Saturday, February 28, 2009

Six Out of Six : கிரிக்கெட் வினாடி வினா

1. இவர் ஒரு இடது கை ஆட்டக்காரர். இவர் இரண்டு அணிகளுக்காக பன்னாட்டு டெஸ்ட் மட்டும் ஒரு நாள் ஆட்டங்களில் ஆடி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கெதிராக தான் ஆடிய இரண்டு நாட்டு அணிகள் சார்பாகவும் டெஸ்ட் ஆட்டங்களில் சதமடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராகக் கூட இரண்டு அணி சார்பாகவும் விளையாடி உள்ளார். அதில் ஒரு ஆட்டத்தில் சதம் கூட அடித்துள்ளார். இந்த ஆட்டக்காரர் யார்?

2. மதம் முக்கிய பங்கு வகிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற முதல் இந்து இவர். விக்கெட் காப்பாளராக 9 டெஸ்ட் போட்டிகளிலும் 15 ஒரு நாள் ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி சார்பாக களம் இறங்கி இருக்கும் இவரின் உறவினர் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் முக்கிய பந்து வீச்சாளர்? இந்த விக்கெட் காப்பாளர் யார்?

3. இவர் இந்திய நடுகள மட்டையாளர். ஒரு நாள் போட்டிகளி ஆறு சதங்கள் அடித்து இருந்தும், ஒரு நாள் அணியில் எட்டுவருடங்கள் இருந்தும், இடைப்பட்ட காலங்களில் மூன்று ஒரு நாள் உலககோப்பைக்கான அணியில் இடம்பிடிக்காத இந்த ஆட்டக்காரர் யார்?

4. இரண்டு நாட்டு அணிகளுக்காக ஆடுவது எவ்வளவு அரிதோ அதுபோல இரண்டு வெவ்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பது. கென்யா அணிக்காக விளையாடிய இந்த விளையாட்டு வீரர் , தனது நாட்டு அணிக்காக டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளிலும் ஆடி இருக்கிறார். இவர் யார்?

5. மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான டிரிடினாடில் பிறந்த இவர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது முதல் இரண்டு போட்டிகளை ஆடிய இவர் அடுத்த ஆட்டத்தை ஆட கிட்டத்தட்ட 7 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பல ஆட்டங்களில் உயிரைக் கொடுத்து ஆடி கேவலமான தோல்விகளை கவுரவமான தோல்விகளாக மாற்றிய இந்த இந்திய ஆட்டக்காரர் யார்?

6. நல்லதொரு துவக்க ஆட்டக்காரராக வந்திருக்கக்கூடிய இவர், 1998 காமன்வெல்த் போட்டிகளினால் காணாமல் போனது துரதிர்ஷ்டம். இந்தியாவின் சார்பில் இரண்டு பன்னாட்டு ஒரு நாள் ஆட்டங்கள் ஆடியிருக்கும் இவர் , இரண்டாவது ஆட்டதில் தான் அடித்த 89 ரன்களுக்காக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றவர். மலேசியாவில் நடைபெற்ற 98 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்கான கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த இவர், அங்கு சரியாக ஆடததால் அதன் பின் ஓரங்கட்டப்பட்டார். காமன் வெல்த் கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.

கிரிக்கெட் அபிமானிகளே விடைகள் தெரிந்தால் பின்னூட்டமாக இடவும். விடைகளுக்கு இங்கே சொடுக்கவும்

நன்றி : கிரிக் இன்போ. கோம்

Sunday, February 22, 2009

ச்சும்மா - ஒரு நிமிடக்கதை

எங்கேப்பார்த்தாலும் வெண்மை, நீருக்கு நிறமில்லை என்று சொன்னது யாரு? எனக்கு வெண்ணிறம் பிடிக்கும் என்றாலும் தொடர்ந்து ஒரு வாரமாக பனிபடர்ந்து இருக்கும் இந்த ஊரைப் பார்க்க சற்றே திகட்டியது. முகத்தைத் தவிர அனைத்து பகுதிகளுக்கும் கவசம் போட்டிருந்தாலும் உடல் முழுவதும் இருந்த குளிரின் நடுக்கம் அப்படியே வீட்டிற்கு திரும்பிப் போய் விடலாமா என்றிருந்தது.. கைத்தொலைபேசியை எடுத்துப்பார்த்தேன், சரியாக 7.55 க்குவரும் பேருந்து 7.58யைக் கடந்தும் வரவில்லை.

