Monday, March 29, 2010

La gaucherie - சிறுகதை

"இங்கே வாங்க !! இந்த நாற்காலியிடம் வாங்க" எனது மனைவி அம்மு, எங்களது குழந்தை அஞ்சலிப் பாப்பாவிற்கு தமிழுடன் நடையும் பழக்கிக் கொண்டிருந்தாள். குழலும் இனிதில்லை குழலூதும் இளையராஜவின் இசையும் இனிதில்லை என எண்ணியபடியே அம்முவும் அஞ்சலிப்பாப்பாவும் விளையாடிக்கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நானும் கீர்த்தனாவும் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்ளும் அம்மும்மா,கார்த்திபா வின் மருவிய வடிவங்களான ம்மும்மா,த்திபா தான் அஞ்சலிப் பாப்பாவின் முதல் இரண்டு சொற்கள்.

எங்களது அலையன்ஸ் பிரான்சைஸின் je t'aime காலங்களில் ஒருநாள் , "கார்த்தி, கடவுள் உன்கிட்ட வந்து வரம் வேணுமான்னு கேட்டா, என்ன வரம் கேட்ப?"


"உன்னை ஒரு ரெண்டு வயசு குழந்தையா மாத்தி, என்கிட்ட கொடுக்கச் சொல்லி வரம் கேட்பேன்" இந்தப் பதிலுக்குப் பின்னர் தான் அவளை நான் அம்மு எனக் கூப்பிட அனுமதித்தாள்.


இயற்கை, நாம் மனதினுள் விரும்பு விசயங்களை ஒரு தடவையேனும் நிறைவேற்றி விடும். இதோ . அம்முவை அச்சு அசலாக உள்வாங்கிக் கொண்டு அஞ்சலிப்பாப்பா வந்திருக்கிறாள்.

'த்திபா த்திபா' எனக்குழந்தை என்னை நோக்கி கையைக் காட்ட நான் வாங்கி மடியில் வைத்துக் கொண்டு, கீர்த்தனாவை கிட்டாரில் என் இனிய பொன் நிலாவே வாசிக்கச் சொன்னேன். அம்மு, தமிழைப்போல கிட்டரையும் என்னுடன் பழக ஆரம்பித்த பின்னரே கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.ஆனால் இன்று இரண்டிலுமே என்னைவிட அதிகமான பாண்டித்யம் அவளுக்கு உண்டு. மொழியையும் இசையையும் பெண்கள் வேகமாக கற்றுக்கொள்வார்களாம். இடதுகையில் வாசித்தபடி , ஒரு கண்ணில் அஞ்சலிப்பாப்பவையும் மறு கண்ணில் என்னையும் வைத்திருப்பது போல மாறி மாறி பார்த்துக்கொண்டே பாடிக்கொண்டிருந்தாள்.


அம்முவிடன் எனக்குப்பிடித்த விசயங்களில் ஒன்று, அவளின் சில இடது கைப்பழக்கங்கள். கிட்டார் வாசிப்பது, சீட்டு விளையாடும்பொழுது கட்டை கலைத்துப்ப்போடுவது, கோபம் வந்து கைத்தொலைபேசியை இடதுகையில் வீசி எறிவது என தன்னிச்சையாக சில சமயங்களில் இடதுகையைத் தான் பிரயோகிப்பாள். அவளின் முதல் அறிமுகமே எங்களது பழைய அலுவலக வரவேற்பறையில் வரவேற்பாளினியிடம் அவள் இரண்டுகைகளிலும் எழுதிக் காண்பித்தபோதுதான்.

“கீர்த்தனா !! நீங்க ஆம்பிடெக்ஸ்ட்ரஸா?”

“அப்படின்னா!!”

“அதாவது இரண்டு கைகளிலும் எழுதத் தெரிந்தவங்க !!”

“ஓ அப்படியா !!! தெரியலியே...சும்மா ஒரு ஃபன்னுக்கு டிரை பண்ணேன்”

பின்னொருநாள் அவள் எனக்குப்பின்னால் நிற்கிறாள் என்பதை அறிந்து கொண்டு, அலுவலகப் பதிவேட்டில் இடது கையால் கையொப்பம் இட்டுக்கொண்டிருந்தேன்.

“கார்த்தி நீங்க லெஃப்ட் ஹேண்டா!!'

“ஆமாங்க !!!” என்றேன் நமுட்டு சிரிப்பைக் கொடுத்துக் கொண்டிருந்த வரவேற்பாளினியை முறைத்த படியே.

கீர்த்தனாவை என் பக்கம் ஈர்ப்பதற்காக கடைசி ஒரு வாரம் பயிற்சி எடுத்து இடது கையால் கையொப்பம் போடக்கற்றுக்கொண்டிருந்தேன். கையொப்பம் இட்டுவிட்டு, இடதுகையில் பேனாவை விரல்களுக்கிடையே சுற்றிக்கொண்டே , கீர்த்தனாவை அனாயசமாகப் பார்த்துவிட்டு என் இடத்துக்குச் சென்ற இரண்டு நிமிடங்களில் கீர்த்தனாவிடம் இருந்து அலுவலக முகவரியில் ஒரு மின்னஞ்சல்.

“நீங்க உண்மையிலேயே இடதுகைப் பழக்கம் உள்ளவரா” என்ற அர்த்தத்தை தாங்கி ஆங்கிலத்தில் அந்த மின்னஞ்சல் இருந்தது. வரவேற்பாளினி போட்டுக்கொடுத்து விட்டாளா !!

என்ன பதில் அடிக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அதே வாசகம் எங்களது அலுவல் சம்பந்தமான அரட்டை சன்னலிலும் வந்து எட்டிக்குதித்தது. ஒரு பொய்யைத் தொடர்வதைவிட அதை பாதி உண்மையாக்கி சொல்லிவிடலாம் என,

“சின்ன வயசில லெஃப்ட் ஹேண்டட், இப்போ இல்லைங்க”

“ஏன்?” கொஞ்சம் ஆங்கிலம் நிறைய தமிங்கிலிஷ் கலந்து எங்களது அரட்டைத் தொடர்ந்தது.


“சின்ன வயசில கிரிக்கெட்ல லெஃப்ட் ஹேண்ட் பேட்டிங் செய்வேன்” இது ஓரளவுக்கு உண்மை. லெக்சைட்ல எங்க குடியிருப்பு வீடுகள் இருந்ததால் ஆஃப் சைட் ரன் வைத்து ஆடும்பொழுது ,இடது கை ஆட்டம் ஆடினால் எளிதாக ரன் எடுக்க முடியும்.ஆனால் உண்மையை அவளிடம் சொல்லவில்லை.

“பவுலிங்கும் லெஃப்டா?”

“இல்லை அது ரைட் !!”

