Tuesday, April 20, 2010

சோஹைல் அப்பாஸ் - சிறுகதை

மென்பொருள் கட்டமைப்பு மற்றும் தரம் இதை ஆங்கிலத்தில் சொல்வதானால் சாஃப்ட்வேர் ஆர்க்கிடெக்சர் அண்ட் குவாலிட்டி. நாளை மறுநாள் இந்தப் பாடத்தில்தான் இறுதித் தேர்வு இருக்கின்றது. இந்த முறையாவது தேர்ச்சி அடையவேண்டும். அம்முவைத் தவிர வேறு யாருடனும் மின்னரட்டை இல்லை, டிண்டோ பிராஸ் படங்கள் இல்லை எனக் கட்டுக்கோப்பாக படித்துக் கொண்டிருக்கின்றேன். நானும் என் வகுப்பில் சோஹைல் அப்பாஸ் இருவர் மட்டுமே இன்னும் தேர்ச்சி அடையவில்லை. எங்கள் இருவரை விட சுமாராக படிப்பவர்கள் எல்லாம் இந்தப் பாடத்தை சர்வசாதரணமாக தேறி இருந்தார்கள். இத்தனைக்கும் நான் ஐரோப்பிய கல்விமுறையில் சி கிரேடு எடுக்கும் வகை. நம் கல்வியமைப்பில் 75 விழுக்காடுகள் வகையில் வரும். சோஹைல் அப்பாஸ் எப்பொழுதும் ஏ கிரேடு எடுக்கும் ஆள். அதாவது 90 விழுக்காடுகளுக்கும் மேல். அலட்சியமா , இல்லை உண்மையிலேயே எங்கள் இருவரால் பாடத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லையா என்பது தெரியவில்லை.

"இந்தியன், ஹிந்தி நஹி மாலும் வர்ரே வாவ்" என்ற சீண்டும் கேள்விக்கு

" ஐ யம் நாட் ஹியர் டு ப்ரூவ் யூ தட் ஐயம் அன் இண்டியன் ஆர் நாட், டு செட் யுவர் ஃபேக்ட்ஸ் ரைட் , ஹிந்தி இந்தியா கா ராஷ்ட்ரபாஷா நஹி ஹய்" எனற பதிலுடன் எங்களுடைய அறிமுகம் சென்ற வருடம் ஆரம்பமானது. அவனுடன் இணைந்து குழு வேலைகளையும் , ஏனையப் பாடங்களுக்கான கட்டுரைகளையும் எழுதி இருந்ததால் விருப்பு இல்லை என்றாலும் வெறுப்பற்ற ஒரு நட்பு இருந்தது.

நான் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் பாடத்தைத் தேர்ச்சி பெறாவிடில் எங்களுக்கு முதுகலைப் பட்டம் கிடைக்காது. இது ஒரு கட்டாயப்பாடமாகும். கடைசியாக, அறைத்தோழன் அன்பரசனுடன் சோஹைலைப் பார்த்தபொழுது அவன் தன் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்து விட்டதாகவும் இந்த ஒரு பாடத்தைத் தேர்ச்சி அடைந்துவிட்டால் பட்டம் வாங்கிவிட்டு ஸ்டாக்ஹோல்ம் தொழில்நுட்ப கல்லூரியில் மேலாண்மைப் படிப்பு படிக்கப் போகப்போவதாகவும் சொன்னான்.

மென்பொருள் பொறியியலுடன் மேலாண்மையும் படித்துவிட்டு பாகிஸ்தானுக்குத் திரும்பி ஆசிரியப்பணி செய்ய அவனுக்கு விருப்பமாம். உண்மை என்னவெனில் சுவீடனுக்கு வந்த மாணவர்கள் விசாவை நீட்டிப்பதற்காகவே ஒரு பட்டம் வாங்கி முடிக்கும் முன்னரே இன்னொரு கல்லூரியில் அனுமதிப் பெற்று அங்கும் படிப்பைத் தொடர்வார்கள். நான் கூட அங்கு விண்ணப்பித்து இருந்தேன். சோஹைலுடன் அன்பரசனுக்கும் அனுமதி கிடைத்ததும், நான் காத்திருப்புப் பட்டியலில் இருப்பதும் என்னுடைய சமீபத்திய வயிற்றெரிச்சலுக்கு ஒரு காரணம். வயதுக்கும் தகுதிக்கும் வயிற்றெரிச்சல் படுதல் தவறு என அம்மு சொல்லி இருந்ததால் அதை மட்டுப்படுத்தி நுனிப்புல் மேயாமல் ஆழமாகப் படிப்பதை தொந்தரவு செய்யும் விதமாக ரேஹான் ஜாவேத்திடம் இருந்து அதிர்ச்சி
செய்தியுடன் ஒரு அழைப்பு வந்தது. சோஹைல் அப்பாஸ் டென்மார்க், கோபன்ஹேகனில் இருந்து காரில் திரும்பும் பொழுது சாலைவிபத்தில் மரணமடைந்து விட்டதாக ரேஹான் அழுதுகொண்டே சொன்னான்.