பேருந்து நிலையத்தில் நானும் அந்த சுவிடீஷ் பெண்ணும் மட்டுமே இருந்தோம். இவள் லிண்ட்ப்லோம்ஸ்வேகனில் தான் ஏறுவாள். ஏறிய உடன் ஓட்டுனருக்குப்பின் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொள்வாள்..இரண்டு நிறுத்தங்கள் கழித்து வரும் விலாடிபிக் நிறுத்தம் வந்ததும் ஏற்கனவே மலர்ச்சியாக இருக்கும் அவளின் முகம் மேலும் மலரும். அந்த நிறுத்தத்தில் ஒரு பையன் ஏறுவான். நேராக இவளின் அருகே வந்து அமர்ந்து கொள்வான். ரோன்னிபே ரயில்நிலையம் செல்லும் அந்த அடுத்த 5 நிமிடங்களுக்கு முத்த மழைதான். காதலில் காமம் இல்லாத முத்தங்கள் அவர்களுடையது. கீர்த்தனா எனக்கு கொடுத்த மென்மையான முத்தங்களில் இருந்த காதல் நினைவுக்கு வரும்.

ஒரு வாரத்திற்குப்பின் இன்றுதான் காலை வகுப்பு இருந்ததால் இவள் பயணம் செய்யும் இந்த நேரத்தில் வர நேர்ந்தது. தாமதமாக வந்த பேருந்து ஓட்டுனரை அந்தப் பெண் சுவீடிஷ் மொழியில் கடிந்து கொண்டாள். ஓட்டுனருக்கு நான் சின்னப்புன்னகையைக் கொடுத்துவிட்டு அவளுக்குப்பின் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். விலாடிபிக் நிறுத்தம் வந்தது, அந்தப் பையன் ஏறினான். ஆனால் அவளின் அருகில் அமரவில்லை. அவளின் இருக்கைக்கு இணையாக வலதுபுறம் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவன் அவளைப் பார்க்க அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஏக்கம், அவமானம், பயம் , தவிப்பு என ஒரு சேர இருந்தது.

அவளோ அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஒரு வாரத்தில் இத்தனை மாற்றமா!!!! நிறம்,அழகு,கல்வி என எத்தனை மாறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் , ஆண்களை அலட்சியப்படுத்துவதில் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். அலட்சியப்படுத்தபடுவதற்கென்றே பிறந்தவர்கள்தான் ஆண்கள் போலும்!!! “நேஸ்ட்டா ர்ரோன்னிபே ரெஸசெண்ட்ரம்” என அறிவிப்பு வர நாங்கள் மூவரும் பேருந்தை விட்டு இறங்கினோம்.

நான் கல்லூரியை நோக்கி நடக்க, அவர்கள் இருவரும் நான் நடந்த திசைக்கு எதிர் திசையில் நடந்தார்கள். காலையில் இருந்து 100 வது தடவையாக ,என்னுடைய கைத்தொலைபேசியை எடுத்து கீர்த்தனாவிடம் இருந்து ஏதேனும் அம்மு என்று சேமித்து வைத்திருந்த பெயரில் குறுந்தகவல் வந்திருக்கின்றதா எனப்பார்த்தேன். ம்ஹூம் எதுவும் வரவில்லை.... கீர்த்தனாவிடம் இருந்து எந்த அழைப்போ குறுந்தகவலோ வரமால் இருப்பது இன்றுடன் நான்காவது நாள்.

