Saturday, March 12, 2011

ஃபீனிக்ஸ் தேசத்திலே - குறுந்தொடர் (பாகம் 3)

ஃபீனிக்ஸ் தேசத்திலே, இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்
---------

கோஸியாவுடன் புகைப்படத்தில் இருந்த திராவிட, தமிழ் முகத்தை உற்றுக்கவனித்தேன், தமிழ் நடிகர் விஷாலைப்போல முகச்சாயலில், ஆரம்பகால தோனியைப்போல நீண்ட தலைமுடியுடன் கருப்புக் கன்னத்தை கோஸியாவுடன் ஒட்டியபடி புகைப்படத்திற்கு காட்சியளித்து இருந்தான்.
இவனைப்போல இருப்பவர்களைப்பார்த்திருக்கின்றேன், ஆனால் இவன் எனக்கு அறிமுகமானவன் இல்லை.

நான் சுவீடன் வருவதற்கு முன்னர், வெளிநாட்டில் இருப்பவர்கள், குறிப்பாக இந்தியர்கள் நீண்ட தலைமுடியை வைத்திருப்பது நவநாகரிகத்தின் மற்றொரு அடையாளம் எனத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். இங்கு வந்த பிறகுதான் தெரிகிறது, தலைமுடியை வெட்ட தலையைக்கொடுக்க குறைந்தது இந்திய ரூபாயில் 1000 ஆவதால், எல்லோரும் கொண்டைபோட்டு அலைகின்றனர் என, நானே ஆறு மாதங்களுக்கு முன்னர் பெண்களே ஆசைப்படும் அளவிற்கு கூந்தல் வைத்திருந்தவன்தான். தற்பொழுது காக்ககாக்க சூரியாவைப்போல கச்சிதமாக இருக்கும் எனது தலைவெட்டை தடவிக்கொண்டிருக்கையில், கோஸியா காப்பி கோப்பைகளுடன் வந்தாள்.

”இந்தக் கருப்பனை ஆரத்தழுவி ஆறு மாதங்கள் ஆகின்றன, சென்ற கோடை இறுதியில் சென்றவன், சில மாதங்கள் தொடர்பில் இருந்தான், பின்னர் தொடர்பை முழுவதுமாகத் துண்டித்துக்கொண்டு விட்டான்”

”ஸ்கைப், ஃபேஸ்புக், ஆர்குட் இதில் ஏதாவது ஒன்றிலாவது அவனைக் கண்டுபிடிக்க முடிந்ததா?”

”எல்லாவற்றையும் அழித்துவிட்டான் , மின்னஞ்சல்கள் கூட திரும்பிவந்துவிட்டன” அவள் கண்களில் ஏக்கம் பரிதவிப்பு எல்லாம் அவள்

கண்களில் ஒரு சேரத் தெரிந்தது, என் கண்களோ அவள் கண்களில் இருந்து அவளின் கழுத்தின் கீழ் வரை ஊசலாடிக்கொண்டிருந்தது. காமத்தைத் தொலைத்து, கனிவான பேச்சைக் கொடுக்க மனம் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியையைத் தழுவிக் கொண்டிருக்கையில், அவளே உள்ளே
எழுந்துப்போய் குளிருக்கான , கழுத்துவரை நீளும் முழுக்கை ஸ்வெட்டரைபோட்டுக்கொண்டு வந்துவிட்டாள். அந்த அறையில் உண்மையிலேயே குளிர் அதிகமாகத்தான் இருந்தது. ஆனால் எனக்கு என்னமோ என் பார்வையின் வீச்சைத் தவிர்க்கத்தான் என்பதாகப் பட்டது.

”கார்த்தி, உன்னைப்பற்றி சொல், என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“கணினித் துறையில் முதுகலைப்பட்டத்தை, சென்ற மாதம்தான் முடித்தேன், ஸ்வீடனில் கார்ல்ஸ்க்ரோனா நகரம் உனக்குத் தெரியுமா?

அங்குதான் படித்தேன்”

“தெரியும், ஸ்வீடனின் முக்கியக் கடற்படைத்தளம், சோவியத் காலங்களில், போலாந்தைத் தாக்க அவர்கள் எப்பொழுதும் அங்கிருந்துதான்

விழிவைத்துக் காத்துக்கொண்டிருப்பார்கள்”


“ம்ம்ம்ம்”

“அப்படியும் ஒருதடவை ரஷியாவின் நீர்மூழ்கிக் கப்பல் அங்குபோய் கதிகலங்க வைத்துவிட்டு வந்தது, வரலாற்றை விடு, உன்னைப்பற்றி மேலும்

சொல்” அவளின் பேச்சிற்கு தலையாட்டிக்கொண்டே அவளின் காப்பிக்குடிக்கும் அழகை காமத்தைக்கடந்தும் ரசித்துக்க முடிந்தது.

