Saturday, December 13, 2014

திரைவிமர்சகன் - சிறுகதை

மூக்கில் விழுந்த முப்பதாவது குத்தில் மூர்க்கம் அதிகமாக இருந்தது.  அந்த பஞ்ச் அந்த நடிகரிடமிருந்துதான்.

"என்னடா உன் மனசிலே நெனச்சிட்டிருக்கே , லேப்டாப் , கேமரா இருந்தா நீ என்ன பெரிய இவனா"  என்று ஒரு கெட்ட வார்த்தை சொல்லி அறைந்தார்.

"ஆசானே, இவனுங்க இப்படித்தான், படம் ரிலீசுக்கு முன்னாடி பேஸ்புக் டிவிட்டறு , யுடுப் ல எதாவது கட்டுரை கருமாந்திரம்னு எழுதி நம்ம கலெக்ஷனை காலி பன்றது , இவனுங்களை எல்லாம் வெளிய விடக்கூடாது ஆசானே "

தல, தளபதி, தலைவா எல்லாம் கேட்டிருக்கின்றேன்.  அந்த பிரபல நடிகர் என்னைத் திட்டிய கெட்ட வார்த்தை மறந்து 'ஆசானே' என்ற  புதுவிதமான வழிபாட்டு வார்த்தை காதில் ரீங்காரமிட்டது.

எனது பெயர் கார்த்தி. தமிழ், தெலுங்கு, ஒரியா, போஜ்பூரி என்று உலகத்தின் அனைத்து மொழிகளில் வந்திருக்கும் படங்களைப் பார்த்து படித்து விமர்சனம் செய்யும் ஒரு சினிமா ஆராய்ச்சியாளன். என்னை அடித்துக்கொண்டிருக்கும் நடிகர், வேண்டாம் வேண்டாம் பெயர் வேண்டாம் , உங்களுக்குப் பிடித்தவரை நினைத்துக் கொள்ளுங்கள்.  'ஆசானே'  என்ற இந்த நடிகரைப்பற்றி சென்ற வாரம் ஒரு கட்டுரை எழுதிவிட்டேன். இந்தவாரம் அவரின் படம் வரப்போகின்றது.  வரப்போகும் படம் அவரின் திரைவாழ்வை தீர்மானிக்கப்போகின்றது என்று மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் எனது கட்டுரை அந்தத் திரைப்படத்தின் வசூலை பாதிக்கும் என்று என்னை நீக்கச்சொல்லி தாக்குகின்றனர்.

கட்டையால் அடிப்பவனை திரும்பக் கட்டையால் அடிக்கக் கூடாது புத்தியால் அடிக்கவேண்டும். முடிவுக்கு வந்தேன்.

"மன்னிச்சுடுங்க சார், அந்த ஆர்டிக்கிள், ரிலேடட் போஸ்ட்ஸ் கமெண்ட்ஸ் எல்லாம் டெலிட் பண்ணிடுறேன், இனிமேல் இந்தத் தப்பு நடக்காது "

இயல்புநிலைக்கு வந்த நடிகர்  "தம்பி நீங்க எழுதக் கூடாதுன்னு சொல்லல, என்னைப்பத்தி எழுதாதீங்கன்னுதானே சொல்றேன், போயிட்டு வாங்க "

உடம்பெல்லாம் ஒரே வலி. சிவாஜி படத்துல சூப்பர் ஸ்டாரிடம் ஆபிஸ் ரூமில் அடிவாங்கிய ஆட்களுக்கும் என்னைப்போலத்தானே வலித்திருக்கும்.  வீட்டிற்கு வந்த முதல்வேலையாய் என்னுடைய யுடியுப், விமியோ, டிவிட்டர், பேஸ்புக், டம்ளர், கூகுள் பிளஸ் அனைத்து சமூக ஊடகக் கணக்குகளையும் அழித்தேன். அழிப்பதற்கு முன்பே ரஷியாவில் இருக்கும் ஒரு சர்வரில்அனைத்து கட்டுரைகள், வீடியோக்கள் எல்லவற்றையும் சேமித்துவிட்டேன்.

என் பெயரில் பேஸ்புக் / டிவிட்டர் என்று அனைத்திலும் புதுக்கணக்குகளைத் தொடங்கினேன்.

"ஆசான் நடிகரின் ஆசனவாயில் ரசிகர்கள் எனது பழைய கணக்குகளை எல்லாம்  புகார் செய்து நீக்கிவிட்டார்கள் #where​_is_the​_freedom_of_expression " என்று எழுதிவைத்துவிட்டு உறங்கிப்போனேன். மறுநாள் கருத்துரிமை பற்றி எரிந்தது.  ஆசான் நடிகரின் படம் பத்தே காட்சிகளில் பெட்டிக்குள் முடங்கியது.  விழுந்த அடிகளின் வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. மனதும் இலகுவானது.