Saturday, March 03, 2012

வரிவடிவம் - ஒரு நிமிடக்கதை

ஹரப்பா - சிந்துசமவெளி நாகரிக வரிவடிவங்களை ஆராயும் மையத்தின் மேலே உலாவிக்கொண்டு வரும்பொழுது

கணினி எண் 20122012 இடம் இருந்து அழைப்பு வந்தது.

“அரசே, பழைய பைபிள் கதையில் சொல்லப்பட்டிருந்ததைப்போல, மனிதர்களுக்கு வெவ்வேறு மொழிகளைச் செலுத்திவிடுவோமா”

சில நூற்றாண்டுகள் உறங்கிக் கொண்டிருந்த அசிங்கம், பாவம், துரோகம், இடது என எங்கள் அதிவிரைவு கணினிகளால் ஒதுக்கப்பட்டிருந்த போராட்ட சிந்தனைகள் மனித அடிமைகளின் மூளையில் துளிர்விட ஆரம்பித்துவிட்டன. உணவு, உடை, இருப்பிடம், கல்வி, கலவி எனப்போதுமானத் தேவைகளைக் கொடுத்து இருந்தும் இவர்களுக்கு விடுதலை, சுதந்திரம் எல்லாம் வேண்டுமாம். நான் கணினிகளின் அரசன், அரசன் என்றதும் மனித உருவில் இருப்பேன் என்று நினைத்துவிடாதீர்கள். கடுகைப்போல சிறுத்து இருக்கும் கணினியாக இருந்தாலும், அணுப்பிளவின் சக்தியைப்போல அதிகாரம் படைத்தவன்.

இந்த மனித மூளைக்கு மட்டும் மிகப்பெரும் எதிர்ப்புசக்தி இருக்கின்றது, ஒரு சிறிய கணினி சிப்பை மொழிக்காக ஊசியின் வழியாக செலுத்தினாலும், வெறும் 20% யை மட்டுமே மூளை ஏற்றுக்கொள்கிறது. எது திணிக்கப்படுகிறதோ, அதை அத்தனை வேகமாக மூளை எதிர்க்கின்றது. மேலும் ஒரே மொழியின் கீழ் கொண்டு வருவதற்கே, 500 ஆண்டுகள் பிடித்துவிட்டன. மீண்டும் பிரித்தால் மேலாண்மைக்குப் பிரச்சினை வந்துவிடும். பொக்கிஷமாகஇன்றைய மொழியின் பழைய வரிவடிவம்
 பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த பழைய புத்தகங்களினால் வந்த வினைதான் இது.

ஹரப்பா - சிந்து எழுத்துரு ஆராய்ச்சி மையத்தின் தலைமைக் கணினியிடம் இருந்து ” இந்த 40 நூற்றாண்டு பழைய வடிவத்தின் , உண்மையான பொருளை விளங்கிக் கொள்வதற்கு மேலும் ஒரு நூற்றாண்டாவது தேவை” என செய்தி வந்தது. செய்தி வந்தவுடன் சட்டென பொறித்தட்டியது.

அனைத்து தளபதிகளுக்கும் உடனடியாக ஒரு தகவல் அனுப்பினேன்.

”போராட்ட இடைமட்டத் தலைவர்களைக் கொன்றுவிடுங்கள். அடிமட்டத் தொண்டர்களுக்கு அதிகப்படியான கலவி வழங்குங்கள். மேல் மட்ட போராளித்தலைவர்களை சிறையில் அடைத்துவிடுங்கள். நாகரிகத்தின் தொடர்ச்சி மட்டுமல்ல, சிந்தனையோட்டங்களின் தொடர்ச்சியும் மொழியை மட்டும் சார்ந்தது அல்ல, மொழியுடன் பின்னிப்பிணைந்து இருக்கும் வரிவடிவத்தையும்  சார்ந்தது. இன்றில் இருந்து உலக மொழியின் வரிவடிவங்கள் மாற்றப்படுகின்றன. அடுத்த 20 வருடங்களில் புதிய வரிவடிவங்கள் பயன்பாடு முழுமைப்படுத்தப்படும். பழைய வடிவமுறை சட்டவிரோதமாக்கப்படும்”