Thursday, January 24, 2013

கமலஹாசனுக்காக


பீஷ்ம் சாஹ்னி எழுதிய தமஸ் என்ற புதினம் கோவிந்த் நிஹ்லானியின் இயக்கத்தில் தொடராகவும், பின்னர் தொகுக்கப்பட்டு முழு நீளப்படமாகவும் வெளிவந்தது.  பாகிஸ்தான் பிரிந்த பொழுது, அங்கு நடந்த சீக்கிய - முஸ்லீம் , இந்து - முஸ்லீம் கலவரங்களின் பின்னணியில் கதை நடக்கும். இதை தடை செய்ய கோரி நீதி மன்றத்தின் முன் மனு வந்த பொழுது, நீதிபதிகள் படத்தைப் பார்த்து பிரச்சினை இல்லை எனச் சொன்னார்கள்.

“எல்லோருக்கும் நீதிபதிகளைப் போல அறிவும் தெளிவான சிந்தனையும் இருக்காது, இந்தப் படம் வெளிவந்தால் நாட்டில் கலவரங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது, அதனால் தடை செய்ய வேண்டும்” என வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள்,

”சராசரி மனிதர்கள், முந்தையத் தவறுகளில் இருந்து தொடர்ந்து கற்றுக்கொண்டே வருவார்கள், அடிப்படைவாதத்தில் விழுந்து திரும்ப அதேத் தவறுகளை செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு. படிக்காதவர்களோ, அல்லது பாமரர்களோ எந்தவிதத்திலும் மற்றவர்களைக் காட்டிலும் அறிவுத்திறனிலோ, சிந்தனையிலோ குறைவானவர்கள் கிடையாது. அவர்களாலும் எது நல்லது எது கெட்டது என பகுத்தறிந்து , எதிர்காலத்தை நினைவில் வைத்து விசயங்களை எடுத்துச் செல்லமுடியும். இதை சரியாக அறிந்து வைத்துக் கொள்வதே ஒட்டு மொத்தப் புரிதலுக்கும் முதற்படி”

எனக்கூறி தமஸ் திரைப்படத்தைத் தடை செய்ய மறுத்து விட்டனர். தரவு http://indiankanoon.org/doc/679521/

ஏறத்தாழ மேற்சொன்ன கருத்துகள் “ஒரேயொரு கிராமத்திலே” என்ற தமிழ்த் திரைப்படத்தின் தடை நீக்கத்திலும் சொல்லப்பட்டது.

"ஒரேயொரு கிராமத்திலே "  இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தில் மட்டும் அல்லாது தரத்திலும் சராசரிக்கும் கீழான படம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு, பின்னர் உச்சநீதி மன்றத்தால் தடை நீக்கப்பட்டு வெளியானது. உத்தரவில் இருந்த முக்கிய குறிப்பு,

 It is the duty of the State to protect the freedom of expression since it is a liberty guaranteed against the State. The State cannot plead its inability to handle the hostile audience problem. (Emphasis added). As censorship is permitted only on the grounds under Article 19(2), the standard to be applied by the board or courts for judging the film should be that of an ORDINARY MAN OF COMMON SENSE AND PRUDENCE and NOT that of an out of the ORDINARY or HYPERSENSITIVE MAN.

கவிஞர் வாலி எழுதிய கதைக்கு , உச்சத்தில் இருந்தாலும் இளையராஜா மிகவும் சுமாரான இசையைத் தான் கொடுத்து இருப்பார். வழக்கமான உள்ளடி வெளியடிகளுடன் இந்தப் படம் தேசிய விருது கூடப் பெற்றது. இருந்தும் கூட இப்படி ஒரு படம் வந்ததா என்று , இதன் பெயர் கூட மக்களின் நினைவில் இருக்காது.

இடஒதுக்கீட்டை சூசகமாக எதிர்த்து வெளிவந்த ஜெண்டில்மேன் கூட அதன் விசமமான கருத்துக்களுக்காக அறிவுஜூவிகளின் மத்தியில் மட்டும் தான் விவாதிக்கப்படுகின்றது. சாமானிய மனிதர்கள் பெரும்பாலோனருக்கு இன்னும் சிக்குபுக்கு சிக்குப்புக்கு ரயிலும் , கப்ளிங்ஸ் கிப்ளிங்ஸ்... புறா எப்படி பறந்தது என்ற பொழுது போக்கு அம்சங்கள் மட்டும் தான் நினைவில் நிற்கின்றன. சாமனியர்கள் தீவிரமான விசயங்களை பிரச்சினைகளாக  உள்ளெடுத்து தன்னையும் சுற்றத்தையும் இறுக்கப்படுத்திக் கொள்வதில்லை.

ஆக, சிறுபான்மையோ பெரும்பான்மையோ ஆதரித்தோ எதிர்த்தோ ஒரு விசயம் திரைப்படமாகவோ , புத்தகமாகவோ வந்தால், வரட்டுமே... பிடித்திருந்தால் போற்றுவோம், பிடிக்காவிட்டால் தாளிப்போம்.