“அப்படியா !!! அப்போ கங்குலி மாதிரி, பேட்டிங் பவுலிங் ரெண்டுமே லெஃப்ட் இருக்கிறவங்களைத்தான் எனக்குப்பிடிக்கும்... வாசிம் அக்ரம், இண்டியா டீம்ல சுனில் ஜோஷி”

”டெண்டுல்கர் கூட நேச்சுரலி லெஃப்ட் ஹேண்டட் தான் !! உங்களை மாதிரி இரண்டு கையாலும் எழுதுவார்”

“தெரியும் கார்த்தி !!! நீங்க சொன்ன மாதிரி ஆம்பிடெக்ஸ்ட்ரஸ்”

அந்த உரையாடலில் கீர்த்தனா என்னிடம் சினேகம் பாராட்ட விரும்புகிறாள் என்பது புரிந்தது. அந்த சினேகம் மதுரை அப்புவில் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் மதிய உணவுக்குச் செல்லும் வரை வளர்ந்தது.
அவளுக்குப்பிடித்த டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா , டென்னிஸ் வீரர் கோரன் இவானிசெவிக் இப்படி இடதுகைப் பழக்கம் உள்ளவர்களைப் பற்றியேச் சொல்லிக்கொண்டிருந்தாள். மார்ட்டினா நவரத்திலோவாவை ஓய்வு பெற்ற பிறகும் திரும்ப வந்து லியாண்டர் பயஸுடன் கலப்பு இரட்டையார் ஆடி ஜெயிச்சதுனால் எனக்கும் பிடிக்கும் கோரன் இவானிசெவிக் ஒரு டேவிஸ்கோப்பை ஆட்டத்தில் நம்ம ஊரு லியாண்டர் பயாஸிடம் தோற்றதில் இருந்து அவரின் டென்னிஸ் வாழ்க்கையின் அஸ்தமனம் தொடங்கியது.

நீங்க என்பது நீ என மாறத்தொடங்கிய நாட்களுக்குபின் ஒருநாள்.

“கார்த்தி, நான் சின்னவயசில லெஃப்ட் ஹேண்ட் யூஸ் பண்ணக்கூடாதுன்னு எங்க அம்மா சூடு எல்லாம் வச்சிருக்காங்க” இடதுகையின் முழங்கைகைக்கு கீழே சின்ன தழும்பு சிறியதாக இருந்தது. அப்பொழுது தொடும் அளவிற்கு நெருக்கம் இல்லாததால் “அச்சச்சோ” என மட்டும் சொல்லி வைத்தேன்.

“பீச்சாங்கை எதுக்குடி எதுக்கெடுத்தாலும் முன்னாடி வருதுன்னு சொல்லிட்டு நிறைய அடிச்சிருக்காங்க அம்மா”

”ஏசிஎஸ் படிச்சு முடிக்கிற வரைக்கும் மறந்து கூட இடதுகையை நீட்டிட மாட்டேன் !! இங்கே வேலைக்குச் சேர்ந்த பின்னதான் திரும்ப லெஃப்ட் ல எல்லாம் பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன் ”

"ஆமாம் இங்கே கம்பெனி செக்ரட்டரிக்கு என்ன வேலை இருக்கு, இயர் எண்ட் மீட்டிங் , ஃபைனான்சியல் குவார்ட்டர் அப்டேஷன்,,, நீ கலக்கு கீர்த்தனா “

அவள் உணர்வுப்பூர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்க, நான் கிண்டலடித்துக் கொண்டிருந்தேன்.என்னுடன் சேர்த்து எனது கிண்டல்களும் அவளுக்குப் பிடித்துப் போக, நான் போகும் இடங்களுக்கு எல்லாம் அவளும் வரவேண்டும் என என்னுடனே மாலை நேர பிரெஞ்சு வகுப்பு சேர்ந்தாள். நான் எழுதும் தமிழ்க் கவிதைகளை வாசிப்பதற்காகவே என்னிடம் தமிழும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். அவளுக்காக நான் கிட்டார் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

எனக்குப் பிடித்த கங்குலி இரட்டைச் சதமும், அவளுக்குப்பிடித்த இர்ஃபான் பதான் சதமும் அடித்திருந்த நாளில், அவளுக்குக்காக ஒரு இடதுகை கிட்டாரை வாங்கிப் பரிசாகக் கொடுத்து காதலைச் சொன்னேன். கிட்டாரை உடனே வாங்கிக் கொண்டவள் காதலை அலையன்ஸ் பிரான்சைஸ் மாடிப்படியில் வைத்து கிட்டாரில் என் இனிய பொன் நிலாவே வாசித்து என்னை ஏற்றுக்கொண்டாள்.

“என்னடா !! மலரும் நினைவுகளா!! “ கிட்டார் வாசிப்பதை நிறுத்தாமல் ராகமாய் கேட்டதும் நிகழ்காலத்திற்கு வந்தேன்.

"அஞ்சலி பாப்பவோட அப்படியே பாஸ்ட்டுக்குப் போனா நல்லா இருக்கும் தானே!!"


"இருக்கும் இருக்கும்... உன்னைப் பத்தி சொன்னதுக்கே நீ வாங்கி கொடுத்த கிட்டார் ரெண்டா உடைஞ்சிது, பாப்பாவும் இருந்திருந்தா விளங்கியிருக்கும்.. கார்த்திபா நாளைக்கு அம்மா அப்பா வர்றாங்க"


எங்களுக்குத் திருமணமான இந்த மூன்றரை வருடங்களில் அவர்கள் வருவது இதுதான் இரண்டாவது முறை. நாங்கள் அஞ்சலிப்பாப்பா பிறந்த பின் உடனடியாக சுவீடன் வந்துவிட்டதும் ஒரு காரணம். எப்பொழுதாவது கீர்த்தனாவின் அப்பா மின்னஞ்சல் செய்வார். அவர்களை அத்தை , மாமா என விளித்தது கூட கிடையாது. சார் , மேடம் தான் . உட்கார்ந்து ஆற அமர பேசுவதற்கும் நேரமில்லை. முதல் சந்திப்பில் அடி வாங்காமல் தப்பித்ததே பெரிய விசயம். கல்யாணத்திற்கு அவர்கள் வந்து வாழ்த்துகள் சொன்னதோடு சரி. அஞ்சலிப் பாப்பா பிறந்த போது கூட, கொண்டாட்டங்களை எங்கள் அம்மா அப்பா ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்துவிட்டனர்.

"கார்த்திபா நாளைக்கு நான் ஸ்டேஷன் ல பிக் அப் பண்ணிக்கிறேன். அம்மா அப்பாகிட்ட நல்லா பேசுடா சார் மோர் எல்லாம் வேண்டாம். அழகா அத்தை மாமா ந்னு கூப்பிடு"

"ம்ம்ம் பார்க்கலாம்"

இங்கு கோடைகாலம் என்றபொழுதிலும் இந்த குளிரும் அவர்களை நடுநடுங்க வைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் என்னிடம் அவ்வளாவாக பேசவில்லை என்றாலும் , அஞ்சலிப்பாப்பாவிடமும் அம்முவிடமும் கலகலப்பாக இருந்தனர்.




பின்னொரு மாலைப்பொழுதில், கீர்த்தனாவின் அம்மா, "என்னடி அம்மு, உன் பொண்ணும் நொட்டாங்கையை எதுக்கெடுத்தாலும் முன்னுக்கு நீட்டுறா... " சொல்லிக்கொண்டே "பீச்சாங்கையை நீட்டுவியா நீட்டுவியா " என குழந்தையின் மணிக்கட்டில் தனது விரலை வைத்து செல்லமாகவும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் அடித்துக் கொண்டிருந்தார்.


"அத்தை, சும்மா இருங்க,.. அவ எந்தக் கை நீட்டினா என்ன!! அம்முவுக்குப் பண்ணதை என் பொண்ணுக்கும் பண்ணிடாதிங்க" எனச் சொல்லி குழந்தையை அவரிடம் இருந்து தூக்கிக்கொண்டேன்.

