Tuesday, March 09, 2010

கம்பன் நகர், இரண்டாவது தெரு - சிறுகதை

பயணதிசைக்கு எதிர் திசையில் ஓடும் மரங்களைப் போல, மனமும் சில வருடங்களுக்கு பின் சென்று முந்தைய அம்முவின் இருப்பை அசைபோட்டு
நிகழ்காலத்துக்கு அவ்வப்பொழுது திரும்பிக்கொண்டிருந்தது. மோகன் காரை வேகமாக கிழக்கு கடற்கரைச்சாலையில் செலுத்திக் கொண்டிருந்தார். சுவீடன்
சாலைகளில் இதைவிட வேகமாகப் பயணப்பட்டுப் பழகி இருந்தாலும், எதிர்திசையில் அசூர வேகத்தில் வரும் வாகனங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் என் சீட் பெல்ட்டை சரிபார்த்துக் கொண்டேன். சாவின் மேல் பயம் என்பதற்காக இல்லை. அம்முவை பார்க்கும் முன் செத்துப் போய்விடக்கூடாது என்பதனால் !!

"ஆடியோ பிளேயர்ல ஏதாவது பாட்டை நீயேப்போடு" மோகன் சாலையில் கவனம் வைத்தபடியே என் கவனத்தை இயல்புக்கு கொண்டுவந்தார்.

சிரித்துக்கொண்டே, அங்கு கிடந்த இளையராஜாப் பாடல்களின் தொகுப்புகளில் சிலவற்றைப் பார்த்தேன்.

"நானே ஏதாவது பாட்டைப் போட்டால், நீ எமோஷனலா டிஸ்டர்ப் ஆயிட்டேன்னு ஒரு கதை எழுதி என்னை காமெடியனா ஆக்கிடுவே, எதுக்குப்பா பிரச்சினை"

இதற்கும் நான் ஏதும் பதில் சொல்லாமல், சிரித்துக் கொண்டே உல்லாசப்பறவைகள் படத்தில் இருந்து ஜெர்மனியில் செந்தேன் மலரே பாடலை பாட வைத்துவிட்டு , மோகனைப் பார்த்து "இன்றைக்கு முழுவதும் அம்முவின் விருப்பப்பாடல்கள்தான்"

நான் சுவீடன் வரும் முன், ஜெர்மனி என்பதை சுவீடன் என மாற்றி அம்மு அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். அவளுடன் சேர்ந்துப் பாடிப் பாடியே எனக்கும் ஜெர்மனி என்பது போய் சுவீடன் எனவே வந்தது.


தூரத்தில் கடல் தெரிந்தது. அம்மு பிரிந்த அன்று ஆர்ப்பாட்டமில்லாத பால்டிக் கடலில் குதித்து இருந்தால்,பனி சமாதி ஆகி சில வருடங்கள் ஓடியிருக்கும். வெகுசில சமயங்களில் தான் வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்படுவது போல உணர்வு வரும் !! அம்மு என்னை அந்த நிலைக்கு தள்ளினாள். காதல் போயின் இன்னொரு காதல் , அது கிடைக்கும் வரை காமம் என ஊருக்கு உபதேசம் சொன்ன நான், என் காதல் சாம்ராஜ்யத்தின் நாயகி, வேறு ஒரு சிற்றரசனுக்கு சொந்தமாகப்போகிறாள் என்றதும் காதல் போயின் சாதல் என்பதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.

"என்ன கார்த்தி,பிளாஷ்பேக்கா!!"

"ஆமா மோகன்!!! அவளைப்பத்தி யோசிச்சு யோசிச்சு எனது ஆத்திரங்களை அதிகப்படுத்திக்கிட்டு இருக்கேன், நேரிலப் பார்க்கிறப்ப திட்டித் தீர்க்கனும். அவள்
ஒரு துரோகி எனத் திட்டனும்"

நான் சொன்னதை மோகன் காதில் வாங்கிக் கொள்ளாதது போல,

"கம்பன் நகர் செகண்ட் ஸ்ட்ரீட் தானே !!