பம்பாய் திரைப்படம், தெலுங்கு மொழிமாற்றப் பதிப்பு, ஆந்திராவில் தடை செய்யப்பட்டது.  பின்னர் நீதிமன்றத்திற்கு வழக்கு வந்த பொழுது, தடை செய்த அதிகாரிகள் படத்தைப் பார்க்கமலேயே தடை செய்து இருக்கின்றனர் என வெட்ட வெளிச்சம் ஆகியது.

முதலில் அடி , உதை , தடை பின்னர் பார்க்கலாம் என்ற வகையிலேயே சமீபகாலங்களாக Water, Da Vinci Code, War and Peace, குஜராத் கலவரங்கள் பற்றிய ஆவணப்படங்கள் என தொடர்ந்து தடை செய்யப்பட்டு பின்னர் நீக்கப்படுகின்றன.

விஸ்வரூபம் படத்தையே எடுத்துக் கொண்டால், தணிக்கைக் குழு வெட்டி எறிந்த காட்சிகளைப் பற்றியக் குறிப்புகள் கீழே,





இவற்றில் ஒன்றில் கூட மதம் சம்பந்தப் பட்டது கிடையாது. கமலஹாசன் சொன்னதைப்போல, விறுவிறுப்பான உளவாளிக்கதையாக மட்டுமே இருக்கும் போல.

டா வின்சி கோட் திரைப்படம், கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் இத்தாலியிலேயே தடை செய்யப்படவில்லை. மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையிலும், வரலாற்றுக்குறிப்புகளைத் தவறாக கொடுத்திருக்கும் இப்படத்தைப் புறக்கணியுங்கள் என்றுதான் வாடிகனால் கேட்டுக்கொள்ளப்பட்டது. கவனிக்கவும், தடைக்கும் புறக்கணிப்பிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உள்ளாது.

அரசியல் ஆகட்டும் மதமாகட்டும், தேசியம் சார்ந்த உணர்வுகள் ஆகட்டும், உண்மையில் அவரவர் நம்பிக்கைகளை அவரவர் அனுமதியின்றி வேறு யாரும் மாற்றிவிட முடியாது. நம் மக்களை வருத்தப்படுத்தக் கூடும் அதனால் புறக்கணியுங்கள் என்று சொல்ல உரிமை உண்டு, அப்படி இல்லாமல் யாருமே பார்க்கக் கூடாது என வரிந்து கட்டிக் கொண்டு இறங்கும்பொழுது, பொதுத் தன்மையுடன் இருக்கும் மக்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒரு சார்பு எடுத்து விடுவார்கள்.இது துள்ளிக் குதித்து ஓடிக்கொண்டிருக்கும் ரத்த ருசி பூனைகளுக்கு மிகவும் கொண்டாட்டமாகவும் சாதகமாகவும் அமைந்துவிடும்.

சமூக அக்கறைக்கு அப்பாற்பட்டு,  சாமானிய மனிதனாய் என் கவலை எல்லாம், விக்ரம் படத்தில் டிம்பிள் கபாடியாவையும் லிசியையும் கிஸ் அடித்தது போல, இதில் ஆண்ட்ரியாவையும் பூஜாவையும் கமலஹாசன் கிஸ் அடித்திருப்பாரா மாட்டாரா என்பது தான். எதுவானாலும் கமலஹாசனுக்கு இது வே கடைசித் தமிழ்த் திரைப்படம் ஆக இருக்கட்டும். கலைஞனாய் சில இடங்களில் சறுக்கி இருந்தாலும், வியாபாரியாய் பல இடங்களில் வென்று இருந்தாலும், இந்த போராளி கமலஹாசன் என்றுமே சறுக்க மாட்டார், சறுக்கவும் கூடாது. இனிவரும் படங்கள் ஆங்கிலத்தில் இருந்து வரும் டப்பிங் படங்களாக மட்டும் இருக்கும் என வாழ்த்துவோம். அவை எதிர்காலத்தில் நம் கருத்தியலுக்கு மாறாக இருந்தால் கும்முவோம், ஆனால் படத்தைப் பார்த்து விட்டு கும்முவோம்.


Tuesday, January 01, 2013

உள்ளுணர்வு - சிறுகதை

இதை செய், இதை செய்ய யோசி இப்படி அடிக்கடி உள்ளுக்குள் இருந்து அடிக்கடி மணி அடித்துக் கொண்டே இருக்கும். பெரும்பாலும் அந்த உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுக்க மாட்டேன். அட என்னதான் நடக்குதுன்னு பார்த்திடலாமேன்னு ஓர் அசட்டுத் துணிச்சல். 

சில வருடங்களுக்கு முன்னர், இடதுப்பக்கம் போகாதே அங்கு ஒரு சோகம் இருக்கிறது, என உள்மனது சொன்னபொழுதும், அதையும் மீறி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அருகில், அம்முவை அவளின் கணவனோடும் அழகான குழந்தையோடும் பார்த்தேன். அவள் என்னைப் பார்க்காமல் இருந்திருந்தால் கூட சங்டமாக இருந்திருக்காது, பார்த்து சிரித்தும் வைத்தாள்,அதன் பின்னர்  பழைய மின்னஞ்சல்களை வாசித்தலில் இரண்டு நாட்களுக்கு தூக்கம் போனது.  

