Thursday, August 30, 2007

அம்முவாகிய நான் - திரைப்பட பார்வை

இதுவரை பெரும்பாலும் துணைக்கதைகளாகவே கையாளப்பட்டுள்ள, "கரணம் தப்பினால் மரணம்" வகையிலான வில்லங்கமான ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்டு "அம்முவாகிய நான்" திரைப்படத்தை இயக்கி உள்ள இயக்குனர் திரு.பத்மா மகனை நிச்சயம் பாராட்டலாம்.




"அழகி" படத்தில் நடுத்தட்டு தமிழ் குடும்பத்து ஆண்மகனை திரையில் பிரதிபலித்த பார்த்திபன் இப்படத்தில் எழுத்தாளனுக்கே உரிய மிடுக்கு, கண்ணியம் . எள்ளல், சமூக அக்கறை , உணர்ச்சி வசப்படுதல் என அனைத்து பரிமாணங்களையும் காட்டி தூள் பண்ணி
இருக்கிறார். இயற்பிலேயே பார்த்திபன் "எழுத்தாளனாக" இருப்பதால் கௌரிசங்கர் கதாபாத்திரத்திற்கு தேவையான குணாதிசயங்கள் பார்த்திபனை மனதில் வைத்துத்தான் உருவாக்கப்பட்டதோ என மனதில் எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

படத்தில் மொத்தம் இருக்கும் கதாபாத்திரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு முறை "ரீவைண்ட்" பண்ணி பார்த்தால் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் ஒரு காட்சியாவது மனதில் நிற்கும் படி இயக்குனர் அமைத்துள்ளார்.




"தங்கச்சின்னு கூப்பிட்டா தப்பாயிடும், நீ நல்லா இரு" என சொல்லும் அபிஷேக் ஆகட்டும், டாக்டரிடம் போய்விட்டு கண்கலங்கி பேசும் "விஜியக்கா" ராஜஸ்ரீ ஆகட்டும் துணைகதாபாத்திரங்கள், சாதனா, ராகசுதா, தென்னவன், பிதாமகன் மகாதேவன்,சாந்தி வில்லியம்ஸ் உட்பட அனைவரும் பாத்திரமறிந்து அளவாக நடித்து இருக்கிறார்கள்.




பாத்திர படைப்புகளும் கதையின் போக்குடனேயே இருப்பது இயக்குனர் ஒரு நல்ல திரைக்க(வி)தை ஆசிரியர் என நிருபிப்பதாக உள்ளது.

"கடவுள் சொன்னாரா? "
"இல்லை கடவுள்கிட்ட நான் சொன்னேன்"

இதுபோல நான் ரசித்த இன்னொரு வசனம்
அம்முவாகிய நாவலை அறிமுகப்படுத்தும் காட்சியில் வரும் வசனம், "

இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஆம், வாழ்க்கை வார்த்தைகளாய்"

குழந்தையை ராணிமடத்தின் தலைவி சாதனாவிடம் கொடுக்கும் காட்சியை பின்னனியாகக் கொண்டு, முன்னே காய்கறி பேரபேசும் வியாபாரக் காட்சி, "இன்னக்கி உனக்கு ஃப்ர்ஸ்ட் நைட்" என சொல்லி கதாநாயகியை பார்த்திபன் தூங்க வைக்கும் காட்சி என நிறைய காட்சிகள் உண்மையிலேயே விஷுவல் டிரீட்.

முதல் முறையாக படம் பார்க்கும் பொழுதுதான் பாடல்களைக் கேட்டாலும், திரையரங்கத்தை விட்டு வெளியே வந்த பின்னும் "உன்னைச் சரணடைந்தேன்" "தோரணம் ஆயிரம்" பாடல்கள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. சபேஷ்-முரளி பாடல் இசை மட்டுமின்றி, பின்னனி இசையிலும் சிறப்பாக உழைத்து இருப்பது
கண்கூடாகத் தெரிகிறது.பழனிபாரதியின் பாடல் வரிகளும் அருமை. படத்தில் இயக்குனரின் கண்களாக ஒளிப்பதிவு உள்ளது என்றால் அது மிகையாகாது.



கதைக்கு தேவைப்படுவதினால் நெருக்கமான காட்சிகள் அதிகம், ஆனால் எதுவும் வரம்பு மீறவில்லை.

பாராட்டுக்கள் பத்மாமகன்.

படத்தைப்பற்றி கிட்டத்தட்ட அனைத்து விசயங்களையும் சொல்லியாகிவிட்டது. ஏதோ ஒன்று குறைகிறதே!! ஆமாம் ஆமாம் படத்தின் கதாநாயகி அம்முவைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என கேட்கலாம். "லைஃப் டைம் ரோல்" அப்படின்னு நடிகைகளுக்கு 30, 40 படங்களுக்கு பின்புதான் வரும், அம்முவாக வாழ்ந்து காட்டியுள்ள பாரதிக்கு முதற்படத்திலேயே அப்படிப்பட்ட கதாபாத்திரம். இந்தப்படம் திரைப்பட விழாக்களில் பங்கு
பெறும்பொழுது பாரதிக்கு "ஸ்டாண்டிங் ஒவேஷன்" நிச்சயம் கிடைக்கும்... திறமை அழகு ஒரு சேர அமைந்த பாரதிக்கு திரைஉலகில் பெரிய சகாப்தம் காத்திருக்கின்றது..

மொத்தத்தில் ஒரு "பிரீ பேய்ட் காதல் கதை" அம்முவாகிய நான்.

அம்முவிற்காக" இன்னொருமுறை கூட படம் பார்க்கலாம்.

Movie Review : Ammuvagiya Naan by www.vinaiooki.com

9 பின்னூட்டங்கள்/Comments:

said...

வாவ்,

என்ன அருமையா விமர்சனம் செய்துள்ளீர்கள்.. விமர்சனம் செய்யக் கூட ஒரு புது பார்முலாவை அறிமுகப் படுத்திருக்கீங்க.. இது என் எண்ணம்.

படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள். நன்றி!

// இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஆம், வாழ்க்கை வார்த்தைகளாய்" //

இது சூப்பர்.

படம வெற்றியடைய வாழ்த்துக்கள்!

said...

நன்றி சிவபாலன்

Anonymous said...

கண்டிப்பா பாத்துருவேன். எத்தனை சொதப்பல் படங்கள் பாத்திருக்கேன். நல்ல படம் வந்தா மிஸ் பண்ணுவேனா

said...

சுடச்சுட அருமையான விமர்சனம்

said...

aa

said...

நல்ல விமர்சனம் வினையூக்கி. படம் பார்க்கும் ஆவலை உங்கள் விமர்சனம் தூண்டுகிறது.

said...

appo padathai parklamnu solreenga

said...

அன்றைக்கு ஒரு தடவை பார்க்கலாம்னு சொன்னீங்க. இப்போ இன்னொரு தடவை பார்க்கலாம்னு சொல்றீங்க?

சரி, வேர்ட் ப்ரஸ் என்னாச்சு? பதிவை அங்கே காணவில்லை!!!

said...

நன்றி சின்ன அம்மிணி,லக்கிலுக்,முரளிக்கண்ணன்,முகம்மது,யோசிப்பவர்,கார்த்திக் பிரபு