"யெஸ் மோகன், அலெக்ஸ் இந்திராகாந்தி சிலைக்கிட்ட வெயிட் பண்ணுவாரு, எனக்கு வழித் தெரியும்,இருந்தாலும் அலெக்ஸையும் வரச்சொல்லி இருக்கேன்"

மோகனுக்கு நான் அம்முவைத் திரும்ப பார்க்கிறதில் சுத்தமாக விருப்பமே இல்லை. அவரைப் பொருத்தவரை எங்கிருந்தாலும் வாழ்க கொள்கைதான். இழந்ததை வைத்து அழுவதை விட, இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சிலக் காதல்கள் நெட் பிராக்டிஸ் மாதிரி, அவை நிஜமான ஆட்டத்திற்கு தயார்படுத்தும் பயிற்சிகள். சிலப்பலக் காதல்கள் தவறி, கடைசியில் வெற்றிகரமாக காதல் திருமணம் செய்து கொண்டவர், குழந்தைகளுக்கு முன்னாள் காதலிகளின் பெயர்களை வைக்கவில்லை. அம்முவைப் பற்றி யோசிக்கும் தருணத்தில் மோகனைப் பற்றிய விவரணை எதற்கு !!!

இதே கடற்கரைச்சாலை, அன்றொரு நாள், பாண்டிச்சேரி செல்லும் விரைவுப் பேருந்தில் என் தோளில் சாய்ந்தபடியே அம்மு என்னிடம் கேட்டாள்.

"ஏண்டா, நான் அவ்வளவு அழகாவா இருக்கேன் !!"

"ஆமாண்டா, குட்டிம்மா.. அவ்வளவு அழகு நீ" அவளின் கைவிரல்களை நீவிய படி.

"அதோ, அந்த மூனாவது சீட்ல மஞ்சள் சுடிதார்ல ஒரு பொண்ணு இருக்காளே, அவளை விடவா நான் அழகா இருக்கேன்".

மறைந்த நடிகை திவ்யபாரதியின் சாயலில் ஒரு பெண் அமர்ந்து இருந்தாள். சில நொடிகள் அவளைப் பார்த்த பின் அம்முவின் கண்களை உற்று நோக்கி

"அம்மு, நிச்சயமா நீ அவளை விட அழகு தான்"

"நீ பொய் சொல்றே!! சுவீடன் போறமுன்ன நான் கவலைப்படக்கூடாதுன்னு தானே, இப்படி சொல்றே !!"

"இல்லைடா, அந்த பொண்ணு எங்க அம்மா மாதிரி இல்லை, நீ எங்கம்மா மாதிரி இருக்கே !! அதனால நீ தான் அழகு "

ஓட்டுனர் பேருந்தை சடாரென நிறுத்த, அந்த சந்தர்ப்பத்தில் என் கன்னத்தில் முத்தமிட்டு "தாங்ஸ்" என்றாள்.

"கார்த்தி " என ஆண்குரல் கேட்க, நிகழ்காலத்துக்கு வந்தேன்.

"கார்த்தி நீ கண்டிப்பாக கீர்த்தனாவைப் பார்க்கனுமா, நீ இண்டியால இருக்கப்போற இந்த பத்து நாட்களை வீட்டோட இருக்கலாம்லே.. அனாவசியமா ஒரு சலசலப்பு எதற்கு, உன்னை அவள் மறந்துகூடப் போயிருக்கலாம் !! "

"எனக்கு அந்த சலசலப்புதான் வேண்டும் மோகன், ஒரு வேளை அவள் என்னை மறந்து சந்தோசமா இருந்தால், நான் அவள் வாழ்க்கையில் இருந்தேன்னு அவளுக்கு ஞாபகப்படுத்தி சஞ்சலப்படுத்தனும், ஒரு வேளை அப்படி இல்லாமல் சராசரி வாழ்க்கையில் இருந்தால், என்னை அப்பா அம்மாவுக்காக
நிராகரிச்சோமேன்னு வலிக்கனும், இந்த சலசலப்பு, சஞ்சலம் , வலி எல்லாம் அவளுக்கு மட்டுமில்ல, அவங்க அப்பா அம்மாவுக்கும் தான்"

"நீ படிச்ச படிப்புக்கும், இப்போ நீ இருக்கிற லெவலுக்கும் , இப்படி யோசிக்கிறது ரொம்ப அல்பமா இருக்கு!!"

