Friday, June 25, 2010

ஒரு முத்தத்தின் விலை சில சிகரெட்டுகள் (அ) சில சிகரெட்டுகளின் விலை ஒரு முத்தம் - சிறுகதை

கைபேசி இரவு ஒன்பதரை எனக் காட்டியது. மதுபான விடுதிகளில் கொண்டாட்டங்கள் முழுவீச்சில் தொடங்க இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கின்றதே என எண்ணியப்டி, நள்ளிரவு வரை நீளும் சூரியவெளிச்சத்துடனும் இதமானா குளிருடனும் ஐரோப்பிய கோடை நாள் ஒன்றில், நகரத்தின் மையப்பகுதியில் இருந்த ஒரு பூங்காவில் உலாத்திக் கொண்டிருந்தபொழுதுதான் மனமும் உடலும் பெண்ணின் ஸ்பரிசத்திற்கு ஏங்கியது.

நெருக்கமாக கைக்கோர்த்துக்கொண்டு ஒவ்வொரு திருப்பத்திலும் மிதமான முதல் இறுக்கமான முத்தங்களைக் கொடுத்துக் கொண்டு சென்றுகொண்டிருந்த காதலர்களை தம்பதிகளைப் பார்க்க பொறாமையாக இருந்தது. முத்தம் காதலையும் காமத்தையும் இணைக்கும் ஒரே புள்ளி. முன்பு காதலிக்கும்பொழுதும் காதலிக்கப்படும்பொழுதும் காதலை அனுபவிக்கும் சூழல் இல்லை. இங்கு சூழல் இருக்கும்பொழுது காதலிக்கவும் காதலிக்கப்படவும் யாருமில்லை. பிறந்த நாளுக்கு முந்தையநாள் ஜெனியின் வீட்டில் இருந்து மாடிப்படிகளில் இறங்கி வரும்பொழுது 'திஸ் ஈஸ் மை கிஃப்ட்' என பாதிக் கன்னத்திலும் பாதி உதட்டிலும் பட்டும் படாமல் ஜெனி கொடுத்த முத்தம்தான் ஏழு வருடங்கள் கழித்து ,இடையில் சில நூறு முத்தங்களைப் பெற்ற பின்னர் கூட முத்தம் என்றால் நினைவுக்கு வருவது.

ஆங்கிலப்பட பாணியில் கொடுக்க முயற்சி செய்து உதட்டைக் கடித்து சொதப்பியது ஒரு தனிக்கதை. உடல்கள் பின்னிப்பிணைந்துக் கிடைக்கும் சுகத்தை விட ஒரு முத்தம் தரும் சுகம் அதிகம். ஜெனியைக் காதலித்ததனால் முத்தம் கொடுக்க ஆரம்பித்தேனா இல்லை முத்தம் கொடுப்பதற்காகவே காதலைத் தொடர்ந்தேனா என்ற யோசனைத் தட்டுப்படும் முன்னர் அந்தக் காதல் முறிந்துப் போனது.

பிறகு சில வருடங்கள் வனவாசம், காதலிலும் முத்தத்திலும் !! பின்பு அம்மு வந்தாள். காதலிக்கப்பட்டேன், 'சுவீடனுக்குப்போகும் முன் என்ன கொடுத்து செல்வாய்' என்றாள், 'போதிய அளவிற்கு முத்தம் கொடுக்கின்றேன்' என்றேன்!! கோபம் அடைவாள் என்று எதிர்பார்த்தால் எங்கே எப்பொழுது எத்தனை என அவள் கேட்க, கேட்டு முடிக்கும் முன் அலையன்ஸ் பிரான்ஸைஸ் பின்புறம் இருக்கும் படிக்கட்டில் வைத்து நீண்ட வனவாசத்திற்குப் பின்னர் அம்முவின் இதழ்வாசம் என் வசம்.

ஆட்டோவில் இருந்து இறங்கும்பொழுது கொடுத்த பாதிக் கன்னம் பாதி உதடு அரை முத்தத்துடன் இருப்பத்தைந்தரை முத்தங்கள் கொடுத்தாய் என பின்னொருநாளில் இடம்பொருள் உணர்வுகளோடு கணக்குச் சொன்னாள்.

'ஹார் து சிகரெட்' என ஒரு சுவீடிஷ் பெண் சிகரெட் கடன் கேட்க இயல்நிலைக்கு வந்தேன்.


சிகரெட் கேட்டவளை ஏற இறங்கப்பார்த்தேன். கால்களின் முழு அழகும் தெரியும்படியாக சிறியக் குட்டைப்பாவாடை உள்ளத்தை அள்ளித்தா ரம்பாவை நினைவுப்படுத்தியது.சொல்லப்போனால் ரம்பாவை விட வனப்பு அதிகம். இருந்தபோதிலும் இவளின் தோற்றம் கிளர்ச்சியைத் தரவில்லை, இரண்டு வருடங்களில் பாதி உரித்தக் கோழியைப்போல வெள்ளை நிறப்பெண்களைப் பார்த்துவிட்டதால் மாநிறத்தின் சிறிய இடுப்பு விலகல் தரும் போதையில் நூற்றில் ஒரு பங்குக் கூட தருவதில்லை. கோடைக்கு ஏற்ற காற்றோட்டமான திறந்த மேலாடை, கையில் சிறிய பியர் போத்தல், ஆனாலும் தெளிவாகவே இருந்தாள்.