மரணம், ஒருவரின் அபிப்ராயத்தைப் பற்றி எப்படி ஒரு நொடியில் மாற்றிவிடுகிறது. சில நிமிடங்களுக்கு முன்னர் இருந்த சோஹைல் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, அவனின் துறுதுறுத்தனம், வகுப்பில் பதில் சொல்லும் விதம்,பழைய இந்திநடிகர் சஞ்சீவ் குமாரின் முகச்சாயல் என அவனைப்பற்றிய நேர்மறை எண்ணங்கள் வந்து விழுந்தன. அவனுக்குப் பிடித்தப் ஹிந்திப் படமாக ஷாருக்கான் நடித்திருந்த சுவதேஷை அடிக்கடி குறிப்பிடுவான். அந்தக் கதாபாத்திரம் அவனுக்கும் ஆதர்சனமாம்.

சோஹைலின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சுவதேஷ் படத்தை இணையத்தில் தேடிக்கண்டுபிடித்து பார்க்க ஆரம்பித்தேன். கல்லூரியில் இருந்த தொழுகை அறையில் அவனுக்காக மறுநாள் நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் உருதுக் கவிதை ஒன்றை வாசித்து அவனுக்கு அஞ்சலி செலுத்தினேன். இரங்கலில் செலவிட்ட பகல் கடந்த பின்னர், இரவு கண்விழித்து பாடத்திட்டத்தில் அனைத்துப்பகுதிகளையும் படித்து முடித்து இருந்தேன். தேர்வு நாள் அன்று காலை பத்து சுற்று வோட்கா குடித்ததுப் போல இருந்தது. பல்லை மட்டும் விளக்கிவிட்டு கல்லூரிக்கு அவசரகதியில் சென்று எதிர்ப்பட்டவர்களிடம் என்ன பேசினேன் எனத் தெரியாமாலேயே தேர்வு அறைக்கு வந்துச் சேர்ந்தேன்.

மேகங்களுக்கு ஊடே மிதக்கும் மதமதப்பான மனநிலையிலும் தேர்வுத்தாளில் இருந்த அனைத்துக் கேள்விகளுக்கும் விடைத் தெரிந்தது. கொடுக்கப்பட்டிருந்த மென்பொருள் தயாரிப்பு தேவைக்குறிப்புகளுக்கு அழகாக கட்டமைப்பு திட்டம் வரைந்து விட்டு அனைத்துக் குறுவினாக்களுக்கும் விடையளித்து மூன்று மணிநேரத்தில் விடைத்தாள்களை அறை பொறுப்பாளியிடம் கொடுத்தபொழுதுதான் ஒரு அதிர்ச்சிக் காத்திருந்தது. விடைத்தாள்களில் சோஹைல் அப்பாஸின் பெயரையும் அவனின் எண்ணையும் எழுதி வைத்திருந்தேன். சோஹைல் அப்பாஸ் உயிருடன் இல்லை, இரண்டு நாட்களாக அவனைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்ததில் விடைத்தாளில் அவனின் பெயரை எழுதிவிட்டேன் என விளக்கம் கொடுத்துத் தப்பி வந்தாலும் மனதினுள் இருந்த ஒரு உறுத்தல் அறையில் வந்து தூங்கியதில் மறைந்துப் போனது.

மறுநாள் "யுவர் உருது ஈஸ் எக்ஸலண்ட் மேன்" எனவும் , இவ்வளவு நாள் ஏன் உருது மொழியில் பேசவில்லை எனவும் பாகிஸ்தானிய நண்பர்கள் கோவித்துக் கொண்டனர்.