"நான் இத்தனை ஜெயிச்சதும், அத்தனை வலியையும் பொருத்துக்கிட்டு படிச்சதும் இந்த ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தான், நான் ஒரு தோல்வியடைஞ்சவனா அவளைப் பார்க்கக்கூடாதுன்னு மட்டும் உறுதியா இருந்தேன், அப்படி தோத்துப்போகனும்னா பால்டிக் கடல்ல குதிச்சிருப்பேனே!!, என்னை அவ்வளவு சீக்கிரம் எலிமினேட் பண்ண முடியாதுன்னு அவளுக்கு காட்டனும், இனி எப்பொவெல்லாம் இண்டியா வரேனோ, அப்பொவெல்லாம் அவளைப் போய் பார்ப்பேன், அவளுக்கும் வலிக்கனும் "

மோகன் அதன் பின் எதுவும் பேசவில்லை. எனக்கும் தொடர்ந்து பேச விருப்பம் இல்லை. அம்முவின் மேல் இருக்கும் ஆத்திரத்தை நான் மோகனிடம் பேசுவதினால் நீர்த்துப் போய்விடுமோ என்ற பயம் வந்தது. அலெக்ஸிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை, அவரிடம் மரக்காணத்தைக் கடந்துவிட்டதாக சொல்லி வைத்தேன்.

அம்முவுடம் பயணப்பட்ட அன்றும் இதேபோல் அலெக்ஸிடம் இருந்து அழைப்பு வந்தது.

"யாருடா, அலெக்ஸா !! நான் உன்கூட இருக்கேன்னு அவரிடம் சொல்லலத்தானே !!"

"நம்ம ஆபிஸ்ல , நான் உன் கூட பேசிட்டு இருக்கேங்கிறதே யாருக்கும் தெரியாது, நம்ம கல்யாணத்துல சொல்லிக்கலாம்"

"கார்த்தி, அலெக்ஸ் பேரை இங்கிலீஷ்ல எழுதுறப்ப ஏ வை எடுத்துட்டு பி,சி, டி இசட் வரைக்கும் போட்டு படிப்போமா!!"

"அலெக்ஸ், பிலெக்ஸ்,சிலெக்ஸ்,டிலெக்ஸ்,எலெக்ஸ்,ஃபெலக்ஸ்......க்யூலெக்ஸ்..எக்ஸ்லெக்ஸ்,வொய்லெக்ஸ்,இசட்லெக்ஸ்" என நான் முழுமையாகச் சொல்லி முடிக்க பேருந்தே திரும்பிப்பார்க்கும்படி சிரித்தாள்.

இந்த மாதிரி எங்களது சங்கீத ஸ்வர இரவுகளில் ஒவ்வொருத்தர் பெயரையும் எழுத்தை மாற்றிப்போட்டு வாசிச்சு சிரிப்போம்.

"அம்மு, உங்க வீட்டுக்கு எப்படி வரது. வழிச் சொல்லு"

"அடேய், வீட்டுக்கு எல்லாம் வந்துடாதே, எங்க அப்பா எங்க வீட்டுக்கு எதிர்த்தாப்புல இருக்கிற அம்மன் கோவிலுக்கு என்னை பலி கொடுத்துடுவாரு"

"வீட்டுக்குள்ள வரமாட்டேன், சும்மா அலைபாயுதே படத்துல மாதவன் வந்து வீட்டை ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு போற மாதிரி, அலெக்ஸோட வரேன்"

"அலெக்ஸா, டேய் வேண்டாம்டா,"

"ச்சேசே அவரு ஒரு ஜெண்டில்மேன், நீ பயப்படாதே!!, அவரு எதுவும் கேட்கமாட்டார், கேட்டாலும் நான் சமாளிச்சிடுவேன்".