'நெய் , யாக் ரோக்கர் இந்தே' நான் சிகரெட் பிடிப்பதில்லை என்பதை சுவிடீஷில் சொன்னேன்.

'பரவாயில்லை, அந்தக் கடையில் வாங்கிக் கொடு, நான் காசு தருகின்றேன்' என்றாள். பதினெட்டு வயதுக் குறைவானவர்களுக்கு புகையிலை மது சம்பந்தபட்ட விசயங்கள் வாங்க உரிமை கிடையாது. நம்ம ஊர்ப் பெண்களை ஒப்பிடுகையில் இவர்களின் வளர்ச்சி கிடுகிடுவென இருந்தாலும் தோற்றத்தைவிட உண்மையான வயது ஐந்து குறைவாகத்தான் இருக்கும்.

வார இறுதியானதால் அங்கும் இங்கும் காவல் துறையினர் சினேக முகபாவத்துடன் உலவிக்கொண்டிருந்தனர். குறை வயது உடையவர்களுக்கு வாங்கிக் கொடுப்பதும் சட்டப்படிக்குற்றம், ஏதேனும் பிரச்சினையாகிவிடுமோ என்ற பயத்தினால் வாங்கித் தர மறுத்துவிடலாம் என நினைத்தேன். மன சஞ்சலமும் தனிமையான சூழலும் நிறையவே சபலப்படுத்தியது.

'உனக்கு சிகரெட் வாங்கிக் கொடுப்பதனால் எனக்கு என்ன லாபம்' எனக் கேட்டேன்.

'உனக்கு என்ன வேண்டும் '

'ஆழ்ந்த பிரெஞ்சு முத்தம் வேண்டும்' என்றேன்.

முகத்தில் சிறிய அதிர்ச்சியுடன் இரண்டு மடக்கு பியர் குடித்துவிட்டு என் அருகில் உட்கார்ந்து 'சரி, நீ முதலில் வாங்கு, பின்னர் இங்கு வருவோம், முத்தம் கொடுக்கின்றேன்,கொடுத்தபின்னர் உன்னிடம் இருந்து சிகரெட்டுகளை வாங்கிக் கொள்கின்றேன்' என்றாள். இந்த ஒப்பந்தம் எனக்கும் தோதுப்பட்டது.

இவளின் முத்தத்தில் என்னுடைய பழையக் காதலை மீள் நினைவு செய்துகொள்ளலாம், இப்பொழுது மனதுக்கு தேவைப்படும் பெண்ணின் அருகாமையும் பூர்த்தி செய்யப்படும் என்ற இரட்டை நோக்கத்தில் அவளுடன் அருகில் இருந்த கடைக்குச் சென்றேன். செல்லும் வழியில்

'தேவை என்றால் உனக்கு மூன்று மடங்குப் பணம் தருகின்றேன், உனக்கு கண்டிப்பாக முத்தமே வேண்டுமா' என்றாள்


நான் பதில் சொல்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன்.

'முத்தம் காதலுடன் கொடுக்கப்படவேண்டும், காதலுடன் பெறப்படவேண்டும், என் முத்தங்கள் என் காதலுனுக்காக மட்டும் என நினைத்திருந்தேன்' என்ற அவள் சொன்ன பொழுது எனது சபலம் கரையத் தொடங்கியது.

அந்நியனை முத்தமிட வேன்டுமே என்ற கலக்கம் சிகரெட் வேண்டும் என்ற விருப்பத்தைவிட அவள் கண்களில் அதிகமாக தெரிந்தது.

'என்னை மன்னிக்கவும், என்னால் சிகரெட் வாங்கித் தர இயலாது' என என் மேல் எனக்கு ஏற்பட்டிருந்த அருவெறுப்பை உதிர்த்தபடியே அங்கிருந்து நகர்ந்தேன். வரும் வழியில் ஒரு மரத்தடியில் ஒரு நடுத்தர வயது ஆள், ஒரு சிறுவயது பெண்ணை தன்கைகளை அவளின் மேலாடைக்குள் பரப்பியபடி முத்தமிட்டுக்கொண்டிருந்தான், அவர்களின் அருகில் சில சிகரெட் பாக்கெட்டுகள்., என்னிடம் சிகரெட் கேட்டப் பெண்ணோ என அந்தப் பெண்ணின் ஆடையையும் அவளின் பக்கவாட்டு முகத்தையும் கவனித்தேன். நல்லவேளை அந்தப் பெண் இவளில்லை.

