Wednesday, September 30, 2009

ரிங் டோனும் வேறு சில பாடல்களும் - சிறுகதை

புதிதாய் வந்திருக்கும் எனது அறை நண்பர் கணேசன் ஒரு அப்பாவி, அறையில் சமைப்பதில் இருந்து பாத்திரம் கழுவி வைப்பது வரை எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறார். இருந்தாலும் அவர் வந்த இந்த இரண்டு தினங்களாக, அவரின் மேல் சொல்ல முடியாத கோபம்.

நேற்று அதிகாலை, பல்லவி அனுபல்லவி கன்னட படத்தில் வரும் இளையராஜாவின் பின்னணி இசைக்கோர்வைத் துண்டு அழைப்பு மணியாக அடித்ததும் பதறி அடித்து எழுந்தேன், ஒரு வேளை அம்மு தான் மனம் மாறி கூப்பிடுகிறாளோ என்று எனது கைபேசியைத் தேட

“சொல்லுட மச்சி, இங்கே எல்லாம் நல்லா இருக்கு, பசங்க கிட்ட செட் ஆயிட்டேன்னு” யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.

அரைத்தூக்கத்தில் கிடைத்த ஏமாற்றம் ஆத்திரமாக மாறும் முன் தலையணையில் முகம் புதைத்தேன். சுவிடீஷ் மொழி வகுப்பு செல்லுவதற்கான நேரம் கடந்தும் தூங்கிக் கொண்டிருந்த என்னை மீண்டும் எழுப்பியது ”எக்ஸ்கியூஸ் மீ கந்தசாமி” பாடல், இந்தத் தடவை பாடல் ஒலித்தது கணேசனின் மடிக்கணினியில் இருந்து ,

நானும் அம்முவும் கடைசியாக நல்லபடியாக பேசிக்கொண்டிருந்த பொழுது இந்தப் பாடலைத் தான் பாடிக்கொண்டிருந்தோம்.

“கணேசன், ஹெட் செட் போட்டு கேட்க முடியுமா, ப்ளீஸ்” திரும்ப தூங்கிப்போனேன். இப்பொழுதெல்லாம் அடிக்கடி தூங்கிப்போகின்றேன். உறக்கத்தில் மட்டுமே நான் பாதுகாப்பாய் இருப்பதாக உணர்கின்றேன். பழகும் காலத்தில் கனவில் வராதவள் இப்பொழுதெல்லாம் அடிக்கடி கனவில் வருகிறாள்.

சமீபத்தில் வந்த எந்தப் பாடலை மடிக்கணினியில் போட்டாலும் கணேசனை ஓரக்கண்ணால் பார்த்ததும் அவர் பாட்டை மாற்றிவிடுவார்.

“ஏங்க , இந்த பாட்டெல்லாம் உங்களுக்குப்பிடிக்காதா?” பாவமாய் கேட்டார்.

“நீங்க போடுற பாட்டெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும், அதனாலதான் வேண்டாம்” என சொல்லிவிட்டு வழக்கமாக மேயும் வலைப்பூக்களை வாசிக்க ஆரம்பித்தேன்.

என்னுடைய கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை, “எனது உயிரே எனது உயிரே” பீமா படப்பாடல் ஒரு வலைத்தளத்தில் ஒடிக்கொண்டிருந்தது.பீமா படம் வந்த பொழுது எனக்கு அறவே பிடிக்காத இந்தப் பாடல் அம்முவுடன் பழக ஆரம்பித்து அவள் பாடிக்காட்டிய பின் இந்தப்பாடல் சுவாசம் ஆகிப்போனது.

தூக்க மாத்திரைகளும் தீர்ந்துவிட்டன. கண்களை இறுக்கி மூடி , நூறில் இருந்து 99,98 என எண்ணிக்கொண்டே தூக்கத்தை வரவழைத்துக் கொண்டேன். எழுந்த பொழுது கணேசன் அருமையாக சாம்பார் வைத்திருந்தார்.