"எங்கத் தெருவில எங்க வீடுதான் கடைசி, நாங்க மாடில இருக்கோம். எதிர்த்தாப்புல நான் உனக்காக வேண்டிக்கிற அம்மன் கோயில், நீ எங்க தெருப்பக்கம் வரப்ப எனக்கு ஒரு குட்டி மிஸ்ட் கால் கொடு, முடிஞ்சா நான் வந்து எட்டிப்பார்க்கிறேன்".

காலம் கடந்த நினைவிலும், கடக்கப்போகும் நிகழ்விலும் ஒரு சேர இந்திரா காந்திசிலை நிறுத்தம் வர, அங்கு அம்மு பேருந்தை விட்டு இறங்கிக் கொள்ள ,
இங்கு அலெக்ஸ் காரினுள் ஏறிக்கொண்டார்.

அலெக்ஸும் மோகனைப்போலவே எனக்கு வாய்த்த சில அரிய நண்பர்களில் ஒருவர். அலெக்ஸின் பண உதவிகள் இல்லாமல் எனது மேற்படிப்பையும்
ஆராய்ச்சிப்படிப்பையும் என்னால் முடித்திருக்க முடியாது. அவற்றை எல்லாம் வட்டியின்றி போன வாரம் தான் திருப்பிக் கொடுத்தேன்.

இந்திராகாந்தி சிலையில் இருந்து எப்படி அவளின் வீட்டிற்கு வரவேண்டும் என அம்மு சொன்னது அப்படியே பசுமையாக மனதில் வர, மோகனுக்கு சரியாக வழி
சொன்னதைக் கேட்ட அலெக்ஸ்

"கார்த்தி,எனக்கு அன்னக்கி சொன்ன மாதிரியே வழிச் சொல்ற, அப்போ உன்னை இந்த தெருவுக்கு கூட்டி வந்த பிறகு இப்போதான் வரேன்"

எல்.ஆர்.ஈசுவரி அம்மனின்மேல் இருக்கும் பக்தியை ஸ்பீக்கரில் பரப்பிக்கொண்டிருந்தார்கள். மரத்தடி அம்மன் இப்பொழுது கோபுரங்களுடன் கூடிய கோவில் அம்மனாக எழுந்தருளியிருக்கிறார். அம்முவின் வீட்டிற்கு சில அடிகள் முன்னர் காரை நிறுத்தி என்ன செய்யலாம் என மோகன் என்னைக் கேட்டார். அவளுடன் பழகிய அத்தனைக் கணங்களும் சுருங்கி அணுவை விட அளவுக்குறைவான ஒரு புள்ளியில் இணைந்தால் எப்படி இருக்குமோ அப்படி என் மனது இருந்தது. அப்பொழுது அவள் அந்த கோவிலில் இருந்து அவளின் வீட்டை நோக்கி நடந்துப் போனாள். கூடவே அவளின் அம்மா, அப்பா, கைத்தாங்கலாய் ஒருவன், ஒருவன் இல்லை, ஒருவர், என் நாட்டு இளவரசிக்கான ராஜகுமாரன்.அவர்கள் அனைவரும் பூவைப்போல அவளைத் தாங்கி அழைத்துச் சென்றுக்கொண்டிருந்தனர். நிறைமாதக் கர்ப்பிணிக் கோலத்தில் பூரிப்பாக இருந்தாள். அவள் என் அம்முவாகத் தெரியவில்லை. என் கடைசித் தம்பி பிறந்த போது என் அம்மா எப்படி இருந்தார்களோ அப்படியே இருந்தாள். உண்மையில் அவளில் என் அம்மாவைப் பார்த்தேன். என் ஆத்திரம், ஆதங்கம், வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம், தோற்கடிக்கப்பட்டோம் என்ற எரிச்சல் எல்லாம் சுவடில்லாமல் மனதில் இருந்து கரைந்தது. அவள் வீட்டை அடைந்து மாடிப்படிகளில் ஏறும் வரை அவளைப் பார்த்தபின் கண்களில் பூத்திருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். நான் சொல்லும் முன்னரே மோகன் காரை பின்பக்கமாக திருப்பலானார்.