Wednesday, June 16, 2010

தெம்பல மினிஹெக் மட்ட உதவ் கலா - சிறுகதை

கோடைமழை நமக்கு கொண்டாட்டத்தைத் தருவது போல சுவீடன் தேசத்து மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை. பெரும்பாலும் இறுக்கமான முகபாவத்துடன் இருக்கும் இந்த மக்களுக்கு முகத்தில் மலர்ச்சிவருவது இந்தக் கோடைக்காலத்தில் மட்டுமே! தொட்டால் சுருங்கிச் செடிப்போல மழைமேகங்களைக் கண்டாலே இவர்களுக்கு முகம் சுருங்கிவிடும். எனக்கு மழைப்பிடிக்கும், எந்தகாலத்திலும் எந்த தேசத்திலும். வீட்டை விட்டு வெளியே வரும்பொழுதே தூறல் போட ஆரம்பித்து இருந்தது. குடை இருந்தும் எடுக்கவில்லை, லேசான தூறலில் நனைவதும், கொட்டும் மழையில் எங்கேனும் ஒதுங்கி மழையை வேடிக்கைப்பார்ப்பதும் ஒரு சுகம். மழையைப் பார்க்கும்பொழுது மனதிற்குள் ஒவ்வொரு பாரமும் கரைவதாக ஒரு உணர்வு.

கோடையில் மழை, வசந்தத்தில் பனி இதற்கெல்லாம் காரணம் புவி வெப்பமடைதல் தான் காரணம் என அலுத்துக் கொண்டே, நான் ஒதுங்கி இருந்த மருந்தகக் கட்டிடத்தில் இருந்து இரு நடுத்தர வயது சுவிடீஷ் மக்கள் பேசியபடியே குடையுடன் வெளியேறினர். டென்மார்க் சென்றிருந்தபொழுது 1000 டேனிஷ் க்ரோனர்கள் கொடுத்து வாங்கி இருந்த பனிக்காலத்து மேலங்கி தேவையான கதகதப்பைக் கொடுத்த சுகத்துடன் மழையை ரசித்துக் கொண்டிருக்க, தூரத்தில் அந்த சிங்களப் பெண்மணி வருவது தெரிந்தது. இவர் பெயர் ஏதோ விக்கிரமசிங்கே, நினைவுக்கு வந்துவிட்டது ஷிராந்தி விக்கிரமசிங்கே.

ஏனைய ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களைக் காணலாம் என்றால், இந்த ரோன்னிபி நகரம் ஒரு விதிவிலக்கு, இங்கு நான் சந்தித்த அனைவருமே சிங்களவர்கள். சுவிடீஷ் மொழி வகுப்புகளிலும் பொது இடங்களிலும் இவர்களை நான் அடிக்கடிச் சந்தித்தாலும் சின்னப்புன்னகையை மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுவேன். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே உரையாடலுக்கு உட்படுவதுண்டு. இவர்களில் சிலருக்கு நன்றாகத் தமிழ் தெரிந்தாலும் நான் பேச விருப்பப்படுவதில்லை. நஞ்சை தங்கத்தட்டில் வைத்துக் குடித்தால் என்ன தகரத்தில் வைத்துக் குடித்தால் என்ன!!

அம்முவிற்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருவது இதனால் தான். ' நீ ஒரு Fanatic, cynic, முன்முடிவுகளுடன் மனுஷாளோட பேசாதேடா' என அடிக்கடித் திட்டுவாள். அம்மு சொல்லுவதும் சரிதான். எனக்கு விருப்பமான அரசியல் ஆளுமைகளை புரிந்து கொள்ள விரும்பாத இனங்களின் அடையாளங்களைத் தாங்கி வரும் மக்களிடம் இருந்து ஒரு பாதுகாப்பான தொலைவிலேயே இருக்க விரும்புவேன். ஆனாலும் இதை வெறுப்பு என்று சொல்ல முடியாது. அவர்களின் மேல் அறவே விருப்பம் கிடையாது. நீ நல்லா இருக்கிறாயா மகிழ்ச்சி !! நானும் நல்லா இருக்கிறேன், என்ற அளவில் ஒதுங்கிப்போய்விடுவதே நலம் என்பது எண்ணம்.

ஷிராந்தி அருகில் வரும்பொழுதுதான் கவனித்தேன்,அவரின் முகத்தில் மழைநீருடன் கண்ணீரும். குளிரின் நடுக்கத்தில் சென்று கொண்டிருந்தவர் என்னைப்பார்த்ததும், வருத்தமான சூழலில் வரும் வறட்டுப்புன்னைகையுடன் என்னை நோக்கி வந்தார். நுவரேலியாவிற்கு சுற்றுலா வந்த சுவிடீஷ் ஆளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு இங்கு வந்தவர், இந்த வெள்ளைக்கார மக்களுக்கு குறிப்பாக ஆண்களுக்கு கருப்பு மோகம் என்பதைவிட, தன் சொற்பேச்சுக் கேட்டு நடப்பார்கள் என்பதற்காகவே தெற்காசிய பெண்களை மணந்து கொள்கிறார்களோ என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே எனக்கு உண்டு. பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்களப் பெண்களுக்கோ ஐரோப்பிய வாழ்வு என ஒரு ஆதாயம்.

