Tuesday, November 23, 2010

கிரிக்கெட் வினாடி - வினா - ஆறுக்கு ஆறு

1. ஹான்ஸி குரோனியே, உஜேஷ் ராஞ்சோட், ருவான் கல்பகே, மார்க் எல்ஹாம், நீல் ஜான்ஸன், ஜேக்கப் ஓரம், மோண்டி பனேசர், கேமரூன் வைட், பீட்டர் சிடில், பீட்டர் ஜார்ஜ் சமீபத்தில் ஆண்டி மெக்கே இவர்கள் அனைவரும் டெஸ்ட் ஆட்டங்களில் ஆடி பந்து வீசவும் செய்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிராக குறைந்த பட்சம் ஒரு விக்கெட்டாவது எடுத்தவர்கள். இவற்றைத் தவிர இவர்களுக்குள்ளாக வேறொரு ஒற்றுமை உள்ளது , அது என்ன?

2.1998 ஆம் ஆண்டு ஷார்ஜா போட்டிகளில் ஒன்றில், வெற்றி இலக்கு 50 ஓவர்களில் 285, ஆனால் இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற 46 ஓவர்களில் 237, மணற்புயலுக்கு நடுவே சுழன்று சுழன்று சச்சின் டெண்டுல்கர் காஸ்ப்ரோவிக்ஸையும் ஷான் வார்னேயையும் அடித்து நொறுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான இலக்கை அடைந்த பின்னர், வெற்றியை நோக்கி நகரும் முயற்சியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்தார். கேள்வி டெண்டுல்கரைப் பற்றியது அல்ல, இந்த ஆட்டத்தில் டெண்டுல்கருக்கு உறுதுணையாக இணையாட்டமாக நூறு ஓட்டங்களுக்கு மேல் எடுக்க துணையாக ஆடியவர் யார்?

3. வி.வி.எஸ் லக்‌ஷ்மணன் ஒரு நாள் ஆட்டங்களில் ஆறு சதங்கள் அடித்துள்ளார். அவற்றில் நான்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரானவை. டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவரும் இவர் தான். இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் சார்பில் 25 சதங்கள் 12 பேரின் சார்பில் அடிக்கப்பட்டுள்ளன. இந்த 12 நபர்களில் ஒருவர் இன்று உயிருடன் இல்லை. இந்த நபர் யார்?


4. முன்னாள் இந்திய அதிரடி ஆட்டக்காரர் ராமன் லம்பா, 86 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித்தொடரில் அறிமுக வீரராக களமிறங்கினார். இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் ஆகியவற்றுடன் இந்தியா தொடரை வெல்ல காரணமாக இருந்ததுடன் , ஆட்டத்தொடர் நாயகன் விருதையும் பெற்றார். இவரும் ஸ்ரீகாந்தும் இணையாட்டமாக ஆடிய ஆட்டங்கள் இன்றைய சேவக் - டெண்டுல்கர் இணைக்கு முன்னோடியாக அமைந்தவை. இன்றைய தோனி அடிக்கும் அடியைப்போல அன்றே ஆடிய ராமன் லம்பா அதன் பின் வந்த தொடர்களில் சோபிக்காததால் கழட்டிவிடப்பட்டார். ராமன் லம்பாவைப்போல, 99 ஆம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற பன்னாட்டுத் தொடர் ஒன்றில் ஆட்டத்தொடர் நாயகன் விருதைப்பெற்றவர் பின்னாளில் காணாமல் போன கீழ்கண்ட புகைப்படத்தில் இருக்கு ஆட்டக்காரர் யார்?