”இப்பொழுது வேலைத் தேடிக்கொண்டிருக்கின்றேன், சுவீடனில் ஸ்வென்ஸன், நீல்ஸ்ஸான் போன்ற துணைப்பெயர்கள் இல்லாதிருப்பவர்களுக்கு

வேலைக்கிடைப்பதில்லை” என்னுடைய ஆதங்கத்தைக் காட்டினேன்.

“ஸ்விடிய மொழி கற்றுக்கொண்டாயா?, இங்கிலாந்து நீங்கலான ஐரோப்பியர்களுக்கு ஆங்கிலம் இரண்டாம்பட்சம்தான் ... டிராட்ஸ்கியிடம்

எவ்வளவோ கேட்டும் அவன் போலாந்திய மொழிப் படிக்கவே இல்லை”

”டிராட்ஸ்கி யார்? உன் காதலனா?”

”ஆமாம், டிராட்ஸ்கி பாண்டியன் , இங்கு வார்சாவா பல்கலைகழகத்தில்தான் படித்தான், 18 மாதங்களுக்கு முன்னர், ஒர் இரவு நடனவிடுதியில்

சந்தித்துக்கொண்டோம், அந்த சமயத்தில் காதல் தோல்வியில் இருந்தேன், டிராட்ஸ்கியின் ஆறுதல் வார்த்தைகள் பெரிய பலமாக இருந்தது,

சிலமாதங்களில் என்னுடனேயே வந்துத் தங்கிக்கொண்டான், பிரியமாகத்தான் இருந்தான், என்ன காரணம் எனத் தெரியவில்லை, தொடர்பில்

இல்லை” கண்கள் கலங்கிவிடுமோ எனப் பயமாக இருந்தது, கோஸியாவின் கண்கள் அல்ல, எனது கண்கள். கோஸியாவின் பேச்சில்

உன்னதமான நேர்மை இருந்தது. வெள்ளைக்காரப் பெண்ணின் அன்பை சுயலாபத்திற்கு டிராட்ஸ்கி பயன்படுத்திக்கொண்டானோ என எனக்கு ஒரு

சந்தேகம் வந்தது.

“சரி கார்த்தி, நீ குளியலறையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால், இப்பொழுதே பயன்படுத்திக்கொள், நான் அடுத்துக்

குளிக்கப்போகின்றேன், வெளியே வருவதற்கு எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும்”

அவள் குளிக்கப்போவதற்கு முன்னால் எனக்கு இணைய இணைப்பிற்கான விபரங்களைக்கொடுத்தாள். தொலைக்காட்சியில் பிபிசியை ஓடவிட்டு
அவள் குளியலறைக்குச் சென்ற பின் தாழிடும் சத்தம் தெளிவாகக் கேட்டது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக இது போல சூழல் இருந்திருந்தால்
தமிழ்த் திரைப்படங்களில் வருவதைப்போல அசட்டுத்தனமாக ஏதேனும் யோசித்து இருப்பேன். உண்ட வீட்டிற்கு இரண்டகம் எல்லாம் தற்பொழுது
யோசிக்காமல் எனக்கான மின்னஞ்சல்களைப் படித்தபின்னர் பேஸ்புக் தளத்தை திறந்து அடுத்தவர்களின் அன்றாட வாழ்க்கைகளை சுவாரசியமாகப் பார்த்துக்கொண்டிருந்தபொழுது ஒரு பொறித்தட்டியது. டிராட்ஸ்கி பாண்டியன் என்பதைத் தமிழில் தேடினால் என்ன என்று,

முதல் முயற்சியிலேயே, திருத்தம் செய்யப்பட்டு நேர்த்தியாக தலைவாரிய முகத்துடன் டிராட்ஸ்கி பாண்டியனின் முகப்பு வந்து விழுந்தது. நண்பர்களைத் தவிர வேறு யாருக்கும் விபரங்கள் தெரிய அனுமதி கொடுக்கப்படவில்லை. எனக்கு டிராட்ஸ்கிக்கும் பொதுவான நண்பர்களும் இல்லை. எதேச்சையாக முகப்பில் இருக்கும் படத்தை அமுக்கி உள் நுழைய, அதில் முந்தைய முகப்புப்படங்கள் வரிசையாக இருந்தன.

கடவுளே!!!....
கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், அதிர்ச்சியான விசயங்களைப் பார்க்கையில் கடவுளைத் தவிர வேறு யாரையும் அழைக்கத் தோன்றுவதில்லை.