சென்ற வருடம் சுவிடீஷ் வகுப்பின் இறுதிநாளன்று ஷிராந்தியின் சுவிடீஷ் கணவருடன் பேசி இருக்கின்றேன். ஸ்வென்ஸனோ நீல்ஸ்ஸனோ, பெயர் நினைவில் இல்லை. வெள்ளைத் தோல், சிவப்புநிற பாஸ்போர்ட் ஆகியவற்றில் 20 வருடங்கள் வயது வித்தியாசம் தெரியவில்லை.

"அவன் என்னை அடித்துத் துரத்திவிட்டான்" ஆங்கிலத்தில் சொன்னவரை ஆசுவசப்படுத்தி அருகில் இருந்த மரப்பலகையில் உட்காரச்சொன்னேன்.

"இவனை ஒப்பிடுகையில் என் முதல் கணவன் தெய்வம், அவரை விட்டு வந்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்" சுவிடீஷ் கலந்த ஆங்கிலத்தில் சொன்னபொழுதுதான் ஏற்கனவே அவருக்கு மணமான விசயம் தெரிந்தது. போன மாதம் எனது சுவிடீஷ் ஆசிரியையை பேஸ்புக்கில் இணைத்த பின்னர், ஏதேச்சையாக இவரின் பக்கத்தை எட்டிப்பார்த்த பொழுது "எங்கள் தேசத்தில் தமிழ் = தீவிரவாதம் ஒழிந்து ஒரு வருடம் ஆகின்றது, இனியெல்லாம் வசந்தமே " என்ற அர்த்தத்தில் சில வாசகங்கள் சுவிடீஷில் இருந்தன.

குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த ஷிராந்திக்கு குளிருக்கான எனது மேலாடையைக் கொடுத்துவிட்டு என்ன நடந்தது எனக் கேட்டேன். நான் நினைத்ததுபோல 20 வருடங்கள் வித்தியாசம் இல்லை, 28 வருடங்கள் மூத்தவரான சுவிடீஷ் கணவர் , தினமும் குடி, சூதாட்டம் வீட்டிற்கு வந்தவுடன் அடி உதை என ஒரே ரகளைதானாம். தனக்கு முடியவில்லை,நேற்று மாலை வங்கி ஏடிமில் பணம் எடுத்து வர சிங்களப்பெண்மணியை அனுப்பி இருக்கிறார். நேற்று மாலையே எடுத்து வந்த பணத்தை சூதில் தொலைத்து குடியில் மறக்க, இன்று "நீ என் ஏடிமை எடுத்து பணத்தைத் திருடிவிட்டாய், போலிஸிற்குப்போகப்போகின்றேன்" என ஏகக் கலட்டாவிற்குப்பின் இனிமேல் இங்கு இருக்கக்கூடாது என வெளியில் தள்ளிக் கதவைப்பூட்டி விட்டாராம்.

"இவனுங்க இஷ்டப்பட்டபடி படுக்கவும் அடிமை மாதிரி வேலை செய்யவும் ஒரு சுவிடீஷ் பொண்ணு கூட கிடைக்க மாட்டா" அழுகையும் ஆத்திரமும் சுவிடீஷில் தொடர்ந்தது.

"இப்போ எங்கேப் போகப்போறீங்க"

"கார்ல்சஷாம்னில் என் தோழி இருக்கிறாள், அவளின் வீட்டிற்கு எப்படிப் போகப் போகின்றேன் எனத் தெரியவில்லை" என்ற ஷிராந்தியிடம் நூறு குரோனர்களும் அவரின் தோழியை எனது அலைபேசியில் அழைத்து பேசவும் கொடுத்தேன்.

ஷிராந்தி, சிங்களத்தில் தோழியுடன் பேசியதில் எனக்கு நினைவில் நிற்கும்படி காதில் விழுந்தது "தெம்பல மினிஹெக் மட்ட உதவ் கலா" என்பது மட்டுமே. ஏனையவை புரியவில்லை என்றாலும் தமிழுக்கு சிங்களத்தில் தெம்பல எனக் கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு சிங்களம் புரிவதைவிட இனி ஷிராந்திக்கு தமிழ் என்றால் மனிதம் என்பதும் புரியும், புரிய வேண்டும் என நினைத்துக்கொண்டே அவரை வழியனுப்பிவிட்டு வெறும் சட்டையுடன், சாரல் காற்று,
மழைத்தூறல்களில் எனது வீட்டை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன்

Saturday, June 12, 2010

இராவணன் - சிறுகதை

கலிகாலத்தில் ராமர்களிடம் அடிவாங்குவது கண்டிப்பாக ராவணன்கள் இல்லை என்பது மட்டும் அந்த கொசோவோ அகதி என் மூக்கில் மூன்றாவது முறை குத்தியபொழுது நன்றாகவே விளங்கியது. உடன் என்னுடன் மது அருந்திக் கொண்டிருந்த அப்பாவி கணேசன் என்னை அடித்தவனை தாக்கப் பாய, நான் தடுத்து அப்பாவி கணேசனுடன் வெளியேறினேன்.

