I am Single, தனித்து இருக்கின்றேன் அவளின்
நினைவுகளோடு.

'It is easy to understand why a person is bad – the reasons are obvious. But it is very difficult to understand why a person is good. There seems to be no reason at all for being good. Good simply is' --- She was Good to me


Sunday, September 21, 2008

கீர்த்தனா சிறுகதையும் , Real கீர்த்தனாவின் மாற்று முடிவும்

திரைப்படங்களில் சோக முடிவுகள் , ரசிகர்களால் ஜீரணிக்க இயலாத முடிவுகள் இருக்கும் படங்கள் வெளியான பின் புதிய முடிவை இணைத்து திரையிடலைத் தொடருவார்கள். உதாரணமாக முகவரி,கிரீடம் திரைப்படங்களில் அஜீத் இறுதியில் தனது லட்சியத்தில் வெற்றி பெற்று இருப்பதாக முடிவை மாற்றி இருப்பார்கள். காக்க காக்க திரைப்படத்தின் குறுந்தகடு வடிவில் ஜோதிகா உயிரோடு இருப்பது போல இறுதிக் காட்சியையும் இணைத்திருப்பார்கள். முடிவு எதுவாக இருந்தாலும் பின்னாளில் முடிவை மாற்றுவது எனக்கு ஏற்பு உடையது அல்ல.

சில காலங்களுக்கு முன்னால் கதையின் முடிவை மாற்றச்சொல்லி யாரேனும் கேட்டிருந்தால், முடிவை ஏன் மாற்றமாட்டேன் என பெரிய விளக்கமெல்லாம் கொடுப்பேன். ஆனால் . இப்பொழுது என்னுடைய சென்றக் கதையின் முடிவை மாற்றச்சொல்லிக் கேட்பது கீர்த்தனா. என் வாழ்வில் இந்தக் காலக்கட்டத்தில் என் வாழ்வில் மிகப்பெரும்பங்கு வகிக்கும் கீர்த்தனா கேட்கும்பொழுது மறுக்க தோணவில்லை.

தசாவதாரம் படத்தில் பஞ்சாபி கமலஹாசன் சொல்லுவார்,அருகில் அமர்ந்திருக்கும் தன் மனைவியைப் பார்த்து ”பாட்டுதான் என் உயிர்னு சொல்லுவேன், இவளைப்பார்க்காமல் இருந்திருந்தால்” எனச்சொல்லிவிட்டு “பாட்டு என் உயிர் இல்லை டாக்டர், அது என் தொழில்..இவதான், என் பேமிலி ஜிந்தஹி, என் லைஃப்” என தொடர்வார்.

இதோ அவள் பரிந்துரைத்த முடிவுடன் முழுக்கதையும் கீழே..
-----
பிடித்தமான விசயங்கள் கிடைத்தவுடன் அதன்மேல் இருக்கும் சுவாரசியத்தைக் குறைத்துக்கொள்ளும் மனோபாவத்துடனேயே இருந்து வந்த என்னை நேசிப்பின் சுவாரசியத்தை , விருப்பப்பட்ட விசயம் கிடைத்தபின்னரும் உணரச்செய்தவள் கீர்த்தனா. பொதுவாக நான் நேசிக்க விரும்பும் பெண்கள் என்னை நேசிக்க ஆரம்பித்தவுடன், அவர்களுக்கான நேசம் முந்தையநாளைவிட மறுநாள் குறைவாகவே இருக்கும்படியே அமைந்துவிடும். அது முன்பு ஜெனியாக இருக்கட்டும், ஜெனியை விட என் மேல் அதிக மரியாதை வைத்திருந்த ரம்யாவாகட்டும். ஆனால் கீர்த்தனா எல்லாவற்றிற்கும் விதிவிலக்காக என் வாழ்வில் வந்திருக்கிறாள். எனக்காக கடவுள் இந்த உலகிற்கு அனுப்பிவைத்த தேவதை. தேவதையின் அருகாமை கடவுளின் இருப்பை உறுதிப்படுத்துகிறது. என் தேவதை கீர்த்தனா என் வாழ்க்கையில் வந்து ஆறு மாதங்களாகிறது.

ஒரு காதல் தோல்வி என்றாலே , திருமணம் வேண்டாம் என மனம் முடிவு செய்யும். எனக்கோ ஒன்றுக்கு இரண்டாக தோல்வி.இந்த தோல்வி இரண்டுக்கும் என் ”I loose interest quickly on things that I love very much ” என்பதே காரணமாக இருந்தாலும் வாழ்க்கையில் இன்னொரு முறை எந்தப்பொண்ணுக்கும் இடம் கொடுக்கக்க்கூடாது என தீர்க்கமான முடிவில் இருந்தபொழுது , என் அம்மாவின் வற்புறுத்தலால் ,கீர்த்தனாவை பெண்பார்க்கப்போனேன். அவளைப்பார்த்த கணம், என்னுடைய முன்முடிவுகள் அனைத்தையும் தூக்கி ஓரவைத்துவிட்டு அம்மாவிடம் சம்மதத்தை சின்ன புன்னகையால் சொல்லிவிட்டேன்.

அடுத்த மாதமே,ஜெனி,ரம்யா உட்பட எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுத்து, கல்யாணம் சிறப்பாகவே முடிந்தது. வாழ்க்கையின் பூரணத்துவத்தை உணரத்தொடங்கும் காலக்கட்டத்தில் தான் விதி விளையாடும். விதி வெள்ளை எழுத்தால் வெள்ளைத்தாளில் எழுதப்படுவது என கீர்த்தனா அடிக்கடி சொல்லுவாள்.

