Tuesday, October 19, 2010

உபரி ஓட்டங்கள் (Extras 19-October-2010)

கிழக்கிற்கு மேற்கின் வளமையை நோக்கி நகர ஆசை, மேற்கிற்கோ கிழக்கத்திய தத்துவங்களின் மேல் ஆர்வம். அன்றைக்கு வழமைப்போல அம்முவின் பிரிவிற்கு முன்னான பழம் நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே, கார்ல்ஸ்க்ரோனாவில் இருந்து 45 நிமிடங்கள் தொலைவில் இருக்கும் கார்ல்ஸ்ஹாம்ன் நகரத்திற்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென ஒருவர் தோளைத் தொட்டு, நீ இந்தியாவில் இருந்து வருபவனா எனக் கேட்டார். கூப்பிட்டவரின் தலை முடி நிறம் கருப்பு, உடல் நிறம் ஐரோப்பிய வெளுப்பு, கடினமான முகம் ஆகியனவை வைத்து அகதியாகத்தான் இருக்கும் என முடிவு செய்து கொண்டே அவரின் பக்கமாக திரும்பி என்ன சொல்கிறார் எனக் கேட்க ஆரம்பித்தேன். பொதுவாக வெள்ளைக்காரர்கள் தானாகவே இப்படிக் கேட்டால் கண்டிப்பாக ஏதாவது இந்து மத தத்துவங்களைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள். இதற்கு முன்னர் ஒரு ரயில் நடத்துனர், பேச்சை ஆரம்பித்து ரஜினியின் பாபா படத்தில் பாபா படத்தை தனது கைப்பையில் இருந்து எடுத்துக்காட்டி என்னைக் கலவரப்படுத்தினார்.

இந்த அகதியின் பக்கம் திரும்பியவுடன் ஓம், க்ரீம் எனப் பாடத் தொடங்கினார், அய்யோ இதுவும் வழக்கம்போல ஏதாவது சமஸ்கிருதம் ஸ்லோகம் சொல்லி, இது தெரியுமா அது தெரியுமா எனக் கேட்கப்போகிறார் எனத் திகிலுடன் உற்று நோக்கினால், சில வார்த்தைகள் நிரம்ப பரிச்சயமானவை. அட, முருகா, வேலவா என அல்லவா பாடிக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து அவர் பாடிய மற்றொரு பாடல் வள்ளலாரின் பாடல். மழலைத் தமிழில் அவர் தொடர்ந்து பாடியது கடவுள் அவநம்பிக்கையையும் மீறி, ”எல்லாப்புகழும் இறைவனுக்கே ” என ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் மேடையில் சொல்லியபொழுது ஏற்பட்ட அதே சிலிர்ப்பைக் கொடுத்தது. அவர் ஒரு அல்பேனிய முஸ்லிமாம். 10 வருடங்களுக்கு முன்னால் திடீரென என எழுந்த ஒரு உள் உணர்வில் ஏதோ தேடப்போக, வள்ளலார் , முருகன் இப்படி தமிழ் சார்ந்த ஆன்மீகத்தின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டதாம். கைபேசியில் வைத்திருந்த வள்ளலார், முருகன் படங்களைக் காட்டினார். இம்முறை உளப்பூர்வமாக அவர் காட்டிய படங்களைப் பார்த்தேன். அடுத்த 30 நிமிடங்கள் மாணிக்கவாசகர், ஆழ்வார்கள் , நாயன்மார்கள் என எனக்குத் தெரிந்த விசயங்கள் என்றாலும் யாரோ, என் மொழிக்கும் அடையாளங்களுக்கும் சம்பந்தமில்லாத ஒருவரின் வழியாகக் கேட்டது ஆனந்தமாக இருந்தது.
---