ஒன்பதாவது படிக்கும் பொழுது கணக்காசிரியர் , பத்தாவது பாடத்திற்கான சிலக் கணக்குக் கேள்விகளை கவனக்குறைவில் எங்களுக்கான காலாண்டு  வினாத்தாளில் சேர்த்துவிட ,  எங்கள் வகுப்பில் எவனும் 60 விழுக்காடுகளைத் தாண்டவில்லை. நான் எடுத்தது நூற்றுக்கு நூறு. 

ஆச்சரியப்பட்ட வாத்தியாருக்கு எனக்கான பதில். 

“ஏற்கனவே அடிக்கடிப் போட்டுப் பார்த்த கொஸ்டின்ஸ் மாதிரி இருந்துச்சு சார்”   

அதற்கடுத்த வருடம் 10 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளில் நான் கணக்குப்பாடத்தில் நூற்றுக்கு நூறு. இது மாதிரி ஏகப்பட்ட உதாரணங்கள்,  இப்பொழுது வேலைப் பார்க்கும் ஆஸ்திரியா நிறுவனத்தில் ,முதல் வருடத்தில் ,  ஒருமுறை தெரியாத நிரலி வகையில் நண்பனுக்கு உதவி செய்தேன், ஸ்நான பிராப்தமே இல்லாத ஒன்றில் அகஸ்மாத்தாக செய்த உதவி பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பின்னர் அந்த நிரலிமுறைகளை கடந்த ஆறு மாதங்களில் கற்றுக்கொண்டேன். 

ஐந்து வயதாக இருக்கும்பொழுது, மலைக்கோட்டை அருகில் அப்பாவின் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு சாரதாஸிற்கு செல்லும் கூட்டத்தை வேடிக்கைப்பார்க்கையில், எங்களைக் கடந்த இரண்டு வெள்ளைக்காரர்களை என் அப்பா காட்டி,

“அங்கப் பாரு, இங்கிலீஷ்காரனுங்கப் போறாங்க” 

“அப்பா அவங்க இங்கிலீஷ் காரங்க இல்லை, அவங்கப் பேசுறது ஜெர்மன்” 

நடுவில் கொஞ்சம் அடங்கி இருந்த எச்சரிக்கை மணியோசைகள், அடுத்து நடக்கப்போவதற்கான குறிப்புகள் கடந்த பத்து நாட்களாக அடிக்கடி வந்துப் போகின்றன. ஏதோ நானே இன்னொரு உருவம் எடுத்து எனக்குள் வந்தமர்ந்து கொண்டது போல. கிறிஸ்துமஸ் புது வருட விடுமுறைக்கு ஊருக்குப் போகாதே , வியன்னாவிலேயே கொண்டாடு  என்று சொல்லிய உள்ளுணர்வை நான் கேட்கவில்லை. உனக்கு ஏதோ தப்பு நடக்கப்போகிறது என்ற உள்ளுணர்வை கேட்கவில்லை. ஆழ்வார் திருநகர் வாசுதேவன் வீட்டில் குடிக்க முடிவு செய்த பொழுது, வேண்டாம் பெசண்ட் நகரில் இருக்கும் ரங்கநாதன் வீட்டில் வைத்துக் கொள் என்று சொன்ன மன ஓசையையும் கேட்கவில்லை. 

காமராஜர் சாலை வழியாகப் போகாதே  - நான் கேட்கவில்லை 
 நேரா லாமெக் பள்ளி வழியாகப்போ -  கேட்கவில்லை. 
 குறுக்க நாய்கள் வரலாம் மெதுவாகப்போ - கேட்கவில்லை 

“நாய் வருது, பிரேக் அடி”  

சின்ன கல்லில் தலையில் அடிபட்டு அதோ அங்கே கிடக்கிறேன். 

அறிவுகெட்ட முண்டம், செத்துப் போன என்னை நானே திட்டிக் கொண்டேன். எத்தனைத் தடவைதான் ஆன்மாவாக கடந்த காலத்திற்கு வந்து உள்ளுணர்வாக உதவி செய்வது, ஒவ்வொரு முறையும் இப்படி அல்ப ஆயுசில் செத்துப் போக வேண்டியாதாயிருக்கு.  கடைசியா இன்னொரு முறை முயற்சிப் பண்ணப்போறேன். ஒரு வேளை என்னை நான் காப்பாற்றி விடலாம், அது சரி, என் சோகக் கதை இருக்கட்டும், நீங்கக் கூட,  என்னை மாதிரி உள்ளுணர்வை எல்லாம் கேட்கமா இருக்காதீங்க, Intuitions could be  your own soul coming back from the time of your death and foretelling and warning you the things that had already been experienced.