டிராட்ஸ்கி பாண்டியனின் திருமணப்படம், தமிழகத்திற்குச் சென்றபின்னர் திருமணம் செய்து கொண்டுவிட்டானா, ??? இல்லை, இல்லை.
திருமணக் கோலத்திற்கு பின்னால் இருந்த பெயர் , நாள் குறிப்பில் ஜூன் 2, 2006 என்று இருந்தது, அதாவது நான்கரை வருடங்களுக்கு முன்னர், கோஸியாவை சந்திக்கும் முன்னரே டிராட்ஸ்கி பாண்டியன் திருமணம் ஆனவனா? கோஸியா தனது பரிதாப நிலைமையை அறியாமல் உள்ளே எனதுயிரே எனதுயிரே பாடலை மழலையாக பாடிக்கொண்டே குளித்துக்கொண்டிருந்தாள்.

தொடரும்

Tuesday, March 01, 2011

ஃபீனிக்ஸ் தேசத்திலே - குறுந்தொடர் (பாகம் 2)

To read - ஃபீனிக்ஸ் தேசத்திலே - குறுந்தொடர் (பாகம் 1)
-----
அருகில் வந்த காவலதிகாரிகள் ஆங்கிலத்தில்,

”உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும், பாதுகாப்பு அலுவலகம் வரை வர இயலுமா?” எனக் கேட்டனர்

இத்தனைப் பேரை விட்டுவிட்டு என்னை வந்து ஏன் கேட்கிறார்கள், எனது நிறமா அல்லது எனது பெட்டியில் இருக்கும் பிறை நட்சத்திர அடையாளமா அல்லது இவை இரண்டினாலுமா !!! தெரியவில்லை.

கோஸியா, காவலதிகாரிகளிடம் போலிஷ் மொழியில் ஏதோ கேட்டாள். முகத்தில் கடுமையுடன் பதிலளித்தது போது எனக்கும் கொஞ்சம் பயமாகவே இருந்தது.

“கார்த்தி, பயப்படாதே வழக்கமான பாதுகாப்பு பரிசோதனைதான்”

--

பாதுகாப்பு சோதனை அறையில்,

”உனது பெயர் என்ன?’

”கார்த்தி ராமச்சந்திரன்”

“நீ இஸ்லாமியனா”

“இல்லை”

“எதற்கு பெட்டியில் பிறை நட்சத்திரம் அடையாளம் வைத்திருக்கிறாய்?”

“இது எனது நண்பன் பரிசளித்தது?”

”பெட்டியைத் திற” என்று ஒருவன் சொன்னான், மற்றொருவன் எனது பாஸ்போர்ட்டைக் கேட்டான்.

பெட்டியைத் திறந்தவுடன், ஒன்று ஒன்றாக வெளியே எடுத்து வைத்தேன். நான்கு நான்கு உருப்படிகளாக சட்டைகள், கால்சட்டைகள், ராமராஜ் உள்ளாடைகள் எடுத்து வைத்தவரை பிரச்சினை இல்லை. அடுத்து எடுத்து வைத்தது, பொதுவுடமைத் தலைவர் விளாடிமிர் லெனின் எழுதிய

“வாட் ஈஸ் டு பி டன்?" புத்தகம் , அவரின் அட்டைப்படத்தைப் பார்த்ததும் ஏற்கனவே கோபமாக இருந்தவர்களின் முகம் மேலும் கடுமையானது.



”இந்தியர்கள் இதில் எல்லாம் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?”

எனது பொதுவுடமை சார்பு நிலைப்பாட்டை எல்லாம் விளக்குவதற்கு எல்லாம் இதுவல்ல நேரம் அல்ல, என்று

”வாழ்க்கையில் நேர்மறைத் தத்துவங்களைப் படிப்பதைப்போல எதிர்மறைத் தத்துவங்களையும் படித்து வைத்துக் கொள்ளவேண்டும்? பொய் சொன்னாலும் தீர்க்கமாக சொன்னேன்.

எதிர்மறை என்று சொன்னவுடன், காவலதிகாரிகளின் முகத்தில் முதன்முறையாகப் புன்னகை. நான் அடுத்து எடுத்து வைத்தப் புத்தகம் தமிழீழ வரலாறு, அட்டையில் பிரபாகரன் கையில் சிறுப் புலிக்குட்டியைத் தடவிக்கொடுத்தபடி இருக்கும் ஒரு தமிழ்ப் புத்தகம்.

“இதுவும் எதிர்மறைப் புத்தகமா?” எனக்கேட்டனர்.

“இது நேர்மறை, புலிகளைப் பற்றிய புத்தகம், இந்தியாவின் தேசியவிலங்கு புலி தான்” என்றேன். முழு உண்மையைச் சொல்லவில்லை என்றாலும், நான் சொன்னது முழுப்பொயும் இல்லை.

காவலதிகாரிகளின் சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும்படி எதுவும் என்னிடம் இல்லாததால், அவர்களே பெட்டியை மீண்டும் அடுக்க உதவி செய்தனர். புத்தகங்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டேன். அங்கிருந்தவர்களில் மூத்தவராகத் தெரிந்த ஒருவர்,

“எனக்கு பாலிவுட் படங்கள் என்றால் உயிர், அடுத்து ஷாருக்கான் படம் எப்பொழுது வெளியாகும்” என்றார்.

