நேசம் - சிறுகதை
"இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல், அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம்" வட்டத்திற்குள் சதுரம் என்ற படத்தில் வரும் ஒரு பாடலை, டெல்லி செல்லும் விமானத்திற்காக காத்திருக்கையில், எஃப்.எம் மொபைலில் கார்த்திக் கேட்டுக்கொண்டிருந்தான்.
பிளைட் ஏற்கனவே ஒரு மணி நேரம் லேட்டாகப் புறப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். லேட்டாகும் என்ற அறிவிப்பினால் எரிச்சல் அடைந்த சகபயனிகளை பார்க்க மனமில்லாமல் கையோடு கொண்டு வந்திருந்த தினமணி பேப்பரை புரட்டலானான்.
கார்த்தி என்று யாரோ தோளைத் தொட்டுக் கூப்பிடத் திரும்பினான், அட அது ஜெனி.
"என் வாழ்க்கையின் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன், யூ மீன் நந்திங் டு மி குட்-பை" என்று சொன்ன ஜெனி இன்று என் கண் முன்னே அதே அழகான சிரிப்புடன் கையில் ஒரு குழந்தையுடன் ஹாய் சொன்னாள்.
எப்படிடா இருக்க லக்ஷ்மனா!!!!, காலேஜ்ல அவனோட பட்டப்பெயர், கிரிக்கெட்டர் லக்ஷ்மனனின் தீவிர ரசிகன், டென்டுலகருக்கும் கங்குலிக்கும் எந்த விதத்திலும் திறமையில் குறைச்சலில்லை என்ற அவனுடைய ஆர்க்யூமென்ட்ஸினால் ஜெனி அவனுக்கு வைத்தப் பெயர் அது. லக்ஷ்மன் கோல்கத்தா டெஸ்டில் 281 அடிச்ச்ப்ப கிளாஸுக்கே ட்ரீட் கொடுத்த பின் அந்த பேரே நிரந்தரமானது
மெலிதானப் புன்னகையுடன் "நல்லா இருக்கேன்" என்றான் கார்த்திக்.
மூன்றாம் செமஸ்டரில் "லெட் அஸ் சி" புக் வாங்கிப் படித்ததில் ஏற்பட்ட நட்பு, கடைசி செமஸ்டரில் "லெட் அஸ் சி திஸ் வேர்ல்ட் டுகெதர்" என்று அவன் அவளிடம் காதலைச் சொன்ன போது முறிந்து போனது.
"என்ன அப்படி பார்க்கிறே! ஆச்சர்யமா இருக்கா! உன்னை அவ்வளவு திட்டி விட்டுபோனவள் இன்று எப்படி பேசுகிறாள் என்று நினைக்கிறாயா!! அந்த நேரத்தில் அந்த சூழ்நிலையில் நீ நட்பை கொச்சைப் படுத்தி விட்டியோன்னு நினைச்சேன், ம்ம், கொஞ்சம் நான் பக்குவமா யோசிச்சு இருந்து இருக்கலாம். கார்த்தி, இப்போ நான் அப்படி நடந்து இருக்கக் கூடாதுன்னு தோனுது, எனிவே எல்லாம் நன்மைக்கே, Time is the Best healer "
சிறிது இடைவெளி விட்டு ஜெனி தொடர்ந்தாள்,
"கிட்டத்தட்ட ஆறு மாதம் வரை உன் மேல் இருந்த கோபம் போகவில்லை., உன்னோட எல்லா மெயில்களையும் படிக்காமலே டெலிட் பண்ணேன், வாழ்க்கையின் யாதார்த்தங்கள் புரிய ஆரம்பித்த பொழுது உன் மேல் இருந்த கோபங்களும் கொஞ்சம் கொஞ்சமா நீர்த்துப் போச்சு. லக்ஷ்மன், ஹீரோ பென், பன்னீர் சோடா, திருக்குறள் பழைய செவன்டீஸ் பாட்டு, டப்பிங் படம் நு அப்ப அப்போ உன்னைப் பற்றிய ஞாபகம் வருவது உண்டு நடுவில மெயில் கூட அனுபிச்சேன், பவுண்ஸ் ஆயிடுச்சு .
இதுக்கு நடுவில சில சோகங்கள், சில சந்தோசங்கள்.
ஆமாம் நீ இப்போ எங்க போற "
தொடர்ச்சியாகப் பேசி நிறுத்தினாள்.
"டெல்லிக்கு , ஆபிஸ் விஷயமா, நீ எங்கப் போற " என்றான் கார்த்திக்
"பாம்பே, அங்கேயிருந்து நாளைக்கு நைட் கனடா, அதெல்லாம் இருக்கட்டும் , உனக்கு கல்யானம் ஆயிடுச்சா!! "
இன்னும் அவளை மட்டும் நினைத்துக் கொண்டிருப்பதாகக் கூறி அவளை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பாமல், "ம்ம் ஆயிடுச்சு, ரெண்டு பசங்க " என்று பொய் சொன்னான் கார்த்திக்.
"ஹே தட்ஸ் நைஸ் " என்று அவள் முடிப்பதற்குள் பாம்பே பிளைட்டுக்கான அறிவிப்பு வந்தது.
"இந்தா என் கார்டு" என பிஸினஸ் கார்டை கொடுத்தவாறே குழந்தையின் பெயரைக் கேட்டான்.
"என் குட்டிப் பாப்பா பேரு லக்ஷ்மன்" என்றாள்.
சில வினாடி மௌனத்திற்குப் பிறகு, "அங்கிளுக்கு டாடா சொல்லு" என்று சொல்லியவாறு எழுந்தாள்.
"பை கார்த்திக்" என்று சொல்லியவாறு போன மாதம் கணவனை ஆக்ஸிடென்டில் பறிகொடுத்த ஜெனி , கார்த்திக்கின் சந்தோசமான வாழ்வில் எந்நாளும் தன்னால் எந்த சங்கடமுமும் வரக்கூடாது என்ற முடிவுடன் அவனின் பிஸினஸ் கார்டை வேண்டுமென்றே தரையில் தவற விட்டு குழந்தையுடன் விமானத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
தனக்குப் பிடித்தவளின் நினைவுகளில் தான் எப்போதும் இருப்போம் என்ற சந்தோசத்துடனும், தன்க்குப் பிடித்தவள் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கிறாள் என்ற திருப்தியுடனும் கார்த்திக் தனது பிளைட்டிற்கான அறிவிப்பிற்காக காத்திருந்தான்.