Tuesday, April 09, 2013

ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை - நிறைவுப் பகுதி



Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி

முந்தையப் பகுதிகள்  - http://vinaiooki.blogspot.it/2013/04/1.html
----


அம்மா, அப்பா, அந்த மூன்று பேர் வயதான அனுபவ பெரிய மனிதர்கள்  போல பேசிக்கொண்டிருந்தனர். நெருப்பை எப்படிக் கட்டுக்குள் வைப்பது, பனித்துகள்களை புகைப்போக்கிகளில் இருந்து எப்படி நீக்குவது என்பதை அந்த ஆண்களிடம் அப்பா விளக்கினார். அம்மா உற்சாகமாக, அந்த இளம்பெண்ணிடம் சமைப்பதுப் பற்றியும், தையல் வேலைப்பாடுகளைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். லாஸ் அலமோஸில் எப்படி பெண்கள் உடையணிந்து இருப்பதைப் பற்றி அறிய அம்மா ஆர்வம் காட்டினார். அந்தப் புதிய மனிதர்கள், எங்களின் ஒவ்வொரு விசயத்திற்கும் வியப்பைக் காட்டி வானளவுப் புகழ்ந்தனர். அவர்கள் அடிக்கடி மூக்கை உறிஞ்சியதில், எங்கள் கூடு நாற்றமடிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால் அதைப் பற்றிஎல்லாம் அவர்கள் கேட்கவில்லை, தொடர்ந்து ஆச்சரியத்துடன் கேள்விகளாகக் கேட்டனர்.

உற்சாகமும் பேச்சும் கரைபுரண்டு ஓட, அப்பா, சில விசயங்களை செய்ய மறந்து விட்டார்.  வாளியில் இருந்த காற்று தீர்ந்துப் போய் இருந்தது. இன்னொரு வாளியை போர்வைகளை விலக்கி எடுத்தார். சிரிப்பும் கலகலப்பும் தொடர்ந்தது. புதியவர்கள் கொஞ்சம் கிறக்கமான நிலைக்குப் போயினர். அவர்கள் இவ்வளவு அதிகமான ஆக்சிஜனை சுவாசித்ததில்லை.

நான் எதுவுமே பேசவில்லை, தங்கை அம்மாவின் பின் ஒளிந்து கொண்டாள். யாராவது அவளைப் பார்த்தால், அம்மாவிடம் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.  எ அந்த இளம்பெண்ணைப் பார்க்கையில் எல்லாம். இனம்புரியா சங்கடம் இருந்தது. அவளுக்கான மென்மையான உணர்வுகள் இருந்தாலும், கொஞ்சம் வெட்கமும் பயமும் கூடவே வந்தன. அவள் என்னிடம் கனிவாகவே இருந்தாள்.

அவர்கள் சீக்கிரம் வெளியேப்போய்விடவேண்டும்,  மீண்டும் இந்தக்கூடு எங்களுடன் மட்டும் விடப்பட்டு, சகஜநிலைக்குத் திரும்பி, நாங்கள் இயல்பாக வேண்டும் என நினைத்தேன்.

அந்தப் புதியவர்கள், நாங்கள் லாஸ் அலமோஸ் போவதைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அவர்களாகவே அந்த உரிமையை எடுத்துக் கொண்டார்கள். அம்மாவும் அப்பாவும் அந்த உரிமை எடுத்தலைக் கவனித்தனர். அப்பா அமைதியானார்.

“அந்தப் புது ஊரில் எப்படி பழகுவது எனத் தெரியாதே, அந்த ஊருக்கான உடைகள் கூட இல்லையே~ அந்த இளம்பெண்ணிடம் அம்மா சொன்னார்.

புதியவர்களுக்குப் புதிராக இருந்தது. இருந்தாலும் புரிந்து கொண்டார்கள்.

“இந்தத் தனலை அப்படியே விட்டுவிட்டு வருவது சரியாக இருக்காது” அப்பா சொன்னார்.

--


அந்த வேற்று மனிதர்கள் போய்விட்டனர். ஆனால் திரும்பி வருவார்கள். அடுத்தது என்ன என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அந்த மனிதர்கள், எங்கள் கூட்டினை “நிலைத்திருத்தலின் பள்ளி” எனப் பெயர்வைத்தனர். நாங்கள் காங்கோவில், யுரேனிய சுரங்கங்களின் அருகே அமைக்கப்பட இருக்கும் புது குடியிருப்பிற்கு போகலாம்.

இப்பொழுது அந்தப் புதியவர்கள் போய்விட்டபடியால், லாஸ் அலமோஸ் குடியிருப்பைப் பற்றிய நினைவுகளில் என்னை உள்வாங்கிக் கொண்டேன். அந்த ஊரைப் பார்க்க வேண்டும் எனத் துடித்தேன்.

அப்பாவும் அவற்றை எல்லாம் பார்க்க விரும்புகின்றார். அம்மாவும் தங்கையும் உற்சாகமாக இருப்பதைப் பார்த்தபடி அவர் எண்ண ஓட்டத்தில் மூழ்கிவிட்டார்.

“இனி அம்மா எந்த நம்பிக்கையற்றும் இருக்க வேண்டியதில்லை, நானும்தான்... இப்பொழுது முற்றிலும் வேறு சூழல், வேறு சிலரும் உயிரோடு இருக்கின்றனர். மனித குலத்தைப் பாதுகாக்க வேண்டியப் பொறுப்பு இனித் தேவையில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அந்த பொறுப்புணர்வு மிகுந்த பயத்தைக் கொடுத்தது”
அப்பா சொன்னார்.

உறைந்த காற்று உருகிக் கொண்டிருந்தது. தொங்கிக் கொண்டிருந்தப் போர்வைகளைப் பார்த்தேன், நெருப்பைப் பார்த்தேன். அம்மாவும் தங்கையும் கதகதப்பில் உறங்கி இருந்தனர்.

“இந்தக் கூட்டை விட்டுப்போவதை மனது அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளது” அப்பாவிடம் சொன்னேன். அழ வேண்டும் போல இருந்தது. சிறிய கூடு, நாங்கள் நால்வர் மட்டுமே. புதிய நகரம், புதிய மனிதர்கள், பெரிய இடங்கள் எனக்குப் பயமாக இருந்தது.

சிறு கரித்துண்டுடன், மேலும் சில பெரிய கரித் துண்டுகளைச் சேர்த்து. நெருப்பில் போட்டபடி தலையசைத்தார். பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் கிறிஸ்துமஸ் அன்று மட்டுமே அப்படி அவர் செய்வார்.

“அந்தப் பயத்தை எளிதில் கடந்துவிடுவாய்” அப்பா தொடர்ந்தார்.

“உலகம் சுருங்கி சுருங்கி இந்த கூட்டின் அளவிற்கு வந்தது, பின்பு மீண்டும் விரிவடையும்... மிகப்பெரிய அளவில் விரியும்... ஆரம்பத்தில் இருந்ததைப்போல”

ஆம் அவர் சொல்வதும் சரிதான்.  எல்லாம் இருக்கட்டும், அந்த இளம்பெண் , நான் பெரியவன் ஆகும் வரை காத்திருப்பாளா, எனக்கு இருபது வயது ஆக இன்னும் பத்து வருடங்கள் இருக்கின்றனவே

முற்றும்