் ராஜாவைப் போன்றவர்கள்தாம்.

அம்முவிற்கு படிப்பில் இருக்கும் ஆளுமை க்கு நேர் எதிர்பதம் அவளின்  பயந்த சுபாவம். நூடுல்ஸ் மாதிரி குழப்பமா இருக்கிற அல்காரிதத்தைக் கூட நுனி முதல் அடிவரை , அரைநொடியில் புரிந்து கொண்டு, அட்டகாசமா நிரலி எழுதுபவளுக்கு இந்த பேய் மாதிரியான அமானுஷ்ய விசயங்கள்னா ஒரு திகில். அதனால, அம்முவை சுற்றி ஏதோ ஒரு அமானுஷ்ய வளையம் இருப்பதைப்போலத் தோற்றத்தை உருவாக்கி , நான் மட்டும் அவளைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறேன்.

”நீ சொல்லுறது எல்லாம் ஏற்கனவே நிஜமாவே நடந்துட்டு இருக்கோன்னு பயமா  இருக்கு கார்த்தி”,

கல்லூரியில் இருந்து வீடு திரும்பும்பொழுது, சிறிய காட்டுப்பாதையைக் கடந்தாகவேண்டும். ஒரு நாள் அம்முவுடன் கைக்கோர்த்து வந்து கொண்டிருந்த பொழுது, அங்கே யாருமே இல்லாத பொழுதும்,அவளின் கையை விட்டுவிட்டு, இல்லாத ஒன்றை துரத்திப்போய் இரண்டு நிமிடங்கள் கழித்து அம்முவிடம் வந்து

“என்னோட கனவில் வந்த பேய் , அங்க நின்னு உன்னைப்பார்த்துச்சுடா குட்டி, போய் விரட்டிட்டேன்”

அம்முவிற்கு பேய் பயம் காட்டுவதற்காகவே,  ஆங்கில, கொரிய , தமிழ், இந்தி என திகில் படங்களைப் பார்க்க ஆரம்பித்து, பி.டி.சாமியில் இருந்து இணையத்தில் எழுதும் கத்துக்குட்டி பேய் எழுத்தாளர்கள் வரை படித்ததில் எனதுப் புனைவுகள் கொஞ்சம் பரிணாம வளர்ச்சியடைந்த்து, வேற்றுக்கிரகவாசிகளுக்கு மாறியது.

“நாலடி தாண்டா அம்மு இருக்கு, மூக்கு மட்டும் கூர்மையா, மனுஷரூபத்தில, கைக்குப்பதிலா பெரிய ரெக்கை”

என நான் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே, நான் வர்ணித்த அதே உருவம், தூரத்தில் சிறிய விண்கலம் மாதிரி வாகனத்துடன் நின்று கொண்டிருக்க, அம்மு  என் கையை உதறிவிட்டு, அதை நோக்கி ஓட, நான் திகிலிலும் பயத்திலும்  மூர்ச்சையானேன். ஆழ்மனதில், நான் அம்முவிடம் சொன்ன கதைகளில் இல்லாத  தொடர்ச்சி, இப்பொழுது புரிய ஆரம்பித்தது.
---

பிற்சேர்க்கை - இதைத் திகில் கதையாகவும் படிக்கலாம். ஓர் உருவகக்கதையாகவும் படிக்கலாம்.  காதலிக்கு சொல்லுகின்ற பேய்க்கதைகள் ---| ஒவ்வொரு காதலனும் தன் காதலியைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுக்க பிரயத்தனங்கள்,  எதை நமக்கு சாதகமாக்கிக்கொள்ள நினைக்கின்றோமோ அதுவே பாதகமாவது, கடைசியில் ஏலியன் போல எவனாவது வந்துத் தூக்கிகொண்டு போய்விட, எல்லாம் புரிந்து கொள்ளும்பொழுது டூ லேட்