அன்றிரவு படுக்கை அறையில்,

"கார்த்திபா, உனக்கு ரெண்டு தாங்க்ஸ், ஒன்னு அம்மாவை அத்தைன்னு கூப்பிட்டதுக்கு, இன்னொன்னு அவங்க கிட்ட கோபப்பட்டதுக்குக்கா"

"நான் கூட நோட்டிஸ் பண்ணல, அஞ்சலிப்பாப்பா லெஃப்ட் ஹேண்டட்னு , ஒரு லெஃப்ட் ஹேண்டட் கிரிக்கெட் பிளேயர் ஆக்கிடப்போறேன்"

"கிரிக்கெட் வேண்டாம், டென்னிஸ்ல மார்ட்டினா நவரத்திலோவா மாதிரி"

"அம்மும்மா அப்போ எனக்குப் பிடிச்ச கிரிக்கெட்டுக்கு.."

"ம்ம்ம் அடுத்த வருஷம் அர்ஜுன் தரேன், அர்ஜுன் பாப்பாவை கிரிக்கெட்டர் ஆக்கிக்கோ.. அஞ்சலிப்பாப்பா டென்னிஸ் ஸ்டார் தான்" என்றாள் தனது இடதுகையால் என் கன்னத்தை வருடிக்கொடுத்தபடியே , அந்த இடது கையில் இருந்த தழும்பின் வலி இன்றிலிருந்து இருக்காது.




Sunday, March 28, 2010

டேனியல் வெட்டோரி - சகலகலா வல்லவன்

மென்பொருள் பொறியியலாளார் போன்றத் தோற்றம், படிப்புக்களையைத் தரும் கண்ணாடி, மென்மையான அதே சமயத்தில் தீர்க்கமான பேச்சு இவற்றை வைத்து ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் என கிரிக்கெட்டைப் பற்றி அறியாதவர்கள் டேனியல் வெட்டோரியைப் பற்றி தவறாக எடைப்போட்டுவிடக் கூடும். தன் அணி துணை வராவிடினும் தனி ஒரு ஆளாக வெற்றி அல்லது வெற்றிக்கான இடைவெளியையாவது குறைப்பதற்கு போராடுபவர் தான் டேனியல் வெட்டோரி. இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த டேனியல் வெட்டோரி ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா. தேர்வாளர்களில் ஒருவர் குறைகிறாரா !! கூப்பிடு வெட்டோரியை. என்னது பயிற்சியாளர் பதவி விலகிவிட்டாரா !! கூப்பிடு டேனியல் வெட்டோரியை பயிற்சியாளராகவும் இருக்கட்டும். முன்வரிசை ஆட்டக்காரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துவிட்டனரா!! வெட்டோரி இருக்கிறாரப்பா !! கவலையை விடு ஒரு கவுரவமான நிலைக்கு அணியை மீட்டெடுத்துவிடுவார்.




நாம் ஆதரவு தெரிவிக்கும் அணிக்கெதிராக நன்றாக விளையாடினாலும் சில ஆட்டக்காரர்களை உள்ளூர ரசிப்போம். அந்த வகையில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்களால் ரசிக்கப்படுவர் டேனியல் வெட்டோரி. ஆங்கிலத்தில் Underdogs என்றொரு பதம் உண்டு. எல்லோருக்கும் அறிந்த ஆனால் பெரும்பாலும் தோல்வியைத் தழுவக்கூடிய, சில சமயங்களில் அடுத்தவருக்கு அதிர்ச்சித் தோல்வியைக் கொடுத்து வெற்றிக்கனியைத் தட்டிச்செல்ல வாய்ப்பு இருப்பவர்கள் எனபது அந்த ஆங்கிலச் சொல்லின் அர்த்தம். அது நியுசிலாந்து அணிக்கு நூற்றுக்கு நூறுப் பொருந்தும். ஏழைகளின் ஆஸ்திரேலிய அணியான நியுசிலாந்து அணியை கிடைக்கும் சமயத்தில் அனைத்து அணிகளும் ஒரு புரட்டு புரட்டி எடுத்தாலும் சென்ற வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டம் வரை நியுசிலாந்து வந்து பரமவைரியான ஆஸ்திரேலியாவிடம் மற்றும் ஒரு முறைத் தோற்றுப்போனது.

உலகின் சிறந்த ஆட்டக்காரர்களை கொண்டு ஆடப்படும் அணிக்குத் தலைவராக இருந்து வெற்றிபெறுவதை விட , சராசரிக்கும் சற்று அதிகமான ஆட்டத்திறனுடைய ஆட்டக்காரர்களை வைத்துக் கொண்டு , அணியைச் சிறப்பாக ஆடச் செய்ய தானே முன்மாதிரியாக களத்தில் இருப்பது சிறப்பான விசயம்.இதைத் தான் கடந்த சில வருடங்களாக நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராகச் வெட்டோரி சாதித்து வருகின்றார். டெண்டுல்கர் போலவோ ரிக்கிபாண்டிங் போலவோ எதிராளியை கலங்கடிக்கும் மட்டையளர்கள் யாரும் கிடையாது. ஒரு ஆட்டத்தில் அசூரத்தனமாக பந்து வீசிவிட்டு ஒன்பது ஆட்டங்களுக்கு ஓய்வு எடுக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள். எல்லா பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசவேண்டும் என நினைக்கும் நடுவரிசை ஆட்டக்காரர்கள் இப்படி வெட்டோரிக்கு கிடைத்து இருப்பதை விட இல்லாது இருப்பதுதான் அதிகம். கடந்த வருடம் நியுசிலாந்து கிரிக்கெட் நன்னெறிக்கான விருதைப் பெற்றது. கிரிக்கெட்டை விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டும் விளையாடாமல் அதன் பெருமைக்கு பங்கம் வராமல் வகையிலும் விளையாடும் நாடுகளுக்கு அளிக்கப்படும் விருது அது.

தோல்வியாக இருந்தாலும் வெற்றியாக இருந்தாலும் நிறைகுடம் போல அணியை நடத்திச் செல்லும் வெட்டோரியின் பங்கு, நியுசிலாந்து அந்த விருதைப் பெற்றதில் அதிகம். இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் சக ஆட்டக்காரர் ஒருவர் ஆட்ட நன்னெறிகளுக்கு எதிராக ஆட்டமிழக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் தனது கோபத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து அணி வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததை தவிர வேறு எந்தவிதமான சங்கடமான செய்திகளிலும் வெட்டோரி சிக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


1997 ஆம் ஆண்டு தனது 18 வயதில் இங்கிலாந்து அணிக்கெதிராக முதன் முறையாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வெட்டோரி 13 வருடங்களுக்குப்பின் தனது 100 வது டெஸ்ட்டை சனிக்கிழமை (27 மார்ச் 2010) ஆஸ்திரேலியா அணியுடன் ஆடியிருக்கின்றார். இந்த நூறு கணக்கில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. வெட்டோரி, உலக அணிக்காகவும் ஒரு டெஸ்ட் போட்டி ஆடியுள்ளதால் , ஆஸ்திரேலியாவுடன் ஆடப்போகும் ஆட்டம் நியுசிலாந்து சார்பாக 99 வது ஆட்டமாகவும் ஒட்டுமொத்தத்தில் 100 வது ஆட்டமாக அமைந்திருக்கின்றது.




கிட்டத்தட்ட 4000 ஓட்டங்களையும் முன்னூற்றுக்கு மேற்பட்ட விக்கெட்டுகளையும் எடுத்துள்ள டேனியல் வெட்டோரி சமகால சகலகலா வல்லவர்களில்(Allrounder) குறிப்பிடத்தக்கவர். 2003- 2004 காலங்களில் ஆடிய மோசமான ஆட்டத்தைத் தவிர்த்துப் பார்த்தால் வெட்டோரி தனது அறிமுகத்தில் இருந்து இன்று வரை அந்த அணியின் முக்கியமான பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். புள்ளிவிபர சாதனைகளும் மைல்கற்களும் தன்னை ஊக்குவிக்கும் காரணிகள் என கூறும் வெட்டோரி தனது முந்தைய அணித்தலைவர் ஸ்டீபன் பிளமிங்
ஆடிய 111 டெஸ்ட் ஆட்டங்களை ஆடிக் கடக்க வேண்டும் என்பது லட்சியமாம். பந்துவீச்சில் இந்திய அணியின் ஹர்பஜன் சிங்கையும் மட்டை வீச்சில் ராகுல் திராவிட்டையும் தன் விருப்ப ஆட்டக்காரர்களாக நினைக்கும் டேனியல் வெட்டோரி டெஸ்ட் ஆட்டங்களில் 5 சதங்கள் அடித்துள்ளார்.