கொசோவோ ஆள் ஏன் என்பதை அடித்தான் என்பது எனக்கு விளங்கியதால் எந்த எதிர்ப்பும் காட்டாமல் வெளியேறுவதுதான் சரி எனப்பட்டது. எனது புதிய அறை நண்பன் வாட்ட சாட்டமான கணேசனால் நான் அடிவாங்கிவிட்டு பேசாமல் வருவது பிடிக்கவில்லை.

'நீங்க தடுக்கலேன்னா, அவனை தோலை உரிச்சி உப்புக்கண்டம் போட்டிருப்பேன்'

அப்பாவிக்குள் இத்தனை ஆக்ரோஷமா !!முந்தைய அறை நண்பன் ரவிபிரசாத் மேனன் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் என்னை மட்டும் அடிவாங்க வைத்துவிட்டு தப்பித்தது நினைவுக்கு வந்தது. இப்போ நான் அடிவாங்குனது கூட ரவிபிரசாத்தினால் தான். தமிழ் பேசத் தெரிந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக அறையில் சேர்த்த பாவம் என்னை மட்டுமல்லாமல் எவனோ ஒருத்தனையும் போய் தாக்கியதுதான் பரிதாபமாக இருந்தது.

எச்சில் கையினால் காகத்தைக் கூட ஓட்டாத ரவிபிரசாத் ரயில்நிலையத்தை ஒட்டினாற்போல இருந்த உணவகத்தில் போய் சாப்பிடலாம் என்றபொழுது எந்தப் பொறியும் தட்டவில்லை. உணவகத்தின் பெயர் டிராய், பெயரைப்பார்த்த பொழுதாவது நான் வரமாட்டேன் என ஒதுங்கி இருக்கலாம். டிராய் உணவகத்தை நடத்திக் கொண்டிருந்தது என்னை அடித்த கொசோவோ நபர்தான். அவனும் அவன் மனைவியும் நடத்திக் கொண்டிருந்தார்கள். கோமாதா எங்கள் குலமாதா என புராணக்கதைகளை அறையில் அள்ளிவிட்டுக்கொண்டிருக்கும் ரவிபிரசாத் மாட்டிறைச்சியுடன் வழங்கப்பட்ட அரிசிச் சோற்றுடன் அந்தப் பெண்ணையும் சேர்த்து விழுங்கிக் கொண்டிருந்தான்.

சுவீடனில் அகதிகளின் மறுவாழ்வு என்றால் எதாவது உணவகம் வைத்துக் கொடுத்துவிடுவது அல்லது கூட்டிக் கழுவத் தேவையான அளவிற்கு இந்த மொழியைக் கற்றுக்கொடுத்து அடுத்த தலைமுறைக்கு அடிமை சேவகம் செய்ய ஆட்களைத் தயார் செய்வது. முதலில் யூகோஸ்லாவியா உள்நாட்டுப்போர், பின்னர் செர்பியாவுடன் போர் என அதிகம் அடிபட்டவர்கள் கொசோவோ நாட்டவர்கள். நாற்பதைக் கடந்தத் தோற்றத்துடன் கணவன், தோற்றத்தில் இளமையான கவர்ச்சியான மனைவி இருவருமே நன்றாக ஆங்கிலம் பேசினார்கள், நாங்கள் வருவது இதுதான் முதன்முறை என்பதால் நன்றாக கவனித்தார்கள்.

அடுத்தவார இறுதியில் மீண்டும் அங்கு சாப்பிடச் சென்றபொழுது கணவன் இல்லை. மனைவி மட்டுமே இருந்தாள். போன வாரத்தை விட முகப்பொலிவு அதிகமாக இருப்பதைப்போல தெரிந்தது. வழமையான உணவையே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுதுதான் கவனித்தேன். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். நோக்கிக் கொண்டே இருந்தனர். சாப்பாடு நூறு குரோனர் என்றபொழுதும் 50 குரோனர்களை மட்டுமே வாங்கிக் கொண்டு மார்ஷல் டிட்டோவின் பிறந்த நாள், அதனால் சிறப்புச் சலுகை என்று சொல்லி, ரவிபிரசாத்திற்கு சிறப்பு சிரிப்பையும் கொடுத்தது, அவள் சொன்னது பொய் எனத் தெளிவாகக் காட்டியது.