சில வருடங்கள் முன்வரை திரைப்பட ரசிக சிகாமணிகள் செய்யும் போஸ்டர் ஒட்டும் வேலை, இணையத்தில் தனக்குப்பிடித்த பிரபல நடிகர்கள் படங்களை சிலாகித்து மேலும் பிரபலப்படுத்துபவர்களை கேலி கிண்டல் பேசிய நான், ரஜினிகாந்தின் திரைப்பட போஸ்டர்களைத் தெருத்தெருவாக ஒட்டுவேன் என கனவிலும் நினைக்கவில்லை. 90 கிலோமீட்டர்கள் சுற்றுவட்டத்தில் இருக்கும் நான்கு ஊர்கள் , 100க்கும் மேற்பட்ட எந்திரன் பட போஸ்டர்களை கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு நாட்களுக்கு ஒட்டியபொழுது, ரசிகர்களின் நுட்பமான ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. சில இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் அதே இடத்தில் மறுநாள் ஒட்டப்பட்டது. பேருந்து நிலையம், ரயில்நிலையம், கடைகள், கல்லூரி வளாகங்கள், அலுவலக வரவேற்பறை தகவல் பலகைகள் எங்கும் எதிலும் எந்திரன் மயம் தான். படத்தை விட , இந்த சுவரொட்டிகளைக் காணும்பொழுது பெரும் நிறைவு. நான் இருக்கும் பிலெக்கிங்கே மாநிலத்தில் ”எந்திரன்” இரண்டுக் காட்சிகள் இரண்டு நகரங்களில் நண்பர்கள் குழாமின் முயற்சியால் Fusion Edge Media LLC யினரால் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. பிலெக்கிங்கே மாநிலத்தில் முதன் முறையாக தமிழ் மொழியில் எடுக்கப்பட்டப்படம் திரையிடப்படுவது இதுவே முதன்முறையாகும். தனிப்பட்ட அளவில் விசாரித்தவரை வேறு எந்த இந்திய மொழிப்படங்களும் வெளியானதில்லை எனத் தெரிவித்தனர். அன்றைய தினம் இருந்த இதமான வெப்பநிலை, கால்பந்து ஆட்டங்கள் காரணமாக எதிர்பார்த்த அளவு உள்ளூர் மக்கள் வரவில்லை எனினும் , மனதுக்கு நிறைவு தரும் அளவிற்கு அரங்கம் இருந்தது. ரோன்னிபெ, கார்ல்ஸ்க்ரோனா நகரங்களில் ஒரு தமிழ்ப்படம் வெளியாவது என்பது தேனி உசிலம்பட்டி வகையிலான ஊர்களில் ஒரு சுவிடீய மொழித் திரைப்படம் வெளியாவதற்கு சமமாகும். ஒரு கலாநிதி மாறனால் ரஜினியின் பொலிவில், ஷங்கரின் கற்பனையில் எங்கோ ஒரு தேசத்தில், தமிழறியாத சிறுநகரங்களில் தமிழை ஒலிக்க வைக்க முடிகிறதென்றால் கண்டிப்பாக எந்திரன் வெற்றியே !!


-----
சிறிய வாசகர் வட்டத்தை மட்டுமே கொண்டுள்ள எனது வலைபதிவையும் சிறுகதைகளையும் மேலும் பிரபலப்படுத்தும்
கட்டமாக நண்பர்களின் உதவியுடன், சில சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. நேரம் இருக்கையில் வாசித்து அபிப்ராயங்களைத் தரவும்
http://translatedtamilstories.blogspot.com/ ஆங்கிலத்தில் நட்புக்காக மொழிப்பெயர்க்க விரும்புவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

எழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை. தொடுப்போ பெயரோக் கொடுத்தால் மகிழ்ச்சி, கொடுக்கப்படவில்லை என்றாலும் வருத்தம் இல்லை.

------

தமிழின் கண்ணீருக்காக மனம் வருந்திய ஐரோப்பியர்களில் குறிப்பிடத்தக்கவர் கீழ்க்காணும் படத்தில் இருப்பவர். 10 வருடங்கள் தமிழர்களின் கனவுக்காக கடும் பிரயத்தனம் எடுத்தவர். எள்ளல்கள், குற்றச்சாட்டுகள் எதையும் பொருட்படுத்தாமல் திடமாக தமிழர்களின் பக்கம் கடைசிவரை நின்ற ஒரே ஐரோப்பியத் தலைவர்.யார் இவர்? என்பதை அறிய முடிகிறதா?


----


பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

திரு மு.வரதராசனார் உரை - மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்

திருக்குறளை மறு வாசிப்பு செய்ய http://kurals.com/

1 பின்னூட்டங்கள்/Comments:

கபீஷ் said...

ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்க உபரி ஓட்டம் நல்லாருக்கு. :)) நீங்க என்ன சொன்னாலும் பதில் சொல்ல மாட்டிங்க இல்ல பின்னூட்டத்துல. அதனால இதுக்கு முன்னாடி நல்லால்லயானு கேக்க மாட்டீங்கன்னு உண்மைய சொல்லிட்டேன் :)