முதல் தர அறிமுக ஆட்டம் ஆடிய அதே மைதானத்தில்(ஹாமில்டன்) தனது 100 வது டெஸ்ட் போட்டியை ஆடிக்கொண்டிருக்கும் டேனியல் வெட்டோரி டெஸ்ட் அரங்கில் 100 போட்டிகளை ஆடிய 50 வது நபர் என்ற பெருமையும் அடைந்திருக்கிறார். ஸ்டீபன் பிளமிங்கிற்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டியிருக்கும் இரண்டாவது நியுசிலாந்து ஆட்டக்காரர். ஆரம்பத்தில் கால்பந்து வீரராக வேண்டும் என விரும்பிய வெட்டோரி, அவருக்கு 15 வயதாக இருக்கும்பொழுது, பயிற்சிக்கு செல்லும் வாகனம் விபத்துக்குள்ளானதில் முதுகெலும்புகளில் பலத்த காயம் அடைந்தார். அதில் இருந்து கிரிக்கெட்டை தனது விருப்ப விளையாட்டாக தேர்வு செய்தாராம். தனது முதல் ஆயிரம் ஓட்டங்களை எடுக்க 47 டெஸ்ட் போட்டிகள் எடுத்துக்கொண்ட வெட்டோரி அடுத்த ஆயிரம் ஓட்டங்களை 22 ஆட்டங்களில் கடந்தார்.



பாகிஸ்தான் அணிக்கெதிராக அடித்த தனது முதல் டெஸ்ட் சதத்திற்குப் பின் தன்னை நடுவரிசை மட்டையாளராக நிலை நிறுத்திக் கொண்ட வெட்டோரி, கடந்த வருடம் ஹாமில்டனில் இந்தியாவுக்கெதிரான ஆட்டத்தில் 60/6 என்ற நிலையில் இருந்து அணியை மீட்டு சதமும் அடித்து இந்திய பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினார். இத்தனைக்கும் தனது முதல் ஆட்டத்தில் 11 வது ஆட்டக்காரராக டக் அவுட் புகழ் ஜெஃப் அல்லாட்டிற்குப்பின் களமிறக்கப்பட்டவர். 2011 உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறத்திட்டமிட்டுள்ள வெட்டோரி அதன் பின் சில வருடங்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவேன் எனக்கூறியிருக்கிறார்.

ரிச்சர்ட் ஹாட்லியின் 431 விக்கெட்டுகளை முந்துவது ஒரு நோக்கமாக இருக்கலாம். 5000 ஓட்டங்கள் 400க்கும் அதிகமான விக்கெட்டுகள் எடுத்து ஓய்வு பெற்றால் சமகாலத்திய கபில்தேவ் வகையிலான சகலகலாவல்லவர் என்ற பெயர் வெட்டோரிக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.


வாழ்க்கையிலும் கிரிக்கெட்டிலும் சாதனைகளை போராட்டங்களில் வாயிலாக புரிபவர்கள் தாம் அதிகமாக நினைவுகூறப்படுவார்கள். தன் ஆட்டத்திறன் பாதிக்கப்படக்கூடும் என தலைவர் பதவியை உதறுபவர்கள் மத்தியில் தலைவர் பதவி, ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்புகளின் அழுத்தம் தன்னை இன்னும் அதிகமாக பிராகசிக்க செய்கிறது எனக்கூறும் வெட்டோரி ஒரு போராளி.

தனது நீண்ட நாள் தோழியான மேரி ஓ கேரல்லை மணந்து ஜேம்ஸ் என்ற மகனுடன் குடும்பத்தலைவர் என்ற பொறுப்பையும் சிறப்பாகச் செய்து வரும் டேனியல் வெட்டோரி, தனது 100 வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி , ஆஸ்திரேலிய ரன்குவிப்பை 231 க்குள் கட்டுப்படுத்தினாலு மட்டையாளர்களின் ஒத்துழைப்பு இல்லாததினால் மீண்டும் மண்ணைக்கவ்வியது.




அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

என்ற குறளுக்கு ஏற்ப தனக்கு அளிக்கப்பட்டதை குறை கூறாமல் சராசரியான அணியை வைத்துக்கொண்டு அவ்வப்பொழுது சாதனைகளைச் செய்ய வைக்கும் அணித்தலைவர் , சுழற்பந்து வீச்சாளார் , மட்டையாளர், தேர்வாளர், சமயங்களில் பயிற்சியாளார் என அனைத்திலும் கலக்கும் இந்த சகலகலகலா வல்லவன் வெட்டோரி 100 வது டெஸ்ட் போட்டியில் வெல்வதோடு மட்டுமல்லாமல் 2011 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை வரும் படி வாழ்த்துவோம்.

4தமிழ்மீடியாவிற்காக எழுதியது

Monday, March 15, 2010

துவைதம் - சிறுகதை

"ஹே மாஸ்டர், கேன் ஐ ஹாவ் சம் இண்டியன் மசாலா” என கையில் ஒரு புத்தகத்துடன் சீரஸ் அஜ்தாஹி தாழிடப்படாத கதவைத் திறந்து உள்ளே வந்து கேட்டார்.

அறையில் யாரும் இல்லாததால் பிரபல இத்தாலிய இயக்குனர் டிண்டோ பிராஸின் மிட்நைட் மசாலா வகையிலானா திரைப்படத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் சீரஸ் இப்படி வந்து நின்றது எரிச்சலைக் கொடுத்தாலும், வெளிநாட்டவர்களிடம் எனது இயல்பைக் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதால், வெற்றுச்சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவர் கேட்டதை எடுத்துக் கொடுத்து விட்டு எப்பொழுது வெளியே போவார் என பேச்சுக்கொடுக்காமல் சில வினாடிகள் மௌனமாய் இருந்தேன். சீரஸ் நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் ஈரானைச் சேர்ந்த நபர். அயேதுல்லா கொமேனி காலத்தில் புலம்பெயர்ந்த ஈரான் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர். சீரஸுக்கு ஐந்து வயதாக இருக்கும்பொழுது சுவீடனுக்கு பெற்றோருடன் வந்தாராம்.

ஆரம்ப முப்பதுகளில் இருக்கும் சீரஸ் வேலை எதுவும் செய்வதில்லை. அரசாங்கம் கொடுக்கும் எட்டாயிரம் க்ரோனர்களுடன் முதல் 15 நாட்களைக் கொண்டாட்டங்களுடனும் அடுத்த 15 நாட்களைக் கிட்டத்தட்ட அங்கு இங்கு கடன் வாங்கி சாப்பிட்டு ஓட்டிக்கொண்டு இருப்பவர்.