அடுத்தடுத்து அங்கு சாப்பிடச் சென்றபொழுது கொசோவோகாரனிடம் பழைய சினேகம் இல்லை, நாங்கள் வரும்பொழுதே அவனது மனைவியைத் திட்ட ஆரம்பிப்பான். அவள் ஏதாவது பரிமாற அல்லது முகப்பிற்கு வந்தாலோ அவன் ஏசுவதன் அர்த்தம் செர்பிய அல்பேனிய மொழி தெரியாமலேயே அவனது முகபாவத்தில் தெரியும். தோட்டக்காரனுக்குத்தான் சரியாகத் தெரியும் திருட்டு மாங்காய் அடிக்க நினைப்பவன் எவன் என.

உணவும் கல்வியும் மலர்ச்சியோட தரப்படனும். வேண்டா வெறுப்பாகக் கொடுத்தால் இரண்டுமே செறிக்காது. நான் ரவிபிரசாத்துடன் அங்கு சாப்பிடப்போவதை நிறுத்திக் கொண்டேன். திடிரென ஒருநாள் ரவிபிரசாத் அறையைக் காலி செய்து கொள்வதாகவும் இரண்டாயிரம் குரோனர் கடனும் வேண்டும் எனக் கேட்டான். ஏன் எதற்கு என நானும் கேட்கவில்லை, அவனாகவும் சொல்லவில்லை. சிலவாரங்கள் கழித்து எதேச்சையாக டிராய் உணவகத்தின் வழியாகச் செல்லும்பொழுதுதான் , அந்தக் கடையில் இருந்து கணவன் என்னைப்பார்த்து நடுவிரலைக் காட்டி ஏதோ திட்டிக்கொண்டிருப்பதை கவனித்தேன். கடையில் அவன் மனைவியைக் காணவில்லை. வேறு ஒரு பிலிப்பைன்ஸ் பெண் எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்தாள்.

அதன்பின்னர் அந்தக் கொசோவோ ஆளைப்பார்த்தது சற்று முன்னர் நான் அடிவாங்கிய பொழுதுதான். ரவிபிரசாத்தைப் பற்றி சொல்ல ம்றந்துவிட்டேனே, என்னிடம் வாங்கிய இரண்டாயிரம் குரோனர்களையும் கொடுக்கவில்லை, ஆர்குட் பேஸ்புக் அனைத்தையும் அழித்துவிட்டான்.

அடிவாங்கிய காயம் எல்லாம் ஆறிய பின்னர் ஒரு அமைதியான மாலைப்பொழுதில் , அப்பாவி கணேசன் என்னிடம் கேட்டது

'டிராய் ரெஸ்டாரன்ட் போலாமா !!'

Friday, June 11, 2010

ஆப்பிரிக்கா என்பது ஒரு கண்டம், நாடல்ல - சிறுகதை

வெகுசில விசயங்கள் மட்டுமே தெரிந்து இருந்தாலும் தனக்குத் தெரியாது எனச் சொல்லும்பொழுது நிறைவாக இருக்கும். "இந்தி நஹி மாலும்" எனச் சொல்லும்பொழுதெல்லாம் எனக்கு ஒரு சின்ன குதுகலம். குதுகலத்தின் நீட்சியாக தமிழ் அடையாளங்களைக் கர்வமாக காட்டிக்கொள்ள என்றுமே தவறியதில்லை. வாசுதேவனுக்கும் எனக்கும் அடிக்கடி இதிலேதான் சண்டை வரும். மொழி விசயத்தில், கற்றுக்கொண்டு அதை பேச மறுப்பதில் நான் பிரெஞ்சுக்காரர்கள் மாதிரி.

"நாளைக்கே எனக்கு சிவப்புக்கலர்ல பாஸ்போர்ட் கிடைச்சிட்டா கடைசிவரை கூட இருக்கப்போவது தமிழ் அடையாளம் தான்" என உக்கிரமாகச் சொல்லத்தோன்றினாலும் எனது தேசப்பற்று கேள்விக்குறியாக்கப்படுமே என அவனைச் சீண்டுவதில்லை.

முதல் காதலில் சாதியை விட்டுக்கொடுத்தேன், இரண்டாம் காதலில் மதத்தைத் தூக்கி எறிந்தேன், ஆனால் தமிழ் அடையாளத்தை ஒளித்து வைக்க கற்பனையிலும் நினைத்ததில்லை. தமிழைத் தொலைப்பது என் சிந்தைகளைத் தொலைப்பதற்கு சமம் என நாட்குறிப்பில் எழுதிவிட்டு அன்று மாலை கல்லூரியில் நடக்கவிருந்த எத்தியோப்பிய மாணவர்களின் கலை நிகழ்ச்சிக்கு செல்ல தயாரானேன்.