ஷாருக்கான் ஒரு இஸ்லாமியன் எனச் சொல்லவேண்டும் என துடுக்குத்தனம் தூண்டினாலும், இருக்கும் சூழலில் எதிலும் சிக்கிக்கொள்ளக்கூடாது என வாயை அடக்கிக்கொண்டு,

“நான் பாலிவுட் இந்திப்படங்களைப் பார்ப்பதில்லை, நான் தென்னிந்திய மொழிகள் படங்கள் மட்டுமே பார்ப்பவன்” எனச் சொல்லி அவர்களிடம் விடைபெற்றேன்.

வெளியில் காத்திருந்த கோஸியா, என் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்து “வாவ், பிரபாகரன் ... பெர்பெக்ட் மேன்” என்றாள்.




கையில் இருந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டவள், விளாடிமிர் லெனினின் அட்டைப்பட புத்தகத்தைப் பார்த்தவுடன் “ஐ ஹேட் கம்யூனிசம், லெனின் அண்ட் கோ” என என்னிடமே திருப்பிக் கொடுத்தாள்.

பெண்கள் எரிச்சல்படும் அழகை ரசிக்கும் காலக்கட்டத்தை எல்லாம் கடந்துவிட்டேன் என்பதை சலனமில்லாத மனம் நினைவூட்டியது.

கிட்டத்தட்ட, சென்னையின் மையத்தில் இருந்து செங்கற்பட்டையும் தாண்டி இருக்கும் புறகரப்பகுதிக்கு பயணம் செல்வதைப்போல , மூன்று பேருந்துகள் மாறி நெடிய பயணத்தில் செல்லும் வழியெல்லாம், இது இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்களால் நிர்மூலமாக்கப்பட்ட கட்டிடம், மீண்டும் கட்டுமானம் செய்யப்பட்டது. என்றாள்.

புதிதாகக் கட்டிக்கொண்டிருக்கும் விளையாட்டரங்கத்தைக் காட்டி, ”இங்கு தான் அடுத்த ஐரோப்பிய கோப்பை கால்பந்தாட்டப்போட்டிகள் நடைபெறவிருக்கின்றன, முன்னர் இங்கு வியட்நாமியர்களும் கொரியர்களும் பெரிய சந்தை வைத்திருந்தனர், அவர்களை விரட்டிவுட்டு இங்கு நிர்மாணிக்கிறார்கள்” என்றாள். கிட்டத்தட்ட காவிரி ஆற்றைப்போல ஒரு ஆற்றைக் கடக்கையில், இதுதான் வார்சாவ் நதி என்றாள்.
ஆற்றில் பனிப்படலத்துடன் நிறையவே தண்ணீர் இருந்தது.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப் பயணத்தில் ஒரு நாளுக்கான தகவல்களை அடுக்ககிக்கொண்டேபோனாள். பசி வேறு வயிற்றைப்பிடுங்கியது, எப்பொழுதடா இவளின் வீடு வரும் என்றிருந்தது. ஒரு வழியாக வந்த கடைசி பேருந்து நிறுத்தத்தில் இருந்து 10 நிமிடங்கள் நடைக்குப்பின்னர் அவளின் வீடு வந்தது. முதல் தளத்தில் அவளது வீடு, ஒன்று இரண்டு என ஆங்கிலத்தில் படிக்கட்டுகளை எண்ணியபடியே கோஸியா மாடி ஏறினாள். வீட்டுக்கதவைத் திறக்கும்பொழுது, பீமா திரைப்படத்தின் “எனதுயிரே எனதுயிரே” பாடல் ஒலித்தது, ஒருக்கணம் எனது கைபேசியோ எனப்பார்க்க, அதே சமயத்தில் கோஸியா அவளின் கைபேசியை எடுத்து யாருடனோ பேசிமுடித்துவிட்டு “இந்தத் தமிழ்ப்பாட்டு எனக்கும் அவனுக்கும் பிடித்தமானப் பாட்டு, அதனால் தான் இதை எனது பொது அலைபேசி மணியாக வைத்திருக்கின்றேன்” என்றாள்.

“எனக்கும் பிடித்தப்பாட்டுதான்” என்ற எனது கவனம் சுவற்றில் மாட்டியிருந்த படத்தில் பதிந்தது , அதில் கோஸியாவுடன் ஒரு திராவிட முகம், அனேகமாக கோஸியா சொன்ன அவளின் முன்னாள் காதலானாக இருக்கக்கூடும், ஆனால் அவனின் முகம் எனக்குப் பரிச்சயமான முகமாகப் பட்டது.

தொடரும்