“இந்த சுவிடீஷ் மக்களுக்கு என்னைக் கண்டால் பிடிக்கவில்லை, இவர்களுக்கு என்னைக் கண்டால் பயம், மேற்குலகுக்கு பாரசீகர்கள் என்றாலே வெறுப்பு, இவர்கள் பன்றிகளை வேட்டையாடி நாடோடிகளாகத் திரிந்த காலத்தில், நாங்கள் வான அறிவியல் படித்தவர்கள்” என ஆங்கிலத்தில் வழக்கம்போல சம்பந்தம் இல்லாமல் பேச்சை ஆரம்பித்தார்.

“ம்ம்ம்ம்” என்றேன், எனக்கு நினைவெல்லாம் டிண்டோபிராஸ் படத்தின் நாயகி குளிக்கப்போனாளே என்பதிலேயே இருந்தது. கையில் இருந்த புத்தகத்தின் பெயரைக் கவனித்தேன். குவாண்டம் பிஸிக்ஸ் என்ற அந்தப் புத்தகத்தை மேசையின் மேல் வைத்துவிட்டு எனது மடிக்கணினியை அவரின் பக்கம் திருப்பிக்கொண்டு

“வாட் ஈஸ் த பாஸ்வேர்ட்” எனக் கேட்டார்.

கடவுச்சொல்லை அடிக்காமல், ஏனையவர்களுக்கான கடவுச்சொல் இல்லா கணக்கில் மடிக்கணினி உள்புக வைத்தேன்.

மத்தியகிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கணினியைக் கொடுப்பது என்றாலே பயம். இவர்கள் யாருக்காவது மிரட்டல் கடிதம் அனுப்பிவிட்டால் எனது ஐபி வந்து மாட்டுமே !!! கூச்சமே இன்றி சீரஸ் எந்த இணையத் தளத்தைப் பார்வையிடுகிறார் எனக் கவனித்துக் கொண்டே இருந்தேன். வீக்கிப்பீடியாவில் உள்நுழைந்த அவர், குவாண்டம் இயற்பியலைப் பற்றிய விடயங்களை மேய்ந்து கொண்டிருந்தார்.

“மாஸ்டர், உனக்குத் தெரியுமா, எலக்ட்ரான்களால் ஒரே சமயத்தில் இரண்டு இடத்தில் இருக்க முடியும்”

”டேய், இதெல்லாம் பத்தாவதுலேயே படிச்சிட்டோம்டா ” என தமிழில் முணுமுணுத்துக் கொண்டேன். இந்த மாதிரி சமயங்களில் தான் ராஜு வேண்டும். ராஜு எனது அறை நண்பர், என்னை விட கொஞ்சம் அதிக வாசிப்பனுபவம் கொண்டவர். எப்பொழுதெல்லாம் சீரஸ் அறிவுத்தளத்தில் பேச ஆரம்பிக்கிறாரோ அப்பொழுதெல்லாம் வடிவேலு பாணியில் “பேச்சுக் கொடு பேச்சுக்கொடு” சீரஸை பேசவைத்து, சீரஸிடம் இருந்து சிலப்பல அனுபவ அறிவுப்பூர்வமான விசயங்களைத் தெரிந்து கொள்வோம். இன்று அவர் ஆர்மீனிய நாட்டைச் சேர்ந்த கல்லூரித் தோழிகளுடன் ஆட்டம் போடச் சென்றுவிட்டார்.

எலக்ட்ரான்கள் பற்றி சீரஸ் சொல்லிய விசயத்திற்கு நான் எதுவும் பதில் சொல்லாததால் அதையே திரும்பவும் கேட்டார்.

“படிச்சிருக்கேன், யங் டபுள் ஸ்பிலிட் எக்ஸ்பெரிமெண்ட்”

“ஆமாம் மாஸ்டர், ஒளி துகள் வடிவிலும் அலை வடிவிலும் பரவும் என்பதை விளக்கிக் காட்டும் சோதனை அது, பின்னாளில் எலக்ட்ரான்களை வைத்தும் அந்தச் சோதனை செய்யப்பட்டது”

”அந்தச் சோதனையின் மூலம் எலக்ட்ரான்கள் இரண்டு இடங்களில் ஒரே சமயத்தில் இருக்க வாய்ப்புண்டு என நிருபிக்கப்பட்டது, அதுவே குவாண்டம் இயற்பியலுக்கு அடிப்படையாக அமைந்தது. இப்போ இருக்கிற ஃபிளாஷ் மெமரி டிரைவ் எல்லாம் குவாண்டம் டன்னலிங் வைத்துதான் இயங்குகின்றன” அறிவியல் அறிவில் நானும் குறைந்தவனல்ல என பதிலளித்தேன்.

“சதுரங்கத்தில் மட்டும் அல்ல, நீ பொது அறிவிலும் கெட்டிக்காரன் தான்” சில சமயங்களில் கொடுக்கிற காசுக்கு மேலேயே சீரஸ் கூவுவார். அவரைத் தொடர்ந்து சதுரங்கத்தில் வென்ற பின்னர்தான் கிராண்ட்மாஸ்டர் என்பதைச் சுருக்கி மாஸ்டர் எனக் கூப்பிடுகிறார்.

”கார்த்தி, நீ அவன் வரப்ப எல்லாம் டீ போட்டுக்கொடுக்கிறதுனால தான் உன்னை மாஸ்டர்னு கூப்பிடுறான்” என ராஜு அடிக்கடி கிண்டல் அடிப்பார்.

ராஜுவும் நானும், லா டினர் கேம் பிரஞ்சுப்படத்தைப்போல அரங்கேற்றி இருந்த விருந்தில் சீரஸ் தான் சிறப்பு விருந்தினர். நாங்கள் அவரை குடிக்க வைத்து சிலப்பல கேலிகள் செய்கிறோம் என்பதை புரிந்து கொண்டாலும் மாத உதவித் தொகை வர இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றது என்பதால் கண்டு கொள்ள மாட்டார். எங்களுக்கு தோன்றும்பொழுதெல்லாம் அல்லது அவரிடம் காசு இல்லை என்றாலும் எங்களின் பேஜா ஃபிரை சீரஸ்தான். .அந்த விருந்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் மனிதனை கடவுளை விட்டு வெகுதூரம் செல்ல வைக்கும் சாத்தானின் வேலைகள் எனக் கூறிய சீரஸ் இன்று குவாண்டம் இயற்பியலைப் பற்றி சொல்லுவது வியப்பாக இருந்தது..

“மாஸ்டர், எலக்ட்ரான்கள் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க வாய்ப்பு இருக்கும் பொழுது, மனிதனால் ஏன் இருக்க முடியாது? இது தான் எனது கேள்வி” ,

நான் பதில் சொல்லாமல் அவருக்கும் எனக்கும் தேநீர் தயார் செய்து கொண்டிருந்தேன். தானாகவே பாரசீகமொழியிலும் சுவிடீஷிலும் பேசிக்கொண்டிருந்தார். நான் கொடுத்த தேநீரைக் குடித்துவிட்டு சீரஸ் கிளம்பிய பின்னர், கதாநாயகியின் குளியலையும் , கதாநாயகன் அவளை துவட்டிவிட்டு காதல் செய்வதையும் பார்த்துவிட்டு தூங்கிப்போனேன்.

டிண்டோ பிராஸின் கதாநாயகியுடன் சல்லாபிப்பவனாக , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 20 பந்துகளில் சதமடித்து வெற்றி வாய்ப்பை வாங்கித்தரும் ஆட்டக்காரனாக , 10 ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வு எழுதுபவனாக, காடுகளில் பதுங்கி கொரில்லா போர் செய்பவனாக, பிக்சர் இன் பிக்சர் தொலைக்காட்சிக் காட்சியில் காட்சிகள் தனித்தனி சன்னல்களில் வருவதைப்போல ஒரே சமயத்தில் பல இடங்களில் நான் இருப்பதாக கனவு வந்தது. அனைத்திலும் நான் வெற்றியாளனாகவே இருந்ததால் அந்தக் கனவு எனது தூக்கத்தைக் கலைக்கவில்லை. மனிதன் நிகழ்வில் சோதனைகளாக செய்து பார்ப்பவைகளை கனவுகளில் மட்டுமே வாழ்ந்து பார்க்க முடியும்.