“ஏன் கார்த்தி, புதுபாட்டு போட்டால் டென்ஷன் ஆகுறீங்க?”


“மீனிங்லெஸ் பாட்டு எல்லாம்”

“அப்படி எல்லாம் சொல்ல முடியாதுங்க, வாரணம் ஆயிரம், சுப்ரமணியபுரம் பாட்டு வரிகள் கேட்டுப்பாருங்க”

நான் பதில் சொல்லவில்லை. இந்தப் படப்பாடல்களில் தான் என் அம்முவுடன் ஆன காதல் வளர்ந்தது, அவள் இப்போது என்னுடன் இல்லை, தயவு செய்து அவளை ஞாபகப்படுத்தும் விதத்தில் எதுவும் பேசவேண்டாம் என கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தது.

சாப்பிட்டு முடித்தவுடன் அம்மு போன பின் ஏற்படுத்திக் கொண்ட கடுகடு முகத்தோடு கணினியில் மின்னஞ்சல்களை வாசித்து கொண்டிருந்த பொழுது,

“கார்த்தி, இனிமேல் நான் போடுற பாட்டு எதுவும் உங்களுப்பிடிக்காமல் இருக்காது” எனச் சொல்லிவிட்டு

”நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா” என பொன்னுமனி படத்தில் இருந்து ஒரு பாட்டை ஓடவிட்டு என்னைப் பார்த்து சிரித்தார்.

”உலகே அழிஞ்சாலும் உன்னுருவம் அழியாது” வரிகள் வந்த பொழுது, பாண்டிச்சேரி பேருந்தில் முகத்திற்கு அருகில் வந்து முணுமுணுப்பாய் பாடியது எல்லாம் நேற்று நடந்ததாய் நினைவுக்கு வந்தது.

எத்தனைப் பாடல்கள் , எத்தனை வரிகள், எத்தனை உணர்வுகள். எல்லாம் புரிந்தும் என்னைவிட்டு விட்டு போன அவளைக் கத்த இயலாது. நான் கத்துவதற்கென பட்டுக்கோட்டையில் இருந்து இந்த அப்பாவி கணேசன் வந்து இருக்கின்றார்.

“கணேசன், அடுத்த வாரம் அசைன்மெண்ட் டெட்லைன் இருக்குல்ல, பலமைல் தள்ளி இங்கே படிக்க வந்துருக்கோம், பாட்டு கேட்க இல்ல"

அதற்கடுத்து என் அறையில் கணேசன் ஒரு மாதம் தான் தங்கி இருந்தார். அந்த நாட்களில் என் காதில் விழாதவாறுதான் பாட்டுக்கேட்பார்.

பின்னொரு நாள், அம்முவுடைய திருமணம் வெகு விமரிசையாக நடந்தது என்றாலும் ஒரே ஒரு குறை திருமண வரவேற்பு பாட்டுக்கச்சேரியில் பழைய கருப்பு வெள்ளை எம்.ஜி.ஆர் சிவாஜி படப்பாடல்களை மட்டுமே பாடிக்கொண்டிருந்தனர் என என்னுடைய பழைய அலுவலகத்தோழி சொல்லக்கேட்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.

Friday, September 25, 2009

அம்மு,கண்ட இடத்துல கிறுக்காதே!! - சிறுகதை

எங்களுடன் வந்திருந்த அலுவலகத் தோழிகள், தசாவதாரம் படத்தின் இடைவேளையில் எழுந்து வெளியேப்போனவுடன், எனது இடது கையை இறுக்கமாகப் பிடித்து இருந்தவள்,மெல்ல கையை விலக்கி, இருக்கையின் கைப்பிடியில், நகத்தினால் ஏதோ எழுத எத்தனித்துக் கொண்டிருந்தாள்.