திருமணம் முடிந்த மூன்றாம் நாள் , கீர்த்தனா எனக்களித்த முதற்பரிசான தலைக்கவசத்தை வீட்டில் மறந்து வைத்து விட்டுபோன என்னால் விதியின் வெள்ளெழுத்துக்களை படிக்க முடிந்தபோது நடுரோட்டில் போட்டிருந்த பூசணிசிதறலில் வண்டி தடுமாறி தலை எங்கோ போய் முட்டியது.

“என்னடா, சேனல் மாத்தனுமா? “ கீர்த்தனா கேட்டுக்கொண்டே வந்து என் படுக்கையின் அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தாள். கடந்த 4 மாதங்களாக படுத்தப்படுக்கையாக , கைகால்கள் செயலற்று, வாய் பேசும் திறனையும் இழந்து, உயிர் இருந்தும் இல்லாமல் இருக்கும் என்னருகில் இருந்து கவனித்துக்கொண்ட இந்தப் பெண்ணை கடவுள் அனுப்பி வைத்த தேவதை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது சொல்லுங்கள்.

கீர்த்தனாவின் அப்பா வாசுதேவன் வந்திருப்பதை ,அவர் என் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு உணர்ந்தேன். ”நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு “ பாட்டு ராஜ் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க

“கீர்த்தனா, உன் அப்பா வந்திருக்கிறார், வாம்மா” என என் அம்மா வந்து கூப்பிட்டபிறகே போனாள்.

வாசுதேவன் இந்த வாரத்தில் வருவது மூன்றாவது தடவை. அவருக்கு கீர்த்தனாவை தன் வீட்டுக்குகூட்டிப் போய் விடுவதாக அம்மா அப்பாவிடம் கேட்டிருந்தார். என் அம்மா அப்பாவும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.

“நீ வாழ வேண்டிய பொண்ணும்மா, நாங்க கார்த்தியைப் பார்த்துக்குறோம்”

”இல்லை அத்தை, நான் போக மாட்டேன்”

“கீர்த்தனா, வீம்பு பன்ணாதே, இது வாழ்க்கை, உன்னைத் தியாகி ஆக்க நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்க்கல?”

“அப்பா, தியாகம் பண்றேன்னு நினைப்பிலேயோ , கடமைக்காகவோ நான் இங்கே இல்லை.. கார்த்தியோட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் என்னோட பாக்கியம்..என்னோட லைஃபோட பர்ப்பஸ் இது தான்... கார்த்தியை எனக்கு ஆறு மாசமாத்தான் தெரியும், ஆனால் இந்த ரிலேஷன்சிப்போட இண்டன்ஸிட்டி ஜாஸ்திப்பா.. இன்னொரு முறை இப்படி கேட்டுட்டு இந்த வீட்டுப்பக்கம் வராதீங்க”

கீர்த்தனா தன் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டபொழுது இந்த நொடியோ என் உயிரை விட்டுவிட வேண்டும் என நினைத்தேன். பயனில்லாமல் படுக்கையில் இருப்பதனால் எத்தனை பேருக்கு சங்கடம். ஆனால், நான் போய்விட்டால் கீர்த்தனா மகிழ்ச்சியாகவா இருப்பாள்? இல்லையே... காய்கறி போல அசைவன்றி இருந்தாலும், நான் இருக்கிறேன் என்பது மட்டுமே கீர்த்தனாவை இயங்கச் செய்கிறது. நான் செத்துப்போய்விட்டால் நான் என் துன்பங்களில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ளலாம்.. ஆனால் காலம் முழுவதும் கீர்த்தனாவை தவிக்க விட்டு அல்லவா போய்விடுவேன். கீர்த்தனாவின் உன்னதம் என் இருப்பில் தான் இந்த உலகத்திற்கு புரியும். நான் சாகமாட்டேன். கீர்த்தனாவின் அன்பு என்னை எழவைக்கும்.

கண்களைத் துடைத்துக்கொண்டே கீர்த்தனா என்னருகில் வந்து “நீ என்னோட இருப்பதுதாண்டா என் வாழ்க்கையின் அர்த்தம், எப்போதும் உன்னைவிட்டு போகமாட்டேண்டா ” சொல்லியபடி என் நெற்றியில் வாஞ்சையாக முத்தமிட்டபோது அடுத்த ஜென்மத்தில் நான் இவளுக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும் எனக் கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். தொலைக்காட்சியில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமலஹாசன் தன் அரவணைப்பான கவனிப்பால் சுயநினைவற்று இருக்கும் கதாபாத்திரம் நலமாகும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.

--------------

4 பின்னூட்டங்கள்/Comments:

said...

me the firstu :) kathalum, kathaiyum azhagu

said...

aaayiram thhaan sollunga positive endinga thaanga fillinga irukku...nice write up

said...

தம்பி இது கற்பனையல்ல... உண்மைதாம்பானு பதில் மெயில் வருமுனு காத்திருந்தவனுக்கு கதையின் முடிவையே...மாத்தி எழுதிற அளவுக்கு உண்மைடானு சாட்சியோட செய்தி அனுப்புறீங்க... வாழ்க... உங்க அன்பும்...நட்பும்... காதலும்...

said...

அழகான இயல்பான முடிவு....பிடித்தவர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு கதையின் முடிவை மாற்றியதிலிருந்து தெரிகிறது.....
தொடரட்டும் அன்பு....
அன்புடன் அருணா