என் அனுமதியின்றியே மோகன் இளையராஜாப்பாடல்களைப் ஒலிக்க வைத்தார். முதன் முறையாக தனித்து இருத்தலில் அம்முவின் நினைவுகள் ஆறுதலைக்
கொடுப்பது போல இருந்தது. கம்பன் நகர் இரண்டாவது தெரு அந்த வழிகாட்டும் பலகையைப் பார்த்தேன். இதுவே கடைசி முறையாக இருக்கும் அதைப் பார்ப்பது.

27 பின்னூட்டங்கள்/Comments:

Enfielder said...

Ever and Forever...For the theists, God is love. For the good among the atheists, Love is God.so Who is God here ?
Its you Vinayooki Selva...

I admire your writeups...

நிஹேவி said...

கதை அற்புதம்.ஆண்களுக்கே உள்ள வலி அது அவர்கள் முன் சாதிக்க வேண்டுமென்பது.வாழ்த்துக்கள் சாதித்து விட்டிர்கள்.

அன்புடன் அருணா said...

மீண்டும் ஒரு அழகான உணர்வுகளைச் சுமந்த ஒரு கதை.உண்மையான காதல் பழி வாங்காது.

சென்ஷி said...

கலக்கல் தலைவரே.. ரொம்பப் பிடிச்சிருக்குது கதை. ரொம்ப சந்தோசமா உணர்றேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மிக அழகாக, ஆழமான கருத்து. சுவாரசியமாகக் கொண்டு சென்ற நடை எனக்குப் பிடித்தது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தம்மி!
கதையைப் படித்தும் காதல் அனுபவமோ? தோல்வி அனுபவமோ அற்ற எனக்குக் கூட உங்கள் வலியை
உணரமுடிந்தது.
ஆனாலும் தம்பி; பூச்சி புழுவுக்குக் கூடத் தீங்கிழையானே! அவன் மனதில் இவ்வளவு வர்மமா? என்று
எண்ணித் தொடர கதையை முடித்த விதம் , அவள்- அம்மா; அவளில் உங்கள் அம்மா!
அப்பன் கலக்கிவிட்டாய்...கம்பன் தெருவை மறந்தேவிடு! எங்கிருந்தாலும் வாழட்டும்.
நீ வெற்றியடை.
அப்பன்= ஈழத்தில் மகிழ்வானபோது இளையவர்களை விழிக்கும் அன்புச் சொல்;
உங்களை ஓரளவு அருகிருந்து பார்த்தவன் எனும் வகையில் பாதிக் கதை-உண்மைக் கதை...மீதியும்
உண்மையாகட்டும்.
தண்டோரா அவர்களும் ஓரு காதல்;ஓடிப்போதல்;அப்பா அம்மா கதை எழுதுள்ளார். படிக்கவும். பிடிக்கும்.
பொருள் விளங்கா உருண்டை-http://www.thandora.in/2010/03/blog-post_09.html

Unknown said...

கலக்கிட்டீங்க செல்வா.......

//அவள் என் அம்முவாகத் தெரியவில்லை.என் கடைசித் தம்பி பிறந்த போது என் அம்மா எப்படி இருந்தார்களோ அப்படியே இருந்தாள். உண்மையில் அவளில் என் அம்மாவைப் பார்த்தேன்//

மனதை தொட்ட வரிகள்

கார்ல்ஸ்பெர்க் said...

//சில காதல்கள் நெட் பிராக்டிஸ் மாதிரி, அவை நிஜமான ஆட்டத்திற்கு தயார்படுத்தும் பயிற்சிகள்//

//"அடேய், வீட்டுக்கு எல்லாம் வந்துடாதே, எங்க அப்பா எங்க வீட்டுக்கு எதிர்த்தாப்புல இருக்கிற அம்மன் கோவிலுக்கு என்னை பலி கொடுத்துடுவாரு"//

:)


Climax :

மறுபடியும் அதே உல்லாசப்பறவைகள் படப்பாடல்.. இப்போது 'ஜெர்மனியில் செந்தேன் மலரே' எனத் தெளிவாகக் கேட்டது..

இந்த Climax எப்படி இருக்கு?

