ஈழத்து தோழமையின் கவிதைகள்
ஈழத்து தோழமைகளில் ஒருவரது கவிதைகளை அவரின் அனுமதியோடு இங்கு பதிப்பிக்கின்றேன்.
யுத்த தர்மம்
மூவேழு பேராய் வந்து உங்களை
மூக்கு மேல் விரல் வைக்க வைத்த
எம் சகாக்களிடம் வீரத்தைக்காட்டாது
அவர் சடலங்களிடம் காட்டிவிட்டீர்கள்
அவர் பூதவுடல்களை கேவலப்படுத்த
நினைத்த நீங்கள், உங்கள் சமய தர்மம்
பற்றி கொஞ்சம் சிந்தித்து இருக்கலாம்.
புத்த தர்மம் வேண்டாம்......
யுத்த தர்மம் கூட தெரியாதவர்களா நீங்கள்?
மழை
அன்றிரவு அடை மழை!
என் சின்னத்தம்பி மழையில் நனைந்தான்
பலமுறை உள்ளே அழைத்தேன்.
பிடிவாதமாய் முடியாது என்றான்.
அவனை அழைத்து சலித்த நான்
இறுதியாக கூறினேன்,
மழையில் நின்று நனையதேடா............
மழையோடு மழையை பொழியும் குண்டும்
நான் சொல்லி வாய் மூடவில்லை
அவனை அங்கு காணவில்லை
அவன் தலை மட்டும் எட்டிப்பார்த்தது
அம்மாவின் பின்னாலிருந்து.................