Thursday, February 05, 2009

தெருநாயும் தற்கொலை நினைவுகளும் - சிறுகதை

வலிக்காமல் சாகும் உபயம் ஏதாவது இருக்குமா என கூகிளில் sucide tips எனத் தேடிப்பார்த்தேன். எல்லாம் அரதப் பழசான யோசனைகள்.மணிக்கட்டை அறுத்து கொண்டால் என்ன? ஐய்யோ.. நிறைய ரத்தம் வரும், வலிக்கும். தூக்குப் போட்டுக்கொண்டால் என்ன? நாக்கு வெளியேதள்ளி கோரமாகப் போய்விடுமே!! பவுலோ யோயல்ஹோ எழுதிய வெரோனிக டிசைட்ஸ் டு டை ஆங்கிலப்புதினத்தின் வரிகள் எல்லாம் நினைவுக்கு வந்தன. ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து விடலாமா!! விஷம் குடித்து விடலாமா!! சயனைட் எங்கேயாவது கிடைக்குமா எனதேடிப் பார்த்தேன். சயனைட் வாயில் வைத்ததும் உயிர் போய்விடுமாமே!!

இனிமேல் இசையாலும் இளையராஜாவினாலும் கூட என்னைக் காப்பாற்ற முடியாது. எந்த பாட்டுக் கேட்டாலும் குற்ற உணர்ச்சி மட்டுமே முன் வந்து நிற்கிறது. தனிமையின் இனிமை இசையால் நிரம்பும் என்ற நிலை எல்லாம் இப்போது இல்லை. ஒவ்வொரு பாட்டும் என்னுள் இருக்கும் துக்க உணர்வை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. உலகத்தில் பெரிய அவமானம் நம்முள் இருக்கும் மனசாட்சியிடம் அவமானப்பட்டு நிற்பதுதான். என்னுள் இருக்கும் எதிரியிடம் எதிர்மறை ஆளுமையிடம் நான் தோற்றுப்போய்விட்டேன். யாரிடம் தோற்றாலும் நம்மைத் தேற்றிக்கொள்ளலாம். என்னிடம் நானே தோற்றுப்போனபின் நான் ஏன் உயிர்வாழ வேண்டும். கிட்டத்தட்ட ஒரு வாரமாக எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம் என திட்டமிட்டே எனது சாவைத் தள்ளிப்போட்டுக்கொண்டு வருகிறேன். பிரச்சினை என்னவெனில் எல்லா வகையான தற்கொலை முடிவுகளிலும் வலி இருக்கிறது.

தூக்க மாத்திரைகள் சாப்பிடுவது எளிய வழிமுறையாக தோன்றினாலும், அதில் தான் அதிக வலி இருக்குமாம். உடல் வலியைக் காட்டிலும் ஒரு வேளை என் தற்கொலை முயற்சி தோல்வி அடைந்து விட்டாலும் கூட என் உடலுக்கு எந்த சேதாரமோ விகாராமோ வந்துவிடக்கூடாது என்பதிலும் கவனம் இருந்தது. தூக்க மாத்திரை மெதுவான இறப்பைக் கொடுத்தாலும், உடலுக்கு அதிக சேதாரம் இல்லை என்பதால் தூக்க மாத்திரைகள் வாங்கி செத்துப் போய்விடலாம் என இறுதி முடிவு எடுத்தேன்.

சாகும்பொழுது கூட அழகாகச் சாகவேண்டும், என முகச்சவரம் செய்து கொண்டு, கீர்த்தனா வாங்கிக் கொடுத்த உடைகளை அணிந்து கொண்டு, தூக்க மாத்திரை வாங்க வெளியே கிளம்பினேன். கீர்த்தனா போன மாதம் சுவீடன் போகும் முன் எனக்காக அவள் வாங்கிக் கொடுத்து போன உடைகள் இது. அவள் மேல் இருந்த கோபத்தில் இதை அணிய வெறுப்பாக இருந்தது. இன்று தான் எனக்கு கடைசி நாளாயிற்றே, அவள் பிரியாமாய் வாங்கிக் கொடுத்ததை அணிந்து கொள்ளலாம் என எடுத்து உடுத்திக்கொண்டேன்.

வெளியே எனது குடியிருப்பு காவலாளி நாரய்யா குடியிருப்புக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த நாயை விரட்டிக்கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்ததும்,

"வணக்கம் கார்த்தி சார், இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இந்த நாய் கிடக்குது,,, பாவமாத்தான் இருக்கு, ஆனால் இங்கே செத்துபோச்சுன்னா நான் தான் கிளீன் பண்ணனும், பக்கத்துல சீப்ரோஸ் வாசல்ல போய் செத்துச்சுன்னா அவனுங்க பார்த்துக்குவானுங்க"

நான் இந்தக் குடியிருப்புக்கு வந்த நாள் முதலே இதைப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கீர்த்தனா இங்கு வரும்பொழுதெல்லாம் இதற்கு ரொட்டித்துண்டுகள் போடுவாள். ஒரு முறை டாம்மி, மறுமொரு ஜிம்மி என நிதத்துக்கொருப் பெயர் வைத்துக்கூப்பிட்டது நினைவுக்கு வந்தது.