எத்தியோப்பியாவின் பாரம்பரிய நடனங்களைத் தொடர்ந்து நடந்த இரவு விருந்தில் சக மாணவர்களிடம் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த வாசுதேவன், நானும் எட்வர்டும் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்து

"எட்வர்டு டீச் மி சம்திங்ஸ் இன் ஆப்ரிக்கன்ஸ்"

வாசுதேவனை முறைத்துவிட்டு என்னைப்பார்த்த எட்வர்டிடம்

"ஹி மீன்ஸ் அம்ஹாரிக் லாங்குவேஜ்"

எட்வர்டு பதில் சொல்லத் தொடங்குவதற்கு முன்னமே வாசுதேவன் எழுந்து சென்று கருப்பு பெண்களைத் தவிர்த்து, பொன்னிற கூநதலழகிகளுடன் திரும்ப ஆட ஆரம்பித்துவிட்டான். எத்தியோப்பிய நிலப்பரப்பில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புனா விதைகள் எப்படி காப்பி பானமாக உலகை அடிமைப்படுத்தியது என்பதை அதை பருகியபடியே பேச ஆரம்பித்ததில் நேரம் போனதே தெரியவில்லை. எட்வர்டை வகுப்பு மாணவனாகத் தெரிந்து இருந்தாலும், நட்பாக அளாவளாவுவது இதுதான் முதல் தடவை. விக்கிப்பீடியா குறிப்புகளை நினைவில் கொண்டு வந்து, எத்தியோப்பிய விசயங்களைப் பேசபேச அவனுக்கு என்னுடன் பேசும் ஆர்வம் மேலும் அதிகமாவது தெரிந்தது. எத்தியோப்பியா எரித்ரியா நாடுகளின் எல்லைப்பகுதி நகரத்தில் இருந்து வருபவன் ஆனதால் தமிழ் சம்பந்தபட்ட நிறைய விசயங்களைத் தெரிந்து வைத்திருந்து எனக்கு பெரிய வியப்பைத் தரவில்லை.

கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வீடு திரும்புகையில், ரயிலில் பாகிஸ்தானி மாணவர்களை வெறுப்பேற்ற குடிபோதையில் பாரத் மாதா கி ஜே எனக் கத்திக்கொண்டிருந்த வாசுதேவனை நான் அதட்டி உட்கார வைத்ததைப் பார்த்த ஒரு சக சுவிடீஷ் பயணி ரயில் சினேகிதமாக மாற, அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இந்தியாவை ஐரோப்பிய நிலப்பரப்பிற்கு ஒப்புமைப் படுத்தி, இந்தியக் குடியரசின் தனித்தன்மைகளை எனது வாசிப்பு அனுபவத்தையும் கையில் வைத்திருந்த மடிக்கணிணி உதவியுடன் சுவிடீஷில் விளக்க ஆரம்பித்தேன். இதனிடையில் எட்வர்டிடம் பேஸ்புக் முகப்புப் பக்கத்தில் புதிய தரவு ஒன்று வந்திருந்தது. அதன் தமிழாக்கம்

"ஆப்பிரிக்கா என்பது ஒரு கண்டம், ஆப்ரிக்கன்ஸ் என்பது ஜெர்மானியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி "

Tuesday, June 01, 2010

அவரு வந்துட்டாரு,அப்புறமா பேசுறேன் - ஒரு நிமிடக்கதை

சேமித்துவைக்கப்படாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால் பொதுவாக எடுப்பதில்லை என்ற போதிலும், ஏதோ ஒரு உந்துதலில் இந்த அழைப்பை எடுத்துவிட்டேன். பரிச்சயமான குரல் "ஹல்லோ! கார்த்தி" என்றது.

அம்முவே தான். நான்கு வருடங்கள் நாற்பது நாட்கள் கழித்து கூப்பிடுகிறாள். வரலாற்றை கி.பி , கி.மு என பிரிப்பதுபோல என் வாழ்வையும் அம்முவிற்கு முன் அம்முவிற்கு பின் எனப்பிரித்தாலும் என் வாழ்வு இரண்டு பகுதிகளிலுமே அவளுடன் இருந்த அந்த ஒன்றரை வருடங்களைப்போல சுவாரசியமாக இருந்ததில்லை. வாழ்வின் பூரணத்துவத்தை கொஞ்சம் சுவைக்கக் கொடுத்துவிட்டு, கண்மூடி கண் திறக்கும்நேரத்தில் பறித்துக் கொண்டுச் சென்றவள் ஏன் திடீரென கூப்பிடுகிறாள் என்ற எண்ணத்துடன்,

"சொல்லுங்க மத்மசல்"

"மதமசல் கீர்த்தனா எல்லாம் மேடம் கீர்த்தனா ஆகி, குட்டி மத்மசல் கூட வந்தாச்சு" எனச் சிரித்தாள். அவளின் சிரிப்பை ரசிக்க தோணாததால், எத்தனை வருடங்கள் ஆனாலும் எனக்கு நீ அதே மத்மசல் தான் என்பதையும் சொல்லவில்லை.