அன்றாடப்பாடங்கள், அவ்வப்பொழுது வைன் என வழமையாக கழிந்து கொண்டிருந்த பல மாலைப்பொழுதுகளுள் ஒன்றில், சீரஸ் முகத்தில் கலவர ரேகைகளுடன் வந்து ஐநூறு க்ரோனர்கள் கேட்டார். என்னிடம் இருந்த போதிலும் வேண்டும் என்றே இல்லை என்றுச் சொல்லிவிட்டேன். ராஜுவிடம்
கேட்டு வாங்கிவிட்டுச் சென்ற சீரஸ் எங்குப்போகிறார் என சன்னலின் வழியாகக் கவனித்தேன். தூரத்தில் ஒரு தாடிக்கார சுவிடீஷ் ஆளிடம் அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு ஏதோ வாங்கி திரும்பிக்கொண்டிருந்தார். எங்கள் வீட்டைக் கடக்கும்பொழுது அவரின் கையில் என்ன இருக்கின்றது என்பதை உன்னிப்பாக கவனித்தேன். ஒரு பொட்டலம், ஊசிப்போட்டுக்கொள்ளும் சிரிஞ்சுகள் மற்றும் சில சிறிய மருந்து பாட்டில்கள்.

“ராஜு, சீரஸ் இனிமேல் வந்தா காசு கொடுக்க வேண்டாம், இவன் போதை ஊசி போடுறவன்”

ராஜுவுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. “மொடாக்குடியன்னு தான் நினைச்சேன், போதைப் பார்ட்டியா,,, இனிமேல ரூமில சேர்க்கவேண்டாம்”

மறுநாள் எங்கள் தெருவில் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியுடன் காவல் துறை வண்டியும் நின்று கொண்டிருந்தது. சீரஸை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தனர். “என்னுடைய ஆழ்மனச் சோதனையை தடுக்கின்றீர்கள், அவைப் போதை மருந்துகள் அல்ல, என் ஆத்மாவை உடலைவிட்டு பிரிக்கும் மருந்துப்பொருட்கள், கடவுளையும் மனிதனையும் ஒன்றாக்கப்போகின்ற விசயத்தைத் தடுத்துவிட்டீர்கள் பாவிகளா” என சுவிடீஷில் சிலப்பல கெட்ட வார்த்தைகளையும் சேர்த்து கத்திக் கொண்டிருந்தார்.

கார்ல்ஸ்க்ரோனா நகரத்தில் வந்திருந்த அவரின் பெற்றோர் கவலைத் தோய்ந்த முகத்துடன் ஆம்புலன்ஸ் நகரந்த பின்னர் அவர்கள் காரில் ஏறிக்கொள்ள, எனக்கும் ராஜுவுக்கும் பாவமாக இருந்தது. அவருக்கு 500 க்ரோனர் கொடுத்ததனால் குற்ற உணர்ச்சியும் சேர்ந்து இருந்தது.

ஒரு வாரத்திற்குப்பின்னர் கார்ல்ஸ்க்ரோனா மைய மருத்துவமனை, கல்லூரிக்குச் சென்றுவிட்டு ரயிலுக்க்காகக் காத்திருக்கையில் சீரஸின் தந்தையும் அங்கு நிற்பதைக் கவனித்தேன். அவருக்கு என்னைத் தெரியவில்லை என்றாலும் என்னுடைய உடைந்த சுவிடீஷில் சீரஸைப்பற்றி நலம் விசாரித்தேன். சீரஸ் இன்னும் மருத்துவமனையில்தான் இருப்பதாகவும், அதீத குடிப்பழக்கம் போதைப்பழக்கத்தினால் மனநிலை பிறழ்ந்துவிட்டதனால் ஆறு மாதத்திற்கு மருத்துவமனையில்தான் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர் எனத் தெரிவித்தார்.

ரயிலில் வரும்பொழுது சீரஸுக்காக கொஞ்சம் அனுதாபப்பட்டு வேறுஒரு கைப்புள்ளையைத் தேடவேண்டுமே என யோசித்து முடிப்பதற்குள் ரோன்னிபி நகரம் வந்துவிட்டது. ராஜு கல்லூரியில் இருந்து இன்றைக்கு சீக்கிரம் வந்துவிட்டார்போலும், கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் மேசையில் குவாண்டம் பிசிக்ஸ் புத்தகம் இருப்பதைக் கவனித்தேன்.

“கார்த்தி, சீரஸ் வந்து இருந்தான், 500 க்ரோனர் திரும்பக்கொடுத்துட்டுப்போனான்”

“வாட்? சீரியஸா சொல்லுறீங்களா”

“ஆமாம் கார்த்தி, இதோ இந்த புக் அவனோடதுதான் ஒரு ரெண்டு மணி நேரம் இருந்தான், டபுள் சிலிட் எக்ஸ்பெரிமெண்ட், டுவாலிட்டி , டுயுவல் பிரசன்ஸ் பத்தி எல்லாம் பேசிட்டு இருந்தான், இன்னக்கி ரொம்ப இண்டரஸ்டிங் ஆ இருந்துச்சு, யாரோ பிரண்டை பார்த்துட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில வர்றேன்னு சொன்னான்”

வீட்டிற்கு வெளியே இருக்கும் மைனஸ் 15 டிகிரி குளிர் வீட்டிற்குள்ளும் பரவுவது போல ஒரு உணர்வு,

“ஹே மாஸ்டர்” என்ற சீரஸின் முகமும், அவர் தன் கையில் கொண்டு வந்திருந்த ஊசியை ராஜுவின் கையில் செலுத்துவதும் அதிர்ச்சியில் உறைந்து கொண்டிருந்த என் கண்களில் மங்கலாகத் தெரிந்து கரைந்ந்து கொண்டிருந்தன.


Tuesday, March 09, 2010

கம்பன் நகர், இரண்டாவது தெரு - சிறுகதை

பயணதிசைக்கு எதிர் திசையில் ஓடும் மரங்களைப் போல, மனமும் சில வருடங்களுக்கு பின் சென்று முந்தைய அம்முவின் இருப்பை அசைபோட்டு
நிகழ்காலத்துக்கு அவ்வப்பொழுது திரும்பிக்கொண்டிருந்தது. மோகன் காரை வேகமாக கிழக்கு கடற்கரைச்சாலையில் செலுத்திக் கொண்டிருந்தார். சுவீடன்
சாலைகளில் இதைவிட வேகமாகப் பயணப்பட்டுப் பழகி இருந்தாலும், எதிர்திசையில் அசூர வேகத்தில் வரும் வாகனங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் என் சீட் பெல்ட்டை சரிபார்த்துக் கொண்டேன். சாவின் மேல் பயம் என்பதற்காக இல்லை. அம்முவை பார்க்கும் முன் செத்துப் போய்விடக்கூடாது என்பதனால் !!

"ஆடியோ பிளேயர்ல ஏதாவது பாட்டை நீயேப்போடு" மோகன் சாலையில் கவனம் வைத்தபடியே என் கவனத்தை இயல்புக்கு கொண்டுவந்தார்.

சிரித்துக்கொண்டே, அங்கு கிடந்த இளையராஜாப் பாடல்களின் தொகுப்புகளில் சிலவற்றைப் பார்த்தேன்.