அனேகமாக இந்த நாய் என் சொர்க்கத்திற்கான பயணத்திற்கு வழித்துணையாக இருக்கலாம். என நினைத்துக்கொண்டே
"ம்ம்ம்ம்.. நாரய்யா இந்தாங்க" என நூறு ரூபாய் தாளை அவரிடம் நீட்டினேன்.

"சார், இன்னக்கி 10 ஆம் தேதி தானே ஆகுது, இப்போவே"

"அட பரவாயில்லை வச்சுக்கோங்க" பாவம் அடுத்த மாதத்தில் இருந்து அவர் இருப்பில் நூறு ரூபாய் குறைந்துவிடும்.

இன்று திங்கட் கிழமை, சில வாரங்களுக்கு முன் வரை இருந்த திங்கட்கிழமை என்றால் அலுவலகம் அரக்கப் பரக்கபோகும் நிலைமை , இப்பொழுது இல்லை. நான்கு வருடங்கள் விசுவாசமாக வேலைப் பார்த்தும், திடீரென வேலையை விட்டு போகச் சொல்லிவிட்டார்கள். இந்த நிறுவனத்துக்காக வடதுருவத்திற்கு அருகே இருந்த மொழி தெரியாத நாட்டில் எல்லாம் நான் குப்பைக் கொட்டி இருக்கிறேன். அடுத்த ஐந்து வருடங்களுக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சேமிப்பு இருக்கிறது. ஆனால் பிரச்சினை அதுவல்ல, நான் நேசித்த விசயங்கள் எலலாம் எனக்கு ஒரே சமயத்தில் வந்து ஒரே சமயத்தில் விலகுவதுதான். எனக்குப் பிடித்த பெண் என்னை விட்டு போவது இது முதல் முறை அல்ல. பெங்களூரில் படித்து முடித்து 2 வருடம்
வேலையில்லாமல் சுற்றிகொண்டிருந்தேன். அப்பொழுது இருந்த நம்பிக்கை மேலே வந்துவிடலாம் என்ற உத்வேகம் இப்பொழுது இல்லை. மனதில் ஓரத்தில் ஒடுங்கி இருந்த எதிர்மறை எண்ணங்கள் உருவங்களாக மாறி மனதில் ஆடிக்கொண்டிருக்கின்றன.

எங்கோ எப்போதோ நான் பட்ட அவமானங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து அன்று உனக்கு நீயே பொய்யான சமாதனம் சொல்லிக்கொண்டு உன்னை ஏமாற்றிக்கொண்டாய் இது நாள் வரை மவுனமாய் இருந்த மனசாட்சி என்னை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. முன்பு போல ஏதாவது கதை , கவிதை எழுதி என்னுடைய வெறுப்புகளுக்கு ஒரு வடிகால் தேடிக்கொள்ளலாம் என்று நினைத்தால், மனதில் வந்து விழும் வார்த்தைகள் வடிகாலாய் இருப்பதை விட வெறுப்பை ஊதிவிடும் ஊதுகுழல்களாகவே அமைகின்றன. இதோ நான் சராசரி மனிதன் இல்லை, எண்ணத்தால் உயர்வானவன் என்று எனக்குள்ளே நான் போட்டுக்கொண்டிருந்த மேல் பூச்சுகள் கலைந்து நிர்வாணமாய் நிற்கிறேன். மனதில் தூங்கிக் கொண்டிருந்த பழிவாங்கும் எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எட்டிப்பார்க்கின்றன. இந்த பழிவாங்கும் எண்ணத்தில் நானும் அழிந்து பிறரையும் அழிப்பதை விட , நானே அழிந்து போவது தான் நல்லது என இந்த தற்கொலை முடிவை எடுத்து இருக்கிறேன்.