5. பாகிஸ்தான் அணிக்கு எப்படி புற்றீசல் போல வேகப்பந்துவீச்சாளார்கள் வருகின்றனரோ அதுபோல இந்திய அணியைப்பொருத்தவரை, சுழற்பந்துவீச்சாளர்கள், மழைக்காளான்கள் போல அடிக்கடி மின்னி மறைவார்கள். 90 களின் இறுதியில் ஏனோதானோவென ஆடிக்கொண்டிருந்த இந்திய அணி அவ்வப்பொழுது வியத்தகு வெற்றிகளை ஈட்டும். (பின்னோக்கிப் பார்க்கும்பொழுது அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டாலும்) டெண்டுல்கர், அசாரூதின் இல்லாத சமயங்களில் சுறுசுறுப்பாக வழி நடத்திய அஜய் ஜடேஜாவின் தலைமையில் ”சுள்ளான்” இந்திய அணி, பலமான தென்னாப்பிரிக்கா அணியை 117 ஓட்டங்களுக்கு, கென்யா தலைநகர் நைரோபியின் ஜிம்கானா மைதானத்தில் சுருட்டியது. அறிமுகவீரர் விஜய் பரத்வாஜ் 10 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து தென்னாப்பிரிக்க அணியில் அதிக ஓட்டங்களை எடுத்த காலிஸை வீழ்த்தினார். இன்னொரு சுழற்பந்துவீச்சாளார் நிகில் சோப்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அணியின் அனுபவமின்மையைக் கருத்தில் கொண்டால் இதுவே பெரிய விசயமாக இருக்கும்பொழுது, மற்றொரு இடதுகை சுழற்பந்துவீச்சாளர் 10 ஓவர்கள் வீசி 6 மெயிடன்களுடன் வெறும் ஆறு ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் யார்?

6. இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களை தான் ஆடும் ஆட்டங்களில் எல்லாம் சுளுக்கு எடுப்பதால், இந்திய அணியில் பல சமயங்களில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெறுவதை சவுரவ் கங்குலி விரும்பியதில்லை. கங்குலி இந்திய அணித்தலைவராக இருந்தபொழுது , ஓரங்கட்டப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் முரளி கார்த்திக் மற்றும் சுனில் ஜோஷி. இருவருமே ஓரளவிற்கு நல்ல மட்டையாளர்களும் கூட. முரண் நகை என்னவெனில் அணித்தலைவராக கங்குலி தான் முதன்முதலில் களமிறங்கிய டெஸ்ட் ஆட்டத்தை ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் மூலம் தோல்வியில் இருந்து காப்பாற்றியவர் சுனில் ஜோஷி. நைட் வாட்ச்மேனாக களமிறங்கி முரளி கார்த்திக்கும் தன் பங்கிற்கு 43 ரன்கள் எடுத்தார். ராமன் லம்பா, விவிஎஸ் லக்‌ஷ்மண் போல ஆஸ்திரேலியா அணிக்கெதிராக என்றால் முரளி கார்த்திக்கும் சிறப்பாக விளையாடுவார். ஆஸ்திரேலியா அணிக்கெதிராக ஆட்டத்திறனில் கலக்கி, மும்பை வான்கடே மைதானத்தில் தலா ஒரு டெஸ்ட் , ஒரு, ஒருநாள் ஆட்டம் ஆகியனவற்றை வெல்ல உதவிய முரளி கார்த்திக்கிற்கு வேறொரு சிறப்பம்சம் இருக்கின்றது.(விடைக்கான உதவி : தனது ஒரே ஒரு டி20 பன்னாட்டுப்போட்டியை மும்பை வான்கடேயில் ஆடினார்)

விடைகள்

1. அனைவருக்கும் சச்சின் டெண்டுல்கர்தான், தங்களின் முதல் டெஸ்ட் விக்கெட்.

2.வி.வி.எஸ் லக்‌ஷ்மண் , ஒரு பக்கம் டெண்டுல்கர் அடித்தாடிக்கொண்டிருந்தாலும், தனக்கு வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் ஒரு ஓட்டம் எடுத்து மறுமுனைக்கு வந்து , டெண்டுல்கருக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்துக்கொண்டே வந்தார். அந்த ஆட்டம் அவருக்கும் வெறும் மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்.

3. ராமன் லம்பா. பங்களாதேஷில் உள்ளூர் அணிக்காக ஆடிக்கொண்டிருந்தபொழுது , கிரிக்கெட் பந்து தலையில் பட்டு , அதன் தொடர்ச்சியாக மரணம் அடைந்தார்.

4. விஜய் பரத்வாஜ்.

5. சுனில் ஜோஷி

6. ஐபில் , ஸ்டான்ஃபோர்ட் டி20 இரண்டிலும் முதல் போட்டித்தொடரிலேயே பங்கேற்ற ஒரே வீரர் உலகளாவிய பெருமை முரளி கார்த்திக்கிற்கு உண்டு.


முதல் ஐந்து கேள்விகளின் விடைகள் அதற்கடுத்த கேள்விகளில் வரும்படியான Pattern இல் கேள்விகள் அமையப்பெற்று இருக்கின்றது.