"நானே ஏதாவது பாட்டைப் போட்டால், நீ எமோஷனலா டிஸ்டர்ப் ஆயிட்டேன்னு ஒரு கதை எழுதி என்னை காமெடியனா ஆக்கிடுவே, எதுக்குப்பா பிரச்சினை"

இதற்கும் நான் ஏதும் பதில் சொல்லாமல், சிரித்துக் கொண்டே உல்லாசப்பறவைகள் படத்தில் இருந்து ஜெர்மனியில் செந்தேன் மலரே பாடலை பாட வைத்துவிட்டு , மோகனைப் பார்த்து "இன்றைக்கு முழுவதும் அம்முவின் விருப்பப்பாடல்கள்தான்"

நான் சுவீடன் வரும் முன், ஜெர்மனி என்பதை சுவீடன் என மாற்றி அம்மு அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். அவளுடன் சேர்ந்துப் பாடிப் பாடியே எனக்கும் ஜெர்மனி என்பது போய் சுவீடன் எனவே வந்தது.


தூரத்தில் கடல் தெரிந்தது. அம்மு பிரிந்த அன்று ஆர்ப்பாட்டமில்லாத பால்டிக் கடலில் குதித்து இருந்தால்,பனி சமாதி ஆகி சில வருடங்கள் ஓடியிருக்கும். வெகுசில சமயங்களில் தான் வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்படுவது போல உணர்வு வரும் !! அம்மு என்னை அந்த நிலைக்கு தள்ளினாள். காதல் போயின் இன்னொரு காதல் , அது கிடைக்கும் வரை காமம் என ஊருக்கு உபதேசம் சொன்ன நான், என் காதல் சாம்ராஜ்யத்தின் நாயகி, வேறு ஒரு சிற்றரசனுக்கு சொந்தமாகப்போகிறாள் என்றதும் காதல் போயின் சாதல் என்பதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.

"என்ன கார்த்தி,பிளாஷ்பேக்கா!!"

"ஆமா மோகன்!!! அவளைப்பத்தி யோசிச்சு யோசிச்சு எனது ஆத்திரங்களை அதிகப்படுத்திக்கிட்டு இருக்கேன், நேரிலப் பார்க்கிறப்ப திட்டித் தீர்க்கனும். அவள்
ஒரு துரோகி எனத் திட்டனும்"

நான் சொன்னதை மோகன் காதில் வாங்கிக் கொள்ளாதது போல,

"கம்பன் நகர் செகண்ட் ஸ்ட்ரீட் தானே !!

"யெஸ் மோகன், அலெக்ஸ் இந்திராகாந்தி சிலைக்கிட்ட வெயிட் பண்ணுவாரு, எனக்கு வழித் தெரியும்,இருந்தாலும் அலெக்ஸையும் வரச்சொல்லி இருக்கேன்"

மோகனுக்கு நான் அம்முவைத் திரும்ப பார்க்கிறதில் சுத்தமாக விருப்பமே இல்லை. அவரைப் பொருத்தவரை எங்கிருந்தாலும் வாழ்க கொள்கைதான். இழந்ததை வைத்து அழுவதை விட, இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சிலக் காதல்கள் நெட் பிராக்டிஸ் மாதிரி, அவை நிஜமான ஆட்டத்திற்கு தயார்படுத்தும் பயிற்சிகள். சிலப்பலக் காதல்கள் தவறி, கடைசியில் வெற்றிகரமாக காதல் திருமணம் செய்து கொண்டவர், குழந்தைகளுக்கு முன்னாள் காதலிகளின் பெயர்களை வைக்கவில்லை. அம்முவைப் பற்றி யோசிக்கும் தருணத்தில் மோகனைப் பற்றிய விவரணை எதற்கு !!!

இதே கடற்கரைச்சாலை, அன்றொரு நாள், பாண்டிச்சேரி செல்லும் விரைவுப் பேருந்தில் என் தோளில் சாய்ந்தபடியே அம்மு என்னிடம் கேட்டாள்.

"ஏண்டா, நான் அவ்வளவு அழகாவா இருக்கேன் !!"

"ஆமாண்டா, குட்டிம்மா.. அவ்வளவு அழகு நீ" அவளின் கைவிரல்களை நீவிய படி.

"அதோ, அந்த மூனாவது சீட்ல மஞ்சள் சுடிதார்ல ஒரு பொண்ணு இருக்காளே, அவளை விடவா நான் அழகா இருக்கேன்".

மறைந்த நடிகை திவ்யபாரதியின் சாயலில் ஒரு பெண் அமர்ந்து இருந்தாள். சில நொடிகள் அவளைப் பார்த்த பின் அம்முவின் கண்களை உற்று நோக்கி

"அம்மு, நிச்சயமா நீ அவளை விட அழகு தான்"

"நீ பொய் சொல்றே!! சுவீடன் போறமுன்ன நான் கவலைப்படக்கூடாதுன்னு தானே, இப்படி சொல்றே !!"

"இல்லைடா, அந்த பொண்ணு எங்க அம்மா மாதிரி இல்லை, நீ எங்கம்மா மாதிரி இருக்கே !! அதனால நீ தான் அழகு "

ஓட்டுனர் பேருந்தை சடாரென நிறுத்த, அந்த சந்தர்ப்பத்தில் என் கன்னத்தில் முத்தமிட்டு "தாங்ஸ்" என்றாள்.

"கார்த்தி " என ஆண்குரல் கேட்க, நிகழ்காலத்துக்கு வந்தேன்.

"கார்த்தி நீ கண்டிப்பாக கீர்த்தனாவைப் பார்க்கனுமா, நீ இண்டியால இருக்கப்போற இந்த பத்து நாட்களை வீட்டோட இருக்கலாம்லே.. அனாவசியமா ஒரு சலசலப்பு எதற்கு, உன்னை அவள் மறந்துகூடப் போயிருக்கலாம் !! "

"எனக்கு அந்த சலசலப்புதான் வேண்டும் மோகன், ஒரு வேளை அவள் என்னை மறந்து சந்தோசமா இருந்தால், நான் அவள் வாழ்க்கையில் இருந்தேன்னு அவளுக்கு ஞாபகப்படுத்தி சஞ்சலப்படுத்தனும், ஒரு வேளை அப்படி இல்லாமல் சராசரி வாழ்க்கையில் இருந்தால், என்னை அப்பா அம்மாவுக்காக
நிராகரிச்சோமேன்னு வலிக்கனும், இந்த சலசலப்பு, சஞ்சலம் , வலி எல்லாம் அவளுக்கு மட்டுமில்ல, அவங்க அப்பா அம்மாவுக்கும் தான்"

"நீ படிச்ச படிப்புக்கும், இப்போ நீ இருக்கிற லெவலுக்கும் , இப்படி யோசிக்கிறது ரொம்ப அல்பமா இருக்கு!!"

"நான் இத்தனை ஜெயிச்சதும், அத்தனை வலியையும் பொருத்துக்கிட்டு படிச்சதும் இந்த ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தான், நான் ஒரு தோல்வியடைஞ்சவனா அவளைப் பார்க்கக்கூடாதுன்னு மட்டும் உறுதியா இருந்தேன், அப்படி தோத்துப்போகனும்னா பால்டிக் கடல்ல குதிச்சிருப்பேனே!!, என்னை அவ்வளவு சீக்கிரம் எலிமினேட் பண்ண முடியாதுன்னு அவளுக்கு காட்டனும், இனி எப்பொவெல்லாம் இண்டியா வரேனோ, அப்பொவெல்லாம் அவளைப் போய் பார்ப்பேன், அவளுக்கும் வலிக்கனும் "

மோகன் அதன் பின் எதுவும் பேசவில்லை. எனக்கும் தொடர்ந்து பேச விருப்பம் இல்லை. அம்முவின் மேல் இருக்கும் ஆத்திரத்தை நான் மோகனிடம் பேசுவதினால் நீர்த்துப் போய்விடுமோ என்ற பயம் வந்தது. அலெக்ஸிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை, அவரிடம் மரக்காணத்தைக் கடந்துவிட்டதாக சொல்லி வைத்தேன்.