“என்னடா அம்மு, பண்ற!!' எனக் கேட்டுக்கொண்டே கைப்பிடியைக் கவனித்தேன். ”அம்மு - கார்த்தி” என எழுதி வைத்திருந்தாள்.

ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் ஒன்றாக்கி அவளின் மணிக்கட்டில் சுளீர் என ஒரு அடிக்கொடுத்தேன்.

“என்ன பழக்கம் இது, கண்ட இடத்துலேயும் கிறுக்கிக்கிட்டு”

மணிக்கட்டைத் தடவிக்கொண்டே, ”தெரியல கார்த்தி,இந்த மாதிரி உன் பேரையும் என் பேரையும் சேர்த்து வச்சு எழுதிப்பார்க்கிறது நல்லா இருக்கு”

”எழுதி வைக்கிறதுன்னா, உண்மையானப் பேரை எழுதி வைக்கனும்... உண்மையான பேரை எழுதினா மாட்டிக்குவோம்னு பயமா!!” என்னையும் அறியாமல் எனது குத்தல் வார்த்தைகள் வந்து விழுந்தது.

"நிமிஷத்துக்கு பத்து தடவை அம்மு கூப்பிடுறதுனால, அம்முங்கிறது தான் மனசுல நிக்குது”

“சரி சரி, நம்ம பேரை உன் மனசில எழுதி வை போதும், அதுவரை இப்படி பணத்துல கிறுக்கிறது, சுவத்துல கிறுக்கிறது எல்லாம் வேணாம்”

கொஞ்சம் குரலை உயர்த்தி சொன்னால் போதும், அவளின் கண்களில் நீர்த்திவலைகளுடன் என்னையே உற்றுப்பார்ப்பாள்.

”நீ மட்டும் கதையில எனக்கு ஒரு பேரு வச்சி எழுதுறீல்ல, அதை நான் கேட்டேனா”

“சரிடா செல்லம், காம்ப்ரமைஸ் காம்ப்ரமைஸ், அம்முகுட்டி தானே!! பொம்மு குட்டில ”

“சரி எல்லாம் வர்றாங்க ,இந்த அம்மு பொம்மு எல்லாம் ஸ்டாப் பண்ணிட்டு மத்மஸல் நு வழக்கம்போல கூப்பிடுங்க “

காதலிப்பதை விட , மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக காதலிப்பதுதான் மிக மிக சிரமம். இரண்டாம் பாதியில் அமெரிக்க வில்லன் பிளெட்சர் கதாநாயகக் கமலை துரத்த, பழைய காதலி ஜெனியின் கிறுக்கல் நினைவுகளை துரத்த முடியாமல் துவண்டு கொண்டிருந்தேன். காதலில் பழையது புதியது என உண்டா என்ன?

5 வருடங்களுக்கு முன்னே, மாயாஜாலில் வர்ணஜாலம் படம் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது இப்படித்தான் ஜெனி - கார்த்தி என இருக்கையில் முதன் முதலாக கிறுக்க ஆரம்பித்தேன். ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல, சமயங்களில் எங்களுடையப் பெயரை நுணுக்கமாக ஐந்து ரூபாய் பத்து ரூபாய் தாள்களில் எழுதி அவளுக்குக் கொடுப்பதுண்டு. கிழக்கு கடற்கரை சாலை மரங்கள், வளசரவாக்கம் உணவு விடுதிகளில் மேசைகளில் பலவற்றிலும் எங்கள் இருவரின் பெயர்களும் இருக்கும்.

“ஃபிரண்டாத்தான் பழகினேன், அவர்தான் தப்பா எடுத்திக்கிட்டாரு” என்று ஜெனி அவளின் சகோதரன் முன் சொன்ன பின் ,மனதில் கல்வெட்டாய் இருந்த அவளின் பெயர் கரைந்துப் போனது. எல்லாம் பொய்யாகிப்போன பின் சிரத்தை எடுத்து எல்லா இடங்களில் பதிந்து வைத்திருந்த அவளின் பெயரை மட்டும் அழித்து வைத்தேன்.