"குட்டி கீர்த்தனா எப்படி இருக்காங்க, உங்க மொன்சியர் எப்படி இருக்காரு"

"ரெண்டு பேருமே சூப்பர்டா, கார்த்தி இந்த வாரம்தான் குட்டிப்பாப்பாவை ஸ்கூல்ல சேர்த்தோம்"

அஞ்சலி எனக் குழந்தைக்குப் பெயர் வைத்திருப்பாளோ!காலங்கள் கடந்து போகையில்,ஆண்களுக்கு காதலின் பிம்பத்தைத் தாண்டி வர சிரமமாக இருக்கையில், முன்னாள் காதலிகளால் மட்டும் எப்படி சினேகத்துடன் பேச முடிகிறது.

"இன்னும் சிங்கம் சிங்கிளாத்தான் இருக்கு போல, உன் வெப்சைட்ல பார்த்தேன்" இது நக்கலா, அக்கறையா என்ற ஆராய்ச்சிக்குள் போக விரும்பாமல்

"எந்த தேசம், எந்த ஊர், வாழ்க்கை எப்படி இருக்கு" பொத்தாம்பொதுவான கேள்விகளை ஏனையவர்களிடம் கேட்பது போல அம்முவிடமும் கேட்டேன்.

"டொரண்டா ல இருந்தோம், இப்போ இரண்டு வருஷமா மாண்ட்ரீல்ல இருக்கோம், உங்கிட்ட கத்துக்கிட்ட பிரெஞ்சு கொஞ்சம் உதவுது"

"எப்படி திடீர்னு என் ஞாபகம்" மிகுந்த ஆர்வத்துடனும் கொஞ்சம் தயக்கத்துடனும் கேட்டேன்.

"அவரு ஆபிஸ், மீட்டிங்னு பிசியா இருக்கிறாரு, குட்டிப்பாப்பாவும் ஸ்கூலுக்குப் போயிடுறா, இரண்டு நாளா வெறுமையா ஃபீல் பண்ணேன்,சின்ன வாய்ட் வந்துடுச்சோன்னு தோனுது, அதுதான் உன்னைக் கூப்பிட்டு பேசலாம்னு நினைச்சேன்"

என் வாழ்க்கையையே சூனியம் ஆக்கிவிட்டு போனபொழுது எனக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைக் கேட்காமல் வெறுமனே "ம்ம்" கொட்டினேன்.

"நீ அடிக்கடி சொல்லுவியே, தெரியாத தேவதைகளை விட தெரிந்த பிசாசுகள் மேல்,புது நட்புகளிடம் சில விசயங்களை ஷேர் பண்றதை விட, பழகின உன்கிட்ட பேசினா கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும்னு தோனுச்சு"

"அது அப்படி இல்லை, தெரியாத கடவுள்களைவிட, தெரிந்த தேவதைகள் மேல்"

"யா யா, ஐ னோ, பாசிடிவ் ஃபீல்க்காக நீ மாத்துன, ஒரிஜினல் நான் சொன்னதுதான்"

தொடர்ந்து அவளின் கணவனின் பராக்கிரமங்களைப் பறைசாற்றினாள். பி.எச்.டி முடித்து விட்டு வேலைப்பார்த்துக்கொண்டே போஸ்ட் டாக்டரல் படிப்பு எல்லாம்

படிக்கிறாராம். ஒரு வகையில் அவள் இப்படி சொல்லுவது கூட நல்லதற்குதான். கொஞ்சம் சுணக்கம் விழுந்து கொண்டிருக்கும் எனது பி.எச்.டி ஆராய்ச்சிப் படிப்புக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். வாழ்க்கையின் பல வெற்றிகளில் முக்கியமானது, காதலித்த பெண்ணின் கணவனை விட ஒரு படி அதிகம் ஜெயித்துக் காட்டுவதுதான். என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காமல், கணவனைப் புகழ்ந்த பின்னர் புகுந்த வீட்டின் பெருமைகளைப் பாடிக்கொண்டிருந்தாள். அவளின் கணவனின் தம்பி, நார்வேயில் இருக்கின்றானாம், வாய்ப்புக் கிடைக்கையில் என்னைப்போய் பார்க்கச் சொன்னாள். அவள் சொன்ன விசயங்களில் பாதியைக் காதில் போட்டுக்கொள்ளாமல் கிரிக்கெட் வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருதேன்.

"சரிடா கார்த்தி, அவரு வந்துட்டாரு,அப்புறமா பேசுறேன்" எனச் சொல்லிவிட்டு வைத்தாள். மறுநாள் அரை மணி நேரம் பேசினாள். கணவன் வரும் நேரத்திற்கு முன் வைத்துவிட்டாள். மூன்றாவது நாள் என்னை அழைக்கச் சொன்னாள். கொஞ்சம் அழுதாள், நிறைய சிரித்தாள். நான்காவது நாள் நான் போன் எடுக்கவில்லை. நல்ல காதலியாகத்தான் இல்லை, நல்ல மனைவியாகவாது இருக்கட்டும் என ஐந்தாம் நாள் எனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டேன். அம்முவிற்குப்பின்னான வாழ்க்கையில் முதல் தடவையாக மனது இலகுவானது.