அம்முவுடம் பயணப்பட்ட அன்றும் இதேபோல் அலெக்ஸிடம் இருந்து அழைப்பு வந்தது.

"யாருடா, அலெக்ஸா !! நான் உன்கூட இருக்கேன்னு அவரிடம் சொல்லலத்தானே !!"

"நம்ம ஆபிஸ்ல , நான் உன் கூட பேசிட்டு இருக்கேங்கிறதே யாருக்கும் தெரியாது, நம்ம கல்யாணத்துல சொல்லிக்கலாம்"

"கார்த்தி, அலெக்ஸ் பேரை இங்கிலீஷ்ல எழுதுறப்ப ஏ வை எடுத்துட்டு பி,சி, டி இசட் வரைக்கும் போட்டு படிப்போமா!!"

"அலெக்ஸ், பிலெக்ஸ்,சிலெக்ஸ்,டிலெக்ஸ்,எலெக்ஸ்,ஃபெலக்ஸ்......க்யூலெக்ஸ்..எக்ஸ்லெக்ஸ்,வொய்லெக்ஸ்,இசட்லெக்ஸ்" என நான் முழுமையாகச் சொல்லி முடிக்க பேருந்தே திரும்பிப்பார்க்கும்படி சிரித்தாள்.

இந்த மாதிரி எங்களது சங்கீத ஸ்வர இரவுகளில் ஒவ்வொருத்தர் பெயரையும் எழுத்தை மாற்றிப்போட்டு வாசிச்சு சிரிப்போம்.

"அம்மு, உங்க வீட்டுக்கு எப்படி வரது. வழிச் சொல்லு"

"அடேய், வீட்டுக்கு எல்லாம் வந்துடாதே, எங்க அப்பா எங்க வீட்டுக்கு எதிர்த்தாப்புல இருக்கிற அம்மன் கோவிலுக்கு என்னை பலி கொடுத்துடுவாரு"

"வீட்டுக்குள்ள வரமாட்டேன், சும்மா அலைபாயுதே படத்துல மாதவன் வந்து வீட்டை ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு போற மாதிரி, அலெக்ஸோட வரேன்"

"அலெக்ஸா, டேய் வேண்டாம்டா,"

"ச்சேசே அவரு ஒரு ஜெண்டில்மேன், நீ பயப்படாதே!!, அவரு எதுவும் கேட்கமாட்டார், கேட்டாலும் நான் சமாளிச்சிடுவேன்".

"எங்கத் தெருவில எங்க வீடுதான் கடைசி, நாங்க மாடில இருக்கோம். எதிர்த்தாப்புல நான் உனக்காக வேண்டிக்கிற அம்மன் கோயில், நீ எங்க தெருப்பக்கம் வரப்ப எனக்கு ஒரு குட்டி மிஸ்ட் கால் கொடு, முடிஞ்சா நான் வந்து எட்டிப்பார்க்கிறேன்".

காலம் கடந்த நினைவிலும், கடக்கப்போகும் நிகழ்விலும் ஒரு சேர இந்திரா காந்திசிலை நிறுத்தம் வர, அங்கு அம்மு பேருந்தை விட்டு இறங்கிக் கொள்ள ,
இங்கு அலெக்ஸ் காரினுள் ஏறிக்கொண்டார்.

அலெக்ஸும் மோகனைப்போலவே எனக்கு வாய்த்த சில அரிய நண்பர்களில் ஒருவர். அலெக்ஸின் பண உதவிகள் இல்லாமல் எனது மேற்படிப்பையும்
ஆராய்ச்சிப்படிப்பையும் என்னால் முடித்திருக்க முடியாது. அவற்றை எல்லாம் வட்டியின்றி போன வாரம் தான் திருப்பிக் கொடுத்தேன்.

இந்திராகாந்தி சிலையில் இருந்து எப்படி அவளின் வீட்டிற்கு வரவேண்டும் என அம்மு சொன்னது அப்படியே பசுமையாக மனதில் வர, மோகனுக்கு சரியாக வழி
சொன்னதைக் கேட்ட அலெக்ஸ்

"கார்த்தி,எனக்கு அன்னக்கி சொன்ன மாதிரியே வழிச் சொல்ற, அப்போ உன்னை இந்த தெருவுக்கு கூட்டி வந்த பிறகு இப்போதான் வரேன்"

எல்.ஆர்.ஈசுவரி அம்மனின்மேல் இருக்கும் பக்தியை ஸ்பீக்கரில் பரப்பிக்கொண்டிருந்தார்கள். மரத்தடி அம்மன் இப்பொழுது கோபுரங்களுடன் கூடிய கோவில் அம்மனாக எழுந்தருளியிருக்கிறார். அம்முவின் வீட்டிற்கு சில அடிகள் முன்னர் காரை நிறுத்தி என்ன செய்யலாம் என மோகன் என்னைக் கேட்டார். அவளுடன் பழகிய அத்தனைக் கணங்களும் சுருங்கி அணுவை விட அளவுக்குறைவான ஒரு புள்ளியில் இணைந்தால் எப்படி இருக்குமோ அப்படி என் மனது இருந்தது. அப்பொழுது அவள் அந்த கோவிலில் இருந்து அவளின் வீட்டை நோக்கி நடந்துப் போனாள். கூடவே அவளின் அம்மா, அப்பா, கைத்தாங்கலாய் ஒருவன், ஒருவன் இல்லை, ஒருவர், என் நாட்டு இளவரசிக்கான ராஜகுமாரன்.அவர்கள் அனைவரும் பூவைப்போல அவளைத் தாங்கி அழைத்துச் சென்றுக்கொண்டிருந்தனர். நிறைமாதக் கர்ப்பிணிக் கோலத்தில் பூரிப்பாக இருந்தாள். அவள் என் அம்முவாகத் தெரியவில்லை. என் கடைசித் தம்பி பிறந்த போது என் அம்மா எப்படி இருந்தார்களோ அப்படியே இருந்தாள். உண்மையில் அவளில் என் அம்மாவைப் பார்த்தேன். என் ஆத்திரம், ஆதங்கம், வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம், தோற்கடிக்கப்பட்டோம் என்ற எரிச்சல் எல்லாம் சுவடில்லாமல் மனதில் இருந்து கரைந்தது. அவள் வீட்டை அடைந்து மாடிப்படிகளில் ஏறும் வரை அவளைப் பார்த்தபின் கண்களில் பூத்திருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். நான் சொல்லும் முன்னரே மோகன் காரை பின்பக்கமாக திருப்பலானார்.

என் அனுமதியின்றியே மோகன் இளையராஜாப்பாடல்களைப் ஒலிக்க வைத்தார். முதன் முறையாக தனித்து இருத்தலில் அம்முவின் நினைவுகள் ஆறுதலைக்
கொடுப்பது போல இருந்தது. கம்பன் நகர் இரண்டாவது தெரு அந்த வழிகாட்டும் பலகையைப் பார்த்தேன். இதுவே கடைசி முறையாக இருக்கும் அதைப் பார்ப்பது.