"நான் உருதுப்பேசினேனா " என அடிவயிற்றைக் கலக்கினாலும், ஏக் கவுர் மே எக் கிசான் வகையில் நான் கற்ற தூர்தர்ஷன் இந்தி, தேர்வுநாளன்று எதிர்ப்படும் பாகிஸ்தானிய மாணவர்களிடம் வந்து விழுந்து இருக்கலாம் என மனதைத் தேற்றிக்கொண்டேன். எனக்கு நானே கொடுத்துக் கொண்ட ஆறுதல் ஆறு மாதங்கள் கூட நீடிக்கவில்லை. எழுதியப் பரிட்சையில் ஏ கிரேட் வாங்கி, ஆராய்ச்சிக்கட்டுரையிலும் சி கிரேடுடன் தேறி, வேலைத் தேடும் படலத்திற்காக ஸ்டாக்ஹோல்ம் நகரத்தில் அன்பரசனின் அறைக்கு இடமாற்றம் செய்த முதல்நாள்வரை எதுவுமே பிரச்சினை இல்லை.

"கார்த்தி, இங்கே வந்த பின்னாடி எல்லாத்துலேயும் ஏ கிரேட் தான்" அன்பரசன் என்னைப்போல சோம்பேறியாக இருந்தாலும் கெட்டிக்கார கற்பூரபுத்தி பையன்.

தமிழில் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்த அன்பரசன் அறைக்கு வந்த சில பாகிஸ்தானிய நண்பர்களுடன் சரளமாக உருதுவில் பேச ஆரம்பித்தார். கற்பூரபுத்தி உடைய இளைஞன் என்றாலும் ஆறு மாதங்களில் ஒரு மொழியை இவ்வளவு சரளமாக பேச வாய்ப்பே இல்லை. என மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டதைப்போல, அன்பரசன் என்னை நோக்கித் திரும்பி

"கார்த்தி, நான் பேசுறது உருது இல்லை, பஞ்சாபி பாகிஸ்தானில் 40 சதவீத மக்களின் தாய்மொழி " எனத் தமிழில் சொல்லிவிட்டு பாகிஸ்தானிய நண்பர்களுடன் உரையாடலைத் தொடர்ந்தார். என்னைத்தான் யாரோ நான் முன்பு வரைந்திருந்த மென்பொருள் கட்டமைப்பு வரைபடங்களில் சுருக்கி திணிப்பதை போன்ற உணர்வுடன் படுக்கையில் சாய்ந்தேன். யூன் ஹி சலா சல் ராஹி யூன் ஹி சலா சல், கித்னி ஹஸீன் ஹாய் யே துனியா எனத் தொடங்கும் சுவதேஷ் படத்தின் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. எனக்கும் இப்பொழுது இந்தப் பாடலின் வரிகள் அச்சர சுத்தமாகப் புரிய ஆரம்பித்தது.

6 பின்னூட்டங்கள்/Comments:

said...

மறுபடியும் பேய்க்கதையா??? கலக்குங்கண்ணோவ்!

said...

மரணம், ஒருவரின் அபிப்ராயத்தைப் பற்றி எப்படி ஒரு நொடியில் மாற்றிவிடுகிறது-agreed !
good story !!!!

said...

அன்பரசனுக்கு கற்பூர புத்தி என்பது சரி.ஆனால் ஸ்டாக்ஹோல்ம்க்கு தொழில்நுட்ப மேலாண்மை படிப்பிற்க்காக சென்றிருக்கிறார் என்பது தான் கேலித்தனமாக உள்ளது.Edhavadhu kasu koduthu solla sonnara anna..any way story was good..

said...

நிறைய ஆங்கிலம்...உருது..ஹிந்தி...ஸ்விடிஷ்...மொழிக் கலவையாக இருந்தாலும் கதை ஸ்வாரஸ்யமாக!

said...

கதைல மொத்தம் எத்தன பேய் இருக்கு..???

said...

பல்மொழி வித்தகரா இருக்கிறீங்களே... :-)

பேய்க்கதை என்பதற்கப்பால் 'மரணம், ஒருவரின் அபிப்ராயத்தைப் பற்றி எப்படி ஒரு நொடியில் மாற்றிவிடுகிறது' என்ற வரிகள் நிதர்சனம்.