VISA said...

Good writing but....

The Majuscule Tornado said...

எதிர் காலத்தையும், கடந்த காலத்தையும் நிகழ் காலத்தில் உலவ விட்டிருப்பது அருமை..

என்றோ வாய் வழி கேட்ட கதை, இன்று வரிகளாய்.. அழகு.

Alag said...

"காதலில் வெற்றி தோல்வி இல்லை
கனங்கள் சுகம் கணம் இல்லை"

Ganesh with Sweden Peoples said...

Nanbane Uyarvanavan
Entha visayathayum nanbanidam sol,
kathalyidam sollathey.
Aen endral nanban purinthu kolvan,
aanal kathali puriyamal kolvval ....
take it easy..nice story...

Anonymous said...

எல்லா அம்மு கதைகள் போலவே இதுவும் அருமையான உணர்வுகளைச்சொல்கிறது.

nepolean said...

Dear Nanba,

I m realy admired ur story....en palaiya ninaiukalukku kondu poitinga nanba..kurippa alex charector romba pudichu irukku...eppadi avara kalaikanumnu ninaichu eluthuna pola theriuthu....mmmmmmmmmmm anyway congrats...

ச ம ர ன் said...

//அவளுடன் பழகிய அத்தனைக் கணங்களும் சுருங்கி அணுவை விட அளவுக்குறைவான ஒரு புள்ளியில் இணைந்தால் எப்படி இருக்குமோ அப்படி என் மனது இருந்தது.//

romba nalla irukku annen..Naanum TCE thaan 2005 batch pass out.

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருந்தது

siva gnanamji(#18100882083107547329) said...

simply superb!

வினையூக்கி said...

Email Comment From Arvindh :

i think it is a terrific story selva.

the ammu stories are no longer 'love' stories, but are windows (food
for voyeurs? in first-person singular, that too) to the inner voice of
kaarthi. and the 'inner voice' sounds very realistic and convincing,
with its anger and self-consolation and basically the games it plays
with itself.
[hey, jeyakanthan's work later became subject matter in universities
to study human nature, and were likened to psychological texts ;-) ]

interleaving flashbacks during the car drive is neat and cinematic
(reminds me of kamal driving in ninaithalae inikum) - probably the way
you intended.

a-z alex joke is brilliant, i see how it can get keerthana giggling (a
recent joke i discovered is a 'knock knock' joke, involving
'interrupting cow'; suggest watching the movie 'half nelson' to get
the context).

கிணற்று தவளை said...

i like this story....
:)
unmaiyana kadhal aliyum podhu , oru uyir pogum illana inoru uyir varum...
:)

உண்மைத்தமிழன் said...

நல்லாயிருக்குடா ராசா..!

வாழ்க..!

எழுத்து நடை உனக்குக் கூடிக்கிட்டே போகுது..!!

Venkatesh said...

அருமை! அனுபவத்தை எழுதிவிட்டீர்கள்!!

வெங்கடேஷ்

Alexander said...

Dai, Veena ennayum ezhuthalana akkidathe, unna kalaikkave nanum ezhutha arambichuduven, "pancha thanthiram" la Simran speach in ladies club...., gabagam vanthathu !!!

Alexander said...

Sorry, in the above comment it is "pammal k sambantham"

சாமி said...
This comment has been removed by the author.
சாமி said...

hello Mr.Selva, h r u?. story nalla iruku, but ithu story mathiri theriyalaye... enga thalaya vera scenela iluthteengale...

//அங்கு அம்மு பேருந்தை விட்டு இறங்கிக் கொள்ள, இங்கு அலெக்ஸ் காரினுள் ஏறிக்கொண்டார்.//

kathaiku yetra nalla korvai.
keep going, bye

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ம்ம்..கதை கொஞ்சம் சுமார் தான். நீளத்தைக் குறைத்து இருக்கலாம். முடிவு விக்ரமன் தனமா இருக்கு.

Anonymous said...

oh vinaoogi, its a nice story,enaku pidicha ade padalgal,ungalala matum epadi mudiyaradu idellam?
Walththukkal!!!