பஞ்சாபி கமலஹாசன் ஆடிக்கொண்டிருக்க,

“சுவீடன் போனப்பின்ன என்னை மறந்துடுவியா?” கன்னத்தின் அருகே மெல்லிய குரல் கேட்டவுடன் ஜெனியை மனதில் இருந்து துரத்தி விட்டு

“ இல்லடா அம்மு, குறைஞ்சது இரண்டு மணி நேரமாவது பேசுவேண்டா!! ”

” எனக்குப் பத்தாது, நீ பேசிட்டே இருக்கனும், நீ ஜத்தெய்ம் ஜத் தெய்ம் நு சொலிட்டே இருக்கனும், நான் மெர்சி பக்கூப் பக்கூப் நு பதில் சொல்லனும்”

“சரிடா குட்டிமா, பேசிட்டே இருப்பேன்... சரி பிரஞ்ச் எல்லாம் கலக்குற”

“பாண்டிச்சேரி பொண்ணா இருந்துகிட்டு இது கூட இல்லேன்னா எப்படி” கண்களை சிமிட்டிக்கொண்டே, படம் முடியும் வரை தன் கைவிரல்களை என் விரல்களோடு இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

உதயம் திரையரங்கத்தில் பத்து விரல்களில் வலுவான நெருக்கம், பத்து மாதங்களில் பன் மடங்காகி போன வாரம் பட்டென முடிந்து போனது.

“அம்மா அப்பா முன்ன, உன்னைப்பிடிக்கும் னு சொல்ல முடியாதுடா!! “

ஜெனியின் மேல் வந்த கோபத்தில் லட்சத்தில் ஒரு பங்கு கூட வரவில்லை. பிரிந்துவிடலாம் என முடிவு செய்த பின்னர் இரண்டு முறை தொடர்புகொண்ட போதும் கைபேசியை எடுக்கவில்லை. வீட்டிற்கு அழைத்தால் கடுமையான குரலில் எடுத்து எறிந்து பேசும் அவளின் தந்தை. புதுச்சேரி அரசாங்க நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர், மகள் காதலிக்கும் அல்லது அவரை பொருத்தவரை , மகளை காதலிக்கும் எவனோ ஒருவனிடம் அப்படி நடப்பது தானே இயல்பு.

நிராகரிப்பை விட ஒதுக்கப்படுதல் அதிக வலியை தரும். சராசரி காதலனைப் போல கதறி அழுது கொடுத்த சலசலப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல் ,பெற்றவர்களின் பிள்ளையாய் போனவளை இனி மீட்டெடுக்க முடியாது. மீட்டெடுக்கவும் வேண்டாம் என, மன மாற்றத்திற்காக பாரிஸ் வந்தாலும் அவளின் எண்ணங்களே வந்து நிற்கின்றது. நகரத் தெருக்களில் காதில் விழும் மதமஸல், மொன்சியர், மெர்சி பக்கூப், ஜத் தெய்ம் வார்த்தைகள் எல்லாம் அவளின் குரலில் வந்து விழுகின்றன. ஈஃபிள் கோபுரத்தின் முன்னர் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்த காதலர்களைப் பார்த்த பின்னர், அவள் எனக்குக் கொடுத்த முத்தத்தை கண்களை மூடி மீள்நினைவு செய்தேன்.




நண்பர் ஜனா மூன்றாவது தளத்தில் இருந்து என்னை படம்பிடிக்க படிக்கட்டுகளில் ஏறிப்போன பின்னர், யாரும் கவனிக்கிறார்களா என ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ”பிரசன்னவதனி” என்று அவளின் பெயரை ஆங்கிலத்தில் அழுத்தமாக, ஈபிள் கோபுர பக்கவாட்டு கைப்பிடி மரக்கம்பத்தில் பதிந்தேன்.