" வைத்தி, 15 ஸ்லீப்பிங் டேப்லட்ஸ் கொடுங்க" கடைக்காரர் எனக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என்றாலும், என்னை ஏற இறங்கப் பார்த்தபடி.

"என்ன எழுத்தாளரை எதும் சூசைட் அட்டெம்ப்ட் பண்ண போறிங்களா?"

"அட நீங்க வேற,, ஆபிஸ் வொர்க் செம டென்ஷன்,.. தூக்கமே வர மாட்டேங்குது, அதுதான் வாங்க வந்தேன், சரி அப்போ இரண்டு மட்டும் கொடுங்க" என சில்லறையை நீட்டினேன்.

"அதில்லை சூசைட் அட்டெம்ப்ட் பண்ணி அந்த அனுபவத்தை கதையா எழுதப்போறிங்களோன்னு நினைச்சேன்"

"போன வாரமே கம்ப்லைண்ட் செஞ்சாச்சு, இப்போதான் வரானுங்க, " சாலையின் அடுத்த முனையில் ஒரு நாயின் கழுத்தில் கொக்கியை மாட்டி நாய் பிடிப்பவர் பிடித்து நாய் வண்டியினுள் கொண்டு போட்டார்.

"வைத்தி, பிடிக்கிற நாயெல்லாம் கொன்னுடுவாங்களா"

"விலங்குகள் அமைப்பு எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறதுனால , கொல்றாங்களான்னு தெரியாது, எளவுகள் தொலைஞ்சா சரி"

எனக்கும் இந்த நாய்கள் என்றால் பிடிக்காது. ஆனால் அவைகளின் கழுத்தில் கொக்கிப்போட்டு இழுத்து செல்வது பாவமாக இருந்தது. என்னையும் இன்றிரவு எமதர்மன் இப்படித்தான் இழுத்துச் செல்வானோ!! மீதி மாத்திரைகளையும் வாங்க இடதுபுறமாக அடுத்த தெருவினுள் நுழைந்து , ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இரண்டு இரண்டாக தேவையான அளவு மாத்திரைகள் வாங்கி ஆயிற்று.

எனதுக் குடியிருப்புச் சாலையின் திருப்பத்தில்
"கார்த்தி சார், கார்த்தி சார்" என நாரய்யாவின் குரல் கேட்க திரும்பிப்பார்த்தேன்.

"சார், கொஞ்ச நேரம் அப்படியே வெயிட் பண்ணுங்க, அந்த சனியனை சாவுறதுக்கு முன்ன நாய் வண்டியில போட்டுரலாம்"
நாரய்யா முன்செல்ல , நாய் பிடிப்பவர் சத்தமில்லாமல் கையில் கொக்கி வளையத்துடன் , தூங்கிக்கொண்டிருக்கும் நாயை நெருங்க சில அடிகள் இருக்கும்பொழுதே, சாவுக்காக தூங்கிக் கொண்டிருந்த நாய், தனக்கு ஏதோ நேரப்போகிறது என உணர்ந்ததோ என்னவோ, எழுந்து , ஒரு ஓட்டம் பிடித்தது பாருங்கள், அப்படியே அருகில் இருந்த சுவரை ஒரே தாவில் தாவி இரண்டு தெரு தாண்டி ஓடிப் போனது.

"சாவப்போற நாய் , எப்படி தப்பிச்சுப்போகுது பார்த்தீங்களா? சார்"

நாரய்யா சொன்னதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. மனமெல்லாம் , சில நொடிகளில் வாழ்வின் அர்த்தத்தை ஒரு தெரு நாய் எனக்கு உணர வைத்ததுப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தது. உற்சாகம் மெல்ல எட்டிப்பார்க்க, அதன் உடன் பிறப்புகளான நம்பிக்கையும் உத்வேகமும் , என் எதிர்மறை எண்ணங்களை எட்டி உதைத்து மீண்டும் மன சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தன.

"எப்படியோ சனியன் ஒழிஞ்சது, இங்கே செத்துக்கிடந்து நாறாமாப்போச்சே!!"

தூக்க மாத்திரைகளை சாக்கடையில் கொட்டிவிட்டு புது மனிதனாக வீட்டினுள் நுழைந்தேன்..
*********************************